Friday, August 14, 2015

கணபதி முனி - பாகம் 25: பச்சையம்மன் கோயில் அற்புதங்கள்

ஏழு சுனை. அருணை மலையின் ஆளரவமற்ற பகுதி. குளிர்ந்த பிரதேசம். கணபதி தவமியற்ற ரமணர் காட்டிய இடம். ஸ்ரீரமணருக்கு மலையின் இண்டு இடுக்கெல்லாம் தெரியும். அனுதினமும் அவர் ஜீவித்த மலை. அவரே அம்மலையின் அருட்குழந்தை தான். மலையோடு ரமணர் ஐக்கியமாகியிருந்தார். அவருடைய மௌனம் அம்மலை காத்த மௌனம். ரமணரே அருணை மலை. ரமணர் அருளிச்செய்தபடி கணபதி ஏழு சுனையில் ஒருமுகமாகக் கடும் தவமியற்றினார்.
இதற்கிடையில் கீழே பச்சையம்மன் கோயிலில் உமாசகஸ்ரத்தை நாயனா ரமணர் முன்னிலையில் பாடிக் காண்பித்து உபன்யாசம் செய்வார் என்று அவரது பக்தர்கள் ஏகமனதாக அறிவித்தார்கள். இச்செய்தியைக் கேள்விப்பட்டு வெளியூர்களிலிருந்து அண்ணாமலையில் முடியும் ரோடுகள் அனைத்திலிருந்தும் கணபதியின் சிஷ்யர்களும் ரமணரின் பக்தர்களும் பஸ்களிலிருந்தும் வண்டிகட்டிக்கொண்டும் நடையாய் நடந்தும் வந்து குவிந்தார்கள். பச்சையம்மன் கோயிலில் பக்தர் கூட்டம் உமாசகஸ்ரத்திற்காகக் காத்திருந்தது. ஒரு வாரம் கழித்து நாயனா ஏழு சுனையிலிருந்து தவம் முடித்து மெதுவாய் இறங்கி வந்தார்.
உமாசகஸ்ரம் ஒரு நாளில் பூரணமாகச் சொல்லி முடியாது. ஆயிரம் பாக்களை அர்த்தத்தோடு பாடிக்காட்டிச் சொற்பொழிவு. கணபதியும் ரமணரும் இணைந்து இருந்து நடத்துவது அங்கு குழுமியிருக்கும் பக்தர்களுக்கு ஒரு அருட்கொடை. ஆயுட்கால பரிசு. பச்சையம்மன் கோயில் ஜேஜேயென்று களைகட்டியிருந்தது. ஸ்ரீரமணர் தலைமை. நிகழ்ச்சி வெகு சிறப்பாக நகர்ந்துகொண்டிருக்கும் போது அம்பாள் அரூபமாக வந்து நாயனாவின் காதுகளில் ”எனக்கு இது ரொம்பப் பிடித்திருக்கிறது. திரும்பப் பாடு” என்று சொன்னாளாம். அது.,
கணபதயே ஸ்தனகதயோ:
பதகமலே ஸப்தலோக பக்தேப்ய:
அதரபுடே த்ரிபூஜிதே
ததாஸி பீயுஷம் அம்ப த்வம்

அர்த்தம்: அம்பிகையே... உனது மேனியில் மூன்று பாகங்களில் அமரத்துவத்தை அளிக்கும் இன்சுவை பானத்தை தாங்குகிறாய். உனது பிள்ளையான கணபதிக்கு ஸ்தனத்திலிருந்தும் ஏழு உலகங்களிலும் உன்னைத் தொழும் உன் பக்தர்களுக்கு திருவடித் தாமரையிலிருந்தும் திரிபுரங்களை எரித்து வெற்றி கொண்ட சிவனாருக்கு உன் இதழ்களிலிருந்தும் வழங்குகிறாய்.
அடுத்த நாள் உமா சகஸ்ரம் தொடர இருக்கிறது. பக்தர் கோஷ்டி உமாசகஸ்ர பாஷ்யம் கேட்பதற்குக் கணபதியை நோக்கிக் காத்திருக்கிறது. பச்சையம்மன் கோயிலைச் சுற்றி தேவாதிதேவர்கள் குழுமியது போல ஜில்லென்ற சூழல். கோயில் கொள்ளாத கூட்டம்.
திடீரென்று அங்கே சிறு சலசலப்பு. தார்ப்பாய்ச்சி கட்டிய வேஷ்டியோடும் கட்டுக் குடுமியோடும் ஒரு புது ஆள் விடுவிடுவென்று பச்சையம்மன் கோயிலுக்குள் நுழைகிறார். அவர் யாரிடமும் ஒன்றும் பேசவில்லை. ஒரே குறிக்கோள். நேரே பகவான் ஸ்ரீரமணர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு விரைந்தார். ”பகவானே!” என்று எட்டூருக்குக் கேட்கும்படி அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தார். அவ்ளோதான். எழுந்தார். அப்படியே வந்த வழியே கிளம்பிவிட்டார்.
வேகுவேகென்று வெளியே நடக்க ஆரம்பித்தவர் ஏதோ ஒறு அமானுஷ்ய சக்தித் தன்னைக் கொக்கிப் போட்டு இழுத்தது போல வெடுக்கென்று திரும்பிப் பார்த்தார். கண்ணிரெண்டும் ரமணரின் அருகிலிருக்கும் நாயனாவின் மேல் போய்க் குத்தியது. அமர்ந்திருந்த பக்தர்கள் அனைவரும் இக்காட்சியை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவருக்கும் நாயனாவுக்கும் என்ன தொடர்பு? முறைக்கிறாரா? தெரியவில்லையே ஒரு விநாடிதான் கடந்திருக்கும்... தபதபவென ஓடி வந்து நாயனா கால்களில் பொதேர் என்று விழுந்தார். இதுவரை அமைதி காத்த கூட்டம் குசுகுசுத்தது. அந்த சப்தத்தை அறுத்து அவர் பெருங்குரலில்.....
“ஓ! ஐயனே... நீர் இங்கேதான் இருக்கிறீரா? பாவி உம்மை கவனிக்காமல் சென்றேனே... என்னை மன்னித்தருளும்... ” என்று வாய்விட்டுக் கதறினார். கண்களில் அணை உடைத்த வெள்ளமாய் ஜலம் தாரை தாரையாய்க் கொட்டியது. அனைவருக்கும் ஆச்சரியம். யாரிவர்? ஏனிப்படி இவர் கண்களில் கங்கை பொங்குகிறாள்?
அவர் பெயர் சிறுப்பாக்கம் கொண்டையா. நாள் தவறாமல் அக்னிஹோத்ரம். தீ மூட்டி ஹோமம் வளர்ப்பவர். பிள்ளையாரப்பனை நெஞ்சாரத் தியானிப்பவர். ஒரு நாள் ஹோமத்தில் எழுந்த தீயில் நரமுக விநாயகரைத் தரிசித்தார். இப்போது நாயனாவைப் பார்த்தவுடன் அன்று அக்னியில் எழுந்த உருவம் போலவே ஒற்றுமை தெரிந்தது. உடனே நாயனா கணபதியின் அவதாரம் என்று அவருக்கு மேனி சிலிர்த்துப் புல்லரித்தது. அன்றிலிருந்து அவரும் நாயனாவின் சிஷ்யர்களில் ஒருவர் ஆனார்.
உமாசகஸ்ர சொற்பொழிவுகள் நடக்கும் காலத்தில் பச்சையம்மன் கோயிலில் ஏராளமான அற்புதங்களும் அதிசயங்களும் விடாமல் நிகழ்ந்தன. நாள்தோறும் இருள் கவிவதற்கு முன்னர் பலவிதமான பிரார்த்தனைகளுடன் பாஷ்யம் தொடங்கும். ரமணரும் அருகிலேயே இருந்து அருள் கூர்ந்து கேட்டதனால் சாதாரணர்களின் கூச்சலும் குழப்பங்களும் அடங்கி ஆன்மிக ஒளி சூழ்ந்தது.
ஒரு நாள் அனைவரும் நாயனாவின் அன்றைய சொற்பொழிவிற்காகக் காத்திருந்தனர். பச்சையம்மன் கோயில் நிரம்பி வழிந்தது. திடீரென்று ஒளிமிகுந்த ஒரு நட்சத்திரம் அங்கு விண்ணில் தோன்றியது. பார்ப்பவர்களின் கண்கள் கூசக்கூச அது நேராக மின்னல் நேரத்தில் ரமணரின் நெற்றியில் முட்டித் துளைத்து உள்ளே நுழைந்து. அவருடன் இரண்டறக் கலந்தது. இதுபோல ஆறு முறை அங்கே பளிச்சென்று நட்சத்திரம் தோன்றுவதும் ஒளிக்கற்றையாய் ரமணருடன் கலப்பதும் நடந்தது. பக்தர்கள் திறந்த வாயை மூடாமல் இந்நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். கணபதிக்கு அங்கு என்ன நடக்கிறது என்று புரிந்துவிட்டது. ஆறுமுகனான கார்த்திகேயன் இப்போது ரமணரிடம் ஜோதிரூபமாக உள்ளுக்குள் ஏறியிருக்கிறார் என்று குருவை வந்தனம் செய்தார்.
அக்கணமே பீறிட்டு எழுந்த அளவற்ற பக்தியால் உந்தப்பட்டு ஒரு எட்டு ஸ்லோகங்களை ரமணர் மீது போற்றிப் பாடினார். கூட்டத்தில் ஈயாடவில்லை. ரமணரையும் கணபதியையும் இந்தக் கோலத்தில் பார்த்து அசந்து போயிருந்தார்கள். (இப்போதும் திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தின் காலை பூஜையில் இந்த எட்டு ஸ்லோகங்களையும் சேர்த்து மொத்தமாய் நாற்பது ஓதுகிறார்கள்). இந்த பக்திரசத்தில் மூழ்கித் திளைத்திருந்த ரமணர் இமை மூடி இவைகளைக் கேட்டு உளமார இரசித்தார். அவ்வப்போது முகத்தில் அரும்பிய துளித் துளி புன்னகையில் அது தெரிந்தது.
சதாசர்வகாலமும் ஸ்ரீரமணர் மௌனவிரதத்தில் இருப்பார். வாயைத் திறக்காமல் அந்தக் காரியம் நடக்காது என்ற ஸ்திதியில் அளவாகப் பேசுவார். கார்த்திகேயனின் அவதாரமாகவே ஸ்ரீரமணர் பிறந்திருப்பதாக கணபதி எண்ணினார். அவரின் அந்த மௌனமே அனைவரையும் வழி நடத்து சக்திஆயுதம் என்று நம்பினார் கணபதி.
உமாசகஸ்ர பாராயணம் நல்லபடியாக முடிந்த பின்னர் மீண்டும் ஒரு புனித ஸ்தலத்தில் தனது தவத்தைத் தொடர விரும்பினார் கணபதி. ரமணரிடமிருந்து தவமியற்றும் பாதையைக் கற்றுக்கொண்ட கணபதி அதை அனுஷ்டானம் செய்து அதிலிருந்து கிடைக்கும் தபோ வலிமையை தாய் நாட்டிற்கு அர்பணித்து முன்னேற்ற ஏதேனும் வழியிருக்குமா என்று ரமணரிடம் கேட்டு அறிந்துகொள்ள ஆர்வமாய் இருந்தார்.
புராண காலத்திலிருந்து ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் மந்திரங்கள்தான் வலுவையும் எவ்வித சங்கடங்களிலிருந்தும் காத்துக்கொள்ளும் அபரிமிதமான சக்தியையும் அளித்தது. ஆனால் ரமணர் உபதேசிப்பது போல பத்மாசனத்தில் உட்கார்ந்து மூச்சை அடக்கி ”நான்” என்கிற மனதை வெல்லும் வெறும் ஆத்மவிசாரத்தால் நமக்கு அவ்வித சக்தி சித்திக்குமா? அதைக்கொண்டு இம்மானுட சமுதாயத்திற்கு உபகாரமாக எதுவும் நம்மால் செய்ய இயலுமா? போன்ற கேள்விக் கணைகள் கணபதியை விடாமல் துளைத்துக்கொண்டிருந்தது. ஒரு நாள்..
“ஐயனே! நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களுக்கு உருப்படியான காரியங்களை செயலாற்றுவதற்கு "நான்” என்ற வஸ்துவை உற்று நோக்கி ஈடுபடும் ஆத்மவிசாரம் மட்டுமே யதேஷ்டமா? அல்லது அதற்கு வேறு ஏதேனும் புதிய சாதனங்கள் இருக்கிறதா?. அருள வேண்டும்” என்று அவரைப் பணிந்தார். ரமணர் திருவாய் மலர அமைதியாகக் காத்திருந்தார்.
சிரித்தார் ஸ்ரீரமணர். “கணபதி! பகவானை நம்பு. அவரை எப்போதும் வழிபடு. சரணடை. அவரே இவ்வுலகத்தை இயக்குகிறார். இப்பூவுலகத்திற்கு நன்மை விளைவிப்பைவைகளை அவரே முன்னின்று நடத்துகிறார். வருங்காலத்தை வடிவமைத்துச் செல்பவர் நிகழ்காலத்தையும் தடையின்றி செலுத்துகிறார். பூலோகத்திற்கு நன்மையையே அருள விரும்புவர் அவர். இதில் இம்மியளவு கூட யாருக்கும் சந்தேகம் வேண்டாம். வேளைக்குத் தக்கவாறு அவரே அனைத்து ஜீவராசிகளையும் செம்மையாக வழி நடத்துகிறார். ஆகையால் உனக்குள் எழும் பற்பல கவலைகளைக் களைந்துவிட்டு தீவிரமாக ஆத்மவிசாரத்தில் ஈடுபடு. மனசைக் குவி. மௌனத்தால் பேசு. அது போதும். மற்றவைகளைக் கடவுள் பார்த்துக்கொள்வார். இது உனக்கும் இச்சமுதாயத்திற்கும் அளவற்ற பயன்களை அள்ளித் தரும்.” என்றார்.
ஆன்மிக சாதனமான ஆத்மவிசாரம் மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் சாஸ்வதமான வழி என்பதை ரமணர் துல்லியமாக விளக்கியபின் கணபதியைச் சூழ்ந்திருந்த கவலைப் பனி சூரியனைக் கண்டது போல விலகியது. சொன்னது ஞானசூரியனாயிற்றே! கணபதியின் உள்ளம் தெளிவடைய முகம் கோடி சூர்யப் பிரகாசமாயிற்று. ரமணர் மகிழ்ந்தார்.
“நாயனா! இங்கே வா... வாசுவேத சாஸ்திரிகளுடன் கொஞ்சம் நீ சென்னைக்கு சென்று வா...” என்று அனுப்பினார்.
கணபதியும் வாசுதேவ சாஸ்திரியும் சென்னையில் வந்திறங்கினர். அங்கே.............

1 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை... தொடர்கிறேன் அண்ணா...

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails