Tuesday, July 29, 2014

கோவை லோக்கல்

....அந்த சித்தர் தாடி தன்னருகே கூப்பிட்டு ”சிவசிவ” முணுமுணுத்து பிட் நோட்டீஸில் விபூதி மடித்துக்கொடுத்தார். “தம்பி! ஒரு பத்து ரூவா கொடேன்..” என்று கட்டளையாகக் கை நீட்டியவருக்கு இருவதாக திணித்தேன். பணம் உள்ளங்கையில் பட்டதும் மீசை சிரித்து தாடி ஆடியது. அங்கிருந்து வாகனத்தை ந்யூட்ரலில் விட்டால் தானாக இறங்கி நிற்குமிடத்தில் ஸ்ரீலலிதாம்பிகை கோவில். இன்னோவாவும் ஃபோர்ட் ஐகானுமாக ஏற்கனவே வாசல் லெக்ஷ்மி கடாட்சமாக இருந்தது. உள்ளே பஜனை பாடுவதற்கு யாரோ எத்தனித்துக்கொண்டிருந்தது ஸ்பீக்கரில் கரகரத்தது. பஜனைக்கும் ராக தாளம் முக்கியம் என்று கார்த்திகை மாத கன்னி சாமி ஐயப்ப பூஜை அடிக்கடி அட்டெண்ட் செய்பவர்களுக்குப் புரியும். பாட்டுக்குப் பாட்டு சரணத்துக்கு ஐயப்பாவும் ஐயப்பாவுக்கு சரணமும் சொல்லி குருசாமியோடு ஐயப்பனையும் சேர்த்து வெறுப்பேற்றிய ஆசாமிமார்கள் ஏராளம்.

சர்வாலங்கார பூஷிணியாக நேரே காட்சியளித்த லலிதாம்பிக்கை அப்படியே அலேக்காக திருமீயச்சூருக்குத் தூக்கிச் சென்றாள். சுருள் சுருளாய்க் கன்னக் கருந்தாடி விரிய புறமுதுகு காட்டி காவி வஸ்திரம் கட்டி அம்பாளைப் பார்க்க உட்கார்ந்திருந்தவரை “இவர்தான் ஜெகன்னாத ஸ்வாமிகள்...” என்று கேகேயண்ணா Krishnamurthy Krishnaiyerஹஸ்கி வாய்சில் அறிமுகப்படுத்தினார். கீபோர்டு போல எதிரில் கிடந்த ரூல்டு நோட்டிலிருந்து வரி வரியாகப் படித்து “அம்மா...அம்மா..”வை கடைசியாக ஒட்ட வைத்துப் பஜனை பாடிக்கொண்டிருந்தார்.

கோரஸ் பாடிய இரண்டு பெண்கள் அவரோடு பலத்த போட்டி போட்டுக்கொண்டு அவர் ஸட்ஜமத்திலிருந்தால் ரிஷபத்திலும் ரிஷபத்திலிருந்தால் காந்தாரத்திலும் ஒரு படி மேலே பாடி அவரையே மூச்சுத் திணற அடித்தார்கள். இந்த இசைச் சூறாவளியில் சிக்குண்ட கீபோர்ட்காரர் ரெண்டு நொடிக்கொருதரம் கீபோர்டிலிருந்து கையை எடுத்துவிட்டு ஸ்தம்பித்துப்போய் அவர்களின் வாய் பார்த்தார். கடைசியாக ஜால்ராவை எடுத்துக்கொண்டு உட்கார்ந்த ஒரு பக்தர் “ஜிங்..ஜிங்..சக்...” என்று புது ரூட் ஒன்று போட்டார். நரம்புகள் புடைக்க பக்கத்திலிருந்த கட்டையில் ஓங்கி தாளம் போட்டுக் காண்பித்துவிட்டு மீண்டும் கீபோர்டில் கை வைத்தார்.

இந்த சங்கீத அட்டூழியத்தைக் காணச் சகிக்காமல் ஒரு காலை மடக்கி சிவனேன்னு அமர்ந்திருந்த லலிதாம்பிகை எந்நேரமும் எழுந்து வந்து மண்டையில் போடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது கற்பூரத் தட்டைக் காண்பித்து “எடுத்துக்கோங்க...” என்றார் சட்டையணியாத பூசாரி போன்றவர். “உட்காருங்க...” என்று சுவற்றோரமாக இடம் காண்பித்தார். திருச்சுற்று வரும் போது என் இளைய மகள் கேட்டாள் “ஏம்ப்பா... ஒவ்வொருத்தரும் வேற வேறபாட்டை ஒரே சமயத்துல மைக்ல பாடறாங்க?”. “அடிச் செல்லமே!” என்று அவள் கன்னங்களை வழித்து திருஷ்டி கழித்தேன்.

இக்குழு “ஸ்ரீசக்ரராஜ சிம்ஹாசனேஸ்வரி.. ஸ்ரீ லலிதாம்பிகையே...”வைக் கோரஸாக ஆரம்பிப்பதற்கு முன்னர் ”கனவான்களே! சித்த சங்கீதம் பிழைக்கட்டுமே..” என்று அவர்களிடம் கேட்க பயந்துகொண்டு அனுவாவியிலிருந்து கோவையை நோக்கி விட்டோம் சவாரியை.

ஆரெஸ்புரத்தில் அன்னபூரணி, காமாட்சியம்மன் என்று அணிவரிசையாக இரண்டு கோவில்களுக்கு எதிர்புறம் வாகனம் நிறுத்திவைக்கப்பட்டது. “இந்த ட்ரிப்ல நாள் பூரா கோவிலில்லாம எண்டர்டெயின்மெண்ட் இடத்துக்கெல்லாம் அழைச்சிண்டு போறேன்னு யாரோ சென்னையிலிருந்து கெளம்பும்போது பீத்திக்கிட்டாங்க..” என்று பெரியவளும் சிரியவளும் கோரஸாக ”ஹுக்கும்”மென்று இருமினார்கள். மருமானும் கச்சேரிக்குப் பக்க வாத்தியம் போல சத்தமாகக் கனைத்துக்கொண்டான்.

கோயிலுக்குள் நுழைவதற்குள் இரண்டு மூன்று பூக்காரிகள் கேகேயண்ணாவைச் சுற்றிக்கொண்டார்கள். அவர்களிடம் வாடிக்கையாம். மல்லி விற்கும் அவசரத்தில் அவர் காதில் ரெண்டு முழம் சுற்றிவிடும் அபாயம் இருந்ததால் நான் நடுவில் புகுந்து விலக்கிவிட்டேன். அன்னபூரணி கோவிலுக்குள் வேதபாட சாலை இருந்தது. குருக்கள் சாந்தசொரூபியாக குங்குமத்தில் ஜொலித்தார். மகா பெரியவா ஒரு ஆற்றுக்கு நடுவில் காலை மடித்து பித்தளை சொம்போடு உட்கார்ந்து பூஜை செய்யும் பிரம்மாண்டமான லாமினேட்டட் படம் அது காஞ்சி மடத்துக்குச் சொந்தமானது என்பதை பறை சாற்றியது. அப்படியே காமாட்சியம்மன் கோயிலுக்குள் நுழைந்தால் நேரே ஆஜானுபாகு சுதை சிற்பமாக செக்கச் சிவப்பில் ஆதிசங்கரர். இடதுபுறத்தில் விநாயகர் சன்னிதியில் ஆரம்பித்து வரிசையாக சுப்ரமண்யர், சிவன், காமாட்சியம்பாள், கோதண்டராமர், பாண்டுரங்கர், தத்தாத்ரேயர், ஐயப்பன், குருவாயூரப்பன் என்று you name any Hindu God, அவர் அங்கு அருள்பாலிப்பார். எந்த விசேஷத்திற்கும் கோயில் கோயிலாகச் செல்லவேண்டாம்.

நெற்றி நிறைய பட்டை பட்டையாய் விபூதியும் நடுவில் சாமியாடி போல சதும்பத் தீற்றிய குங்குமமும் அலங்கரிக்க வீடு திரும்பினோம். ப்ரெட் ஒரு பாக்கெட்டும் சில காய்கறிகளும் அன்றிரவு டின்னரை அந்தளவுக்குப் பிரமாதப்படுத்தும் என்பது தேவ ரகஸ்யம். Chitra Krishnamurthy மன்னியின் கை வண்ணம். திரிமூர்த்திகளாக மும்மூன்று ப்ரெட் ஸ்லைஸ்களை ஒன்றன் மேல் ஒன்றாக சீராக அடுக்கி இடையிடையே காப்ஸிகம், வெள்ளரி, தக்காளி, ஆனியன் என்று பச்சையும் சிகப்பும் வெள்ளையுமாகச் சொருகி டோஸ்ட்டியிருந்தார்கள். இட்லி தோசை போன்ற பதார்த்தங்களே இப்பூவுலகில் உன்னதமானவை என்று சதா சர்வகாலமும் பேதம் பாராட்டும் என் போன்றவர்களையே அடித்துப் போட்டது அந்த டோஸ்ட். மூர்க்கமாக ஒரு பிடி பிடித்தவனை “டேய் நிப்பாட்டுடா...” என்று வயிறு முட்டி வாய் “ஏவ்..” என்று அலற கையைத் துடைத்துக்கொண்டு எழுந்தேன்.

காலை எழுந்ததும் ஜன்னலில் மயில் நடனம். கேகே அண்ணா மாதம் ஒரு மூட்டை சோளம் மயில்களுக்காக இறக்குமதி செய்கிறார் என்பது அவரது இரை வீச்சில் தெரிந்தது. பொறுமையாகக் கிளம்பி கோவைக் குற்றாலம் மற்றும் தியானலிங்க ஈஷாவுக்கு செல்லக் கிளம்பினோம். கோவைக் குற்றாலத்தில் நுழையவிடாமல் தடுத்து “இன்னிக்கி மெயிண்டனன்ஸ் டே. போய்டுங்க.....” என்று திருப்பிவிட்டார்கள். இயற்கையாக விழும் அருவிக்கு ஏது மெயிண்டனன்ஸ் டே? என்ற குழப்பத்தில் பக்கத்தில் பொட்டிக்கடை போட்டவர்கள், சிகரெட் பிடிப்பவர்கள், குழந்தையை ஆய் போக விட்டு பக்கத்தில் நிற்பவர்கள் என்று கண்ணில் படும் முகங்களிடம் “ஏங்க இன்னிக்கி கிடையாதா?” ஆய் போக விட்டு பக்கத்தில் காவலுக்கு நின்ற இளம் பாட்டி திரும்பவும் “இன்னிக்கி கிடையாதா?” என்று எங்களைப் பார்த்து அதே ராகத்தில் கேட்டது. முகத்தை காருக்குள் இழுத்துக்கொள்ளும் தருவாயில் அது பின்னால் திரும்பி “ஏமிரா?” என்று வெளிக்கிக்குக் குந்தி இருந்தவனை சிடுசிடுத்தது. ”இன்னிக்கி அருவி கிடையாது” என்று முடிவானதும் @chitra krishnamurthy யின் பண்ணை வீட்டிற்கு சென்று மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஈஷாவுக்குப் போகலாம் என்று தீர்மானித்தோம்.

கேரட் பட்டாணி பரவலாகக் கலந்த விஜிடபிள் புலாவ். வாய்க்கு ஒரு மிந்திரியும் (பாட்டி பாஷையில் முந்திரி என்பதின் திரிபு) நிரடியது. தயிர் சாதம். பார்க்க சிம்பிள் மெனு. பெத்த ருசி. தக்ஷிண்சித்ரா வீடுகள் போல அலங்காரமாகவும் பாரம்பரியமாகவும் அழகாகவும் இருந்தது. சுவர்களில் ஹரிக்கேன் விளக்கு மாடலில் சிஎஃப்ஃபெல் பல்பு சொருகியிருந்தது. ஹாலில் தொட்டி மித்தத்துக்கு நேரே இரண்டு பேர் நெருக்கமாக உட்கார்ந்து ரொமாண்ட்டிக்காக ஆட தோதாக ஒரு குட்டி ஊஞ்சல். ”போற்றிப் பாடடி பொண்ணே.....” என்று தேவர்மகன் கமல் எட்டிப் பார்த்தார்.

மாங்காயைக் கையால் எட்டிப் பறிக்கும் உயரத்தில் மாந்தோட்டமும், குலை தள்ளிய தென்னந்தோப்பும் கொளுத்தும் கோடையிலும் சிலுசிலுவென்று இதமாகக் காற்று வீசியது. தொடுவானத்தில் பசுந்தோல் போர்த்திய மலைகள் தெரிந்தது. கயிற்றுக்கட்டிலும் பக்கத்தில் வெட்டிவேர் போட்ட மண்பானைத் தண்ணீரும் இருந்து வயிறு முட்ட விருந்து சாப்பிட்டுவிட்டு வாய்க்கு வெத்திலையோடு சரிந்தால் இதுதான் சொர்க்கபுரி.

ஈஷாவில்.....

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails