Tuesday, July 29, 2014

ஊசித் தொண்டை.. பானை வயிறு...

முஹூர்த்தம் முடிந்த கையோடு சிக்கனமாக ரெண்டு வரி “ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தேமே...”யென்று ஃப்ளைட் பிடிக்கப் போகும் அவசரகதியில் வாசித்தார். பின்பு “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா...”வை நிறுத்தி நிதானித்து அலங்காரமாக நாகஸ்வரத்தில் வாசித்தார். ”செல்வக்களஞ்சியமே...” வரும்போது மேடையில் மணமக்களின் கல்யாணக் கோலத்தோடு காதுக்கு அப்படியொரு இனிமையாக இருந்தது. அனுபவஸ்தர். தூக்கிய நாகஸ்வரத்திலிருந்து ஸ்வரங்கள் குப்பென்று பிரவாகமாகக் கிளம்பி மண்டபத்தை நிறைத்தது. ஒத்து ஆங்காங்கே விழுந்து புரண்டாலும் பின்னாலையே வழி பிசகாமல் ஓடிவந்தது. தவில்காரர் தொப்பியில் விரல்களால் கபடி ஆடினார். வாத்தியம் வார்பிடிக்கப்பட்டு அவர் சொன்னதையெல்லாம் தப்பாமல் கேட்டது. நாதலயம். என்னுடன் சேர்த்து குறைந்தது ஐந்தாறு தலைகள் ரசிகரஞ்சிதமாக கோர்வையாக ஆடியது. காவிரியாற்றங்கரை ஆட்களாக இருக்கக்கூடும்.

”சார்! ஜூஸு”ன்னு திராட்சை ரஸத்தை வலியக் கையில் திணித்தார்கள். பட்டென்று கண் முன்னே வெள்ளைக் குர்த்தாவில் வைரமுத்து நெடுநெடுவென்று தோன்றி “திராட்சை தின்பவன் புத்திசாலியா? பழரசம் குடிப்பவன் குற்றவாளியா?” என்று தோம் கருவிலிருந்தோமிலிருந்து ரெண்டு வரி படித்துக் காண்பித்தார். யாரும் அறியாமல் ஒரு மிமி உதட்டை விரித்து புன்னகைத்துக் கொண்டேன். அருகம்புல் ஜூஸ் குடிக்கும் அருகதையுள்ள அடியேன் இந்த ஜூஸ் குடிக்கவில்லை என்பது இச்சபையோர்க்கு ஒரு உபரி தகவல்.

திருமண அரங்கு நிறைந்திருந்தது. விடுமுறை நாளானதால் அனைவரின் முகத்திலும் அவசரமில்லாமல் சாந்தி நிலவியது. சில சாந்திக்கள் ஸ்தூலமாகவும் அங்கே உலவக்கூடும். தொன்னூறு சதவிகிதம் குடும்பமாக அவுட்டிங் வந்திருந்தார்கள். WWF அதிகம் பார்க்கும் பொடியன் ஒருத்தன் இன்னொருத்தனை ஃபுட்பாலாக உருட்டி ரகளை செய்துகொண்டிருந்தான். பாட்டி பிடித்து இழுத்துக்கொண்டிருந்தாள். சரேலென்று உள்ளே வந்த அம்மணி முதுகில் ஒன்று வைத்து தரதரவென்று இழுத்துச்சென்றாள். அப்பொடியனின் அம்மா என்பது முகஜாடையில் தெரிந்தது. தாத்தா சக தாத்தாக்களோடு “அப்பெல்லாம்...” பேசிக்கொண்டிருந்தார். க்ளைமாக்ஸாக அவரது மடியில் தஞ்சமானா அப்பையன் முழு சீனும் பார்த்த என்னை ஓரக்கண்ணால் பார்த்தான்.

தரைதளத்தில் முஹூர்த்தம். இரண்டாவது மாடியில் சாப்பாடு. ஞாயிற்றுக்கிழமை பதினொன்றிலிருந்து பனிரெண்டு முஹூர்த்தம் சா.ராமர்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று. எண் சான் உடம்பிற்குப் பிரதானமான வயிற்றுக்கு டிஃபனைக் காட்டி சாப்பாட்டையும் காட்டலாம். லிஃப்ட்டில்லாமல் நடந்து ஏறுபவர்களுக்கு நல்ல அப்பிடைஸர். ஐந்தாள் அகல லிஃப்ட்டுக்கு ஐம்பது ஆட்கள் தேவுடு காத்தார்கள். அதிலும் முட்டி தேய்ந்த வயசானவர்களுக்கு வழி விடாமல் முதல் ரோவில் சாம்சங் டேபும் கையுமாக மேஜர் ஆன மைனர் பசங்கள். கெக்கேபிக்கேன்னு சிரித்துக்கொண்டு.

செவன் கேக் மாதிரி இனிப்பு ஒன்று பரிமாறினார்கள். ரவையோண்டுக் கிள்ளிச் சுவைத்துப்பார்த்தேன். என் வாழ்நாள் பூராவும் நான் சாப்பிட்ட சர்க்கரையெல்லாம் உருக்கிச் செய்த பட்சணம் அது. சுதாரித்துத் தெளிவதற்குள் இலை நிரப்பி “ம்... ஆரம்பி... அடுந்த பந்தி வைட்டிங்..” என்று சாதத்தை சிப்பல் சிப்பலாக இறக்கினார்கள். வாழக்கா கறமது. பீன்ஸ் பருப்புசிலி. பொடிப்பொடியா பீன்ஸை நறுக்கி, ஒவ்வொன்றாய் பொறுக்கி அதற்குள் பருப்பை ஸ்டஃப் செய்தா மாதிரி உசிலி. சமையற்காரர் கைக்குத் தங்கக் காப்பு போடணும். கேரட்டும் கொத்துமல்லியையும் பூத்தூவலாய்த் தூவி இலைக்கு ஒரு தயிர்வடை. கதம்ப சாம்பார் சாதத்துக்கு தயிர்வடை தேவப்பிரசாதமாக இருந்தது.

பூசணிக்காய் மோர்க்குழம்பு. வெண்டி ஃப்ரை ஸ்னோ பௌலிங் பால் போல உருண்டன. ஃப்ரிஸ்பீ சைஸ் அப்பளம் சுயேட்சை வேட்பாளர்கள் போல சம்பிரதாயமாக இலைத் தேர்தலில் சுலபமாகச் சீட் பிடித்தன. பின்னாலையே கமகம தக்காளி ரசமது வந்தது. வண்டலுக்கே வண்டி சாதம் உள்ளே இறங்கும் சுவை. கடைசி நேரத்தில் பிசைந்த சாதத்திற்கு வெண்டி ஃப்ரை துணைக்கு வந்து பதவியேற்பை இன்னும் பிரமாதப்படுத்தியது. திருக்கண்ணமுது ஒரு கரண்டி சாதித்தார்கள். கொஞ்சூண்டு எடுத்து நுனி நாக்கில் இருக்கும் இனிப்புச் சுவை மொட்டுகளை நனைத்துக்கொண்டேன். அவைகளுக்குத் திருப்தி.

இந்தத் தயிர் சாதம் சாப்பிடாதவர்களுக்குச் சொர்க்கக் கதவு திறக்காது என்பது திண்ணம். வாயில் இஞ்சி நிரடும் போது நாக்கால் சாதத்தை இழுத்து ஒருதரம் மென்று தின்ன வேண்டும். காரத்தில் சதும்ப ஊறிய பொடி மாங்காயை வாய்க்கு வாய் வைத்து உள்ளே தள்ளிக்கொண்டிருக்கும் போதே அடுத்த பந்தி ஆட்கள் பசித்த புலி போல எதிரில் நின்றிருந்தார்கள்.

வெற்றிலை பாக்கில்லாமல் ட்யூட்டி ஃப்ரூட்டியில் மடித்த பீடா தயாராய் இருந்தது. எனக்கு உசிதமில்லை. மண்டபத்துக்கு கீழே வந்து தாம்பூலப் பையை வாங்கிக்கொண்டு வெளியே நடக்கும் போது “இது யாரு தெரியுதா?” என்று அப்பா ஒரு வாமனரை அறிமுகப்படுத்தினார். ஹெஹ்ஹே என்று சிரித்துக்கொண்டே ”சௌக்கியமா..” கேட்டுக் கை கொடுத்தேன். “தம்பி சரியா சாப்பிடறதில்லையோ... இளைப்பா இருக்கே..” என்று குசலம் விசாரித்தார்.

சேப்பாயியைக் கிளப்பும் போது என் பாட்டி அடிக்கடி சொல்வதை என் பெண்ணிடம் ரகசியமாகக் காதில் சொன்னேன். என்னவா? இப்படி காதைக் கொடுங்கள். உங்களுக்கும் சொல்கிறேன்.

“சிலபேருக்கு பானைத் தொண்டை. ஊசி வயிறு. தம்பி மாதிரி ஆட்களுக்கு ஊசித் தொண்டை. பானை வயிறு”

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails