Monday, February 1, 2016

இதோ.. இதோ...

ஆளைச் சக்கையாய்ப் பிழிந்த கெடுபிடியான நாள். லேசாகத் தலை கலைந்து இன் ஷர்ட் அவுட் ஆகி டொய்ங்... என்று தொங்கிப் போய் உள்ளே நுழைந்து, முகம் கை கால் அலம்பி....... டைனிங் ஹாலுக்கு வந்தால் சின்னத்திரையில் எஸ்பிபி அவரது ட்ரேட் மார்க் புன்னகையில் தெரிந்தார். அவர் பாடியது செவி புகுந்ததும் மேனி கொண்ட அலுப்பெல்லாம் அலறியடித்துக்கொண்டுக் காத தூரம் ஓடிவிட்டது. ஜிலீரென்று கரையடைத்துச் சுழித்து ஓடும் காவிரியில் தொப்பென்றுக் குதித்து, தலை தூக்கி நீல வானம் பார்த்தப் புத்துணர்ச்சி. யுகக் கலைஞன்.

சிகரம் அவரது இசையின் சிகரம். ”இதோ... இதோ.. என் பல்லவி...” கேட்ட மாத்திரத்திலேயே சிங்கிளாக வாழ்க்கையை நகர்த்திவிடலாம் என்று அலட்சியமாக நினைப்பவர்களுக்குக் கூட இன்ஸ்டண்ட்டாக டபுளாகி கிரஹஸ்தாஸ்ரமம் புகத் தூண்டும். எஸ்பிபியின் காதல் கொஞ்சும் குழைவு அப்படி. இது வெளியான வருஷத்தில் கட்டிளம் கல்லூரிக் காளையாக (இப்பவும்தான்) சுற்றிக்கொண்டிருக்கும் போது இந்தப் பாடல் கொக்கேன் அபின் கஞ்சா போன்ற லாஹரி வஸ்துகள் சேர்த்து ஊட்டும் போதை. ”கள்”கண்டு சுவை. இதோ.. இதோ.. என்று எஸ்பிபி வெல்லப் பாகாய்ப் பாடும் போது அப்படியே ஓடிப்போய் அந்த மனுஷனை இறுக்கக் கட்டிப் பிடித்துக்கொள்ளலாம் போல இருக்கும். அவர் ”காட் ப்ளஸ் யூ” சொல்லும் போது கூட பாடுவது போலவே இருக்கிறது.

”இதோ.. இதோ..” பாடும் போதெல்லாம் பின்னால் ”உம்....உம்...” என்று கேட்டுக்கொண்டு வரும் ஒரு இழுப்பு வயலின் போதாதா.... உயிரை உறிஞ்சுவதற்கு?

இந்த இதோ...இதோ....வை இதே ராக்ஷசன் பாடிய பாடலின், முதல் வரியின் கடைசியில் போட்டால், முதல் வார்த்தையில் வருமே........ அது... எது? தெரிந்தவர்களுக்கு காயகல்பம் தேவையில்லை. அந்த வார்த்தையை இங்கே கமெண்ட்டிட்டால் போதும்.

‪#‎க்விஸ்‬

1 comments:

விஸ்வநாத் said...

வர்ணம் கொண்ட வெண்ணிலவே... is more peaceful.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails