Monday, July 25, 2011

காதல் கணினி - III

முன்கதைச் சுருக்கம்:
மணா ஒரு மத்தியத் தர வாழ்க்கை நடத்தும் குடும்பத்திலிருந்து மென்பொருள் தயாரிக்கும் பொறியாளனாக திருச்சியிலிருந்து வந்து பட்டிணத்தில் மேன்ஷன் வாழ்க்கை நடத்துபவன். தன்னுடன் வேலைப் பார்க்கும் மிருதுளா என்ற கும்பகோணத்துப் பெண்ணை லவ்வி சினிமாவிற்கு அழைத்து வருகிறான். அவனுடன் அஜய் என்னும் அவனுடைய அலுவலக நண்பனும் சினிமா பார்க்க வருகிறான். பாதி சினிமாவில் யாரோடோ வண்டியேறிப் போன மிருதுவைக் காணவில்லை. ஒரு வாரம் கழித்து அவள் இறந்துவிட்டதாகக் கூறி போலீசார் மணாவை விசாரணைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இனி.......

 **********மூன்றாவது மாட்யூல் ***********

எதிர் முனையில் கேட்ட விஷயத்தால் ஒரு கணம் துணுக்குற்றார் மோகன். தன்னுடைய இருபது வருட காக்கிச் சட்டை வாழ்வுக்கு களங்கம் வந்து விடுமோ என்று அச்சப்பட்டார். கொடுவா மீசையை ஒரு முறை அனிச்சையாக புசுபுசு ரோமக் கை தடவிக் கொடுத்தது. தொண்டையைக் கனைத்துக் கொண்டு மீண்டும் யாருக்கோ அலைபேசினார்.

"உம்... யாரு கன்ஃபர்ம் பண்ணினா?"

"......."

"அடச்சே! பேரென்ட்ஸை கூப்பிடுங்கய்யா”

"......"

"எந்த இடம்.."

"....."

"யோவ்! இது தாம்பரம் தாண்டி கிடைச்ச பாடிய்யா. சொதப்பாதீங்க.."

அலைபேசி உரையாடல் நடக்க நடக்க மணா வியர்த்திருந்தான். அவனுக்கு மீண்ட உயிர் சொற்ப ஆயுளில் தொலைந்து போனது. தொப்பியைக் கழட்டி மடியில் வைத்திருந்த பின் சீட் கான்ஸ்டபிள் விறைப்பாகி அவசராவசரமாகத் தலையில் கவிழ்த்துக் கொண்டார்.

"அரைகுறையா ந்யூஸ் குடுக்கறானுங்க.. டிபார்ட்மெண்டுக்குள்ள ஒரே ந்யூசென்ஸாப் போச்சு. எல்லாப் பயலும் யாராவது மந்திரி, மந்திரி பொண்டாட்டின்னு கையக் காலப் பிடிச்சு காசு கொடுத்து வேலைக்கு வந்துடறானுங்க... வந்து ஒன்னும் தெரியாம நம்ம தாலிய அறுக்குறானுங்க...ச்சே..." என்று அலுத்துக் கொண்டார்.

"வண்டிய நேரா பாடியைக் கண்டுபிடிச்ச இடத்துக்கு விடுப்பா" என்று டிரைவருக்கு உத்தரவிட்டு சிக்னல் மீறி சாலை விதிகளை முறித்து சீறிப் பாயும் வண்டிகளையும், பாதி ரோட்டில் வண்டி நிறுத்தி பெட்டிக் கடையில் சிகரெட் பிடிக்கும் அழிச்சாட்டிய ஜென்மங்களையும் பார்த்துக் கொண்டே யோசனையில் ஆழ்ந்தார்.

வழவழ வாழைத்தண்டுக் கால் தெரியா சாக்ஸ் அணிந்த குட்டைப் பாவாடைப் பணிப்பெண்களை சுமந்த கிங் ஃபிஷர் ஒன்று மீனம்பாக்கத்தில் இருந்து மேலே ஜிவ்வென்று ஏறியது. அடுத்த மாதம் மணாவுக்கு ஆன்-சைட் அசைன்மென்ட் ஒன்று இருக்கிறது. கனத்த இதயத்தோடு அண்ணாந்து பார்த்து புள்ளியாக வானத்தில் மறைந்து போன விமானத்தின் வாலைத் தேடிக்கொண்டிருந்தான். தாம்பரம் தாண்டும் முன் ஒரு டீக்கடையில் வண்டியை நிறுத்தி டீயும் ஒரு ரூபாய் பட்டர் பிஸ்கட்டும் சாப்பிட்டார்கள். மணாவும் பல் விலக்காமல், வாய் கொப்பளித்து சத்தம் போட்ட வயிற்றை அடக்கினான். அவன் பர்ஸ் பிரித்து பணம் கொடுப்பதை தடுத்து மோகன் சில்லரைக் கொடுத்தார். ஜெயிலில் களிக்கு முன்னால் இப்பொது டீயில் ஆரம்பிக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்தது மணாவிர்க்கு. காட்டாங்குளத்தூர் பெட்ரோல் பங்க் தாண்டி ஜீப் போன வேகத்தில் தலைக்கு குல்லா இல்லாமல் உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டர் மோகன் தலையும் மணாவின் தலையும் பிய்ந்து போகும் படி சிகை சிறகடித்துப் பறந்தது.

மெயின் ரோடிலிருந்து இடது பக்கமாக ஒரு செம்மண் ரோடில் புழுதியோடு இறங்கியது போலீஸ் ஜீப். ஒரு இருநூறு மீட்டரில் கருவேல முட்புதர்கள் காடாக மண்டியிருந்த இடத்தில் கொசகொசவென்று கூட்டம் மண்டியிருந்தது. விஷயம் கேள்விப்பட்டு அக்கம்பக்கத்திலிருந்து பிணம் பார்க்க ஆர்வமாக கூடியிருந்தார்கள். ஒரு பனியன் ஆள், ரெண்டு மேல் சட்டை போடாத கைலி ஆட்கள், வயல் வேலை செய்யும் பெண்கள், நாலைந்து கிழவி, ரெண்டு ஆட்டுக்குட்டி, ஒரு தெரு நாய் என்று அனைத்து புறநகர் ஜீவராசிகளும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். லோக்கல் போலீசார் இருவர் காவலுக்கு நின்று “நவுரு.. நவுரு... போ... அந்தாண்டை... நவுரு...” என்று லத்தியாட்டி விலக்கிக் கொண்டிருந்தார்கள்.

ஜீப்பிலிருந்து மணாவை இறக்கி அழைத்துச் சென்றார்கள். வழியில் நின்ற ஒரு காது வளர்ந்த கிழவி மணாவைக் கொலைகாரன் போல ஊடுறுவிப் பார்த்தது. அவனது வெறித்த பார்வை அந்தப் புதரையே மையம் கொண்டிருந்தது. அகன்று பரந்த அந்தத் தரிசு நிலத்தில் வாயுபகவானைத் தடுக்கும் கட்டிடங்கள் இல்லாததால் ஆளைத் தூக்கும் காற்று வேகமாக அடித்தது. மேல் சட்டை படபடவென்று அடித்துக் கொண்டு அவனிடமிருந்து விடுதலைக்கு போராடியது. மோகன் அவரின் அரசாங்க அத்தாட்சியான சிங்கம் பதித்த தன் காக்கித் தொப்பியை பறக்காமல் இருக்கப் பிடித்துக் கொண்டார்.

இவ்வளவு காற்று அடித்தும் மணாவிற்கு பயத்தில் உடம்பெல்லாம் சொட்டச் சொட்ட வேர்க்க ஆரம்பித்தது. கர்சீஃப் எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டான். அவனது உடம்பில் அட்ரிலின் அதிகமாக சுரக்க ஆரம்பித்ததன் அடையாளமாக கால்கள் சற்றே பின்னின. கைகளில் லேசான நடுக்கம் ஏற்பட்டது. குற்றம் புரிந்தவனுக்கு உள்ளுக்குள் ஏற்படும் இராசயன மாறுதல்கள் அவனுக்குள்ளும் தோன்றியது.


கருவேலப் புதர் நெருங்க நெருங்க ஒரு துர்வாடை குப்பென்று அடித்தது. மோகன் கர்ச்சீப் எடுத்து மூக்கை மறைத்துக் கொண்டார். மணாவிற்கு வயிற்றைப் புரட்டியது.

“பாடி டீகம்போஸ் ஆயிடுச்சா...”

“ஆமாம்.. சார். நிச்சயம் அஞ்சு நாளாவது ஆகியிருக்கும் போலருக்கு...” கொஞ்சம் விவரம் தெரிந்த அனுபவம் வாய்ந்த போலீஸ்காரர் ஒருவர் அட்டென்ஷனில் பதிலலித்தார்.

“யாரு முதல்ல பார்த்தா”

“ஒரு ஆடு மேய்க்கற பையன் சார்”

“எத்தன மணிக்கு”

“காலையில ஆறு மணிக்கு சார். ஆட்டுக்குட்டியோட கழுத்துல கட்டின கயிரு கருவேலப் புதர்குள்ள மாட்டிகிச்சு போலருக்கு. “ம்மே ம்மே”னு கத்தியிருகு. இவன் போய் இழுத்துப் பார்த்திருக்கான். வரலை. அப்படியே பக்கத்துல போய் எட்டிப் பார்த்தா, டெட் பாடியோட ஜீன்ஸ் பேண்ட் பெல்ட்டுல கயிரு சிக்கியிருந்துருக்கு, ஆடுத் திமிறித்திமிறி இழுக்க இழுக்க பாடி அசஞ்சிருக்கு. பய பயந்து “ஓ”ன்னு அலறியடிச்சுகிட்டு ஓடிவந்துட்டான்.”

“அந்தப் பய பாடியைத் தொட்டானா?”

“இல்ல பயந்து போய் வெடவெடத்து நின்னுருக்கான்.. பின்னாடியே மீதிக் கொஞ்சம் ஆடு மேய்ச்சுகிட்டு வந்த அவங்க அப்பாரு இவனோட கூப்பாட்டைக் கேட்டு ஓடி வந்து பார்த்திருக்காரு. குலை நடுங்க பெல்ட்லேர்ந்து கயிரை மட்டும் மெதுவா எடுத்து விட்டு ஆட்டை ஓட்டிக் கிட்டுப் போயிருக்காங்க....”

“ நீங்க பாடியைப் பார்த்தீங்களா சார்”

“ஏன்... இன்னும் இல்லை...” என்று புருவம் சுருக்கினார் மோகன்.

அவ்வளவு நேரம் புதர்க்கு அருகில் நின்று விசாரித்துக் கொண்டிருந்த மோகன் பக்கத்தில் சென்றார். டெட் பாடியைப் பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார். அவருக்கு பார்க்கவே அருவருப்பாக இருந்தது. கர்சீப்பால் தன் முகத்தை மூடியிருந்தாலும் அவர் சுளித்த முகம் கண்களில் எதிரொலித்தது.

“அந்தாளைக் கூப்பிடுங்க...” என்று மணா இருக்கும் திசையில் கைக் காட்டினார்.

கான்ஸ்டபிள் சென்று மணாவை பக்கத்தில் அழைத்து வந்தார். மணா யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் விடுவிடுவென்று பக்கத்தில் சென்றான். பார்த்துவிட்டு சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டான். வெளியே சொல்ல முடியாத ஒரு வித உணர்வில் விருட்டென்று திரும்பியவனின் சட்டையை கருவேல முள் குத்தி இழுத்து டர்ரென்று கிழித்தது.

அதைப் பற்றி கவலையே படாமல் மோகன் கொண்ட கொள்கையில் உறுதியாய் “இவ தான அந்தப் பொண்ணு” என்று  மணாவைப் பார்த்து தலையாட்டினார்.

எதுவும் சொல்வதற்கு மணாவிற்கு வாய் எழும்பவில்லை. கண்களில் மின்மினிப் பூச்சிகள் பறந்தது. ஒரு மாதிரியாக மயக்கம் வரும் போல இருந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. பேச்சு எழும்பவில்லை.

“சொல்லு....” கொஞ்சம் அதட்டி மிரட்டலாய்க் கேட்டார் மோகன். பக்கத்தில் நின்றிருந்த ஒரு வெள்ளை வேஷ்டி சட்டைப் பொதுஜனத்திர்க்கு தூக்கி வாரிப் போட்டது.

“தெரியலை சார்! பனியனும், பேண்டும் அன்னிக்கி அவ போட்டுருந்தது தான்...”

“இன்னொரு தடவை மூஞ்சியப் பார்த்துட்டு சொல்லு..”

நெஞ்சுரத்தோடு மீண்டும் புதர் பக்கத்தில் சென்றான் மணா. முகம் மொத்தமும் பெரிய பெரிய கொப்பளங்களாக தண்ணீர்க் கோர்த்துக் கொண்டு உருத்தெரியாமல் இருந்தது. தீப் புண்ணில் ஜலம் கோர்த்தது போல முகம் முழுக்க சிறிதும் பெரிதுமாய் உருண்டைகள். ஈக்கள் மொய்த்தன. ஆசிட்டால் முகத்தைச் சுட்டுக் காய்ச்சியிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.

“என்னய்யா... அது மிருதுளாதானே” பின்னாலிருந்து குரல் கொடுத்தார் மோகன்.

“அது மா...தி..ரி..த்..தா...ன் சார் இருக்கு” என்று திக்கினான் மணா.

“ஃபாரென்ஸிக் டீமுக்கு சொல்லிட்டீங்களா?” வாயிலிருந்து கர்சீப்பை எடுக்காமல் பக்கத்தில் இருந்த ஒரு காக்கியிடம் கேட்டார் மோகன்.

“ஆன் தி வே சார்”

“அந்தப் பொண்ணோட பேரண்ட்ஸ்”

”சொல்லியச்சு. இன்னேரம் வந்துருக்கனும். பார்க்கச் சொல்றேன் சார்”

மோகன் மிகவும் கலவரமானார். அருகில் நிற்கும் மணாவைப் பார்த்தால் அவ்வளவு கொடூரமானவனாகத் தெரியவில்லை. இருந்தாலும் இந்தக்  கேசில் தெரிந்த சாட்சியம் அவன் ஒருவன் தான். முகம் கன்னாபின்னாவென்று உருத்தெரியாமல் சிதைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தால் யாராவது மன நோயால் பீடிக்கப்பட்டவனது அகோரக் கொலையாக இருக்குமோ? என்றும் இது தொடருமோ என்றும் சந்தேகித்தார்.

பாரன்சிக் டிபார்ட்மெண்ட் வண்டி வந்து நின்றது. ஒரு நீலக் கலர் பெட்டியைத் தூக்கிக் கொண்டு இரண்டு ஆபீசர்கள் நடந்து வந்தார்கள். நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு இரைக்க இரைக்க வெள்ளை பனியன் ஆளை இழுத்துக் கொண்டு வரும் கருப்பு மோப்ப நாய் வந்து இறங்கியது. பணிரெண்டு மணிக்கு சுள்ளென்று சுட்டெரித்தான் ஆதவன்.

“ஏம்ப்பா! ஆம்புலென்ஸுக்கு ஃபோன் பண்ணியாச்சா” திரும்பவும் யாரையோ ஏவினார் மோகன்.

“வரேம்மா.. கட்டாயம் சீக்கிரம் வரேன்.. “ வீட்டிலிருந்து எதற்கோ அவரை அழைத்தவர்களுக்கு சமாதானமாகப் பொய் ப்ராமிஸ் செய்தார். இன்னும் கொஞ்சம் தள்ளி ஓரமாக இருக்கும் ஒரு மாமரத்தடியில் போய் ஒதுங்கினார். சிகரெட் ஒன்றைத் தட்டி பற்ற வைத்தார். மூளை கசங்கியது. உள்ளுக்குள்ளே ந்யுரான்களின் போராட்டம் நடந்தது. ஒரு டீ குடித்தால் தேவலாம் போல இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தார். கடை எதுவும் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை.

மோப்ப நாய் இரண்டு முறை செத்த மிருதுளாவைச் சுற்றி ப்ரதக்‌ஷிணம் வந்தது. பின்பு நேரே ஒரே பாய்ச்சலாக மணாவின் மீது இரண்டு கால்களைத் தூக்கிக் கொண்டு ஏறியது. பதறிப் போய் விலகினான் மணா. அப்புறம் காவலர்களை இழுத்துக் கொண்டு ஹைவே வரை குனிந்துகொண்டே தரையை மோந்து ஓடியது. தார் சாலையோரத்தில் சிறிது நேரம் தரையை மோந்து பார்த்துவிட்டு வலது புறம் திரும்பி ஒன்வேயில் பெட்ரோல் பங்க் வரை சென்றது.

 நாய் இங்குமங்கும் பலமுறை ஓடியது.  நண்பகல் தாண்டியும் அலைந்தது. ஃபாரன்ஸிக் ஆட்கள் கிளவுஸ் மாட்டி பவுடர் தூவி சம்பிரதாயங்கள் அனைத்தையும் முடிப்பதற்கும் ஆம்புலன்ஸ் வந்து நின்று ஸ்ட்ரெக்சர் இறக்குவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

”அட்டாப்ஸி முடிஞ்சதும் என்னை மொபைல்ல கூப்பிடுங்க” என்று சொல்லியனுப்பினார். வெறும் கொலையாக இல்லாமல் முகத்தை சுத்தமாக சிதைத்திருந்ததும் அந்தப் பெண்ணின் பெற்றோர் எழுப்பிய ஓலமும் அவரை மிகவும் சங்கடப்படுத்தியது. கும்பகோணத்திலிருந்து வாடகை இண்டிகாவில் வந்திருந்த அவர்களும் ஆம்புலன்ஸை தொடர்ந்தார்கள்.

எவரும் இல்லாத; ப்ளாட் போடாத; வெற்றிடமாக இருந்த அந்தத் தரிசு நிலத்தை மணாவும் மோகனும் ஒரு முறைச் சுற்றி வந்தார்கள். அவர்கள் மெயின் ரோடு ஏறும் போது ஒரு சில்வர் கலர் இன்னோவா ஒன்று அந்த செம்மண் ரோடில் வேகமாக இறங்குவதைப் பார்த்தார். ஜீப்பை நிறுத்தச் சொல்லி அவர் கீழே குதித்து போலீசின் ஒரிஜினல் ஸ்டைலில் இறங்கினார். இன்னொவாவிலிருந்து முன்னிரண்டு கதவுகளைத் திறந்து இறங்கினர் ஜெயந்த்தும், விஜய்யும்.

“வணக்கம் சார்!” குனிந்து சீன வணக்கம் சொன்னான் விஜய். கொஞ்சம் விளையாட்டானப் பேர்வழி. விஷயாதி. ஜெயந்த்தின் ஜூனியர். இருவரும் ஜெயவிஜய லீகல் கன்சல்ட்டன்ஸியின் லாயர்ஸ். “ஒரு ரெண்டு நிமிஷத்ல கால் பண்றேன்” என்று சொல்லி வேறு கிளையண்ட்டை கட் செய்தான் ஜெயந்த். இன்ஸ்பெக்டர் மோகனுக்கு ஒரு பணிவான சல்யூட் வைத்தான்.

“நீங்க எங்க இங்க?” என்று வார்த்தைக்கு வார்த்தை ‘ங்”ஙினார் மோகன்.

“இப்ப நாங்க மணாவோட லாயர்ஸ் சார்!”

வெருட்டென்று திரும்பி மணாவை சுட்டெரிக்கும் தீ போல பார்த்தார் மோகன்.

”சார்! அவரை உங்க மூனாவது கண்ணால எரிச்சுடாதீங்க. பஸ்பமாகிடப் போறாரு. அவருக்கும் எங்களைப் பற்றி ஒன்னும் தெரியாது. அவரோட கம்பெனியில் முக்கியமான ப்ராஜெக்ட் ஒன்னை அவருக்கு அசைன் பண்ணி இருக்காங்க. அதுக்கு அவர் ரொம்ப முக்கியமாம்.  அவங்க கம்பெனியோட ஹெச்.ஆர். குயில் ஒன்னு பறந்து எங்க ஆபீசுக்கு வந்து சிறகை ஆட்டி எங்க கிட்ட உதவி கேட்டுது. பாருங்க.. நான் கூட அகில உலக சூப்பர் ஸ்டாரி ஷகிலாவோட “ஒன்னும் தெரியாத பாப்பா” படம் பார்த்துகிட்டு இருந்தேன். என்னை ஒரே அனத்தா அனத்தி இங்க கூட்டிகிட்டு வந்துட்டார் எங்க பாஸ். பாதியிலயே விட்டுட்டு வந்துட்டேன். குளிச்சு முடிச்சு துவைட்டிகிச்சோ இல்லையோ! பாப்பாவுக்கு ஜலதோஷம் வந்துடும்னு ரொம்ப கவலையா இருக்கு எனக்கு”

“விஜய் கொஞ்சம் அடங்கிறியா” என்று முறைத்தான் ஜெயந்த்.

“சார்! ஐ அம் வெரி ஸாரி. இப்போதைக்கு இவரை நீங்க ரிமாண்ட் பண்ணாதீங்க. கையில பேப்பர்ஸோட வந்துருக்கோம். இந்தாங்க..”

பரபரவென்று பிரித்துப் பார்த்தார். காற்றில் சடசடத்துப் பறந்த பேப்பர்களை கான்ஸ்டபிளிடம் தந்தார்.

”இவரை இங்கேயிருந்தே அப்படியே நேரா உங்க கார்ல அழைச்சுகிட்டு போய்டறீங்களா.. இல்ல ஸ்டேஷனுக்கு வந்து.....” குரலில் ஒரு கடுப்பு இருந்தது.

”இல்ல.. சார்.. இவரை இப்படியே ரிலீஸ் பண்ணி எங்ககிட்ட விட்டுடுங்களேன். ராயப்பேட்டா வரைக்கும் பேசிக்கிட்டே போனோம்னா கேசை ஒரு தடவ அலசி ஆராய்ஞ்சுடுவோம்.” சிரித்துக்கொண்டே கேட்டான் விஜய்.

ஒரு தடவை தோளைக் குலுக்கினார். “இவர் தான் முக்கியமான சாட்சி. சாட்சியா குற்றவாளியான்னு இன்னும் முடிவாகலை. பத்திரமா பார்த்துக்க...”

“...வேண்டியது எங்கள் பொறுப்பு. கவலைப்படாதீங்க...” என்று மோகன் ஆரம்பித்ததை விஜய் முடித்தான்.


விஜய்யின் நேர்த்தியான ட்ரைவிங்கில் ஹைவேயில் வழுக்கிக்கொண்டு சென்னையை நோக்கிப் பறந்தது இன்னோவா. இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞிகளைக் கண்டுவிட்டால் சுருளிராஜன் குதிரை போல இன்னோவா, ”நோ நோ” என்று ஓட்டத்தைக் குறைத்துக் கொண்டது. முன்னாலிலிருந்து திரும்பி உட்கார்ந்து மணாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தான் ஜெயந்த். முழு கேஸ் ஹிஸ்டரியையும் சைதாப்பேட்டை தாண்டுவதற்குள் மணாவின் வாயிலிருந்து பிடிங்கிவிட்டான். “ம்..ம்...” என்று மணா இழுக்கும் போதெல்லாம் நிறைய கதை சொல்லி அவனிடம் இருந்து செய்தியைப் பறித்தான்.

சைதையிலிருந்து நேராக அடையார் பக்கம் வண்டியை செலுத்தினான் விஜய். கிண்டி அண்ணா பல்கலைக் கழகம் தாண்டும்போது வலது கைப்பக்கம் கண்ணைக் காண்பித்து

“பாஸ்.. இதுக்கு ஏன் தெரியுமா சில்ட்ரண்ஸ் பார்க்குன்னு பேரு?”

“ஏன்”

“ஜோடி ஜோடியா வந்து வருங்காலத்துல சில்ட்ரண்ஸ் எப்படி பெத்துக்கரதுன்னு ப்ரத்யேக பயிற்சி எடுத்துக்கறாங்களாம். அதனாலத்தான்...”

“ நீ அடங்க மாட்டே,....”


“பாஸ் நேரா ஆபீஸா... இல்லைன்னா தலைவரோட மேன்ஷனா?”


”மேன்ஷனுக்கு போ. காலையிலிருந்து அலைஞ்சி ரொம்ப ஓய்ச்சலா இருப்பாரு..”

“என்னோட மேன்ஷன் உங்களுக்கு தெரியுமா?” என்று அப்பாவியாய் கேட்டான் மணா.

“உங்க கூட வேலைப் பார்க்கிற பொண்ணுங்க ஹாஸ்டல் கூட எங்க இருக்குன்னு நாங்க விவரமா விரல் நுனியில புள்ளிவிவரம் வச்சுருக்கோம்...உங்க ஆபீஸ் பத்மா எங்க இருக்கா சொல்லட்டா..”

“விஜய்ய்ய்ய்ய்ய்ய்ய்”

ஈவினிங் சில தாத்தாக்களும், தாத்தாவாகப் போகிறவர்களும் அருகம் புல் ஜூஸ் குடித்துவிட்டு லொங்கு லொங்குவென்று நடையாய் நடந்து கொண்டிருந்தார்கள். பனியன் குலுங்க செல்வாக்கு மிக்க ஒரு மாது ஓடி அண்டம் அதிர வைத்தாள். ஞாயிறு மாலையில் ஞாயிறு மெல்ல மறைந்து கொண்டிருந்தான். மஞ்சள் தங்கமென ஜொலித்தான். தன்னுடைய காரை எடுக்க முடியாதபடி குறுக்கால் தனது வாகனத்தை நிறுத்திவிட்டுப் போன ப்ரகிருதியை தேடிக்கொண்டிருந்தார் ஒரு குடும்ப இஸ்திரி. அந்தம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.


“பாஸ்! அங்க ஜோடியா கைக்கோர்த்துகிட்டு போறதோட அங்க லட்சணங்களைப் பார்த்தா போன கேஸ்ல புருஷனைக் கொன்ன புண்ணியவதி அந்த கிரோம்பேட்டை பார்வதி மாதிரி இல்ல.” என்று வெளியே ஒரு வாலிபனோடு ஒட்டிக்கொண்டு ஜோடியாக மெரீனா உள்ளே கடலில் கால் பதிக்கப் போன ஒரு இளம் பெண்ணைப் பார்த்துக் கேட்டான்.

“விஜய். ஒரு அரை மணி நேரத்தில ஐம்பது நாள் உன் கடைவாய் ஓரம் வழிய வேண்டிய ஜொள்ளு விட்டுட்டே. நேரே ரோடைப் பார்த்து வண்டி ஓட்ட மாட்டே!! இன்னும் அடங்க மாட்டியா?” என்றான் ஜெயந்த்.

”சரி பாஸ்” என்று இரண்டு கையையும் விட்டுவிட்டு ஒரு கை மடக்கி இன்னொரு கையால் வாயைப் பொத்திக் கொண்டான் விஜய். சீரியஸாக பார்த்துக் கொண்டே கண்ணகி சிலை சிக்னலில் வண்டியை எடுக்கும் போது பின் சீட்டில் இருந்து மணா காது கிழிய 

“சா.....ர்....ர்.......” என்று திக்கினான்.

ஜெயந்த் திரும்பி அவனைப் பார்க்க அவன் கண்ணகி சிலை தாண்டி கடலிருக்கும் திசையில் கையைக் காட்டி.....

“சா...ர்....ர்.... அங்க....அங்க.....”

“என்னப்பா.....”

விஜய் கண்களை கடற்கரை ஓரம் அலை பாயவிட்டான்.ஒன்றும் புரியாமல்

“குச்சி ஐஸ் வேணுமா?” கிண்டலடித்தான் விஜய்.

“இல்ல சார்... அங்க போறா சார்.......அங்க.... யார் கூடவோ......”

“யாரு...எங்க....”

“அங்க...அங்க... அது மிருதுளா....”

ஜெயந்த்தும் விஜய்யும் திகைத்துப் போனார்கள்!!!
தொடரும்....

பட உதவி: www.dinamalar.com

Saturday, July 23, 2011

சர்வரும் பட்டினத்தாரும்

சர்வர் குண்டு போட்டதைத் தொடர்ந்து அடுக்கடுக்காக நிறைய வேலைகள். என் கர்மவினைப் பயன் குறுந்தொடர் ஒன்று ஆரம்பித்தாலே தலைக்கு மேலே வெள்ளம் போல ஆளை மூழ்கடிக்கும் வேலைகள் வந்துவிடுகிறது. பகவான் உங்கள் எல்லோரையும் என் எழுத்தில் இருந்து காத்து ரட்சிக்கிறார் என்று நினைக்கிறேன். வாழ்க வையகம். இராப்பொழுதுகளில் "காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்று பாடிய பட்டினத்தார் படித்துக் கொண்டிருக்கிறேன். காதறுந்த ஊசியை டவுனான சர்வரும் என்று மாற்றிப் போட்டு படித்தால் கூட பட்டியின் வாசகம் எனக்கு முழுமை அடைகிறது. சர்வரின் தொல்லையால் பட்டினத்தடிகளை நாடவில்லை. அடிக்கடி என் சிந்தை வேதாளம் அந்தப் பக்கமும் எட்டிப் பார்க்கும். படித்ததிலிருந்து மனதை  நிரப்பிய சில வரிகளை கீழே கொடுத்துள்ளேன். 
 
உண்டதே உண்டு
உடுத்தியதே உடுத்தி
உரைத்ததே உரைத்து
கண்டதே கண்டு
கேட்டதே கேட்டு
கழிந்தன நாளெல்லாம்.
- திருவெண்காட்டுத் திருவிசைப்பாவில் பட்டினத்தார்
#இந்த ஒரு வாரம் இப்படித்தான் கழிந்திருக்கும் என்று பட்டினத்தார் என்றைக்கோ பாடிட்டு போய்ட்டார்! முக்காலமும் உணர்ந்த ஞானி அவர்.
பின் குறிப்பு: சனிக்கிழமை ப்ளாக் வெறிச்சோன்னு கிடக்கக் கூடாதுன்னு ப்ளாக் சாஸ்த்திரங்கள் சொல்வதால் வளவளான்னு இல்லாமல் சின்னதா இந்தப் பதிவு. ஆனா இந்த டோஸ் நிச்சயம் ஒரு ரெண்டு மூணு நாள் தாங்கும்னு நினைக்கிறேன். பின் நவீனத்துவ தலைப்பு வைத்ததற்கு மாப்பு தாருங்கள். பட்டினத்தாருக்கு நன்றி. 



பட உதவி: http://www.oocities.org/
 -

Thursday, July 21, 2011

காதல் கணினி - II

முதல் மாட்யூல் படிக்காதவர்கள் இங்கே க்ளிக் செய்து படித்து இன்புறவும். இது ஒரு குறுந்தொடர். அருந்தொடராக எழுதலாம் என்று விருப்பம். போகப்போக கொஞ்சம் சயிண்டிஃபிக் சமாச்சாரங்கள் புகுத்தலாம் என்று ஒரு எண்ணம். பயந்து டரியலாகி விடாதீர்கள். பார்க்கலாம்.

******* இரண்டாவது மாட்யூல் *******

இருவரும் தியேட்டரை விட்டு நடை தளர்ந்து முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு வெளியே வந்தார்கள். வாசலில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பீடிப் புகை மண்டலத்தில் நின்ற வயசான ஆட்டோ “எங்க போணும்?” என்று சைகையால் சவாரிக்கு கூப்பிட்டது. அஜய் வேண்டாம் என்று தலையாட்டி வெட்டி விட்டான்.

“மொபைல்ல கூப்பிடேன்”

“இல்ல அஜய்! அவ மொபைல வெறுக்கற வர்க்கம். ’மக்களோட ஒட்டு மொத்த சந்தோஷத்தைப் பறிச்சு குழி தோண்டிப் புதைச்சிருச்சு இந்த மொபைல். ஜனங்களுக்கு ஒரு ப்ரைவசி கிடையாது. சாப்பிடும் போது, பாத்ரூம்ல, கிச்சன்ல, அர்த்த ராத்திரி சந்தோஷமா பொண்டாட்டி பக்கத்துல படுக்கையில கிடக்கும் போது கூட “தாஸா... லார்டு லபக்கு தாஸா”ன்னு ஃபோன்ல கூப்ட்டு கேக்கர்த்துக்கு நாட்ல ரெண்டு காட்டுமிராண்டி இருக்காங்க. திஸ் இஸ் அட்ராஷியஸ். ரிடிகுலஸ். நா மட்டும் இந்த நாட்டுக்கு ராஜாவா இருந்தா ஒட்டு மொத்த மொபைல் கம்யூனிகேஷனையே சட்டம் போட்டு சுத்தமா ஒழிச்சுடுவேன்.’ அப்படின்னு மூச்சு இரைக்க இரைக்க கன்னாபின்னானு ஒருநாள் எங்கிட்ட திட்டினா. நிச்சயம் ஸ்விட்ச் ஆஃப் ஆயிருக்கும். விட்ரு”

மௌனமாக உம்மென்று இருசக்கர வாகன சாஹரத்திலிருந்து வண்டியைப் பிடுங்கி வெளியே எடுத்தான் அஜய். மணா பின்னால் ஏறிக்கொள்ள; உதைத்த வேகத்தில் வண்டி த்ராட்டல் கொடுத்த வலியில் ஏகத்துக்கும் உறும; சுமாரான வேகத்தில் வாயைத் திறக்காமல் ரோடைப் பார்த்து வண்டியோட்டினான். ஆபீசில் கூடுதல் வேலை பார்த்தவர்கள் தத்தம் மேலாளர்களை மனமார 'வாழ்த்தி'க்கொண்டே ஜீவனற்று நாக்குத் தள்ளி வீடு திரும்பிக்கொண்டிருந்தார்கள். வீட்டில் பிக்கல் பிடுங்கல் உள்ளவர்கள் நத்தை வேக இருபதில் வண்டியோட்டி கிரக சஞ்சாரங்களிலிருந்து தன்னை எப்படிக் காப்பாற்றிக்கொள்வது என்ற சிந்தனையில் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

ராயப்பேட்டா சிக்னல் அருகில் பக்கத்துப் பெட்டிக்கடைப் பக்கம் திரும்பி ஓசியில் ஃபில்டர் சிகரட் வாங்கி பற்ற வைத்து அன்றைய கலெக்ஷ்னை கைவிட்டு எண்ணிக் கொண்டிருந்தார் யூனிஃபார்மிலும் கறை படிந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர். காலையில் சுறுசுறுப்பாய் இருந்த சென்னை இன்றைக்கு இப்போதே தூங்கி வழிந்தது. எக்ஸ்ப்ரஸ் அவென்யூவில் இம்மானுடப் பிறவியில் சொகுசாக வாழ கொடுத்து வைத்த சிலர் வாயெல்லாம் பல்லாக ஜாலியாக பொழுது போக்கிக் கொண்டிருந்தார்கள். ராயப்பேட்டா டவர் தாண்டி திருவல்லிக்கேணி பக்கம் கை காட்டித் திரும்பும்போது வேகத்தை குறைத்து

“ஒரு தம் அடிக்கலாமா மணா?” என்றான் அஜய்.

“இல்ல. வேணாம். நேர ரூமுக்கு போ” சுரத்தேயில்லாமல் சொன்னான் மணா.

ஒரு தக்குணூண்டு மாருதி எண்ணூரு உள்ளே நுழைந்தால் தாராளமாக முன்பக்க பின்பக்க கதவு திறந்து தமன்னா போன்ற ஈர்க்குச்சி அழகிகள் கூட வெளியே இறங்கி கால் வைக்க முடியாத ஒரு அக்மார்க் சென்னை நகர குறுக்குச் சந்தில் கொண்டு வந்து மணாவை தரையிரக்கினான். அவன் இறங்குவதற்குள் வாழ்வில் ஒரு நொடியைக் கூட வீணாக்க விரும்பாத கர்மவீரர்கள் இரண்டு பேர் தொடர் ஹார்ன் அடித்தார்கள்.

“நா வரேண்டா...” என்று எதுவும் வம்பளக்காமல் வண்டியை ரவுண்ட் அடித்துத் திரும்பி அஜய் விடை பெற்றான்.

பதிலுக்கு மணா ”பை” சொல்லும்போது அவன் தெருமுனையில் இருந்தான்.

பசித்தது. நேரே ரூமுக்கு போகாமல் மூத்திர சந்து திரும்பி மணக்கமணக்க சரோஜினி தெரு மெஸ்ஸுக்கு போனான். இரவு ஆச்சி மெஸ்ஸில் இரண்டு உள்ளங்கையகல சப்பாத்தியை மசாலா மணத்த குருமா சேர்த்து சாப்பிட்டான். சப்பாத்தி மிருதுவாக மூன்று விரலில் கிழிபடும் பூப்போல இருந்தது. சூடான பால் குடித்தான். கிங்ஸ் ஒன்றை பற்றவைத்து இழுத்துக் கொண்டு ரூமுக்கு நிதானமாக நடந்து போய்க் கொண்டிருக்கும் போது சட்டைப் பையில் ப்ளாக்பெர்ரி சினுங்கியது.

”உம்”

எதிர்முனை பேசியது.

“உம்”

எதிர்முனை பேசியது.

“என்ன பண்ணினீங்க”

எதிர்முனை பேசியது.

“ஷிட்”

சூடானான். மொபைல் இணைப்பைத் துண்டித்தான்.

ஒரேயடியாக பல சிந்தனைகள் மண்டையைப் பிளக்க ரூமில் வந்து ஒரு தம்ளர் தண்ணீர் மடக்மடக்கென்று குடித்தான். ரூமில் யாரோ அவிழ்த்துப் போட்ட அழுக்குப் பேண்ட்டை சுவரோரமாய் ஒதுக்கிவிட்டு காலை நீட்டிப் படுத்தான். எண்ணி  எண்பதாவது வினாடியில் தூங்கிப் போனான்.

***********

mansion


வழக்கம் போல ஏழு மணிக்கு எழுந்தான் மணா. முழுவதும் தீர்ந்த கோல்கேட்டை பிதுக்கி பற்களை சுத்தம் செய்தான். ஐந்து நிமிடம் இயற்கை உபாதைகளை கழித்தான். முகத்தை துடைத்துக் கொண்டு ஆங்கிலப் பேப்பர் புரட்ட ஆரம்பித்தான். அவனைச் சனிக்கிழமை சூரியன் சோம்பலாக எழுப்பிவிட்டிருந்தான். ஏழெட்டு ரவுடி மேகக் கூட்டங்கள் சூரியனின் முகத்தை மறைத்து திருப்திப்பட்டுக்கொண்டது. அடியில் டீ சொட்டிய டம்ப்ளரை ஜன்னல் சுவற்றுக் கட்டையில் தேய்த்து பேப்பரில் இருந்து கண் எடுக்காமல் கழனியை உறிஞ்சினான். செல் அடித்தது.

அஜய் அழைத்தான்.

”என்னடா”

“......”

“ஒன்னும் தகவல் இல்லை”

“......”

“சரிடா! மன்டே ஆபிஸ்ல பார்க்கலாம்”

மொபைலை கட் செய்தான்.

*********

திங்கள்கிழமை ஒரு மெகா ப்ராஜெக்ட் மீட்டிங் ஒன்று வைத்தார்கள். ஒரு ஹவருக்கு பவர்பாய்ன்ட் ப்ரசெண்டேஷனும் ஒன்பது அவருக்கு சுற்றி இருக்கும் சுவருக்குக் கூட புரியும்படியாக அதைப் பற்றி விரிவாக அளவளாவினார்கள். இயற்கை உபாதையான ஒன்றுக்கு இருக்கக் கூட வெளியே விடாமல் நாற்காலியோடு கட்டிப் போட்டு டோட்டல் அடிமையாக்கியிருந்தார்கள். செவ்வாய் அதுபற்றிய டீடைல்டு ரிப்போர்ட் தயாரித்தான். ஆயிரம் லொட்டை சொல்லி தாறுமாறாக மாற்றினார்கள். டீ குடிக்க, சாப்பிட மட்டும் அனுமதித்து சக்கையாகக் கசக்கி பிழிந்தார்கள். மணா மாலைச் சூரியனைப் பார்த்து இரண்டு நாள் ஆகியிருந்தது. புதனும் வியாழனும் கிளைன்ட்டுடன் கான்-கால் என்று சொல்லிப் படுத்தினார்கள். இப்போது காலைச் சூரியனைப் பார்த்தும் இரண்டு நாள் ஆகியிருந்தது. "இன்னும் பத்து நிமிஷத்ல திருப்பி கூப்பிடுவாங்க. கிளையன்ட் இஸ் வெரி இம்பார்டன்ட்" என்று இடைவிடாமல் இரண்டு நாட்களுக்கு ஆபிஸ் கான்ஃபெரென்ஸ் ஹாலில் சொன்னது கக்கூஸ் போய் குளிக்கும் போது கூட பாத்ரூமில் அசரீரியாகக் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்தக் கூத்தில் ஒரு வாரம் தீர்ந்து போய் அடுத்த வெள்ளிக் கிழமை ஜீன்ஸ் போடச் சொல்லி எட்டிப் பார்த்துவிட்டது. இதுவரை மிருதுளா ஆபீஸ் வராதது அப்போதுதான் அந்த "வேலைக் காதலனுக்கு" உரைத்தது.

"மீனா. மிருதுளா வந்துருக்காளா?"

"ஏய் மணா!! அவள ஆளையே காணும்ப்பா? என்னாச்சு?"

"தெரியலை.."

"பி.எம். சதா கேட்டுகிட்டே இருந்தான். ஹெச்.ஆர்ட்ட சொல்லி பர்மனென்ட் அட்ரஸ்ல விசாரிக்க சொல்லிருக்காங்க... எனிதிங் சீரியஸ்? "

"தெரியலை. சரி! ஓ.கே"

இண்டர்காமை கட் செய்தான். இந்த வார இறுதி மாயாஜால் போகலாமா என்று எண்ணியிருந்தான். கொடுத்த சாப்பாட்டுக் கூப்பன்கள் நிறைய மீதம் இருந்தது. சப்வேயின் பதினைந்து இன்ச் பத்து சாப்பிடலாம். மிருதுளா நினைப்பில் எல்லாம் பாழாய்ப் போனது.

சட்டையின் மேல் பாக்கெட்டில் இருந்து ப்ளாக்பெர்ரி துடிதுடித்து அழைத்தது.

"மணா! உன் சுந்தரம் சித்தப்பா பொண்ணு ப்ரீத்தி இருக்காளோன்னோ அவ இருக்கிற பிட்ஸ்பர்க் ஆபீஸ் பின்னாடி பெருமாள் கோவில் இருக்காமே..." என்று ஆரம்பித்து அம்மா பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டாள். சிஸ்டம் ஷட்டவுன் செய்து, கழுத்தால் பெர்ரியை கவ்விக் கொண்டு டூ வீலரை எடுத்து, அடையார் தாண்டி வந்த நாயர் கடையில் நிறுத்தி ஒரு சூடாக ஒரு டீ அடித்து,"என்னடா ச்...ச்..சுன்றது..." என்ற எதிர்முனை அம்மாவுக்கு "டீ குடிக்கறேம்மா..." என்று அலுத்துச் சொல்லி, "ஃபோனில் தானே அம்மா இருக்கிறாள்" என்கிற மிதமிஞ்சிய தைரியத்தில் டீக்கு தொட்டுக்க ஒரு கிங்ஸ் வாங்கி அம்மா கேள்விகளுக்கு "ம்...ம்.." என்று பதிலுரைத்து பற்ற வைத்து, முழுவதும் குடித்து அதைத் கீழே போட்டு காலில் மிதித்து அணைத்து வண்டியை உயிர்ப்பித்து அதன் காதைத் திருகி திருவல்லிக்கேணி ரூமுக்கு வரும் வரையில் தொணதொணவென்று ஊர்க்கதை உலகக்கதைகள் முழுவதும் மூச்சுவிடாமல் பேசினாள் அம்மா. அப்பாவுக்கு இதனாலையே காது கொஞ்சம் மந்தமாகிவிட்டது என்று மணாவின் அத்தைகள் கேலி பேசி சிரித்துக் கொண்டது அவனுக்கு இப்போது ஞாபகம் வந்தது. இடது செவி சிவந்து போய் சூட்டில் தகித்தது. இனி எதைக் கேட்டாலும் அவனுக்கு சூடான செய்திதான்!

***********

தடதடவென்று கதவு தட்டப்படும் ஓசை கேட்டு திடுக்கிட்டு விழித்தான் மணா. வெளியே சனிக்கிழமை பொழுது விடிந்திருந்தது. ஜன்னல் கண்ணாடியில் ஒன்றிரண்டு நிழலுருவங்கள் நடமாடின. வெளியே கனத்த குரலோடு "கா.கா..கா.." என்று ஒரு காக்கா தனியாக கச்சேரி செய்து வரும் சங்கீத சீசனுக்குப் பழகிக் கொண்டிருந்தது.

கண்ணைக் கசக்கி சுற்றிப் பார்த்தான். அரைகுறையாக ஜட்டி தெரிய ரூம் மேட் பேச்சிலர்கள் சிலர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். தலையைக் கீழே தரையில் போட்டு இரு தொடைகளுக்கு இடையே அழுக்குத் தலகாணி கொடுத்தவன் "ஊ...வ்..." என்று ஊளையிட்டு திரும்பிப் படுத்தான்.

“டக்.டக்.டக்.” தொடர்ந்து தட்டினார்கள்.

"யாரு..."

"டக்...டக்..டக்..டக்.."


“வரேன்...”

கதவு க்ரீச்சிட்டு தரையில் தேயத் திறந்தான்.

ஆஜானுபாகுவாக ப்ரஷ் மீசையுடன் ஒரு காக்கிச்சட்டை அதிகாரமாக நின்றுகொண்டிருந்தது. அவர் முகத்திலும் பார்த்த பார்வையிலும் கறார்ப் பேர்வழி என்று எழுதி ஒட்டியிருந்தது. அடுத்த அரை செகண்டில் அறையை ஸ்கான் செய்தார். பக்கத்தில் 'பே' என்று பலநாள் பட்டினி கோலத்தில் லத்தியோடு ஒரு எடுபுடி நோஞ்சான் 502வோ 302வோ தெம்பாக சாய்ந்தவாக்கில் நின்றிருந்தது.

“இங்க யாரு அழகிய மணாளன்......”

“ நாந்தான்..”

“கொஞ்சம் எங்கூட ஸ்டேஷனுக்கு வர முடியுமா?”

“எதுக்கு சார்!”

”மிருதுளான்னு ஒரு பொண்ணோட.."

"......" வாய் பேசாமல் மணாவின் கண்கள் என்னவென்று கேட்டது.

" கொலை தொடர்பாக...”

“சார்! என்ன சொல்றீங்க? மிருதுளாவை கொன்னுட்டாங்களா?”

“ரொம்ப அதிர்ச்சி அடையாதீங்க. இந்தப் புருவம் உயர்த்தி நடிகர் திலகம் நடிப்பெல்லாம் அப்புறம் நாம தனியா வச்சுக்கலாம். இன்னும் நிறைய சீன் பாக்கி இருக்கு. இப்ப நாம போலாமா”

“எனக்கும் அந்தக் கொலைக்கும் தொடர்பு இருக்குன்னு எப்டி சொல்றீங்க..”

"உங்க கூட தானே கடைசியா கூத்து அடிச்சுது அந்தப் பொண்ணு"

"சார். கூத்துன்னேல்லாம் அசிங்கமா சொல்லாதீங்க..."

"சரி.சரி.. எல்லாம் ஸ்டேஷனுக்குப் போய் பேசிக்கலாம்... வாங்க.."

"சார்! நா பல்லு கூட இன்னும் தேய்க்கலை."

“எல்லாம் நா உங்களுக்கு ஏற்பாடு பண்றேன். வாங்க”

“எனக்கு எப்டி தொடர்பு இருக்குன்னு சொல்றீங்க. இன்ஸ்பெக்டர்” மீண்டும் ஒருமுறை குரலுயர்த்திக் கேட்டான் மணா. அதற்குள் ரூமுக்குள் படுத்து உருண்டு கொண்டிருந்த எல்லா தடியன்களும் எழுந்து கைலியை ஒழுங்காகக் கட்டிக் கொண்டார்கள். தலைகளைந்து மஃப்டியில் கைலியோடு இருந்த செக்யூரிட்டி, மேன்ஷன் மேனேஜர், அக்கம் பக்கம் ரூமில் எல்லோரும் முதல் மாடிக்கு வேடிக்கைப் பார்க்க வந்துவிட்டார்கள்.  ஒரு லைவ் அரெஸ்ட் காட்சியைப் பார்க்க கூட்டம் முண்டியடித்தது.

இன்ஸ்பெக்டர் மோகன் ரொம்ப நியாயமான ஆள் என்று போலீஸ் வட்டாரத்தில் பேசிக்கொள்வார்கள். கொண்ட கொள்கையில் பிடிப்பான ஆள். தீர்க்கமாக முடிவு செய்பவர். தீவிர போலீஸ் பரம்பரையில் காவலர் பணிக்காகவே இம்மண்ணுலகில் அவதரித்தவர். இரண்டு முறை கண்களை உருட்டி குற்றவாளியைப் பார்த்தால் குற்றம் புரிந்தவர்கள் தரையை ஈரம் பண்ணி விடுவார்கள். அப்படி ஒரு அரற்றி உருட்டும் மிரட்டல் பார்வை அவருக்கு. நல்ல திரட்சியான தோள்கள் கொண்ட திடகாத்திரமான ஆள். டூப் இல்லாமல் நிஜமாகவே போலீஸ் ஜீப்பை கையால் ஒருக்களிக்கும் திறன் படைத்தவர். ஒரு சுதந்திர தின அணிவகுப்பில் அரசின் தங்கப்பதக்கம் பெற்ற போது சராசரி உயரத்தில் இருந்த தமிழக ஆளுநர் எக்கி எட்டித்தான் பதக்கத்தை மோகன் நெஞ்சில் குத்தினார்.

”எல்லாம் நாம நிதானமா பேசிக்கலாம். என்னோட வாங்க ப்ரதர்” தோளில் கைபோட்டு அழைத்தார். இரண்டடி எடுத்து வைப்பதற்குள் கைலி காலைத் தடுக்கியது.

“இல்ல நீங்க எப்டி...”

“நான் ரொம்ப சாதுவான போலீஸ்னு எல்லோரும் பேசிக்கிறாங்க. எனக்கு அடம் பண்ணினா புடிக்காது. கைகால் முறிஞ்சு எங்களை தூக்கிக்கிட்டு போக வச்சுடாதீங்க. வன்முறைல எனக்கு நம்பிக்கை இல்லை.”

எதிர்த்து பலனில்லை என்று மணாவுக்கு புரிந்துவிட்டது. சண்டித்தனம் செய்தால் ரெண்டு போட்டு பிடரியில் நெட்டித் தள்ளி அழைத்துப்போவார்கள் என்று தோன்றியது. "ஒரு நிமிஷம்" என்றான். பேன்ட் சட்டை அணிந்து கொண்டு மொபைலை எடுத்து பையில்  போட்டுக்கொண்டு அவர்களோடு கிளம்பினான்.

ஜீப்பில் ஏறும்போது அந்தத் தெருவே வேடிக்கைப் பார்த்து. ஆச்சி மெஸ் பையன் நின்று மணாவை அருகில் சென்று உற்றுப் பார்த்து ஊர்ஜிதப் படுத்திக்கொண்டான்.

முன் சீட்டில் போலீசுக்கே உரித்தான ஸ்டைலில் ஜன்னலில் தொங்கிய காதில் கைவிட்டு பிடித்து மிடுக்காக உட்கார்ந்திருந்தார் மோகன். வண்டி சிக்கனலுக்கு சிக்னல் நின்று ஆங்காங்கே சீறிப் பாய்ந்தது. ஆர்.கே மடச் சாலையில் அவருடைய செல்போன் கந்த சஷ்டி கவசம் சொல்லி அழைத்தது.

"ம். சொல்லுங்க"

"....."

"அப்டியா"

"......"

"நெஜமாவா..."

"...."

"சரி. ஓ.கே."

பின்னால் மணா கூட உட்கார்ந்திருந்த கான்ஸ்டபிள் "என்ன சார்?" என்று தைரியமாக கேட்டார்.

நிதானமாக திரும்பி மோகன் சொன்னார்.

"செத்தது மிருதுளா இல்லையாம்...."

மணாவுக்கு போன உயிர் திரும்பி வந்தது!
தொடரும்....

பின் குறிப்பு: சிரசுக்கு மேல ஏகப்பட்ட அலுவல்கள் இருந்ததால் இரண்டாவது மாட்யூல் சிறிது தாமதமாகி விட்டது. அடுத்ததடுத்த பகுதிகள் விரைவில் வெளியிட முயற்சிக்கிறேன். 

பட உதவி: http://www.outlookindia.com/

Monday, July 18, 2011

சனியின் ஆதிக்கத்தில் சர்வர்கள்!

துஷ்ட கிரஹங்கள் மற்றும் துர்தேவதைகள் எல்லாம் அமாவாசை பௌர்ணமி போன்ற தினங்களில் மிகவும் உக்கிரமாக தாண்டவமாடுமாம். அதனால் தான் அலைகடல் கூட அந்த நாட்களில் பேரிரைச்சலுடனும் கொந்தளிப்புடனும் காணப்படும். நாம் அன்றாடம் மாரடிக்கும் இந்த இயந்திரப் பிசாசுகளுக்கு எப்படித்தான் வீக் எண்டுனு தெரியுமோ? கொஞ்சம் கொஞ்சமாக சுதி இறங்கி சனிக்கிழமை காலையில் ஒரேடியாக மண்டையைப் போட்டு படுத்துப் போர்வையை இழுத்து தலையோடுகால் போர்த்திக்கொள்ளும். நம்முடைய வாரக்கடைசியை கழுத்தை நெறித்துக் கொன்றால் தான் இவைகளுக்கு பரம திருப்தி. நம் உயிரை எடுக்கும்; வாட்டி வதைக்கும் உயிரற்ற வஸ்த்துக்கள்.

ஒரு கல்யாணம், காதுகுத்து என்று விசேஷங்களுக்கு பாஸிடம் லீவு கேட்கும் முன் இந்த சர்வர் எஜமான் முன் நின்று "ஐயா! சாமி! நான் என் புள்ளக்குட்டிகூட வெளியூர் போறேன். நல்லபடியா போய்ட்டுவான்னு ஆசீர்வாதம் பண்ணுங்க" என்று மானசீகமாக வேண்டிக்கொண்டு பிரயாணம் மேற்கொள்ள வேண்டும். தவறினால் ஊர் எல்லைத் தாண்டும் முன் நோக்கியா ட்யூனில் மொபைல் கதறி காது சூடேறும் வரையிலும் பாட்டரி ட்ரைன் ஆகும் வரையிலும் தீர்வு வரும் வரையிலும் போகவேண்டிய ஊர் வரை காதும் மொபைலும் ஒட்டி வைத்த போஸில் லோல்பட வேண்டியிருக்கும். ஃபேமிலியுடன் Physically present. Mentally absent என்றாகி விடும். அப்புறம் வீட்டிலுள்ளோர் "மெண்டல் ப்ரெசென்ட்"என்று கூறி எள்ளி நகையாடுவார்கள்.

வெள்ளி இரவோ, சனி காலையிலோ "சார்! கிடைக்கலை" அப்படின்னு அலுவலகத்திலிருந்து குறுஞ்செய்தியாகவோ, மொபைல் மூலம் செவிவழிச் செய்தியாகவோ கிடைத்தால் எல்லையோர இராணுவ வீரனைவிட சுதாரிப்பாக பல முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் பயனாளர்களுக்கு ஒரு ஃபோன் போட்டு "உயர்திரு ஐயா, மன்னித்துக் கொள்ளுங்கள். ஏதோ சிறு தொழில்நுட்பப் பழுது ஆகிவிட்டது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எழுப்பிவிடுகிறோம்" என்று தண்டன் சமர்பித்து விஞ்ஞாபனம் செய்து விட வேண்டும். ஃபோனில் அவர்களை பிடிக்கமுடியவில்லை என்றால் respect -ஆக ஒரு மெயில் அனுப்பவேண்டும். வித் ரிகார்ட்ஸ் கட்டாயம் மெயிலின் காலடியில் போடவேண்டும்.

மாப்பிள்ளை முறுக்கோடு "அது எப்படி ஆகும். எவ்ளோ செலவு செய்தாலும் ஒன்றும் உருப்படி இல்லை."  ஆச்சா போச்சா என்று வானத்திற்கும் பூமிக்குமாய் குதிப்பவர்களுக்கு புன்னகையை முகத்தில் அணிந்து பொறுமையே வடிவான சாந்த சொரூபியாக நின்றால் பிழைத்தீர்கள். ஒரு வார்த்தை "இல்ல சார்.... அது வந்து...." என்று சாக்கு சொல்ல ஆரம்பித்தால் உங்கள் கதை கந்தல். வாயாலேயே புரட்டி புரட்டி எடுத்துவிடுவார்கள். விழுந்து விழுந்து தாஸான தாஸனாக சேவை புரிந்தாலும் கடைசியில் பயனாளர்கள் "இந்த ஐ.டி டிபார்ட்மென்ட்டே சுத்த வேஸ்ட். ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லை" ன்னு நாலு வார்த்தை நாக்கு மேல பல்லைப் போட்டு ஏசாமல் இருக்க மாட்டார்கள்.

உட்கார்ந்த சர்வரை எழுப்புவது அவ்வளவு லேசுப்பட்ட காரியமல்ல. முதலில் சர்வரை நாம் புதுப் பெட்டியோடு வாங்கிக் கொண்டு வந்த முதலாளியை  நடுக்கடலில் மூழ்கியோர் எஸ்.ஓ.எஸ் குரலெழுப்பும் பாணியில் கதறி, கசிந்துருகி, கண்ணீர் மல்கி கூப்பிடவேண்டும். அவருக்கு மாமன் மச்சினர்களுக்கு தட்டுநிறைய பூ, பழம், வெற்றிலைப் பாக்கோடு பத்திரிகை வைப்பது போல, சர்வரின் முழு ஜாதகத்தையும் மெயிலில் "கனவான்களே! நீங்கள் கொடுத்த சர்வர் கட்டையை நீட்டிப் படுத்துவிட்டது. உடனடியாக கவனிக்க உங்கள் ஆட்களை அனுப்பவும்"  என்று எழுதி "அவசரம்! அவசரம்!" என்று Subject:-இல் இட்டு டாப் ப்ரியாரிட்டி மார்க் செய்து அனுப்பவேண்டும். மெயில் போய் சேரும் முன் ஒரு முறை ஃபோனில் கூப்பிட்டு பேசிவிடுவது உத்தமம்.

நம்முடைய சப்போர்ட் அக்ரீமென்ட்டை பொறுத்து "கையில ஆளே இல்லையே" "பசங்க எல்லாம் கஸ்டமர் ப்ளேசுக்கு போயிருக்காங்க" "வந்தவுடனே ஃபர்ஸ்ட் கால் உங்களுதுதான்" என்று பல டயலாக்குகளை அள்ளி வீசுவார்கள். உடனே மறுமுனையில் "சரி ஆமாம் ஓ.கே" போன்ற தலையாட்டி ஒத்துக்கொள்ளும் பூம்பூம் மாடு வார்த்தைகளை உதிர்த்துவிட்டீர்கள் என்றால் போயே போச்சு. குடி கெட்டது. நாலு நாள் கழித்து வந்து இருக்கோமா செத்தோமா என்று எட்டிப் பார்ப்பார்கள். "இன்றைக்கே வந்து பார்த்தால்தான் எங்களின் நூறு கோடி ரூபாய் பிசினஸ் செழிக்கும். இல்லையேல் என்னுடைய சீட்டைக் கிழித்து விடுவார்கள்" என்று கூவ வேண்டும். முடிந்தால் ரெண்டு சொட்டு கண்ணீர் கூட விட்டுக் காட்டி ஃபோனிலேயே மூக்கைச் சிந்தலாம். பலனிருக்கும்.

ஒரு குரல் அழுத பிறகு, சப்போர்ட்டுக்கு ஒரு ஆள் அனுப்புவார்கள். முதலில் நமக்கு சர்வர் கொடுத்த நாட்களில் அட்டென்ட் செய்த பிள்ளையாண்டானை வேறு எங்காவது கண்காணாத சைட்டுக்கு அனுப்பிவிட்டு, "ஏதாவதுன்னா அவரை ரிமோட்ல எடுத்துக்கலாம் சார்!" என்று நமக்கு தெம்புவூட்டுவார்கள். "சரிண்ணே!" என்று ஆமாம் சாமியாக இப்போது தலையாட்டித்தான் தீரவேண்டும். அவர்களிடம் இருந்து வந்த இளைய வல்லுநர் மரக்கட்டையாய் படுத்த சர்வரை சுற்றி ஒரு முறை வந்து ஆய்வு செய்வார். "எப்டி ஆச்சு?" என்று ஃபார்மலாக ஒருமுறை துக்கம் கேட்பார். இடையிடையே "தொச்..தொச்.." என்று உச்சுக்கொட்டி ஆபிஸ் தெருமுனையில் இருந்து பைரவர் வரும்வரை ராகமாக அழைப்பார்.

முழு புராணமும் பாடிய பின்னர் ஐந்தாறு முறை Login Logout செய்து விளையாடுவார். இதை நாம் பொறுமையாக வேடிக்கை பார்க்கவேண்டும். யார்யாருக்கோ கால் செய்வார். பலபேரின் உதவிக்கரத்தை வேண்டுவார். கடைசியில் இரவு பத்து மணிக்கு, "நாளைக்கு முடிச்சிடலாம் சார்" என்று ஒற்றை வரியில் முடித்துக் கொண்டு பொட்டியைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்.

மறுநாள் சர்வர் பார்க்க வருபவர் அன்றைக்குத்தான் கம்பெனியில் சேர்ந்து முதல் கையெழுத்து போட்டிருப்பார்.  வேலை கற்றுக்கொள்ள அப்ப்ரண்டீசாக நம்மிடம் அனுப்பிவைப்பார்கள். "என்ன ஆச்சு?" என்று தாவாங்கட்டைக்கு முட்டுக்கொடுத்து சோகத்தோடு கேட்பார். மீண்டும் இவருக்கும் அந்த சர்வர் புட்டுகிட்ட கதையை உருக்கமாக சொல்லவேண்டும். மீண்டும் Login Logout ஆட்டம் ஆரம்பித்துவிடும். நாம் "நீ ஆணியே புடுங்க வேண்டாம்" என்று வெறுத்துவிடுவோம். உங்களுடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் நன்றாக இருந்தால், குல தெய்வ வழிபாடுகளை செம்மையாக வருஷம் தவறாமல் செய்து இஷ்ட தெய்வங்களை குளிர்வித்திருந்தால் எனக்கு சர்வர் அப் ஆனது போல உங்களுக்கும் ஓரிரு நாட்களில் நல்லது நடக்கலாம். இல்லையேல் திக்கற்றவர்க்கு தெய்வமே துணை. ஈஸ்வரோ ரக்ஷிது.

இவ்வளவு வருஷங்களாக அப்டேட்  அப்டேட் என்று ஒன்று விடாமல் போஷாக்காக வளர்த்ததை எல்லாம் ஓரிரவில் அந்த சர்வருக்கு ஊட்டவேண்டும். ஐந்து வயசில் காலரா தடுப்பூசி, ஆறுவயதில் மலேரியா தடுப்பூசி, எட்டுவயதில் பன்றிக் காய்ச்சல் என்று சிறுவயதிலிருந்து இதுகாறும் நாம் கொடுத்து வந்த தடுப்பூசிகள் அனைத்தையும் ஒரே ஷாட்டில் பாடச் பாட்ச்களாக (patches) ஏற்றி முடிக்க வேண்டும். ஆன்ட்டி வைரஸ், ஆன்ட்டி ஸ்பாம் என்று சர்வரின் பரிவார துவாரபாலகர்கள் இருவரையும் ஒருசேர நிற்கவைத்து அவரை ஓட விடுவது வானத்தை வில்லாக வளைப்பதற்கு சமானம்.

ஹோட்டல் சர்வரிடம் “ஏம்ப்பா! இன்னும் தோசை வரலையா” என்ற தொனியில் “என்னப்பா ஆச்சா?” என்று நச்சரிக்கும் கைபேசி எனும் கொலைபேசி அழைப்புகளை “ஒரு அரை அவர் ஆகும் சார்!" "இன்னும் ஜஸ்ட் பிஃப்டீன் மினிட்ஸ்” "டூ மினிட்ஸ்" என்று ராக்கெட் கவுன்ட்டவுன் கொடுத்து 'ஹிஹி'த்து பேசி அவர்கள் முகம் கோணாமல் மனம் நோகாமல் நடந்துகொள்ள வேண்டும். இல்லையேல் "இந்தா! பிடி சாபம். ஏழேழு ஜென்மத்துக்கும் நீ ஐ.டி துறையில் குப்பை கொட்டக் கடவது" என்று துர்வாஸர் போல சபித்து விடுவார்கள்.

இப்படி அப்டேட்டோ அல்லது கட்டையை நீட்டிய அந்த சர்வர் சார்ந்தவைகளையும் வரிசைக்கிரமாக அள்ளிப் போடவேண்டும். மாற்றிக் கொடுத்தால் "ச்சீ போ!" என்று விரட்டியும் "இது எனக்கு வேண்டாம் போ" என்றும் துப்பி நம்மை விரட்டிவிடும். பொறுமையாக ஒன்றன் பின் ஒன்றாக தட்டிக் கொடுத்து உள் நுழைத்து அவரை எழுப்பவேண்டும்.எழுந்து நின்று ஓட ஆரம்பித்த சர்வர் சௌக்கியமாக இருப்பார் என்று உடனே உத்திரவாதம் தரமுடியாது. ஐ.சி.யு பேஷண்டுகளை எப்படி ஆப்செர்வேஷனில் வைத்திருப்பார்களோ அது போல "ரெண்டு நாள் பார்த்துட்டு சொல்றோம்" என்று சொல்லி நமது துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டவர்களிடம் விண்ணப்பிக்கவேண்டும். "முடிந்தது?" என்று சொல்லிவிட்டால் காலை க்ளோஸ் செய்துவிட்டு பறந்துவிடுவார்கள். மீண்டும் வலைவீசி பிடிக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவீர்கள். ஜாக்கிரதை!!

இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு ஆசுவாசமாக டேபிளில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருக்கும் போது "என்ன சார்! சர்வர்லாம் சரியாயிடுச்சு போலருக்கு" என்று அலுவலகத்தில் 'ராசி'யான வாக்குச் 'சுத்தமான' ஆள் யாராவது சிரித்துக்கொண்டே விசாரித்தால் அடிவயிற்றில் கதிகலங்கும். டீ உள்ளுக்குள் இறங்காது.

பின் குறிப்பு: இதை ஒரு சர்வர் படுத்திய பாடாகவும் படித்து மகிழலாம். என் துறையில் பணிபுரிவோர் நிச்சயம் இதுபோல அனுபவத்திருக்கலாம். அனுபவம் இல்லாதோர் இதை ஒரு டம்மீஸ் கைடாக பயன்படுத்தலாம். ஆரம்பித்த க்ரைம் ஸ்டோரியை பலரின் ஊகத்திற்கு இடம் கொடுக்காமல் முடிக்க வேண்டும். பராசக்தி! சக்தி கொடு!!

பட உதவி: http://www.techday.co.nz
-

Thursday, July 14, 2011

காதல் கணினி

satyamcinemas


வெள்ளிக்கிழமை சத்யம் திணறத் திணற நிரம்பி வழிந்தது. கூட்டத்தில் பேர் பாதி முப்பதுக்குள் இருக்கும் ஐ.டி யுவன்கள் யுவதிகள். பொட்டித் தட்டி பிழைக்கும் அனேகருக்கு அது டி.ஷர்ட், டெனிம் ஜீன்ஸ் மாட்டும் ஒய்யார தினம். கேஷுவலான வாரக் கடைசி. உழைத்து அயர்ந்த மூளைக்கு ஓய்வு நாள்.

தோள் மேல் கை போட்டு “ச்சே ஏண்டா மச்சி சீக்கிரம் வந்தே? ஒரு டக்கர் ஃபிகரு எனக்கு செட் ஆய்டும் போல இருந்திச்சு. உன் முட்டை முழிக் கண்ணைப் பார்த்ததும் பயந்து எஸ் ஆயிடுச்சு” என்ற முறுக்கேறிய வால்..லிப்ப வயசனும், ஏற்கனவே ஃபிகர் செட்டானவர்கள் தன் ஸ்வீட்டியுடன் கைக்குள் கை நுழைத்து கயிறு போல முறுக்கி ‘X' ஆக்கி பட்டர் ஸ்காட்ச் கோன் ஐஸ்க்ரீமை எம்எல் எம்எல்லாக மெல்ல நாவால் தடவி சாப்பிடுவதும், அகாடமி அவார்ட்ஸ் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தரும் ஹாலிவுட் நாயகிகள் போன்று எல்லாவற்றையும் திறந்து போட்டுக்கொண்டு ’திவ்யதரிசன’ உடையணிந்து சிலரும், “எப்போ வருவாரோ. எந்தன் கலி தீர” என்று வாசல் கேட் மேல் விழி வைத்து தோள் பையோடு காத்திருக்கும் நேர்மையான காதலரும் பொங்கி வழியும் தியேட்டர் வாசல் தான் வாழ்வில் அந்தத் தருணத்தில் மனமகிழ்ச்சியான மக்களைச் சந்திக்க ஒரே இடம். நடு ரோட்டில் குழந்தை குட்டியோடு பவுடர் பூசிய குலமகள் ஆட்டோ சவாரியாக வந்து இறங்கினாள். காட்சி நேரம் நெருங்க நெருங்க ஒவ்வொன்றாக நிறைய தலைகள் அங்கே சேர ஆரம்பித்தது.

எதிரே சன்னா சமோசா, சுண்டல், பானி பூரி விற்கும் பான்பராக் பவள வாய் ராஜஸ்தான் சேட்டு கடையிலும் கையில் சிறு தட்டேந்தி கூட்டம் அலைமோதியது. “க்யா..க்யா..அச்சா..அச்சா..” என்று கஸ்டமர் மனம் கோணாமல் உபசாரம் செய்து ”ஹாட் சமோஸா. அமேஸிங்” என்று ஊர் சுற்றிப் பார்க்க வந்த வெள்ளைக்கார தம்பதிகளின் வெண்ணை தடவிய வாயில் இருந்து நீர் ஒழுக சர்ட்டிஃபிகேட் வாங்கிக் கொண்டிருந்தார் சேட்டு. வாசலில் நின்று கொண்டு பலர் மும்முரமாக வாய்க்கும் கைக்கும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். பச்சையும் சிகப்புமாக வண்ண வண்ண திரவங்களை சைட் டிஷ்ஷாக ஊற்றிக் கலந்தடித்தார்கள்.

ஆயுதபூஜைக்கு மட்டும் குளிக்கும் ஒரு அழுக்கு மாநகர பஸ் சேட்டுக் கடையில் அடுக்கி வைத்திருந்த சமோசாக் குன்று மேலே புழுதி வாரி தூற்றி கியர் பாக்ஸ் உடைய “டட்ட்டட்”டென்று கதறிக் கொண்டே சென்றது. ஆண்களும் பெண்களும் சரிவிகிதத்தில் கலந்திருந்த அந்த நடக்கும் பஸ்ஸிலிருந்து பூனையின் லாவகத்தோடு குதித்து இறங்கினான் அழகிய மணவாளன். (இங்கே அழகிய என்பது உரிச்சொல் அல்ல.)  “டே! சாவு கிராக்கி” என்று கை நீட்டித் திட்டி வசவு மழை பொழிந்து கட் அடித்து சென்றது ஒரு “சேலையைப் பார்க்காதே! சாலையைப் பார்!!” என்ற திருவாசகம் பின்பக்கம் தீட்டியிருந்த ஆட்டோ.

“டேய்... எவ்ளோ நாழிடா..”  பரபரத்தான் பின்னால் பர்ஸ் புடைத்த கருப்பு ஜீன்ஸ் போட்ட ஒரு பையன். வெள்ளை பனியனில் நான்கு விரல் மடக்கி நடுவிரல் மட்டும் அசிங்கமாக ஆகாசத்தைப் பார்த்து குத்துக்க நீட்டியிருந்த பனியனளவு மணிக்கட்டுக்கரம் ஒன்று வரையப்பட்டிருந்தது. தேங்காயெண்ணய் காணாத தலை பாகவதர் கட்டிங்கில் பறந்தது. உதடுகளுக்கிடையில் கிங்ஸ் புகைந்தது. பற்களுக்கு இடையில் ஜவ்வாக ரிக்லீஸ் கடிபட்டுக் கொண்டிருந்தது. நவயுக இளைஞன்.

“இல்ல அஜய். திடீர்னு ஆறு மணிக்கு மேல தேவையே இல்லாம மீட்டிங்னு உக்கார வச்சுட்டான் அந்த மேனேஜர் புண்ணாக்கு. கிளையண்ட் போட்டு அவனைப் புடுங்கினா குலை நடுங்கிப் போய் அவனைச் சுத்தி நம்மளை உட்கார வச்சுக்கிறான். ஒரு நாள் அவனுக்கு இருக்கு...”

“நீ சொன்ன பார்ட்டி வருமாடா?”

”நிச்சயமா வரும்”

“என்னடா... டல்லா வந்துருக்கே.. வண்டியெங்க..”

“மேனஜரை கிக்கரா நினச்சு ஆத்திரம் பூராவையும் அது மேல காமிச்சேன். கிக்கர் புட்டுக்கிச்சு. அப்டியே ஆபீஸ்ல உட்டுட்டு அவசரம் அவசரமா பஸ்ஸை புடிச்சு ஓடி வரேன்”

“தம் வேணுமா?”

”இல்ல.. எங்கிட்ட இருக்கு” அ.மணவாளன்  பெட்டியிலிருந்து சிகரெட் ஒன்றை அழகாக தட்டி எடுத்து வாயில் சொருகி அதன் தலைக்கு சிதையூட்டினான். தேர்ந்த யோகக் கலைஞன் ப்ராணாயாமம் செய்யும் சிரத்தையுடன் சிகரெட்டை ஆழ உள் இழுத்து வெளியே விட்ட புகையில் அவன் மனதின் ஆசைக் கசிந்தது. அவன் சத்யம் தியேட்டர் வாயிலோரம் வலது காலை பின்பக்கம் மடக்கி சுவற்றுக்கு முட்டுக் கொடுத்து நின்று அந்தப் ’பார்ட்டி’க்கு காத்திருக்கும் வரையில் அ.மணவாளனைப் பற்றி ஒரு சின்ன இன்ட்ரோ.

கல்யாணமாகி ஏழெட்டு வருடங்கள் புழுபூச்சியில்லாமல் தவமாய்த் தவமிருந்து கோயில் குளங்களாக சுற்றி அங்கப் பிரதக்‌ஷிணம் செய்து அ.மணவாளனைப் பெற்றப் புண்ணியவதியின் பெயர் வேதா என்கிற வேதவல்லி. தகப்பனார் மேல் வரும்படி ஏதும் வராத சுத்தமாக பவர் இல்லாத ஏதோ காமாசோமா அரசாங்க அலுவலகத்தில் ஃபைல் மலைக்கு பின்னால் உட்கார்ந்து சதா தும்மல் வரத் தூசிக் காகிதம் புரட்டிக் கொண்டிருக்கும்; ”A2 எங்கய்யா?” என்று உத்யோகஸ்தர்களால் அழைக்கப்படும் அஸிஸ்டெண்ட் நரசிம்மன்.

பெரிய பெரிய கட்டம் போட்ட சட்டையும் அதற்கு துளிக்கூட மேட்ச்சிங் இல்லாத தொள தொளா பேண்ட் அணிந்து ஹவாய் செருப்போடு டி.வி.எஸ் ஐம்பதில் இடது கைப்புற ரோடோரமாக தினமும் அலுவலுக்கு செல்லும் ஒரு சராசரி மத்யமர். வீடு கட்டுவதற்கு வாங்க முடியாத கிரௌண்டை தலையில் தாராளமாக வாங்கியிருந்தார். கிலோவுக்கு எட்டணா குறைத்துக் கொடுக்கிறார்கள் என்று ஒரு மைல் தாண்டிச் சென்று ஆந்திரா அரிசி மண்டியில் இருந்து நெல்லூர்ப் பொன்னி ரைஸ் வாங்கி வந்து பொங்கித் தின்னும் சிக்கனர். வேதவல்லியின் உதவாக்கரைத் தம்பியையும் மூஞ்சி காண்பிக்காமல் வீட்டில் உட்கார வைத்து படியளக்கும் புண்ணியவான்.

போதும். அதோ பார்ட்டி நெருங்கி விட்டாள். மணா பதறிப் போய் சிகரெட்டின் ஆயுளை காலில் நசுக்கி முடித்தான்.

“ஹாய் மணா” தூரத்திலிருந்தே கையசைத்தாள்.

நெருங்கிய பின் “ஹாய் மிருதுளா. மீட் மை ஃப்ரெண்ட் அஜய்.”

“ம். ஆஃபிஸ்ல பார்த்திருக்கேன். உன்னோட ’தம்’ கம்பெனி. கரெக்ட்டா”

அருகில் வந்ததும் மணா என்று செப்பிய அவளது வாய் மல்லிகையாய் கமகமத்தது. அஜய் ஒரு கணம் நிலை தடுமாறினான். அவளோடு வலியக் கை குலுக்கினான். மலர்க்கரம் சேரும் போது அவனுடம்பில் பல அமிலங்கள் தாறுமாறாய் சுரந்தன. காதிற்குள் ஒருசேர ஆயிரம் பேர் சேர்ந்து வாசிக்கும் மங்கலமான வீணை இசைக் கேட்டது. ஜீன்ஸ் போட்ட மஹாலெக்‌ஷ்மியாக தெரிந்தாள். மேனி முழுவதும் ஃபேர் அண்ட் லவ்லியாக இருந்தாள். ஷாம்ப்பூ விளம்பரங்களில் திரையில் பொய்யாகப் பார்த்த குதிக்கும் கேசம் இவளிடம் நிஜமாகவே பந்து பந்தாக சுழன்று விளையாடிக் கொண்டிருந்தது.

காதுகளில் தொங்கிய அந்த வளையங்கள் எப்போதும் முதல் ஆளாய் ஆடி அவள் பேசுவதை ”ஆமாம் ஆமாம்” என்று ஆமோதித்தன. நேருக்கு நேர் பார்ப்போர் கண்ணுக்கு பாரமாக டீ-ஷர்ட் அணிந்திருந்தாள். அதற்கு அடுத்த பெரிய சைஸ் டீ-ஷர்ட் முன்னால் நிற்போரை கொஞ்சம் பெரு மூச்சு விடாமல் காப்பாற்றும். மணாவிடம் எதற்கோ கண்ணகி “தேரா மன்னா” என்று சிலம்பு பிடித்த கை போஸில் தூக்கிப் பேசிய போது சிறிய தளிர் இடுப்பு பளீர் வெள்ளை நிறத்தில் குட்டி மடிப்பாக கொஞ்சூண்டு வெளியே துருத்தியது. இ.மடிப்பு சமீப கால பர்கர், பிஸாவின் கைங்கர்யமாக இருக்கலாம்.

“ஏய்! எங்கயிருக்கே” என்று அஜயின் முகத்துக்கு நேரே கை சொடுக்கினாள் மிருது.

“என்னப்பா! எதுவும் ஃபீலிங்ஸா...உன் ஆள் யாரவது வரேன்னு வரலையா? ” சரமாரியாக கேள்விகளை அடுக்கினாள்.

“இல்ல..அதெல்லாம் ஒன்னுமில்ல.. ஷோ ஆரம்பிக்கரத்துக்கு இன்னும் கால் அவர் இருக்கு.. எதாவது சாப்பிடுவோமா?” என்று தன் ’கெட்ட’ கனவைக் கலைத்து சமாளித்தான் அஜய்.

அ.மணவாளனும், மிருதுவும் கை கோர்த்து ஒரு கையை பத்து விரலாக்கிக் கொண்டார்கள். அஜய் அந்த ஜோடியின் பின்னால் அரையடி விட்டுத் தொடர்ந்தான். அவளுக்கு சிலசமயம் பனியனுக்கு வெளியே சண்டே லாங்கர் தேன் மண்டேவாக இருந்தது. உள்ளே இழுத்து விட்டுக்கொண்டாள். அவன் கண் மிருதுக்கு பின்னால் LEE அச்சடித்த லேபிளுக்கு கீழே ஆபாசமாக தொடர்ந்தது. பக்கத்து மேம் பாலத்தின் அடியில் கோலா பானங்கள் மாலையாக அணிந்த ஒரு குளிர்பானக் கடைக்குள் மூவரும் நுழைந்தார்கள்.

“கோக் ஆர் பெப்ஸி” உற்சாகமாகக் கேட்டான் அஜய்.

“என் மணாக்கு என்ன புடிக்குமோ அதுதான் எனக்கும்” சரோஜாதேவி சாயலில் கொஞ்சினாள் மிருது. உதடு மணாவின் கன்னத்தில் இடிக்கும் அழகிய அபாயத்தில் சரேலென்று திரும்பினாள்.

“ஊம்...ஆமணக்கு...வாங்கித் தரட்டா” சொல்லிச் சிரித்தான் அஜய்.

“யேய்! ஸ்ப்ரைட் சொல்லு”

“ரெண்டு ஸ்ப்ரைட்.. ஒரு கோக்” பர்ஸைப் பிரித்து சிரித்த சலவை காந்திகளில் ஒன்றை எடுத்து கடைக்காரரிடம் நீட்டினான் அஜய். கடையின் கண்ணாடியில் மணா அர்த்தநாரியாய் தெரிந்தான்.

“டேய். நா தரேன்..” அவன் கையை தட்டிக் கொண்டு முந்தினான் மணா.

“பரவாயில்லை... கல்யாணத்துக்கு பேச்சிலர் பார்ட்டி ட்ரீட் குடுக்கும் போது இதுக்கும் சேர்த்துக் குடு.”

மணாவும் மிருதுவும் சிரித்தார்கள்.

வாரத்தில் ஐந்து நாட்களுக்கு கீபோர்டும் கையுமாக வேலைப் பார்த்த பிறகு அன்றைக்கும் மறுநாளும் ஊர் சுற்றுவது அவர்களது வாடிக்கை. கும்பகோணத்துப் பொண்ணு மிருதுளா. மணாவிற்கு திருவாணைக்காவல் அகிலாண்டேஸ்வரி சன்னதிக்கு பின்புறம் ஒரு ஓட்டு வீடு. காவிரித் தண்ணீர் இருவரையும் சுலபமாக சேர்த்து வைத்துவிட்டது. அந்த மீசையில்லாத வடக்கத்தியாள் நடத்தும் மென்பொருள் கம்பெனியில் சேர்ந்தவுடன் “ஐ, மைசெல்ஃப், கோ, கம், வாட்டு, ஹவ்வு, வேரு...” என்று திக்கிக் திணறி முதல் நாள் ஆங்கிலம் பேசியதில் “நீங்க டவுன் சவுத்தா?” என்ற ஆதாரக் கேள்வியை முதன் முதலாக கேட்டது மிருதுதான். அன்று வெள்ளைச் சுடிதாரில் தங்கமென ஜொலித்தாள்.

“ஆமாம்.. நீங்க?” வாய்க்குள் ஒரு சேனை ஈ புகும் அளவிற்கு விரித்திருந்தான்.

“நா கும்பகோணம்”

“கும்பகோணத்ல எங்க?”

“சாரங்கபாணி கோயில் இருக்குல்ல.. அந்த தேர் நிறுத்தியிருக்கும் பக்கத்து சந்து திரும்பி லெஃப்ட்ல போய்.....”

இப்படி நான்கடி தள்ளி நின்று பேச ஆரம்பித்து ஒன்றாக இரண்டடியில் லன்ச் சாப்பிட்டார்கள், ஓரடியில் தேநீர் அருந்தினார்கள், ஒரு இன்ச் இடைவெளியில் இருசக்கரத்தில் பயணித்து தங்கும் விடுதிக்கு புறப்பட்டார்கள், காலையில் உள்ளன்போடு குட்மார்னிங் சொல்லிக் கொண்டார்கள், கடைசியில் ஒரு சுப முகூர்த்த நாள் பின் மாலைப் பொழுதில் ஆஃபிஸ் கான்டீனில் மூக்கும் மூக்கும் இடிக்க “ஐ லவ் யூ” என்று ஒருவருக்கொருவர் முனகிக்கொண்டு காதலிக்கத் தொடங்கினார்கள்.

”ஏய்... படம் போட்ருவான். எனக்கு ஆரம்பத்ல வர சென்ஸார் சர்டிபிகேட்லேர்ந்து சினிமா பார்த்தா தான் தியேட்டர்ல பார்த்த திருப்தி இருக்கும்..வா..வா.” மணாவை கையை பிடித்து இழுத்தாள்.

“ஏன்.. படம் ஏவா யூவான்னு பார்க்கனுமா?”

“ச்சீ.. வா உள்ள...” என்று இம்முறை இடுப்பை சுற்றி இழுத்தாள்.

அஜய் அந்த அன்யோன்யச் செயலில் தானாக தியேட்டர் உள்ளே இழுக்கப்பட்டான்.

”ட்...ரி....ங்......” என்று மணியடித்து படம் போட்டார்கள். ஸி வரிசை. 1,2,3 ஸீட் நம்பர். சுவரோர ஒன்றில் ஏதோ அசிங்கமாக இருந்தது என்று இரண்டில் மிருதுவை உட்காரவைத்து இருபுறமும் மணாவும் அஜயும் உட்கார்ந்து கொண்டார்கள்.

“டேய்! பாப் கார்ன் வாங்கலையே” அஜய் தான் ஆரம்பித்தான்.

”சரி வா! நாம ரெண்டு பேரும் போய்ட்டு வரலாம்” என்று எழுந்தாள் மிருது.

“குவிக். சீக்கிரம் வாங்க” என்று திரையில் ஹிரோயின் மழையில் நனைவதை வாய் பிளந்து பார்த்துக் கொண்டு உட்கார்ந்தான் மணா.

பத்து நிமிடத்திற்கு பிறகு அஜய் இரண்டு கையிலும் பாப் கார்ன் பாக்கெட்டுடன் இருட்டில் காலைத் தேய்த்து தேய்த்து வந்து உட்கார்ந்தான்.

“மிருதுளா வரலை...”

“உன் கூடத் தானே வந்தா... எங்க போனா”

"உள்ள தான் வந்தா மணா”

“சரி.. ரெஸ்ட் ரூமுக்கு போயிருப்பா... வருவா நீ படத்தப் பாரு”

திரையில் கதாநாயகன் உரிமைக்காக போராடினான்.

மிருதுளா வரவில்லை.

அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்தான். போர்க்கொடி பிடித்தான்.

மிருதுளா வரவில்லை.

போலீசிடம் லத்தியடி வாங்கினான்.

மிருதுளா வரவில்லை.

மரத்தைச் சுற்றி நாயகியுடன் டூயட் பாடினான்.

மிருதுளா வரவில்லை.

நாயகியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மிருதுளா வரவில்லை.

வெறுத்துப் போன நாயகி தற்கொலை செய்து கொண்டாள்.

“டேய். என்னடா இன்னமும் காணோம் இண்டெர்வலே விட்ருவான் போலருக்கே” கிசுகிசுத்தான் மணா.

“தெரியலை மணா... வெளியப் போய் பார்ப்போமா”

“ம். சரி வா...”

கேக், பாப் கார்ன் விற்பவர்கள் இண்டெர்வெல் கூட்டதிற்கு தயார் ஆகிக் கொண்டிருந்தார்கள். சாஃப்டி ஐஸ்க்ரீம்காரர் கஸ்டமர் என்று பார்த்து சிரித்தார். சிகப்பு கலரில் படி ஆரம்பிக்கும் இடத்தில் நியானில் “EXIT" ஒளிர்ந்தது.

”ஸார்! வெள்ளைக் கலர் டீ-ஷர்ட் போட்டுகிட்டு ஒரு பொண்ணை இந்தப் பக்கம் பார்த்தீங்களா”

“ஹி..ஹி.. என்ன தம்பி. இப்ப அல்லாருமே பனியன் போட்டுகிட்டுத் தானே சுத்துதுங்க.. எது பொம்பளையா லச்சணமா இருக்குங்க...” என்று கலாச்சாரம், சட்டம் ஒழுங்கு பற்றி பிரசங்கம் ஆரம்பித்தார்.

இருவரும் அங்கிருந்து நகர்ந்தார்கள். படிகளில் படபடக்க வேகவேகமாக இறங்கி வெளியே வந்தார்கள்.

“டேய்.. அங்கப் பாருடா.. அங்கப் பாருடா” என்று தரைதளத்தில் இருந்த அந்தப் பெரிய கண்ணாடி ஜன்னலைப் பார்த்துக் கூவினான் அஜய்.

“என்னடா? எங்க...”

“அங்க..அங்க.....”

அஜய் கை காட்டிய திக்கில் ஹெல்மட் அணிந்த ஒரு ஆறடி உயர இளைஞனின் புல்லட்டில் தோள் பிடித்து ஏறிக் கொண்டிருந்தாள் மிருதுளா.

மணா விக்கித்துப் போய் செய்வதறியாது நின்றிருந்தான்.

-தொடரும்

பட உதவி: http://www.flickr.com/photos/balu/

Tuesday, July 12, 2011

இளசுகளுக்கு இனியவை பத்து


இருபத்தோரு வயசுக்கு முன்னால் ஓடியாடி துள்ளித்திரியும் சின்னஞ்சிறுசுகள் என்னவெல்லாம் உருப்படியாக செய்யலாம் என்று நாட்ய வ்ருக்‌ஷா என்ற நடனப் பள்ளியின் ஸ்தாபகர் மற்றும் தலைவர் கீதா சந்த்ரன் ”இனியவை பத்து” ஒன்று பட்டியலிட்டுள்ளார். சண்டே ஸ்டாண்டர்ட் ஆங்கில வாரப் பத்திரிக்கையை ஐந்து நிமிடம் புரட்டியதில் கண்ணில் பட்ட செய்தி. ஒவ்வொன்றையும் ஒரு கிளான்ஸில் படிக்கும்படி சிக்கனமாக சிந்திக்கும்படி சொல்லியிருந்தார். அதற்கு அங்கே இங்கே கொஞ்சம் அலங்காரம் பண்ணி, சீவி சிங்காரித்து  நம்ம ஸ்டைலில் வாய் மூடா வளவளா லிஸ்டாக கீழே.

1. கிராமத்தில் விவசாயிகளுடன் ஒரு வாரம் குடியிருந்து அந்த வியர்வைத் துளியின் மகத்துவத்தை, உழைப்பின் மேன்மையை, மகோன்னதத்தை உணருங்கள். #லீவு விட்டால்  பாட்டி தாத்தா ஊருக்கு செல்லும் கலாச்சாரம், காலம் எல்லாம் மலையேறிப் போயாச்சு. இதில் கிஸானுடன் கீத்துக் கொட்டாயில் காலம் கழிப்பார்களா?

2. குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டாமல், எப்பவும் கொடைக்கானல், ஊட்டி என்று லோக்கலாக ஊர் சுற்றாமல் সুপ্রভাত என்று சொல்லி வணங்கும்; நம் பாரத தேசத்தில் இருக்கும் பிற மாநிலத்திற்கும் ஒரு டூர் அடியுங்கள். (மேல் கோட்டில் வௌவால் போல தொங்கும் எழுத்துக்களை translate.google.com என்ற ஸைட்டில் கொடுத்து எந்த ஊர், எந்த பாஷை என்று தெரிந்துகொள்ளவும்.)

3. இருநூறு ரூபாய்க்கு ஒரு ஆறிப் போன ஜில் காஃபியும், மவுண்ட் ரோடு எக்ஸ்பிரஸ் மாலில் ஏதாவது ஒரு ஜில்ஜில் மாலு கண்ணாவை சைட் அடித்துக்கொண்டும் இல்லாமல் இயற்கையின் அரவணைப்பில், எழில் கொஞ்சும், மயில் ஆடும், குயிலும் பாடும் ஏதாவது ஒரு வனப் பிரதேசத்தில் ஒரிரு நாட்கள் முகாமிடுங்கள்.

4. போலிச் சாமியார்களின் ஊரை அடித்து உலையில் போடும் அகாசுகா திருட்டுத் தனத்திற்கு “ஸ்வாமிஜி” என்று கைக் கோர்த்துக் கொண்டு ஒத்துழைக்காமல், சாமானியர்களுக்கு சமூகத் தொண்டாற்றும் லாபம் பார்க்காத அமைப்பில் ஒரு வாரம் உங்களைப் பரிபூரணமாக சமர்ப்பித்து தன்னார்வலராக பணிபுரியுங்கள்.

 5. கிருஸ்துமஸ், ஹோலி, பக்ரீத், தீபாவளி போன்ற நம் நண்பர்களின் வீட்டுப் பண்டிகைக் காலங்களில், “என்னங்க ஸ்பெஷல் கேக் கிடையாதா?”, “என்ன பாய். பிரியாணி எங்கே? கண்டிப்பா லெக் பீசும் இருக்கணும்” “தீவாளி ஸ்வீட் இல்லையா?” என்று வயிறு மட்டும் வளர்க்காமல் அவர்களது வழிபாட்டுக் கூடத்தையும் ஒரு நடை போய் பாருங்கள்.

6. அரசியல்வாதிகள் தலையில் குல்லாவோடு வருஷா வருஷம் இஃப்தார் நோன்புக் கஞ்சி வோட்டுக்காக குடிப்பது போலல்லாமல், பிற மத நண்பர்களுடன் அவர்கள் கிரஹத்திர்க்கு சென்று ஒரு வேளை சகோதரத்துவத்துடன் உங்களுக்குப் பிடித்ததை அவர்களுடன் சேர்ந்து வயிறார உணவருந்துங்கள்.

7. நமக்கு மிகவும் பிடித்த ஒன்றை அது இல்லாதோருக்கு பரிசளித்து மகிழ்தல். இதைக் கொஞ்சம் விஸ்தாரமாக பார்ப்போம். நாட்டில் நான்கிற்கு மூன்று பேர் டாஸ்மாக்கில் ’சரக்கு’ சாப்பிடும் போதும் ரோடோரப் பொட்டிக் கடையில் ’தம்’ பற்ற வைக்கும் போதும் தாராள ப்ரபுக்களாக இருப்பார்கள். “இந்தா மச்சி! இந்தா மாமா” என்று உறவின்முறையில் பாந்தமாக வாயில் சொருகி கொளுத்திவிடுவார்கள். தன் கைக் குழந்தைக்கு சோறூட்டும் ஒரு தாயின் பரிவு அந்தச் செயலில் தொக்கி நிற்கும். இப்படியில்லை, இதுவல்ல. ஒரு நல்ல புஸ்தகம் நமக்கு மிகவும் பிடித்தால் அதைப் படிக்கும் ஆர்வத்துடன் ஏங்கி நிற்கும் யாருக்காவது அதை பரிசளிக்கலாம். அல்லது நம்மிடம் இருக்கும் ஆதிகால கம்ப்யூட்டரை அதுகூட இல்லாத மக்களுக்கு சாதாரண விஷயங்கள் தெரிந்து கொள்வதர்க்கு தானமாக கொடுக்கலாம். இது போன்ற நற்செயல்களை குறிப்பிடுகிறார்.

8. ”கநாகளைகக்ககு கபீகச்கசுகக்ககு கலகவ் கபகண்கண கபோகலாகமா?” போன்ற சர்வதேசத் தரம் வாய்ந்த cryptic “க”னா மொழி போன்ற கண்ட கபாகஷைகயை கற்றுக் கொள்வதற்கு பதில் பத்து இந்திய மொழிகளில் கீழ் கண்டவற்றை பேசக் கற்றுக் கொள்ளுதல்.  அடிப்படை உறவுகள் பற்றியும் மற்றும் அத்தியாவசியமான சில வார்த்தைகள்.

மாதா/பிதா
சோதரன்/சோதரி
கணவன்/மனைவி
மாமா/மாமி
பசிக்குது/ பசிக்கலை
தண்ணீர், பால்
தயவுசெய்து எனக்கு உதவ முடியுமா?
நான் தொலைந்துவிட்டேன்.
நன்றி

அடுத்தவர்களது பாஷையில் கெட்ட வார்த்தைகள் மட்டும் தேர்ந்தெடுத்துக் கற்றுக்கொள்ளும் ப்ரஹஸ்பதிகளும் இம் மண்ணுலகத்தில் உண்டு.

9. ஐந்து விதமான கலாப்பூர்வமான நடன நிகழ்ச்சிகளை நாட்டியமாடும் சபாக்களுக்கு சென்று ரசித்துவிட்டு ”இது அப்படி, அது இப்படி” என்று வித்தியாசத்தை உணருங்கள். பரதம், குச்சிப்புடி, கதகளி போன்ற குடும்பத்தோடு பார்க்கும் “U" சான்றிதழ் பெற்ற டான்ஸ் ப்ரோகிராம்கள் மட்டும். #அவர் ஒரு நடனப் பெண்மணி. அவரின் தேர்வு அது. நீங்கள் ஏதாவது அறிவு ஜீவிக்கள் நடத்தும் ஒரு பக்க வசனம் மட்டுமே இருக்கும் ஓரங்க நாடகங்கள் பார்க்கலாம். தப்பில்லை.

10. ஐந்து வகையான சங்கீத கச்சேரிகளை நேரடியாகக் கண்டு களியுங்கள்.

ஒன்பதும், பத்தும் கொஞ்சம் இலகுவாக செயல்படுத்தக்கூடிய அறிவுரைகள்.

சமீபத்தில் மஹாராஷ்ரா அரசாங்கம் சாராயம் குடித்து 'தாக சாந்தி' செய்பவர்களது வயசு குறைந்தது இருபத்தைந்து ஆக இருக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை பிறப்பித்ததற்கு எதிர்ப்பு/ஆட்சேபம் தெரிவித்த பாலிவுட் நடிகர் இம்ரானுக்காக எழுதியதாம் இது. இம்ரானின் வாதம் என்னவெனில், “இதன் மூலமாக நீங்கள் சிகையைக் கூட பிடுங்க முடியாது. போலிச் சான்றிதழ்களும், போலீசுக்கு மாமுலும் தான் கிடைக்குமே தவிர பைசாவுக்கு பிரயோஜனம் கிடையாது” என்கிறார். குடிகாரனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது. லாஜிக்தான். இதுவும் சரியாகத் தான் படுகிறது.

படக் குறிப்பு: லிஸ்ட் என்பதால் இந்தப் படம். தத்வார்த்தமாக ஒரு சிறு குழந்தையின் கையை ஒருவர் பிடித்திருப்பது போல இருப்பதால் கூடத்தான்.

-

Sunday, July 10, 2011

அந்த மூன்று விஷயங்கள்

three monkeys 1



கையில் இருக்கும் பட்டனைக் கொடுத்து நான்கைந்து பேராய் அணியாக ஒரு இலக்கை நோக்கி ஜெயிப்பதற்காக ஓடும் ரிலே ரேஸ் போல இந்தத் தொடர் பதிவுகள். இலக்கு தலைப்புகள். பதிவுலகத்தில் ஆரோக்கியமான தலைப்புகளில் தொடரப்படும் சங்கிலிப் பதிவுகள் வெற்றிலை பாக்கோடு ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டிய ஒரு நல்ல விஷயம். முன்னுரைகளைப் பற்றி எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் போன மாதம் அழைப்பு விடுத்து நான்கு பேர் அவருக்கு பின்னால் பின்னுரையாக எழுதினோம்.

முன்னுரைகள் ஒரு சிறப்பான டாபிக். ஒரு புஸ்தகத்தை வாங்குவதற்கு முன் புரட்டிப் பார்க்கும் இரண்டு நிமிடங்களில் வாசகனைக் கவரும் வகையில் முன்னுரைகள் இருக்க வேண்டும். இம்முறை பிரபலங்களிடம் பேட்டி போல ஒரு தொடர் பதிவு. இம்முறை தொடுப்புக் கொடுத்தது கல்லிடையின் காதல் நாயகன் தக்குடு. முடிந்த வரையில் கேள்விக்கு நேரடியான பதில் அளித்திருக்கிறேன், படிப்போர் ரசிக்கும் வகையில்.

1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?

இன்னொரு பால்யம் இப்பிறவியில் அமைந்தால் மீண்டும் அதே ’கெட்ட’ சகவாசங்களுடன் வடக்குத் தெரு மதில் கட்டையில் ராப்பூரா அரட்டையும், ராஜகோபாலன் உற்சவங்களும், கிரிக்கெட் போட்டிகளும் திணறத் திணற நிரம்பிய மன்னார்குடி வாசம்.

பசிக்கும் போது சூடான இட்லி, தேங்காய் சட்னியுடன் வயிறாற சாப்பிட்டவுடன் கண்கள் சொருக போதையேற்றும் கள்ளிச்சொட்டு ஸ்ட்ராங்காய் ஃபில்டர் காஃபி.

மேல் சட்டை போடாமல் bare body-யுடன், கையில் பேய்க் கரும்பு இல்லாமல் வேஷ்டி மட்டும் இடுப்புக்கு மேலே பட்டினத்தார் போல சுற்றிக்கொண்டு சிவனேன்னு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருத்தல்- சில நேரங்களில்.

2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?

ஒலியெழுப்பக் கூடாத பிரதேசமான ஆஸ்பத்திரி வாசலில் கூட ”டர்...டர்”ரென்று காதைக் கிழிக்கும் ஆட்டோ சத்தம். “பாம்..பாம்” என்று பஸ்கள் இரையும் ஏர் ஹார்ன்கள். ஆண்டவன் சன்னதியில் ”மாட்டுப்பொண் ஊருக்கு போயிருக்காளா” போன்ற கடைந்தெடுத்த கண்ணியம் இல்லாத செயல்கள்.

கோயிலில் “என்ன கோயிலுக்கா?”என்றும் சினிமாக் கொட்டாயில் “சினிமாவுக்கா?” என்றும் பீச்சில் “பீச்சுக்கா?” என்றும் அப்பாவியாகக் கேட்கப்படும் அச்சுப்பிச்சான சம்பிரதாயக் கேள்விகள். நல்லவேளை இறுதி ஊர்வலத்தில் கொள்ளி தூக்கிக்கொண்டு முன்னால் செல்பவரிடம் “என்ன சுடுகாட்டுக்கா?” என்று கேட்காமல் இருக்கிறார்கள்.

அருள் புரிவதற்கு ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் பாராட்டாத ஏடு கொண்டல வாடாவிர்க்கு பல டினாமினெஷனில் டிக்கெட் அச்சடித்து வசூல் செய்து ‘பணக்கார சாமியாக’ க்யூ கட்டிப் பார்க்க விடுவது.

3) பயப்படும் மூன்று விஷயங்கள்

இந்த லோகாயாத வாழ்வில் ”நீங்களே பார்த்து நல்லதா வாங்கிட்டு வாங்க” என்று அஸைன் ஆகும் சில பல கிரகஸ்தாஸ்ரம வேலைகள்.

புள்ளைகுட்டிகளுக்கு வீட்டுப் பாடங்கள் மற்றும் பரீட்சைக்கு சொல்லிக் கொடுப்பது. வெரி டேஞ்சரஸ். ‘அவளுக்கு கொஞ்சம் மேத்ஸ் பாருங்க’ என்று மிஸ்ஸஸ் சொன்னால் உள்ளுக்குள் உதறல் எடுக்கிறது.

மக்கள் சமுத்திரமான தி.நகரில் கடை விரித்திருக்கும் பல அடுக்கு மாடி ஷாப்கள் மற்றும் ஸ்டோர்களில் திருகாணியில் இருந்து தீபாவளிப் பட்டு வரை எல்லாரையும் ஒட்டி உரசி ஈஷிக்கொண்டே மூச்சு முட்ட சகட்டு மேனிக்கு சாமான்கள் வாங்கும் அசாத்திய தைரியசாலிகளைப் பார்த்து. அந்தக் கடைகளைப் பார்த்தும் தான்.

4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?

ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் அட்டெண்ட் செய்த யாரோ ஒருவரின் கல்யாண ரிஷப்ஷன் ஆடை அலங்காரங்களை இப்போதும் எப்போதும் ராத்திரி தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் நினைவில் வைத்திருக்கும் மாதர் குல மாணிக்கங்கள். - #எப்படி இவ்ளோ ஞாபகம் இருக்கிறது என்று சுத்தமாகவும் அழுக்காகவும் கூட புரியவில்லை.

அடுப்பில் கொதிக்கும் போதே வாசனை பார்த்து ”ரசத்துக்கு உப்பு பத்தாது” என்று ஹாலிலிருந்து அடுக்களை பார்த்து சத்தமிடும் மூக்கை நாக்காக வளர்த்த சில வாசனாதிப் பெரியோர்கள்.

ஆஸ்ரமங்களில் நித்யமும் ’ஆனந்த’ சாமியார்கள் ‘கட்டிப் பிடி வைத்தியம்” தான் செய்கிறார்கள் என்ற நிஜம் தெரிந்தும் கூட்டம் கூட்டமாய்க் குவியும் பக்தைகள் கூட்டம்.

5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

ரகுநாதனின் ‘ரஸிகன் கதைகள்’

நாலு வயசு கௌதம்மின் பர்த் டே பார்ட்டியில் கலந்து கொண்டு திரும்பிய மானஸா போட்டிருந்த ரோஸ் கலர் ஜிகுஜிகு கோமாளி கேப்.

இந்த நவீன உலகத்தின் இரக்கமில்லாத எஜமானன் - செல் ஃபோன்.

6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?

கல்யாண ரிஷப்ஷனில் கோட் சூட்டோடு சிரித்துக் கொண்டு எதிர்கால பயமின்றி போஸ் கொடுத்து நிற்கும் மாப்பிள்ளை. (பெண் சிங்கங்கள் சண்டைக்கு வரக் கூடாது. அப்படி வந்தால் ஆண் சிங்கங்கள் எனக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.)

”போதா பதவா.. தாஸ்கல்.. மூக்க அதுத்துதுவேன்” என்று என்னைத் திருப்பித் திட்டும் மழலைகள்.

எல்லாம் தெரிந்த ஆல் இன் ஆல் அழகுசாமி போல ”ஹார்ட் டிஸ்க்ன்னா ரொம்ப ஹார்டா கெட்டியா இருக்கும். லேசுல உடையாது. எங்க கீழ போட்டுப் பாருங்க”ன்னு சம்பந்தா சம்பந்தமில்லாமல் மூக்கை நுழைத்து உளறுபவர்கள்.

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

வாகனம் ஓட்டிக்கொண்டு, ரோட்டில் பிலாக்கு பார்த்துக் கொண்டு, யாருடனாவது நீலப் பல்லில் பேசிக்கொண்டும் வீடு திரும்பும் அசாத்திய திறன் எனக்கு உண்டு. வலையில் உலவும் உலாவி போல நான் ஒரு மல்ட்டி டாஸ்க்கிங் மென்பொருள்.

தமிழ்மண நட்சத்திர வாரத்தின் கட்டக் கடேசிப் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

”லேட்டாயிடுத்து சாப்பிட வரியா” என்று என்னைக் கூப்பிட்ட அம்மாவிற்கு ”இதோம்மா..” என்று பதில் கூறுகிறேன்.

”ஸிஸ்டம் குடு” என்று என் கையை தட்டிவிட்டு என்னிடமிருந்து பிடுங்கும் என் செல்லங்களிடம் இருந்து கெஞ்சிக் கூத்தாடி தப்பித்துக் கொண்டிருக்கிறேன்.

8) வாழ் நாள் முடிவதர்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

வேறென்ன? இலக்கியத் தரத்தில் இல்லையென்றாலும் நாலு பேர் படிக்கும் விதமாகவாவது. அட்லீஸ்ட் புரட்டும் விதமாகவாவது  ஹி ..ஹி.. ஒரு புஸ்தகம் போட வேண்டும்.

பாதியில் விட்ட மிருதங்கத்தை மீண்டும் தூசு தட்டி எடுத்து “தத்.தி.தொம்.நம்” மிலிருந்து ஆரம்பித்து முழுக்க கற்றுக்கொள்ளவேண்டும்.

இன்னொரு முறை மண்டையை பிளக்கும் கொளுத்தும் வெய்யிலில் மன்னையில் கிரிக்கெட் டோர்ணமெண்ட் ஒன்று விளையாட வேண்டும்.

9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?

இருபத்து நான்கு மணி நேரமும் அன்னம் தண்ணீர் ’அரசியல்வாதி சோடா’ போன்ற தேவைகள் இல்லாமல் வாய் மூடாமல் பேச முடியும்.

மனசொடிஞ்சு போய் நிர்கதியாக யாராவது வந்தால் “அதோ பாரு நிலா! அந்தக் கறை அதுக்கு எப்படி வந்துச்சு தெரியுமா? கறை இருந்தாலும் நிலா அழகு தானே”ன்னு பக்கத்துல உட்கார்த்தி வச்சு கதை சொல்லி மூடை மாற்றத் தெரியும்.

ஓராயிரம் ஆட்டோக்களுக்கு மத்தியில், சாலையெங்கும் வாகனங்கள் விரவியிருந்தாலும் மனோதிடத்துடன் நாற்சக்கர வாகனம் ஓட்ட முடியும். பத்து வருஷ ’வண்டியோட்டி சர்வீஸ்’ பேசுது.

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

மார்கழி மாத சபாக் கச்சேரிகள் கேட்டுவிட்டு  நானும் கச்சேரி செய்கிறேன் பார் என்று வாயைப் பிளந்து தெருவே கேட்கும்படி கதறும் புதிய உத்வேகப் பாடகர்கள் பாடும் எ(ச்)சப்பாட்டுகள்.

நான் படிக்கும் போதும் சரி இப்போது என் பெண்கள் பாடசாலையில் வாசிக்கும் இந்தக் கர வருஷத்திலும் சரி, ”பவி தேர்ட் ரேங்க். உங்க பொண்ணு எத்தனாவது ரேங்க்?” என்ற தேவையற்ற ஒப்பீட்டுக் கேள்வி. இதையே கிரேட் வைத்தும் கேட்பார்கள் என்று அறிக.

நுனி கூராக உள்ள மண்வெட்டியை மணல் இரைந்து கிடக்கும் தார் ரோட்டில் போட்டு “டர்..டர்.” என்று கரண்டும் ஓசை. அந்த மண்ணின் நரநர ஓசை காது வழியாக உள் புகுந்து உடம்பெங்கும் அரித்துக் கொண்டு பரவும். Oh God!

11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?

ஓயாமல் லொடலொடவென்று Chatter Box போல பேசாமல் தேவைக்கு மட்டும் வாயைத் திறப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

மாநகரப் போக்குவரத்தில் வண்டி ஓட்டும் போது கடிவாளம் கட்டியது போல ரோட்டை மட்டும் பார்த்து ஓட்டுவது எப்படி என்று கற்றுக் கொள்ள நெடு நாள் பிடிக்கும் போலிருக்கிறது.

கமகமவென்று தெருவே மணக்கும் வண்ணம் வாசனை மூக்கைத் துளைக்க சமைக்க (கரண்டி பிடிக்க) கற்றுக்கொள்ள வேண்டும்.

12) பிடிச்ச மூன்று உணவு வகை?

365 நாட்களும் இரவும் பகலும் இட்லி தோசை  அதன் இணை பிரியாத ஜோடி சட்னி சாம்பாருடன். ஸ்டார் ஹோட்டலுக்கு போனால் கூட இட்லி தோசைக்கு ஆளாய்ப் பறக்கும் இட்லி விசிறி நான். சாக்கடை கசியும் பிளாட்பார தட்டுக்கடை மல்லிப்பூ இட்லி போல கமகமக்கும் ஸ்டார் ஹோட்டல் குஷ்பூ இட்லி அவ்வளவு சுகம் இல்லை.

ரொம்பவும் தளர்ந்து இல்லாமலும், கெட்டியாகவும் இல்லாமலும் தொட்டுக்க மாவடு அல்லது விழுதுடன் ஊறிய ஊறுகின்ற ஊறப்போகும் ‘வினைத்தொகை’ ஆவக்காயுடன் தயிர் சாதம். பகாசுரன் போல பத்து நிமிடத்தில் ஒரு படி சாதம் உள்ளே சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஈவினிங் டிஃபனுக்கு வெங்கலப் பானையில் கிண்டும் தேங்காய் துறுவலுடன் அரிசி உப்புமா வித் மவுத் வாட்டரிங் நீர்க்க இருக்கும் கத்திரிக்காய் கொஸ்த்து. ரவையூண்டு புளி அதிகமாய் இருந்தால் கொஸ்துக்கு உப்புமா தொட்டுக்கலாம்.

13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

அவ்வப்போது டைனமிக்காக மாறும் பட்டியல் இது. இப்போது கீழே கொடுக்கும் லிஸ்ட், சென்ற ‘ட்’ அடித்த பிறகு டக்கென்று நினைவில் வந்தது.

என் கண்மணி என் காதலி... இளமாங்கனி....
படைத்தானே பிரம்ம தேவன்....
குருவாயூரப்பா... நான் கொண்ட காதலுக்கு நீ தானே சாட்சி.

எல்லாம் எஸ்.பி.பியாக முணுமுணுத்தாச்சோ!

14) பிடித்த மூன்று படங்கள்?

கிளாஸிக்
தேவர் மகன்
மகாநதி
குணா

காமடி
மைக்கேல் மதன காமராஜன்.
பஞ்ச தந்திரம்
பம்மல் ‘உவ்வே’ சம்பந்தம்.

படையப்பா
முத்து
பாட்ஷா

அண்ணாமலை......

Pursuit of Happiness என்று வாழ்க்கையில் கஷ்டப்படும் விற்பனைப் பிரநிதி ஒருவனின் கதை. ஆங்கிலத்தில் ஆக்‌ஷன் படங்கள் மட்டும் பார்த்த நான் கண்ணீர் வரவழைக்கும் படமாக பார்த்த சினிமா இது. ரியலி சூப்பர்ப். எவ்ளோ நாள் தான் கமல்/சிவாஜி படத்துக்கு மட்டும் ’ஓ’ன்னு அழறது.

....ஓ! மூன்று தான் சொல்லவேண்டுமோ? மும்மூன்றாய் நிறையச் சொல்லலாம். படமும் பாடலும் மூன்றில் நிறுத்தி முக்கோணமிட முடியுமா?

15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?

ரொம்ப சொகுசுக்கு உடம்பு பழகிடிச்சு.

பற்கள் கிடுகிடுக்கும் குளிர் காலத்திலும் இருவது டிகிரியில் இயங்கும் காரியர் ஸ்பிளிட் ஏ.ஸி.

முகத்தை மூடும் புழுதி, குளிப்பாட்டும் சாக்கடைப் புனித நீர், ஹார்ன் மாணிக்கங்களிடம் இருந்து செவிப்பறையை காப்பாற்றிக் கொள்ள என்று மூன்றுக்கும் சேர்த்து ஜன்னலேற்றிய ஒரு ஏ.ஸி கார்.

அட்லீஸ்ட் தினமும் ஒரு வேளையாவது ஒரு கவளமாவது தயிர் சாதம். யொகர்ட்டின் குண விஷேஷங்கள் பற்றி வெள்ளைக்காரர்கள் ஏகத்திற்கும் சிலாகிக்கிறார்கள்.

16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?

பதிவுலக சூறாவளி ராஜராஜேஸ்வரி
எழுத்தை ஆயுதமாய் வைத்திருக்கும் ஏ.ஆர்.ராஜகோபாலன்
தில்லியில் பதிவாட்சி செலுத்தும் வெங்கட் நாகராஜ்



பின் குறிப்பு: இதுவரை தமிழ்மணத்திலும் தொடர்ந்து வந்து படித்த அனைத்து அப்பாவி ஜீவன்களுக்கும் மிக்க நன்றி.

பட உதவி: http://journeyforth.wordpress.com/. நடு நாயகமாக  உட்கார்ந்திருக்கும் அந்தக் குரங்கு என்னை மிகவும் கவர்ந்தது. பாடுதா? பேசுதா?

-

Friday, July 8, 2011

மன்னார்குடி டேஸ் - ஸ ரி க ம ப த நி


அது ஒலிநாடாக்கள் கோலோச்சிய காலம். எண்பதுகளின் இறுதியிலும், தொண்ணூறுகளின் முதற் பாதியிலும் வட்டுத் தட்டை தட்டி கீழே இறக்கி தள்ளிவிட்டு நாடா படுவேகமாக முன்னேறியது. மீண்டும் நாடாவை உருவி வெளியே இழுத்து விட்டு தட்டு முன்னேறியது. ஆதி காலத்தில் பெருந் தட்டு. இப்போது குறுவட்டு. எகோ, மெல்ட்ராக் நிறுவனங்கள் டப்பா டப்பாவாக விற்று தீர்ந்து கொண்டிருந்தன. "இப்படத்தின் பாடல்களை ECHO கேசட்டுகளில் கேட்டு மகிழுங்கள்" என்று மஞ்சள் கலரில் டைட்டிலில் போடுவார்கள். மோவாய்க்கு புறங்கையை முட்டுக்கொடுத்து இசைச் சின்னங்களின் பின்னணியில் நிழல் (silhouette) இளையராஜாவின் அரை மொட்டைத் தலை ஒரு பக்கம் இசையாக சாய்ந்திருக்கும்.

குனிந்து பார்த்தால் முகம் காட்டும் கண்ணாடியாய் சில்வர் கலர் "ஷார்ப்" என்ற விதேசி டேப்ரெக்கார்டர் எங்கள் வீட்டு ஹாலை ஒரு மரப்பெட்டிக்குள் சிம்மாசனமிட்டு அலங்கரித்தது. அன்றைய காலத்தின் ஹீரோ. நம் கண்ணைக் குத்தும் படியாக ஏரியலை ஒடித்து திருப்பினால் சிலோன் ரேடியோ தெளிவாக பன்னிசைக்கும். எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் "சுப்ரபாதமும்", சூலமங்கலம் சகோதரிகளின் "கந்த ஷஷ்டி கவசமும்", நாகூர் ஈ.எம். ஹனிபாவின் "இறைவனிடம் கையேந்துங்கள்"லும்  பாடியது போக மீதமிருக்கும் நேரத்தில் காதலாய் "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு" பாடும். நாம் தினமும் மேலுக்கு குளிப்பது போல அப்பா அதை ஸ்ரத்தையாய் மஞ்சள் வெல்வட் துணியால் துடைத்து படு சுத்தமாக வைத்திருப்பார். விபூதி இட்டுவிடாததுதான் பாக்கி.

விஷமக்கார சிறுவர்கள் கையில் கேசட் சிக்கினால் நடுவில் விரலை விட்டு நாடாவை உருவி எடுத்து நரசிம்ம மூர்த்தி ஹிரண்யகசிபுவை குடலை உருவி கழுத்தில் போட்டுக்கொண்டது போல நாடாவை மாலையாக போட்டுக் கொண்டு விடுவார்கள். சில சமயங்களில் டேப் ரெக்கார்டரின் ஹெட்-இல் நாடா சிக்கிக்கொண்டு மக்கர் பண்ணும். "இத்தத்தத்.தத். .....து ... சா.ஆ யும்..." என்று "இது சாயும் காலமா"வை வலிப்பாக இழுத்தால் அது அந்த நொடியில் சாய்ந்து விட்டது என்று அர்த்தம்.  தொழில் கீர்த்தி பெற்ற ஒரு சிற்பியின் லாவகத்தோடு ஸ்க்ரூ டிரைவர் அல்லது டெஸ்டர் துணையோடு டேப் அறுந்து போகாமல் நோண்டி வெளியே எடுத்தால் நீங்கள் ஒரு டேப் மாஸ்டர்.

புழுதி தேசமான இந்தியாவில் பிரஜைகளின் மர்ம ஸ்தானம் தவிர தூசி அடையாத இடம் எது. "டேய் ஸ்டீரியோ சரியா எடுக்கலை.ஹெட்ல தூசி படிஞ்சிருக்கு. ச்சில்லிங் எஃபெக்ட் இல்லை. உங்க வீட்டு வண்டிலேர்ந்து பெட்ரோல் கொஞ்சம் எடுத்து பஞ்சுல நனச்சுண்டு ஹெட்டை லேசா தேச்சா பிரமாதமா பாடும்" என்று என்னைவிட வயதில் சிறியதெல்லாம் அட்வைஸ் கொடுத்து அதன் தலையை பெட்ரோல் தேய்த்து ஸ்நானம் செய்வித்து கெடுத்துவிட்டார்கள். "ஒண்ணுத்தையும் உருப்படியா வச்சுக்க யோக்கிதை இல்லை." என்ற பாராட்டு பத்திரமும் "லாயக்கத்தவன்" என்ற பட்டமும் கொடுத்து வீட்டில் என்னை கௌரவித்தார்கள்.

வாசல் தூணிலும் ஷட்டர் கதவிலும் R - என்ற ஆங்கில எழுத்துக்கு மேலே ராஜாவின் கிரீடம் வரைந்தது ராஜ் மியூசிக்கல்ஸ். அவர்கள் உள்நாட்டு தயாரிப்பு கேசட்டுகள் உலகத்தரம் வாய்ந்தது. கொடுத்த காசிற்கு வஞ்சனை இல்லாமல் ஒரு மாதம் கியாரண்டியாக பாடும். பஸ் ஸ்டாண்ட் வடவண்டை பக்கம் அனைத்து இந்தியப் பிரஜைகளின் ஜீன்களில் இருக்கும் ஒரே நல்ல பழக்கமான பொதுவெளியில் "நம்பர் 1" இருக்கும் இடத்திற்கு நேராக உள்ள ஆடியோக் கடை. கருகருவென்று நீக்ரோவின் சுருட்டை முடியும், உதடோடு முடியும் அளவெடுத்து வளர்ந்த மீசையும் உள்ள கருப்பு ராஜா நம் ராஜ். ராஜ் மியூசிக்கல் உரிமையாளர். எங்களூர் ஆடியோ ஜாக்கி. கட்டம் போட்ட கைலியை தூக்கிக் கட்டிக்கொண்டு ஏறிக்குதித்து ரெக்கார்டிங் செய்வதற்கு கடையின் உள்பக்கம் போய்விட்டால் நாதப் பிரம்மம் ஆகிவிடுவார். ஒரு கேசட்டின் 'A' மற்றும் 'B' பக்கம் முழுக்க எனக்கு "கீதா.. சங்கீதா..." என்ற ரசமான பாடலை பதிவு செய்து கொடுத்து காதல் பயிர் வளர்த்து சிறகு முளைத்த "தந்தன...தந்தன" தேவன் ஆனார்.

விடலைகளுக்கே உரித்தான அந்த வயசு ஹார்மோனின் தேவையான "லவ்வு" பாடல்கள் தொகுப்பு கேட்டால் கைவசம் பதிந்து வைத்திருக்கிற ஒரு மாஸ்டர் கேசட்டின் பாடல்கள் சிட்டை தூக்கிக் காண்பிப்பார். பெரும்பாலான அரும்புமீசைக்காரர்களுக்கு பார்த்ததும் நிச்சயம் பச்சென்று பிடிக்கும் பாடல் பட்டியல் அது. பானைக்குள் ஸ்பீக்கர் வைத்து, சத்தமாக "மல்லு வேட்டி கட்டியிருக்கு அதுமேல மஞ்ச வந்து ஒட்டிகிருச்சு.." பாடும் போது வேட்டியோடு வீட்டு வாசலில் நின்று கொண்டு ஃபிகர் வெட்டுவார்கள். ஃபிகர் வெட்டுதல் என்ற நுண்கலை வட்டார வழக்குகளில் பலவிதமாக பேசப்படுகிறது. கலர் பார்த்தல், சைட் அடித்தல், நூல் விடுதல், கரெக்ட் பண்ணுதல் போன்ற சில கலைச் சொற்களாலும் இது அழைக்கப்படுகிறது. முன்னோர்கள் காலத்திலிருந்து வழிவழியாக வரும் அருங்கலை.

பெயர்ப் பலகையில் டைனோசர் படம் போட்டு ஜுராசிக் பார்க் என்ற ஒரு ஆடியோ கேசட் கடை "இன்று முதல் பெரிய போஸ்ட் ஆபிஸ் எதிர்ப்பு'ர'ம் உதயமாகிறது" என்று நோட்டீஸ் அடித்து தெருத்தெருவாக விநியோகித்து ஆரம்பித்தார்கள். ஐயிரு பூஜை போட்டுவிட்டு போனவுடன் கலர் உடைத்துக் குடிக்கக் கொடுத்தார்கள். நான் உட்பட ஊரில் வெகுஜனத் தொடர்பு இருப்பவர்களுக்கு சர்வ மரியாதை செய்தார்கள். கல்யாணத்திற்கு தாம்பூலப் பை கொடுப்பது போல அன்றைய லேட்டஸ்ட் ஹிட்ஸ் பதிந்து ஒரு லோகல் கருப்பு கேசட் கொடுத்தார்கள். ஐந்து நாட்கள் பாடிவிட்டு அது உயிர் நீத்தது. கடை வெற்றிகரமாக அறுபது நாட்கள் திறந்திருந்தது என்று என் ந்யூரானின் சிறிய முடிச்சு சொல்கிறது.

பிறந்தால் தாலாட்டு, கட்டையை நீட்டினால் ஒப்பாரி, காதலித்தால் டூயட், ஆத்ம விசாரத்திர்க்கு கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள், நாற்று நட களை பறிக்க நாட்டுப்புறப் பாடல்கள், காலையில் எழுந்தால் "துதிப்போர்க்கு துன்பம் போம்" என்று வாழ்க்கையின் எல்லா நேரங் காலத்திற்கும் பாட்டு இருப்பது போல பஸ்ஸில் பயணத்தால் "டேப்பு பாடுமா?" என்று கேட்டுக்கொண்டே ஏறுவோர் பலர் அப்போது வாழ்ந்தார்கள். காதுகளில் சொருகிக்கொண்டு அலைந்து திரிவது வழக்கத்தில் இல்லை. யாராவது பரவாக்கோட்டை,மூவாநல்லூர் பார்ட்டி சிங்கப்பூர் போய்விட்டு வந்தால் ராஜா திரைப்பாடல் ரெகார்டிங் செய்வதற்கு காதில் மாட்டிய ஹெட் ஃபோன் சைஸில் ஒன்றை மாட்டிக்கொண்டு இடுப்பு பெல்ட்டில் ஒரு கிலோ எடைக்கு வாக்மன் சொருகியிருப்பார்கள். எடை தாங்காமல் பெல்ட் அறுந்து பேன்ட் அவிழ்ந்து விழும் அபாயத்தில் ஊர் சுற்றுவார்கள்.

பத்து ரூபாய், இருபது ரூபாய்க்கு தாங்கள் பதிந்த அரும்பாடல் தொகுப்பை ப்ரைவேட் பஸ் டிரைவர்களிடம் கொடுத்து காது குளிர கேட்டுக்கொண்டு பயணிப்பார்கள். "லோக்கல் கேசட்டு கொடுக்காதீங்க.. ஹெட் போயிரும்" என்று பிகு பண்ணிகொள்ளும் டிரைவர்களை தாஜா செய்ய அவர்களை நண்பனாக்கிக் கொள்ள வேண்டும். 'எட்டு' என்ற சனியின் நம்பர் கொண்ட பஸ் வயற்காட்டை தாண்டி எங்கள் கல்லூரிக்கு உள்ளே கொண்டு போய் சேர்க்கும். அதை மிஸ் பண்ணும் சமயங்களில் வரும் ப்ரைவேட் பஸ் டிரைவர் "வேலு" க்ளோஸ் பிரண்ட் ஆனார். சின்னக்கவுண்டர் விஜயகாந்த் போல தலையை தூக்கி சீவி சந்தனப் பொட்டு வைத்து அசத்துவார். "முத்து மணி மாலை...என்னத் தொட்டு தொட்டுத் தாலாட்ட" பதிந்த எந்த வீணாப்போன கேசட் கொடுத்தாலும் அண்ணன் தயங்காமல் தொடையில் தட்டிப் போடுவார்.

கல்லூரி விட்டு அந்தியில் தொந்தி கண்டக்டர் வரும் கணேசாவிலும் இந்தச் சிறப்பு வசதி உண்டு. "ரோஸ் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே" என்ற ஆந்திர தேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதியான ஒரு "டமக்கு டமக்கு" பாடலைப் போட்டு படுத்துவான் ஒரு நண்பன் என்கிற இசைத் துரோகி. பாடலைக் கேட்காமல் நாம் ஜன்னல் வழியாக வேறுதிசையில் எரிச்சலோடு பார்த்துக்கொண்டு வந்தால் வலிய வந்து தாவாங்கட்டையைப் பிடித்து தலையைத் திருப்பி "எப்படியிருக்கு?" என்று தாளகதிக்கு தலையை ஆட்டிக்கொண்டே கேட்பான். நமக்கு அப்படியே கதிகலங்கி போய்விடும். நம் கடித்த பற்களின் இடையே "சூப்பர்" வழியும்.

எக்கோ ரெகார்டிங் என்று ஒரு ஸ்பெஷல் பாடல் ஒலிப்பதிவு முறை கொஞ்ச காலம் பிரசித்தி பெற்றது. நிர்ஜனமான கோயில் பிரகாரங்களில் "அம்புலு"ன்னு கூப்பிட்டால் கடைசியில் சுந்தரத் தெலுங்கில் "லு..லு..லு..." என்று பிரகாரம் பேசி அடங்குமே அதைப் போல் பாடலை ரிகார்ட் செய்வார்கள். இந்தக் கால ரீமிக்சுகளுக்கு முன்னோடி. அது போல ஏதாவது ஒரு கேசட் பஸ் பயணத்தில் கொடுத்துவிட்டார்கள் என்றால் ரொம்ப சந்தோஷம். தலை, உடல், கால் என்று மூன்று இடங்களில் ஸ்பீக்கர் பொருத்தி இருக்கும் பஸ்களில் முதல் ஸ்பீக்கரின் எக்கோ இரண்டாவதில் பட்டு அப்புறம் முதலிரண்டும் ஜோடியாக கைகோர்த்து மூன்றாவதில் மோதி ஒரு இசைப் பிரளயமே அந்தப் பேருந்தில் நிகழும். ஒரு பொன் மாலைப் பொழுதில் பிறந்ததிலிருந்து அறுபது எழுபது வருடங்களாக இசை கேட்ட காதை குளிர் காலத்தில் ஸ்கார்ஃப் சுற்றிக்கொள்வது போல காதைச் சுற்றி இறுகக் கட்டிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டார் ஒரு வெள்ளைச் சட்டை பெரியவர். இறைவன் அவரை ஆட்கொண்டு விடக்கூடாதே என்று நான் கவலைப்பட்டேன்.

"தாலாட்டும் பூங்காற்று நானல்லவா..." பாடலில் முதல் நாற்பத்து நான்கு வினாடிகளில் அந்தரத்தில் சுழன்று பறந்து கார்த்திக் கைக்குப் போய் டேப்பில் சங்கமமாகும் கேசட் போல இது இன்னும் ஐந்தாறு பதிவுகள் தாங்கும் குதூகல கச்சேரி. முடிந்தால் பிறகு வேறொரு பதிவில் மிச்சம் மீதி....

-

Thursday, July 7, 2011

ப்ரியமுள்ள ஷஷிக்கு

ப்ரியமுள்ள ஷஷிக்கு,

நான் பூரண நலம். நீயும் அங்கே நலமாக இருப்பாய் என்று நம்புகிறேன். இந்த மடல் உன்னை வந்தடையும் போது எனக்கு இங்கே அண்டசராசரங்களுக்கும் இணையும் இணைப்பு. ச்சே. இணையும் என்றா சொன்னேன். ஸாரி. இணைய கனெக்ஷன் கிடைத்துவிடும். கிடைத்தால் மட்டும் என்ன உனக்கு ஒரு ஜங்க் மெயில் ஃபார்வர்ட் செய்ய முடியுமா அல்லது உன்னோடு உளமாற அரை மணி சாட் எனும் நவீன கடலைத் தான் போட முடியுமா? மெயில் ஐ.டி, கூகிள், யூடுயூப், ஃபேஸ்புக் என்று மிகச் சாதாரண அடிப்படை வசதிகள் கூட இல்லாத வனாந்தரத்தில் நீ வசிக்கிறாய் என்பது எவ்வளவு கேவலமாக இருக்கிறது தெரியுமா?

இங்கிருந்து உனக்கு நான் லெட்டர் எழுதி நாக்கால் எச்சில் படுத்தி ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் செய்யும் போது நான் அடையும் அவமானங்களுக்கு அளவே இல்லை. கையால் எழுதி உனக்கு கடிதாசி போடுவதற்கு இங்கே அலுவலகத்தில் இருக்கும் காரியதரிசி என்னைப் பார்த்து கேவலமாக சிரிக்கிறாள்.  நான் ஏதோ கற்கால மனிதர்களோடு தொடர்பு வைத்திருப்பது போல "சார்! நீங்கள் ஏன் மசியும் தூரிகையும் கொண்டு ஒரு பேப்பிரஸ்ஸில் எழுதி அங்கே ராக்கெட் கூரியர் அனுப்பக்கூடாது" என்று  கேலி பேசுகிறாள்.

நாடுகளுக்கு மத்தியில் வலைப் போராட்டமும், சர்வர் போரும் இல்லாமல் இருந்திருந்தால் நம் எல்லோருக்கும் பூலோக வாழ்வு சுகமளித்திருக்கும். யு.எஸ். தனக்கு வேலை தரவில்லை என்று சைனாக்காரன் அவன் சர்வருக்கு உலை வைத்தால் அவன் உலகமெங்கும் அதையே எடுத்து பற்ற வைத்துவிட்டான். நாமெல்லாம் சோம்பேறியாக வேலை செய்யாமல் மெஷினிடம் சரணாகதி அடைந்து சொந்த மூளையை துரு பிடிக்க விட்டுவிட்டோம். முடிவைப் பார்த்தாயா.

மக்களை மண்ணோடு மண்ணாக்க இதோடு சேர்ந்து கொண்டது குளோபல் வார்மிங். வெய்யில் காலத்தில் அசுர மழை. மழைக் காலத்தில் கொளுத்தும் வெய்யில். கண்ணுக்கு எட்டாத ஓசோன் பாதுகாப்புப் படலத்தை வாகனம் ஓட்டியே நார்நாராய் கிழித்து விட்டார்கள். ஆளையே சுட்டுப் பொசுக்கும் வெய்யில், அறுபது நாள் தொடர் மழை, அடிக்கடி சுனாமியோடு தோள் சேர்த்து ஊருக்குள் விசிட் அடிக்கும் சமுத்திரராஜன் என்று இயற்கை சீற்றத்தால் அல்லோகலப்படுகிறது.

சரி அதை விடு, இன்னும் கொஞ்ச நாள் தானே இந்தக் கஷ்டம் எல்லாம். பேசி என்ன பிரயோஜனம். இந்த மாதம் ரேஷன் கடைக்கு சென்று வந்தாயா? தயவு செய்து உன் புள்ளையாண்டானை ரேஷன் கடைக்கு அனுப்பாதே! தறுதலை மின்சாரம் வாங்கி யாராவது அரைகுறை ஆடை சிகப்பழகிக்கு தானம் கொடுத்துவிடுவான். இந்த முறை மாதத்திற்கு ஐந்து கிலோ வாட் மின்சாரம் கூடுதலாக தருவார்கள் என்று எழுதியிருந்தாயே, கொடுத்தார்களா? ரேஷன் மின்சார பாட்டரிக்கு ஒரு சனல் பை இலவசம் என்று அறிவித்தார்களே. நிறைவேற்றினார்களா? இப்போது தெருவில் இரவு பனிரெண்டுக்கு மேல் மண்ணெண்ணெய் விளக்கு எரிகிறதா இல்லை திகுதிகுவென்று பற்றி எறியும் தீவிட்டு கொளுத்தி வைத்திருக்கிரர்களா?  சுத்தத் தண்டமான மாநகராட்சி. இனி எந்த ஆட்சியில் இதை திருந்தச் செய்வார்கள்? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.

பொது அங்காடியில் தண்ணீர் அளந்து ஊற்றும் போது லிட்டர் குவளை கீழே நூறு எம்.எல்லுக்கு தகரம் அடைக்காமல் இருக்கிறார்களா? அந்தக் காலத்தில் கிருஷ்ணாயில் என்றும் மண்ணெண்ணெய் என்றும் அடுப்பெரிக்க பயன்படும் எரிபொருளுக்கு அப்படித் திருட்டுத்தனம் செய்வார்களாம். தயவு செய்து சிந்தாமல் சிதறாமல் ஜாக்கிரதையாக எடுத்து வா. நல்ல தண்ணீர் கோயம்பேடு கள்ள மார்க்கெட்டில் அதிகப்படி விலைக்கு கிடைக்கிறதாம். அரசாங்க நீரேற்று மையத்தின் கடல் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றியது குளிப்பதற்கு ஓ.கே. தயவுசெய்து கூவத்தில் இருந்து பிரித்தெடுக்கும் எந்தத் தண்ணீரும் நமக்கு வேண்டாம். நமக்கு ஒத்துக்காது. காசுக்கு பார்த்து உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உன்னிடம் ஜோக்காக சொல்வேனே அந்த "சர்வ குxடி தீர்த்தம்". அது தான் அந்த நீர்!

ஷுலக்ஷி எப்படி இருக்கிறாள்? ஷுஷன் ஊர் சுற்றிக்கொண்டு போக்கிரிகளோடு அரட்டையடித்துக் கொண்டு  சௌக்கியமாக இருக்கிறானா? எல்லோரும் "ஷ்" "ஷி", "ஷா" என்று மாடர்னாக வாயில் பசை போல ஈஷிக்கொள்ளும் ஷகரத்தில் பெயர் வைத்து இப்போது "ஷ" என்றாலே அங்கே "உஷ்" என்கிறார்களாமே ஆட்சியாளர்கள். வருகைப் பதிவு எடுக்கும் போது மாணவச் செல்வங்களின் பெயர்களைக் கூப்பிட்டால் "ஷ்..ஷ்.." என்று பாம்பு சீறுவது போல ஓசை கேட்டது என்று ஊரார் ஒரு பள்ளிக்கு கம்பு எடுத்துக் கொண்டு அடிக்க ஓடினார்களாம். கேள்விப்பட்டேன். நேற்று தான் அங்கேயிருந்து ஒரு வாட்டசாட்டமான பயல் வேலைக்காக இங்கு வந்து இறங்கினான்.  தேறுவான் போல தெரிகிறது. நம் சுலக்ஷிக்கு பார்த்து முடித்துவிடலாம்.

இன்னொரு முக்கியமான சேதி. இங்கே பிளாஸ்டிக் பைகள் எடுத்து வந்தால் ஆயிரம் கசையடிகள் தருவார்களாம். ஆயிரம் ஆணி பதித்த இருப்பு பெல்ட்டால் ஆன கசை. நம்மூரில் இந்தப் பைகளின் ராட்சஷ உபயோகம் தானே இரண்டு வருடத்துக்கு முந்திய கடும் புயல்மழையில் உருவான வெள்ளத்தை பூமியில் தேங்க விடாமல் செய்தது. ரோடை துடைத்து மொழுகி விட்டது போல ஒரு பொட்டுத் தண்ணீர் தேங்காமல் அனைத்தும் கடலில் ஓடிப் போய் சங்கமமானது உனக்கு தெரியாததல்ல.

அப்புறம் வேறென்ன விஷயம். ஒரு கிரௌண்ட் விளை நிலம் கிடைக்குமா என்று புறநகர்ப் பகுதியில் பார்க்கச் சொன்னேனே! பார்த்தாயா? 'விவசாயி' என்ற பெருமைமிக்க சமூக அந்தஸ்து நமக்கு கிடைத்துவிட்டால் நாம் மிகவும் மகிழ்ச்சியாக காலம் தள்ளலாம். ஊரார் நம்மைப் போற்றுவர். தலை மேல் வைத்து கொண்டாடுவார்கள். பெரிய இடத்து சகவாசம் எல்லாம் கிடைக்கும். இப்படி நான் ஒரு இடம் நீ ஒரு இடம் என்று வாழ்க்கையில் திண்டாட வேண்டாம். கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி என்றாகி விடுவோம். ஷுஷனை அட்லீஸ்ட் ஒரு அக்ரிகல்ச்சுரல் டிப்ளமோ படிக்கச் சொல். நாற்று நடுவதில் இருந்து களை பறிப்பது கதிர் அறுப்பது வரை நடைமுறைப் பாடம் எடுக்கும் நல்ல இன்ஸ்டிடுயூட்டில் சேர்த்து விடு. குருவி போல சேர்த்த பணத்தை இதுபோல எதற்காவது உபயோகமாக செலவிடலாம். கம்ப்யூட்டர், மெக்கானிகல் என்று ஏதாவது ஒன்று தான் படிப்பேன் என்றால் அந்தத் தறுதலையை அப்படியே விரட்டி விட்டுவிடு. நான் ஒன்றும் அவனுக்கு சொல்வதற்கில்லை.

ஆறடி உயர ஆஜானுபாகு ஆளின் நடுவிரல் உயரமும் குழந்தையின் உள்ளங்கை அளவிற்கு அகலமாக இருக்கும் ஒரு ஆழாக்கு அரிசி எழுநூறு ரூபாய் இருபத்தைந்து பைசாவாம். இப்போது புழக்கத்தில் இருக்கும் பீட்ஸா சாப்பிட்டு செத்த நாக்குகளை அடக்கம் பண்ணிவிட்டு அந்தக் காலம் போல ஈயச் சொம்பு மைசூர் ரசம் வைத்து உள்ளங்கையில் வாங்கி "சர்..சர்.." என்று உறிஞ்சி குடிக்க வேண்டும் என்ற அவா எழுந்துள்ளது. இந்த பர்கர், பீட்சா, பாஸ்தா, ஹாட் டாக் போன்ற கொடிய அரக்கர்களை தேசத்தை விட்டு உடனடியாக வெளியேற்றவேண்டும். இட்லி என்றவொரு பதார்த்தம் அவ்வளவு அருமையாக இருக்குமாம். இங்கே இருவர் பேசிக்கொண்டார்கள். இப்போது நான் சேர்ந்த இந்த அலுவல கான்டீனில் நாளைக் காலை ஸ்பெஷல் மெனுவில் இட்லி இடம் பெற்றிருக்கிறது. நாளை இட்லி சாப்பிடப் போகிறோம் என்று நினைத்தாலே இப்போதே நெஞ்சில் சந்தோஷம் பற்றிக்கொள்கிறது. கூடவே சாம்பாரும் ஊற்றுவார்களாம். உன்னைத்தான் நினைத்துக்கொண்டேன். ஸாரி!

உம். அப்புறம். ஒன்று கேட்க மறந்துவிட்டேனே! 'சுடுகோட்' வாங்கி மாட்டிக் கொண்டீர்களா? வெப்பம் எழுபது டிகிரி வரை செல்கிறதாமே! "நூதன முறையில் கொலை!" என்று தினமணியில் பெட்டி செய்தி ஒன்று படித்தேன். மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறதே! தன்னை ஒரு பெண் காதலிக்கவில்லை என்று உயிரோடு  எரித்துவிட்டானாமே ஒரு மா பாவி. அதுவும் எப்படி. ஒரு பெரிய பித்தளை அண்டா அடிப்பாகம் விட்டமுள்ள பூதக்கண்ணாடியை நண்பகலில் மொட்டை மாடியில் இருந்து அந்தப் பெண் வீதியில் அழகுப் பரிசோதனைக் கூடத்திற்கு நடந்து செல்லும் போது சூடான சூரியக் கிரணங்களை ஒன்று திரட்டி குவித்து குழந்தைகள் விளையாட்டிற்கு பேப்பரை பொசுக்குவது போல அந்தப் பெண்ணை பொசுக்கி விட்டானாமே! ஐயகோ! என்ன கொடூரமான செயல். 

நம் நகரெங்கும் ரோடுக்கு மேலே சிலிகான் ரப்பர் கூரை போடும் மெகா ப்ராஜெக்ட் முழுவீச்சில் நடைபெற்று வருகிறதா? சென்றமுறை நான் அங்கு வந்திருந்த போது பந்தல் கால் நட ஒருவனுக்கும் கூரை வேய இன்னொருவனுக்கும் கூரைக்குள் சிறு சிறு ஏ.சி மாட்ட மூன்றாவமனுக்கும் என்று பிய்த்து பிரித்து பலருக்கு டெண்டர் கொடுத்திருந்தார்கள். அந்த வேலை உருப்படியாக முடிந்ததா? சைக்கிளுக்கு காற்றடித்து வைத்துக் கொள். திடீரென்று அவசரமாக உன் அப்பா அம்மாவை பார்க்க மயிலாப்பூரில் இருந்து மணப்பாக்கம் செல்ல உபயோகப்படும். ஐம்பது பைசா ரோடு வரி கட்டி சைக்கிள் உபயோகிக்கலாம். ரொம்ப ஈசி. அடுத்த வருடமாவது செல்போன் இணைப்புகளை ஏற்படுத்துவார்களா என்று தெரியவில்லை. ஈஸ்வரன் தான் காப்பாற்றவேண்டும். தன்னுடைய இரண்டு பங்களாக்களை விற்று ஒரு ப்ரஹஸ்பதி வீம்புக்கு ஒரு மாதம் "நான் பெட்ரோல் கார் ஒட்டுகிறேன் பார்" என்று பீத்திக்கொண்டு ஓட்டிவிட்டு திவாலாகி சாமான் செட்டோடு வீதிக்கு வந்துவிட்டதைப் பற்றி இங்கே வம்பு பேசி சிரிக்கிறார்கள். இந்த 2300ல் இப்படியும் சில மனிதர்களா!

ஏதோதோ எழுதிவிட்டேன். நிறைய கேள்வி கேட்டிருக்கிறேன். சாவகாசமாக பதில் போடு. குட்டி எழுத்துக்களில் எழுது. அப்போதுதான் பக்கம் குறைவாக கடிதம் குறைந்த எடையில் இருக்கும். காசு குறைச்சலாக ஆகும். நான் இங்கே செட்டில் ஆனவுடன் நிச்சயம் உங்களை என்னுடன் அழைத்துக் கொள்கிறேன். பச்சைப் பசேல் மரங்களும், ஏரிகளும், குளங்களும் என்று இந்த இடம் நிஜமாகவே சொர்க்கபுரியாக இருக்கிறது.

அன்பு முத்தங்களுடனும் ப்ரேமையுடனும்,

ஷிவன்.
கேம்ப் செவ்வாய் கிரகம்.

current place

P.S: இத்துடன் இணைத்துள்ள படத்தில் இருக்கும் அந்த வானுயர்ந்த கட்டிடங்களில் ஒன்றில் தான் நான் பணிபுரிகிறேன்.அந்த முன்னால் இருக்கும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட அந்தக் கூரை வீட்டில் தான் நான் குடியிருக்கிறேன். சமூக ஏற்றத்தாழ்வுகள் இங்கேயும் இருக்கிறது. எல்லா இடத்திலும் மனிதர்கள் தானே வாழ்கிறார்கள். Men are from Mars, Women are from Venus என்று முன்னூறு வருடங்களுக்கு முன்பு எழுதிய ஒரு புத்தகத்தின் தலைப்பு எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. 


To

திருமதி ஷஷி ஷிவன்,
டோர் நம்பர். 12 , காலனி நம்பர் 78 , ஸ்ட்ரீட் நம்பர் 46 ,  ஏரியா நம்பர் 65 , ஊர் நம்பர் 18 (பழைய பெயர்: மயிலாப்பூர் ), எட்டாவது நகரம், ஏழாவது நாடு, பரதக் கண்டம், மூன்றாவது கிரகம்.


பட உதவி: http://fantasyartdesign.com/
-

Wednesday, July 6, 2011

பாட்டியின் பரிசு!

என்னுடைய இலக்கிய அறிவு அப்படி ஒன்றும் பிரமாதமாக சொல்லிக்கொள்ளும்படி கிடையாது. நட்சத்திரமாக எழுதச் சொல்லுகிறார்களே நமக்குத் தெரிந்த சில இலக்கியங்களைப் பற்றி லேசாக கண்ணடிக்கலாம் என்று ஒரு அல்ப அவா சொல்பமாக எனக்குள் முளைக்கிறது. கொஞ்சம் வளர்ந்து தொண்டையைக் கூட இப்போது முட்டுகிறது! சின்னஞ் சிறிய வயதில் நான் அறிந்ததெல்லாம் எங்கள் ஊர் பெரிய கோவில் திருவிழாவில் நடைபெறும் பட்டிமன்ற இலக்கியங்கள் தான். இப்போது முக்குக்கு முக்கு டிவிக்கு டிவி பண்டிகைக்கு பண்டிகை நடக்கும் "பொண்டாட்டியிடம் தர்ம அடிவாங்குவது கணவனே! அம்மாவிடம் மண்டகப்படி பெறுவது பிள்ளைகளே! மருமகளிடம் சாத்துப்படி வாங்குவது மாமியாரே!" என்று புரட்சிகரமான தலைப்பு அணிந்த; பக்கத்துக்கு ரெண்டு பேர் உட்கார்ந்து பங்கேற்கும் வெட்டி பட்டிமன்றங்கள் அல்ல. எல்லாமே கொட்டும் மழையிலும் கூட அக்மார்க் இலக்கியத் தமிழ் சொட்டும் விவாத அரங்கங்கள். வழக்குகளுக்கு "கணம் நீதிபதி" அவர்கள் தீர்ப்பு சொல்லும் வரை உட்கார்ந்து கைதட்டும் ஆர்வலர்கள் நிறைந்த தமிழ் பேசும் வழக்காடு மன்றங்கள்.

"செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதில் முதன்மையானவன் கர்ணனா! கும்பகர்ணனா!" போன்ற தலைப்புகளில் இதிகாச நாயகர்களை தெரிவு செய்து எட்டரை ஒன்பது மணிக்கு தொடங்கி விடிய விடிய ஸ்பீக்கர் அசர தமிழ் பேசுவார்கள். ஒல்லியான கே.பி.சுந்தராம்பாளாக நெற்றியில் விபூதிக் கீற்றோடு காந்திமதியம்மாவும், பேராசிரியர் செல்வகணபதியும் தான் சட்டென்று நினைவுக்கு வருகிறார்கள். பாதிப் பேச்சில் தொண்டை கரகரக்கத் தண்ணீர் கொஞ்சம் சாய்த்துக்கொண்டு மீண்டும் சொற்போர் தொடருவார்கள்.

"எங்களோடு வந்துவிடேன்" என்று கெஞ்சிக்கேட்டவன் கண்ண பரமாத்மா, "அர்ஜுனன் மேல் ஒரு முறைதான் நாகாஸ்திரம் தொடுக்கவேண்டும்" என்று இறைஞ்சியது தன் தாய் குந்தி, எதிர்க்கப்போவது தன் உடன்பிறந்த தம்பிகளை என்று தெரிந்தும் அறிந்தும் ஒருவன் "எடுக்கவோ.. கோர்க்கவோ" என்றவனுக்காக உயிர் நீத்தானே அது தான் செஞ்சோற்றுக் கடன் என்று அம்மாவும், தன் அண்ணன் செய்வது தவறு என்று தெரிந்தும், நியாய அநியாயங்களைப் பற்றிக் கவலைப்படாமல், தன் அணி தோற்கும், தாம் இறப்போம் என்று தெரிந்தும், அண்ணனுக்காக, ஆறாறு மாதங்கள் அவனிடத்தில் உண்டு உறங்கியதர்க்காக களம் புகுந்து வீரமரணம் அடைந்தவன் கும்பகர்ணன். ஆகையால் அவனே அத்தர்மத்தில் சிறந்தவன் என்றும் கட்சி பிரித்து "நீதிபதி அவர்களே!" என்று அடிக்கடி உரிமையாகவும், செல்லமாகவும், கிண்டலாகவும், அதிகாரமாகவும், ஆக்ரோஷமாகவும் விளித்து வாதாடுவார்கள்.

அரை டிராயரை இடுப்புக்கு மேலே இழுத்துப் போட்டுக் கொண்டு என் சின்னம்மாவின் கையோடு கைகோர்த்து ராஜகோபாலசுவாமி கலையரங்கில் காற்று கவரி வீச மணலில் உட்கார்ந்து கேட்ட அற்புதமான இலக்கிய இரவுகள் அவை. கலையரங்கத்திர்க்கு எதிரே ராஜகோபாலன் ஏகாந்தமாக 'குளுகுளு' காற்று வாங்கிக்கொண்டு புன்னகைத்துக் கொண்டே சேவை சாதிப்பார். அன்று வானில் பௌர்ணமி என்றால் மனமகிழ்ச்சிக்கு கேட்கவே வேண்டாம்! கூடுதல் சந்தோஷத்தில் உள்ள உவகை பொங்கி வழியும்.



ரெண்டாவது படிக்கும் என் இளைய வாண்டு ஒப்பிக்கும் "அறம் செய விரும்பு, ஆறுவது சினம்" எழுதிய 'ஆத்திச்சூடி' ஔவையார் நானனறிந்த நாடறிந்த இலக்கியத் தமிழுக்கு இலக்கணமான பாட்டி. குழந்தைகள் சிலபசுக்கு பாடல் எழுதிய முதல் குழந்தைக் கவிஞர் அவர். சிறார்களை நல்வழிப்படுத்தினால் நாட்டை சீர்திருத்த முடியும் என்று மனதில் நிறுத்தி அவர்கள் மேம்பாட்டுக்கு எழுதியவர். கலாமின் ஆதர்சமாகக் கூட இருக்கலாம். சங்ககாலத்தில் மொத்தம் மூன்று ஔவையார் இருந்தார்கள் என்று ஆள் கணக்கு ஒன்று சொல்கிறார்கள். ஒரே ஒளவையாருக்கு இறைவன் மூன்று அவதாரம் கொடுத்தாரோ என்னமோ.

பாரி, அதியமான் போன்ற மன்னர் பெருமக்களோடு கை குலுக்கி நண்பியாகவும், சபை நாற்காலியில் அமர்ந்து ஆலோசகர் போலவும் நெருங்கிப் பழகி தமிழ்த் தொண்டாற்றிய ஒரு ஔவையார் சங்ககால எள்ளுப்பாட்டி. அந்தக்காலத்தில் எழுத்தாளர்களுக்கு அவ்வளவு மவுசு என்று புரிகிறது. கம்பர், ஒட்டக்கூத்தர் போன்ற புலவர் பெருமக்களோடு வார்த்தை ஜாலம் செய்து கவிச் சண்டை போட்டு விளையாடியவர் ஒரு கொள்ளுப்பாட்டி ஔவையார். கடைசியாக விநாயகர் அகவல், ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் எழுதியவர் பாட்டி ஔவையார் என்று ஔவை பரம்பரையை வரிசைப்படுத்தியிருக்கிறார்கள். நான்காவதாக நாம் அறிந்த ஔவையார் 'திருவிளையாடல்' மற்றும் 'ஔவையார்' படப் புகழ் "ஔவை" கே.பி. சுந்தராம்பாள். என்னது அவ்வை ஷன்முகியா? அது கமல் படம்ங்க. இன்னும் சில தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் அந்தக் காலத்தில் தமிழில் தேர்ச்சியுடன் வெண்பா பாடிய அனைத்து பெண்பாற் புலவர்களுக்கும் ஔவை என்ற மரியாதை அடைமொழி இருந்ததோ என்றும் சந்தேகிக்கிறார்களாம்.

எது எப்படியோ. அவ்வையின் தமிழ் விசேஷ அழகு. சம காலத்தில் இயற்றப்பட்ட கம்பராமாயணம் போன்றவைகள் பல்லை உடைக்கும் தமிழில் இருந்தாலும் மிக எளிமையாக புரிந்துகொள்ளும் படி எழுதிய ஔவைக்கு ஒரு சல்யூட். அந்தக் காலத்தில் இது ஒரு "பின் நவீனத்துவ" எழுத்தோ?. ஒரு ஐந்து தலைப்புகளில் ஒளவையின் தனிப் பாடல்களை தொகுத்து இங்கே தருகிறேன்.

1. அழகு.
சிலருக்கு தமன்னா அழகு, சிலருக்கு நமீதா, சிலருக்கு இந்தக் கால சரோஜாதேவி, இன்னும் சிலருக்கு மல்லிகா ஷெராவத். ஷாரூக், ரஜினி, கமல், அஜித், விஜய் என்று பெண்பாலருக்கு ஹாண்ட்சம் ஆண்கள் பலர். ஆனால் சான்றோருக்கு அழகு எது என்று ஔவையார் சொல்வதை இந்தப் பாடலில் பாருங்களேன்.

சுரதந்தனில் இளைத்த தோகை; சுகிர்த 
விரதந் தனில் இளைத்த மேனி; - நிரதம்
கொடுத்திளைத்த தாதா; கொடுஞ்சமரிற் பட்ட
வடுத்துளைத்த கல்அபிரா மம்.
கணவனுடன் கூடி சந்தோஷம் சுகித்துக் களைத்த மனையாளும், சொட்டுத் தண்ணி உள்ளே போகாமல் பரிசுத்தமான  விரதம் இருந்து இளைத்த பக்தர் மேனியும், "வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது" என்கிற ரீதியில் செல்வங்களை வாரி வாரிக் கொடுத்து இளைத்தவர்களும் (இவர்கள் தான் அக்காலத்தில் தாதா, இக்காலத்தில் அடி கொடுப்பவர்கள் தான் ஏரியா தாதா), உக்கிரமான போரில் அடிபட்டதனால் ஏற்பட்ட விழுப்புண் வடுவும், அதில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு நடப்படும் நடுகல்லும் சான்றோருக்கு அழகு.



2.பிறவிக் குணம்.
அவ்வப்போது கமறிக்கொண்டு கனைப்பது, கண்ட இடங்களில் எச்சில் துப்புவது, அசிங்கமான பெண்களை பார்த்தாலும் பழக்க தோஷத்தில் ஒற்றைக் கண் அடிப்பது, சதா காலாட்டிக்கொண்டே இருப்பது, எதையெடுத்தாலும் "ஹும்.ஹும்" என்று மோந்து பார்ப்பது, இருட்டிய பிறகு வேஷ்டியை தூக்கிக்கொண்டு தெரு முக்கில் அற்ப சங்கைக்கு ஒதுங்குவது என்று பல விஷயங்கள் "அது அவரோட பளக்கம்" என்றும் "அவரோடைய கூடப் பொறந்த குணம்" என்றும் மக்களால் வழங்கப்பட்டு வருகின்றது. எதெது நடைமுறை பழக்கத்தில் வருகிறது, எதெது பிறவியிலிருந்தே குணமாக இருக்கிறது என்பதை பற்றிய ஒரு அற்புதமான பாடல் கீழே.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

மெருகேறிய ஆளை அசத்தும் உயிர்ப்பான ஓவியங்கள் கைப் பழக்கத்தாலும், பேசப் பேச, பாடப் பாட அனைவரையும் கவர்ந்து இழுக்கும் செந்தமிழ் நாப் பழக்கம், கவனமுடன் கூர்ந்து படிக்கும் கல்வி எப்போதும் மனப் பழக்கம் என்றும் சாதாரணமாக நடப்பது கூட நடைப் பழக்கம் என்றும் சொன்ன ஔவை பிறரிடம் நட்பு பாராட்டுதல், ஐயோ பாவம் என்று இரக்கம் காட்டுதல் மற்றும் இல்லையென்று சொல்லாத வள்ளல் தன்மை இம்மூன்றும் பிறவிக் குணம் என்று போற்றுகிறார்.

நட்பு, தயை, கொடை இம்மூன்றுக்கும் மஹாபாரதத்தில் வரும் கர்ணன் பொருத்தமாக இருக்கிறான் அல்லவா?

3.பெரியார் சிறியர் கயவர்:
அறுத்த கைக்கு சுண்ணாம்பு கொடுக்க மாட்டான் என்று சிலரை எங்கள் பக்கத்தில் சொல்வார்கள். நகர வாழ்வு கூட அப்படிப்பட்டதுதான். காக்கா வலிப்பு வந்து ரோட்டில் விலுவிலுக்கென்று இழுத்துக்கொண்டு கிடந்தாலும் மணிக்கட்டை திருப்பி மணியை பார்த்து விட்டு "அச்சச்சோ. லேட் ஆயிடிச்சு" என்று ஆபீசுக்கு ஓடிவிடுவார்கள். சில பரோபகாரிகள் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று உதவி செய்து விட்டு தான் இடத்தை விட்டு நகர்வார்கள். "ஏம்பா. இதைக் கொஞ்சம் எனக்காக செய்யக்கூடாதா?" என்று கேட்டால் சிரமேற்கொண்டு செய்து முடிக்கும் பாங்குடையவர்கள். வலிய வந்து தானாகவும் செய்யாமல் தாவாங்கட்டையைப் பிடித்து கெஞ்சி கேட்டாலும் செவி சாய்க்காமல் அவர்கள் போக்கில் திரிபவர்கள் சிலர். இந்த மூவரைப் பற்றி ஒளவையின் பாடலும் விளக்கமும் கீழே.

சொல்லாம லேபெரியார் சொல்லிச் செய்வர்சிறியர்
சொல்லியுஞ் செய்யார் கயவரே - நல்ல 
குலாமாலை வேற்கண்ணாய் கூருவமை நாடில் 
பலாமாவைப் பாதிரியைப் பார்.
நல்ல குலத்தில் தோன்றிய வேல் போன்ற விழியாளே, நம்மை ஒரு ஆபத்தில் பார்த்தவுடன் தாமாகவே முன்வந்து உதவிக்கரம் நீட்டுபவர்கள் உன்னதமான பெரியோர்கள். நாம் சென்று "உதவி" என்று கேட்டவுடன் ஓடோடி வந்து உதவுபவர்கள் நற்பண்பு சிறிதேனும் உள்ள சிறியோர்கள், உதவி கேட்டும் செய்யாமல் இருப்பவர்கள் கயவர்கள். இம்மூவரையும் அடையாளம் காண உனக்கு உவமை வேண்டுமா? பெரியோர்கள் பலாமரம் போன்றவர்கள். பூக்காவிட்டாலும் காய்த்துவிடுவர். சிறியவர்கள் பூத்து பின்னர் காய்க்கும் மாமரம் போன்றவர்கள். பூத்தாலும் காய்க்காத பாதிரியைப் போன்றவர்கள் உதவி கேட்டாலும் உதவாத கல்நெஞ்சக் கயவர்கள்.

4. யாரோடு எது போம் 
பக்கத்து பிளாட்டில் குடிவந்து, இரண்டு வருடத்தில் காலி செய்த காதலியான நண்பியை இழந்தவுடன் தாடியுடன் சோகராகம் பாடுபவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலர் ஆபீஸ் நட்புகளை இழந்து வேறோர் இடம் செல்லும் போது "வலிக்குது" என்று துன்புறுவர். இன்னும் சிலர் "மச்சான்! வாழ்க்கையே வெறுத்துப் போச்சுடா" என்று அல்ப விஷயத்திற்கெல்லாம் அலுத்துக் கொள்வார்கள். யாரோடு எது போகிறது என்ற ஒளவையின் எளிதான பாடல் கீழே.
தாயொடு அறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம் 
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் - மாயவாழ்வு
உற்றா ருடன்போம் உடன்பிறப்பால் தோள்வலிபோம் 
பொற்றாலி யோடெவையும் போம்.
பெற்ற தாயோடு அறுசுவையான உணவு போய்விடும்; தந்தை இறந்துவிட்டால் கல்வி கற்பதற்கான பொருளாதாரம் இழந்து அதுவும் போம்; தான் பெற்ற மக்கள்  இறந்தபின் செல்வம் அனைத்தும் சென்றுவிடும்; உறவினர்களுடன் மாய வாழ்வு நலம் மரிக்கும்; குடும்பத்தை சுமக்கும் தோள் வலிமை உடன்பிறப்புடன் சென்று விடும், பொன் தாலி அணிந்த மனைவி மறைந்துவிட்டால் எல்லாமே போம். என்கிறார் ஔவை.

5. பேஷ் பேஷ்
புகழுரைக்கு மயங்காதவர் எவரும் இலர். "சூப்பர்டா" என்று ஒரு வார்த்தை சொல்லி பல ஆயிரத்திற்கு ட்ரீட் வாங்கிக் கொண்டவர்கள் ஏராளம். "நீங்க நல்லா பண்றீங்க... அடி வெளுத்துட்டீங்க.. இதுல நீங்க தான் ராஜா உங்களை அடிச்சுக்க ஆளே இல்ல.." என்று வகைவகையாய் பாராட்டுரைகள் இவ்வையகத்தில் உண்டு. இருந்தாலும் யார் யாரை எங்கே புகழவேண்டும் என்று ஔவை கொடுக்கும் இந்த லிஸ்ட் நிச்சயம் கவனிக்கப் படவேண்டிய ஒன்று.

நேசனைக்கா ணாவிடத்தில் நெஞ்சார வேதுதித்தல் 
ஆசானை எவ்விடத்தும் அப்படியே - வாச 
மனையாளைப்  பஞ்சணையில் மைந்தர்தமை நெஞ்சில்
வினையாளை வேலைமுடி வில்.
நண்பர்களை அவர்கள் முகத்துக்கு நேரே புகழக் கூடாதாம். அவர்கள் இல்லாதபோது புகழவேண்டும். நாம் படித்த குருவின் புகழ் எப்போதும் பாட வேண்டும். மனைவியை பஞ்சணையில் புகழ வேண்டும். நம் குலக்கொழுந்துகளை நெஞ்சுக்குள்ளேயும், நம்மிடம் வேலைப் பார்க்கும் வேலையாட்களை அவர்களது பணி முடிந்தவுடனும் வாயாரப் புகழ வேண்டும் என்கிறார் ஔவை. இந்த பட்டியல் அனைத்துமே இன்றும் அப்பட்டமான உண்மையல்லவோ.

காலம் கடந்து நிற்கும் ஒளவையின் பாடல்கள் இலக்கியம் தானே!

பின் குறிப்பு: இது என்னுடைய முதல் இலக்கிய ஜல்லி. பிடித்திருந்தால் பாராட்டுங்களேன், தொடர்ந்து அடிப்போம் இ.ஜல்லியை. இல்லையேல் "பேஷ் பேஷ்"ஷில் நண்பர்களுக்கு ஔவை சொன்னது போலவாவது செய்யுங்கள். நன்றி.

பட உதவி: http://www.manithan.co


இந்த ஜல்லியடிப்பதற்கு உந்துகோலாகவும் ஒளவைப் பாட்டியின் ஊன்றுகோலாகவும் இருந்த நூல், ஔவையார் தனிப்பாடல்கள். தெளிவுரை புலியூர்க்கேசிகன். பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்.

-


ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails