Saturday, May 9, 2015

மன்னார்குடி டேஸ் - சேரங்குளம் கிரிக்கெட்

மன்னையில் பொங்கலோடு பசுநெய்யாய் சேர்ந்த இன்னொரு விஷயம் சேரங்குளம் கிரிக்கெட் டோர்ணமென்ட். சிறிய திருவடி ஆஞ்சநேயர் கதாயுதம் போல பேட்டைத் தோளில் சார்த்திக்கொண்டு மேட்சுக்குக் கிளம்புவோம். முத்துப்பேட்டை ரோட்டோரம் செல்லும் ஆற்றங்கரைக் கரையில் சைக்கிளில் பேரணி போல சேரங்குளத்தை நோக்கிப் படையெடுப்போம். நடுவில் வரும் மயானத்தில் ப்ரேதம் எரிந்தால் சுப சகுனம். வெற்றி நிச்சயம். கையில் கண்டங்கத்திரி கட்டிக்கொண்டு அபரகாரியமாக யாராவது அஸ்தியில் எலும்பு பொறுக்கிக்கொண்டிருந்தால் மேட்ச் இழுபறி. இது சுசானக்கரை ஆரூடம்.

ஆற்றைக் கடக்க ஒரு சைக்கிள் பாலம் வரும். எதிர்த்தார்போல ஈர்க்குச்சியாய் யாராவது நடந்து வந்தால் கூட ஆற்றுக்குள் குதிக்கவேண்டும் இல்லையென்றால் சர்வ மரியாதையாக பின்னால் திரும்பவேண்டும். பெர்ண்டாட் ஷாவுக்கு யாரோ அனானி சொன்ன “முட்டாள்களுக்கு நான் வழிவிடுவதில்லை...” போன்ற டயலாக்குகள் எடுபடாது. அதில் ஏறி அக்கரையடைந்தால் சேரங்குளம். அங்கிருக்கும் பெருமாள் கோயிலுக்கெல்லாம் எட்டிப் பார்த்ததில்லை. மேட்ச்சே குறி. ஜெயிப்பதே பிரதானம். நேரே ஸ்கூல் க்ரௌண்ட். பெவிலியன் மரத்தடியில் ஸ்கூல் பென்ச்சை இழுத்துப்போட்டு உட்கார்ந்திருக்கும் ஸ்கோரர். வேஷ்டியிலோ முழுக்கால்சட்டையிலோ அவரவர் சௌகரியத்துக்கு அணிந்து கொண்டு உள்ளூர் அம்ப்யர்கள். ஹெச்சிசி என்று நாமகரணம் சூட்டப்பெற்ற எங்கள் ஹரித்ராநதி கிரிக்கெட் க்ளப் மன்னையில் பிரசித்தி பெற்ற டீம். அணியினரை லிஸ்ட் பண்ணலாம் என்றால் எஃப்பியிலேயே Rajagopalan Regupathy Rajagopalan Rengarajan AR Ramesh Kannan என்று ப்ளேயர்கள் தேறுகிறார்கள். இன்னொரு போஸ்ட்டில் எங்கள் டீமோடு கிரிக்கெட் விளையாடலாம்.

சேரங்குளம் பார்த்தா மாமாவுக்கு க்ரிக்கெட் வெறி. வேஷ்டியில் பௌண்ட்ரி லைனில் ஃபீல்டிங் போல ஏதோ செய்வார். மெனக்கெட்டு பந்து வராத திசையில் அவரை நிறுத்திவைத்தால் சோதனையாக பேட்டின் எட்ஜில் பட்டு அங்கே பாய்ந்து வரும். குனிவதற்கு கொஞ்சம் சிரமம். முதுகு பிடித்துக்கொள்ளுமோ என்று பயம். மனசளவிற்கு தேகம் இடம் கொடுக்காது. நடையோட்டமாகச் சென்று ஃபீல்ட் செய்யும் போது தேவி விட்டால் “பார்த்தாஆஆஆ... “ என்று ஊருக்கே எக்கோ கேட்கும்படி அவரது சகவயது கிரிக்கெட்டர் மரத்தடியிலிருந்து இரைவார். பார்த்தா மாமா ஆர்வமிகு சேரங்குளத்தார். இப்போது எப்படியிருப்பார் எங்கிருக்கிருக்கிறார் என்று தெரியவில்லை. கால் மற்றும் பந்து வீசும் முனைகளில் முள்வேலியும் மட்டை திசையில் பெவிலியனும் வாய்க்கப்பெற்ற சர்வதேச அரங்கம். மாட்டை மேயவிட்டுவிட்டு முண்டாசோடு சில பெரியவர்களும், அரை நிஜாரும் மேலுக்கு சட்டையில்லாத சில பொடியன்களும் சேர்த்து செலக்ட்டடாக ஒரு ஐம்பது பேர் ஆடியன்ஸ்.

1994 ஜனவரி. பொங்கல் தினம். டோர்ணமெண்ட் ஃபைனல். மைதானமெங்கும் சரமாரியாக ரன் மழை பொழிந்துகொண்டிருந்தது. ஓட்டங்கள் நினைவில் இல்லை. வழக்கம் போல் கோபால் நிதானமாக விளையாடினான். கோப்லி ரமேஷ் ஸ்ரீராம் என்று சப்போர்ட்டுன் நானும் களமிறங்கினேன். ஆத்தா பரமேஸ்வரி ஆசியில் அடித்ததெல்லாம் கனெக்ட் ஆகி நான்கும் இரண்டும் மூன்றுமாய் ரன்கள் குவிந்தன. கடைசி ஓவரிலோ என்னமோ ஜெயித்திருந்தோம். எனக்கு மேன் ஆஃப் தெ மேட்ச் அவார்ட் வழங்கி சிறப்பித்தார்கள். ரஸ்னாவும் ஒரு உள்ளங்கை உசர கோப்பையும் பரிசு. மனசுக்குள் ஜில்ஜில்.

கேரியரில் மட்டையை சொருகிக்கொண்டு மைதானத்திலிருந்து கிளம்பி சைக்கிளில் ஏறினேன். எதிரே ஊரிலிருந்து தெரிந்த பையன் ஒருவன் சைக்கிளில் அரக்கப்பரக்க வந்து கொண்டிருந்தான்.

“என்னாச்சு?”

“உங்க அக்காவுக்கு ஆண் கொழந்தை பொறந்திருக்காம். நீங்க மாமா ஆயிட்டீங்க...”

புல்லரித்துப்போனது. வீட்டுக்குப் பையனாய் திரிந்து கொண்டிருந்ததிலிருந்து முதல் ப்ரமோஷன் மாமா. அந்த ஆண் கொழந்தை Sabareesh Hariharanக்கு இன்னிக்கி பொறந்தநாள். எங்கேயோ ட்ரீட் கொடுக்கிறானாம். “மாமா.. டின்னருக்கு வா..” என்று குழந்தை நச்சரித்துக் கூப்பிடுகிறது. போய்ட்டு வரேன். பை.

1 comments:

க கந்தசாமி said...

அருமைங்க.. அந்த இடத்துக்கே போன மாதிரி நல்ல வர்ணனை

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails