Monday, February 1, 2016

ஹரே ஸ்ரீ கிண்டியாயை நமஹ:

"சுதா! இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊத்து...” என்று தோசை சுட்டுப் போடும் “ரமா”வைப் பார்த்து குரல் விட்டால் தீர்ந்தது கதை. தோசைத்திருப்பியை பழுக்கக் காய்ச்சி நாக்கில் இழுத்துவிடுவார்கள். ரமா வைஃப். சுதா வேறவொரு மகானுபாவரோட வைஃப்.
இது ஒரு சீன்.

மனசு மொத்தமும் ஒரு காரியத்தில் லயித்துக் கிடக்கும் போது எதிரில் யாராவது வந்து வாயைப் பிடுங்கினால் ”ம்ம்ம்ம்”மென்று வாய்மூடி நிமிஷ நேரம் ஸ்கூட்டர் விடுவது என்னைப்போல அநேகருக்கு இருக்கும் பழக்கம். அப்போது அவர்களின் பெயர்களைத் தப்பிதமாகக் கூப்பிடும் வியாதி எனக்குண்டு. வினயா என்பதற்கு பதிலாக மானஸா என்றோ, சங்கீதாவை கீர்த்திகா என்றோ கூப்பிட்டு மெர்சல் ஆக்குவேன். (மானஸாவும் வினயாவும் என் புத்ரிகள், கீர்த்திகா என் சோதரி)
இது இன்னொரு சீன்.

இதுபோல டங் ஸ்லிப் கேஸ்களை Freudian Slips என்பார்கள். ஆழ்மன துவாரத்தில் அவர்களைப் பற்றிய அபிப்பிராயங்கள் ஒன்றாக இருக்கலாம் அல்லது அவர்கள் இருவரையும் இணைக்கும் ஏதோ ஒன்று நமக்கு பிரியமானதாக இருக்கலாம் என்று உளவியல் காரணங்கள் உள்ளன.
இது போல அகஸ்மாத்தாக மாற்றிக் கூப்பிடும்போது கூட “மனசுல இருக்கிறது தானே வெளியில வரும்?” என்று முகத்தைத் தோள்பட்டையில் களுக்கென்று இடித்து நம் காலை வாரிவிடுவார்கள். இப்படி மனசுல இருக்கிறதுதானே வாயில வரும் என்பதற்கு ப்ரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர்வாள் உபன்யாசத்தில் கேட்ட கதை. என்னோட கை விஷமத்தோட சேர்த்து... இதோ....

*

ஒரு உஞ்சவிருத்தி ப்ராம்மணர். தெனமும் வீதிவீதியாப் போயி “ஹரே ஸ்ரீ கிருஷ்ணாயை நமஹ”ன்னு ஒவ்வொரு ஆத்து வாசல்லயும் நிப்பார். கெடைக்கற பிக்ஷையை வாங்கிண்டு வந்து சமைச்சு சாப்பிடுவார். ஒரு நாள் ஒரு ஆத்துல வெள்ளி கிண்டி வாசல் திண்ணையில இருந்தது. இந்த மனுஷருக்கு கொஞ்சம் கை நீளம். வெள்ளியைப் பார்த்ததும் இன்னும் பெருசா நீண்டுடுத்து. லவட்டிப்புட்டார்.

அதுக்கப்புறம் ஒரு மாசம் அந்தத் தெரு பக்கமே போகலை. பயம். திரும்பத் திரும்ப ஒரே தெருல பிக்ஷை. என்னடா இந்த ப்ராம்மணர் தெனம் வந்து நிக்கறாரேன்னு ஒருத்தரும் வாசல் பக்கம் எட்டிப் பார்க்கல்லே. பிக்ஷை சுலபமா கிடைக்கல்லே. சரி.. அதான் ஒரு மாசமாச்சேன்னு திரும்பவும் கிண்டி திருடின அதே தெருவுக்குப் போனார். அதே ஆத்து வாசல்ல நின்னார்.

”யாரு”ன்னு அவாத்துல மாமி உள்ளேருந்து கேட்டுண்டே வாசலுக்கு வந்தவுடனே... வாய் தப்பிப் போய்..

“ஹரே ஸ்ரீ கிண்டியாயை நமஹ”ன்னு உளறிக்கொட்டினார்...

ஆஹா.. திருடன் ஆம்புட்டுன்னுட்டான்னு... அவாத்துல கடோத்கஜன்களா இருந்த நாலஞ்சு பசங்களா ஓடி வந்து வளைச்சுப் புடிச்சிப்புட்டான்கள்..
மனசுல இருக்கிறதுதானே வாக்குல வரும்?

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails