Tuesday, July 29, 2014

ராணித் தேனீக்கள்

இடுப்புல துண்டைக் கட்டிண்டு நாற்பத்தஞ்சு டிகிரி முன்னாடி குனிஞ்ச பவ்யமான போஸ். மஹா பெரியவாகிட்டே மரியாதையாப் பேசறா மாதிரி வாய்க்கு முன்னாடி ”க்ஷமிக்கணும்”னு கையை வச்சுண்டு இவ்ளோ பவ்யமாக நம்ம வீர புருஷர்களைப் பார்க்கணும்னா பழமுதிர்ச்சோலை காய்கனிக் கடையில்தான் பார்க்கணும் போல்ருக்கு. அந்த பிசியான அந்திநேரத்தில் அந்தர்பல்டி ஆசாமிகள் நிறைந்த கடை.

”ஹும்..” என்ற ஒரு பொடி அதட்டலுக்கு குடை சாய்ந்து விடுவார்கள் போலிருக்கிறது. (...ம்... ஏதோ.. உள்ளங்கை நெல்லிக்கனி என்பார்களே அது போல... நான் தெகிரியமாகத் தலை நிமிர்ந்து நின்றேன் என்று இங்கு பிரஸ்தாபிக்கத் தேவையில்லை)

தாலிச்சரட்டுல மஞ்சள் காயாத தம்பதிகள், நேற்றைக்குச் சதாபிஷேகம் கண்ட ஆதர்ஷர்கள் என்கிற பேதமெல்லாமில்லை. யாவர்க்கும் ஒரே நீதி! சரணாகதித் தத்துவம்!

“ஏம்மா... இந்த கத்ரிக்கா தேவலையா..” (மஹாராணி மிடுக்காக இருந்த அந்தம்மா “போய்யா புண்ணாக்கு...” என்ற லுக் விட்டது)

“இந்த பரங்கிக்கா.... பார்த்துடு.. ஒரு தரம்.. பையில போட்டுக்கறேன்...” (பாக்கி நேரம் அந்தம்மாவைப் பார்த்து கன்னத்துல போட்டுப்பாராக்கும்)

”பாகற்கா வேண்டாங்கிறியா... சரிம்மா..” (அந்தம்மாவின் முகம் “வ்வே” என்று அஷ்டகோணலாக மாறியதில் இவர் கழுத்து சுளுக்கும்படி வாசலைப் பார்க்கத் தலையைத் திருப்பிக்கொண்டார்)

”நீட்டுப் புடலை.. ஓகேயா?...ம்... இல்லியா? ம்.... பரவாயில்லையா... ம்... ஓகே வா...” (அவங்க அழவிட்டுப் பார்த்த பத்து செகண்ட்டில் தசாவதாரமெடுத்த புத்தம் புது மாப்பிள்ளை. காளை மிரண்டது கண்களில் தெரிந்தது)

“இன்னும் தக்காளி மட்டும்தான் எடுக்கணும். கூடையைத் தூக்கிண்டு போய் க்யூல நில்லுங்கோ... மசமசன்னு எம் பின்னாடியே நிக்காம...” வெட்கம் பிடிங்கித் திங்க யாராவது பார்த்துட்டங்களா என்று 360 டிகிரி பார்த்துக்கொண்டார். “என்னைத் தவிர உன்னை யாரும் பார்க்கலை ராஜா... பார்த்தாலும் பரவாயில்லை.. நாம் எல்லோரும் ஓரினம். யாரும் ஒண்னும் வித்யாசமா நினைச்சுக்கமாட்டாங்க..” என்று அவரைத் தேற்ற ஆசையாய் இருந்தது.

”க்யூல போய் நிக்கிறீங்களா?” என்று எனக்கு உத்தரவாகியது.

ராணித் தேனீக்கள்!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails