Saturday, May 9, 2015

சேப்பாயி இல்லாத முதல் இரவு!

மணி ஏழே முக்கால். மத்திய கைலாஷ் அருகே இருள் பரவலாகக் கவிந்திருந்தது. பெரிது சிறிது நிழலாக நின்றிருந்தவர்களுக்கு மத்தியில் ”சென்னைக் காவல்” பேரிகேடுகளைப் போட்டு ஏனோ ரயிலடியின் பின் பக்கத்து வழியை அத்துக்காக மறித்திருந்தார்கள். அதைத் தாண்டி அஞ்சனை மைந்தனின் சாகசமாக நுழைந்தவுடன் மூலையில் ஒரு கவுண்ட்டர் முன்னே சின்ன வரிசை நெளிந்து நீண்டிருந்தது.

எல்லோரும் அணியாகத் தொடை தட்டி சங்கீதம் கேட்டு மகிழ்ச்சியாக இருப்பது கண்ணில்பட்டது. நெருங்க நெருங்க யார் காதுக்குள்ளும் ஒயர் ஓடவில்லை. ஒரு கெஸ். வயர்லெஸ்ஸில் ஸாங் கேட்கிறார்களோ? நானும் போய் அந்த ரசிகக்கூட்டத்தின் வாலில் ஒட்டிக்கொண்டேன். இரு நொடிகள் கூட கடந்திருக்காது, தொடையில் தன்னிச்சையாக தாளம் போட ஆரம்பித்தேன். ஓ... காதில்”ஞொய்....”யென்று ரீங்காரமிடும் கொசுவிற்கு தாளமிடுகிறோம் என்று புரிந்தது. ஆதிதாளம் முடித்து ரூபகம் ஆரம்பிப்பதற்குள் “வேளச்சேரி ஒண்ணு” என்று ஜன்னலுக்குள் கையைவிட்டேன் இன்னொரு கையால் தாளமிட்டபடியே. நீட்டிய பத்து ரூபாய் தாளுக்குக் கையில் அஞ்சு ரூபாய் காயினோடு ப.சீட்டுக் கொடுத்தார்.

ஓரமெங்கும் காவி படிந்திருக்கும் படியேறும் வழியில் பீச்சிற்கு வேளச்சேரிக்கு என்று அம்புக்குறியிட்டு மார்க்கம் காட்டியிருந்தார்கள். ”கஸ்தூர்பாநகர்” என்று எழுதியிருந்த ப்ளாட்ஃபாரப் பலகைக்கு அடியில் இருவர் குசுகுசுத்துக்கொண்டிருந்தனர். ஆங்.. இல்லையில்லை.. அந்த இருவருமே ஆண்கள். பிரளயம் முடிந்த பூமியாக ஸ்டேஷன் இருந்தது. இடதுபுறமிருந்து வலதுபுறம் திரும்பி பார்த்தால் பத்து இருபது தலைகள் சோர்வாக நகர்வது தெரிந்தது. பச்சை பர்மனெண்ட்டாக எரிந்துகொண்டிருந்தது. தூரத்தில் பறக்கும் ரயில் நடந்து வந்துகொண்டிருந்தது. நாற்பது பேர்கள் இறங்கினால் இருபது பயணிகள் ஏறினார்கள்.

இருக்கைகள் சில காலியாக இருந்தன. அந்தப் பொட்டி முழுவதும் “ஆட்கள் தேவை” நோட்டீஸ் ஆக்ரமித்திருந்தது. சாஃப்ட்வேர் கம்பெனி டெக் லீட் சம்பளத்தில் பகுதிநேர வேலைகள் இருப்பதாக ஆசைக் கொக்கி போட்டிருந்தார்கள். ”+2 போதும்” என்பதே ஹாஷ் டேக். பிஸினெஸ் லைனை புரட்டிக்கொண்டிருந்த பெரியவர் எதிர்த்தார்ப்போலிருந்த இருக்கைகளில் காலை நீட்டி அரை அனந்தசயன போஸில் இருந்தார். பக்கத்திலிருந்தவர் ஓரக்கண்ணால் ஓசிப்பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்.

“மச்சி... $%@$#@@” என்று சப்தம் வந்த திசையிலிருந்து ஒரு க்ரூப் என்னுடைய கெட்ட வார்த்தை அகராதியில் புதிய வார்த்தைகளைச் சேர்த்துப் புஷ்டியாக்கியது. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் தவறாமல் மின்தூக்கி வாசல் அம்பு பட்டனை பொதுஜனம் குத்திவிட்டு படியில் இறங்கியது. இரயில் ஸ்டேஷனைக் கடப்பதற்குள் காணாமல் போனார்கள். ஆனபெல் காஞ்சூரிங் பார்த்தவர்கள் தனியே நின்றால் பேதியாகும் தனிமை நிலையத்தைச் சூழ்ந்துகொண்டது. கார்ப்பரோட் கம்பெனிகளின் கோலோன் வாசனை போல சென்னையின் நகர வாசனை எல்லா நிலையங்களிலும் தாராளமாகப் பரவியிருந்தது. வேளச்சேரி தூரத்தில் மின் புள்ளிகளாய்த் தெரிய பொட்டியின் பாதிபேர் வாசலுக்கு சுறுசுறுப்பாக வந்து நின்று குதிக்க தயாரானார்கள். அனைவரையும் சேவித்து வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டேன்.

இரயில் நிற்பதற்குள் குதித்துக் கையில் கத்தியோடு கொலை செய்யது போல ஓடினார்கள். நிதானமாக நடந்து வந்துகொண்டிருந்தேன். பஸ்ஸா ஆட்டோவா என்று மனசு அலைபாய்ந்தது. ஓருடல் ஈருயிராக ஷேர் ஆட்டோவில் ஒருவர் ஏற்கனவே ட்ரைவர் பக்கத்தில் அமர்ந்திருந்தார். பக்கத்தில் வந்த என்னை கையைப் பிடித்து இழுக்காத குறையாக “பொன்னியம்மன் கோயில் பத்து ரூவா சார்...”. ஷேர் ஆட்டோவினுள் ஏறியபோது உள்ளே இருக்கும் கொலுப்படியில் முதுகில் மாட்டும் மூட்டையோடு ஒருவர் மொபைல் நோண்டிக்கொண்டிருந்தார். வாட்ஸ்ஸப் போலிருந்தது. டாஸ்மாக்கும் வாட்ஸப்பும் போதையேற்றும் லாகிரிவஸ்துக்கள்.

ஆட்டோ ட்ரைவர் நிலைகொள்ளாமல் தவித்தார். முன்னால் பார்த்தார். பின்னால் பார்த்தார். கொலுப்படிகளை நிறைக்குமளவிற்கு கிராக்கிகள் கிடைத்தால்தான் நகர்வார் என்பது நிச்சயம். பசி வயிற்றை பிராண்டியது. பாவக் களை ததும்பும் எங்கள் முகங்களைப் பார்த்து பத்து ரூபாய் செலவு செய்ய சிலர் முன்வந்தார்கள். கைவேலியில் கிளம்பிய ஷேர் ஆட்டோ வரிசையாய் அனைத்து பஸ் நிறுத்ததிலும் ஒவ்வொருவராக இறக்கிவிட்டார். ”சதாசிவ நகர்...” என்று ட்ரைவர் கூவி அழைத்து அந்த வாட்ஸாப் அடிமையை இறக்கும்வரை நிமிரவேயில்லை. நான் கடைசி ஸ்டாப். இறங்குவதற்கு நானூறு மீட்டர் முன்னர் பந்தாகத் துள்ளி ட்ரைவர் பக்கத்தில் ஹாக்கி பேட் போல ஒருவர் தொற்றிக்கொண்டார்.

“கடேசி ட்ரிப் தானே...” ஆர்வம் பொங்கக் கேட்டார்.

“ஆமாண்டா... துட்டு வச்சிருக்கியா?” கொஞ்சம் எரிச்சல் கலந்திருந்தது.

“சரக்குக்கு இல்லை... சைட் டிஷ்ஷுக்கு இருக்கு...” தூண்டில் போடும் தொணி.
“தூ.... $%^&#$... பேமானி... நேத்திக்கும் அதேதான சொன்ன... $#%^&*@#... எச்சி சரக்கு குடிக்கிறியே..” விளாசல்.

எந்நேரத்திலும் கைகலப்பாகிவிடும் அபாயம் இருந்தது. கெ. அகராதியில் இன்னும் ஒரு பிடி வார்த்தைகள் சேர்ந்துகொண்டது. இந்த நடையில் என்னையும் சேர்த்து ஆட்டோகாரருக்கு அறுபது ரூபாய் வருமானம். எத்தனை ட்ரிப் முடிந்தது என்று தெரியவில்லை. இறங்கி முக்கு வரையில் நடந்து வந்துவிட்டேன். ஆட்டோ நிலவரம் தெரிய திரும்பினேன். ட்ரைவர் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் இறங்கி ஜர்தாகடை வாசலில் நின்றிருந்தார். டாஸ்மாக்குக்கு போவாரா மாட்டாரா என்று தெரிந்துகொண்டால்தான் நிம்மதியாக டின்னர் சாப்பிடமுடியும் என்ற உந்துதலால் அன்னநடை நடந்தேன். பத்து அடிக்கு இரண்டு முறை திரும்பினேன். மூன்றாவது தடவை பார்க்கும் போது..... வேறோரு ஆட்டோவின் ட்ரைவர் சீட்டை நட்புடன் பகிர்ந்திருந்தார். கண்களில் வாட்ஸாப் பார்க்கும் ஆர்வம் கொதித்துக்கொண்டிருந்தது. வாட்ஸாப்பா? சாரி.. டாஸ்மாக் பார்க்கும் ஆர்வம் நிலைகுத்தியிருந்தது.

**

சென்ற ஞாயிறன்று சைதாப்பேட்டை அருகில் அடிபட்ட எனது சேப்பாயியை (கார்) அட்மிட் செய்யும்படி ஆனதால் நேற்று இரவு என்னுடைய பொதுஜன போக்குவரத்து அனுபவம்! தலைப்பை தப்பர்த்தம் பண்ணிக்கொள்ளக்கூடாது என்று உஷார்படுத்த எழுதிய பிற்சேர்க்கைப் பாரா இது.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails