Showing posts with label பத்தி. Show all posts
Showing posts with label பத்தி. Show all posts

Tuesday, July 29, 2014

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்

ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்
சதுர்முக பாணன் தைக்கும் சட்டை
காமக் கனலில் கருகுஞ் சருகு
காற்றில் பறக்கும் கானப் பட்டம்
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை
நீரிற் குமிழி நீர்மேல் எழுத்து

---வரிக்கு வரி நிச்சயமில்லாத வாழ்வுடா இதுன்னு பட்டினத்தார் பிடறியில் அடித்து சொல்லும்போது அரையில் கட்டியிருக்கும் காவியோட எழுந்து வீதியில கடகடன்னு இறங்கிடலாமான்னு....... சரி.. ஆஃபீஸுக்கு கிளம்பணும்..

அக்காஃபோன்

எந்தூரு மார்க்கெட்டுலயும் இப்படி ஒரு ஃபோன் யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. ஊராருக்கெல்லாம் அது ஐஃபோன். எனக்கு அது அக்காஃபோன். அக்காவின் கட்டுக்கடங்கா கரையுடைக்கும் பேரன்பு iPhone 5Sஆக அமெரிக்காவிலிருந்து கொட்டியது. கீபேடை பாந்தமாக அமுக்கும் போது அது சன்னமாக “க்கா..க்கா...” என்றே மெலடியாக ஒலிக்கிறது. என்னுடைய ஐஃபோன் வழி ஃபேஸ்புக் லைக்குகளிலெல்லாம் அருமை அக்காவின் லைக்கும் அடங்குகிறது என்றறிக.

இதற்கு முன்னால் iPhone 4Sல் கதைத்துக்கொண்டிருந்தேன். அதுவும் திருஅக்காவின் உபயமே! இந்த மெய்கீர்த்தியை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் டெல் இன்ஸ்பிரான் அக்கா இட்ட பிச்சை. இப்படி அக்காவின் பாச கேட்ஜெட் மழையைப் பார்த்துவிட்டு நண்பரொருவர் ஸ்டமக் பர்னிங்கோடு “உங்க அக்கா என்னை தம்பியா ஸ்வீகாரம் எடுத்துப்பாங்களான்னு கேளுங்களேன்... ப்ளீஸ்..” என்று கெஞ்சுகிறார். ஷேர் செய்ய முடியாத அன்பு. கடையேழு வள்ளல்களில் அரசியர் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய எட்டாவது வள்ளலாக இடம் பிடித்த கடையெட்டாவது வள்ளல், எனது உடன்பிறந்த சகோதரி Krithika Hariharan யக்கோவ் அவர்கள்.

“மலர்ந்தும் மலராத... பாதி மலர் போல..” பாட்டு உங்கள் காதுக்குள்ளும் ரீங்காரமிட்டால் நீங்களும் பாசமலர்தான்!

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்!!

வாய்க்கு இதமான இளஞ்சூடு வெங்காய பகோடாவும் ஆவி பறக்கும் ஸ்ட்ராங் ஃபில்டர் காஃபியும் மழையின் சாஸ்வதமான தோழமைகள். சென்னையின் கான்க்ரீட் காட்டில் கொட்டும் மழையை விட மன்னையில் பொழியும் மழை மனசுக்கு ரம்மியமானது.

நான்கு திசைகளிலும் ”ஹோ”வென்று பரந்து விரிந்த ஹரித்ராநதியில் விசிலடிக்கும் காற்றுடன் கைகோர்த்துக்கொண்டு மழை போடும் எண்ணிலடங்கா புள்ளிக் கோலம்........ தெற்கிலிருந்து வடக்கிற்கு காற்றடித்தால் நேர்ப்புள்ளி. வடகிழக்காகவும், தென்மேற்காகவும் வீசும் காற்று குளற்று நீரில் ஓடியோடி இடுக்குப்புள்ளி வைக்கும்.

தான் தூறலின் போது வைத்த புள்ளியை அடித்து பெய்யும் போது இணைக்கும் காட்சியை யுகாந்திரமாய் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். ஒரு பெருமழைக்கு ஆயிரமாயிரம் நீர்க் கோலங்கள். சிக்குக் கோலம், அன்ன பட்சி, தேர், கத்திரிக்கா, கை கோர்க்கும் பேபிகள், பொங்கல் பானை, சிவலிங்கம், க்ருஸ்துமஸ் மரம் என்று நான்கு கரையிலிருக்கும் ஜன்னல் தோறும் பொங்கி வழியும் எண்ணம் போல பல வடிவக் கோலங்கள்.

கொடி கோவைக்காயை நறுக்கி அழித்த கல் ஸ்லேட் போல மழை நின்ற பின் காட்சியளிக்கும் எழில் குளம் இன்னொரு மழையைக் கோலம் போட தவறாமல் அழைக்கும். மழை திரும்பவும் புள்ளி வைக்கும். இணைத்துக் கோலம் போடும். குதூகலிக்க வைக்கும்.

தேவக் கொடையான அம்மழைக் கோல குளத்தழகை என் போன்ற நரர்கள் அல்பமாக ஒரிரு பாராக்களில் அடக்கமுடியாது.

இது ஒரு இராக்காலம்!

நள்ளிரவுக்கு இன்னும் அரை மணி இருக்கிறது. நிர்ஜனமான வீதி. பத்து வீட்டிற்கு ஒரு தரம் ரோட்டில் பட்டை பட்டையாய் வெள்ளிப் பாதை. இராக்காலத்தில் க்ரில் கேட்டிற்குத் துணையாக அதன் மேல் கை போட்டபடி இப்படி விஸ்ராந்தியாக சாய்ந்து நிற்பது பரமானந்தம். மனசு பந்தாகக் கழன்று எதிரில் வந்து பேசும். நின்ற பொருள் நிற்கவும் அசையும் பொருளும் நிற்பதுமான கசகச நேரம். பாலிதீன் மற்றும் பேப்பர் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் பட்டினத்து மடி சிறுத்தப் பசு மாடு. பக்கத்துத் தெரு ஆர்த்தோ டாக்டர் வீட்டு டாமியின் கட்டுக்கடங்கா “ஊ”ங்காரம். டாமிக்கு ஒரு ஸ்ட்ரீட்டியின் வலுவான “லொள்”ளெதிர்பாட்டு. தொடர்ந்து சிக்குசிக்குசிக்கு என்று மண் தரையைத் தேய்த்துக்கொண்டு பரிவாரங்களோடு விரட்டி எல்லைச் சண்டையில் ஈடுபடும் பைரவர்கள்.

டர்ர்ரும் டிவியெஸ் ஃபிஃப்ட்டியில் சைக்கிள் வேகத்தில் கடையடைத்துச் செல்லும் அண்ணாச்சி. “கிணிங்.. கிணிங்..”. நம்பிக்கையோடு தெருக்குள் நுழையும் குல்ஃபி ஐஸ்காரர். குல்ஃபிப்பானைப் பக்கத்து பேட்டரி லைட்டில் புட்டபர்த்தி சாய்பாபா. குல்ஃபியைக் கடந்து செல்லும் பெடல் தேய்ந்த க்ரீச்..க்ரீச் சைக்கிள். க்ரீச்சிசை தேய்ந்து சன்னமாகக் கேட்டு மௌனமாக அடங்குகிறது. இப்போது தெருவில் யாருமில்லை. ஒன்று.. இரண்டு.. மூன்று.. நிமிடங்கள் கடந்திருக்கும். ஊஹும். யாருமில்லை. கழுத்தை எக்கி இடமிருந்து வலமாக தெருமுழுவதையும் பார்க்கிறேன். ஈ காக்காயில்லை. காலையிலிருந்து உழைத்துக் களைத்த தெரு அமைதியாகத் தூங்குகிறது. அட.. லேசாக காற்று கன்னத்தைத் தடவுகிறது. தலைக்கு மேலே தென்னங்கீற்றுகளின் கிச்சுக்கிச்சு உரசல். ஆஹா... ஆஹா.. இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே நிற்கத் தூண்டுகிறது. மீண்டும் இடது கன்னம் தடவி செல்லமாய்த் தலைமுடி கோதுகிறது. சுகமோ சுகம். சரி.... கண்ணை இழுக்கிறது. நான் தூங்கப்போகிறேன். நீங்கள் இந்தத் தெருவைப் பார்த்துக்கொள்ளுங்கள். குட் நைட்!!

Sunday, December 30, 2012

2012:ஒரு பார்வை

இந்த வருஷம் எப்படி ஓடியது என்று தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால் பட்டினத்தாரின் ஸ்டைலில் சொல்கிறேன்
”உண்டதே உண்டு உடுத்ததே உடுத்தும் அடுத்தடுத்து உரைத்த யுரைத்தும்,கண்டதே கண்டுங் கேட்டதே கேட்டுங் கழிந்தனக நாளெல்லாம்”. 

ஒன்றே ஒன்று புதிதுபுதிதாகப் புத்தகங்கள் தேடித் தேடி படித்தேன். படிக்கிறேன். கம்பராமாயணத்தில் விசேஷ ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கொஞ்சமாக நினைவுக் குதிரையை ஃப்ளாஷ் பேக் மோடில் ரிவர்ஸில் ஓட விட்டுப் பார்த்தும் இணையத்தைக் கொஞ்சம் துழாவியும் பத்திரிகைத் துறை நண்பரொருவர் கொடுத்த நிகழ்வுப்பட்டியலையும் தோராயமாக பார்த்துத் தயாரித்த வேர்ல்ட் திஸ் இயர்-2012.

இந்தப் பட்டியலுக்குள் நுழைவதற்கு முன்னர் அதிமுக்கியமாகக் கவனிக்க வேண்டிய மூன்று புல்லட் பாயிண்ட்ஸ்.

அ)இது அதிகாரப்பூர்வ கெஸட் பட்டியல் அல்ல.
ஆ)காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்ட பட்டியலும் அல்ல.
இ)பூதக்கண்ணாடி கொண்டு பார்க்குமளவிற்கு அதிவிசேஷமான பட்டியலும் அல்ல.

1. என் வயதையொத்த அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தில் முதல்வராயிருக்கிறார்.

2. மட்டையினால் நாட்டுக்கு விளையாட்டுத் தொண்டாற்றிய சச்சின் டெண்டுல்கர் தேசத்துக்குச் சேவைபுரிய ராஜ்ஜிய சபா எம்பியாக்கப்பட்டார்.

3. நிதித்துறை மந்திரி பதவியிலிருந்து தப்பித்து பிரனாப் முகர்ஜி இந்தியாவின் பதினான்காவது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆபத்தில்லாத ஃபாரின் டூர் பதவி என்று ப்ரதீபா ’பாட்டி’லால் அடையாளம் கொடுக்கப்பட்ட பொறுப்பான பதவி.

4. என் போன்ற மீடியம் பட்ஜெட் சிறு கார் ஓட்டும் முதலாளிகளையும் நசுக்கும் முயற்சியாக டீசலை ஐந்து ரூபாய் வரை ஏற்றினார்கள். ஆறு சிலிண்டர்கள்தான் வருடத்திற்கு என்று கட்டை போட்டார்கள். ஒருவாரத்திற்கு டீசல் கிடைக்காமல் அனைவரையும் வீதிகளில் பேயாய் அலையவிட்டார்கள்.

5. தீபா கங்குலி சீதா பிராட்டியாராக நடித்த ராமாயணத்தில் சிரஞ்சீவி ஹனுமானாக நடித்த தாரா சிங் தனது 83 வயதில் உயிர் நீத்தார். அறுபது எழுபதுகளில் கன்னியரின் உள்ளங்களை கொள்ளை கொண்ட ராஜேஷ் கன்னாவும் இறந்தார்.

6. மனித இனத்தின் ஜெயண்ட் லீப்பாக சந்திரனில் முதன்முதலாகக் காலடி எடுத்து வைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் பை பாஸ் சர்ஜரியில் ஏற்பட்ட குளறுபடிகளால் இறந்தார்.

7. சிதாரினால் பல உள்ளங்களில் ஜிப்ஸி கிதார் மீட்டிய பண்டிட் ரவி ஷங்கர் 92வது வயதில் மேலுலகம் சென்றார்.

8.ரொம்பவும் அபர செய்திகளாகப் பார்த்தாயிற்று, சுப செய்தியென்றால் நமக்கெல்லாம் அரட்டையடிப்பதற்கும் அவ்வப்போது சில சத்விஷயங்கள் தெரிந்துகொள்வதற்கும் உறவுப் பாலம் அமைத்துக் கொடுத்த மார்க் ஸூகெர்பெர்க் தனது நீண்ட நாள் காதலியைக் கல்யாணம் பண்ணிக்கொண்டார்.

9.பிரேஸில் நாட்டு இருபதுவயது பெண்ணொருத்தி $780,000 டாலருக்கு தனது கற்பை விற்று கலிகாலப் புரட்சி செய்தார்.

10. தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆஞ்சநேயர் விக்கிரஹம் வைத்துக்கொள்ளாமல் பராக் ஒபாமா இரண்டாவது முறையாக மீண்டும் அமெரிக்க ராஜ்ஜியத்தை ஆளும் வாய்ப்பைப் பெற்றார்.

11.ரிக்கி பாண்டிங்கும் சச்சினும் திராவிடும் ”ஆடியது போதும்” என்று இளைஞர்களுக்கு ஒதுங்கி நின்று ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்கள்.

12.யுவராஜ் சிங் அரிதினும் அரிதான ஜெர்ம் செல் கேன்சரை ஜெயித்து மீண்டும் விளையாட ஆரம்பித்துவிட்டார்.

13.பெட்டிங் கள்ளப் பணம் என்று ஆயிரமாயிரம் நொட்டைகள் இருந்தாலும் ஐபிஎல் ஜமாய்க்கிறது. ஷாரூக்கானின் கொக்கத்தா நைட் ரைடர்கள் 2012ம் வருடத்திய பட்டத்தைக் கெலித்தது.

14. காவல் கோட்டத்திற்காக சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி விருதும், ஜெயகாந்தனுக்கு ரஷிய நாட்டின் உயரிய நட்புறவு விருதும், அசோகமித்திரனுக்கு என்.டி.ஆர் விருதும் கிடைத்தது தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட சுப நிகழ்வுகள்.

15. ஒரு பதினைந்து வயது பையனை “ஒழுங்கா படியேம்ப்பா” என்று சொன்ன குற்றத்திற்காக உமா மஹேஸ்வரி என்கிற ஆசிரியை சென்னை பாரீஸில் கல்விக் கூடத்திலேயே குத்திக் கொலை செய்யப்பட்டார். வன்முறை வரவேற்பறைக்கு வந்ததன் விளைவு.

16. ஒன்பது வருடங்களுப்பிறகு மின் கட்டணத்தை 37% உயர்த்தி தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களை உயிரோடு கொளுத்தியது. ”கொடுத்தவனே பறித்துக்கொண்டாண்டி” என்று வரலாறு காணாத மின்வெட்டையும் அறிமுகப்படுத்தி ஏற்றிய கட்டணத்தை ஓரளவிற்கு சமன் செய்தது. மின்சாரமின்மையால் தனது சொந்த தொழிலையே மூட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளான ஒரு அபாக்கியசாலியை பேட்டி எடுத்துப் போட்டிருந்தது தினகரன்.

17.அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாத ஹேமமாலினிக்கு சர்வதேச பெரும்புள்ளி அவார்ட் லண்டனில் வழங்கப்பட்டது. இன்னும் பத்து வருடம் கழித்தும் இது போன்ற அவார்ட் வாங்குமளவிற்கு ஹேமமாலினி திகழ்வார் என்று பரவலாக நம்பப்படுகிறது.

18. மாருதி ஸுஸுகி நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கிடையே நடந்த கலவரத்தில் மனித வளத் துறை மேலாளர் ஒருவர் கொல்லப்பட்டார். வேலை வாங்கும் தகுதியில் இருப்பவர்களுக்கும் வேலை செய்வதாக பாவ்லா காட்டுபவர்களுக்குமிடையே நடக்கும் போராட்டத்தின் உச்சகட்டம் கொலை என்பது துர்பாக்கியமே. நியாயமான கோரிக்கையுள்ளவர்கள் தர்மமான முறையில் போராடுவார்கள்.

19.ஹிக்ஸ் போஸன் என்கிற கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டது. கடவுளையே கண்ட மாதிரி அறிவியல் உலகம் கொண்டாடியது.

20. ஆகாஷ் எனும் டேப்லெட்டின் அட்வான்ஸ்டு வெர்ஷனை இந்திய அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதி நாட்டுக்கு அர்பணித்து புண்ணியம் கட்டிக்கொண்டார். முதல் லட்சம் டேப்கள் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் பல்கலைக்கழங்களில் படிப்பவர்களுக்கு மட்டும் என்று அறிவித்திருக்கிறார்கள். பார்ப்போம் உரியவர்களை சென்றடைகிறதா என்று.

21.திடீரென்று ஒருநாள் நித்யானந்தா மதுரை ஆதினமாக அதிரடியாகப் பதவியேற்றுக்கொண்டார். இருவரும் சிரித்துக்கொண்டே பேட்டியளித்தார்கள். பலர் செல்லாது என்று போராடினார்கள். முடிவில் மதுரை ஆதினமே நித்தியை ஆதினப் பொறுப்பிலிருந்து நீக்கினார்.

22. இரண்டாம் வகுப்புப் படித்துவந்த ஸ்ருதி என்கிற பள்ளி மாணவி பஸ்ஸிற்குள் இருந்த ஓட்டையில் விழுந்து நசுங்கிச் செத்ததும், மாணவனொருவன் நீச்சல் குளத்தில் பயிற்சியின் போது விழுந்து உயிரிழந்ததும் நிர்வாகத்தினரின் அலட்சிய மனோபாவத்தினை வெளிப்படுத்தியது.

23. கூடங்குளம் அணு மின்சாரத்தை எதிர்த்து இடிந்தகரையில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். அணு உலை ஆபத்தானதல்ல என்று கூறி போராடியவர்களிடம் அவப்பெயர் சம்பாதித்துக்கொண்டார் அப்துல்கலாம்.

24.ஆங்காங்கே இயற்கைச் சீற்றங்கள் பெருமளவில் இருந்தது. சுமத்ராவில் பூமித்தகடுகள் இன்னமும் சீட் ஆகாமல் நடனமாடிக்கொண்டிருக்கிறது.

25. மாயன் இனத்தவர்கள் காலண்டர் வரைய கல்லில் இடமில்லாமல் போனதால் நிறைய பேர் 2012ல் உலகம் அழிந்துவிடும் என்று ஜல்லியடித்தார்கள். தன்னிடமிருந்த ஒரு லட்ச ரூபாயை ரோடில் சென்றவருக்குக் கொடுத்த ஒரு அநாமதேய அப்பாவியைப் பற்றிய செய்தி வந்தது. வாங்கியவர் திரும்பக் கொடுப்பாரா?

26.ஊழலுக்கெதிராக என்று சொல்லிக்கொண்டு ஆம் ஆத்மி என்கிற அகில இந்திய கட்சியை அண்ணா ஹசாரேவின் டீம் ஆளாக அறியப்பட்ட அர்விந்த கெஜ்ரிவால் தொடங்கினார். ஆம்! கட்சிப் பெயரிலேயே சர்ச்சை ஏற்பட்டது.

27.தமிழக மீனவர்களை சிங்களப் படையினர் கொல்வதும் மத்திய மாநில அரசுகள் வேடிக்கைப் பார்ப்பதும் தொடர்கிறது.

28. வழக்கம் போல இந்த வருடமும் தமிழில் நிறைய யதார்த்த திரைப்படங்களை எடுத்தார்கள். சாட்டை, வழக்கு எண் போன்ற படங்கள் வெற்றியடைந்தன.

29.தில்லியில் ஒரு மாணவியை பாலியல் வன்கலவியினால் சிதைத்தார்கள். உடனே பூதாகாரமாக நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் ரேப்புகள் ஊடகங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டன. நடைபெற்ற இதுபோன்ற துக்கச்சம்பத்தினால் கொதித்தெழுந்த பொதுமக்கள் கருட புராணத்தை திருத்தியமைக்குமளவிற்கு அக்குற்றத்திற்கான தண்டனைகளை தங்களது கணினியின் கீபோர்ட் மூலமாக வழங்கினார்கள்.

30. தூக்கு போடும் வரை வெளியே மூச்சுக் காட்டாமல் கப்சிப்பென கஸாப் தூக்கிலடப்பட்டார். அவரது மரணதண்டனையைவிட அரசாங்கத்திற்கு அவரால் ஏற்பட்ட செலவினங்கள் அதிகமாகப் பேசப்பட்டது.

31. விலாடிமிர் புடின் மூன்றாவது முறையாக ரஷிய ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

32.  இளையராஜா இன்னமும் ஜோராக இசையமைக்கிறார்.

33.மற்றபடி எல்லாவருடமும் நடக்கும் அநியாயங்கள் அவலங்கள் அலட்சியங்கள் அவமானங்கள் அதிகார அடக்குமுறைகள் தாராளமாகவும் லோக க்ஷேமத்திற்கான காரியங்கள் விரல் விட்டு எண்ணும்படியாகவும் இந்த 2012லும் நடந்தது.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  இந்த 2013ல் பரவலாக நல்ல காரியங்கள் உலகெங்கும் நடந்து எங்கும் சுபச்செய்திகள் பரவ வாழ்த்துகள்.

 படம் cc-chapman.com என்ற இணையத்திலிருந்து எடுத்தது.

Friday, September 21, 2012

....உன் கண்களைத் தழுவட்டுமே....

கடந்த சில நாட்களாகவே “இஜ் இட் மிஷ்டர் பெங்கட்?” என்று ஒரு பெங்காலி வாலிபன் கூப்பிட்டு “வரீங்களா?” என்று அழைக்கிறான். ”உங்களுக்கான சீட்டைப் பிடித்து வைக்கட்டுமா?” என்று அணுசரனையாகக் கேட்கிறான். தொழில்நுட்ப செமினார்கள் அட்டெண்ட் செய்து ரொம்ப நாளாகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் லெ ராயல் மெரிடியனில் ஒரு செமினாருக்குப் போய் தூங்கிவிட்டு வந்த கையோடு எழுதியது இது.


இந்த பொட்டி தட்டி வயிறு நிரப்பும் வேலையில் இருப்பதால் அடிக்கடி இது ஃபீல்டுக்கு புதுசு என்றும், ரோடு ஷோ என்றும், மென்பொருள் உருவாக்குபவர்கள் சங்கமம் என்றும், திட்ட அதிகாரிகள், முதன்மை தொழில்நுட்ப அதிகாரியில் (CTO) ஆரம்பித்து முதன்மை எக்ஸ் அதிகாரி(CXO) வரை நடத்தப்படும் கருத்தரங்குகள், பயிலரங்கங்கள் போன்றவற்றிற்கு ஃபோன் மேலே ஃபோன் போட்டும், ஈமெயில் அனுப்பியும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை கூப்பிடுவது மாதிரி வருந்தி வருந்தி அழைப்பார்கள். சமீபத்தில் இதுபோல் கூப்பிட்ட மரியாதைக்கு போய் எட்டிப்பார்க்கலாம் என்று போனதில் கிடைத்த திருவாசகம் தான் இது.

"அதே அலுத்துப்போன மேரி, சீதா, ராணி போன்ற கம்பனியின் கந்தர்வக் கன்னிகளை ஒருநாளேனும் கண்ணுறாமல் இருப்பதற்கும், கழனித்தண்ணி கேன்டீன் காப்பியை தவிர்ப்பதற்கும், துர்வாசம் வீசும் இயற்கைக்கு ஒதுங்கும் அறைகள் மேலும் வீசாமல் இருக்கவும், ஓயாமல் தொலைபேசி பிடுங்கும் உள்ளூர்/வெளியூர் ஆபிஸ் ராட்ஷசர்களிடம் இருந்து தப்பிப்பதற்கும், ஒரே இடத்தில் உட்கார்ந்து பொட்டி தட்டி கைகால்கள் மரத்து போகாமல் ஒரு உடற்பயிற்சி போல இருக்கவும், நம்போன்றோருக்கு அமையும் கபாலி கோயில் அருட்ப்ரசாதம்தான் ஸ்டார் ஹோட்டல் செமினார்கள்"

என்று இந்த தளத்தில் பத்து பதினைந்து வருடங்கள் பழம் தின்று கொட்டை போட்டு சுறுசுறுப்பாக ஒரு இளைஞன் போல் இயங்கிக்கொண்டிருக்கும் "செமினார் செல்வன்" ஒருவர் தெரிவித்தார். இவ்வகை செமினார்கள் பற்றியும் அதில் பக்குவமாக பார்வையாளனாக பங்குபெறுவது எப்படி என்பது பற்றியும் நம்மிடம் அவர் பகிர்ந்த விஷயங்களில் சில துளிகள் கீழே.

1. நாள்தோறும் கணினிப் பொட்டியை திறந்து மெயில் பார்க்கையில், முதலில் ஆரக்கிள், மைக்ரோசாப்ட், அடோபி, ஐ.பி.எம், இன்டெல் போன்ற உலக கம்பனிகளில் இருந்து மெயில் வந்திருந்தால், முதல் வேலையாக பார்த்தகையோடு நாள், கிழமை, நட்சத்திரம் பார்த்துக்கொண்டு "ஐயா/அம்மா நான் நிச்சயம் வருகிறேன், எனக்கு ஒரு சீட் போடுங்கள்" என்று ஒரு பதில் மெயில் அனுப்பி உடனே ஒரு இருக்கையை பிடிக்கவேண்டும். முக்கியமாக, இவ்வகை பிரசங்கங்கள் இலவசமாக இருக்கவேண்டும். அப்போதுதான் நிர்வாகத்தில் சுலபமாக ஓ.கே வாங்கி ஆபிசிலிருந்து தப்பிக்க முடியும்.

2. காலை 9.30 மணியளவில் பேசும் நிகழ்ச்சி ஆரம்பம் என்றால், ஒன்பது மணிக்கே போனால் வரவேற்பில் உட்கார்ந்திருக்கும் ஜீன்ஸ் வெள்ளை சொக்காய் போட்ட பெண்களின் புன்னகை அழைப்போடு தலையில் வெள்ளை குல்லா போட்ட நட்சத்திர சர்வர் கொடுக்கும் டீ காஃபி பிஸ்கட் போன்ற பதார்த்தங்கள் கிடைக்கும். ஜீன்ஸ் வனப்பிற்கு. டீ வாயிற்கு. கையில் உங்கள் முகவரி அட்டை இருந்தால் ஒரு பெட்டியில் போட்டுத் தப்பித்து விடலாம். இல்லையென்றால் வாசலில் நிற்க வைத்து ரெண்டுல ராகு ஏழில் சனி என்று உங்கள் ஜாதகம் எழுதச் சொல்லிப் படுத்துவார்கள்.

3 . உள்ளே சென்றதும், எந்த சீட்டுக்கு மேல் குழாய் விளக்கு இல்லையோ அதுவே நமக்கு தோதான இடம். பாடசாலையில் படிக்கும் காலத்தில்தான் மாப்பிள்ளை பெஞ்சு அதிசேஃப். இதுபோன்ற செமினார்களில் முதல் வரிசையில் இடதோ, வலதோ கோடி இருக்கை மிக மிக சௌகர்யம். உட்கார்ந்தவுடன் தூங்கக்கூடாது. அப்படியே தூங்கினாலும் குறட்டை விடக் கூடாது. அப்புறம் பேசுபவர் மைக் வழியே அரங்கத்திற்கே உங்கள் குறட்டைச் சென்றடைந்து நீங்கள் தூங்குவதைக் காட்டிக் கொடுத்துவிடும்.

4. ரொம்பவும் தூக்கம் தூக்கமாகக் கண்ணைச் சுழற்றிக்கொண்டு வந்தால், அழைப்பே வராத அலைபேசியை காதுக்குள் சொருகி, வாயைக் கையால் பொத்தாமல் பொத்தி, ஏதோ தலைபோகிற அவசர அழைப்பு போல எழுந்து வெளியே ஒட்டமும் நடையுமாகச் சென்றுவிடவேண்டும். ஓய்வு அறை பக்கம் சென்று மூஞ்சி அலம்பி, கை காயவைக்கும் இயந்திரம் கீழே இரண்டு நிமிடம் ஏந்திக் காட்டிவிட்டு திரும்பினால் இன்னொரு ஒரு மணி நேரம் தாங்கும். அதுவும் சிலபேருக்கு தான் அந்த கொடுப்பினை. அப்படி வரம் இல்லாதவர்கள் அந்த ஜீன்ஸ் பேண்ட் போட்ட பெண்கள் கொடுத்த ஒருபக்க அஜெண்டாவை வெறித்துப் பார்த்து நெட்ரு பண்ணிக்கொண்டோ, அல்லது விழா எப்படி நடந்தது, உங்களை அதிகம் தூங்க வைத்தப் பேச்சாளர் யார், விழாக் கம்பனியார் உங்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்த சௌகரியங்கள் பற்றி என்று நிகழ்ச்சி முடிவில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.

5. நாம் தூங்குகிறோம் என்று தெரியாத வண்ணம் அவ்வப்போது இரண்டு காலையும் ஆட்டுவது, தீடீரென்று யாரோ "டேய்.." சொல்லி கூப்பிட்டது போல பின்னால் திரும்பி பார்ப்பது, தலையை மையமாக வறுமையின் நிறம் சிகப்பு கமல் போல அசைப்பது, கொடுத்த கிறுக்கல் புத்தகத்தில் ஹார்டீன் போட்டு அம்பு விடுவது, பல தினுசுகளில் ஸ்டார் டிசைன் வரைவது, வீட்டில் உட்கார்ந்து சாவகாசமாக பார்க்கமுடியாத பால் கணக்கு போன்ற இத்யாதிகள் எழுதுவது, ரொம்ப மனசுக்குக் கஷ்டமாகவும் சங்கடமாகவும் இருந்தால் சஷ்டி கவசம் எழுதிப்பார்ப்பது போன்ற உபயோகமான செயல்களில் ஈடுபடலாம். போற வழிக்கு புண்ணியமாக போகும்.

6. ஒரு பதினொன்னரை மணி வாக்கில் லைட் போட்டு ஒரு இண்டர்வல் விடுவார்கள். எல்லோருக்கும் முன்பாக ஓடிப்போய் கையில் கப்பேந்தி ஒரு கட்டஞ்சாய் குடித்துவிட்டு, தட்டில் பரப்பி வைத்திருக்கும் பிஸ்கட்களில் நமக்கு பிடித்தவையாக ஐந்தாறு தேர்ந்தெடுத்து கையில் அடுக்கி வைத்து சாப்பிட்டுவிட்டு, யாராவது தெரிந்த முகம் போல இருந்தால் "எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே...போனவாரம் கன்னிமாரா வந்தீங்களா.." என்று கொஞ்சம் பேச்சுக்கொடுத்து பொழுதை போக்கிவிட்டு, எல்லோரும் போனவுடன் ஒருமுறை ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு ஆறஅமர மெதுவாக பன்னிரண்டு மணி வாக்கில் உள்ளே சென்று அமரவேண்டும்.

7 . பன்னிரண்டு மணியிலிருந்து அடுத்த அரைமணி நேரம் தாக்குப் பிடிப்பதுதான் இந்த உலகத்திலேயே பேரம் பேசாத சென்னை ஆட்டோ கிடைப்பது மாதிரி அவ்வளவு கஷ்டம். சர்வ நிச்சயமாக வெளியில் தட்டில் இருந்து பொறுக்கிக்கொண்டு வந்த மின்ட் எடுத்து சாப்பிட்டே ஆகவேண்டும். சப்பி சாபிடாமல் மின்டை கடித்து தின்று அதையும் தீர்த்த பின்னர், கள் உண்ட மயக்கத்தில் கண்கள் மூடுவது போல ஸ்லோ மோஷனில் இமைகள் மூடித் திறக்கும். பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் சகதூங்கியின் கால் தானாக நம் கால் மேல் இடிபட எழுந்துவிடவேண்டும்.

8. ஒருவாறாக ஒரு மணியளவில், பேச்சாளர் தனது உரையை ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து முடித்துவிட்டு "யாருக்காவது டவுட்ன்னா கேள்வி கேளுங்கப்பா..." என்று ஒரு குரல் விடுவார். மிகவும் சமர்த்தாக உட்கார்ந்து பிரசங்கம் கேட்ட ஏதாவது அதிகப்ரசங்கி சாப்பாடு நேரம் என்பதை மறந்து உலகளாவிய டெக்னாலஜி பற்றி சிப், டேட்டா குவஸ்ட் போன்ற ஊரில் கிடைக்கும் சஞ்சிகைகளை உருப்போட்டு படித்துவிட்டு தாறுமாறாக கேள்வி கேட்டு பேசியவரை படுத்துதோ படுத்து என்று படுத்தி குஷியடையும்.

9. எல்லோரும் கேட்கும்போது சம்ப்ரதாயத்துக்கு நாமும் கேள்விகனை தொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், "மைக்ரோசாப்ட்டை பில் கேட்ஸ் தான் இப்ப பார்த்துக்கராரா?", "ஆரகிள் டேட்டாபேஸ் என்னோட இஸ்த்திரி டேட்டா வைக்க பயன்படுமா?", "500 ஜிபி ஹார்ட்டிஸ்க்கில் 501 ஜிபி ஸ்டோர் பண்ண நான் என்ன செய்யணும்?" என்று உலகே அதிசயிக்கும் வண்ணம் ஆச்சர்யமான சிலபல கேள்விகளை கேட்டு இரண்டு மணிநேரம் பேசியவரை இரண்டே நிமிடத்தில் திக்குமுக்காட செய்துவிடவேண்டும். இந்த வினாக்களால் கொஞ்சநேரத்தில் அரங்கமே கப்சிப்பாகி எல்லோரும் சாப்பாட்டை பார்க்க நடையை கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். தப்பித்தது டெக்னாலஜி.

10. பசியூட்டி என்று சூப் வைத்திருப்பார்கள். காணாததை கண்ட மாதிரி நிறைய ஊற்றி குடிக்காமல் கொஞ்சமாக அரை கப் வாங்கி குடித்துவிட்டு மெயின் ஐட்டத்திற்கு போய்விட வேண்டும். முழு கப் வழிய வழிய வாங்கி ஏக் கல்ப்பில் அடித்துவிட்டால் சாப்பாடு சாப்பிட முடியாது. பசியூட்டி பசியாற்றி ஆகிவிடும். சமைத்துப் பார் போல நட்சத்திர ஹோட்டல் சாப்பாட்டை வெறித்துப் பார் என்றாகிவிடும். சைவ அசைவ ஐட்டங்களுக்கு பெயர்ப்பலகை வைத்திருப்பார்கள். நமக்கு வெறும் சாம்பார் உருளை கறிதான் வேண்டும் என்றால் அதை மட்டும் சாப்பிட்டுவிட்டு தயிர்சாதம் டேபிளை அடைந்து கொஞ்சமாக உள்ளே தள்ளிவிட்டு, வன்னிலா ஐஸ்க்ரீம் வித் ஃப்ரூட் சாலட் என்று மேற்படிகள் சாப்பிடுவதற்கு கொஞ்சூண்டு மேல் வயிற்றில் இடம் வைத்துக்கொள்ளவேண்டும். இவ்வளவையும் செமத்தியாக ஒரு கட்டு கட்டியபின், ஸ்வீட் சோம்பு ஒரு கை எடுத்து வாயில்போட்டுக் கொண்டு ஃபீட்பேக் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு சுகமாகத் தூங்குவதற்கு அலுவலகம் சென்றுவிட வேண்டும்.

தேவரீர் இதில் கண்ட விஷயங்கள் ஒரு அரை நாள் செமினாருக்காக எழுதப்பட்டது. முழுநாள் செமினாருக்கு இதைவிட அதிகமான விஷயங்கள் இருப்பதாகவும் அதற்கு இன்னொரு அடையார் ஹோடேல்லிலோ, சோளா ஷேரடானிலோ, தி பார்க்கிலோ சந்திக்கும்போது விலாவாரியாக பாடம் எடுப்பதாக சொல்லிச்சென்றார் அந்த அன்பர். காத்திருங்கள் முழு செமினாருக்கு.

#செமினார் செல்வங்கள்

Monday, October 10, 2011

மை சீர்திருத்தம்

”டியர் ஐயா, தாங்கள் தங்களுக்கு இட்ட பணியைச் செய்து முடித்து வீட்டீர்களா என்று தயை கூர்ந்து எங்களுக்குத் தெரிவிக்கவும்” என்று பணிவுடன் அடியில் ரிகார்ட்ஸ் போட்டு அனுப்பும் மெயில்களுக்கு, பதில் ரிகார்ட்ஸ் கூட போடாமல், நீங்கள் அந்த வேலையை செய்தால் நன்றாக இருக்கும், இந்த வேலையைச் செய்தால் நன்றாக் இருக்கும் என்று  கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று பழிக்குப் பழியாக மெயிலுக்கு மெயில் அனுப்பும் டெரர் சமூகம் இன்னமும் இந்த எலக்ட்ரானிக் யுகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறது.

தினமும் இவ்வகையான தொழில் முன்னேற்ற ஆக்கப்பூர்வமான மின்கடிதாசிகளுக்கு முன்விரல்கள் ஒடிய பதிலளித்தே சிலருக்கு அலுவலக வாழ்க்கை அலுத்துவிடும். இதில் ஒடிந்துபோய் நொடித்துப்போன ஆபீசர்கள் கணக்கிலடங்கா. எந்த முக்கியமான தலை போகிற விஷயத்திற்கு ஒரு கால் கடிதாசி போட்டாலும் பதிலுக்கு முழம் நீளத்திற்கு ”அத்த செஞ்சியா? இத்த செஞ்சியா?” என்று வரும் நொட்டை சொல் மிகும் மெயில்கள் ஏராளம். அலுவலகங்களில் இவையனைத்திற்கும் மூலகாரணம் நாம் “பலி கடா” வாக ஆகிவிடுவோமோ என்கிற ஆதார பயம்.

வேலை நிறைய செய்பவர்கள் நிறைய ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாவர்கள் என்பது எல்லோருக்கும் தெள்ளெனத் தெரிந்த ஒன்று. தனியார் அலுவலகங்களில் மெயில் என்கிற மின்கடிதாசி என்றால் அறநெறியோடு(?!) ஒத்து ஒழுகும் அரசாங்க அலுவலகங்களுக்கு பச்சை சிகப்பு என்று வண்ணமயமான நாடாக்கள் கட்டிய கோப்புகள். அரசாங்க இயந்திரம் மக்கர் செய்யாமல் ஓடுவதற்கு துறைகளின் துரைகளுக்கிடையே உத்யோகப்பூர்வ கடிதப் போக்குவரத்து மிகவும் அவசியமான அத்தியாவசியமான ஒன்று.


***

என்னுடைய பால்ய நண்பர் அருண் ஷோரி. அவர் நிர்வாக சீர்திருத்த அமைச்சராக ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருந்தபோது நடந்த ஒரு ’பென்’ மைச் சம்பவம் நம்முடைய அரசுத் துறை எவ்வளவு திறமையாகவும் செம்மையாகவும் ஒவ்வொரு திட்டங்களையும் ஆழ்ந்து உற்று நோக்கி நிதானமாக குற்றங் குறையில்லாமல் செயல்படுத்துகிறது என்பதற்கான சான்று.

1999-ம் வருடம் உலக முட்டாள்கள் தினத்திலிருந்து 13-ம் நாள் இரும்புத் துறையிலிருந்து வந்த ஒரு சேதி நிர்வாக சீர்திருத்த அமைச்சக மூளையை எக்கச்சக்கமாக சூடு பண்ணியது. விஷயம் இது தான். “பொதுத்துறை மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் நீலம் மற்றும் கருப்பு மசிப் பேனாக்களைத் தவிர்த்து வேறு மைப் பேனாக்களையும் கையொப்பமிடவும் திருத்தவும் உபயோகிக்கலாமா?”. இந்தக் கேள்வி கிளப்பிய வாதம் உடனே நிர்வாக சீர்திருத்த உயர் மட்ட அதிகாரிகள் அனைவரையும் டீ,காபி, மசால் வடை அடங்கிய கூட்டத்திற்கு வடைக்குக் கட்டுண்ட எலி போல இழுத்துவந்தது.

இந்தக் கேள்வி மை சம்பந்தப்பட்டதனால் அச்சகத் துறையின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்று ஆபீஸர்களால் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அமைச்சக அலுவலக உத்தரவுக் கடிதம் ஒன்று மே 3ம் தேதி அச்சகத் துறைக்கு அனுப்பப்பட்டது. மே 21-ம் தேதி அதுபோல பிரத்தியேக விதிகள் எதுவும் கிடையாது என்று ஒரு பதில் கிடைத்தது. இருந்தாலும் தலைமை அதிகாரிகள் பிற வண்ணப் பேனாக்களும் உதவியாளர் நிலையில் இருக்கும் பெருமக்கள் நீலம் மற்றும் கருப்பு மசிப் பேனாக்களும் உபயோகிக்கலாம் என்று அறிவுரை வழங்கிவிட்டு கடைசியாக இவ்விவகாரத்தில் அலுவலர்கள் மற்றும் உள் விவகாரத்துறை அமைச்சகத்தின் மேலான ஆலோசனைகளையும் பெறுவது சாலச் சிறந்தது என்று பரிந்துரைக்கப்பட்டது.

ஜுலை 6-ம் தேதி அலுவலர்கள் துறை, இந்த விஷயமானது தனி அலுவலக நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டது. ஆகையால் நிர்வாக சீர்திருத்த அமைச்சகமே இதற்கு தக்க முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவர்கள் என்று பந்தை அதே வேகத்தில் ந்யூட்டனின் மூன்றாம் விதிப்படி திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

மீண்டும் உயர்மட்ட அதிகாரிகளின் டீ,கா,ம.வடை மீட்டிங் போடப்பட்டது. பல்லாண்டு வருடங்களாக கிடங்குகளில் போற்றிப் பாதுகாக்கப்படும் அலுவலகக் கோப்புகளில் ”மசியின் வாழ்நாள்” ரொம்ப முக்கியமாதலால் ஆகஸ்ட் 12-ம் தேதி நிர்வாக சீர்திருத்தத்தின் பொது நிர்வாக இயக்குனர், ஆவணப் பாதுகாப்பகத்திற்கு அவர்களது எண்ணத்தையும் ஆலோசனையையும் அறிவுரையையும் கேட்டறிவதற்காக ஒரு ஓலை அனுப்பப்பட்டது.

ஆகஸ்ட் 27-ம் தேதி ஆவணப் பாதுகாப்பகத் துறை, உபயோகிப்பது ஊற்றுப் பேனாவாக இருப்பின் நீலமும், கருப்பும் பயன்படுத்தலாம் என்றும், பந்துமுனைப் பேனா என்றால் கருப்பு, நீலம், சிவப்பு, பச்சை மசிப் பேனாக்கள் அனுமதிக்கப்படும். பயன்படுத்தும் இங்க்கின் தரம் இந்தியத் தரக் கட்டுப்பாடு மையம் சான்றிதழ் வழங்கியதாக இருப்பின் நன்று என்று ஒரு ஷொட்டு வைத்து காபி குடித்துவிட்டு மீட்டிங்கிலிருந்து கரையேறினார்கள்.

அடுத்ததாக நடைபெற்ற ஆபீசர்கள் சந்திப்பில், நிர்வாக சீர்திருத்தத் துறைத் தலைவர், இந்த அதிமுக்கியமான விஷயத்தில் தீர்மானம் எதுவும் நிறைவேற்றும் முன் ஆயுதப்படை கையேடுகளை, குறிப்பாக இராணுவக் கைநூலைப் பார்த்துதான் முடிவெடுக்கவேண்டும் என்று அவசரத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுசம்பந்தமாக இராணுவக் கூடுதல் செயலாளருக்கு அக்டோபர் திங்கள் 4-ம் நாள் எழுதிய கடிதத்திற்கு டிசம்பர் மாதம் 22-ம் தேதி அவர் பதிலளித்தார். ஆகாயம், கப்பல் மற்றும் தரைப்படை தலைவர்கள் சிகப்பு மையினால் கையெழுத்திடுவதாகவும், தலைமை அதிகாரிகள் பச்சை மையினாலும், இன்ன பிற அதிகாரிகள் நீல நிற மையை கையில் கறையாக்கிக் கொள்ளாமல் உபயோகிக்கிறார்கள் என்று விலாவாரியாக பதிலெழுதினார்.

நிர்வாக சீர்திருத்த அமைச்சகம் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து, தர்க்க விவாதங்களில் ஈடுபட்டு, நிறைய காபி, டீ, பிஸ்கெட், மசால் வடை, பாவ் பாஜி என்று ருசித்துச் சாப்பிட்டு மார்ச் மாதம் 28-ம் தேதி கீழ்கண்டவாறு உத்தரவு பிறப்பித்தது.

”ஆரம்ப வரைவு கருப்பு அல்லது நீல நிறத்தில் இருக்கலாம். அந்த வரைவில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் செய்யும் அதிகாரிகள், அது தெளிவாகவும் தனிச்சையாகவும் தெரிவதற்காக, அந்தந்த அதிகாரத் தகுதிகளுக்கு ஏற்ப, பச்சை மற்றும் சிவப்பு வண்ண மசிப் பேனாக்கள் உபயோகப்படுத்தலாம்.”

கூடுதல் செயலாளர் (Joint Secretary) அந்தஸ்தில் இருப்போர் மட்டுமே பச்சை மைப் பேனாக்கள் உபயோகிக்கலாம், சில அபூர்வ கோப்புகளுக்கு சிவப்பு மையிலும் எழுதலாம். என்று எள்ளளவும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உத்தரவு பிறப்பித்தார்கள்.

கடைசியில் அருண் ஷோரி அளித்த துடுக்குத்தனமான பதில். “ அரசாங்கத் துறைகளுக்குச் சுதந்திரம் அல்லது சுயாட்சி பரிபூரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் அவை ஒரு வட்டத்துக்குள் வரையறுக்கப்பட்டது”

பின் குறிப்பு: இந்தப் பதிவில் மூன்று ஸ்டார்களுக்கு முன்வரை உள்ள முதல் மூன்று பாராக்கள் என்னுடைய முன்னுரை. மீதமுள்ள பத்திகள் The Difficulty of Being Good By Gurcharan Das புத்தகத்திலிருந்து சரக்கெடுத்து தமிழில் மூலத்தை சிதைக்காமல் சொந்தச் சரக்கைச் சேர்த்து எழுத முயற்சித்தது உங்கள் ஆர்.வி.எஸ். குருசரண் தாஸின் பால்ய கால நண்பர் அருண் ஷோரி. என்னுடைய ஃப்ரண்டு இல்லை.

எந்தக் கலர் பேனாவில் கையெழுத்திடவேண்டும் என்பதற்கே அரசாங்கத்தில் டன் டன்னாக இவ்வளவுக் கடிதப் போக்குவரத்து இருக்கும் போது உங்களுடைய குறை தீர்ப்பு மனுவில் எப்படி நீங்கள் கொடுத்தவுடன் கையெழுத்துப்போட்டுவிட்டுதான் சீட்டை விட்டு எழுந்து மறுகாரியம் பார்ப்பர். :-)

அரசு அலுவலகப் பட உதவி: http://southasia.oneworld.net
-

Saturday, August 6, 2011

ஐந்தாண்டு திட்டம்


கல்லூரிக் காளையாக இருந்த போது நண்பர்கள் ரூட் விடும் அழகிய பெண்ணைக் கவர்வதற்கு “என்னடா மாப்ள ஐந்தாண்டு திட்டமா?” என்று கிண்டலடிப்பார்கள். இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பார்களா என்று கேட்டு என்னைத் துளைக்காதீர்கள். கன்னிப் பெண்களைக் கண்டால் என் கண்கள் நிலம் நோக்கப் பழகியிருந்தது.

ஐந்தாண்டு திட்டங்களைப் பற்றி சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் படித்தேன். பண்டித ஜவஹர்லால் நேரு 1951-ம் ஆண்டு குளிர்கால கூட்டத்தொடரில் முதல் ஐந்தாண்டு திட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

ஐந்தாண்டு திட்டங்களில் கல்வியைப் பற்றி ”பாஞ்ச் பஞ்ச்” பாயிண்ட்ஸ்.
 
1. இந்த முதல் ஐந்தாண்டு திட்டத்தின் இறுதியில், 1956-ம் வருடம் தான் ஐந்து ஐ.ஐ.டி தொழில் நுட்பக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது.

2. 1953-ம் வருடம் பல்கலைக்கழக மானியக் குழு நிர்மாணிக்கப்பட்டது. (UGC)

3. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் Tata Fundamental Research அமைக்கப்பட்டு ஸ்காலர்ஷிப் மூலம் தேறிய நிறைய பளிச் மூளை மாணவர்களுக்கு அணு மின் துறையில் வேலை வாய்ப்பளிக்கப்பட்டது. 1961-66ல் மாநிலங்களுக்கு கல்வியை சீர் செய்யும் பொருப்பளிக்கப்பட்டது.

4. 1966 லிருந்து 1992 வரை திட்டமிட்ட ஐந்தாண்டு திட்டங்களில் உயர் கல்வியை உயர்த்தும் பொருட்டு எதுவும் உருப்படியாக செய்யவில்லை. ஒன்பதாவது மற்றும் பத்தாவது ஐந்தாண்டு திட்டங்களில் ஆரம்பக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

5. பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அரைகுறையாக படிப்பைப் பாதியில் விடுவதை கட்டுப்படுத்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டது.

தொடர்புடைய சுட்டி: http://12thplan.gov.in/

எல்லா ஐந்தாண்டு திட்டங்களிலும் வகுத்தவைகளைச் செயலாக்கிவிட்டார்களா? என்ற கேள்வியைத் தாங்கும் த்ராணி எனக்கில்லை. 2012-ல் வரப்போவது பனிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டமாம். இதில் 2017-ல் மேல்நிலைக் கல்வியை அனைத்து மாநிலங்களுக்கிடையே சமச்சீர்படுத்துகிறார்களாம்!!

பின் குறிப்பு: ரொம்ப நாளா சைட் காலியாக் கிடக்கு.  நாளைக்கு முடிந்தால் காதல் கணினியைத் தொடர்கிறேன்.

பட உதவி:  http://indolinkenglish.wordpress.com/

-

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails