Saturday, August 20, 2016

வாழ்த்துக்கு நன்றி

டைட்டில் கார்டு: பாராதிராஜா பட கைகூப்பி வணங்குதல்.
ஒவ்வொரு வாழ்த்தும் ஒருவித நறுமணம். தித்திக்கும் கல்கண்டு. ஒரு சுகானுபவம். பிறந்தநாள் வாழ்த்து வெள்ளத்தில் மூழ்கி இழுத்துச் செல்லப்பட்டு திக்குமுக்காடிப்போனேன். இன்றுதான் கரை ஒதுங்கினேன். நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறது. இங்கிவர்களை யான் பெறவே என்ன தவம் நான் செய்துவிட்டேன்!!
இந்த நண்பர் குழாம் என் பூர்வஜென்ம புண்ணியப்பலன். இந்த ஜென்மத்து பூஜாபலன். அகாலவேளைகளில் நேரம் கிடைக்கும் போது, கால் முளைத்தக் குழந்தை தத்தக்காபித்தக்கா என்று நடப்பது போல எழுதுகிறேன். கூடத்தில் (ஃபேஸ்புக்கில்) சுற்றி அமர்ந்திருக்கும் உற்றார் உறவினர்கள் இரசித்து... லயித்து... "ஆஹா.. குட்டீ.. அழக்....கா இருக்கே. ஓடிவா... த்தோ... வாடா.... கண்ணா.." என்று இருகரம் நீட்டிக் கொஞ்சுவது போல இணைய நண்பர்கள் ஊக்கமளித்து இன்னும் தீவிரமாக இயங்க உசுப்பேற்றுகிறார்கள். சகலருக்கும் நமஸ்காரங்கள். ஏதோ கோணங்கித்தனத்தால் கொணஷ்டையினால் எவரையாது எவ்வகையிலாவது இம்சித்திருந்தால் இந்தப் பாவியை மன்னியுங்கள். மன்னிப்பவர் தேவர். மறப்பவர் தேவாதிதேவர்.
மன்னையையும் ராஜகோபாலஸ்வாமியையும் நினைக்காமலும் இணைக்காமலும் வாழ்த்துகள் இல்லை என்பது தனி விசேஷம். திரையில் முகம் பார்த்து அகம் நுழைந்த நட்புகளின் பாசம், மன்னார்குடி மாடு மேய்க்கும் மாயவன் கோபாலனை புன்னை மரத்தடியில் நேரே பார்த்த பக்தன் போல பிரமிக்கவைக்கிறது. எழுத்து விற்பன்னர்கள் சாகசம்காட்டும் இந்த ஃபேஸ்புக்கில் நான் அடாசு ரகம். என்னைக் கவர்ந்த விஷயங்களையும், நான் விளையாடித் திரிந்த ஊர் பற்றியும், சொக்கிப்போன இசைபற்றியும், சக ஸ்நேகிதங்களுடன் கொட்டமடித்ததையும், எப்பவாவது (சிறு)கதையும், (கவிதை எழுதினால் வீடு தேடி வந்து கையை ஒடித்துவிடுவார்கள். எனக்கு இடது கையால் ஷவரம் செய்துகொள்ளத் தெரியும்!  ), அப்பப்போ ஏனோதானோ கட்டுரைகளும் எழுதுகிறேன். இலக்கியக் கம்பு சுழற்றி சிலம்பாட்டம் ஆடி சோனிகளுக்கு சாந்து பொட்டும் சந்தன பொட்டும் வைப்பவர்களிடமும் , அரசியல் சர்ச்சைகளிலும் மூக்கை நுழைக்காமலிருக்கிறேன்.
"இன்னும் ஒரு கரண்டி ஊத்துங்கோ..." என்று ஒரு வாய் இழுத்து மறுவாய்க்கு உள்ளங்கை குழித்துக் கேட்க வைக்கிற, உரைக்காத, தக்காளி ரசம் போல எழுத ஒவ்வொரு முறையும் முயற்சிக்கிறேன். ருஜியின் தரம் இரசிக்கும் நீவிர் அறிவீர். தி பெட்டர்இந்தியா என்றொரு வலைத்தளமுண்டு. இந்தியாவைப் பற்றி சுவாரஸ்யமான, ஒழுக்கமான, ஸ்ரேயஸ்ஸான, பரம பாவனமான சங்கதிகளை மட்டும் பிரசுரம் செய்து நல்லபிள்ளை என்று பெயரெடுக்கிறார்கள். (கூகிள் அறிவியல் கண்காட்சியில் இறுதிச் சுற்றுக்கு வந்த பதினாறு இளம் விஞ்ஞானிகளில் ஆறு பேர் இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் என்ற ஆக்கப்பூர்வமான நேர்மறையான செய்தியே லேட்டஸ்ட்.)
ஆகஸ்டு பதினாறில் பிறந்த என்னை என்றும் பதினாறாக நினைக்க வைத்த பிறந்த நாள் வாழ்த்துகள்!!
நன்றியும் மகிழ்ச்சியும் வெறும் வார்த்தையில் வாரா! சங்கிலித்தொடர் வாழ்த்துகளால் ஆயிரம் இதழ் கொண்டு மலர்ந்த இதயத்தாமரையின் துடிப்பிற்கு இடையில் இடையறாது அனைவருக்கும் கீழே எழுதியிருப்பதை முணுமுணுத்துக் கொண்டிருக்கிறது.
"ந.'லப்'.ன்.'டப்'.றி.'லப்'.ந.'டப்'.ன்.'லப்'.றி.'டப்'.ந.'லப்'.ன்.றி.'டப்'"
(முடிந்தவரை எல்லோருக்கும் பிரத்யேகமாக நன்றி நவில முயற்சிக்கிறேன்)

2 comments:

'பரிவை' சே.குமார் said...

வாசம் வீசும் நன்றி நவிலல் அண்ணா....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Paramasivam said...

தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.🌹🌹

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails