Thursday, June 1, 2017

பர்வம்: எஸ். எல். பைரப்பா

சோவின் மகாபாரதம் பேசுகிறதுதான் அந்த இதிகாசத்தைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஈர்ப்பை என்னுள் தூண்டியது. அந்தப் புத்தகம் இதிகாசம் மீதான ஆர்வத்தைக் கிளறிவிடும். அநேகமாக மகாபாரதத்தின் எல்லாக் கிளைக்கதைகளையும், பாத்திரங்களையும் ஜூஸ் பிழிந்து இரண்டு புத்தகமாகத் தந்தார். சமூகத்திற்கு சோவின் செயற்கரிய பணி. பின்னர் கும்பகோணம் பதிப்பு வாங்கினேன். அப்படியே ராஜாஜியின் வியாசர் விருந்தும். அதுமட்டுமல்லாது திருமுருக. கிருபானந்தவாரியர், ஸ்ரீஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி அண்ணா, ஆர்.பி.வி.எஸ். மணியன், புலவர் கீரனின் வில்லிபாரதம், சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் என்று சொல்லின் செல்வர்களின் சுவைமிகு சொற்பொழிவுகளைச் சேப்பாயியில் பயணிக்கும்போது நிறையக் கேட்டிருக்கிறேன்.
எம்.டி. வாசுதேவன் நாயரின் "இரண்டாம் இடம்" , பீமனின் பார்வையில் இதிகாசத்தை சொன்னது. நாயர் ஸ்வர்க்காரோகண பர்வத்தில் இரண்டாம் இடத்தை ஆரம்பித்திருப்பார். கிருஷ்ணர் பரமாத்மாவாக இடம்பெறாமல், அதிசயங்கள் எதுவும் நிகழ்த்தாமல் வெறும் தேரோட்டியாகவே வந்து போவார். கௌரவர்களின் சூழ்ச்சியும் பாண்டவர்கள் அதை எதிர்கொண்ட விதமும் பீமனின் பலதார மணங்களும் ஐவருக்குப் பொண்டாட்டியாக வாக்கப்பட்ட திரௌபதி சுழற்சி முறையில் அண்ணன் தம்பிகளிடம் வசிப்பதையும் விறுவிறுப்பு சற்றும் குறையாமல் நாவல் வடிவில் படித்த இதிகாசம்.
பின்னர் இதுபோன்று வித்தியாசமான கோணத்தில் மகாபாரதமோ இராமாயணமோ கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்ததில் இந்த வருட புத்தகக் காட்சியில் எஸ்.எல். பைரப்பாவின் "பர்வம்" (பருவம் என்று கவர்ச்சியாகத் தூய தமிழ் தலைப்பு) சாஹித்ய அகாதெமியில் கிட்டியது. எவருமே கொஞ்சம் கூட எதிர்பாக்காத சல்லியன் கதை சொல்வது போல ஆரம்பித்திருந்தார். க்ளாஸ்!!
குந்தி மற்றும் மாத்ரி என்ற இரு இளவரசிகளை மணம் புரிந்தும் பாண்டுவினால் அவர்களுக்கு புத்ர பாக்கியம் அருள முடியாத கையாலாகாதத்தனத்தை பைரப்பா சில அசாதாரண வசனங்களில் சொல்லிப் போகிறார். வியாச பாரதத்தில் இதுபோன்று சொல்லப்பட்டிருக்கிறதா என்று கும்பகோணம் பதிப்பைப் புரட்டிப் பார்க்க வேண்டும். ஆனாலும், இவரின் கைவண்ணத்தில் பைரப்பா பாரதம் மிளர்கிறது. ஆயிரம் பக்க நாவலை ஆர்வத்துடன் படித்துவருகிறேன். முடிந்ததும் ஒரு பத்தி எழுதுகிறேன்.
இதனிடையே, இந்த மாத வலம் இதழில், பைரப்பாவின் சுயசரிதை நூலான ‘பித்தி’ (தமிழில் சித்திரச் சீலை என்று அர்த்தமாம்)யைப் பற்றிய கட்டுரை அனீஷ் கிருஷ்ணன் நாயர் எழுதியிருக்கிறார். சொல்லொணாப் பல துயர்களை அனுபவித்த பைரப்பா கல்லூரியில் தங்க மெடல் வாங்கியவர். ஒரு வேளை சாப்பிட்டிற்குக் கஷ்டப்பட்டு பவதி பிக்ஷாம் தேஹி என்று கையேந்தியவர். தனது சகோதர சகோதரி மற்றும் அன்னையை ப்ளேக்கிற்கு கொடுத்தவர். என்றெல்லாம் அவரது துயர்களை அடுக்கியிருந்த கட்டுரையில் அவர் கஷ்டப்பட்ட ஒரு இடம் கற்பாறையையும் உருக வைக்கும். அது.....
ஏழு வயது தம்பி இறந்துவிடுகிறான். யாரும் உதவ முன்வரவில்லை. இறந்துகிடக்கும் தம்பியின் இறுதிச் சடங்கை எப்படிச் செய்வது என்று கவலையாயிருக்கிறார். வாய்க்கரிசி போட வீட்டில் அரிசி இல்லை. தெருவில் அங்கும் இங்கும் அலைந்து மூன்று பிடி அரிசி வாங்கி வாய்க்கரிசி இடுகிறார். தகனம் செய்வதற்கு கரடி என்றழைக்கப்படும் பழைய பணியாள் ஒருவர் அவரது சமூக மக்களிடமிருந்து விறகு வாங்கிவருகிறார். இவரே தம்பியின் சடலத்தை தோளில் சுமந்து சென்று கரடி கொடுத்த விறகால் தகனம் செய்து.... இரவு முழுவதும் நாய் நரி எதுவும் கௌவிக் கொண்டு போகாதவாறு காவல் புரிந்தாராம்.
இன்னமும் நெஞ்சை உலுக்கிறது.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails