Saturday, May 9, 2015

தினமணி ஜங்ஷன்

காந்திஜியைப் பார்ப்பதற்கு பெரிய இடத்துப் பெண்மணிகள் சிலர் வருகிறார்கள். காந்திஜி பெரிய தலைவர்களுடன் ஒரு முக்கியமான விவாதத்தில் இருக்கிறார். நடராஜும் அவரது நண்பரும் காவல் பணியில் இருக்கிறார்கள். இவர்கள் தடுக்க அவர்கள் திமிற சலசலப்பாகிவிடுகிறது. சாயந்திரம் காந்திஜி அவர்களிடம் “ஸ்த்ரிகளிடம் உங்கள் வீரம் பலிக்கவில்லையா?” என்று சிரிக்கிறார். ”நாங்கள் என்ன செய்திருக்கவேண்டும்?” என்று கேட்ட நடராஜிடம் எல்லாவற்றுக்கும் அஹிம்சையில் வழி இருக்கிறது என்கிறார் பாபுஜி. அஹிம்சையில் என்னவாக இருக்கும் என்று மோட்டுவளையைப் பார்க்கிறீர்களா? பாபுஜி சொல்வதைக் கேளுங்கள்.

“எங்களை மிதித்துக்கொண்டு செல்லுங்கள் என்று தரையில் படுத்திருக்கவேண்டும்” என்று தீர்வு சொல்கிறாராம் காந்திஜி. சுருக்கென்று தைக்கும் காட்சி. ந. சிதம்பர சுப்ரமணியன் எழுதிய மண்ணில் தெரியுது வானம் என்கிற நாவலில் வருகிறதாம்.

Charu Nivedita தினமணி இணையதளத்தில் எழுதிவரும் பழுப்புநிறப் பக்கங்களின் லேட்டஸ்ட் அத்தியாயம். ஸ்மார்ட்ஃபோன் திரையளவு எழுதிப் படித்து இயங்கிவரும் இந்த வாட்ஸ்ஸப் உலகில் மறந்துபோன தமிழ் இலக்கியவாதிகளைப் பற்றி எழுதிவரும் முக்கிய தொடர் இது. இத்தொடர் எழுதவதற்கு தான் படும் கஷ்டங்களை எழுதும் சாரு இந்த நாவலைப் படித்த பிறகு முண்டு தட்டி முஷ்டி மடக்க மாட்டேன் என்கிறார். எவரையும் அஹிம்சாவாதியாக்கும் சாதனமாக இந்த நாவல் பயன்படும் என்பது சர்வ நிச்சயமாம்.

http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/

*
டெல் அவிவ் நகரத்தின் வடிவமைப்பு காஞ்சிபுரத்தின் அடிப்படையில் அமைந்தது என்பது ஆச்சரியமான விஷயம். இங்கே கோயில் அங்கே பூங்காக்கள். பேட்ரிக் ஹெடிஸ் polymath. பல்துறை வித்தகர். மேதை. இவர் காஞ்சிபுரத்தை தெருத் தெருவாக படம் பிடித்து ஆராய்ச்சிசெய்தாராம். டெல் அவிவ் நகரத்தை வடிவமைக்க இவரைத்தான் கேட்டுக்கொண்டார்களாம். ஒரு ஊருக்கும் அதில் வசிக்கும் மக்களுக்குமானது உயிரியல் தொடர்பு என்கிறார் ஹெடிஸ். காவிரிக்கரையோர கும்மோணதஞ்சை ஜில்லாக்காரர்கள், இன்னும் மன்னார்குடியர்கள் என்றால் ஒரு படி மேலாக எனக்குள் ஒரு ஈர்ப்பு வருவது இந்த உயிரியல் தொடர்பிலிருக்கலாம்.

தேர்த்திருவிழாக்கள் வீதிகளைப் பேணுவதில் முக்கிய பங்காற்றுகிறது. இயல்பாகவே ஆக்கிரமிப்புகள் இல்லாமல் இருக்கிறது. ஹெடிஸின் முக்கியமான ஒரு கருத்து “தெருக்கள் ஆங்காங்கே ஒரு மர நிழலில் முடிந்து அங்கிருந்து மீண்டும் தொடங்க வேண்டும். மரத்தடியில் ஒரு சிறிய தெய்வச் சிலை இருக்கட்டும். அங்கே, பெண்கள் கூடிப் பேசவும், குழந்தைகள் இணைந்து விளையாடவும் ஒரு வெளி தேவை.” இன்னமும் சில கிராமத்துத் தெருக்களின் அமைப்பு இப்படியிருப்பதைப் பார்க்கிறோம்.

இது போன்ற அரிய விஷயங்களைத் தாங்கி வருகிறது அரவிந்தன் நீலகண்டன் Aravindan Neelakandan எழுதும் “அறிதலின் எல்லையில்...” தொடர். அநீயின் அகோர உழைப்பு தெரிகிறது. இதுவும் தினமணி இணையதளத்தில்.
இதில் ராதாகமல் முகர்ஜி என்பவர் மனித குலமும் இயற்கையும் பின்னிப் பிணையும் அத்தியாவசியத்தை வலியுறுத்தி the web of life என்று எழுதியதை அநீ கொடுத்திருக்கிறார்.

“ஒரு அத்தி மரத்துக்கும் மண்புழுவுக்கும் எலிக்கும் பறவைக்கும் ஒன்றுடன் ஒன்று பல இணைப்புகள் உள்ளன. அவை, மானுட சமூகப் பொருளாதாரம் எனும் நிலையை வந்தடைய, இன்னும் மிக அதிகமான இன்னும் நுண்ணியத் தன்மை கொண்ட இணைப்புகளாக ஆகின்றன. மனிதன் தன் அறியாமையாலும் சுயநலத்தாலும் இந்த இணைப்புகளால் நெய்யப்பட்ட வலையிலிருந்து தன்னை அறுத்துக்கொண்டு நிற்கின்றான். ஆனால், உண்மையான சமூக முன்னேற்றம் என்பது தன்னுணர்வுடன் உணர்ந்து, மேன்மேலும் அருமையாக இயற்கையையும் சமூகத்தையும் ஒன்றோடொன்று ஒற்றுமையுடனும் ஒருங்கிணைப்புடனும் இசைவுபடுத்துவதுதான். ...உயிர் வலைப்பின்னல் (the web of life) குறித்த அறிதலும், அதனிடம் நாம் காட்டும் மரியாதையுமே மனிதனை அவனது ஆகச்சிறந்த விதிக்கு கொண்டு சேர்க்கும்”. இது 1930ல் எழுதப்பட்டதாம். இக்காலத்திற்கும் பொருந்துகிறதே!
http://www.dinamani.com/junction/arithalin-ellaiyil/
*
அன்புடை நெஞ்சம் என்பது தலைப்பு. என். சொக்கன் சொக்க வைக்கிறார். கபிலர், கம்பன், நற்றிணை நல்விளக்கனார், குறுந்தொகை வெண்பூதனார் என்று சகலரையும் இழுத்து பத்தியில் நிறுத்துகிறார். படிக்கப் படிக்க இனிக்கிறது. தமிழ் கொஞ்சுகிறது. இவரது பத்திகளில் உள்ள சிறப்பு என்னவென்றால் இக்கால “டமில்” பேசும் யூத்துகளைக் கவரும் வண்ணம் இருக்கும் மொழிநடை. காதல் டிப்ஸ்களாகவும் இந்த columnம்மைப் பாவிக்கலாம்.

சினிமாப் பாடல்களில் வரும் காதல் வரிகளுக்கும் காட்சிகளுக்குமான வரிமூலத்தை செவ்விலக்கியங்களிலிருந்துப் பிடித்துக்கொண்டு வந்து வாசகர்களுக்குக் காட்டுகிறார். செம்புலப் பெயல் நீராக அன்புடை நெஞ்சம் கலக்க தயாராகும் மக்களுக்காக சில வரிகளை இங்கே தருகிறேன்.

களவுக் காதலிலிருந்து கற்புக் காதலுக்கு ப்ரமோட் ஆகவேண்டுமாம். களவுக்காதல் கல்யாணம் செய்துகொள்ளாமல் ரகசியமாகச் சந்தித்து காதலிப்பது. கற்புக் காதல் கல்யாணம் செய்துகொண்டு காதலிப்பது.

இப்படியாக பக்கம் முழுக்க காதல் பேசும் அவரது பத்தியிலிருந்து சில பாராக்கள்.

‘பகல் முழுக்க அந்தத் தாமரைப்பூ வெய்யில்ல நிக்கும், எல்லா வெப்பத்தையும் வாங்கிக்கும். சாயந்திரம் சூரியன் மறைஞ்சதும், அப்படியே குவிஞ்சு மூடிக்கும், மறுநாள் காலையில சூரியன் வர்றவரைக்கும், அந்த வெய்யிலைத் தனக்குள்ளே பூட்டி வெச்சுக்கும். மொத்த உலகமும் குளிரோட இருந்தாலும், அந்தத் தாமரைக்குள்ள மட்டும் வெப்பம் இருக்கும்’.

‘அதுபோல, குளிர்காலத்துல எனக்கு அவ வெப்பம் தருவா, வெயில்காலத்துல குளிர்ச்சி தருவா.’

மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியில்
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப
வேனிலானே தண்ணியள் பனியே
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐஎன
அலங்கு வெயில் பொதிந்த தாமரை
உள்ளகத்து அன்ன சிறுவெம்மையளே!
இந்தச் சந்தனத்துக்குக் காதலில் இன்னொரு சிறப்பும் உண்டு. அன்றைய காதலர்கள் இரவு நேரத்தில் காதலியைச் சந்திக்க வரும்போது, சந்தனம் பூசிக்கொண்டுதான் வருவார்களாம். அது ஒரு குறிப்பு.

‘சந்தன மார்பிலே
குங்குமம் சேர்ந்ததே’
என்று இளையராஜா ஒரு பாடலில் எழுதியிருப்பார். அவன் பூசியிருக்கிற சந்தனத்தில், அவளுடைய குங்குமம் சேர்கிற காட்சி அது.

நெற்றிக் குங்குமமா?
இல்லை, பெண்கள் மார்பில் குங்குமம் பூசுவார்களாம். ஆணைத் தழுவும்போது, அவன் தோளில் இருக்கிற சந்தனத்தோடு அவள் மார்பில் இருக்கிற குங்குமம் சேரும். கம்பராமாயணத்தில் ஒரு பாடல் இதை மிக அழகாக வர்ணிக்கிறது:

ஏழையர்
துணை முலைக் குங்குமச் சுவடும், ஆடவர்
மணி வரைப் புயத்து மென் சாந்தும் மாழ்கி...
இங்கே ‘ஏழையர்’ என்றால் பெண்கள், அவர்களுடைய மார்பகங்களில் பூசிக்கொண்டிருந்த குங்குமச் சுவடும், ஆண்கள் தங்களுடைய தோள்களில் பூசியிருந்த சந்தனமும் கலக்கிறது!

http://www.dinamani.com/junction/anbudai-nenjam/
தினமணி இணைய தளத்தில் ஜங்ஷன் என்கிற பகுதியை நிறுவி பல எழுத்தாளர்களை இழுத்த Partha Sarathyயின் பங்கு பெரிது. பாராட்டத்தக்கது.
வீதிகளின் வாழ்க்கையைப் படம் பிடிக்கும் EraMurukan Ramasami அவர்களின் தொடர் ஒன்றும் இந்த மே முதல் வாரத்திலிருந்து தினமணி ஜங்ஷனில்....

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails