Monday, October 26, 2015

பாதாள பைரவி

நயன்தாரா மேல் கொண்ட ஒருதலைக் காதலால் தோல்வி, காலையில் ஸ்ட்ராங்காகவும் சூடாகவும் காஃபி கிடைக்கவில்லை என்று பொண்டாட்டியுடன் கோபித்துக்கொண்டு கிணற்றில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சிப்பவர்கள், பக்கத்துவீட்டுக்காரன் படகு காரில் சொகுசாப் போறானே என்ற வயற்றெரிச்சலில் தண்ணீர் லாரியில் தலையைக் கொடுத்து பிராணஹத்தி பண்ணிக்கொள்ள துடிப்பவர்களுக்கு என்று விதம்விதமானவர்களுக்குத் தோதாக சென்னையில் ஒரே இடம். உசுரை மாய்த்துக்கொள்வதற்கு உபாயம் தேடி அலையவேண்டாம், நகரின் முக்கியமான இடத்தில் அந்த கொலைக்களன் இருக்கிறது. அவ்விடத்திற்கு இப்போது ஜில்ஜில்லென்று ஏஸி போட்ட மெட்ரோ ரயிலே விட்டிருக்கிறார்கள்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் எதிரில் அந்த தீவுப் பள்ளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. திருவிழாக்களில் மரணக்கிணறு ஓட்டுபவர்கள் ஒரு வாரம் கேம்ப் போட்டு காசு பார்க்கலாம். முப்போதும் அரசியலைச் சுவாசிக்கும் அம்போஜி “விஷால் அணியோ சரத் அணியோ யார் எலெக்சன்ல தோத்தாலும் ஓடி ஒளிச்சிக்கிறத்துக்கு ஒரு இடம் ரெடி... ” என்று கண்ணடித்துச் சொல்லிவிட்டு ”கே”யென இளித்தான்.
பள்ளம் நோண்டியவர் பாதாள லோகத்தில் பங்களா கட்ட கேட்டிருக்கிறார்கள் என்று காதில் வாங்கிக்கொண்டார் என்று நினைக்கிறேன். இரண்டு ஆப்பிரிக்க நாட்டு கஜேந்திரர்களுக்கு ஆதிமூலமே என்று கதறாவிட்டால் கூட மோட்சமளிக்குமிடம். திடீரென்று ஒரு நாள் உரிமையோடு நடுரோட்டில் கூடாரம் போட்டு சம்ப்ரமமாக உட்கார்ந்துகொண்டு தோண்டும் பணியை செவ்வனே ஆரம்பித்தார்கள். சிவபெருமானின் அடியைக் காண திருமால் வராஹமாகப் பூமியைக் குடைந்ததை விட அரை இன்ச்சாவது பெரிதான பள்ளமாக இருக்க வேண்டும் என்பது வின்னிங் டார்கெட். இன்னும் கொஞ்சம் தோண்டினால் பூமிப்பந்தில் ஓட்டை விழுந்து தெலுங்கு பட அதிரடி ஆக்ஷன் ஹீரோக்கள் அதைக் கழுத்தில் ருத்ராட்சக் கொட்டையாக மாட்டிக்கொண்டு சுந்தரத் தெலுங்கில் வில்லனை வாயாலேயே வறுத்து வாட்டியெடுத்து வீழ்த்துவார்கள்.
மழை பெய்தால் தண்ணீர் நிரம்பி ஒரு திடீர் நிச்சல் குளம் உருவாகும் என்று சிட்டி பையன்கள் சொப்பனம் காண்பார்கள். எனக்கு மன்னார்குடி ஐயனார் குட்டை ஞாபகம்தான் வந்தது. இரண்டு மாதங்களாக அந்த ராட்சஷ ஜேஸிபியும் அது தோண்டிய ராட்சஷ பள்ளமும் எதற்கும் தயாராய் இருக்கிறது.
இதோ ஐப்பசி பிறக்கப்போகிறது. ஐப்பசியில் அடைமழை என்பார்கள். குட்டை நிரம்பியவுடன் சொல்லியனுப்புகிறேன். அருவிக் குளியலுக்காகக் குற்றாலத்துக்குப் போவதற்குப் பதில் குட்டைக் குளியலுக்கு கோயம்பேடு வாருங்கள். மோட்சகதி கிடைக்கும்.
அம்போஜி குட்டையை எட்டிப் பார்த்துக்கொண்டே சொல்றான் “மாடு கன்னுகுட்டி குளிப்பாட்டனும்னு நினைச்சாக் கூட ஓட்டிவரச் சொல்லுங்க... குட்டை தாங்கும்....”
வெறுப்பு குறிப்பு: காரணம் எதுவாயினும் இரண்டு மூன்று மாதங்களாக முக்கிய சாலையில் குழி பறித்து விளையாடுவதை எப்போது நிறுத்துவார்கள்? க்ளட்ச் மிதித்து காலிரண்டும் தினமும் கடுக்கிறது.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails