Saturday, May 9, 2015

ரவுடி ரத்தோர்

பொழுதோடு வீட்டிற்கு வந்தது மகா பிசகு. விஜய்யில் ரவுடி ரத்தோர்னு ஒரு படம். கண்ணை மூடவிடாமல் வெறி கொண்ட சிங்கமாய் ஹால்ல ஓடிக்கிட்டிருக்கு. காசுக்குப் பிடிச்ச கேடாய், பொழுதுபோகாம “ஒரு கரம் மசாலா படம் எடுப்போமா?”ன்னு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வாசல்ல இருக்கும் பங்க் கடையில் பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டு ஸ்டோரி டிஸ்கஸ் செய்து எடுத்திருக்கிறார்கள். நாசரை நாசப்படுத்தியிருக்காங்க. அக்ஷய் குமார் தூக்கத்திலும் நேர்மை ஜொலிக்கும் போலீஸாய் வருகிறார். காக்கியைக் கழட்டிவிட்டு அவரே ரௌடியாகவும் நடிக்கிறார். இரட்டை வேடம். படம் நிறையா பல தேஜஸில் ஹிந்தி முகங்கள். மூன்று பெண்கள் கண்றாவியாக அங்க சேஷ்டைகள் செய்யும் ஒரு குத்துப் பாட்டு ஹிந்தியிலயே வந்தது. மிச்ச வசனங்கள் தமிழில்.

படம் எடுத்த டைரக்டர் எடிட்டிங் ரீரெக்கார்டிங் ஆனபிறகு இந்தப் படத்தைப் ஒரே மூச்சில் பார்த்தாரா? அப்படி பார்த்திருந்தால் இதை ரிலீஸ் செய்யும் பாவ காரியத்தில் ஈடுபட்டிருக்கமாட்டார். கருடபுராணத்தில் ஜிம்பிபாகம் என்று ஒரு தண்டனை வருகிறது. அதாகப்பட்டது இப்படி படமெடுத்து துன்புறுத்தியவர்களை நரகத்தில் ஒரு தியேட்டரில் சீட்டோடு சீட்டாகக் கட்டிப்போட்டு இதே படத்தை காலையிலிருந்து இரவு வரை (இண்டெர்வல் கிடையாது) ஒரு மண்டலம் போடுவார்கள். எண்ணெய்ச் சட்டியில் போட்டுப் பொறிக்கவோ, கை கால் விரல் நகங்களைப் பிடுங்கவோ வேண்டாம். சித்ரவதையின் உச்சம்.

ஹீரோயினாக வரும் திருமுகத்தை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கேன்னு மூளையைக் கசக்கினேன். பருவ வயதில் மன்னையில் பார்த்த முகங்களிலிருந்து இன்று வரை ந்யூரான்களில் தங்கிய முகங்களை போர்ட்ரெய்ட் போர்ட்ரெய்ட்டாக அலசினேன். அப்புறம்தான் இது சமீபத்தில் சூப்பர் ஸ்டாருடன் ஓடியாடிய வடக்கத்திய பெண் என்று பொறி தட்டியது.

இது பிரபு தேவா டைரக்ட் செய்த படமாம். இது என்ன விபரீத முயற்சி?

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails