Monday, February 1, 2016

நோயிற் கிடவாமல்... நொந்து மனம் வாடாமல்...

........நோயிற் கிடவாமல், நொந்து மனம் வாடாமல், பாயிற் கிடவாமல் பாசக்கயிறு வந்து விடுமோ என்ற பயங் கொள்ளாமல்....

காலங்கார்த்தால ஸ்நானம் பண்ணிட்டு வழக்கம்போல பூஜை பண்ணினார். பார்த்தாக்க எண்பது வயசுன்னு சொல்லமுடியாது. திடகாத்திரமா இருந்தார். இருமல் சளி ஜலதோஷம் ஆஸ்துமா ஜுரம் ஷுகர் பிபின்னு ஒரு உபாதையும் கிடையாது. ஹேல் அண்ட் ஹெல்தி. அன்னிக்கு பூஜையை முடிச்சுட்டு சமையல் கட்டைப் பார்த்து "ரெண்டு இட்லி போறும்”னார். நிறைய ஐயப்பசாமிகளுக்கு குருசாமி அவர். எத்தனைன்னு எண்ணிக்கையெல்லாம் வச்சுக்காம பலதடவை சபரிமலை போயிருக்கார். எல்லாம் பெருவழி. இட்லி சாப்ட்டு எழுந்துண்டார். பொண்ணைக் கூப்ட்டார். எல்.ஐ.சி பாலிஸியெல்லாம் எங்கே இருக்கு... பாஸ்புக் எங்கேயிருக்கு... அந்த மாச கணக்கு வழக்கல்லாம் என்னென்னனு சொல்ல ஆரம்பிச்சார்... ”இது என்ன இன்னிக்கு என்னிக்கும் இல்லாத திருநாளா.... புதுசா இருக்கு...”ன்னா மாமி... அவர் எதையும் கேட்டுக்கலை.. எல்லாத்தையும் ஒண்ணுவிடாமச் சொன்னார்...

”மாடியில.. அந்த பழம் பொட்டிக்கு பக்கத்துல ஒரு பாய் இருக்கும் பாரு எடுத்துண்டு வா”ன்னு மாமியைக் கேட்டார். கொண்டு வந்து கொடுத்தா. நடு ஹால்ல வடக்கு தெற்கா விரிச்சார். “யே.. அந்த பொட்டியில ஒரு பழைய வேஷ்டி இருக்கும்.. அதையும் தாயேன்”னார். “என்னப்பா இதெல்லாம்... ஏதோ புதுசுபுதுசா பண்றே”ன்னா பொண்ணு. அந்த வேஷ்டியை வாங்கி விரிச்ச பாய்க்கு மேலே போட்டார். விடுவிடுன்னு போய் ஒண்ணுக்குப் போய்ட்டு காலை அலம்பிண்டு வந்து அந்தப் பாயில உட்கார்ந்துண்டார்.

“எல்லோரும் சமர்த்தா இருங்கோ... சந்தோஷமா இருங்கோ.. க்ஷேமமா இருங்கோ... நான் புறப்படறேன்.”ன்னு பளீர்னு சிரிச்சுண்டே எல்லோரையும் பார்த்துச் சொல்லிண்டார். தெற்கைப் பார்க்க தலையை வச்சுண்டு வடவண்டைப் பக்கம் காலை நீட்டிச் சட்டுன்னு படுத்துண்டார். என்னடாதிது.. என்னமோ மாதிரி பேசறாரே.... ஏதாவது ஆயிடுத்தோன்னு... ஆத்துல இருக்கிறவால்லாம் சுதாரிச்சுண்டு கிட்ட ஓடி வந்து பார்க்கிறா.... பொண்ணு அப்பா..அப்பான்னு தோளை உலுக்கறா... ஊஹும்.. பேச்சு மூச்சு இல்லே... ஏதோ பக்கத்து ஊருக்குப் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போறா மாதிரி பரலோகம் போய்ச்சேர்ந்துட்டார். புண்ணியாத்மா!

........நோயிற் கிடவாமல், நொந்து மனம் வாடாமல், பாயிற் கிடவாமல் பாசக்கயிறு வந்து விடுமோ என்ற பயங் கொள்ளாமல்......

**முதல் வரியும் மேலேயிருக்கும் வரியும் என்னுடையதல்ல. கதை சொல்லும் போது மோகன் அண்ணா மேற்கோள் காண்பித்தார்.**

”ஆ”(ன்மிக) கதைகள் தொடரும்....
அடுத்த கதை ட்ரெயிலர்:- //சாமி தொடையில ’பட்’டுன்னு தட்டினார். பஜனை பாடிண்டே “என்ன?”ன்னு பார்த்தேன். “உனக்கு அம்பாள பார்க்கணுமா?”ன்னு காதுல கேட்டார். சரின்னும் சொல்லாம மாட்டேன்னும் சொல்லாம இருந்தேன். கையைப் பிடிச்சு இழுத்தார். கடேசில உட்காண்டிருந்தோம். அப்படியே எழுந்துண்டேன்.
என் கையைப் பிடிச்சு இழுத்துண்டு விறுவிறுன்னு காட்டுக்குள்ளே போனார். எனக்கு ஒண்ணுமே புரியலை. சின்னப் பையன் வேற... வாயைத் தொறக்காம அவர் இழுத்த இழுப்புக்குப் புதரெல்லாம் தாண்டி போயிண்டிருக்கேன். நாலாபக்கத்துலேயும் பெரிய பெரிய மரம். வழியில்லாத வழியில செடிகொடின்னு கால்ல என்னமோல்லாம் சதக்பதக்ணு மிதிபடறது. கொடி முள்ளெல்லாம் அப்பப்போ காலைக் கிழிக்கிறது. ஆனா ஒங்கேயும் நிக்காம வேகமாப் போறோம். //

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails