Saturday, May 9, 2015

பிஷ்கட்

”வெங்கடசுப்ரமண்யம்....”

தீனமாகவும் தீர்க்கமாகவும் ஒரு குரல். கார்க் கதவை மூடிவிட்டு குரல் வந்த திசைக்கு பார்வையைத் துரத்தினேன். எதிர் வீட்டு ரங்கநாத தாத்தா வாசல் க்ரில் கதவில் சாய்ந்து நின்றிருந்தார். டீக்காக ட்ரெஸ் செய்துகொண்டு ”எப்படியிருக்கேள்....” என்று மிடுக்கு நடை போட்டவர். அப்புறம் வாக்கிங் ஸ்டிக்கில் தார்ரோட்டைத் ”டக்...டக்”கி சைகையிலேயே சௌக்கியமா கேட்டுநடந்தார். இப்போது க்ரில் கேட்தான் எல்லை. தாண்டுவதில்லை. ”முடியலை.... கொண்டு போய் தள்றது...” என்று சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நாள் விரக்தியாக சிரித்துக்கொண்டே சொன்னார்.

“சொல்லுங்கோ...”

“இந்த பிஷ்கட்லாம் வேணும். மேலே இருக்கிற நம்பரைக் கூப்ட்டா ஆத்துக்கே வந்து தந்துடுவன்.. கேன் தண்ணி போடறவந்தான்..” பேசும் போது வார்த்தைக்கு வார்த்தை கர்..கர்...கர்...கர்ரென்று நெஞ்சு சளி ஸ்ருதிப் பொட்டி போல இழுத்தது. கையில் கொடுத்த கசங்கிய ரூல்டு பேப்பரில் மாரி கோல்ட் 1, ஹார்லிக்ஸ் பிக் 1, ந்யூட்ரி சாய்ஸ் 1, ஒரு பாக்கெட் வேர்க்கடலை, பனாமா ப்ளேடு 1, ஒரு பெரிய சாஷே தே.எண்ணெய், ஹமாம் சோப்பு 1 இப்படி ஒரு குட்டி லிஸ்ட்.

984xxxxxx...நம்பரில் கூப்பிட்டேன். “கடைல ஆளில்லைங்க... ஆறு மணிக்கு மேலே வாரேன்னு சொல்லுங்க...”. டொக்.

“கடையில ஆளில்லையாம்..”

“ஆளில்லையா?.... சரி...” குரல் ஃபேட் அவுட் ஆகி தேய்ந்தது. 

“நான் போய் வாங்கிண்டு வரேன்.. நோ ப்ராப்ளம்...”

“சிரமம் வேண்டாம். ஆத்துல யாருமில்லை அதான்....”

பசிக்கிறதோ என்னமோ? “பரவாயில்லை.. போய்ட்டு வரேன்....” 

லிஸ்ட்டைக் கொடுத்து ஒவ்வொரு சாமானாக வாங்கிக்கொண்டிருந்தால், கடைக்கு ஆள் வந்துவிட்டது. 

“சார்.. தாத்தாவுக்கு நானே கொண்டு போய் கொடுத்திடறேன்.. நீங்க போய்ட்டுவாங்க...”

*
ஆஞ்சுவைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. நங்கநல்லூர் ஆதிவ்யாதி ஹர ஸ்ரீ பக்தாஞ்சநேயர். சன்னிதி சார்த்தியிருந்தது. குப்பென்று கிளம்பிய துளசி வாசம் பக்தி டோஸ் ஏற்றியது. சாயரக்ஷை நடந்துகொண்டிருந்தது. நடை திறக்காமல் வீடு கிளம்பும் அவசரக்காரர்களுக்கு கொண்டக்கடலை சுண்டல் விநியோகம் நடந்தது. ”ஸ்ரீராம ராம ராமேதி.. ரமே ராமே மனோரமே....” என்று கோதண்டராமரைத் தரிசித்துக்கொண்டு மூலவர் தரிசனத்துக்காக காத்திருந்தோம். “முதுகு பிடிச்சிண்டிடும்...அப்பாட்டேர்ந்து இறங்குடி.. இறங்கு...” என்று கேஜி படிக்கும் பெண்ணை இழுத்து... ஒரு பத்து நிமிஷத்திற்கு “முதுகு பிடிச்சிண்டிடும்....பாப்பா சொன்னாக்கேளு.. ப்பா சொன்னாக் கேளுங்கோ...”தான் திரும்பத் திரும்ப ராமஜபம். நான்கு பக்தர்கள் இடைவெளியில் தாண்டி பத்திரமாக நின்றுகொண்டேன். அப்பாவும் பெண்ணும் சொன்னதைக் கேட்டார்களா என்று அறியும் அல்ப ஆர்வம் தொத்தியிருந்தது. கட்டுப்படுத்தி ”புத்திர்பலம் யசோதைர்யம் நிர்ப....ஹனுமத் ஸ்மராணாத் பவேது”. மனசு ரிப்பீட் மோடில் மந்திரம் ஜெபித்தது.

நாகசுரம் கோயிலை பூரணமாக நிறைத்தது. மல்லாரியில் அடுக்கு தீபார்த்தி முடிந்து கிளம்பியாயிற்று. வேணுகோபாலன் சன்னிதியில் தீர்த்தம் வாங்கிக்கொண்டு ஓட்டைக்குள் ஒளித்திருந்த சுகந்த குங்குமத்தை மோதிர விரலால் நோண்டி எடுத்து இட்டுக்கொண்டு பிரசாதம் இடத்திற்கு வந்தால் இன்னமும் கொ.சுண்டல்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஆளுக்கு முப்பது கடலை. பிஞ்சுக் கைக்கு பதினஞ்சு. வெளியே வந்து கையலம்பிக்கொண்டு வீட்டிற்கு நகர்ந்தோம். 

பூணூல், வடாம், ஊதுபத்தி ஒரு தாத்தா விற்றுக்கொண்டிருந்தார். தலை நரைத்து ரங்கநாத தாத்தா சாயலில் இருந்தார். தேகபலம் கொஞ்சம் இருந்தது அவர் கடை விரித்திருந்த விதத்தில் புரிந்தது. பிஷ்கட் சாப்பிடுவாரா என்று கேட்க ஆசையாயிருந்தது. அங்கே தாத்தாவுக்கு பிஷ்கட் வந்திருக்குமா? பரபரத்து சேப்பாயியை விரட்டினேன்.

ஷட்டருக்குள் வண்டியை விடுவதற்குள் நேராகப் பார்த்தேன். கீழ்ப்படி டஸ்ட்பின்னருகில் மஞ்சமசேரென்று மேரி கோல்ட் ராப்பர் கிழிந்து கிடந்தது. 

பரம திருப்தி.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails