Saturday, May 9, 2015

இரு இழப்புகள்

எல்லோரும் எழுதித் தீர்த்துவிட்டார்கள். அஞ்சலி எழுதியே படிக்கறவனுக்கு அஞ்சலி செய்துடுவானுங்கப்பான்னு நாலு பேர் ’ப்ச்’ கொட்டி ”ஸ்...ப்பா...” என்று மெய்வருத்தம் கொண்டு சலித்துக்கொள்வார்களேன்னு நடுக்கம் இருந்தது. அப்படியானும் ”நானும் ரௌடிதான்” ரேஞ்சில் நீயும் எழுதணுமா என்கிற கேள்வி காலையிலிருந்தே காதுகளில் ”ஞொய்...”யென்று ரீங்காரமிட்டபடியே இருந்தது. என் சோதரியின் க்ளாஸ்மேட் கண்ணன் வாட்ஸாப்பில் ”ஜேகேவுக்கு எழுதலையா?” அதிசயத்து வினவினார். 

ஃபேஸ்புக்கில் பக்கம் பக்கமாக மரியாதை செய்திருக்கிறார்கள். பெரும் எழுத்தாளர்கள் சிகரத்தில் வைத்துக் கொண்டாடிய எழுத்தாளர் ஜேகே. “அவள் அப்படித்தான்...” “ஒரு மனிதன்; ஒரு வீடு; ஒரு உலகம்” என்று சின்ன வட்டமிட்டு அவரை அதில் அடக்கிவிடமுடியாது. இளைய தலைமுறையினருக்கு (நானும் ஓல்டல்ல!) ஜேகே கொஞ்சம் கடினமாக இருக்கலாம். பலா மாதிரி கொஞ்சம் உரித்துப் பார்த்தால் சுளையான படைப்புகளில் தேன் சுவை. பிரபஞ்சன் “இவர்கள் இப்படித்தான்”னில் “கடாவுக்கு நிகராகுமா?”ன்னு சிலாகித்த ஜேகேவைதான் முதல் முறை பார்த்தாராம். இரண்டாவது சந்திப்பில் “ஒரு கதை எதற்காக எழுதவேண்டும்?” என்ற ஜேகேவின் அறிவினாவிற்கு தான் சரமாரியாகச் சொன்ன பதில்களைப் பட்டியலிட்டு கடைசியில் “ஒரு சந்தோஷம் கிடைக்கிறதே.. அதற்காகவும்தான்” என்றதும் முகம் மலர்ந்து “அதை முதலில் சொல்லுங்கள்...” என்றாராம். வாஸ்தவம்தானே!

”மகனே..” என்று கூப்பிட்ட ஒரு கடைத்தெரு அப்பாவைப் பார்த்ததும் ஹென்றியின் அப்பவாகவும், கூலி வேலை செய்பவர்கள் கூட்டு ரோட்டில் எச்சில் துப்பி காலால் மணலைத் தள்ளும் போது கிருஷ்ணாராஜபுரம் பஸ் நிலையத்தில் நிற்பது போலவும் உணரவைத்தது ஜேகே. ”வாழ்வதும் வீழ்வதும் கண்ணீர் விடுவதும் துக்கப்படுவதும் மனிதர்களுக்கு மட்டுமா சொந்தம்? இல்லை. வாழ்க்கை சகல ஜீவன்களையும் அபேதமாகத்தான் போஷிக்கிறது.” தெரு முக்கில் அழுத நாய் மேற்படி வரிகளை இழுத்துவந்தது. இப்படி மாதிரிகளை அடுக்க ஆரம்பித்தால் ஆயிரமாயிரம் வரிகள் எழுதி மீண்டும் ஒருமுறை ஜேகேவின் கதைகளை மறுபதிவு செய்யுமளவிற்கு நேரமும் இல்லை. அவசியமும் இல்லை. முதிர்ந்த வாசகர்கள் கொண்டாடும் கலைஞன் அவர். அமரத்துவம் வாய்ந்த படைப்புகளால் நம்மிடையே வாழ்வார். 

**

திருச்சி விவிதபாரதியில் காலை ஆறரை மணிக்கு பாமாலை ஓய்ந்தவுடன் ஐராவத வண்ணத்தில் ஹாலில் நடுநாயகமாக வீற்றிருக்கும் அந்த “ஷார்ப்”. அடுத்து ”சஷ்டியை நோக்கச் சரவணபவனார்...” பாடிய கையோடு வெள்ளை கலர் கேசட்டை ஒன்றை விழுங்கும். ஆரம்ப “ஸ்....ஸ்..ஸ்...”க்குப் பிறகு கணீரென்று ஒரு குரல் பிசிறில்லாமல் ஆரம்பிக்கும். அதைக் கேட்பதில் மதம் தடையில்லை. இசை கேட்கும் ஆர்வமே பிரதானம். அவரது பாடல்களில் இருக்கும் பின்னணி ”ஜல்..ஜல்..சில்..சில்...”ல் பிள்ளைப்பருவத்தில் ஒரு அலாதியான மோகமும் ஈர்ப்பும் இருந்தது. 

“வள்ளல்நபி மடி தவழ்ந்த நன்மணிகள்...நல்ல வாஞ்சைமிகு ஃபாத்திமாவின் கண்மணிகள்....” எனக்கு மிகவும் பிடிக்கும். ஜனாப். ஹனீஃபாவின் குரலில் மனிதர்களை மயக்கும் ஒரு வசியம் உண்டு. இளையராஜாவின் செம்பருத்தியில் “கடலுல எழும்புற அலைகளைக் கேளடி..ஓ....மானே...”யில் கம்பீரமான குரலில் கோந்து போல ஒட்டிக்கொண்டு வடியும் சோகம் பார்வையாளனைக் கரைக்கும் வல்லமை வாய்ந்தது. பின்னர் பாடலை மட்டும் கேட்கும்போது கைலியோடு ஹனீஃபா கண்முன் வந்து போனார். எங்கள் ஏரியா மனிதர். அவரது “இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்வதில்லை...”யைப் பாடி பலர் பல மேடைகளில் பரிசில் பெற்றுள்ளார்கள்.

அவன் இல்லையென்று சொல்லாமல் ஈ.எம். ஹனீஃபாவுக்கு அருளியிருந்தான். இன்னும் கொஞ்சம் பொறுமையாக இந்தப் பொக்கிஷத்தை அழைத்துக்கொண்டிருக்கலாம். ஹனீஃபாவுக்கு செய்யும் அஞ்சலியாக கடந்த அரை மணி நேரமாக “இறைவனிடம் கையேந்திக்கொண்டிருக்கிறேன்...”. ரிப்பீட்டில்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails