Friday, March 18, 2016

ஆத்தா நா அவுட்ஸ்டாண்டிங் ஆயிட்டேன்!!

பத்தாவது பரீக்ஷைக்கு எப்படி படித்தேன் என்பது ஈஸ்வரனுக்கே வெளிச்சம். ”வியாக்யானேசா.. ஆண்ட புள்ளையாரே... ஈஸ்வரா.. விஸ்வநாதா.. விசாலாக்ஷி.. கோபாலா... கோபாலா... சுப்ரம்மண்யோம்.. சுப்ரம்மண்யோம்....” என்று நித்திரைக்குப் போகு முன் படுக்கையில் உட்கார்ந்துகொண்டு பாட்டி மனமுருகிக் கும்பிட்ட தெய்வங்கள் உண்டென்று நிரூபித்த விஷயம். நுனிக்கிளையில் உட்கார்ந்து அடிக்கிளை வெட்டும் அளவிற்கு அடிமுட்டாளில்லை. அசிரத்தை. விளையாட்டுப் பிள்ளை. “இதான் எனக்குத் தெரியுமே”ங்கிற ஒரு அசால்ட்டு பக்கிரியான தங்கவேலுத்தனம். பன்னிரெண்டு மற்றும் பியெஸ்ஸியில் சுதாரித்துக்கொண்டு எம்சிஏவை ரேங்க்கில் முடித்தேன்.

எவ்ளோ படிச்சாலும் வினயாவுக்கு அடிமனசில் ரவையளவு பயம் பகடையாய் உருள்கிறது. ஆனால் கால்பந்து கணக்கா கண் காட்டுகிறது.
“அப்பா.. ஹயக்ரீவர் கோயிலுக்குப் போயிட்டு வருவமா?”ன்னு பயபக்தியா கேட்டுச்சு. போனோம். கோயில் வாசலில் மாட்டு வண்டியில் பிரபுபாதா சிலையும் அவருக்குப் பின்னே கிருஷ்ணரும் வர “ஹரே ராமா.. ஹரே கிருஷ்ணா..” என்று பித்துக்குளி முருகதாஸ் குரலில் பாடிக்கொண்டே வந்தார்கள். குடுமி வைத்து ஜோல்னா பையோடு பிரபுபாதாவின் ஐந்தாறு “கிருஷ்ணா”வைக் கைகளில் அடுக்கி விற்றுக்கொண்டிருந்தார்கள். மாட்டுவண்டியின் முன்னே ஒரு கூட்டம் நவீன சகதேவர்களாக எண்ணிக்கொண்டு செல்ஃபோனில் கிருஷ்ணனைப் படம் பிடித்து கட்டிப் போட எத்தனித்துக்கொண்டிருந்தார்கள். சகதேவன் கிருஷ்ணனைக் கட்டிப்போடும் மகாபாரம் உத்யோக பர்வாவில் வரும் சீன் ஞாபகம் வந்தது. மானசீகமாக பரமாத்மாவின் மூலத்திருவடிகளைக் கட்டி வெற்றி கண்டவன் சகதேவன். கிருஷ்ணன் அவனது பக்தியில் அடங்கிப்போனான்.
ஹயக்ரீவர் கோயிலுக்குள் நுழைந்தவுடன் துளசி வாசம் நாசியில் ஏறியது. எங்கு துளசி வாசம் வந்தாலும் எனக்கு மன்னை ராஜகோபால ஸ்வாமி சன்னிதிதான் ஞாபகம் வரும். மாடு மேய்க்கும் திருக்கோலத்தில் சிரிப்பான் அந்தக் கண்ணன்.
பரீக்ஷைக்குப் படிக்க என்று எனக்கொரு பாணி வைத்திருந்தேன். ஜ்யேஷ்ட குமாரத்தி வினயாவுக்குச் சொன்னதைச் சின்னதா இங்கே லிஸ்ட் பண்றேன்.
1. பொதுப் பரிட்சை என்பது , “பொஸ்தகத்தையே சேப்பா கறுப்பான்னு பார்க்கமாட்டான்... வெள்ளைப் பேப்பரை நீலப் பேப்பர் ஆக்கிட்டு வந்துவடன் எங்காத்து தம்பி...” என்று என் சாரதாப் பாட்டி தேர்வுகளை வண்ணமயமாக சகஜப்படுத்துவது போன்றது. பயப்பட அவஸ்யமில்லை. இதுதான் நன்றாகப் பரீட்சை எழுதுவதற்கான முதல் படி. பயம் தவிர்.
2. இந்தியக் கல்வி முறைப்படியும் தேர்வுகளின் நிலவரங்களையும் கருத்தில் கொண்டு நம்முடைய அக்கா அண்ணாக்கள் எழுதிய தேர்வு கேள்வித் தாள்களை வாங்கி அசுர சாதகம் செய்யவேண்டும். பயிற்சி செய்.
3. புதுமாதிரியான கணக்குகள், அறிவியல் கேள்விகள் எங்கும் தென்படின் அதை மட்டும் தெரிந்து கொள்ளாமல் அதற்கு தொடர்புடையவைகளையும் ஆர்வமாகப் புத்தியில் ஏற்றிக்கொள்ள வேண்டும். வகையாறக்களை அறிந்துகொள்.
4. ”டீ... நான் நேத்திக்கே கெமிஸ்ட்ரி முடிச்சுட்டேன்.. இன்னிக்கி ரெண்டு தடவை ரிவிஷன் விட்டேன்...கெமிக்கல் ஃபார்முலால்லாம் இப்போ அத்துப்படி” என்று உங்களிடம் உதார் விடும் நண்(ப)பிகளின் பேச்சை நம்பி மெர்சலாகாதே. ஒருத்தருக்கு ரெண்டு தடவை ரிவிஷன் தேவைப்படும்.. நாம பசுமரத்தாணியாக இருக்கலாம். பச்சைக்கற்பூரமாகவும் இருக்கலாம். பிறத்தியார் பிரிப்பரேஷன் நம்மை பிளக்கக்கூடாது. முக்கியமான பாயிண்ட். நம் படிப்பே நமக்குதவி.
5. எந்தப் பாடத்திலும் முக்கியமான பாயிண்டுகளை தனியே மளிகைக் கடை, கையடக்க, ரோக்கா சீட்டு போன்ற ஒன்றில் புல்லட்ஸ் போட்டு எழுதிக்கொள்ள வேண்டும். சாப்பிடும் போதும், வாசலில் பராக்குப் பார்த்து உட்கார்ந்துகொண்டிருக்கும் போதும் ச்சும்மா எடுத்து எடுத்து பார்த்துக்கொள்ளவும். பரீட்சை ஹாலில் அந்த ரோக்கா சீட்டு மனக்கண்ணில் தோன்றும். கண்ணால் படி.
6. இன்னின்னிக்கு இன்னென்ன பாடம் என்று கிரமமாகப் படிப்பது பலன் தரும். மூளை ஃப்ரெஷ்ஷாக இருக்கும் நேரங்களில் கஷ்டமான பாடங்களையும் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கும் சமயத்தில் இலகுவானவைகளும் படியுங்கள். அட்டவணை அவசியம்.
7. ”ஏய் இது எப்படின்னு கொஞ்சம் சொல்லேன்...” என்று புஸ்தகம் நீட்டுவோருக்கு ”எனக்கே படிக்க நேரமில்லை...” என்று முறுக்கிக்கொள்ளாமல் மனமுவந்து சொல்லிக் கொடுங்கள். ஒருமுறை சொல்லிக்கொடுப்பது பத்து முறை படிப்பதற்கு சமம். சொல்லிக்கொடுத்தல் படித்தலுக்கு சமம்.
8. சில கேள்விக்கு புஸ்தகத்தில் இருக்கும் சில ஜார்கன்களை அப்படியே எழுதவேண்டிவரும். ஆகையால் பார்க்காமல் ஒன்றிரண்டு முறை புது ஃபார்முலா போல எழுதிப் பழகுதல் நலம். எழுதிப் படித்தால் எண்பது முறை படிப்பது போன்றது.
9. ஏ.ஆர்.ரஹ்மான் போன்று உங்களுக்கும் இரவில் படைப்பூக்கம் பொங்கி வந்தால் அணை போட வேண்டாம். இரவிலேயே படியுங்கள். பிரச்சனையில்லை. விடியற்காலையில்தான் தூங்கிவழிந்துதான் படிக்கவேண்டும் என்கிற கட்டாயமில்லை.
10. நூறுசதம் முயற்சி செய். கடினமாக உழை. என்றுமே நல்ல முயற்சிக்கு இறைவன் துணை வருவார். தினமும் ”ஹயக்ரீவம் உபாஸ்மஹே..” என்று ஹயக்ரீவர் ஸ்லோகம், ”சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே....” சரஸ்வதிக்கு ஐஸ் வைத்து தியானிக்கிறோம் என்று புஸ்தகம் பிரிக்காமல் பரீக்ஷைக்குப் போனால் கட்டை போட்டுவிடுவார்கள். தெய்வ பலம் உறுதுணை மட்டும்தான்.
எனக்குத் தெரிந்ததை எழுதினேன். பொதுப்பரீட்சை எழுதும் புண்ணியர்களுக்கு வாழ்த்துகள்!! ஆல் தி பெஸ்ட்!! 
smile emoticon

1 comments:

விஸ்வநாத் said...

// எம்சிஏவை ரேங்க்கில் முடித்தேன்//
அப்டியா ?

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails