Saturday, August 20, 2016

வித்தை


"அறிவு... உன்னோட ஆம்பீஷன் என்ன?"
"இந்த நாட்டுலயே பெரிய கார்டியாலிஜிஸ்ட்டா ஆகணும் சார்..."
"ஏன்?"
"இருதயமே இல்லாதவங்களுக்கு ஆபரேஷன் பண்ணி இருதயம் ஃபிக்ஸ் பண்ணனும்.. இருதயம் பலகீனமா இருக்கறவங்களைத் தேத்தணும்..இருத... "
"போதும்.. போதும்.. இருதயமே இல்லாம பேசினா பரவாயில்லை.. மூளையும் இல்லாம பேசறே... எனக்கு இருதயம் அடைக்குது.... உட்காருப்பா..."
"விகாஸ்... நீ என்னவாகணும்னு ஆசைப்படற?"
"அரசியல்வாதியாகிச் சாக்கடையைச் சுத்தம் செய்யணும் ஐயா"
"அதுக்கு எதுக்கு அரசியல்வாதியாகணும்.. கையில குச்சி ஃபினாயில் எடுத்துக்கிட்டு கோமணத்தோட மேன் ஹோலைத் தெறந்து உள்ள இறங்கினா சுத்தம் பண்ணிடலாமே.... "
" நான் அரசியல் சாக்கடையைச் சொன்னேன் சார்..."
"யப்பாடீ... மணக்குது... சரி..சரி.. உட்காரு... ஏம்பா ரஞ்சித்! உன்னோட வாழ்நாள் குறிக்கோள் என்ன?"
ரஞ்சித் சொன்ன பதிலில் மொத்த வகுப்பறையும் உறைந்துபோனது. "ஏன்டா கேட்டோம்" என்று ஒடிந்து போய் நாற்காலியில் சரிந்த சற்குணம் சார் அப்புறம் அடுத்த மாணவனைக் கேட்கவேயில்லை. பத்தாம் வகுப்பிலேயே இப்படியும் ஒரு பையனா? அவருக்குப் பொங்கிப் பொங்கி வந்தது. ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு பீரியட் முடிந்தவுடன் வகுப்பறை வாசலுக்கு அழைத்துச்சென்று ஆதூரத்துடன் தோளில் கைபோட்டுக் கேட்டார்...
"நீ சாமியாராகி என்ன பண்ணப் போறே ரஞ்சித்?"
சிறிது நேர மௌனத்தில் காரிடாரில் அவர் ஷுவும் அவன் ஷுவும் டக்கி டக்கி எதிரொலித்தது.
"காசு பண்ணப்போறேன்.."
"டேய்... ரொம்ப பேசாதடா..."
"சார்... கார்டியாலஜிஸ்ட் கிட்டே அப்பாயின்ட்மெண்ட்டுக்கு நிக்காம ஆபரேஷன் பண்ணிக்கலாம், படகு மாதிரி ஏசி கார் வச்சுக்கலாம், பீச்சாங்கரையோரமா ஜிலுஜிலுன்னு ஆசிரம பங்களா கட்டிக்கலாம், உள்ளூர் பக்தைகள் கூட வெளிநாட்டுக்கும்... வெளி நாட்டு சிஷ்யைகளோட உள்ளூருக்கும் டூர் அடிச்சு கத பண்ணலாம்.. இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு.. அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுன்னு அரசியல் பண்ணலாம்.. ஸ்கூல் நடத்தலாம்.. மெடிகல் காலேஜ் வைக்கலாம்.. மகளிரெல்லாம் ஒன்று திரட்டி...."
"சிவ சிவா.." என்று காதிரண்டையும் பொத்திக்கொண்டார் சற்குணம் சார். "ஆஹா... வாத்தியாரையே காதைப் பொத்த வச்சுட்டோம்.. வெற்றி.. வெற்றி.." என்று உள்ளூர சிரித்தான் ரஞ்சித். சற்குணம் இரண்டு மாதங்களில் ஓய்வு பெற்று நிரந்தர வீட்டுவாசி ஆகிவிட்டார். ரேஷன், ஈபி பில், பால் கார்டு என்று வாத்தியார் வேலையைக் காட்டிலும் தீவிரமாக வீட்டு வேலை. வருடங்கள் உருண்டன என்கிற க்ளிஷேவை விடமுடியவில்லை. வருடங்கள் உருண்டன.
**
பர்கர்... பீட்ஸா.. பிக்கினி... புழங்கும் அமெரிக்கா. ஒரு இத்தாலியன் ஜெலட்டீரியா ஐஸ்க்ரீம் கடை வாசலில் ஜன சந்தடியான மம்பும் மந்தாரமுமான மத்தியான்ன நேரம். விஷமம் கண்களில் கொப்பளிக்கும் ஒரு சிறுவனை கையில் பிடித்துக்கொண்டு ஒரு பெரியவர் அங்கே வருகிறார். எழுபத்தைந்து வயதில், அகன்ற தோள்களுடன்... திடகாத்திரமாகத்தான் இருக்கிறார். நூறு மீட்டர் ஓடினால் முப்பது செகண்ட் பிடிக்கும்.
“க்ராண்ட்பா... கமான் லெட்ஸ் ஹாவ் ஜெலட்டோ..” என்று கடையைக் காட்டி இழுக்கிறான். ஆனால் அவர் நகராமல் தரையில் நங்கூரம் தட்டி நிற்கிறார். “ப்ளீஸ்.. கமான்..” என்று மேலும் இழுக்கிறான். “வெயிட் ஃபார் சம் டைம். வில் கோ...” என்று சமாதானப்படுத்திவிட்டு விடுவிடுவென்று அங்கே வருகிறார்.
காவியுடையில் இரண்டு சாமியார்கள். இருவருமே முண்டாசு அணிந்திருக்கிறார்கள். கீழே உட்கார்ந்திருக்கும் சாமியார் வலதுகையில் மூங்கில் கம்பைப் பிடித்திருக்கிறார். அதன் மேல் சம்மணமிட்டு இன்னொரு சாமியார் யோக நிலையில் அமர்ந்திருக்கிறார். சாதாரணமாக இல்லை. மூங்கில் மேலே உட்கார்ந்திருப்பவரின் வலது பக்கம் மட்டுமே மூங்கிலின் மேல் இருக்கிறது. அதுவும் எப்படி? வலது முட்டி மட்டும் அந்தக் கம்பின் மேல்.... போவோர் வருவோரெல்லாம் அதிசயத்துப் பார்த்து டாலர் போடுகிறார்கள்.
“நீங்க ரெண்டு பேரும் யாருப்பா?” நிதானமாக நெருங்கித் தமிழில் விஜாரிக்கிறார் அந்தப் பெரியவர்.
அந்நிய தேசத்தில் காது குளிரத் தாய்மொழி. இருவரும் தலையை நிமிர்த்திக் கண் திறந்து பார்த்தார்கள். பின்னர்....
“யோகிகள்” கோரஸாகப் பேசினார்கள்.
“வித்தை காட்டுபவர்கள் மாதிரி தெரியுது” என்றார். இருவருக்கும் சட்டென்று முகம் தொங்கியது.
“இது என்ன ட்ரிக்? எங்கே கத்துக்கிட்டீங்க?”
“ஐயா.. எங்களது குருநாதர் விலாவாரியாகச் சொல்வார்.. வாங்களேன்..”
“அட்ரெஸ் குடுங்க.. நாளை வருகிறேன்.. இது என்னுடைய கார்டு...” என்று அவரது முகவரி அட்டையை எடுத்து நீட்டினார்.
ஜெலட்டோ சாப்பிடும்போது அந்தக் கடையின் ஜன்னல் வழியாக அவர்களைப் பார்த்துக்கொண்டே இருந்தார். தேசம் கடந்து வந்து... ஹும்... குச்சி ஐஸ் உருகி கை மணிக்கட்டு வரை வழிந்து ஜில்லிட்டதும் சுதாரித்துக்கொண்டு சாப்பிடத் துவங்கினார்.
**
ஊர் எல்லையில் சிறு குன்று. பனிமலை போல பாறைகளால் வெள்ளையாய் இருந்தது. அதன் பின்பக்கம் பர்ணசாலை போன்றதொரு குடில்.மயான அமைதி. அதைக் கிழிப்பது போல எங்கிருந்தோ “க்யூங்...க்யூங்..”. பறவையொலி. உள்ளே நுழைகிறார் இந்தப் பெரியவர். காவலுக்குக் கூட யாருமில்லை. அறை பளிச்சென்று இருக்கிறது. சுவரில் பெரிய சம்ஸ்க்ருத ஓம் போட்ட பதாகைகள் சீன ஷாலின் படங்களில் வருவது போலத் தொங்குகிறது.
"ஐயா...” குரல் கொடுக்கிறார்.
திரைச்சீலைகளுக்குப் பின்னே நெடியதொரு உருவம் நிழலாய்த் தெரிகிறது. திரை விலக நேரே வந்து நின்று கைகூப்புகிறது.
“சற்குணம் சார்.. என்னைத் தெரியுதா?”
கண்கள் சுருக்கிப் பார்க்கிறார்.
“யாருப்பா? தெரியலையே”
“கே.கே.எம் மெட்ரிக் ஸ்கூல். சைதாப்பேட்டை.. பத்தாம் வகுப்பு “ஈ” பிரிவு. ரஞ்சித்...”
“யே.. ரஞ்சித்து?”
“இப்ப நான் வெறும் ரஞ்சித் இல்லே.. ரஞ்சிதானந்தா”
“அடப்பாவி.. சொன்னா மாதிரி நெசம்மாவே சாமியாராயிட்டியா?”
“ம்..” அவரின் கண்களை நேரே பார்க்க ரஞ்சித்துக்கு.. சாரி.. ரஞ்சிதானந்தாவுக்கு குறுகுறுத்தது.
“பெரிய பெரிய மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பாரதம். அதுல பொறந்துட்டு ஏண்டா இப்படி ஊரை அடிச்சுப் பொழைக்கிறீங்க? உங்களுக்கே வெக்கமா இல்லே...” அவரது கூச்சலில் அந்த குடில் தரைமட்டமாகிவிடும் போல அதிர்ந்தது.
“சார்.. உங்கப்பா வாத்தியார். உங்க தாத்தா ஜமீந்தார். வசதியான குடும்பத்துல சகல சௌகர்யங்களோட வாழ்ந்தீங்க.. எனக்கு அப்படியில்லே... குடிகார அப்பன்... ஓடிப்போக.. வாசல்ல யாரையோ பார்த்துக்கிட்டே இருக்கிற அக்கா.. டுபாக்கூர் குடும்பம்.. ஸ்கூல் ஃபீஸ் கட்டறதுக்கு பிச்சை எடுத்தாங்க.. பத்தாவதுல தொன்னூத்தஞ்சு பர்ஸண்டேஜ்.”.
பக்கத்திலிருந்த ”டீச்சர்ஸ்..” பாட்டிலை ஒரு க்ளாஸுக்குள் ப்ளக்..பளக்கென்று கவிழ்த்து ஐஸ்க்யூப்ஸ் போட்டு மணிக்கட்டை ஆட்டி ஒரு மிடறு குடித்தான். அவனையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தார் சற்குணம் டீச்சர். “ஹா...” என்ற பெருமூச்சுக்குப் பிறகு தொடர்ந்தான்.
“என்ன புண்ணியம்? பதினொன்னு கூட சேர முடியல.. கோயிலுக்குப் போடா... பாவமெல்லாம் கழுவிக்கலாம்னு அம்மா.. பேச்சியம்மன் கோயிலுக்கு தொரத்திவிட்டாங்க... அங்கதான் முனியப்பன் பழக்கம் ஏற்பட்டுச்சு... “. நிப்பாட்டினான். சிரித்தான். “முனியப்பன் யாருன்னு நீங்க கேட்கமாட்டீங்கல்ல.. நானே சொல்றேன்..”
“முனியப்பன் அமாவாசைக்கு அந்தக் கோயில்ல குறி சொல்ற ஆளு. வளமான கற்பனை உண்டு. நகை திருட்டுப்போனது... புருசன் கள்ளத்தொடர்பு.. பொண்டாட்டி ஏமாத்தறான்னு.... வகைவகையா பொய் சொல்லுவாரு.. அப்படி சொல்லிக்கிட்டே.. ஹேய்... ஊய்.... ஆத்தா...ன்னு உடம்பை உதறி கத்திட்டு.. கையை உதறினாக்கா... அப்படியே விபூதி கொட்டும்.. பௌர்ணமி பூஜையப்போ... வாயிலேர்ந்து ஸ்படிக் லிங்கம் எடுப்பாரு.. மொத்த சனமும் மெய்சிலித்துக்கிட்டுக் கன்னத்துல போட்டுக்கும்....”
இன்னொரு ஸ்மால் ஊற்றிக்கொண்டு தொடர்ந்தான் ரஞ்சித்..ச்சே.. தொடர்ந்தார்.. ரஞ்சிதானந்தா..
“பக்கத்துலேர்ந்து எல்லாம் பார்த்துக்கிட்டிருந்தேன்.. ஒரு நா அவரோட குறி ஷோ முடிஞ்சப்புறம் தனியாப் போயி.. முனி சாமி எனக்கும் சொல்லித்தர்றீங்களா?ன்னு கையைக் கட்டிப் பவ்யமாக் கேட்டேன்.. பீடிய வாயிலேர்ந்து எடுத்துட்டு.. ச்சீ போடா நாதாரி..ன்னு திட்டி அனுப்பினாரு... அவரு விபூதி எடுக்கிற ட்ரிக் எங்க கத்துக்கிட்டார்னு தெரியும்...அங்க போயி....”
இதற்கு மேல் சற்குணம் சாருக்கு பொறுமையில்லை. “ச்சே..ச்சே.. என்னோட ஸ்டூடண்ட்... நல்லாப் படிச்சு உத்தமமான மனுஷனா வருவேன்னு நினைச்சேன்.. ச்சீ..ச்சீ... உன்னோட சேர்ந்து....” என்று வசனத்தை முடிக்காமலே வாசலை நோக்கி நடந்தார்.
“டுமீல்”
சற்குணம் சார் அதிர்ச்சியோடு திரும்பினார்.
ரஞ்சிதானந்தா தரையில் குப்புறக் கிடந்தான். அவனைத் தாண்டி ரத்தம் தரையில் கோணல்மாணலாய்க் கோடு போட ஆரம்பித்திருந்தது. பின்னால் அரை நிஜார் போட்ட ஒருவன் துப்பாக்கியுடன் “ஹே... யூ.. மூவ்.. மூவ்...” என்று துப்பாக்கியை ஆட்டியாட்டி சற்குணம் சாரை விரட்டிக்கொண்டிருந்தான்.
“நீயா?” என்ற சற்குணம் சாரின் கண்ணில் தண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது.
“அப்பா.. ரொம்ப நாளா நீ என்ன பண்ணிக்கிட்டிருக்கே.. உன் கம்பெனி பேரென்ன கேட்பீங்க.. வந்த புதுசுல ஒரு க்ளாஸ் தயாரிப்புக் கம்பெனில இருந்தேன். இந்த ரஞ்சித்து சாமியாராயிட்டேன்னு எங்கிட்டே பேசிக்கிட்டிருந்தான். அப்போ.. விபூதி கொடுக்கிறது... லிங்கம் எடுக்கிறதெல்லாம் மக்கள் இப்போ நம்பறதில்லை.. புதுசா எதுவும் பண்ணினா கோடி கோடியா அள்ளிடலாம்ன்னு ஆசைக் காட்டினான். திக்னெஸ் கம்மியா இருந்தாலும்... வஜ்ஜிரம்போல உறுதியா க்ளாஸ் மெட்டீரியல் ஒண்ணு சோதனை முயற்சியில தயாரிச்சாங்க.. அதுல மூணு பக்கம் கால் வச்சு மேலே ஒரு க்ளாஸ் போட்ட முக்காலி ஒண்ணைத் தயாரிச்சோம்.. அதுக்கு மேலே ஒரு க்ளாஸ் ஷீட்டு.. அது மேலே ஒருத்தனை உட்கார வச்சு.. கீழே ஒருத்தனை ஒரு பக்கத்துல சும்மா கம்பு மாதிரி ஒண்ணைக் கொடுத்து பிடிக்க வச்சுக்கச் சொல்லி.. சோதனை முயற்சியா பார்க் ஓரத்துல உட்காரச்சொன்னோம்.. அன்னிக்க்கு மட்டும் இருநூறு டாலர் கிடைச்சுது.. “
“அடப்பாவி. உன்னை கெமிகல் இஞ்சினியரிங் படிக்கவச்சு அமெரிக்கா அனுப்பினா.. இதெல்லாமா பண்றே” அவருக்கு மனசு வலித்தது.
“ப்போ... மாசம் ஆறாயிரம் டாலர்... ஆளுக்குப் பாதி... எக்ஸ்ட்ரா மணி... ரெண்டு பேரு மட்டும் செஞ்சா ஆறாயிரம்.. இதுவே இருபது பேர் செஞ்சா. பத்து மடங்கு கூடுதலா பணம் கொட்டும்... டெக்னாலஜி என்னோடது.. உட்கார ஆள் பிடிக்க வேண்டியது அவன் வேலை.. மாத்தி மாத்தி செஞ்சோம்.. பணம் கொட்டுது... ஆனா நீ இப்படி இங்க வருவேன்னு நினைக்கலை.. ஓம் தொங்கற சுவத்துல நானும் இவனும் இந்த மாதிரி உட்கார்ந்திருந்த ஃபோட்டோவைப் பார்த்துட்டு உங்களோட அரிச்சந்திரன் மனசு போலீஸுக்கு ஃபோன் போடச் சொல்லும்.. சாரிப்பா....அடுத்த பிறவி...ச்சே.. வாட் எ யூஸ்லெஸ் டயலாக்..”
டுமீல்.
பின்குறிப்பு: அஷ்டமா சித்திகள் தெரிந்த ரஞ்சிதானந்தா மஹா யோக்கியர் என்று இதற்கு நல்லத்தனமான க்ளைமாக்ஸ் ஒன்றும் வைத்திருக்கிறேன். நேரமிருப்பின் எழுதுவேன்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails