Friday, March 18, 2016

இசையில் தொடங்குதம்மா....

சில நொடிகளில் உங்களைக் கொள்ளையடிக்கப் போகிறது என்பது தெரியாத அடக்கமான தொடக்கம்தான். பாடலை ஆரம்பிக்கும் ஆண் குரலில் இதமான மிளிர்வு. வார்த்தைகளில் ஏதோ ஒரு நளினம். அஜோய் சக்ரபர்த்தியின் "வசந்தம் கண்டதம்மா..."வில் 'க'வுக்கும் 'ண்'க்கும் இடையில் வரும் ப்ருகாவும் அதை வெண்ணையாய் ஈஷிக்கொண்டே தொடரும் கோரஸுக்குப் பிறகு வரும் அடுத்த ப்ருகாவும் தரையிலிருந்து உங்களை வானத்துக்குப் போட்ட ஒரு எஸ்கலேட்டரில் ஜிவ்வென்று சுகமாக ஏற்றுகிறது. தனிமையில் அமர்ந்து கண்மூடிக் கேட்டால் உள்ளுக்குள் உறைந்தும் கரைந்தும் போய்விடுகிறோம்.
"தேய்ந்து வளரும் தேன் நிலாவில்..."என்று வளைத்து குழைந்து பாட ஆரம்பித்து "வானத்தின்..." என்பதில் உசரக்கப் போய் ஒரு சுகமான நிரவல்... அது சொர்க்கத்துக்குப் போகும் பயணத்தைத் துரிதப்படுத்தும் ஆக்ஸிலரேட்டர்.
இரண்டாவது சரண ஆரம்பத்தில் வரும் தந்தி வாத்தியமும் சக்ரபர்த்தியின் குரலும் அமிர்தத்தையும் தேனையும் குழைத்து நெஞ்சினிக்க காதில் பாகாய் ஊற்றுகிறது. அதன் பின்னர் வரும் "உயிர்களே... உயிர்களே.."வில் ராஜாவின் இந்திரஜாலம் தெரிகிறது. சடசடவென்று ஆரோகணத்தில் பிரயாணித்து அப்படியே அசால்ட்டாக ஒரு அரை வட்டமடித்துத் திரும்பி "இன்பத்தைத் தேடித் தேடி"யில் காட்டருவியாகச் சக்ரபர்த்தியை இறங்கவைத்து நம்மைக் கிறங்கடிக்கிறார். அந்தச் சரண முடிவில் இசை போதையேற்றும் ஒரு குட்டி ஆலாபனை வேறு கொசுறாக. கேரள செண்டை பாணியில் பாடல் முழுக்க பின்னணியில் முழங்கும் தாளவாத்தியம் செவிமடுத்த அனைவரையும் அனிச்சையாக காலாட்ட வைப்பது ராஜாவின் சாகசம்! இசை வழி பொம்மலாட்ட வித்தை!!
ராஜா என்கிற ராக்ஷசன்!!
ஆமாம்.. இசையில் தொடங்குகிறது.... இளையராஜாவின் இசையில் தொடங்குகிறது நமது வசந்தம்!!

1 comments:

விஸ்வநாத் said...

I must have heard this song more than 100 times - in the last 4 days - after reading this post.

Thank you RVSM.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails