Saturday, August 20, 2016

கணபதி முனி - பாகம் 43: அக்னியில் தோன்றிய முனி

பெல்காமில் நடைபெற்ற காங்கிரஸ் அமர்வு முடிந்தவுடன் தேவவிரதனைச் சந்திக்க நாயனா நேரே கோகர்ணம் சென்றார். மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் தேவவிரதனுக்கு திருமணம் நடைபெற்றது. அவரது மனைவி ஷ்ரத்தா தேவி கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு மூத்தோர்களின் உதவி தேவைப்பட்டது.
“விசாலாக்ஷி உங்களுக்கு உதவியாக இருப்பாள். நீங்கள் திருவண்ணாமலைக்குப் புறப்படுங்கள்” என்று நாயனா அவர்களை கிளப்பினார். அப்போது தேவவிரதனின் சிஷ்யரான பெரும் செல்வந்தர் மகன்லால் பம்பாய்க்கு அழைப்புவிடுத்தார். வசிஷ்ட கணபதி முனியின் கோகர்ண விஜயம் தெரிந்து ஓடோடி வந்திருந்து பம்பாய்க்கு பிடிவாதமாக அழைத்தார்.
கணபதி முனி, தேவவிரதன் மற்றும் அவரது மனைவி ஷ்ரத்தா தேவி மூவரும் மகன்லாலின் விருந்தினர்களாக ஒரு மாதம் பம்பாயில் தங்கியிருந்தனர். ஒரு நாள் மகன்லாலில் மனைவி ”ஷ்ரத்தா பிள்ளை பெற்றபின் நீங்கள் அனைவரும் கிளம்பலாம்.. அதுவரையில் இங்கே தங்கியிருக்கலாமே” என்று கெஞ்சினார்.
“அம்மா.. தங்கள் வாத்சல்யமான பாசத்திற்கு தலை வணங்குகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இருந்தாலும் இந்தப் பேறு காலத்தில் எனக்கு திருவண்ணாமலை சென்று பகவானையும் விசாலாக்ஷி அம்மையாரையும் பார்க்க வேண்டும் என்ற பேராவல் எழுந்துள்ளது. மன்னிக்கவும்.. எங்களுக்கு சந்தோஷமாக விடையளியுங்கள்...” என்று கைக் கூப்பினார்.
ஷ்ரத்தாதேவி இன்றோ நாளையோ பிரசவம் என்றிருந்த நிலையிலும் நிறைமாத கர்ப்பஸ்த்ரீயாக திருவண்ணாமலைக்கு மூவரும் பயணப்பட்டார்கள். ஷ்ரத்தாதேவியின் பகவான் ரமணர் தரிசன வைரக்கியமே இதற்கு காரணம்.
திருவண்ணாமலை வந்தடைந்தார்கள். விசாலாக்ஷியைக் கண்ட மறுகணம் ஷ்ரத்தாதேவிக்கு தனது தாயைக் கண்ட மகிழ்ச்சியும் துள்ளலும் ஏற்பட்டது. ஆசிரமத்திற்குச் சென்று ஸ்ரீரமண தரிசனம் செய்தார்கள். ரமணரின் தெய்வீகத் தோற்றம் ஆண்டவனே மனித உருக்கொண்டு இப்பூவுலகில் நின்றது போன்று பரவசப்பட்டு ஷ்ரத்தாதேவியின் கண்களிலிலிருந்து நீர் தாரைதாரையாய்க் கொட்டியது.
நெடுந்தூரப்பயணத்தால் ஒரு ஆண் குழந்தை இறந்து பிறந்தது. அனைவரும் சொல்லொணாத்துயரம் அடைந்தார்கள். தேவவிரதனும் ஷ்ரத்தா தேவியும் திருவண்ணாமலையில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து பின்னர் கோகரணம் திரும்பினார்கள்.
கணபதி முனி மாமரக் குகையை விட்ட நகரவேயில்லை. முப்போதும் தவத்தில் இருந்தார். தவம் கலைந்த சில நேரங்களில் சூத்ர க்ரந்தங்கள் எழுதினார். வேத உபநிடத இரகஸியங்களை “விஸ்வ மீமாம்ஸா” என்ற பெயரில் அனைவரும் இரசிக்கும்படி எழுதினார்.
1925ம் வருடம் கொஞ்ச காலம் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டார். இருந்தலும் விடாமல் தவமியற்றினார். விசாலாக்ஷியும் குடும்ப பாரத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஸ்ரீவித்யா உபாசகியாக சாதகம் செய்துகொண்டிருந்தார்.
இச்சமயத்தில் ஒரு அசம்பாவிதம் நடந்தது. போலியாக சீர்த்திருத்த கொள்கைகளை ஆரவாரமாய்க் கூக்குரலிடும் உண்மையற்றவர்களின் முகமூடியைக் கிழித்தெரியும் நிகழ்ச்சி.
தென் தமிழகத்தில் சேரன்மாதேவி என்கிற கிராமம். இங்கு வி.வி.எஸ் ஐயர் என்பவர் ஒரு கலாசாலை தொடங்கினார். அதன் பெயர் பாரத்வாஜ குருகுலம். விசேஷம் என்னவென்றால் உறைவிடமும் குருகுலத்தில் இணைந்திருந்தது. தேசப்பற்றோடு சகோதரத்துவத்தையும் அவர்களிடத்தில் விதைப்பதே இதன் பிரதான குறிக்கோள். ஒரு பிராமண சமையல்காரரை குருகுல சாப்பாட்டுக்காக வேலைக்கு அமர்த்தியிருந்தார். அப்பிராமண காங்கிரஸ்காரர்கள் சிலர், ஆஸ்ரமத்திற்கு கொடையளிப்பவர்கள், அப்பிராமண சமையல்காரரை பணிக்கமர்த்தும்படி வி.வி.எஸ் ஐயருக்கு நெருக்கடி தந்தார்கள். ஐயர் கணபதி முனியிடம் ஆலோசனைக் கேட்டு அதன்படி நடக்கலாம் என்றார். அவர்களும் அதற்கு சம்மதித்தார்கள்.
சாதாரணமாக இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது என்று கணபதி முனிக்குப் புலப்பட்டது.
“சமையற்காரர் பணிக்கு நான் ஒரு ஹரிஜனைப் பரிந்துரைக்கிறேன்” என்று கணபதி முனி தீர்மானமாக சொன்னார். ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக அனைவரும் செய்வதறியாது திகைத்தார்கள். இச்சூழ்நிலையில் ஐயர் திடீரென்று உயிர்துறந்தார். இந்தச் சண்டையும் ஆஸ்ரமும் ஒன்றாக முடிவுக்கு வந்தது. கணபதி முனிக்கு வருத்தமாக இருந்தது. அப்போது கீழ்கண்ட ஸ்லோகம் வடித்தார்.
ராத்ரிர்கமிஷ்யதி பவிஷ்யதி சுப்ரபாதம்
பாஸ்வான் உதேஷ்யதி ஹஷிஷ்யதி பங்கஜாதம்
இத்தம் விசிந்தயதி கொசகதே த்விறேபே
ஹா ஹந்த ஹந்த நளிநீம் கஜ உஜ்ஜஹார

பொருள்: இரவு கவிந்த போது தாமரை மலரானது ஒரு வண்டினை அதன் இதழ்களுக்குள்ளேயே வைத்து மூடியது. உள்ளுக்குள் அகப்பட்ட வண்டானது “இரவு கடந்து பகலில் சூரியன் உதிக்கும்போது இத்தாமரையானது மலரும். அப்போது நான் தப்பித்து பறந்துவிடுவேன்” என்று நினைத்துக்கொண்டது. அந்த சமயத்தில் ஒரு யானை அந்த மலரைப் பறித்து தனது காலடியில் போட்டு நசுக்கும் போது உள்ளிருந்த வண்டையும் கொன்றுவிட்டது.
1925 நவம்பரில் கணபதி முனி மச்சிலிப்பட்டின சனாதன தர்ம சபா அழைப்பின் பேரில் சென்றார். அவரது சிஷ்யரான செருவு ராமகிருஷ்ணய்யாவின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
செவுரு கிருஷ்ணய்யாவின் தந்தை சைனுலு. பெரிய பண்டிதராக இருந்தாலும் அவர் ஒரு பழமைவாதி. அப்போதைய மத சடங்குகளைச் சாடி சமூக விடுதலை பற்றிய கணபதி முனியின் கொள்கைகளை அவர் வெறுத்தார். அப்படிப்பட்டவரை தனது வீட்டில் தங்கவைப்பது பெரும்பாவம் என்று கருதினார்.
”அப்பா... கணபதி முனி அவர்களை நம் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். தாங்கள் தயை கூர்ந்து அனுமதி தர வேண்டும்.”
”ஊஹும். புரட்சி என்ற பெயரில் பல புதிய மாற்றங்களை புகுத்த எண்ணும் அவன் எனது கிரஹத்தில் தங்குவது கூடாது. இதை நான் ஒருக்காலும் அனுமதிக்கமாட்டேன்” என்று ஒற்றைக்காலில் நின்றார் சைனுலு.
கிருஷ்ணைய்யா கெஞ்சிக் கூத்தாடி மன்றாடிப் பார்த்தார். எதற்கும் பயனில்லை. கடைசியாக
”இன்றொருநாள் அவரது சிஷ்யர்களுக்கு மதிய உணவளிக்கலாம் என்று நினைக்கிறேன். தாங்கள் இதற்காவது ஒத்துக்கொள்ள வேண்டும்” என்று கைகூப்பினார்.
”ம்.. சரி..” என்று அரைமனதாக ஒத்துக்கொண்டு கணபதி முனி வருவதற்குள் வீட்டை விட்டு வெளியேறினார். 
கணபதி முனியும் அவரது சிஷ்யர்களும் உணவருந்திவிட்டு சென்றார்கள். அவர்கள் சென்று வெகுநேரம் ஆன பின்பு வீடு திரும்பினார் சைனுலு. வீட்டைப் புனிதப்படுத்துவதற்காக தீ மூட்டி ஹோமம் தொடங்கினார். அப்போது எழுந்த ஹோமத்தீயில் கணபதிமுனியின் உருவம் தெரிந்தது. அவருக்கு கைகால் நடுங்கியது. தான் காண்பது மெய்யா? அல்லது மாயத்தோற்றமா? என்று புரியாமல் தவித்தார். இல்லை. அங்கு தெரிவது கணபதி முனிதான் என்று தெளிந்தார்.

“ஆஹாஹா.... ஒரு தெய்வப் பிறவியை. மஹானை தவறாக எண்ணிவிட்டோமே” என்றெண்ணி அவரைப் பார்க்க ஓடினார்.
”ஸ்வாமி என்னை மன்னித்தருள்வீர். தங்களைத் தவறாக நினைத்த பாவி நான்” என்று அரற்றி நெடுஞ்சான்கிடையாக அவரது பாதங்களில் நமஸ்கரித்து சிஷ்யராகவும் பெரும் பக்தராகவும் மாறினார்.
**
மச்சிலிப்பட்டிணத்திலிருந்து நாயனா விஜயவாடா சென்றார். கோவிந்தராஜுலு வெங்கட சுப்பா ராவ் என்ற வழக்கறிஞர் அவரது சிஷ்யர். அவரது வீட்டில் தங்கினார். இருவரும் மங்கலகிரி என்ற க்ஷேத்திரத்திற்குச் என்றார்கள். அந்த இடம் சான்னித்தியம் மிக்கதாக கணபதிமுனி உணர்ந்தார்கள். வேதக்கடவுளான இந்திரனின் புனித இடம் அது.

அங்கிருந்த நாட்களில் அவரது பேச்சைக் கேட்ட சில பண்டிதர்கள் எகத்தாளமாகப் பேசினார்கள். அக்குழுவின் தலைவராக இருந்த பகாயஜி கணபதி முனியை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் கட்டுரையை கணபதி முனி எழுத எண்ணிக்கொண்டிருக்கும் போதே தனது தவறை உணர்ந்த பகாயஜி அவரிடம் மன்னிப்புக் கோரினார்.
1925ம் வருடக் கடைசியில் நாயனா திருவண்ணாமலை வந்தடைந்தார். ஸ்ரீ ரமணாஸ்ரமத்தின் அமைதிப்பூங்காவான நிலையை சில சம்பவங்கள் மாசுப்படுத்துவதை அறிந்தார். பக்தர்கள் கொடுக்கும் தட்சிணைகளை பையில் போட்டுக்கொள்ள, பக்த கேடி ஒருவர் மேனேஜராக அமர எத்தனித்தார். அந்த சந்தர்ப்பத்தில் ஸ்வாமி நிரஞ்சானந்தாவை ஆஸ்ரமத்தின் நிரந்தர மேனேஜராக அமர்த்தி இந்த சிறு குட்டையைக் குழப்பும் நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தொடரும்...

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails