Tuesday, July 29, 2014

சுண்டைக்காய் வெத்தக் குழம்பு

மன்னையில் காற்றடி காலங்களில் வாசலிலிருந்து கொல்லை வரை கதவுகள் படார்படாரென்று அடித்துக்கொள்ளும். அதற்கு முட்டுக் கொடுத்துக்கொண்டு ரக்பி பால் சைஸில் பாதிக்கு ஒரு கருங்கல் மொழுக்கென்று இடுக்கியிருக்கும். பெரும்பாலும் மாசாந்திர துவாதசியன்று அந்தக் கல்லுக்கு வேலை. பச்சை சுண்டைக்காயை அந்தக் கல்லால் மொச்மொச்சென்று நசுக்கிப் போட்ட வெத்தக்குழம்புக்கு ஒரு அலாதி ருஜி. லேசான கசப்பு நாக்கில் புரளும். ஆறு முட்டை நல்லண்ணெய் போட்டுப் பிசைந்துச் சாப்பிட கவளம் கவளமாக வேகமாக உள்ளுக்குப் போகும். தொட்டுக்க (முளைக்)கீரைத் தண்டு (மெல்லீஸானது) மோர்க்கூட்டு அட்டகாசமான கோம்போ. தமிழும் சுவையும் போல.

ஒரு தடவை மோர்க்கூட்டு+குழம்புஞ்சாம் சாப்பிட்டுவிட்டு “பாட்டீ! இன்னும் கொஞ்சம் சாதம்.. வெத்தக் கொழம்பு”ன்னு கூச்சல் போட வைக்கும். ரெண்டாம் தடவை ஒரு சிப்பல் சாதத்துக்குத் தொட்டுக்க நறுக்மொறுக்குன்னு நாலஞ்சு ஜவ்வரி வடாம். “இதாண்டா சாஸ்வதமான சொர்க்கம்”ன்னு ப்ரூவ் ஆகி மூன்றாம் தடவையாக் குழம்புஞ்சாம் ரிப்பீட் கேட்க வாயெழும் சமயத்தில் “போரும்.. மோருஞ்சாம் சாப்பிடலைன்னா நெஞ்சு எரிச்சல் வரும்டா..” என்பாள் பாட்டி. கையில் கரண்டியை கண்டிப்புப் பொங்க ஆட்டிக்கொண்டே.

கல்லோரலில் தண்ணீர் ஊற்றி தெப்பமாக மிதக்க விட்ட சில்வர் சொம்பு மோரில்..... கால் லிட்டர் தட்டில் ஊற்றிக் குழைவாப் பிசைஞ்சு... “தொட்டுக்க கொழம்பு ஊத்து...”ன்னு கேட்டு வாங்கி.... சோத்துக்கரையெழுப்பிக் கட்டிய குளத்துக்குள் குழம்பை விட்டு நிரப்பி... வாய்க்கு வாய்... ஒரு பச்சை சுண்டைக்காய் கச்ச்க்..கச்சக்னு கடிபட்டால் பரம ஆனந்தம். அமிர்தம். நாக்குக்கு மோட்சம்.

மூக்கில் ஒரு பருக்கை வரும் வரை கட்டு கட்டிவிட்டு... கையலம்பி.. வேஷ்டியில் துடைத்துக்கொண்டு..... வாசனை சுண்ணாம்பு தடவிய ரெண்டு வெத்திலை...ரெண்டு சிட்டிகை கைசீவல்... துளி ரஷிக்லால் பாக்கு... ஜீரணத்துக்கு கொதப்பிவிட்டு... வாய் கொப்பளித்து... டம்பளர் தூத்தம் குடித்துவிட்டு.... வாசல் திண்ணையில் ”அக்கடா”ன்னு காசித் துண்டை கீழே விரித்து பத்து நிமிஷம் கண் அசந்தால் கூட ஸ்தூல சரீரத்தோடு ஸ்வர்க்கத்தின் வாசற்படியை மிதித்து தேவாதிதேவர்களுக்கு “ஹலோ எவரிபடி” என்று கையசைத்துப் பூலோகம் திரும்பலாம்.

இன்னிக்கு வீட்டில் பச்சை சுண்டைக்காய் வெத்தக்குழம்பு டே! ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்தால் புலனடக்கம் வேண்டும்.. குறிப்பாக நாவடக்கம் முக்கியம் என்றாலும்..... ச்சே.... இந்த
நாக்கை அறுக்க!!

1 comments:

Kalai Amuthan said...

ஏன் சுவாமி! அப்படியே சமையல் குறிப்பை நல்கினால் நாங்களும் மோட்சம் அடைவோம்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails