Tuesday, July 29, 2014

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்!!

வாய்க்கு இதமான இளஞ்சூடு வெங்காய பகோடாவும் ஆவி பறக்கும் ஸ்ட்ராங் ஃபில்டர் காஃபியும் மழையின் சாஸ்வதமான தோழமைகள். சென்னையின் கான்க்ரீட் காட்டில் கொட்டும் மழையை விட மன்னையில் பொழியும் மழை மனசுக்கு ரம்மியமானது.

நான்கு திசைகளிலும் ”ஹோ”வென்று பரந்து விரிந்த ஹரித்ராநதியில் விசிலடிக்கும் காற்றுடன் கைகோர்த்துக்கொண்டு மழை போடும் எண்ணிலடங்கா புள்ளிக் கோலம்........ தெற்கிலிருந்து வடக்கிற்கு காற்றடித்தால் நேர்ப்புள்ளி. வடகிழக்காகவும், தென்மேற்காகவும் வீசும் காற்று குளற்று நீரில் ஓடியோடி இடுக்குப்புள்ளி வைக்கும்.

தான் தூறலின் போது வைத்த புள்ளியை அடித்து பெய்யும் போது இணைக்கும் காட்சியை யுகாந்திரமாய் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். ஒரு பெருமழைக்கு ஆயிரமாயிரம் நீர்க் கோலங்கள். சிக்குக் கோலம், அன்ன பட்சி, தேர், கத்திரிக்கா, கை கோர்க்கும் பேபிகள், பொங்கல் பானை, சிவலிங்கம், க்ருஸ்துமஸ் மரம் என்று நான்கு கரையிலிருக்கும் ஜன்னல் தோறும் பொங்கி வழியும் எண்ணம் போல பல வடிவக் கோலங்கள்.

கொடி கோவைக்காயை நறுக்கி அழித்த கல் ஸ்லேட் போல மழை நின்ற பின் காட்சியளிக்கும் எழில் குளம் இன்னொரு மழையைக் கோலம் போட தவறாமல் அழைக்கும். மழை திரும்பவும் புள்ளி வைக்கும். இணைத்துக் கோலம் போடும். குதூகலிக்க வைக்கும்.

தேவக் கொடையான அம்மழைக் கோல குளத்தழகை என் போன்ற நரர்கள் அல்பமாக ஒரிரு பாராக்களில் அடக்கமுடியாது.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails