Saturday, February 22, 2014

ஸ்வர்க்க விளிம்பு

பாற்கடல், தேவாசுரர்கள், மத்து மந்திரமலை, வாசுகிப் பாம்பு என்றெல்லாம் ஏகத்துக்கும் மெனக்கெடாமல் இன்றைக்கு சர்க்கரைப் பொங்கல் தேவார்மிதமாக இருந்தது. ச்சாயா ஸ்வர்ஷ்லாம்பா சமேத ஸ்ரீசூரியநாராயண ஸ்வாமிக்கு நெய்வேத்தியம். இயற்கை தெய்வம் பாஸ்கரனுடன் இதர தேவாதி தேவர்களும் இன்றைக்கு எங்கள் வீட்டிற்கு வந்திருக்கக்கூடும். அடிநாக்கு வரை தித்திப்பு. ஆனால் எவ்ளோ வாய் இறங்கினாலும் திகட்டவில்லை. ஷுகர் பற்றிய அனாவசியக் கவலையெல்லாம் ”சர்வேஸ்வரா... சரணம்...” என்று பகவானிடம் விட்டுவிட்டேன். பொன் வறுவலான முந்திரியும் கிஸ்மிஸ்ஸும் பொக்கிஷமாய்ப் புதைந்து கிடந்த சர்க்கரைப் பொங்கலை தளதளவென்ற நெய்க்குழம்பில் புரட்டிஒரு வெட்டு வெட்டியாயிற்று. வலது கையில் கண்ணாடியில்லாமல் முகம் பார்க்குமளவு நெய். “மிந்திரியெல்லாம் உன் இலையிலேயே விழணுமாடா? பிறத்தியாருக்கு வேண்டாம்?”ன்னு சாரதாப் பாட்டி சிரிச்சுண்டே கேட்பாள். மிந்திரி கரண்டியில வரும்வரை கிளறிக் கிளறிப் போடுவாள்.

சாராயம் குடித்தவுடன் வரும் போதையைப் போல சாப்பிட்டு முடித்தவுடன் அப்படியொரு தூக்கம் கண்ணை அசத்தியது. ஷுகர் எகிறியிருக்கலாம். அஞ்சு பத்து நிமிஷம் கஷ்டப்பட்டு டிவி பார்த்துவிட்டு மொள்ள தள்ளாடியபடியே நடந்து வந்து படுத்துவிட்டேன்.

எழுந்ததும் “விளம்பு”வைக் கையிலெடுத்தேன். பாண்ட் பாக்கெட்டில் சொருகிக்கொண்டு காலேஜ் காண்ட்டீன், தியேட்டர் இண்டெர்வெல், கிண்டியிலிருந்து நந்தனம் பஸ் ட்ராவல், ஒரு மசால்தோசை சொல்லிவிட்டு மேஜைக்கு வரும் நேரம், கால் டாக்ஸி காத்திருக்கும் வேளை என்று கிடைக்கும் சொற்ப நேர நிமிஷங்களைக் கரைக்க தோதான சொரூபத்தில் வெளியிட்டிருக்கும் சுஜாதாவின் குறுநாவல்.

விஜயன் சாரதி என்று ஸ்பிளிட் பர்சனாலிட்டியாக ஒரே ஆள் விஜயசாரதியைக் கடைசி பாராவில் காண்பிக்கும் சுஜாதாத்தனமான க்ரிப்பிங் கதை. ஆனா சொல்ற விதத்துல இருக்கிற சுவாரஸ்யம் இருக்கே.....தொறந்த வாய்க்குள்ள டைனோசரே போய்ட்டு வரும். கதைக்கு நடுவில வசனமாய் செக்காவ் சொன்ன “I dream the dreams of ten men"ஐ வச்சுருக்கார். ப்பா... ராட்சஷன். அந்தக் கேரெட்க்டருக்கு குழந்தைலேர்ந்து நடந்ததெல்லாம் எண்ணங்களா மனசுல முட்றது. சின்ன வயசுல அம்மாவோட கெட்ட நடத்தையைப் பார்த்தாலும் அவ தனக்காகப் பட்ட கஷ்டத்துகாக அம்மா...அம்மான்னு உருகுற கேரக்டெர். சின்னோண்டு கரு. டைட்டா இழுத்துச் சொல்லி கடைசியில தலையோட கால் கதையைத் திருப்பிப் போடறதுக்கு இனிமே ஒரு ஆள் பொறந்துதான் வரணும்ப்பா...

கடைசி வரியில ஒரே ஆள்தான்னு தெரிஞ்சப்புறம் திரும்பி ஒருதடவை படிக்கத்தூண்டும் வர்ணனைகள். விளிம்பு.

சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டு ஸ்வர்க்கத்தின் விளிம்புல நின்றவனை மீட்டு பூலோகத்துக்குக் கொண்டு வந்த விளிம்பு!!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails