Friday, March 18, 2016

புதுசாய் எழுதும் பொது பரீட்சை

அன்று பிள்ளையார் கோவிலில் கூட்டம் அம்மும். மன்னையில் ஒத்தைத் தெரு ஆனந்த விநாயகருக்குக் குட்டிக் கொண்டு நெற்றியில் விபூதி மணக்க அட்டையோடு பரீட்சை ஹாலுக்குள் நுழைவோம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தினம் கூட ஆதிகால TNSC பாங்க் விளம்பர ”கவலையின்றி சுற்றித் திரியும்” சிட்டுக்குருவி போல வாழ்ந்த ”நாளை மற்றொருமொரு நாளே..” யதார்த்த ஜி.நாகராஜன்கள் நாங்கள். வினயாவுக்கு இன்று பத்தாம் வகுப்புப் பொதுப்பரீட்சைகள் ஆரம்பம். பள்ளிக்கூட பரீட்சை அறை வாசல் காட்சிகள் என்னை டரியலாக்கிவிட்டது.
நாடு காக்கப் போருக்குப் போகும் மகனுக்கு நறுநெய் தடவி கையில் வேல் கொடுத்து அனுப்புவது போல நெற்றியில் முத்தமிட்டு “ஆல் தெ பெஸ்ட்” சொன்ன அம்மாவுக்கு கண்களில் கனவுக் குளம் தேங்கி நிற்கிறது. தகப்பனுடன் வந்த பெண் குழந்தைகள் தேவலாம். சட்டென்று “பை ப்பா..” சொல்லி சிட்டாய் நகர்ந்துவிட்டார்கள்.
ஒரு அம்மாள் தன் பெண் பள்ளி வாசலில் நுழையும் போதே தன்னை விட்டு புக்ககம் போகும் பெண்ணைப் போல கண்ணீர் சிந்துகிறார். சில அப்பாக்கள் கட்டை விரல் ஒடிந்து ஏகலைவனாகி விடுவார்களோ என்றஞ்சும்படி காற்றை தம்ப்ஸ் அப்பால் கிழித்துக் காண்பித்து பரீட்சைக்கு அனுப்புகிறார்கள்.
“பயப்படாம எழுது. எல்லா எக்ஸாம் போலத்தான். ஆல் தெ பெஸ்ட்” என்றேன். சிரித்துக்கொண்டே உள்ளே ஓடிவிட்டாள். சிறிதுநேரம் விதம்விதமான அப்பாம்மாக்களை வேடிக்கை பார்த்தேன். திரும்பிவிட்டேன்.
பத்தோ, பன்னிரெண்டோ, கல்லூரியோ சுழி முக்கியம். அதைவிட உன்னதமான உழைப்பும் முயற்சியும் அவசியம்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails