Friday, March 18, 2016

சங்கரதாஸ் ஸ்வாமிகள்

யாரோ நெடுநாள் வடை பற்றி பேசப்போறாங்க.. என்று நெடுநெல்வாடை பற்றிச் சொன்னாங்களாம்.... இது அரிமளம் பத்மநாபன் சார்...


“டேய்... அதென்னா யார் கேட்டாலும் நடராஜன் பையன்.. நடராஜன் பையன்னு மரியாதையில்லாமே பேசறே... இனிமே அப்படிச் சொல்லப்படாதுன்னாளாம் ஒரு அம்மா... கொஞ்ச நாள் கழிச்சு அந்தப் பையன்ட்டே யாரோ.. டே தம்பி.. நீ நடராஜன் பையந்தானே....ன்னு கேட்டாராம்... உடனே அந்தப் பய சார்.. அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுன்னு
அம்மா சொல்லியிருக்கா...ன்னானாம்...” இது டேக் செண்டர் சாரி சார்....
“ஒரே ஜோக்கை திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டேயிருந்தவர் ஆயிரமாவது தடவை சொல்லும் போது கேட்டுக்கிட்டிருந்த யாருமே சிரிக்காம அமைதியா எழுந்து நின்னாங்களாம்.. ஏன்டான்னா... அந்த ஜோக்கு செத்துப் போயி அதுக்கு மரியாதை செஞ்சாங்களாம்....”
“ஒரு பாடகரை ஒன்ஸ் மோர்.. ஒன்ஸ் மோர்.. ஆடியன்ஸ் கேட்டுக்கிட்டே இருந்தாங்களாம்.. ரொம்ப நன்னா பாடறோம்னு அவரும் திரும்பத் திரும்பப் பாடினாராம்.. கடேசில என்னடான்னு பார்த்தா.. ராகம் சுத்தமா வர்ற வரை பாடனும்னுதான் ஒன்ஸ் மோர் கேட்டாங்களாம்...” - கடைசி ரெண்டும் பாலு சார்..
இதெல்லாமே அரிமளம் பத்மநாபன் சார் சங்கரதாஸ் ஸ்வாமிகள் பற்றிய Lecdem முடிஞ்ச பிறகு டேக் சென்டர் வாசலில் அடித்த அரட்டை....

**

”ஆர்.டி சாரிக்கு உங்களது பெயரை அனுப்பியிருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை டாக் செண்டர் வரவும். அரிமளம் பத்மநாபனின் சங்கரதாஸ் ஸ்வாமிகள் பற்றிய லெக்டெம்” என்று இரத்தினச் சுருக்கமான மெயில் மூலம் முதலில் கோபுதான் இந்த நிகழ்ச்சிக்கு எனக்கு கொக்கி போட்டார். ஒன்பதரைக்கு நிகழ்ச்சி. எட்டரைக்கு ஆஜராக வேண்டும். முதலில் டிஃபனில் கை நனைத்த பிறகு லெக்டமாக செவிக்கு ஈயப்படும். இதுதான் நிகழ்ச்சி ஃபார்மெட். டாக் செண்டர் மாடியிலிருந்து வீகேயெஸ் பருந்துப் பார்வையில் ”நாரத கான சபா தாண்டியாச்சா... அப்படியே கடைசியில போய் ஒரு யூடர்ன் அடிச்சு வாங்க...”வழிகாட்ட ஒன்பது ஐந்துக்கு ரெண்டாவது மாடிக்கு ஏறிவிட்டேன்.
புஃபே தட்டேந்தியவர்கள் அநேகம் பேர் மெத்தப் படித்தவர்கள் என்பது கிச்சடியும் இட்லியும் தட்டில் சரித்துக்கொள்ளும் போது அகஸ்மாத்தாக காதில் விழுந்த அபார ஆங்கில சம்பாஷணைகளில் தெரிந்தது. ஞாயிற்றுக்கிழமை காலையில் ஷூக்காலோடும் டக்கின் செய்த டீஷர்ட்டோடும் டக்டக்கென்று நடமாடியதில் பாதி பேர் விடுமுறையில் சீக்கிரம் எழுந்து ஷூ பாலீஷ் போட்டுக்கொள்ளும் ஓய்வூதியம் பெறுபவர்கள் என்று ஊர்ஜிதமாகியது. என் போன்ற இளைய தலைமுறைக்கு (?!) விடுமுறையிலும் காலைக் கட்ட சோம்பல்.
மிகச் சரியாக ஒன்பதரைக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது. தலைக்கு மேலே ஒரு ஆள் நடக்க ப்ளாட்ஃபார்ம் கட்டி ஃபோட்டோவும் வீடியோவும் எடுக்க அரிமளம் பத்மநாபன் அமர்க்களமாக மேடையேறினார். கோபாலகிருஷ்ண பாரதியின் “இரக்கம் வராமல் போனதென்ன....” பாடலைப் ப்ளேயரில் போட்டு உட்கார்ந்திருந்த அனைவர் தலையும் ஆடிய பின்னர் லெக்டெம் ஆரம்பித்தது என்று எழுதினால்தான் சரியாக இருக்கும். கோபாலகிருஷ்ண பாரதியின் காலம்தான் நாடகக் கலையின் பொற்காலம் என்று சொன்னார் அரிமளம்.

ஆரம்பித்தவுடனேயே பழநி தண்டபாணிப் பதிகத்திலிருந்து ”சீதமது மிகமருவு” என்று கம்பீரமான மோகன விருத்தத்துடன் ஆரம்பித்தார். கணீர்க் குரல். முதுகு தொங்கிப் போனவர்கள் கூட நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். பழநி தண்டபாணிப் பதிகத்தில் கியாதி பெற்ற பாடல் கேபி சுந்தராம்பாள் பாடிய “ஞானப்பழத்தைப் பிழிந்து.....”. உணர்ச்சிகள் ததும்பிய விருத்தங்கள்தான் அக்கால நாடகங்களில் அதிக புழக்கத்தில் இருந்தது. மோகனமா பீம்ப்ளாஸா என்றெல்லாம் ஆராய்ச்சியில் ஈடுபட்டு மதுரை சோமுவிடம் கேட்டால்...”அதெல்லாம் எதுக்கு உனக்கு.. பாட்டை அனுபவி.. ” என்று சொல்லிவிட்டு பாடலின் ஆரோகணம் அவரோகணம் பாடிக்காட்டிவிட்டு போவாராம்.
நாடகம் என்றாலே கூத்து அல்லது ஆட்டம் நிறைந்தது என்று அர்த்தம். நாட்டிய நாடகம் என்று யாராவது சொன்னால் அது கேட்டு கதவு, ஷாப்புக் கடைன்னு சொல்றது மாதிரி என்று ஜோக்கடித்தார். ஊரில் ஏதாவது காலரா, வைசூரி போன்று வியாதிகள் பரவினால் உடனே நாடகம் போடச் சொல்வார்களாம். வியாதியில மனுசன் அவதிப்படும் போது தெம்பூட்டும் விதமாக நாடகம் போட்டுக் குஷிப்படுத்துவார்கள் என்று வீகேயெஸ் என் காதில் ரகஸ்யமாக ஓதினார். இரவு பத்து மணிக்குதான் நாடகம் ஆரம்பிப்பார்கள். விடியவிடிய நடக்கும்.
மன்னையில் திருத்துறைப்பூண்டி ரோடு மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஹரிச்சந்திரா நாடகம் பார்த்தது நினைவுக்கு வந்தது. ஆம்பிளிஃபையர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு தலைதூக்கிப் பார்க்கும் மேடை உயரத்தில் ”மகனே லோகிதாசா...” என்று சந்திரமதி அலற... மேடைப் பலகைகள் டொம்டொம்மென்று அதிர பயங்கர நடனமாடுவார்கள். ஹார்மோனியப் பெட்டியின் ஊடே குரல் வர பாடல் நடக்கும். மேடையில் சந்திரமதி அல்லலுறும் போதும் அழும்போதும் முதல் மூன்று வரிசை அழும். தாரைதாரையாய் கண்களிலிருந்து ஜலம் கொட்டும். நாத்து நடவு ஜனத்திலிருந்து முப்பது முப்பத்தஞ்சு வயசு இருக்கிற எல்லோருக்கும் குறைந்தது முப்பது ராகமாவது கண்டுபிடிக்க தெரிஞ்சிருக்கும் என்றார் அரிமளம்.
ஐம்பது பாடல்கள் அறுபது பாடல்கள் நிறைந்த படம் என்று விளம்பரப்படுத்த ஆரம்பித்து கடைசியில் ஒரு காலத்தில் சண்டைக் காட்சிகள் நிறைந்த படம்னு போயிடுச்சு. இசைதான் பிரதானம். சங்கரதாஸ் ஸ்வாமிகளையே ஆட்டமாயிருந்த நாடகத்தை இசையா மாத்திப்புட்டாறுன்னு அவதூறு சொல்றவங்களும் உண்டு. “இப்படியாக.. சத்யவான் சொல்லிவிட்டு...” என்று பீம்ப்ளாஸ்லயே வசனம் பேசிட்டு அடுத்த பாடலுக்குப் போய்டுவாங்க.. என்று நாடகத்தமிழின் பண்டையக் கால இலக்கணத்தை புட்டுப் புட்டு வைத்தார் அரிமளம்.
கிட்டப்பா, சீர்காழி கோவிந்தராஜன் போன்றவர்களின் விருத்த ஸ்டைலைப் பற்றி சிலாகித்தார். கிட்டப்பாவிற்காக பாட்டெழுதிய சங்கரதாஸ் ஸ்வாமிகள் உணர்ச்சிக் குவியல். ”நாடகக் கலை” என்ற புத்தகத்தில் அவ்வை. டி.கே. சண்முகம் சங்கரதாஸ் ஸ்வாமிகள் பற்றி எழுதியிருப்பது என் நினைவில் உதித்தது. ஓரிரவில் நான்கு மணி நேர நாடகத்தை அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதும் தெய்வீக ஆற்றல் பெற்றவர் சங்கரதாஸ் ஸ்வாமிகள் என்று புகழ்ந்திருப்பார்.
சிலம்பில் வரும் “ஆய்ச்சியர் குரவை” ஒரு அற்புதமான நாடகம். ஸ்வரங்களின் தமிழ்ப் பெயர்களை தோழிகளின் பெயர்களாக வருவதை அற்புதமாக வர்ணித்தார். சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு கண்ணகி எழுதும் மடலில் ஒரு சுவாரஸ்யம் வைத்தார். ஆரம்பத்தில் கோவலனைப் போற்றிப் புகழ்ந்து அடக்கமான மனைவியாக ஆரம்பித்து கடைசியில் தலையில் கொட்டு வைத்தது போன்று முடிக்கிறாள் என்று இந்தப் பாடலைப் பாடினார்.
மான்பூண்டியாப் பிள்ளையிடம் லயங்களைக் கற்றறிந்தார் சங்கரதாஸ் ஸ்வாமிகள். சந்தங்களில் சாதித்தார். தியாகராஜர், கோபாலகிருஷ்ண பாரதியார் போன்றோர் தமது பாடல்கள் அவர்கள் பெயர் வருமாறு அமைத்து முத்திரை வைப்பார்கள். சங்கரதாஸ் ஸ்வாமிகளிடம் முத்திரைப் பற்றிக் கேட்டதற்கு... எனது பாடல்கள் எனது முத்திரை.. தனியே எதுவும் தேவையில்லை என்றாராம். ஆஹா.. அபாரம்.
சங்கரதாஸ் ஸ்வாமிகள் ஆனந்தக் களிப்பில் நிறைய பாடல்கள் எழுதியதையும் பாரதியார் அதைப் பின்பற்றி எழுதிய சில பாடல்களையும் விவரித்தார். பாரதியார் பாடல்களை எந்த ராகத்தில் பாடினாலும் சிறப்பாக இருப்பதற்கு பாடர்கர்களைக் காட்டிலும் அவரது சொல்நயமும் காரணம் என்றார்.
கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையிலிருந்து கனவோ நினைவோவை நகுமோபோலப் பாடினார். ஆஹா.. இந்த ஒரு பாடலுக்கே ஒரு மணி நேர லெக்டெம் சமர்ப்பணம். வெட்ட வெளியில் என்று விஸ்தாரமாகப் பாடும் போது நாமும் வெட்ட வெளியில் பறந்து சிவபெருமானை தரிசப்பது போன்ற ஒரு உணர்வு.
இணையத்தில் சங்கரதாஸ் ஸ்வாமிகள் பற்றி மேலும் அறியத் துழாவிக் கொண்டிருக்கும் போது கிடைத்த இன்னொரு அரிய சங்கதி. புதுக்கோட்டை மன்னர் கல்லூரி முனைவர் சி. சேதுராமன் என்பார் எழுதியது. அப்படியே கீழே தருகிறேன்.
”ஒருமுறை மதுரையில் சுவாமிகள் கோவலன் நாடகத்தினை நடத்திக் கொண்டிருந்தார். அந்நாடகத்தில், "மாபாவியோர் கூடி வாழும் மதுரைக்கு மன்னா!" என்று கண்ணகி கூறுவதாக ஒரு தொடரை அமைத்திருந்தார். மதுரை மக்கள் அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவ்வாறு எதிர்த்தவர்களைப் பார்த்து, "மா-திருமகள், பா-கலைமகள், வி-மலைமகள் மூவரும் சேர்ந்து வாழும் மதுரை" என்று விளக்கம் தந்து பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடலை மேற்கோள் காட்டிச் சமாதானப்படுத்தினார் . அங்கிருந்த தமிழ்சங்கப் புலவர்கள், "சுவாமிகளே!நீர் எந்தக் கருத்தில் எழுதியிருந்தாலும் உமது புலமைக்குத் தலைவணங்குகிறோம்" என்று கூறினர். இத்தகைய தமிழாற்றல் வாய்ந்த பெருந்தகையாக சங்கரதாஸ் சுவாமிகள்”
தியேட்டர் பர்சனாலிட்டி மாதவ பூவராக மூர்த்தி, கிஷோர், கோபு, வல்லபா, வீகேயெஸ், ஆர்வி, ராஜாராம், ப்ரைம் நம்பரில் வயது நடந்துகொண்டிருக்கும் (எவ்வளவு என்பது நடிகையின் வயது போல ரகஸ்யம்) குருஜி நகுபோலியன் போன்றோருடன் உருப்படியாய்க் கழிந்த ஒரு உன்னதமான ஞாயிறு. சாரி சார்க்கு அனந்தகோடி வந்தனங்களும் நமஸ்காரங்களும்.
படக்குறிப்பு: லெக்டம் முடிந்ததும் டாக் செண்டர் வாசலில் அடித்த உச்சக்கட்ட அரட்டை! சாரி சார், அரிமளம் பத்மநாமன் சார், மாதவ பூவராகமூர்த்தி சார் மற்றும் ”இளைய சகோதரர்” ஆர்வி. 
smile emoticon

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails