Saturday, August 20, 2016

கணபதி முனி - பாகம் 42: காங்கிரஸ் அமர்வுகள்

1923-ம் வருஷம் கடைசி முறையாக உமா சகஸ்ரத்தை திருத்தும் பணியில் ஈடுபட்டார்.
தனது சொந்த மண்ணான கலுவராயியில் அவரது மகன் மஹாதேவா ஜாகையிருப்பார் என்று கணபதி முனி எண்ணினார். ஆனால் விசாலாக்ஷிக்கு தேக அசௌகரியம் இருந்ததால் அவருக்குத் துணையாக மகனும் மருகளும் அருகிலிருக்க அவசியமானது. திருவண்ணாமலையில் வீடு பிடித்தார்கள். சிஷ்யர்களின் அடிக்கடி வந்து போனார்கள். வரும்போதெல்லாம் விசாலாக்ஷிக்கும் உதவி செய்தார்கள். ஆனால் கணபதி முனி திருவண்ணாமலை மாமரக் குகையிலேயே வசித்து வந்தார்.
1923ம் வருஷம் டிசம்பர் திங்கள் காகினாடா பிராந்திய இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு அதன் வரவேற்புக் கமிட்டி செயலாளர் சாம்பமூர்த்தி கணபதி முனிக்கு பேச அழைப்பு விடுத்தார். 1916ம் வருஷம் ஒருதரம் இதுபோன்ற காங்கிரஸ் மாநாட்டில் கணபதி முனி பேசினார். அப்போது சில முக்கிய பிரச்சனைகளுக்கு அவரது ஆலோசனையைக் கேட்டார்கள். இம்முறை பெண்களின் சுதந்திரமும் அவர்களது உரிமைகளைப் பற்றியும் பேச அழைத்திருந்தார்கள்.
மாநாட்டில் பேசிய ஏராளமானோர் பெண்களுக்கு சம உரிமை என்பது பற்றிப் பேசினர். ஆனால் கணபதி வேதங்களில் குறிப்பிட்டபடி ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் ஹோமம், யக்ஞம் மற்றும் சிரார்த்தம் போன்ற மதச் சடங்குகளில் சம உரிமை வேண்டும் என்று கோரினார். மேலும் வேத வேதாந்தங்களை அவர்களும் பாடம் செய்ய அனுமதி அளிக்கவேண்டும். நம்முடைய தேசத்தின் கருப்பு நாட்களில் பெண்களை இதுபோன்ற சடங்குகளிலிருந்து ஒதுக்கிவைத்தது வருந்தவேண்டிய விஷயமாகும்.
ஆன்மிக விஷயங்களில் அனைத்து உரிமைகளும் மறுக்கப்படாமல் பெண்களுக்கு வழங்கினால் எஞ்சியிருக்கும் அனைத்தும் அவர்களுக்கு சித்திக்கும். வேதவழியல்லாது பின்பற்றப்படும் அனைத்து மூடத்தனங்களும் உடனடியாக நிறுத்தப்பட்டு, அறிவொளிச்சுடர் வீசும் ஆனந்தமயமான வாழ்க்கைக்கு ரிஷிகள் வகுத்த பாதையில் நாம் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கணபதி முனியின் இந்தப் பேச்சு எதிர்மறையாக எண்ணம் கொண்ட பலரை இத்திசைக்கு திருப்பியது. இதில் ஈர்க்கப்பட்ட ஆந்திரா காங்கிரஸ் பிரமுகர்கள் கணபதி முனியை பிரதான பேச்சாளாரக, ஹரிஜனங்களின் பிரச்சனையைப் பற்றி அலமுருவில் பேசுவார் என்று அறிவித்தது. ஆந்திராவின் பெருவாரியான பண்டிட்டுகள் இதில் கலந்துகொன்டார்கள். இவர்களில் பலர் இதற்கு முன்னர் கணபதி முனியைப் பார்த்தது கூட கிடையாது.
அவரது பெருமையை அறியாது அவரது பொருள் நிரம்பிய பல அறிவுரைகளை ஏற்க மறுத்தனர். ஆனால். முதன் முறையாக ஒரு மகாமுனியையும் அவரது முதன் பார்வையில் தெறித்த இறைமையும் அவர்களை இழுத்தது. அவரது தோற்றம் கடவுள் மனிதனாக அவதாரமெடுத்து வந்தது போலிருந்தது. சமூகத்தில் நிலவிவரும் சம்பிரதாயங்களையும் அவதானிக்கும் அன்றாட சடங்குகளையும் தர்மத்துடன் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
காலத்துடன் இசைந்து செல்ல வேண்டிய அவசியத்தை உணரச்சொன்னார். தீண்டாமை தர்மமேயில்லை என்று முழங்கினார். மேலும், குடும்பமோ அல்லது தனியொருவரின் விருப்பு வெறுப்புகளை சமூக நீதியாக கொண்டு வரக்கூடாது என்று கண்டித்தார். முஸ்லீம்கள் மற்றும் கிருஸ்துவர்களிடம் புழ்ங்கும் போது இல்லாத தீண்டாமை இந்துக்களாகிய ஹரிஜனங்களிடம் பழகும் போது மட்டும் ஏன் அனாவசியமாகத் தலைதூக்குகிறது? என்று கேள்வி எழுப்பினார். உடனே இவ்வழக்கத்தையெல்லாம் விட்டொழிக்காவிடிலும் கொஞ்சம் கொஞ்சமாக தவிர்ப்பது சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்று அறிவுறுத்தினார்.
பண்டிட்டுகளில் சில விடாக்கொண்டர்கள் இருந்தார்கள். அவர்களைத் தவிர்த்து எஞ்சியவர்கள் சாஸ்வதமான தர்மத்தை கடைபிடிக்க கணபதிமுனியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டனர். காங்கிரஸ்காரர்கள் கணபதிமுனி அரசியல் தலைமையேற்று வழிநடத்தவேண்டும் என்று விரும்பினார்கள்.
திருவண்ணாமலை திரும்பும் வழி நெடுக இதுபோன்று கூட்டங்களில் பேசினார். தேசிய காங்கிரஸ் இயக்கத்திற்கு இந்த உத்வேகப் பேச்சும் அதன் மொழியும் மிகவும் அவசியமாக இருந்தது. இதில் கலக்கமுற்ற அதிருப்தி பண்டிட்டுகள் சிலர் ராமக்ருஷ்ண சைனலு என்பார் தலைமையில் கணபதி முனியை வசைமாரிப் பொழிய அணி திரண்டனர்.
சைனலு கணபதிமுனியைக் கண்டனம் செய்து நிறைய கட்டுரைகள் எழுதினார். ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக கணபதி முனி தகுந்த பதிலெழுதியவுடன் அவர் அமைதியானார். கணபதிமுனியின் விவாதங்களும் அரிய தகவல்களும் காங்கிரஸ்காரர்களின் பேருதவியாக இருந்தது. அவரை ஆந்திரா காங்கிரஸில் உள்ளே இழுக்க எவ்வளவோ போராடியும் காங்கிரஸ்காரர்களால் முடியவில்லை. இவ்வகைப் பேச்சுக்களின் பயனற்றதன்மை அவருக்குத் தெரிந்திருந்தது. மேலும் தனது தவத்திற்கு இடையூறாக வரும் எதையும் அவர் விரும்பவில்லை.
ஆந்திரா காங்கிரஸ்காரர்களால் சாதிக்க முடியாமல் போனது தமிழக காங்கிரஸ்காரர்களால் முடிந்தது. ”வெறும் பெயரை மட்டும் போட்டுக்கொள்கிறோம் மற்றபடி காங்கிரஸின் இதர செயல்பாடுகளில் நீங்கள் முழுவீச்சுடன் செயல்படவேண்டாம்” என்று அவரை சேர்த்துக்கொண்டார்கள். 1924ம் வருடம் காங்கிரஸின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டு; அதே வருடம் திருவண்ணாமலையில் நடைபெறும் தமிழக மண்டல காங்கிரஸ் மாநாட்டின் வரவேற்புக் குழு சேர்மேனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது வெளிப்படையான தைரியமான பேச்சு உலகமக்களைக் கவர்ந்தது. காந்திஜி தலைமையில் பெல்காமில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டார். இங்கே எழுதமுடியாத தீண்டாமை பற்றிய அவரது விளக்கத்தை காந்திஜி, டாக்டர் அன்னி பெஸண்ட் அம்மையார் மற்றும் மதன் மோகன் மாளவியா போன்றோரால் மனமாரப் பாராட்டுப்பெற்றது. சமஸ்கிருதத்தில் அவரது எளிமையான பேச்சும் தேவையான கருத்துகளைத் தக்க சமயத்தில் வெளியிடும் பாங்கையும் அனைவரும் சிலாகித்தார்கள்.
அடுத்த நாள் காந்திஜி ஹிந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்ற முடிவுசெய்தார். கணபதிமுனி சம்ஸ்க்ருதத்தை தேசிய மொழியாக்கவேண்டும் என்று இடைமறித்தார். இது ஒரு அரசியல் நகர்வு என்று காந்திஜி அதை மறுத்துவிட்டார். அரசியல் என்று நினைவுபடுத்தியத்திற்கு நன்றி தெரிவித்து தனது உறுப்பினர் பதவியை மீண்டும் புதுப்பிக்க மறுத்துவிட்டார். இருந்தாலும் 1929ம் ஆண்டு வரை சமூக சீர்திருத்தமான ஹரிஜன மேம்பாட்டிற்காகப் பாடுபட்டார். “ராஷ்ட்ர நிபந்தனம்” என்கிற அரசியல்வாதிகளுக்கான அறிவுரைக் கையேடு ஒன்றையும் எழுதினார்.
தொடரும்....

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails