Friday, August 19, 2016

ரிசல்ட்

”பதிலற்றவனுக்கு பகவானே துணை” என்கிற நொண்டிச் சாக்கோடு... தெய்வ நம்பிக்கையில்தான் வகுப்புதோறும் என்னைப் போல் தேறியவர்களை குறிப்பிட்டு எழுத ஆரம்பிக்கிறேன். பள்ளிக் காலங்களில் மார்க் எடுப்பதில் மட்டும் பிறத்தியாரைப் பார்த்து பொறாமைப்பட்டதே கிடையாது. பல்லுள்ளவன் புண்ணாக்கு திங்கிறான் கான்செப்ட். அக்கா இருக்கிறவன் ஐஃபோன் வெச்சுருக்கான் மொமெண்ட்.
”தம்பிக்கென்னடி... அவாள்ட்டேயிருந்து வெள்ளைத் தாளைப் புடுங்கி..... சடசடன்னு ஏதோ கிறுக்கி நீலமாக்கிட்டு.... மொதோ ஆளா ஆத்துக்கு வந்துடுவன்.... என்னத்த படிச்சான்... எப்போப் பார்த்தாலும் மட்டைதான்... பைத்தாரப்பய..” என்று என் மீது அசையாத நம்பிக்கை வைத்தவள் என் சாரதா பாட்டி. வாசலில் திண்ணைக் கச்சேரிகளில் கூடும் சமவயது கிழவிகளிடம் ”எங்காத்து தம்பிக்கு சோத்தைப் போட்டுட்டா போறும்... ரெண்டு கண்ணையும் அப்படி சொருகிண்டு வந்துடும்...சித்த நாழிலே அவா தாத்தா மாதிரி பெஞ்சுலேயே தலையைச் சாச்சு உக்காண்டே கொறட்டை வுடுவான்....” என்று என் மானத்தை மட்டுமல்லாமல் சீனிவாஸய்யர் மானத்தையும் சேர்த்து வாங்குவாள். பரீட்சை சமயங்களில் படித்து முடிக்கும்வரை இராச்சாப்பாடு கிடையாது.
அக்காலங்களில் மாலைமுரசு அச்சுக்கோர்ப்பவர் கைகளில் பல மாணவர்களின் உசுர் இருந்தது. மன்னை பஸ் ஸ்டாண்டில் செண்பகா தியேட்டர் மூத்திர சுவரோரம் மாலைமுரசு கட்டு புழுதி பறக்க வந்திறங்கும். “தொம்”. விழுந்து புரண்டு ஒரு பேப்பர் வாங்குவதற்கு கைலி அவிழ அரணாக்குடி அறுந்து விழ ஓடுவார்கள். ”தோல்வியா.. எங்களிடம் வாருங்கள்...” தோரணம் கட்டி வரும் டுடோரியல் காலேஜ் விளம்பரங்களுக்கு மத்தியில்தான் பொடி எழுத்தில் நம்பர் வரும். மூனும் எட்டும், ஏழும் ஒண்ணும் ஈஷிக்கொள்ளும். “அவன் நம்பரு வரலை.... வாங்கி வச்சுருந்த பாலிடாலைக் குடிச்சுட்டாண்டா மாப்ளே...” என்று இரவு தேரடியில் கூட்டுறவு பால் பண்ணை ஸ்டாலில் பருத்திப்பால் உறிஞ்சும் போது அங்கலாய்ப்பார்கள்.
நம்பர் பேப்பரில் வராமல், இரண்டு மூன்று நாட்களுக்கு அன்னம் தண்ணீரில்லாமல்... கன்னம் வீங்கி... கண்ணீர் வற்றுமளவிற்கு அழுதும், “தண்டச்சோறு.. மக்குப்ளாஸ்திரி..” போன்ற பெரும் பட்டங்கள் குடும்பத்தாரிடம் பெற்று, பள்ளியில் வழங்கும் மார்க்‌ஷீட்டில் எல்லாம் பாஸாகி எண்பது சதவிகிதம் எடுத்து “அழுத புள்ளை சிரிச்சதாம்... கழுதைப் பாலைக் குடிச்சுதாம்...” என்று ஊர் மெச்சும் வண்ணம் சிரித்த ”ஐயோ பாவம்” ப்ரகிருதிகளும் உண்டு.
இப்போதெல்லாம் இந்த அசௌகரியங்கள் இல்லை. இணையத்தில் நம்பரை இட்டு மதிப்பெண்களையே ஃப்ரெண்ட்ஸ் அண்ட் ரிலேடிவ்ஸ் க்ரூப்புக்கு வாட்ஸப் செய்துவிட்டு ஒரு காப்பி அச்சிட்டுக்கொள்ளுமளவிற்கு வளர்ந்துவிட்டோம். லட்சத்துக்கு ஐம்பதாயிரம் பேர் மேக்ஸ், சயின்ஸ், தமிழ், ஆங்கிலத்தில் நூத்துக்கு நூறு வாங்கி மின்னுகிறார்கள். விடைத்தாள் திருத்துபவர்கள் சாஸ்திரத்திற்கு ஒரு மார்க் ரெண்டு மார்க் குறைத்துப்போட்டு பரீட்சைகளின் மாண்பு காக்கிறார்கள்.
அட்லீஸ்ட் ஐயாயிரம் பேராவது 500/500 வாங்கும் நாட்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும்.... நானூறு வாங்கினாலே ”ஜீனியஸ்டா” காலத்தில் பத்தாவது எழுதிய பரதேசி!
நல்ல மார்க் எடுத்த நல்முத்துகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!!

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails