Monday, February 1, 2016

எனக்கு இருட்டுன்னா பயம்....

சரி.. சின்னதாவே முடிச்சுக்கிறேன். ஸ்ரீராமன் சிருங்கிபேரபுரத்தில் சீதா லக்ஷ்மணனுடன் முகாமிட்டிருக்கிறான். வேடர்குல குகனின் ராஜாங்கத்துக்குட்பட்ட இடம். இரவு சீதையும் ராமனும் சயனித்திருக்க லக்ஷ்மணன் வில்லோடு காவல் காக்கிறான். “உங்களுக்கும் சிரமம் வேண்டாம்.. தாங்களும் நித்திரைக்குப் போகலாம். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று குகன் வலிய வந்து வற்புறுத்துகிறான். ”இல்லையில்லை.. எனக்கு தூக்கம் வரவில்லை.. அண்ணாவுக்கு நான் காவல் நிற்கிறேன்...” என்று லக்ஷ்மணன் மறுத்து “நீங்கள் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்..” என்று குகனை போகச் சொல்கிறான்.

குகனும் அந்த இடத்தைவிட்டு நகர்வதாயில்லை. இருவரும் குறுக்கும் நெடுக்குமாக நடை போட்டுக்கொண்டு விடிய விடிய காவல் புரிகிறார்கள். [கடைசியில் பரதன் தேடிக்கொண்டு வந்தவுடன் அவனிடம் “இமைப்பிலன் நயனம்” என்று லக்ஷ்மணனின் புகழ்பாடுகிறான் குகன் என்பது வேறு கதை.]

ராமன் பதினான்கு வருடங்கள் காடாள வந்தவுடன்... பரதன் சக்கரவர்த்தியாக பட்டம் கட்டிக்கொண்டு அவனின் ஆளுகைக்கு உட்பட்ட இந்த குகனிடம் ராமனைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியிருக்கலாம் என்று லக்ஷ்மணனுக்குச் சந்தேகம். பரதன் லக்ஷ்மணனிடம் சொல்லி ராமனை வேலை தீர்க்கச் சொல்லியிருக்கலாம் என்பது குகனின் ஐயம்.

மேற்கண்ட இந்த காட்சிக்கு சேங்காலிபுரம் ப்ரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர்வாள் நகைச்சுவையாகச் சொல்லும் திருஷ்டாந்தம் கீழே...

“ஒருத்தன் பாம்பேலேர்ந்து வந்த வைர வியாபாரி. இன்னொருத்தன் மெட்ராஸ் ஆளு. ரெண்டு பேருமா ஹோட்டல்ல ரூம் போட்டு உக்காண்டு வியாபாரம் பேசறான்கள். பாம்பே ஆள் முன்னாடி வைரம் வைரமா குமிச்சுக் குமிச்சுக் ஏழெட்டுக் கூறு கட்டி வச்சுருக்கான். மெட்ராஸ் ஆள் நிறையா முத்துக் கல்லு, சேப்புக் கல்லு, மரகதக் கல்லுன்னு பத்து கூறு கட்டி குமிச்சு தன் முன்னாடி வச்சிருக்கான்.

ரெண்டு பேருமா ”உங்களைப் போல உண்டா?” ஆஹா... நீர் அப்படி.. நீர் இப்படி..ன்னு உம்மைப் போல நியாயஸ்தன் லோகத்துல உண்டா? நீரே சத்தியசந்தன்...ன்னு புகழ்ந்து பேசிண்டு வியாபாரம் பண்ணிண்டிருக்கான்கள். திடீர்னு லைட்டு போயிடுத்து. கும்மிருட்டு. முன்னாடி யாரு இருக்கான்னே தெரியல... ரூம்ல இவனுங்க ரெண்டு பேர் மட்டும்தான். உடனே ரெண்டு பயலும் என்ன பண்ணினான்கள் தெரியுமோ? படக்கன்னு ஒருத்தொனக்கொருத்தன் அடுத்தவனோட ரெண்டு கையையும் கெட்டியமாப் பிடிச்சுண்டுட்டான்.

”என்னடா? இப்படி பிடிச்சிக்கிறியேன்னு கேள்வி கேட்டுண்டு.. ரெண்டு பேருமே எனக்கு இருட்டுன்னா பயம்னு சேர்ந்தே சொல்றான்கள்.... இந்தப் பயல்களுக்கு இருட்டா பயம் அங்க... முன்னாடி குமிச்சிருக்கிறதில ஒண்ணு ரெண்ட எடுத்து பாக்கெட்ல போட்டுண்ட்டா என்ன பண்றதுங்கிற பயம்... அந்த மாதிரி இருக்கு லக்ஷ்மணனும் குகனும் சேர்ந்து காவல் காத்தது.....”


‪#‎இராமாயணம்‬

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails