Tuesday, July 29, 2014

மன்னார்குடி மாந்தர்கள்!

மன்னார்குடியர்கள் சர்வலோகத்திலும் வியாபித்திருப்பார்கள் என்பது இன்று கண்கூடாகத் தெரிந்தது. எப்படியென்று சொல்கிறேன். சின்னவளும் பெரியவளும் திருப்புகழ் பாடுவதற்கு நங்கைநல்லூர் சென்றார்கள். சாரதியாக சென்றிருந்தேன். எட்டுக்கு பத்து ரூமில் இருபது பேர் முருகனருள் முன்னிற்க ”சந்ததம் பந்தத்...... தொடராலே....சஞ்சலந் துஞ்சித் ...... திரியாதே” பாடினார்கள். ”இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி.... இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே”யும் “பத்தியால் யானுனைப் ...... பலகாலும்....பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி”யிலும் செவி இனித்தது.

திருப்புகழ் பாடியவர்களுக்கு பந்தி பரிமாறினார்கள். மைசூர் போண்டோ, காராமணி சுண்டல், அசோகா அல்வா. ஒரு வாய் காஃபி. “மாலை போட்ருக்கேன்... ஒரு போது...” என்று கழன்றுகொண்டேன். “ஒரு வா காஃபியானும் சாப்டுங்கோ..”ன்னு துரத்தி வற்புறுத்தல். தப்பித்து வெளியே ஓடி வந்தேன். நிலைவாசப்படியில் நிறுத்தி “ராமூர்த்தி பையனா?” என்று ஒரு குரல். “எம் பேரு சூர்யா.. மேலரெண்டாம் தெருவுல இருந்தோம்.. அப்புறம் மூணாம் தெருவுலேயும் வக்கீல் ஸிபியாத்துக்குப் பக்கத்துலயும் இருந்தோம்...உங்கப்பாவுக்கு நன்னாத் தெரியும்...” நெற்றியில் கேபியெஸ் விபூதியும் கையில் “முருகா சரணம்” மஞ்சப்பையுமாக ஒரு பாட்டி நின்றிருந்தார்கள். கையெடுத்துக் கும்பிட்டேன். பேச நா எழவில்லை. “அலமேலுவைக் கேட்டதா சொல்லு...” என்று அம்மாவையும் விஜாரித்துவிட்டு எம்சியார் செப்பலை மாட்டிக்கொண்டு மறைந்துபோனார்கள்.

“நீங்க மன்னார்குடியா? நேஷ்னல் ஸ்கூலா?” என்று கேள்வியெழுப்பிக்கொண்டே இன்னொரு ராணி சுங்குடி மாமி க்ராஸ் செய்தார்கள். சிரித்தேன். சொன்னேன். மன்னார்குடி வீதிவீதியாக மனக்கண் முன் வந்துகொண்டிருக்கிறது.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails