Monday, February 1, 2016

கொட்டும் மழை இரவுகளில்......

பொழுது புலர்ந்தது. கரையோர மரங்களுக்கு மத்தியில் அவர் நதியை நோக்கி கமண்டலமும் கையுமாக நடந்து வந்துகொண்டிருந்தார். அருகில் வந்தவுடன் அவர் மனு என்று தெரிந்தது. ஆற்றில் இறங்கி கனுக்கால் அளவு நீரில் நின்று கொண்டு கைகளைத் தண்ணீரில் அலசினார். அலம்பிய கைகளில் மீன் குஞ்சு ஒன்று சிக்கியது. கைகளில் சிக்கிய அந்த மீன் மனுவிடம் பேசியது.

”ஐயனே! என்னைக் காப்பாற்றுங்கள்.. தக்க சமயத்தில் நான் உங்களுக்கு உதவுவேன்”

“உனக்கு யாரால் ஆபத்து?”

“பெரிய வலுவுள்ள மீன்கள் என்னைச் சாப்பிட்டுவிடும்.”

“ஆகையால்..”

“என்னை முதலில் ஒரு ஜாடிக்குள் போட்டுவிடுங்கள்... கொஞ்சம் வளர்ந்தவுடன் பாதுகாப்பான ஒரு குளத்தில் விடுங்கள்.. பின்னர் என்னை சமுத்திரத்தில் சேர்த்துவிடுங்கள்... தயைகூர்ந்து எனக்கு இந்த ஒத்தாசை செய்யுங்கள்... உங்களுக்கு என்னால் இயன்றவைகளைக் கட்டாயம் தக்க தருணத்தில் செய்வேன்.....” மீன் குஞ்சு வாய் படபடக்கக் கெஞ்சியது.

மனு அவ்வாறே செய்தார்.

ஒருநாள் அந்த மீன் மனுவிடம்
“பெரிய வெள்ளம் ஒன்று அதி சீக்கிரம் வரும். ஆகையால் தப்பிப்பதற்கு ஒரு படகைத் தயார் செய்துகொள்ளுங்கள்.”

காலம் ஓடியது. குறிப்பிட்ட வேளையில் வெள்ளம் பெருகியது. மனு தயார் செய்திருந்த படகில் தாவி ஏறினார். அவருக்கு முன்னால் அந்த மீன் வந்து நின்றது. படகு நுனியில் கட்டியிருந்த கயிறை அந்த மீனின் கொம்பில் மாட்டினார். வடக்கே விந்திய மலைச்சாரலை நோக்கி அந்த மீன் படகை வேகமாக இழுத்துச் சென்றது.

மலையுச்சியை அடைந்த மனு படகை ஒரு மரத்தடியில் கட்டிவிட்டு காத்திருந்தார். வெள்ளம் வடிந்தது. மனு நடந்து வந்ததால் அந்த இறக்கத்திற்கு மனுவின் அவதரணம் (அ) மனோரவதரணம் என்று பெயர் வந்தது.
மூவுலகமும் அழிந்து மனு மட்டுமே ஜீவித்திருந்தார்.

*

ஆதி காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பற்றி சதபத ப்ராமணா என்கிற வேதத்தின் பகுதியில் இருந்ததை John Keay தன்னுடைய INDIA - A History புஸ்தகத்தில் எழுதியிருந்தார்.

சமீபத்திய மழை இரவுகளில், மின்சாரம் இல்லாத ஒரு நாள் பால்கனியில் நின்று கொண்டு நிர்ஜனமான வீதியில் பிரளய வெள்ளமாய்ப் பெருகி ஓடி வந்த தண்ணீரைப் பார்த்த பொழுது எனக்கு ஞாபகம் வந்த கதை இது.

வாசல் மின்கம்பத்தில் என்னுடைய படகைக் கட்டிவிட்டு வெள்ளம் வடிய மனுவாக நான் உப்பரிகை மலையுச்சியில் காத்திருப்பதாக தோன்றியது.

”தொர்ர்ர்ர்ர்” ரென்று கொட்டும் மழை சப்தத்தில், உலகில் அனைத்து ஜீவராசிகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒரேயொரு ஆளாக நான் மட்டும் எஞ்சியிருப்பதாக அஞ்சிய முதல் திக்..திக்.. இரவு....

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails