Wednesday, December 24, 2014

கணபதி முனி - பாகம் 20 : விசாலாக்ஷியின் புனர்ஜென்மம்

மெரீனாவின் மணல்வெளியில் காற்று தலையைக் கலைக்க நாயுடுவும் கணபதி முனியும் நெடுநேரம் அமர்ந்திருந்தார்கள். கணபதியின் மனசு சஞ்சலத்திலிருந்தது. நாயுடு “என்னாச்சு?” என்று ஆதூரத்துடன் தோள் தொட்டார். கணபதி முனி தொண்டையைச் செருமிக்கொண்டு ஆரம்பித்தார்.

”குலீன: க்ஷுத்ராய ப்ரவர இதி தத்தே நிஜஸுதாம்
அநார்யன் விஞ்ஞாஸ்ச ப்ரபவ இதி காயந்தி ஸதஸ:
பலம் பாஹ்வோர்லுப்தம் ஹ்ருதம்பிச வாக்வைர்யமரிபி:
தஸாம் தேஸஸ்யைதாம் ப்ரதிபதமயம் த்யாயதி ஜன:”

பொருள்: மதிப்பும் மரியாதையுமுள்ள குடியில் பிறந்தோர் தனது பெண்ணை ஒரு தாழ்ந்த குலத்தில் வரன் தேடிக் கொடுக்கிறார். சிலர் இப்படியும் மேன்மையோடு இருக்க இன்னொருவர் பிரபுக்களையும் அதிகாரத்திலுள்ளவர்களையும் போற்றித் துதிக்கிறார். ஆண்களின் வலு குறைகிறது. பேச்சும் எதிரிகளால் கட்டப்படுகிறது. இவண் (இப்பாடலை எழுதுபவன்) இத்தாய் தேசத்தின் அவல நிலையை நினைத்து நினைத்து குமுறுகிறான்.

நாயுடு அமைதியாக அமர்ந்திருந்தார். கடலலைகள் ஆக்ரோஷத்துடன் போட்டி போட்டுக்கொண்டு கரை மோதிக்கொண்டிருந்தது. கணபதியின் முகம் பழமாய்ச் சிவந்திருந்தது. உள்ளக் குமுறல் அடங்காமல் மீண்டும் இன்னொரு ஸ்லோகம் படித்தார். வார்த்தைகள் வெடித்துச் சிதறின.

அரிபிரதயை: க்ராந்தாயை தே முஹுர்முஹுர் ருததை:
கரம் அவிகலம் தாதும் த்சேரோ ந கோபி விலோக்யதே
க்வ தவ தயிதாஸ்தே தே பூர்வே தரே பரதாதயே
யதஜித-புஜ அதுர்காஸ்தாயோஸ்தவாம்ப ந பீஇரபூத்

பொருள்: ஓ! தாய்மண்ணே! அக்கிரமக்காரர்களும் அயோக்கியர்களும் தொடர்ந்து உன் மீது படையெடுத்து ஆக்கிரமிக்கிறார்கள். ஒரு நாயகன் கூட இம்மண்ணில் உன்னைக் காபந்து செய்வதற்கு காணவில்லையே! உன் பயத்திற்கு நிழல் தரும் கோட்டையைப் போன்ற விரிந்த தோளுடைய பரதனைப் போல நாயகர்கள் எங்கே!

கடைசியில் அவர் கேட்ட ”எங்கே..” கடற்கரையெங்கும் எதிரொலித்தது. நாயுடுவுக்கு மெய்சிலிர்த்தது. கணபதியின் மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அவருடைய கோபத்தின் ஊற்று புரிந்து போனது. வரம் வாங்கி தாய்மண்ணைக் காக்க அவர் தவமியற்றுகிறார் என்று புரிந்து கொண்டார்கள். கணபதியின் அத்யந்த சீடர்களாகப் பின்பற்றி அவரது இலக்கை அடைய சபதமேற்றார்கள். சென்னையில் ஏற்பட்ட இந்த சத்சங்கத்தினால் மனம் குளிர்ந்தார் கணபதி.

திருவண்ணாமலைக்குத் திரும்பினார்.

வேலூர் ஊரிஸ் கல்லூரிக்கு தெலுங்கு பண்டிட் ஒருவர் அவரசமாகத் தேவைப்பட்டது. பிரின்ஸிபால் சம்பர்லன் ரெங்கையா நாயுடுவிடம் தக்க ஆளைப் சிபாரிசு செய்யும்படி பணித்தார். அன்றிரவே ராமஸ்வாமி ஐயரும் ப்ரோஃபஸர் நாயுடுவும் திருவண்ணாமலைக்கு பஸ் பிடித்தார்கள்.

“நீங்கள் இந்த உத்யோகத்தை ஏற்றுக் கொள்ளவேணும்.” என்றார் ஐயர்.

“இப்போது நீங்கள் வாங்கும் சம்பளத்தைக் காட்டிலும் மிக அதிகம். தயவுசெய்து மனசு வைக்கணும்” என்றார் நாயுடு.

இருபுறத்திலும் நின்று கொண்டு இருவரும் வற்புறுத்தியதில் ஊரிஸ் கல்லூரியில் தெலுங்கு கற்றுக்கொடுக்கும் ஆசானாக 1904ம் ஆண்டு வேலையில் சேர்ந்தார். கணபதி ஊரிஸ் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த முதல்நாள் அங்கிருந்த ஹை ஸ்கூல் பிரிவின் ஹெட் மாஸ்டர் தாமஸ் ஹாரி அவரின் தேஜஸில் சொக்கிப் போய் இருகையையும் குவித்து “நமஸ்காரம்..” என்று ஏக மரியாதை கொடுத்து வரவேற்றார். குழுமியிருந்த ஆசிரியப் பெருமக்களும் மாணவர்களும் ஊரிஸ் கல்லூரியின் புதிய சகாப்தம் இப்போதிலிருந்து தொடங்குகிறது என்று புரிந்து கொண்டார்கள்.

ஊரிஸ் கல்லூரியில் முதல்நாள் வகுப்பு தொடங்கிற்று. மேடையில் நின்று வருகைப் பதிவு எடுத்தார் கணபதி. கே.ஜி. சுப்ரமண்ய சாஸ்திரி என்ற பெயர் வந்தவுடன் ஒரு கணம் நின்றார்.

“உன் செல்லப் பெயர் அப்புவா?” என்றார் நிமிர்ந்து.

“ஆமாம்..” என்று ஒப்புக்கொண்ட அப்புக்கு ஆச்சரியமான ஆச்சரியம்.

“உன் கடனை நீ வசூலிப்பாய்....” என்று அர்த்தபுஷ்டியாகச் சொல்லிச் சிரித்தார்.
தெலுங்கில் அப்பு என்றால் கடன். இந்த அப்பு ராமஸ்வாமி ஐயரின் அம்மாவின் சகோதரிக்குப் பேரன்.

வக்கீல் உமாமஹேஸ்வர ஐயர் என்பவர் கணபதியிடம் தனக்கு சம்ஸ்க்ருதம் போதிக்கும்படி வேண்டிக்கொண்டார். மாசாந்திர தட்சணையாக பத்து ரூபாய். கணபதிக்கு கூடுதல் வரும்படி. உமாமஹேஸ்வரரின் மனைவி சுந்தரி ராமஸ்வாமி ஐயரின் மருமாள். உமாமஹேஸ்வரருக்கு ஒரு சகோதரி இருந்தார். அச்சகோதரியின் மகளை உமாமஹேஸ்வரரின் பிள்ளை கச்சபேஸ்வரருக்கு கல்யாணம் செய்வித்தார்கள். இந்தக் கல்யாணத்திற்குப் பிறகு உமாமஹேஸ்வரருக்கு ஏகப்பட்ட வீட்டுத் தொல்லைகள். கணபதியைச் சந்தித்தப் பிறகு உமாமஹேஸ்வரரும் சுந்தரியும் தங்களது இன்னல்களைத் தீர்க்கும் அருமருந்தாக அவரை எண்ணினர்.

அப்புவிற்கு உயர் வகுப்பில் படிக்கும் கல்யாணராமன் என்ற சகோதரனும் காவேரி என்கிற சகோதரியும் இருந்தார்கள். சிறுவயதிலேயே பெற்றோரை இழுந்து அனாதையானவர்களுக்கு கணபதியையும் விசாலாக்ஷியையும் அவர்களது அப்பா அம்மாவாகப் பாவித்து தொழுதனர். கணபதி அவர்களுக்கு மந்திர ஜபத்தை அப்யசித்தார்.

கணபதியும் அப்புவும் ஒரு நாள் திண்ணையில் அமர்ந்திருந்தார்கள். அப்பு ஏதோ பேச வாயெடுப்பது தெரிந்தது. ஆனால் தயக்கத்துடன் அமர்ந்திருந்தான். கணபதி “என்னப்பா அப்பு?” என்று கேட்டார்.

“குருவே! எனக்கு இரண்டு நாட்களாக சொப்பனங்கள் வருகிறது. உங்களிடம் சொல்லத் தயக்கம்...” என்று இழுத்தான் அப்பு.

“சொல்லப்பா...”

“முந்தாநாள் என்னுடைய தாத்தாவின் அப்பா உபனிஷத் ப்ரம்மம் சொப்பனத்தில் தோன்றினார்...”

“தோன்றி...”

“உங்களுடைய மனம் கோணாதபடி உங்களுக்குச் சேவை செய்யச் சொன்னார்...”

சிரித்தார் கணபதி. ”இன்னொரு சொப்பனம்?” என்று கேள்வியாய் அப்புவை ஏறிட்டார்.

“ஜடாமுடியுடன் ஒரு முனிவர் தோன்றினார். கூடவே நீங்களும் சொப்பனத்தில் வந்தீர்கள்....”

“ஓ நானுமா? ம்.. வந்து....”

“அவருக்குப் பால் கொடுக்கச் சொன்னீர்கள். நான் பால் கொடுத்தேன். அவர் வாங்கி அதைக் குடித்தார். பின்னர் அப்பனே.. உன்னைப் பிடித்திருந்த சாபம் இன்றோடு விலகியது. உன் குருவின் திருப்பாதங்களை இருகப் பற்றிக்கொள்... மேன்மை கொள்வாய்... என்று ஆசீர்வதித்து மறைந்தார்...”

கணபதியிடம் இதைச் சொல்லிவிட்டு அப்புவிற்கு இரைத்தது. தெய்வத்தின் வழிநடத்தல் இது என்று புரிந்துகொண்டான். குடத்திலிருந்து தண்ணீர் மொண்டு பருகினான். கணபதியைப் பார்த்துக்கொண்டு அவரது காலருகே தாசனாய் அமர்ந்துகொண்டான்.

சிறிதுநாட்களுக்குப் பிறகு நண்பர்களைச் சந்தித்துவரலாம் என்று திருவண்ணாமலைக்குக் கிளம்பினார் கணபதி. ரயில்நிலையத்தில் “வண்டி சென்று அரை மணி ஆகிறது” என்றார்கள். சோகமாக வீடு திரும்பினார். வீட்டிற்குள் நுழைந்ததும் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. கூடத்தில் பிரக்ஞையின்றி கிடந்தார் விசாலாக்ஷி. ஆயூர்வேத மருத்துவரும் விசாலாக்ஷியின் மாமாவுமான ம்ருத்துஞ்சயா ”தேகபலமில்லை.. பலஹீனமாக இருக்கிறாள்...” என்று சொல்லி மருந்து கொடுத்தார். அரை மணி ஆன பின்னரும் அசையாமல் கிடந்தார். அப்புறம் சப்தநாடியும் அடங்கி இறந்துவிட்டார்.

விசாலாக்ஷியை மடியில் இட்டு நாடி பிடித்துக் கணபதி பரிசோதித்தார். கொல்லும் அளவிற்கு விசாலாக்ஷிக்கு ஒரு வியாதியும் இல்லை. இன்ன செய்வதென்று தெரியாமல் ம்ருத்தஞ்சயாவும் கணபதியும் பேச்சற்று வாயடைத்துப்போய் நின்றிருந்தார்கள்.

திடீரென்று பக்கத்து வீட்டிலிருந்து க்ரீச்சிடும் அழுகுரல் கேட்டது. அண்டை வீட்டில் ஒரு மூதாட்டி கைலாச பதவி அடைந்துவிட்டார் என்று செய்தி வந்தது. ஒன்றும் புரியாமல் இருவரும் கையைப் பிசைந்துகொண்டு விழித்திருந்த வேளையில் இன்னொரு அதிசயம் அங்கே நடந்தது. விசாலாக்ஷிக்கு கொஞ்சம் கொஞ்சமாக நாடி துடிக்க ஆரம்பித்திருந்தது. நிமிடத்தில் கண் திறந்து பார்த்தார் விசாலாக்ஷி. ”என்னை விட்டுச் சென்ற ப்ராணன் மீண்டும் என் உடலில் புகுந்ததை நான் பார்த்தேன்” என்று கமறலுடன் விட்டு விட்டுப் பேசினார்.

சிறிது நேரத்தில் கண்களை மூடி ஆழ்நிலைக்கு சென்றார் விசாலாக்ஷி. மீண்டும் கண் திறந்து “அப்புவை இங்கே அழைத்துவர முடியுமா?” என்று கேட்டார். உதவிக்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ஓடிப்போய் அந்த இரவு நேரத்தில் அப்புவை அழைத்துவந்தார்கள்.

அப்புவைப் பார்த்ததும் விசாலாக்ஷிக்கு விழிகளில் நீர் கோர்த்தது. வாத்சல்யத்துடன் அணைத்துக்கொண்டார். கணபதிக்கும் ம்ருத்ஞ்சயாவிற்கும் அங்கே என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை.

“அப்பு சித்த நாழிக்கு முன்னால் உன்னோட அப்பா அம்மாவைப் பார்த்தேன். உன்னோட கொள்ளுத் தாத்தா உபனிஷத் பிரம்மத்தையும் கூட பார்த்தேன். அவரும் அங்கே இருந்தார். உன்னோட அம்மா உன்னை என்னோட ஜ்யேஷ்ட புத்திரனா பார்த்துக்கச் சொன்னாள்...” என்று விசாலாக்ஷி மகிழ்ச்சியும் ஆனந்தக் கண்ணீருமாய் தழுதழுத்தார்கள்.

அப்பு ஜிவ்வென்று விண்ணில் பறந்தான். மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. தன்னுடைய கோத்திரத்தை உடனே மாற்றிக்கொண்டு கணபதியின் மகனாக சுவீகாரம் போனான். கல்யாணராமன் மற்றும் காவேரியோடு கணபதியின் இல்லத்துக்கு ஒரு நல்லநாளில் குடிபெயர்ந்தான்.

அப்புவுடன் கல்யாணமாகி வீட்டிற்கு வந்த காமாக்ஷி, கணபதி மற்றும் விசாலாக்ஷியிடம் “தங்கமான மருமகள்” என்று பெயர் எடுத்தாள்.

*
வேலூரில் ஆணும் பெண்ணுமாக நிறைய பேருக்கு மந்திர ஜப அப்பியாசம் செய்துவைத்தார் கணபதி. அதில் பெரும்பாலும் யுவன் மற்றும் யுவதிகள். இந்த மந்திரத்தால் பல அமானுஷ்ய சக்திகளைப் பெற்று அற்புதங்கள் பல நிகழ்த்தப்போவதாக உளறினார்கள். மந்திர ஜபத்தின் நுட்பங்களை அவர்களுக்குப் புரியும்படி போதித்தார் கணபதி. மந்திர ஜெபம் என்பது செப்படி வித்தை போன்றதல்ல என்று தெளிய வைத்தார். உமாமஹேஸ்வரர், ப்ரோஃபஸர் சிவசுப்ரமண்யம், கடைசிக் காலத்தில் ஆபத் சந்நியாசம் வாங்கிக்கொண்டு ப்ரணவானந்தாவான சர்வபள்ளி நரசிம்ஹய்யா போன்ற வயசர்களும் அவருடைய சொற்பொழிவுகளுக்கு தொடர் நேயர்களானார்கள்.
கணபதியின் அன்றைய ஆன்மிக உபன்யாசம் கேட்பவர்களுக்கு விஷய தானம் அளித்தது. வேதமும் இந்திய கலாசாரமும் கற்பித்த வாழ்வியல் முறைகளைப் புட்டுப்புட்டு வைத்தார்.

“ஆன்மிக வாழ்வின் ஆனந்தத்தில் திளைக்க வேண்டுமானால் சிற்றின்பங்களை துறக்கவேண்டும். சிற்றின்பங்களைத் துறப்பதால் தியாக மனப்பான்மையும், சகிப்புத் தன்மையும், இது போதும் என்கிற உறுதியும் , எதையும் சுலபமாக எடுத்துக்கொள்ளும் பெரியமனதும் கைகூடும். நம்மை பூட்டி வைத்திருக்கும் இல்லற இன்பங்களிலிருந்து விடுவித்துக்கொள்வது இறைவனிடத்தில் பற்றுதலை ஊர்ஜிதப்படுத்தும் செயல்.

ஒரு சமயத்தின் மேன்மை அதன் வழி நடப்பவர்களின் செயலில் உள்ளது. இவ்வுலகத்தில் பல மதங்கள் தோன்றின. பல அழிந்தன. ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவங்களால் தோன்றிய மதங்கள் மொத்த மனித இனத்தை வழி நடத்த திராணியில்லாமல் தவித்த சரித்திர சான்றுகள் உள்ளன. ஆனால் வேதமதமானது எண்ணற்ற ரிஷிகளின் வாழ்வியல் முறைகளும் அவர்களது வேதவழி கண்டுபிடிப்புகளும் பொக்கிஷமாக இத்திருநாட்டில் இருக்கிறது. வேத விருட்சத்திற்கு வேத காலத்திலிருந்தே ரிஷிகள் வித்திட்டிருக்கிறார்கள். இப்படி வேதங்கள் வளர்த்த இந்த மதத்திற்கு முன்னால் ஏனைய மதங்கள் இங்கே காலூன்ற தடுமாறுகின்றன”

கணபதியின் இத்தகைய ஆற்றல் மிக்க பேச்சு நிறைய பேரைக் கட்டி இழுத்தது. இதில் சில கிறிஸ்துவர்களும் அடங்குவர். அதில் பால் ஆதிசேஷய்யா என்கிறவர் கணபதிக்கு கிறிஸ்துவத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்கிற நினைப்பில்......

சம்ஸ்க்ருத ஸ்லோகங்களின் தமிழ் வடிவ உதவி திருவாளர் Ramkumar Narayanan

‪#‎காவ்ய_கண்ட_கணபதி_முனி_20‬
‪#‎கணபதி_முனி‬

4 comments:

'பரிவை' சே.குமார் said...

கணபதி முனி படிக்க மிகவும் சுவராஸ்யம் அண்ணா...
அருமை.

'பரிவை' சே.குமார் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா...

'பரிவை' சே.குமார் said...

தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

மோகன்ஜி said...

ஆர்.வீ.எஸ்! நலம் தானே?

'கணபதி முனி'பற்றி இவ்வளவு நேர்த்தியாய்... பரணிதரன் எழுத்தை படிச்ச நிறைவு.. வாழ்க வாழ்க!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails