Friday, March 18, 2016

வைஷ்ணவ் கல்லூரி விருது

காரும் பஸ்ஸும் ராட்ஷசத்தனமாய் விர்ர்ர்ர்ர்ரென்று சீறும் நுங்கம்பாக்க பிரதான சாலை. அங்கிருந்து இருநூறு மீட்டரில் சாந்தமாய் ஒரு இடம் இருக்க முடியுமா என்று நான் அடிக்கடி ஆச்சரியப்பட்டதுண்டு. கலைவாணி நித்ய வாசம் செய்யும் இடம். எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரி. நேற்று கிடைத்த சிறப்பு அழைப்பிற்கிணங்க அக்கல்லூரியின் இருபத்து நான்காம் வருட கல்லூரி தினத்திற்காக மாலை ஐந்தரைக்கு நானும் எனது பாஸாகிய நண்பர் Ravindran Narayanan, மூத்த இளைஞர்Saravanan Manickam மற்றும் Kalpana Naidu ஆகியோருடன் ஆஜராகியிருந்தேன்.
லேசாய்த் தலைகோதும் தென்றல். சூரியன் மேற்கில் சாய்ந்த அந்திவானம் பார்த்த மேடையில் மூன்று நங்கைகள். எதிரே சுமார் ஐநூறு பேர் நிசப்தமாய்க் காத்திருந்தார்கள். ஆண்டுவிழாவின் பிராதன விருந்தினராக பார்க்லேஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் உமா கிருஷ்ணன் வந்தவுடன் சம்பிரதாயமாக விநாயகர் பாடலுடன் விழா அமர்க்களமாகத் தொடங்கியது.
அடு
த்ததாகப் பாடியவர் கடலூர் திரு. சுப்ரமண்யத்தின் ரேவதி ராக க்ருதியான “ஜனனி, ஜனனி.. ஜனனி.. ஜகத்காரணினி..... பரிபூரணி ” பாடலின் பூர்வாங்கமாக ஜெட் வேகத்தில் எடுத்த ஆரோகணத்தில் காதுகொடுத்த ஜனம் மொத்தமும் சொக்கிப் போனது. பிரமாதமாகப் பாடினார். பிருகாக்களில் பிச்சு உதறினார். ”கடைக்கண் பாராயோ.. கருணைப் பொழிவாயோ...”வில் குழுமியிருந்த சக்திகளின் சக்தியைப் பாடலாய்க் காட்டினார்.
முப்பெருந்தேவியவராக அமர்ந்திருந்தவர்களில் கடைசியாகப் பாடியவர் அம்மாலையை இன்னும் அழகாக்கினார். எம்மெஸ் அம்மாவின் “காற்றினிலே வரும் கீதம்” பாடினார். ”நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில்...
நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்....” என்று பாடும் போது வீசிய காற்றில் மெல்ல இமைகள் மூடி உள்ளே பார்த்தால் கண்ணன் வேங்குழலுடன் நின்றான். குரல்களின் இன்னும் மெருகேற்றி கோரஸாக விட்டல பாண்டுரங்காவின் அபங்கோடு பாடல்களை நிறைவு செய்தார்கள்.


இதர கலை நிகழ்ச்சிகள் ஆரம்பத்திலேயே களை கட்டியது. பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி என்று பல நாட்டிய வகையறாக்களின் கூட்டுப் பங்களிப்பு பார்க்க அபாரமாகயிருந்தது. அவர்களது உழைப்பு பாந்தமான நடன அசைவுகளில் தெரிந்தது. பரதம் ஆடிய பெண் மானென துள்ளிக் குதித்ததை படம் பிடிக்க என்னிடம் இருக்கும் ஐஃபோனின் அடாசு கேமிராவில் முடியாது. கன்னத்தில் முத்தமிட்டாலிலிருந்து “ஒரு தெய்வம் தந்த பூவே...” பாடிய பெண்ணும் நன்றாக பாடினார். முன்பெல்லாம் பேப்பரில் எழுதி காற்றில் படபடக்க மேடையில் பிடித்துப் பாடியவர்கள் இப்போது மொபைலில் ஏற்றிக்கொண்டு பாடுகிறார்கள். கரோகியின் மீட்டருக்கு இம்மியளவு பிசகாமல் குரலில் சின்மயியை எட்டித் தொடும்படி பாடியது பாராட்டத்தக்கது.

கலை நிகழ்ச்சிகள் முடிந்து முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். NAAC என்கிற கல்லூரிகளுக்கெல்லாம் மதிப்பீடு மற்றும் தரச்சான்றிதழ் அளிக்கும் நிறுவனம் எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரிக்கு ”A" கிரேடு அளித்திருக்கிறார்கள். (3.56/4). மாணவிகள் மத்தியிலிருந்து ஒரு “ஓ” கோஷம் விண்ணைப் பிளந்தது. கல்லூரியின் பல்வேறு துறை சாதனைகளை பட்டியலிட்டு விளக்கினார். அவருக்கு இல. கணேசன் கையால் பாரதிய வித்யா பவனின் “படைப்புல சிற்பி” விருது கிடைத்திருக்கிறது. பின்னர் எங்கள் சேர்மேன் ஸ்ரீ. மனோஜ் குமார் சந்தோலியா அவர்கள் கல்லூரியின் செயல்பாடுகள் பற்றி செம்மையாகப் பேசினார்.

உமா கிருஷ்ணன் தலைமையுரை பெண்களுக்கான எழுச்சியுரையாக அமைந்தது. தனது வாழ்வியல் சம்பவங்களிலிருந்து உதாரணங்களைச் சொல்லி அங்கு குழுமியிருந்த மாணவியர் கூட்டத்தை முடுக்கி விட்டார். கல்லூரியில் விசேஷமான செயல்கள் செய்த மாணவியர்களுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கிச் சிறப்பித்தார்கள். கைவலிக்க வலிக்க ஆறேழு பக்க ஏ4 லிஸ்ட்டில் அடைத்திருந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு அதோடு சேர்த்து ஏதோ எங்களால் இயன்ற யத்கிஞ்சித வேலைக்கும் ஒரு விருது வழங்கி பெருமைப்படுத்தினார்கள். மகிழ்ச்சி.

”ரோஸரில எனக்கு ஜூனியர் உமா. நாங்க ரெண்டு பேரும் ஃபர்ஸ்ட் ரேங்குக்கு அவார்ட் வாங்க நிற்கும்போது பார்த்து சிரிச்சிப்போம். பேசிப்போம்” என்று பெருமிதத்துடன் சொல்லும் போது வாழ்க்கையில் அவர்கள் ஏறிய ஏணியின் அளவு தெரிந்தது.
முதல்வர் ஶ்ரீமதி. லலிதா பாலகிருஷ்ணனின் சீரிய தலைமையிலும், எங்கள் சேர்மேன் ஸ்ரீ மனோஜ் குமார் சொந்தாலியாவின் சீர்மிகு வழிகாட்டுதலிலும் எம்.ஓ.பி வைஷ்ணவ் மேன்மேலும் பல சிகரங்களைத் தொடும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
பின் குறிப்பு: ஆடிய பாடிய சக்தி ஸ்வரூபங்களின் பெயர்களை மறந்தமைக்கு மன்னிக்கவும்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails