Sunday, August 2, 2015

ஓடுடா...ஓடு... ஆஃபீஸுக்கு..

முதுகைத் தட்டி ”ஒம் பேர் என்னடா?” என்று கேட்டால் ரெண்டு செகண்ட் யோசிப்போமே... அப்படியொரு காலை நேர பரபரப்புக்கு மத்தியில் ஐந்து நிமிடங்கள் என் ஸ்வர்க்க பூமிக்குச் சென்று வந்தேன்.
ஸ்ரீசங்கராவில் ஸ்ரீவித்யா ராஜகோபாலனை தரிசனம் செய்து வைத்தார்கள். ஏக வஸ்திரம், மார் பூரா பவிழம் ரத்தினம் வைர வைடூர்ய மாலைகள், காதுல கோபிகையர்களிடமிருந்து சண்டைப் போட்டுப் பிடுங்கிப் போட்டுண்ட தாடகங்கள், இடுப்புல தங்க சாவிக் கொத்து, ரெண்டு பக்கமும் ருக்மிணி சத்யபாமா சமேதராக உதடுகளில் புன்னகை தவழ ஜெகஜோதியாய் திரையில் தெரிந்தார்.
”கோபாலனைப் பார்க்க ஓடுவோம்...” என்று என் சித்தி பின்னாலிலிருந்து குரல் கொடுக்க சாரதா பாட்டி “வேட்டுப் போட்டுட்டாண்டா... புறப்பாடு ஆயிடும்...”ன்னு விசுக்விசுக்கென்று ஓடியதும், பாட்டி கையைப் பிடித்துக்கொண்டு நான் ஓடியதும்.... சஞ்சயனுக்கு குருக்ஷேத்திரம் தெரிந்தது போல கண் முன்னே வந்து என்னைப் பிடித்துத் தரதரவென்று எண்பது தொன்னூறுகளின் மன்னைக்கு இழுத்துச் சென்றது.
அம்மாவின் ”ஆஃபீஸுக்கு லேட்டாகலை?” மீண்டும் என்னைக் கொத்தாகக் கொண்டு வந்து சென்னையில் இறக்கியது.
ஹரித்ராநதி...
கோபாலன்...
சாரதா பாட்டி...
தேரடி...
கல் துவஜஸ்தம்பம்..
கோபுரவாசல் சிறிய திருவடி...
தமிழ் சார் ஜெம்பகேச தீக்ஷிதர்..
கிரிக்கெட் விளையாண்டு இப்போ கோபாலன் கைங்கர்யம் செய்யும் பிரசன்னா, ஸ்ரீராம்...
துளசி மாடம்...
தாயார் சன்னிதி...
மாதுவோடு (மாதவனின் சுருக்கம்) ஃபிஸிக்ஸ் படிச்ச ராமர் பாதம்..
காய் எடுத்து அடித்து விளையாடிய புன்னை மரம்
சொர்க்க வாசல்...
யானை செங்கமலம்.... 
திருமஞ்சன வீதி...
ஆஞ்சநேயர்...

“தம்பி... லோட்டாகலை?” இன்னொரு தடவை அம்மாவின் குரல்..
“ஓடுடா...ஓடு... ஆஃஃபீஸுக்கு...”

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails