Tuesday, June 6, 2017

கோவைக்கு ஒரு திடீர்ப் பயணம்

ஒரு அவசர அலுவலக வேலையாக இன்று கோவை பயணம். சென்னையில் காலை ஆறரை இண்டிகோ...கோவையில் மாலை ஐந்தரை இண்டிகோ. போக ஒரு மணி வர ஒரு மணி காற்றாய் ஆகாசத்தில் பறந்தது போக மத்தபடி கேகே அண்ணா தரிசனம் ஒரு மணி நேரம்.. பாக்கியெல்லாம் வேலை.. வேலை.. . வேலை.. வேலை...வேலை...
அதிகாலையில் கொத்தவால்சாவடி போல சென்னை MAAவில் காலை மிதித்து... முதுகில் சாய்ந்து... ஒரே தள்ளுமுள்ளு கூட்டம். மேரு மலையைக் கடைந்த பின்னர் களைப்பாக வந்து சுருட்டிப் படுத்துக்கொண்ட வாசுகி பாம்பு போல ஐந்து மடிப்பில் அசையாமல் இருந்தது பயணியர் க்யூ. Departure Gate செக்யூரிட்டி நாலு தரம் ஐடி ப்ரூஃபையும் என்னையும் சந்தேகக் கண்ணோடு (உருட்டி...உருட்டி) பார்த்துவிட்டு ”பயபுள்ள முழியே சரியில்லையே ...” என்று நினைத்துக்கொண்டே “ஹாங்...” என்று சைகையால் அசிரத்தையாக உள்ளே விரட்டினார்.
ஏழு கடல் ஏழு மலை தாண்டி இருக்கும் கொடூர அரக்கனின் இதயம் போல அடுத்து இன்னும் கொஞ்சம் ஷ்ட்ரிக்ட் செக்யூரிட்டி. ”சீக்கிரம் போகனும்ப்பா... வண்டியை எடுத்துடுவான்....” என்று அங்க்ரேஜியில் கூட கெஞ்சமுடியாமல் அவர் ஹிந்தி மே போல்த்தா ஹை. ஒரு அடாசு டிடெக்டரை வைத்துக்கொண்டு... சினிமாக்களில் வரும் க்ளிஷே காட்சிகளில் காதலியை மோந்துகொண்டே மயிலிறகால் வருடும் காதலன் போல... ரசனையாக முன்னும்பின்னும் தேய்த்துக்கொண்டிருந்தார். இரண்டு கையையும் இயேசு நாதரை சிலுவையில் அறைந்தது போல விரித்து அவர் முன்னும் பின்னும் சொரிந்து கொடுத்து சுகம் ஏற்றவேண்டும் என்ற ஆசையில் எனக்கு முன்னால் விஸ்ராந்தியாக நின்றிருந்தவரை எப்போது விடுவார் என்று தெரியாமல் தவித்தேன்.
“Last call for Jambunathan" என்று ஸ்பீக்கரில் ஏலம் விடத்தொடங்க ... “ஜம்புநாதன் ஈஸியா ஜம்ப் பண்ணி போயிடுவாரு... ஆனா நம்மளைக் கூப்பிடலையே... ஆறரைக்கு தானே வண்டி எடுப்பாங்க... மணி ஆறு தானே ஆவுது... “ என்று கால்கள் பரபரக்க... எனக்கு முன்னால் இருந்த மாமாவின் ப்ரீஃப்கேஸை முட்டியால் தட்டிவிட்டேன். அறியாப் பிழை.
அக்கணமே முகம் சுருங்கி இன்ஸ்டண்ட் துர்வாசராகி சாபம் கொடுக்கும் பாவனையில் சரேலென்று திரும்பினார். “இடிச்சா முட்டிக்கு வலிக்கும். ப்ரீஃப்கேஸுக்கு வலிக்குமா?” என்று அசட்டுக்கேள்வி கேட்க நினைத்து... அவர் பார்வையைத் தவிர்க்கக் குனிந்து முட்டியைச் சூடு பறக்கத் தேய்த்துக்கொண்டேன். “இண்டிகோ ஏறும் பிரஹஸ்பதிகள் க்யூவில் இருந்தால் சீக்கிரம் ஏழாம் வாசலுக்கு ஓடிவரவும்.. இல்லையேல் உங்களை அம்போன்னு விட்டுட்டு போய்டுவோம்....” என்று ஸ்பீக்கர் கறாராய் அலற, தட்டிவிட்ட மாமவைத் தாண்டி ஓடினேன்.
கொல்லைக் கதவைப் பூட்டினோமா...பீரோ சாவியை திருடன் எடுக்க வசதியா அது மேலேயே வச்சோமோ... ஹால் ட்யூப்லைட்டை ஆஃப் பண்ணினோமா.... பாத்ரூம் கொழாயை ஸ்பிண்டில் லூஸ் ஆகிறவரை அழுத்தி மூடினோமா... என்றெல்லாம் நொடிக்கு நூறு சந்தேகம் வந்து வாசலுக்கும் உள்ளுக்கும் நடையாய் நடந்து நாலு மணிக்கு வெளியூர் போக வெளியே வந்து... ரேழிக்கும் வாசலுக்கும் கபடி ஆடி... ஐந்து மணிக்கு கிளம்பும் மு.முத்தண்ணாக்கள் போல.... கொஞ்சம் மூச்சு விட்டுப்போம்... இரைக்கிறது...
சேஃப்டி பத்தி சொல்லு... மொபைல் ஆஃப் பண்ணச் சொல்லு.. கேபின் க்ரூ.. பைலட்ஸ் யாருன்னு சொல்லு... தரைக்கு மேலே பறந்தாலும் தண்ணில உழுந்தா எப்படி சேஃப்டி ஜாக்கெட்டைக் கட்டிகணும்னு சொல்லு... என்றெல்லாம் அந்த கன்னம் ரூஜ்ஜால் சிவந்த அழகான யுவதிகளை... ( நாக்கைத் தொங்கப் போட வேண்டாம்.இதற்கு மேல் அந்த ஸ்கர்ட் போட்டப் பெண்களை நான் வர்ணிப்பதாகயில்லை.. ) பாடாய் படுத்தி ஆறேமுக்காலுக்கு ரன்வேக்கு உருட்டி வந்து.... விர்ர்ர்ர்ர்ரென்று பறக்க ஆரம்பித்தார்....
போற வழியில்.... மேகப் பஞ்சுகளுக்கு மத்தியில்.... தேவலோகத்தில் இருப்பது போன்ற பிரமையில்... எனக்குத் தாயினும் சாலப் பரிந்து சாண்ட்விட்ச் கொடுத்து... அது தொண்டையை அடைக்காமல் இதமாய் இருக்க “யூ வாண்ட் ஜூஸ்?” என்று ஐஸாய்க் கேட்டு மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜூஸும் கையில் கொடுத்து அக்கறையாய்க் கவனித்துக்கொண்ட அந்த ஹோஸ்டஸ் வாலிபிக்கு சீக்கிரமே என்னைப் போல நல்ல கணவன் ப்ராப்திரஸ்து!
கோயம்புத்தூரில் இறங்கியபோது ஏர்போர்ட் சுத்தமாக அலம்பிவிடப்பட்டிருந்தது. என்னுடைய வேலை நிமித்த சந்திப்பிற்கு ஒரு மணிநேரம் அவகாசம் இருந்தது. “கேகேண்ணா... இறங்கிட்டேன்... வந்துட்டேன்..” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டு அவரிடம் நேரில் ஞானம் பெறுவதற்கு சென்றேன். அவர் காஃபி கொடுத்தார். பின்னர் கஞ்சி கொடுத்தார்... பின்னர் விடை கொடுத்தார்... அவர் கொடுத்ததிலெல்லாம் அன்பையும் குழைத்துக் குழைத்துக் கொடுத்தார்.
கோவை ரிட்டர்ன் அடுத்த பதிவில்.....

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails