Thursday, October 15, 2015

கணபதி முனி - பாகம் 34: வாது போர்

வாஸுதேவ சாஸ்திரி கிரஹத்தின் அருகே ஒரு அம்மாளும் அவர் மகனும் குடியிருந்தனர். அந்த ஸ்த்ரீ ஒரு ஹிந்து. விதவை. ஒரே மகனைத் தவிக்கவிட்டு திடீரென்று கிருஸ்துவ மதத்திற்குத் தாவினார். ஜாதி ஹிந்துக்கள் அந்தப் பையனையும் மதத்திலிருந்து விலக்கினர். நாயனாவைச் சந்தித்த பொழுது அந்தப் பையன் தன் நிலைமையைச் சொல்லி ஓவென்று கதறி அழுதான். நாயனா அவனைத் தேற்றினார். அதோடு நிறுத்தாமல் அவனுக்கு உபநயனம் செய்வித்தார். பின்னர் மந்திர ஜபம் உபாசித்து அவனது பாதையை மாற்றினார். ஜாதிமதக் கட்டுப்பாடுகள் கிடுக்கிப்பிடி போட்ட அந்தக் காலத்தில் ஊரே ஒதுக்கித் தள்ளிய ஒரு அனாதைப் பையனுக்கு புரட்சிகரமாக மறுவாழ்வு கொடுத்த தீரர் நாயனா.

1912 ஏப்ரல் மாதத்தின் நடுவில் நாயனாவும், விசாலாக்ஷியும் மஹாதேவரும் கோகர்ணம் வந்திறங்கினர். கோகர்ணத்திற்கு ஒரு புராணக் கதை உண்டு. சகரன் என்கிற மன்னாதி மன்னனின் புத்திரர்களால் கோகர்ணம் கடலில் மூழ்கடிக்கப்பட்டது. பின்னர் பரசுராமர் சமுத்திரராஜனை வடியும் படி கட்டளையிட்டார். கோகர்ணம் தண்ணீரிலிருந்து வெளியே வந்தது. பசுவின் காதுபோல (கோ + கர்ணம்) கடற்கரையிருக்குமிடத்தில் அமைந்துள்ள ஸ்தலம் கோகர்ணம்.
கோகர்ணக் கோயிலின் பிரதான கடவுளான மகாபலேஷ்வர் ஸ்கந்த பூர்வஜன் கணபதி பிரதிஷ்டை செய்த லிங்கம். சிறுவனாக வந்த கணேசன் கையில் இராவணன் கொடுத்த லிங்கம். கணபதிக்கும் விசாலாக்ஷியும் தவம் செய்யத் தோதாக ஒரு இடம் கிடைத்தது. கோயில் குருக்கள் தேஜோன்மயமான இரு தபஸ்விக்களைப் பார்த்துவிட்டு ஊரில் இருக்கும் வித்வத் நிரம்பிய பண்டிதர்களை அழைத்துக் காண்பித்தார்.
வேத வேதாந்தங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத் தெளிந்த நிறைய பண்டிதர்கள் கோகர்ணத்தில் வசித்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் ஹோஸமான் கணேச சாஸ்திரி என்பவர் இலவச வேதபாடசாலை ஒன்றை ஆரம்பித்து வேதசாஸ்திரங்களை வளர்த்தார். வித்யார்த்திகள் நிறைய பேர் வேதம் படித்தனர். கோகர்ண பண்டிதர்கள் பாரத தேசத்திலிருக்கும் ஏனைய பண்டிதர்களைக் காட்டிலும் வேத சாஸ்திரங்களில் ஒருபடி மேலானாவர்கள். அந்த கோஷ்டியும் பெரிது. வாசிஷ்ட கணபதி முனியைக் கண்டதும் கற்கும் ஆர்வத்தில் குதூகலம் அடைந்தார்கள். ஆனால் நாயனா தனது தவத்திற்கு இடையூறாக இருக்கும் என்று அவர்களை விட்டு ஒதுங்கினார்.
கணபதி சிரத்தையாய் தவத்திலிருக்கும் நாட்களில் ஒரு நாள் பாம்பேயிலிருந்து அனந்த சாஸ்திரி என்பவர் கோகர்ண வித்யா பீடத்திற்கு (வேத பாடசாலை) ஒரு லிகிதம் அனுப்பினார். ஒரு வாரத்திற்குள் கோகர்ணம் வந்து இறங்குவாராம். உபன்யாசங்கள் செய்வதற்கு ஏற்பாடாகவேண்டுமாம். அப்புறம் பண்டித கோஷ்டியிலிருந்து ஒருவர் புராண இலக்கியங்களில் அவருடன் தர்க்கவாதம் செய்யவேண்டும் என்கிற கடைசிக் குறிப்பு கோகர்ணவாசிகளுக்கு இடறியது.
கோகர்ண பண்டிதர்கள் அமைதி விரும்பிகள். நிறையக் கற்றுத் தேர்ந்தாலும் வாக்குவாதங்களில் ஈடுபடமாட்டார்கள். ஆனால் அனந்த சாஸ்திரி போட்டியாக அறிவித்ததால் யாரை அவர்கள் சார்பாக நியமிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் திரிகாலமும் ஜபதபங்களில் ஈடுபட்டு ஜொலித்துக்கொண்டிருந்த நாயனாவை பரிந்துரைத்தார்கள்.
“யாரந்த அனந்த சாஸ்திரி?”
“அவர் மஹா பண்டிதர். வாயைத் திறந்தாலே ஹாஸ்யம் ததும்பும். புராணம் மற்றும் சம்ஸ்க்ருத இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர்...”
நாயனாவின் ஒரு கேள்விக்கு மருண்டு போய் பத்து நிமிடங்களுக்கு நிறுத்தாமல் மூச்சு வாங்க பதிலுரைத்தார்கள்.
“எல்லாமே தெரியுமா?” நாயனா ஆச்சரியமாகக் கேட்டார்.
“அவரை ஜெயிக்க இந்த லோகத்தில் ஆளில்லை என்று மஹாராஷ்டிர பண்டிதர்கள் அலட்டிக்கொள்வார்கள். ஏகப்பட்ட இலக்கிய விசாரங்களில் பங்கு பெற்று பொன்னும் பொருளும் மலையெனக் குவித்தவர்...” அவரது பராக்கிரமங்களை அடுக்கிக்கொண்டே போனார்கள். நாயனா இதுவரை அனந்த சாஸ்திரியைப் பற்றிக் கேள்விப்பட்டது கிடையாது.
“சரி.. போட்டி நடைபெறும் நாளன்று சந்திக்கலாம். அதுவரை என்னை தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்கள். நன்றி”. எழுந்தார். கும்பிட்டார். விடுவிடுவென்று தவமியற்றக் கிளம்பிச் சென்றார்.
*
அனந்த சாஸ்திரியாருடன் விவாதம் நடக்கும் நாள். பண்டிதக் கூட்டம் முண்டியடித்துக்கொண்டு வித்யா பீடத்தின் வாசலில் நின்றது. நாயனா ஒரு வாரமாக கடுந்தவத்தில் ஈடுபட்டு தேகபலம் குன்றி ஆன்மபலம் பெருக்கி வந்திருந்தார். பார்வைக்கு சோர்வாக இருந்தாலும் பண்டிதத்தில் குறைவில்லாதவர் என்று அனந்த சாஸ்திரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
வழக்கமாக அனந்த சாஸ்திரிதான் விவாதத்தை ஆரம்பிப்பார். சைவமோ, வைஷ்ணவமோ அல்லது அத்வைதமோ ஒன்றை தேர்வு செய்து அமர்க்களமாகப் பேசுவார். அவர் பேசி முடித்தவுடன் எதிராளி மறுத்துப் பேச வேண்டும். மீண்டும் அவரது தரப்பு வாதங்களை முன்வைப்பார். எதிராளி மறுக்க.. இப்படியே விவாதம் வலுத்து நிறைவாகத் திறமைசாலிக்கு ஜெயம் கிட்டும். இம்முறையும் அனந்த சாஸ்திரியே ஆரம்பித்தார்.
அலட்சியமாக ”சிவனுக்கு நிகர் தெய்வமில்லை!... ம்.. ஆரம்பியும்... உமது எதிர் வாதத்தை....” என்று சொல்லிவிட்டுக் கனைத்துக்கொண்டார். கச்சேரி ஆரம்பமானது. கண்களில் ஆர்வம் கொப்பளிக்க அனைவரும் சுற்றி நின்று வேடிக்கைப் பார்த்தனர். நாயனா திருமாலே சர்வேஸ்வரன் என்று பேசப்போகிறார் என்று காத்திருந்தனர்.
நாயனா வேத மார்க்கம் செல்பவர். அவருக்கு ஆதியந்தம் எல்லாமே வேதம்தான். அதுவே பரம ஸ்ரேயஸானது.
“எந்த பண்டிதருமே வேதத்தை பிரமாணமாகக் கொள்ள வேண்டும். புராணங்களில் வரும் பல செய்திகள் முன்னுக்குப் பின் தொகுக்கப்பட்டிருக்கிறது. அவைகளை ஆதாரமாகக் கொண்டு விவாதிப்பது தீர்க்கமான முடிவுக்கு வழிவகுக்காது.” இந்த இடத்தில் ஒரு நிமிடம் நிறுத்தினார் நாயனா.
அனந்த சாஸ்திரிக்கு நாயனா என்ன பதில் சொல்லப்போகிறார் என்று புரியவில்லை. கூட்டம் ஆர்வத்தில் அலைமோதியது. வித்யாபீடத்தில் ”ஆஹா...சரஸ்வதியே கணபதி ரூபத்தில் இங்கே எழுந்தருளியிருக்கிறாள்” என்று வேதவித்துக்கள் சிலர் காதோடு காதாக பேசிக்கொண்டார்கள். ஒரு மிடறு தீர்த்தம் அருந்தினார் அனந்த சாஸ்திரி. அவை காத்திருந்தது.
“வேதங்களின் பிரகாரம் இந்திரனே பரமாத்மா! அவனே முழுமுதற் கடவுள்” என்று ஒரு போடுபோட்டார். ஜலம் அருந்திக்கொண்டிருந்த அனந்தசாஸ்திரிக்கு புரைஏறியது. பண்டிதர்கள் கூட்டம் சலசலத்தது. இதற்கு நாயனா கூறப்போகும் காரணம் என்ன என்று அனைவரும் காதைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தார்கள். நாயனா தொடர்ந்தார்...
“தேவர்களின் இந்திரனான தேவந்திரனின் இரு அம்சங்களாகவே சிவனும் விஷ்ணுவும் வேதங்களில் பாடப்பட்டிருக்கிறார்கள். அதன்படி சைவமும் வைஷ்ணவமும் முக்தி அடைய உதவும் சாதனமாக அதைத் தேடுவோர்க்கு சொல்லப்பட்டிருக்கிறது” என்று சொல்லிவிட்டு அனந்த சாஸ்திரியின் மறுமொழிக்குக் காத்திருந்தார் கணபதி.
அங்கே நிசப்தம் நிலவியது. மிதமான காற்று வீசியது. அனந்த சாஸ்திரிக்கு நாயனாவின் இந்த பதில் முற்றிலும் வித்தியாசமானக் கோணத்தில் அனுகப்பட்டிருக்கிறது என்பதில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார். எப்படியும் இதே ரீதியில் இந்த விவாதம் சென்றால் தன்னால் ஜெயிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டார். எழுந்து நின்றார். உத்தரீயத்தை இடுப்பில் சுற்றிக்கொண்டார். பவ்யமாகக் கை கூப்பினார்.
“ஸ்வாமி. என்னை மன்னியுங்கள். உங்களது புராண பாண்டித்தியமும் வேத வித்வத்தும் என்னிடம் லவலேசமும் இல்லை. நான் தோற்றுவிட்டதை மனமார ஒப்புக்கொள்கிறேன். என்னை நீங்கள் உங்கள் சிஷ்யனாக ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிக்கவேண்டும்”. நமஸ்கரித்தார்.
பண்டிதர்கள் ”கணபதிக்கு ஜே! நாயனாவுக்கு ஜே!!” என்று ஜெய கோஷங்கள் எழுப்பினார்கள். கோகர்ணர்கள் அனைவரும் தாங்களே வாதிட்டு ஜெயித்துவிட்டது போன்று கொண்டாடினார்கள். இறுமாப்புடன் திரிந்த அனந்த சாஸ்திரிக்கு பாடமும் புகட்டிய நாயனாவைப் போற்றினார்கள். அவரது பதிலில் பொதிந்திருந்த பொருளும் உண்மையும் வேதத்தின் மகிமையையும் அனாவசியமான மத பேதங்களைக் களைந்ததையும் எண்ணியெண்ணி வியந்தார்கள். அவரது பெருமையைப் பேசிக்கொண்டே வீட்டிற்கு கலைந்தார்கள்.
*
மஹா வித்யா பீடத்தில் நாயனா பெற்ற பிரசித்தியும் புகழும் பாராட்டும் அவரது தவத்திற்குத் தடையாய் அமைந்தது. ஸ்ரீமான்.வெங்கட்ராமன் வீட்டில் அவருக்கு தங்க ஏற்பாடாகி அவரிடம் அறிவுரை பெற அவ்வீட்டில் கூட்டம் அம்மியது. ஜ்யோதிஷம் பற்றி அவரிடம் கேட்டபோது அவர் வேதத்தின் கண்ணாகிய ஜ்யோதிஷத்தின் முக்கிய அங்கங்களை வகைப்படுத்தி பொருளுரைத்தார். அதை “லகு சம்ஹிதை” என்று தொகுத்துக்கொண்டார்கள்.
எந்நேரமும் அவரைப் பார்க்க மக்கள் குவிந்தார்கள். ஓய்வொழிச்சலே இல்லாமல் அனைவரது சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தார். நிறைய கலந்துரையாடல் செய்தார். ஒரு நாள் வேதங்களைப் பற்றி பேச்சு எழுந்தது. அப்போது ரிக் வேதத்தின் சில பாகங்கள் தனக்கு அறிமுகமாகவில்லை என்று தெரிந்துகொண்டார். உடனே ரிக்வேதிகளிடம் சென்று அதையும் கற்றுக்கொண்டார்.
அப்படிக் கற்றுக்கொண்ட பாகங்கள் ஸ்ரீமஹாபாரத நாயகனான ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றியது என்றவுடன் அவருக்கு இன்னும் ஆர்வம் கொப்பளித்தது. மஹாபாரத நாயகர்கள் பலரின் அஸ்திர வித்தைக்கு ஆதாரமாக இருப்பது ரிக்வேதத்தின் இந்த அங்கங்கள் என்று படித்துத் தீர்மானித்துக்கொண்டார். அதில் மூழ்க முடிவுசெய்தார். வேதத்தில் இதுபோன்று புதைந்திருக்கும் பொக்கிஷங்களை அங்கிருந்த வேத பண்டிதர்களிடம் கற்றுத் தெளிந்தார். அவரது வித்தை கற்கும் வேகத்தையும் ஆர்வத்தையும் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
வேதவரிகளின் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள மொத்த சூக்தத்தையும் எழுதி வைத்துக்கொண்டு அதில் உள்ளே இறங்கவேண்டும். ஒட்டுமொத்தமாக மனதை ஒருமுகப்படுத்தி யோகேஸ்வரனாய் அவ்வரிகளில் நிறுத்தவேண்டும். சம்பிரதாயமாக கடைப்பிடிக்கப்படும் சில சூக்தங்கள் மனுஷ்யர்களுக்கு ஆன்மிக ஒளியேற்ற வல்லவை. ஆகையால் ஒவ்வொரு சூக்தமாக எடுத்து எஞ்சியிருக்கும் சூக்தங்களோடு வைத்துப் பார்த்து ஆராய வேண்டும். அங்கிருந்த பண்டித சிரோன்மணிகளுக்கு மொத்த சூக்தத்தையும் மனதில் நிறுத்தி வேறு சூக்தஙக்ளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் திறமையில்லாததால் வாஷிஷ்ட கணபதி முனியே அதற்கு தகுதியானவர் என்று நிச்சயமாக நம்பினார்கள். நாயனாவினாலல்லவா சூட்சுமமாக சஞ்சரித்து வேதத்தின் ஹ்ருதயத்தை அடைய முடியும்!!
மேலை நாடுகளின் சாமியார்களுக்கு வேதத்தின் உட்பொருளும் கருப்பொருளும் மறைபொருளும் தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்களது மொழிபெயர்ப்பு வேதத்தின் புனிதத்தன்மையைக் கெடுத்தது. பாரத தேசத்திலிருந்து சிலரும் இந்த ஆங்கிலமாக்குதலில் ஈடுபட்டார்கள். வரிகளை அவரவர்களின் விருப்பத்திற்கும் புரிதலுக்கும் ஏற்ப வளைத்து கண்டபடி எழுதினார்கள். நட்சத்திர மண்டலத்தினைப் பற்றிய ஆராய்ச்சியில் எழுதிய நூல் என்றும், பூவுலக நன்மைகளைப் பெறும் பொருட்டும் ஆபத்துக்காலத்தில் ரட்சிக்கும் வரிகளாகவும் வேதத்தை வகைப்படுத்தினர்.
அனைத்து ஜீவராசிகளுக்கும் சதுர் வேதத்திற்கும் உயிர் ஹ்ருதயத்தில் இருக்கிறது. வேதாராய்ச்சி தவம் போன்றது. “நான் யார்” என்னும் ஆன்மத் தேடல் போன்றது. இந்த ஆராய்ச்சியைத் தொடரும் நிலையில் இப்போதிருக்கும் இடம் அவருக்கு அமையவில்லை. கோகர்ணத்திற்கு வெளியே ஜாகையை மாற்றினார். கஜானனா பட் என்பவர் நாயனாவிற்கு தனியாக வீடு ஒன்றை ஏற்பாடு செய்ய ஒப்புக்கொண்டார். விசாலாக்ஷியும் தவம் புரிய வற்புறுத்தினார்.
நாயனாவுக்கு கஜானனா பட் தன்னுடைய பூர்வ ஜென்மத்திலிருந்து பழக்கம் என்று ஏதோ உள்ளுணர்வுக்கு தட்டியது. கஜானனாவை சிஷ்யராக சேர்த்துக்கொண்டார். அன்றிலிருந்து கஜானனா அவருடைய கோத்திரப் பெயர் கொண்டு “தேவவிரதா” என்றழைக்கப்பட்டார்.
ஹோஸமான் கணேஷ் சாஸ்திரியின் மகன் தேவவிரதா. அவர்தான் கோகர்ணத்திலிருக்கும் மஹா வித்யா பீடத்தின் ஸ்தாபகர். தெய்வரதா ரிக். யஜுர், ஸாம வேதங்களில் விற்பன்னர். நாயனாவுடன் அவருக்கு ஏற்பட்ட பழக்கத்திற்குப் பின்னர் அவரை மஹா வித்யா பீடத்தின் தலைமையேற்கச் செய்தார்கள்.
தேவவிரதாவுக்குக் கணபதியின் வழிகாட்டுதல் வேத பாடங்களிலும் ஆன்மிகப் பயிற்சிக்கும் ஆதாராமாய் அமைந்தது. குருவிற்கு பகல் பொழுது முழுவதும் தொண்டு செய்தார். கணபதி போன்ற குரு அமைந்ததால் வேதங்களைப் பூரணமாக கற்றுத்தெளியும் பெரும் பேறு பெற்றார்.
அந்த வேத பாடசாலையின் பாடத்திட்டங்கள் நாயனாவால் சரிபார்க்கப்பட்டு மீண்டும் வகுப்பட்டது. வகைப்படுத்தப்பட்ட பாடங்களில்....

2 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமையான பகிர்வு.

மோகன்ஜி said...

ஆற்றொழுக்காய் நடை. தெளிவான விவரிப்பு. இன்றைய புலர்காலையில் புதுமலரால் பூஜை செய்த திருப்தி இதைப் படித்ததும் கொண்டேன். ஆசீர்வதிக்கப் பட்டவர்களுக்கே இந்தவிதமான எழுதுபொருள் வாய்க்கும். படிக்கவிடுபட்ட அத்தியாயங்களை படித்துவிட ஆவல் கொண்டேன். உங்கள் எழுத்தில் இது ஒரு முக்கிய திருப்பம்.. பாராட்டு... வாழ்த்து.. ஆசீர்வாதம்...

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails