Saturday, February 22, 2014

ஒள்நிறத்தஒளியார்

வயிறு முட்ட பிரசாதங்களுடன் மனசு முட்ட பக்தியுடனும் பொன்னமராவதியிலிருந்து பிள்ளையார்பட்டிக்கு கண் அசராமல் காரின் பின்னால் ரோடு முட்ட புழுதி பறக்க விரைந்தோம். மார்கழிக் குளிரை அடித்து விரட்டும் வெய்யில் பலமாக அடித்தது. ”கார் ஜன்னலை உசர்த்தி ஏசி போட்டுக்கோ...” என்றது ஊசியாய்க் குத்தியது ஊமை வெய்யில்.

பொன்னமராவதியிலிருந்து வேந்தன்பட்டி குறுக்கு ரோட்டில் ஏறாமல் நேரே ஒரு பிடிபிடித்து பைபாஸ் வந்து பிள்ளையார்பட்டிக்குச் செல்வோர் கண்ணில் நிச்சயம் அந்த பெரிய கோயில் தட்டுப்படாமல் இருக்கவே இருக்காது. வால்மீகி கடுந்தவமியற்றிய போது அவரைச் சுற்றி புற்று கட்டியது. அந்தப் புற்றிலிருந்து சிவன் வெளிப்பட்டு புற்றீசராகக் காட்சியளித்தாராம். அதனால் புத்தூர் என்று வழங்கப்பட்டு மரியாதை அடைமொழியாக திரு சேர்க்கப்பட்டு திருப்புத்தூரானதாம். அதுவே நம்மைப் போன்றோரின் வாயில் சிக்கி புவின் காலை ஒடித்துத் திருப்பத்தூர் ஆன கதை.

”நம்பியாண்டார் நம்பி வாயில்” என்று ரோடோரத்திலிருந்தே தெரியும்வண்ணம் கோபுரவாசலில் சின்ன மண்டபம் கட்டி அதன் உள் நெற்றியில் பட்டையடித்தது போல வெள்ளையில் எழுதி வைத்திருப்பார்கள். பிள்ளையார்பட்டி செல்லும் திசையிலேயே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வண்டியை இடதோரத்தில் நிறுத்திவிட்டு திருப்பத்தில் காட்டு வேகத்தில் வரும் பேருந்தில் அடிபடாமல் தப்பித்து ”ஈஸ்வரோ ரக்ஷிது” என்று கோவிலுக்குள் நுழைந்துவிடுங்கள்.

கொடிமரத்திலிருந்து நேரே மூலவர் திருத்தளிநாதர் தரிசனம் தருவார். மூலவர் சன்னிதி முகப்பில் பொல்லாப்பிள்ளையார். பொல்லாத பிள்ளையாரா? என்று லிட்டரலாக அர்த்தம் கேட்டுவிடாதீர்கள். அவர் பொள்ளாபிள்ளையார். பொள்ளா என்றால் உளிபடாமல் என்று அர்த்தம். உளிபடாமல் சுயம்புவான பிள்ளையார் பொள்ளாப்பிள்ளையார். திரிந்து பொல்லாப்பிள்ளையாராகிவிட்டார். நம்பியைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். தேவாரங்களைத் தொகுத்தவர் என்று சொல்வர். பொல்லாப்பிள்ளையாருக்கும் திருநாரையூர் நம்பிக்கும் உள்ள தொடர்பு தெரிந்தவர்கள் அடுத்த பாராவை ஸ்கிப்பவும்.

தனது தந்தை தினமும் பிள்ளையாருக்கும் நிவேதனம் செய்து வருவதை பார்த்துக்கொண்டிருந்தான் சிறுவன் நம்பி. ஒரு நாள் தந்தை தனக்குப் பதிலாக “நம்பி! நீ சென்று பொல்லாப்பிள்ளையாருக்கு நெய்வேத்யம் செய்துவிட்டு வா!” என்று சொன்னார். பக்தி ஆர்வம் தலைதூக்க நிவேதனத்துடன் கோவிலுக்கு ஓடினான் நம்பி. நிவேதனத்தை வைத்துவிட்டு பிள்ளையாரைச் சாப்பிட அழைத்தான். உஹூம். பிள்ளையார் மசிவதாக இல்லை. நாம் நிவேதனம் கொடுத்தால் சாப்பிடமாட்டேன் என்கிறார் பிள்ளையார் என்று வெறுத்துப்போன நம்பி பக்கத்திலிருந்து கருங்கல் சுவரில் முட்டிக்கொண்டு உயிர்த்தியாகம் செய்யத் துணிந்தான். பிள்ளையார் பெரியமனது பண்ணி காட்சியளித்து அமுதுண்டார் என்பது புராணக்கதை.

திருவலச்சுற்றிலிருக்கும் யோக நிலையில் நாய் வாகனமில்லாமல் இருக்கும் யோக பைரவர் சன்னிதி தனிச்சிறப்பு வாய்ந்தது. சகல தோஷநிவர்த்தியாகிறது என்று வேஷ்டியின் மேல் மஞ்சள் கலர் “சிவ சிவ” துண்டு சுற்றிய மூலவர் சன்னிதி குருக்கள் அருட்பெருமைகளை எடுத்துச் சொன்னார். வால்மீகி தவமியிற்றிய இடமும் புற்றீசரும் பிரதக்ஷினம் வரும் பாதையில் தரிசனம் தருகிறார்கள். லக்ஷ்மி காண கௌரிதாண்டவமாடிய நடராஜப்பெருமானின் திருச்சபையில் ஐந்து கற்தூண்களும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் போல இசைத்தூணாக இருப்பதை ரசித்துக்கொண்டே தரிசனம் முடிந்து கொடிமரத்தருகில் நமஸ்கரித்து வெளியே வந்தோம்.

தாகமடித்தது. வாசல் பெட்டிக்கடையில் கிங் ஃபிஷர் தண்ணீர் ரெண்டு லிட்டர் பெட் பாட்டில் கேட்டேன். நெற்றி நிறைய பட்டையுடன் விபூதிபூஷணமாகக் காட்சியளித்த என்னைப் பார்த்து “முப்பத்தஞ்சு ரூவா குடுங்க..” என்றார். கிங் ஃபிஷரை ஒரு முறை கையில் வைத்துச் சுழற்றினேன். எம்மார்ப்பி இருவத்தெட்டு ரூபாய் என்று தெளிவாக அச்சடித்திருந்தது. “இருவத்தெட்டுதான் போட்ருக்கு” என்று கேட்ட என்னை ஜென்ம எனிமியாகப் பார்த்தார். ”சரி.. முப்பது ரூவா குடுங்க..” என்று ஐந்து ரூபாய்க்கு டிஸ்கௌண்ட் அசால்ட்டாகக் கொடுத்தார். ஈஸ்வரன் கோயில் வாசலிலேயே அநியாயம் நடந்தாலும் தொண்டை வறண்டதால் முப்பதைக் கொடுத்து “நீவிர் வாழ்க!” என்று வாழ்த்திவிட்டு கணபதியைக் காணக் கிளம்பினேன்.

இவ்வியாசத்தை இப்பொழுது எழுதும் போது திருத்தளிநாதரைப் பற்றிய தேவாரத் தேடலில் கிடைத்த கீழ் கண்ட பாடல் அப்பெட்டிக்கடைக்காரரை மீண்டும் நினைவில் கொண்டு வந்து நிறுத்தி “திருப்புத்துத்தூரையும் திருத்தளிநாதரையும் பத்தி திருஞானசம்பந்தர் எழுதியப் பாட்டைப் படிச்சுப் பாருய்யா...” என்று காதருகே ஃபுல் ஆம்ப்ளிஃபிகேஷனில் ஸ்பீக்கர் போட்டு அவரிடம் கேட்கவேண்டும் போல் இருந்தது. பாடலைத் தருகிறேன். அடுத்தமுறை நீங்கள் சென்றால் அவரிடம் கேளுங்கள். திருத்தளிநாதனுக்கும் கேட்கும்.

வெண்ணி றத்த விரையோ டலருந்தித்
தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர்
ஒண்ணி றத்த வொளியா ரவர்போலும்
வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே.

வெண்மையான விடையைக் கொடியாகக் கொண்டவர், வெள்ளி போன்ற நிறமுடைய மணம் பரப்பும் மலர்களை அடித்து இழுத்துக்கொண்டு வரும் தெளிந்த நீர் பாயும் திருப்புத்தூரில் வாழும் ஒளிநிறைந்தஒளியான இறைவன். (பேரொளியாய்த் திகழ்பவர்)

கற்பக விநாயகர் ஆர்ச்சைத் தாண்டி முன் வீல் இரண்டும் கோவிலைப் பார்க்க சரசரக்க ஏறிய உடனேயே தெரிந்துவிட்டது விநாயகர் மூச்சுவிடக்கூட முடியாமல் முழு பிஸியாக இருக்கிறார் என்று. முதுகு கூன் விழுந்து கேள்விக்குறியாகி என்னுடன் வந்த என் சிற்றன்னையை நினைத்துக் கவலைப்பட்டேன். நெரிசல் மிகுந்த கோவில்களுக்கே உரித்தானதான வழியெங்கும் காணப்படும் எச்சில் பிரசாதத் தொண்ணைகளும், பிளாஸ்டிக் பேப்பர்கள், காய்ந்த மாலைகளும், தேங்காயிலிருந்து உரிக்கப்பட்ட நாரும் கால்களுக்கு மெத்தையிட்டது. கம்பி போட்ட க்யூ வரிசைக் கட்டி அன்னதானம் வழங்குமிடத்தருகே வண்டியைப் பார்க் செய்துவிட்டு வடக்கு கோபுரவாசல் அருகே விக்னத்தைத் தீரப்பா விநாயகா என்று உட்கார்ந்துவிட்டோம்.

சிறிதுநேரம் கழித்துக் கிடைத்த பேருதவியால் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணினால் கற்பக விநாயகருடைய காலெட்டும் தூரத்தில் உட்காரவைத்து தரிசனம் பண்ணி வைத்தார்கள். திருக்கயிலாயத்திலிருந்து மூஞ்சுரு ஃப்ளைட் பிடித்து வந்திறங்கியவர் போல ஃப்ரெஷ்ஷாக இருந்தார். காதும் தொந்தியும் வெள்ளியில் பளபளத்தது. யாரோ கொடுத்த கேரி பேக் தேங்காய் மூடிக்கு அவசரார்ச்சனை செய்து ஒதுக்கி வைத்தார்கள். தீபாராதனையில் ஜொலித்தார். ஐந்து நிமிடங்கள் அதிஅற்புத தரிசனம்.

”விநாயகருக்கான ஆறுபடை வீட்டுல இது அஞ்சாவது படை வீடுங்க” என்று விநாயகரைப் பார்க்க உதவிய அழகர் சொன்னார். சன்னிதியில் போட்ட மாலையைக் கழற்றி விட்டு மருதீசரை தரிசனம் செய்துகொண்டு வெளியே வந்தபோது மனது நிறைந்திருந்தது. ஒரு பொடியன் சதுர்தேங்காயை தொட்டிக்குள் அடித்து திரும்பவும் பொருக்கி திரும்பவும் உடைத்து திரும்பவும் பொருக்கி திரும்பவும் உடைத்து ப்ராக்டீஸ் செய்துகொண்டிருந்தான்.

ஒரு டீ குடிக்கலாம் என்று ஆர்ச் தாண்டி வண்டியை நிறுத்தினேன். ஊனமுற்றோருக்கும் திருநங்கைகளுக்கும் பாதி விலையில் உணவு வழங்கப்படும் என்று போர்டு போட்டிருந்தார்கள். “ஏன்?” என்று கேட்டால் இளக்காரமாக பார்ப்பார்களோ என்றஞ்சி என்னவாக இருக்கும் என்று காரணத்தை ஆராய்ந்து கொண்டே காஃபி என்று கொடுத்த ஒரு கப் கழனியை உறிஞ்சிக் குடித்துவிட்டு வண்டியை எடுத்தேன்.

வயிரவன் பட்டி பைரவரை பார்ப்பதற்குள் உச்சிகாலம் முடிந்து கோயில் நடை சார்த்திவிட்டிருந்தார்கள். புதுக்கோட்டை ஏரியாவிலிருந்து விலகி தஞ்சை ஜில்லாவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தேன். இன்னென்ன கோயிலுக்கெல்லாம் செல்லலாம் என்று ஒரு பட்டியல் போட்டிருந்தேன். ஐஃபோனில் அதையெடுத்து ஒரு முறை சரிபார்த்துக்கொண்டிருந்தேன். மணிக்கட்டு ஃபாஸ்ட்ராக் மெதுவாகப் போனாலே சாயரட்சை நடைதிறக்கும் கோயில்களுக்கு போகலாம் என்று அறிவுறுத்தியது.

மானிடப் பதரான எனது சித்தம் இப்படியிருந்தால் சிவன் போக்கு வேறு மாதிரியாக இருந்தது. நானொரு குரு ரசிகன். ஆகையினாலேயே திருவிளநகர் வீணா தெக்ஷிணாமூர்த்தி எனது வால் ஃபோட்டாவாக பொருத்தி எப்போதும் அழகு பார்க்கிறேன். தேவாதிதேவர்களே அதிசயிக்கும் கோலத்தில் அமர்ந்திருந்த தெக்ஷிணாமூர்த்தியைப் பற்றி எனது அடுத்த ஸ்டேட்டஸ்ஸில்...

[யாத்திரை தொடரும்.....]

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails