Thursday, December 15, 2016

கொலு 2016: சரஸ்வதி தேவியுடன் ஒரு உரையாடல்

”மகனே ஆர்வியெஸ்.. யாரெல்லாம் உன் வீட்டுக் கொலுவுக்கு வந்தார்கள்?”
”ஏன் தாயே?” (சரஸ்வதி சபதம் சிவாஜி குரலில்.. ஏற்ற இறக்கத்துடன்...)
“சொல்லப்பா.. அவர்களுக்கெல்லாம் நானொரு கிஃப்ட் வைத்திருக்கிறேன்”
“சுண்டி விரல் நுழையுமளவிற்கு குங்குமச் சிமிழா?”
“உம்... உன் அதிகப்பிரசங்கித்தனத்தைக் காட்டாதே... சொல்வாயா? மாட்டாயா?”
“சொல்கிறேன் தாயே... கிஃப்ட் என்னவென்று சொன்னால் இந்தப் பொடியன் தன்யனாவேன்...”
“கிஃப்ட் கடைசியில் சொல்கிறேன். நீ ஆட்களைச் சொல்... ”
“எனது அலுவலக நண்ப பாஸ் ரவீந்திரன் வந்தார்... அவருடன் அவரது மனைவி ஸ்ரீவித்யா இரண்டு மகள் செல்வங்களும் உடன் வந்தனர்...”
“என்னைப் பார்த்து என்ன சொன்னார்?”
”குழந்தையின் ஆர்வத்துடன் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டார் தாயே... மிகவும் சிலாகித்தார்... ”
“ம்.. அப்புறம்?”
“கோயமுத்தூரிலிருந்து அன்னலெக்ஷ்மி வந்திருந்தார்...”
“என்ன அன்னலெக்ஷ்மியா? அது ஹோட்டலாயிற்றே..”
“நோ... நீங்கள் சகட்டுமேனிக்கு அப்டேட்டடாக இருக்கிறீர்கள்... இவர் நடமாடும்....”
“இழுக்காதே... அறுக்காதே... யாரெனச் சொல்....”
“சித்ரா மன்னி... கூடவே எங்கள் மன்னார்குடிச் சொந்தங்கள் இருவரும்...”
“அவர்கள் யார்?”
“நெற்றியில் விபூதி மணக்க பாலா முகுந்தனும் அவரது தர்மபத்தினி க்விட் காரோட்டியாகவும்.....”
“ஓ... சரி..சரி.. அப்பம் நன்றாக இருக்கிறது... யார் கைவண்ணம்?”
“அம்மாதான் தாயே... சங்கீதா இன்னும் நன்றாக....”
“அடச்சே... என்னிடமே... உன் டகால்டியா?”
“இல்லையில்லை..தண்டமிடுகிறேன்... அப்பத்தை வைத்து உங்களுடைய விளையாட்டா?”
“சரி.. பிழைத்துப் போ.. பின்னர் யாரெல்லாம் வந்தார்கள்?”
“அலுவலகத்திலிருந்து ஜெயஸ்ரீ வந்தார்கள்... ”
“நான் பார்க்கவில்லையே?”
“ஆம் தாயே... இம்முறை தேர்வடமளவிற்கு கழுத்தணிகலனும் பிடி கொழுக்கட்டையளவு காதணிகளும் போடாமல் வந்தார்கள்... உங்களுக்கு அடையாளம் தெரிந்திருக்காது..”
“சரி.. ரொம்ப வாராதே... மாட்டிக்கொள்வாய்.. பின்னர்...”
“பாண்டியராஜ் என்னும் மதுரைக்காரர்... என்னுடைய அலுவலகக்காரர்.. வந்தார்.. சென்றார்.. அவரது சுட்டி மகளுடன்... ‘நமக்கு கொலுவெல்லாம் பளக்கமில்லை சார்... என் வைஃப்தான் கம்பராமாயணம் படிச்சுட்டுதான் தெனமும் சாப்டுவாங்க.. சாமியெல்லாம் அவ்வளவு பிடிக்கும்....”
“ஓ.. பரவாயில்லையே... பேஷ்..பேஷ்...”
“ஆனால்.. க்ளைமாக்ஸாக... பாண்டியின் மனைவியார் பதறிப்போய் தடுத்து...”சார்...அது சுந்தரகாண்டம்...” என்று சிரித்தபின்.. பாண்டிக்கு கண்ணிரெண்டும் வெளியே வந்துவிட்டது..”
“பாண்டியை ஓட்டுகிறாயா? வேறு யாரெல்லாம் வந்தார்கள்...”
“ஆழ்வார்ப்பேட்டையிலிருந்து...”
“தெரியுமே....”
“ஏனிப்படிச் சிரிக்கிறீர்கள்? யாரது... சொல்லுங்கள் பார்ப்போம்..”
“அடப் பொடியனே... ஸ்ரீநிவாசனும் வல்லபாவும்தானே.... “
“எப்படி கரெக்டாக சொன்னீர்கள்...”
“பின்ன... உன்னைப் பார்க்க ஆழ்வார்ப்பேட்டையிலிருந்து கமலஹாசனா வருவார்?”
“சரி தாயே... “
“எல்லோருக்கும் சுண்டல் கொடுத்தாயே..குறையில்லையே...”
“இல்லையில்லை.. கொடுத்தேன்.. வல்லபாவும் சங்கீதாவும் இவ்வுலகம் கிடுகிடுக்க ஒரு கார்யம் செய்தார்கள்... இன்னமும் நான் நடுங்கிக்கொண்டிருக்கிறேன்..”
“இருவரும் சமத்தாயிற்றே.. சாமர்த்தியசாலிகளாயிற்றே... நீ எதைச் சொல்கிறாய்?”
“பதாகஸ்.... அர்த்த பதாகஸ்...சூசி.. கத்தரிமுககா.. கபீத.. போன்றெல்லாம் கொலுவுக்கு முன்னால் பரத அபிநயம் பிடித்தார்கள்...இதைத் தன் ஊனக்கண் கொண்டு பார்க்க முடியாத வீகேயெஸ்.. தன்னுடைய கேமிராக் கண் கொண்டு க்ளிக்கினார்... வெளியில் விடாமல் ரகசியம் காத்து வைத்திருக்கிறார்...”
“அடக் கிரஸ்தாஸ்ரம கிறுக்கே... நன்றாகத்தானே செய்தார்கள்.. உன்னுடைய கிண்டலுக்கு அளவில்லையா? அவ்வளவு நெஞ்சுரமா உனக்கு? ம்....”
“சாரி தாயே... கட்டி ஏறாதீர்கள்.. நாவடக்கம் நல்லதுதான்... வல்லபாவின் தாயரே ரசித்துக்கொண்டிருந்தார்கள்.. “
“ம்.... அந்த மரியாதை இருக்கட்டும்..... அப்புறம்...”
“மண்டலியிலிருந்து சுவாஸினிகள் இருபது பேர் வந்து முப்பெருந்தேவியரின் புகழ் பாடினார்கள்... திவ்யமாக இருந்தது... குறிப்பாக சரஸ்வதியாகிய உங்களைப் பற்றி...”
“ஐஸ் வைக்காதே... மேலே.. போ.. இன்னும் யாரார்?”
“டிஸியெஸ் முரளி ஜகன்னாத் அவர்கள் தன்னுடைய ட்வின்ஸ் புத்ரிகள் விலாஸினி விகாஸினியுடன் வந்தார். இரட்டையர்கள் அற்புதமாக பாடினார்கள்... உங்களுக்குக் கேட்டிருக்குமே...”
“ஆமாம்.. பின்னர்...”
“தண்டபாணி தன்னுடைய பிள்ளைகளுடன் வந்தார்... எங்கூர் ஹரித்ராநதி பையன்... பக்கத்து வீட்டில் நான் பார்த்து வளர்ந்த பையன்.. சமர்த்து... தொழில் பக்தி மிக்க பையன்....”
“எனதருள் கிடைக்கட்டும்.. அப்புறம்?”
“டியார்ஸி மாமா வந்தார். வழக்கமான அவரது ஹாஸ்யமான பேச்சால் கவர்ந்தார். உப்பு தூக்கலான் லெமன் ஜூஸில் மெய் மறந்தார். நாற்பது வயதில் அறுபது நாடுகள் பார்த்த அவரது பையனைப் பற்றிச் சொன்ன போது எனக்கு முன்னே உலகம் சுற்றியது....”
“அவர் பெரிய பொறுப்பில் இருந்தாலும் உன்னை எட்டிப் பார்த்திருக்கிறார்.. வெரி குட்.. அடுத்தது யார்.. அடுத்தது யார்.. என்று நான் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா? சொல்லப்பா...”
“எங்கள் பேட்டையில் வசிக்கும் கோமதி ராஜாராம் அவர்கள் ராஜாராமுடன் வந்திருந்தார்கள். பஜனையில் தன்னை அர்பணித்துக்கொண்ட ராஜாராம் சாரிடம் பேசுவதற்கு எவ்வளவு இருக்கிறது!!! முதியோர் இல்லங்கள் பற்றி அவர் சொன்ன ஒரு தகவல் நெஞ்சை அரிக்கிறது. பிறகு சொல்கிறேன்...”
“தெரியும்.. இதைப் போன்று தன்னிடம் திராணியிருந்தும் பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளிவிடும் கயவர்களுக்கு தக்க பாடம் வைத்திருக்கிறேன்... உம்.. நீ மேலே சொல்...”
“பிரதீபா கோவிந்தராஜன், சந்தனா, வித்யா மாதவன், நித்யா என்று இஷ்டமித்ர பந்துக்களின் விஜயம் மகிழ்ச்சியாக இருந்தது...”
“ஆமாம்... நல்லது.. அப்புறம்...”
“நீண்ட நாட்களுக்குப் பிறகு நாராயணஸ்வாமி மாமா வந்திருந்தார். “அடுத்த கொலுவுக்கு படி கட்ட நானும் வந்துடறேன்...” என்று அவர் சொன்ன போது எனக்குப் புல்லரித்தது. எழுபத்து ஐந்து வயது இளைஞரின் சுறுசுறுப்பு... ஆஹா...”
“இதைப் போன்றோர்களின் நட்பு உனக்கு ஃபேஸ்புக் அளித்த வரம்... யாரையாவது விட்டுவிட்டாயா.. இவ்வளவுதானா?”
”ஜெகன்மாதா.. இவ்வுலகில் உனக்குத் தெரியாத ஒன்று நடக்குமா? என்னை வைத்து திருவிளையாடலா? யாரார் வந்தார்கள் என்று என் வாயாலேயே பட்டியலிடவைத்தீர்களே... தங்களது விளையாட்டே விளையாட்டுதான்.... “
“ஹா..ஹா.. உனக்கு ஞாபக சக்தி இருக்கிறதா என்று சோதித்தேன். பரவாயில்லை.. பாடங்கள் உன் புத்தியில் பதியாத போதும்... பரிவர்த்தனைகள் பதிகிறது.. உங்கள் வீட்டிற்கு வந்தவர்கள் வராதவர்கள் வரவேண்டுமென்று நினைத்துக்கொண்டு வீட்டிலேயே லாப்டாப்பில் உன்னுடைய கொலு பார்த்தவர்கள் என்று சகலமானவர்களுக்கும் என்னுடைய அருட்கடாட்சம் உண்டு. அதுதான் எனது கிஃப்ட்.”
”அனந்தகோடி நமஸ்காரங்கள் தாயே”

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails