Monday, October 26, 2015

சேவாக்கிற்கு சல்யூட்!

பொறந்தவனெல்லாம் ஒரு நாள் சாகத்தான் போறான் என்பது வீரமணியின் பேட்டிங் தத்துவம் என்றால் "போடாங்....” என்று கெட்ட வார்த்தையை நாக்கில் மடித்து என்னை மொத்த வருவீர்கள். இப்போ சொல்லப்போவது அதற்கு ஒத்துப்போகிறதா என்று பாருங்கள். பிட்ச்சில் விழுந்த பந்தெல்லாம் பீச்சாங்கை பக்கமே திருப்பி விளையாடுவான். மிட் விக்கெட், ஸ்கொயர் லெக், லாங் ஆன் என்று கால்பக்க பௌண்டரியே கண். விழுந்த பந்தெல்லாம் கால் திசைக்கு என்பதும் “பொறந்த...” என்கிற முதல் வரித் தத்துவமும் இப்போது முடிச்சுப்போட்டுக்கும்.
வீரமணி என்று ஒரு பேஸ்பால் ப்ளேயர். ஷாட்பூட் எறிவான். சில சமயம் ஜாவ்லின் த்ரோ. தெம்பு தேவைப்படும் எந்த விளையாட்டிற்கும் அவன் ஒரு கை. கட்டுமஸ்தான உடம்பிற்காக ஸ்கூல் கிரிக்கெட் டீமிலும் இருந்தான். பிட்ச்சில் எங்கே பந்து விழுந்தாலும் ஆன் ஸைடில் பறக்கும். ஆஃப் ஸைடிலிருக்கும் ஃபீல்டர்கள் அனைவரையும் தூக்கி ஆன்ஸைடில் போட்டாலும் அவர்கள் கவுட்டி வழியாக பௌண்டரிக்குத் துரத்தும் வித்தை தெரிந்தவன்.
சின்ன வயசில் நான் பார்த்த வீரமணி டேஷிங். அப்புறம் மால்கம் மார்ஷலை மெல்போர்ன் ஸ்டேடியத்துக்கு வெளியே சிக்ஸ் அடித்து நசுக்கிய க்ரிஷ் ஸ்ரீகாந்த் படா பேட்ஸ்மேன். மூக்கை உறிஞ்சிக்கொண்டு சூரிய நமஸ்காரத்தோடு பயபக்திப் பழம். வந்த புதுசில் இளரத்தம் பாய்ந்த சச்சின் அதிரடி ஆட்டக்காரர். ஆனால் ஆறும் நான்குமாய் ரொம்ப நாளைக்கு விளாசி விளையாடியவர் சேவாக்.
ஆட்டத்தின் முதல் பந்து, நாற்பத்தொன்பதில் இருக்கிறேன்.. ஒரு ரன்னில் அரை சதம், இன்னும் இரண்டு ரன்கள் எடுத்தால் செஞ்சுரி என்றெல்லாம் ஈனமானமில்லாம் கட்டை போட்டு விளையாடுவது சேவாக்கிற்குப் பிடிக்காத விஷயம். பந்திற்கு மரியாதை. நல்ல பந்து அடிவாங்காது. மற்றவையெல்லாம் அப்போதே கணக்கு தீர்க்கப்படும். இறங்கு. நொறுக்கு. இறங்கு..நொறுக்கு... இதுதான் சேவாக்கின் தாரக மந்திரம்.
சச்சின் இடது காலை முன் வைத்து பெண்டுலமாய் பேட்டை சுழற்றி நளினமாக ஸ்ட்ரெயிட் ட்ரைவ் விளையாடுவது கண்ணை நிறைக்கும். சேவாக் அப்படி கிடையாது. டேஷிங். டேர் டெவில். பௌன்ஸர் விழுந்தால் கோழையாய்க் குந்திக்க மாட்டார். வெளிநாட்டு மைதானமாக இருந்தால் கவர் பௌண்டரிக்கு வெளியே சட்டையில்லாமல் பெர்முடாஸ் போட்ட யாராவது காட்ச் பிடிப்பார்கள், இந்தியா என்றால், நம் நாட்டின் குளிர் சீதோஷ்ணத்திற்குத் தக்கவாறு கறுப்புக் கோட் போட்டுக்கொண்டு கூலிங் கிளாய் அணிந்து தொப்பியுடன் இருப்பவர் காட்ச் பிடித்து கை உயர்த்துவார்.
நமக்கு ஆசி வழங்குவதற்கு முன்னால் யானை துதிக்கையை பின்னால் தூக்குவது போல பேட்டை தன் தலைக்கு மேல் உபயோகித்து பந்தைக் கெந்தி விட்டு விக்கெட் கீப்பர் தலைக்கு மேலே தேர்ட் மேனில் சிக்ஸ் அடித்த சேவாக்கிற்கு அன்று யானை பலம். அசுர அடிக்கு நாற்புறமும் பந்து எல்லைக்கோட்டைக் கடந்து கேலரியில் வாசம் செய்தது. சேவாக்குக்கு இதெல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி.
சேவாக்கிற்கு சல்யூட்!

1 comments:

Anonymous said...

ஒரு அதிஅற்புத கிரிக்கெட் கலைஞன் வீரேந்திர சேவாக். பேரில் மட்டுமல்ல, பேட்டிலும் வீரம்! வீரத்தைத் தவிர வேறெதுவுமில்லை. அந்த இந்திய வீரனின் புகழ்பாடி எழுதிய உங்களுக்கும் ஒரு சல்யூட்!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails