Monday, October 26, 2015

கணபதி முனி - பாகம் 35: வனதுர்க்கை பறித்துக் கொடுத்த பச்சிலை

கோகர்ண வித்யாபீடத்தில் பாடத்திட்டங்கள் நாயனாவின் மேற்பார்வையில் புத்துயிர் பெற்றன. ரிஷிகள் திருஷ்டாந்தமாக தெரிந்து கொண்ட பல மந்திரங்களைத் தொகுத்து வகைப்படுத்தினார். அம்மந்திரங்களின் சான்னித்யத்தை அறிந்துகொள்ள புதுப்புது திட்டங்கள் வகுத்தார். பொதுவாக ரிஷிகள் வாழ்ந்த காலங்களை மஹாபாரதக் காலத்தோடு ஒப்பிட்டு பட்டியலிடச் சொன்னார். அப்படி படிக்கப்படும் மந்திரங்கள் அமைந்த சூக்தங்கள் அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த பிரசித்தி பெற்றவர்களின் வாழ்க்கையோடு தொடர்புடையாகிறதா என்றும் ஆராயக் கேட்டுக்கொண்டார். அந்தந்த ரிஷிகளோடு சம்பந்தப்பட்ட மந்திரங்கள் அவர்களின் அஸ்திர வித்தைக்கு உபயோகப்பட்டதா? அப்படியில்லை என்றால் வேறு எதற்கு உதவியது? வேறு ஏதேனும் ஆன்மிக உண்மைகளை உணர்த்தி அதை அடையும் மார்க்கத்தை மறைமுகமாகச் சொல்லியதா?

கோகர்ணத்தில் இது போன்ற வேத தபஸில் முழுமூச்சாக இறங்கியிருந்தார். ”நான்” என்பதை உதறித் தள்ளி தேகத்திற்கு சுகமும் சந்தோஷமும் தரும் அனைத்தையும் ஒதுக்கிவிட்டார். வடபந்தேஸ்வரத்தில் இத்தகைய வேதத் தபஸில் ஈடுபட்டதால் அவருக்கு இந்த பூலோக நன்மைக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது.

ஆன்மிகம் மற்றும் தெய்வ சங்கல்பமுடையவர்கள் கல்லாய் சமைந்து உட்கார்ந்து பூஜை புனஸ்காரங்கள் மற்றும் தவம் மட்டுமே இயற்றுவார்கள் என்பதை உடைத்து அவர்கள் இவ்வுலகம் க்ஷேமம் அடைய முடியும் என்பதை நிரூபிக்கத் துடித்தார். தன்னை விட்டு தன்னுடைய தேவைகளை விடுத்து தபஸில் இருப்பவர்களால் மட்டுமே எல்லோருக்கும் உபகாரங்கள் செய்து உலகிற்கு சேவை புரிய முடியும் என்பது நாயனாவின் திடமான கருத்து.

நாயனா தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு இந்த வேத தபஸில் இருந்தார். அப்போது கலுவராயியிலிருந்து அவருக்கு தந்தையார் இறுதி யாத்திரைக்குத் தயாராய் இருப்பதாகவும் அவரைப் பார்க்கப் பிரியப்படுவதாகவும் லிகிதம் வந்தது. உடனே கிளம்பினார். மழை வானத்தைப் பிளந்து கொண்டு கொட்டியதில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. 1912ம் வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி அவர் கலுவராயிக்குள் நுழைவதற்கு முன்னர் அவரது தந்தையார் விண்ணுலகம் எய்தியிருந்தார்.
ஒரு மாத காலம் தந்தைக்கு செய்யவேண்டிய ஈமக்கிரியைகளை கலுவராயியில் தங்கி செய்தார். பின்னர் வித்யாபீட நினைவு சுண்டி இழுக்க உடனே கோகர்ணத்திற்கு திரும்பிவிட்டார்.

ஒவ்வொரு நாளும் வேதமும் தபஸுமாகக் கழிந்தது. நான்கு நாட்கள் கழித்து நாராயண பிரம்மச்சாரி என்கிற நம்பூதிரி நாயனாவை வித்யாபீடத்தில் சந்தித்தார். ”நமஸ்காரம்” சொன்னார். அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே “பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் வழிகாட்டுதலின் பேரில் நீங்கள் அருணாசலத்திலிருந்து வருகிறீர்கள்? சரியா?” என்றார். வந்தவர் அசந்துபோனார். அப்படியே நெடுஞ்சாண்கிடையாக நாயனாவின் காலில் விழுந்தார்.

“என்னை தங்களது சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு அருள வேண்டும்” என்று கைகூப்பி நின்றார். அவருக்கு அம்ருதானந்தா என்று நாமகரணம் சூட்டி சந்நியாச தீக்ஷை அளித்தார் நாயனா. சந்நியாசியான நாராயணா பெரிய ஜமீனின் புத்திரன். நாட்டுக்குப் பொதுச் சேவை புரிய வீட்டைத் துறக்க சித்தமாயிருந்தார். ஸ்ரீரமணரின் ஆசி பெற்று அரசியல் இயக்கமொன்றில் இணையத் தயாராயிருந்தார். ஆனால் ரமணர் அவரை நாயனாவிடம் அனுப்பிவைத்தார்.

நாயனா அப்யசித்த மந்திரங்களை வாழ்நாள் முழுவதும் உபாசித்தார். அனைவருக்கும் உதவிகள் பல புரிந்தார். ரமண கீதையில் இந்த நாராயணாவை எழுதி அமரத்துவம் பெறச்செய்தார் நாயனா.

*

கோகர்ணத்திலிருந்து நாலு மைல் தூரத்திலிருக்கும் குக்கிராமம் சன்னிபேலா. அது இயற்கை எழில் கொஞ்சும் சஹாயாத்ரி மலையின் உச்சி. அங்கே வாசிஷ்ட கணபதி முனியின் வழிகாட்டுதலின் பேரில் ஒரு யக்ஞம் செய்வதற்கு கோகர்ண பண்டிதர்கள் உத்தேசித்தார்கள். உபந்தோப்பாத்யாயா சன்னிபேலாவின் முடிசூடா பண்டிதர். கலுவராயில் கணபதி முனியின் தந்தையார் இயற்கை எய்வதற்கு முன்னரே இதற்கான ஏற்பாடுகளை செய்துவைத்திருந்தார். இப்போது நாயனாவை அங்கே அழைத்து தவமியற்றி அவ்விடத்தைத் தூய்மைப்படுத்த வேண்டினார்கள்.

அது நிசப்தமான இடம். ஒரு பக்கம் கடல். மூன்று பக்கங்களிலும் அடர்ந்த காடு. சிலுசிலுவென்று காற்று மரம் கிளைகளை உலுக்கி ஓசையோடு வீசும். நெஞ்சுக்குப் புத்துணர்வு ஏற்றி தவம் செய்யும் ஆசையைக் கிளப்பும். கலுவராயியிலிருந்து திரும்பியவுடன் பண்டிதர்கள் வேதம் முழங்க கணபதி சன்னபேலாவுக்கு கிளம்பினார்.

சன்னபேலாவின் சூழல் தவத்திற்கு மிகவும் ஒத்தாசையாக இருந்தது. விசாலாக்ஷியும் வஜ்ரேஸ்வரியும் வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொண்டார்கள். எஞ்சியிருந்த அனைவரும் மந்திர ஜபம் செய்தார்கள். அவர்களது அமைதியான தபஸினால் அந்த இடத்தில் வார்த்தையில் அடங்காத ஒரு சாந்தி குடிகொண்டது. மூன்று வாரங்கள் இப்படி ஓடின.

அப்புவிற்கு மஞ்சள்காமாலை கண்டது. அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்தார். “தீமை தரும் உஷ்ணங்கள் உடம்பிலிருந்து வெளியேறுகிறது.. அவ்வளவுதான்...” என்று நாயனா ஆறுதல் கூறினார். அன்றிரவு அப்பு சில மணிகள் நிம்மதியாகத் தூங்கினார். நடுநிசிக்குப் பிறகு ஒரு சொப்பனம் கண்டு திடுமென்று விழித்து உட்கார்ந்தார். சொப்பனத்தில் தோன்றிய ஒரு பெண்மணி அவரது நாக்கை தனது புடவையின் முந்தானையால் அழுத்தித் துடைத்தார்.
ஆசுவாசப்படுத்திக்கொள்ள வீட்டிற்கு வெளியே வந்தார் அப்பு. அப்போது அவர் கனவில் கண்ட அதே பெண்மணி அவ்வீட்டின் திண்ணையில் சிரித்தபடி அமர்ந்திருந்தார். அதிர்ச்சியில் எதையும் கண்டு கொள்ளாமல் திரும்பவும் வீட்டிற்குள் வந்து படுத்துவிட்டார். மீண்டும் கனவு வந்தது. அதே பெண்மணி வந்தார். இம்முறை ஏதோ ஒரு பச்சிலைக் கொடியை விசாலாக்ஷியிடம் காண்பித்துக்கொண்டிருந்தார். மீண்டும் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு வெளியே வந்தார்.

அப்போது தூரத்தில் மரங்களுக்கிடையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சம் ஆடியாடி வந்துகொண்டிருந்தது. யாரோ ஸ்திரி கையில் அரிக்கேனுடன் நெருங்கினார்கள். வாசலிலேயே நின்று பார்த்துக்கொண்டிருந்தார் அப்பு. அருகில் வந்ததும் அது விசாலாக்ஷிதான் என்று தெரிந்துகொண்டார். அவர் கண்ட காட்சி அவரை உறைய வைத்தது. அப்பு கனவில் கண்ட அந்த பச்சிலைக் கொடியை விசாலாக்ஷி கொத்தாக கையில் பிடித்திருந்தார்.

”இந்த......... கொடி..... உங்கள்..... கைகளில்...” என்று ஒவ்வொரு வார்த்தையாகத் திக்கித்திக்கிக் கேட்டார் அப்பு.

“காட்டில் ஒரு வயதான பாட்டி இந்தக் கொடியைப் பறித்து என்னிடம் கொடுத்தார்... இது மஞ்சள்காமாலைக்கு மருந்தாம்.....” என்ற விசாலாக்ஷியின் கண்களில் சந்தோஷம் தெரிந்தது.

“அவர் யாராம்?”

“ஏதோ பக்கத்திலிருக்கும் மலைக் கிராமமாம். காலையில் சுள்ளி பொறுக்க தினமும் காட்டிற்கு வருவாராம்...”

இவர்கள் இருவரும் ஆச்சரியாமகப் பேசிக்கொண்டிருக்கும் போது நாயனா அங்கே வந்தார்.

“அது வேறுயாருமில்லை.... வனதுர்க்கையே வயதான பெண் வேடத்தில் வந்திருக்கிறாள்...” என்றார். அப்புவும் விசாலாக்ஷியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். நாயனா சிரித்தார்.

இரண்டு நாட்களில் அதிசயம் நிகழ்ந்தது. மஞ்சள்காமாலை நோயினால் பீடிக்கப்பட்ட அப்பு பூரண நலமடைந்தார். நாயனாவின் ஞானதிருஷ்டியை அனைவரும் புகழ்ந்தனர்.

ஏப்ரல் 1913ல் அந்த யக்ஞம் நடந்தது. வாசிஷ்ட கணபதி முனி யக்ஞத்தில் ஓதப்படும் ஒவ்வொரு மந்திரத்தின் பொருளை அப்பண்டிதர்களுக்கு விளக்கினார். ஏற்கனவே அவர்களுக்கு மந்திரங்களுக்கான அர்த்தம் தெரிந்திருந்தாலும் நாயனாவின் பொழிப்புரையும் வியாக்கியானத்தின் கோணமும் வெகுவாகக் கவர்ந்தது. வேதத்தின் உட்பொருளும் மையக் கருத்துக்களையும் கணபதி முனியிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு அது ஒரு புதிய பாதையை வகுத்துக்கொடுத்தது.

யக்ஞம் பூர்த்தியடைந்த பிறகு ஒரு வாரத்திற்கு இந்திராணியை மனதில் நிறுத்தி தவம் இருந்தார். அங்கிருந்து அப்புவும் கல்யாணராமனும் ஆசிரியர்களாக வேலை பார்க்கும் மஹபூப் கல்லூரி இருக்கும் செகந்திராபாத் நோக்கி பயணப்பட்டார்.
போகும் வழியில்....

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails