Sunday, October 28, 2012

ழ்கீ லைத

மேகங்களுடன் ஒட்டி உரசி உறவாடும் மலையுச்சி. காற்றுப் புகா வண்ணம் அடர்ந்த காடாய் மண்டியிருந்த பல ஜாதி மரங்கள். ஒன்றுக்கொன்று போட்டியாய் வானத்தில் ஏற முயன்றுகொண்டிருந்தன. ஏதேதோ இனம் தெரியாத பறவைகளின் க்ரீச்சொலிகள். விண்ணைக் குடைந்தப் பேய்க்காற்று ஒன்று சமாதானமாயிருந்த மரங்களிடையே பெருஞ் சமர் மூட்டியது. ஒரு சமயம் ”ஹோ”வென்ற ஆரவாரமும் மறு சமயம் அமைதியுமாக தேசிய அணி விளையாடும் ஃபுட்பால் ஸ்டேடியம் போல சப்தமாயிருந்தது அக்காடு. மரங்களுக்குப் புடவை கட்டியது மாதிரி அதைச் சுற்றியிருந்த சிறிதும் பெரிதுமாக வளர்ந்த பச்சைக் கொடிகள். ஆங்காங்கே கத்தரிப்பூக் கலரிலும் சிவப்பு வண்ணத்திலும் அச்செடிகளில் பூத்திருந்தது புடவையின் எம்ப்ராய்டரி டிசையன் போலிருந்தது.

சிகரத்திலிருந்த அம்மரக்கூட்டங்களைக் கடந்து வந்து எவ்வளவு நேரமாய் அந்தக் கரும் பாறையின் மேல் விஸ்ராந்தியாய் சாய்ந்திருக்கிறேன் என்று தெரியாது. வானுலகத்திற்கும் எனக்கும் ஒரு முழம் அளவுதான் இருப்பதாகப்பட்டது. துவக்கத்தில் ஒன்றிரண்டாய் ஆரம்பித்த மழைத் துளிகள் பூமிக்காதலியின் எதிர்ப்பேதுமில்லை என்று தெரிந்துகொண்டபின் சரமாரியாய் அவள் அங்கமெங்கும் ராட்சஷத்தனமாய் முத்தமிட ஆரம்பித்தது. பொழியும் மழை என் மேனி முழுவதையும் தொப்பலாக நனைத்தது. திறந்தவெளியில் என்னுடைய இந்தக் குளியல் காட்சியைத் தூரத்தில் மின்னலொன்று புறப்பட்டு ஆசையாய் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டது. காதைக் கிழித்த இடியோசையில் சிந்தனை கலைந்து அதிர்ந்தெழுந்த நான் இப்போது ஒரு யானையின் மத்தகஜத்தில் கையூன்றி அமர்ந்திருப்பது போல உணர்கிறேன். புறந்தூய்மை நீரான் அமையும். வெர்ட்டிகோ வராதவர்களுக்குக்கூட கிர்ரென்று தலைசுற்றும் உயரத்திலிருக்கிறேன். கீழே பூச்சிபூச்சியாய் ஏதேதோ தெரிகிறது. காற்றோடு கைகோர்த்துச் செல்லும் மழை இம்மலைக்கு அருகிலிருக்கும் பெருவெளியில் அந்தரத்தில் அலையடிக்கிறது. எனக்குச் சட்டென்று விசிலடிக்கத் தோன்றியது. விஷ்ஷென்ற சப்தம் அமைதியைக் குலைத்து என்னைக் கண்டித்து அமைதியாய் இருக்கச் சொல்கிறது.

ச்சே! மலைக்கு மேலே ஏறி வந்த வேலையை மறந்துவிட்டேன். இதோ பின்புறம் தட்டிக்கொண்டு எழுந்துவிட்டேன். எனக்கான பயணத்தைத் துவங்க உள்ளேன். யாருக்கும் என்னைப் பற்றிய கவலை வேண்டாம். ஏ மரமே! ஏ மலையே! ஏ மழையே! ஏ காற்றே! உங்களுக்கெப்படி உங்கள் வேலை பெரிதோ சுவாரஸ்யமோ அதுபோல எனக்கும் என் தொழில் பெரிது. சுவாரஸ்யம். கையிரண்டையும் சிலுவை யேசுவாக்கித் தலைகுப்புறக் குதித்தேன். இல்லை பறந்தேன். பாதியில் இடையில் சுற்றியிருந்த ஆடை உருவிக்கொண்டு கழன்று என்னை முழு நிர்வாணமாக்கியது. அப்படியே தரை நோக்கிச் சரிந்து கொண்டிருந்த நான் தலை முட்டிப் படாரென்று சுக்கல் சுக்கலாகி மூளை வெளியே சிதறும் போது வாரிச்சுருட்டி எழுந்து உட்கார்ந்துவிட்டேன். படபடவென்று அடித்துக்கொண்டது. மணி 8:05. ”ப்ளக்” ”ப்ளக்”. இரண்டு மடக்கு தண்ணீர் குடித்தேன். மாலை தி.நகர் ”வாக்குச் சித்தர்” திகம்பரநாதன் வீட்டிற்குப் போக வேண்டும். பறப்பது போல கனவு காண்பவர்களின் வாழ்வு உச்சிக்கு போய்விடுமாம். உச்சியிலிருந்து கீழே விழுபவர்கள் என்ன ஆவார்கள் என்று கேட்க வேண்டும். எனக்கென்ன வேற வேலையா வெட்டியா?

#திடீர் சாம்பார், திடீர் ரசம் போல திடீர்க் கற்பனை! :-)
 
பின் குறிப்பு: தலைப்பிற்கான இன்ஸ்பிரேஷன் தலைவர் மூன்றாம் சுழி அப்பாதுரை அவர்கள்.
 
படத்துக்கு நன்றி: uechi.typepad.com

Wednesday, October 24, 2012

இணைய எழுத்துகள்


ப்ளாக் போன்ற இலவச பொது எழுதுமிடம் கிடைத்தது கிறுக்குபவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. வெளியே மழையாய்ப் பொழியத் தவமிருக்கும் எண்ணங்களுக்குக் கிடைத்த அரிய வரமாக நினைத்துக் கையொடிய இராப்பகலாக தட்டச்சி சிறுகதை, கவிதை, ஹைக்கூ, தொடர், நாவல் என்று ஜமாய்ப்பவர்களும் உண்டு. இரவல் புத்தகம் வாங்கி இன்புற்ற உலகிற்கு இப்போது சில ப்ளாக்குகளில் சில நிமிட சந்தோஷம் தாராளமாகக் கிடைக்கிறது. இலவசமாக. ப்ளாக்கில் ரத்தினச் சுருக்கமாகவும் எழுதலாம். அடுத்தவர் சுருக்கு போட்டுக்கொள்ளுமளவுக்கும் எழுதித் தள்ளலாம். நமக்குக் கிடைத்த வாசகரின் பேறு அது.

ப்ளாக்கில் முகமறியா நண்பர்களைப் பெற்று ”அருமை!”, “நல்ல நடை” ”இதைப் புத்தகமாகப் போடலாம்” என்று சிலாக்கியமான கருத்துக்களும் ““க், த், ப் விட்டு எழுதுகிறீர்கள்”, ”ந,ன,ண வித்தியாசம் தெரியாதா?” ”பறக்கற ‘ற’ பறக்காத ர வித்தியாசம் தெரியாதா?” என்றெல்லாம் மொழிப் போர்களைச் சந்தித்து எழுத்தார்வமிக்கவர்கள் அயர்ச்சியடைந்திருக்கையில் ஃபேஸ்புக் என்கிற சாதனம் திருமுகத்தையும் காண்பித்து ஜல்லியடிக்க உதவிக்கு வந்தது. முகத்தில் பாதி நிழலடிக்க அவுட் ஆஃப் ஃபோகஸ் ஃபோட்டோவை அப்லோட் செய்து “ஃபைன் டீ!” “லவ்லி” “மை லவ் பா” என்று நட்பு வட்டங்களால் அதீதமாய் புகழப்பட்டு இன்புறுகிறார்கள்.

சமுதாய விழிப்புணர்வு, புரட்சி, தாய் தடுத்தாலும் விடேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு வண்டி வண்டியாய் ஸ்டேட்டஸ் போடுபவர்களும் உண்டு. அகத்திலிருக்கும் மன மாசுகளைக் கொட்டிப் பிறரைப் பழிக்கும் பலர் பெரும்பாலும் முகமூடியுடன் உலவுகிறார்கள். எழுத்தில் கலவரத்தை உண்டு பண்ணும் இது போன்றவர்களது முகங்களை காண முடியாமல் ஏங்கும் ஏழை நெஞ்சங்கள் பல உண்டு. பட்டும் படாமலும் ஒட்டியும் ஒட்டாமலும் இலை மறை காயாக (முக்கியமான Cliche) எழுதுபவர்கள் பல தூற்றுதல்களிலிருந்து தப்பித்து பரம சௌக்கியமாக இங்கே காலம் தள்ள முடிகிறது.

குருவி வளர்ந்து குயிலான கதையாக முளைத்தது ட்வீட்டர். குயிலின் கச்சேரி அந்த ஒன்றிரண்டு கூக்கூக்கள் தான் என்பதற்கு வடிவம் கொடுத்துக் கச்சிதமாக கதைக்கச் சொல்கிறார்கள். உரைநடையில் குறுநடையாக 140 எழுத்துக்களில் சிக்கனமாக எழுதத் தெரிந்தால் நீங்கள் ஒரு சிறந்த கீச்சுக் குயில். இந்த ட்வீட்டர் சமாச்சாரம் என் போன்ற வாய் மூடா வளவளாவிற்கு (இந்தப் பதிவே இதற்கு நற்சான்று) உகந்ததாக இல்லை. ஆர்வமாகப் பதிந்துகொண்டேனே தவிர கீச்சுக்கள் பதிய முடிவதில்லை. நாலடியார், திருக்குறள் போன்ற பண்டைய ட்வீட்டுகளுக்கு மத்தியில் நம்முடையது சோபிக்குமா என்ற அக உறுத்தலில் அந்தப் பக்கம் எட்டிப்ப்பார்க்க பயமாக இருக்கிறது.

யார் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுத்துச் சுதந்திரத்திற்கு இலக்கணமாகத் திகழ்வதுதான் இம்மூன்றும். டிஜிட்டல் புரட்சியில் இந்த எழுத்துப் புரட்சி பல ரேழி எழுத்தாளர்களை கிளர்ந்தெழுந்து பொது வெளியில் வந்து போராடவைத்திருக்கிறது. இது போன்ற வார்த்தைப் போராட்டத்தில் ஒரு சௌகரியம் உள்ளது. “வெளியே வாப்பா” என்று யாரும் வந்து கையைப் பிடித்து வீதிக்கு இழுத்துவிடமாட்டார்கள். சேஃப் ஃபைட்.

”ப்ளாகா? ஃபேஸ்புக்கா? ட்வீட்டரா?” என்று ”கல்வியா செல்வமா வீரமா” பாணியில் தடுமாறுபவர்களில் நானும் ஒருவன். ஃபேஸ்புக்கால் அதிகம் ஈர்க்கப்பட்டாலும். எதில் எழுதினாலும் எழுதாவிட்டாலும் ஒருவருக்கும் நஷ்டமில்லை.

#இணைய எழுத்துகள் பற்றி பொதுவாக எழுந்த சில ”திடீர்”ச் சிந்தனைகள். இதில் சில இடங்களில் நானும் இருக்கலாம். யாரையும் குறிப்பிடுவன அல்ல!!
 
##ஃபேஸ்புக்கில் பகிர்ந்தது.

Monday, October 22, 2012

இசையறியும் பறவை

அதீத திறம் படைத்தக் கவிஞர்களுக்கு கவிச் செருக்கு வழிய வழிய இருக்குமென்பார்கள். தானெழுதிய ஒரு சில வரிகள் பரவலாகப் பாராட்டப்பட்டால் தலை கால் புரியாமல் ஆடி மற்றவர்களை சொல் வம்புக்கிழுத்து லொள்ளு செய்பவர்கள் அநேகம் இருக்கிறார்கள். ”நான் எழுதிய தமிழ்ப்பாட்டில் குற்றமா?” என்று திருவிளையாடல் ரேஞ்சிற்கு எகிறுவார்கள்.

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் அவையடக்கத்தில் மொத்தம் ஆறு பாடல்கள். போன பதிவிலேயே பாற்கடலை ந
க்கிக் குடிக்க ஆசைப்படும் பூனை போல எழுத வந்தேன் என்று சொன்னவன் அடுத்த பாடலில் ”நொய்தின் நொய்ய சொல்ல நூற்கலுற்றேன்” என்று எளிமையான சொற்களைக் கொண்டு இந்நூலை இயற்றத் தொடங்கினேன் என்று பவ்யமாக எழுதுகிறான். வான்மீகியின் எழுத்தில் மிகவும் ஈர்க்கப்பட்ட கம்பன் இவ்வுலகச் சான்றோர்கள் என்னை இகழ்ந்தாலும் அதன் மூலம் எனக்குப் ஏதேனும் பழி வந்தாலும் இக்கதையை நான் எழுதுவேன் என்பதை “வையம் என்னை இகழவும், மாசு எனக்கு எய்தவும்” என்று எழுதி தன்னை மிகவும் எளியவனாகக் காட்டிக்கொள்கிறான்.

அசுணம் என்கிற ஒரு பறவையைப் பற்றித் தெரிந்திருந்தால் நீங்கள் சங்க இலக்கியம் படித்த தமிழ் ஆள் என்று அர்த்தம். அது விலங்கா அல்லது பறவையா என்பதில் சிறு சந்தேகம் இருக்கிறது. மாசுணம் என்பது விலங்கு என்று ஒரு சிலர் போராடுகிறார்கள். அசுணத்தின் குண விசேஷம் என்னவென்றால் அது இசையறியும் பறவை. நல்ல இசையைக் கேட்டால் அது அதில் மகிழ்ந்து திளைத்து தன்னை மயங்கி இருக்கும். அப்பறவையைப் பிடிக்க வேண்டுமானால் நல்லிசை வழங்கினால் அது மயங்கியிருக்கும் நேரத்தில் பிடித்துவிடுவார்களாம்.

நல்லிசைக்கு மிகவும் பிரயர்த்தனப்படவேண்டும். எவர்க்கும் அபஸ்வரம் அசால்ட்டாக வரும். பறையொலி போன்ற அதிர்வொலி எழுப்பினால் மூர்ச்சையடைந்து விடுமாம். அவ்வேளையில் லபக்கென்று பிடித்துவிடுவார்களாம். ”ஒத்தை சொல்லால.. என் உசிரை”யும் “எவ அவ” என்று கேட்கும் பேட்டை ராப்பும் ஒலிக்கும் இக் கொட்டு காலத்தில் அசுணம் வாழ்ந்தால் அது உயிர் பிழைக்குமா? வகைவகையான விருத்தத் தொகை கவிதைகளைக் கேட்ட, யாழிசைப் போன்ற தேனிசை கேட்கும் அசுணத்தைப் போன்ற சான்றோர்களின் செவியில் என்னுடைய கவிதைகள் விழுந்தால் அது பறையொலி போன்று இருக்காதோ? அவர்களும் துன்புறுவார்களோ? என்ற கேள்வியின் மூலம் தான் எழுதவிருப்பது விருத்தத் தொகைக் கவிதை என்பதையும் இப்பாட்டினூடே சொல்கிறான் கம்பன். நல்லிசையை இரசிக்கத் தெரியாத மானுடர்கள் கொம்பும் வாலும் இல்லாத விலங்குகள் என்று பர்த்ரு ஹரி நக்கலடிப்பார்.

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும் என் பா அரோ

(துறை - வகை, நறை - தேன், உறை - இடம்)

அடுத்த பாடலில் ஏதேனும் பிழையிருந்தால் மன்னிக்கவும் என்று “பித்தர் சொன்னவும், பேதையர் சொன்னவும், பத்தர் சொன்னவும், பன்னப் பெறுபவோ?” என்கின்ற வரிகளில் “பைத்தியக்காரர்கள் சொல்வதையும், அறிவிலிகள் சொல்வதையும், பக்தர்கள் சொல்வதையும் யாரும் ஆராய மாட்டார்கள். அது போல இதையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று முத்தமிழறிஞர்களுக்கு குற்றம் பொருத்தருள வேண்டுகிறான். பைத்தியம் மற்றும் அறிவில்லாதவர்கள் லிஸ்டில் பக்தர்களை ஏன் வைத்தான்? பக்தியில் திளைப்பவர்கள் ”எல்லாம் என் தெய்வமே”யென்று ஒரு பித்தனைப் போன்ற உணர்வு நிலையில் இருப்பதாலோ? The lunatic, the lover, and the poet are of imagination all compact என்று ஷேக்ஸ்பியர் பைத்தியத்தையும் காதலர்களையும் கவிகளையும் ஒரே தராசில் வைத்தான்.

அவையடக்கத்தின் கடைசி பாடலாகத் தரையில் கோடு கிழித்து ஆடும் அரங்கம் வரைந்து விளையாடும் சிறுவர்களைப் பார்த்து சிற்பிகள் அவர்கள் வரைந்ததில் குற்றம் கண்டுபிடித்து ஏளனம் செய்யமால் பாராட்டவும் செய்வார்கள் அல்லவா அது போல சான்றோர்கள் நான் இயற்றியக் இக் காதையை இலக்கணப்படி அமையவில்லை என்று கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என்கிறான் கம்பன்.

அறையும் ஆடு அரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ?

காப்பியத்தை ஆரம்பிக்கும் முன் தான் இயற்றிய நூலைப் பற்றிக் கூறுகையில்

நடையில் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராம அவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே.

ஒழுக்கநெறியில் நின்று உயர்ந்த நாயகனின் தோற்றத்தைப் பற்றிய இராமாவதாரம் என்று பெயர் கொண்டு எதுகை மோனையுடன்(தொடை) செய்யுள்களைக் கொண்ட குற்றமற்ற இம்மாக் கதை வெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் உதவியால் எழுதியது என்று சடையப்பருக்கு ஸ்பான்ஸர் கிரெடிட் கொடுக்கிறான்.

ஆயிரம் பாடல்களுக்கு ஒருமுறை இது போல வள்ளலுக்கு ஒரு பாட்டு அர்ப்பணிக்கிறானாம் கம்பன். இதில் இடை நிகழ்ந்த என்பதற்கு பொருள் கொள்வதற்காக நடையில் நின்று உயர் நாயகனை திருமால் பெயருக்கு ஏற்றி பரசுராம அவதாரத்திற்கும் பலராம அவதாரத்திற்கும் இடையில் நிகழ்ந்த இராமாவதாரத்தைக் குறிக்கும் பொருட்டும் சிலர் உரை சொல்வர். தோம் என்றால் குற்றம். தோம் அறு. குற்றமற்ற. இப்பாடலை கூர்ந்து பார்க்கும் போது தான் எழுதியக் காப்பியத்திற்கு கம்பன் ”இராமாவதாரம்”என்று பெயரிட்டதாக அறியப்படுகிறது.

”அவதார புருஷ”னில் வாலி அவையடக்கமாக எழுதிய ஒரு வரி ஞாபகத்திற்கு வருகிறது.

“நான்கு அங்குலம் நகர்ந்ததையே, நகர் வலமாய் நினைக்கும் நத்தை;”

#நான் நத்தை கூட இல்லை. சொத்தை!!

##அடுத்த கம்பராமாயண அப்டேட்டிலிருந்து பாலகாண்டம்.

### கம்பராமாயணம் (2)

Friday, October 19, 2012

ஆண்டாள் கோபால்

டைட்டில் கார்ட்: கொஞ்சம் புனைவு; கொஞ்சம் நினைவு சேர்த்துப் பிசைந்து செய்த கலவை இது. நிஜத்திற்கும் டூப்பிற்கும் ஆங்காங்கே விகிதாசார வித்தியாசங்கள் இருக்கும். இதில் உண்மை இல்லையா? என்று கேட்டால். இல்லை. அதாவது 100 சதம் உண்மை இல்லை. ஆனால் 100 சதம் பொய்யும் இல்லை. இதில் வரும் பெயர்கள் சம்பவங்கள் டூப் கலந்து டுபாக்கூராக வெளியிடப்படுகிறது. இதில் நீ யார் அவன் யார் எந்த காலம் என்ன நேரம் என்ற கேள்வியெல்லாம் கேட்கப்படாது. மூச்.

(அப்பாடி அசரீரியாய் பேசி ஒரு சுத்து சுத்தி விட்டாச்சு.. இனி மேலே படிங்க... மேலே படிங்கன்னா கீழே படிங்கன்னு அர்த்தம். ஸ்... அப்பா... தாங்கலையே டார்ச்சர்.......)

 
எம்ட்டன் ராயர் வீட்டு மூன்று படி, நாராயணன் வீட்டு ஐந்து படி, ரோஹினி வீட்டு ஏழு படி, டீச்சர் வீட்டு ஒன்பது படி(எங்களது) என்று பல்வேறு தினுசு கொலுக்களை ஒவ்வொரு நாளும் கண்டு களிப்போம். ஒரே கொலுவை ஒன்பது நாளும் வித விதமான சுண்டல்களுக்காக ரசிப்போம். கிழக்கு தெருவிற்கு நிகராக வடக்கு தெருவிலும் கொலு இருக்கும். மாலை வேளைகளில் கையில் ஒரு பையை எடுத்துக்கொண்டு பிரதக்ஷிணமாக தென், மேல், வட கரைகளை சுற்றி வந்தால் இரவு சாப்பாடு நிச்சயம் தேவை இருக்காது. ஆனால் பாட்டி "என்னாடா, பிச்சைக்காரன் திருவோடு மாதிரி..." என்று நக்கலடிப்பாள்.

கொலு வைப்பது மிகவும் க்ரியட்டிவ் ஆக இருக்கவேண்டும். முழுப் பரீட்சைக்கு படிப்பதை விட அதிக சிரத்தை தேவைப்படும். ஊரில் நிறைய தோட்டா தரணிகளும், சாபு சிரில்களும் அதிகம். நாராயணன் வீட்டு கொலு தோட்டா தரணி அமைத்த செட் போல என்றால் வடகரை ராமன் அண்ணா ஆத்துது தேவதச்சன் மயன் எழுப்பியது போல இருக்கும். கொலு வைப்பதற்கு பல வீடுகளுக்கும் எங்களுடைய சமுதாய சேவை தேவைப்படும். "நானா உங்கம்மா படி எறக்கிட்டாளா?" "கோந்து உங்காத்து ஸ்வாமி எல்லாம் பொட்டிய விட்டு எறங்கிட்டாளா ?" என்று பந்து அடித்தோ அல்லது கிட்டி புல்லால் வலி கொடுத்த வீடெல்லாம் எங்களுடைய நவராத்திரி ஸ்பெஷல் கவனிப்பால் அல்லோல்படும்.

அட்டை டப்பாக்களை வீடாக்கி பார்க்கில் வைப்பது, தெர்மாகோல் துணை கொண்டு பார்க் காம்பவுண்ட் சுவர் கட்டுவது, கலர் ஜிகினா பேப்பர்கள் ஓட்டுவது உள்ளிட்ட சர்வ வேலைகளையும் செய்வோம். நாராயணன் வீட்டு கொலுவில் அரை வண்டி அளவிற்கு கொலு பக்கத்தில் மண் அடித்து அண்ணாமலையையே செய்து உச்சியில் ஜீரோ வாட் பல்பில் கார்த்திகை தீபம் ஏற்றிவிடுவார்கள். ராமன் அண்ணா வீட்டில் ஹோமகுண்டத்தை குளமாக்கி மோட்டார் போட் விடுவார்கள். சென்னை மாதிரி ஷோ கேஸ்ஸில் கணேசர், லக்ஷ்மி, சரஸ்வதி மூவரையும் நிறுத்தி சிக்கன கொலு வைப்போரும் உண்டு.

சுண்டல் அவ்வளவு எளிதாக நிறையக் கிடைக்காது. என்னதான் நாம்பளும் பரோபகாரியாக இருந்து கொலு வைத்திருந்தாலும், "ராமன் அண்ணா ஆத்து கொலு தான் நாலு கரையிலும் சூப்பர்" என்றால் இரண்டு கரண்டி புட்டு கூட கொடுப்பாள் மன்னி. இந்த மதி ஆலோசனைகலுக்கெல்லாம் ஸ்ரீராம் தான் தலைவன். சூரன். அதி பயங்கர எக்ஸ்பெர்ட். அவனிடம் டிப்ஸ் வாங்கிக் கொண்டு தான் கொலு ரௌண்ட்ஸ் புறப்பட வேண்டும். யார் யாரை எப்படித் தன்ன கட்ட வேண்டும் என்று கோனார் நோட்ஸ் போடும் அளவிற்கு விஷயஞானம் உள்ளவன்.

வீட்டில் உள்ள வாண்டுகளை வித விதமாக மேக்கப் செய்து எல்லோர் வீட்டுக்கும் கொலு அழைப்பு அனுப்புவார்கள். எவ்வளவு அலங்காரம் செய்தாலும் கண்ணனை ஒத்து இராத பசங்களைக் கூட,
"மன்னி, உங்காத்து உப்பிலியை இந்த டிரஸ்ல பார்த்தால், கோகுலத்தில் இருந்து சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாவே நேரே இறங்கி வந்தாப்ல இருந்தது"என்றால் கையில் புட்டு வைத்திருந்த பாத்திரத்தோடு கிடைக்கும்.

இது பத்தாதென்று, நாலு கரைக்கப்பாலிருந்து திருமஞ்சன வீதி, விளக்காரத்தெரு பசங்களும் கொலு பார்க்க வருவார்கள். கொஞ்சம் புஜபலம் மிக்கவர்கள். அவர்கள் நோக்கம் சுண்டல் வாங்கித் தின்பது தான். ஆனால் ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் நின்று
"கொலு இருக்கா?" என்று இரைவார்கள். எல்லோரையும் வரிசையில் நிறுத்தி ஆளுக்கு ஒரு கரண்டி சுண்டல் கொடுத்து அனுப்புவார்கள்.
"கொலு இருக்கு ஆனால் சுண்டல் இல்லை" என்று தெனாவட்டாக பதில் சொன்ன பஸ் கண்டக்டர் லக்ஷ்மணன் வீட்டின் ஓட்டின் மேல் ஒரு நாள் கல் எறி போராட்டம் நடந்தது. மிதவாதியான லக்ஷ்மணன் தீவிரவாதத்திற்கு அடிபணிந்து மறுநாள் வாசலில் சுண்டலோடு நின்றார். இந்த கோஷ்டியை என் பாட்டி "படை வர்றது" என்பாள். படைகளுக்கு சுண்டல் இல்லையென்றால் பாட்டி பதறிவிடுவாள்.

ரோஹினி வீட்டிற்கு கொலு பார்க்க போவதென்றால் நாம் பாகவதராக வேண்டும். வடக்குத்தெரு ஸ்ரீராம் அண்ணன் கோபால் ரோஹினி வீட்டின் ஆதர்ஷ நவராத்திரி பாட்டு ஹீரோ. எப்போதும் "ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா", "கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்”, “மாணிக்க வீணை ஏந்தும் கலைவாணி” போன்ற பல பக்தி ஐட்டங்கள் கைவசம் வைத்திருப்பான். நவராத்திரி காலங்களில் ஐஸ்கிரீம் விரதமிருப்பான். மூடுக்கு ஏற்றார்போல சிலசமயங்களில் பெண் குரலில் வேறு பாடி அசத்துவான். ஒரே இக்கட்டான விஷயம் என்னவென்றால் பாடும் பொழுது பெண்கள் யாரேனும் வந்துவிட்டால், முகம் தகதவென்று சிவந்து, உள்ளங்கை உள்ளங்கால் குடம் குடமாக வேர்த்து, தலையை இரண்டு முழங்கால்களுக்கு இடையில் நுழைத்து வெளியே எடுக்கவே அடம் பிடிப்பான். பெண்கள் முன்னால் அவ்வளவு வெட்கம் பிடுங்கி திங்கும். சரியான லஜ்ஜாவதன்.

கோபாலின் கொலு மோகம் தலைக்கேறி ஒன்பது நாளில் ஒரு நாள் ஆண்டாளாக வீட்டை விட்டு வெளியே வந்தான். நிச்சயமாக பார்ப்பவர்கள் கண்ணுக்கு பெண்ணுக்கு ஆண்டாள் வேஷம் போட்டது போல் இருந்தது. அரக்கு நிறச்சேலையை ஐயங்கார் மடிசாராக கட்டி, மேலாக்கை பின்னாலிருந்து முன்னால் இழுத்து சொருகியிருந்தான். நெற்றிக்கு ஸ்ரீசூர்ணம் அணிந்து, அதற்கு கீழ் சின்னதாக வெள்ளை கலரில் கீழ் நோக்கி அம்பு போட்டிருந்தான். அழகிற்கு அழகு சேர்ப்பது போல் இருந்தது அவன் போட்டிருந்த கொண்டையும், இதழ்களில் பூசியிருந்த உதட்டுச்சாயமும், கண்ணுக்கு எழுதிய மையும். கோபால் கோதையாகவே உருமாறியிருந்தான். எங்கிருந்தோ 'வாரணமாயிரம் சூழ வலம் செய்து' காற்றில் ஒலித்துக்கொண்டிருந்தது. தெருவில் சைக்கிளில் சென்ற இரு முறுக்கு வாலிபர்கள் இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்தார்கள். வாயைக் குவித்துச் சீட்டியடித்தார்கள். இன்ஸ்டிட்யூட் வீட்டு ஸ்ரீதர் வைத்த கண் வாங்காமல் ஆண்டாளையே பார்த்தான். அவளாகிய அவனைச் சீண்டினான்.
 
"ஏண்டி எங்கடி போரே?"
கண்கள் பளபளக்க கோபால் "வேணா விளையாடாதே " என்றான்.
 
ஸ்ரீதர், "நான் கண்ணன் வேஷம் போட்டா உன் கூட வரலாமா"
எங்களை துணைக்கு அழைத்து கோபால் "பாருங்கடா இவனை" என்று அன்றைக்கு முகாரி பாடினான்.
 
"ஸ்ரீதர். அவன் ஆசைக்கு வேஷம் போட்டுண்டு இருக்கான். விடுடா" என்றான் வாசு.
 
யார் எது சொன்னாலும் விடுவதாய் இல்லை ஸ்ரீதர். வடக்குத்தெரு முனை வருவதற்குள் இன்னும் பல முறை அவனைச் சீண்டி வெறுப்பேற்றி, கைகலப்பில் கொண்டு வந்து விட்டான்.
இருவரும் ஆக்ரோஷமாக சண்டையிடுவதை தூரத்தில் இருந்து பார்த்து விலக்குவதற்கு நாங்கள் ஒடுவதற்குள், ஆண்டாளின் புடவையை, துச்சாதனன் உருவுவது போல் உருவினான் ஸ்ரீதர். பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஆண்டாள் பழனி முருகன் ஆவதை கண்டு திடுக்குற்றோம். அவனுக்கு உதவுவதற்கு நாங்கள் விரைவதற்குள், ஆண்டாளாக வீட்டை விட்டு வெளியேறி விஐபி ஜட்டியுடன் பழனி முருகனாக வீட்டிற்குள் ஓடிக்கொண்டிருந்தான் கோபால்.

##படம்: இரண்டு வருடங்களுக்கு முன் மயிலை சர்வோதயாவில் எடுத்தது.

## இது மீள் பிரசுரம்

Wednesday, October 17, 2012

பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை

கொஞ்ச நாட்களாக கம்பராமாயணக் காதலில் மயங்கி இருக்கிறேன். படிப்பது கேட்பது இரண்டும் பெரும்பாலும் கம்பன் பக்கமே சாய்ந்திருக்கிறது.

காந்திஜி ஒரு சமயம் தமிழகத்திற்கு வந்திருந்த போது சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரிடம் “உங்களது தமிழில் ஏதோ ராமாயணம் இருக்கிறதாமே. நான் ஒரு வாரம் இங்கே தான் இருக்கிறேன். எனக்குக் கற்றுக்கொடுக்க முடியுமா?” என்று ஆர்வமாகக் கேட்டாராம்.

அதற்கு ராஜாஜி இதற்கு சரியான ஆள் ரசிகமணி டி.கே.சிதான் என்று முடிவு செய்து அவரிடம் காந்திக்கு கம்ப ராமாயணம் கற்றுக்கொடுக்க கேட்டுக்கொண்டாராம். எதிரில் அமர்ந்திருந்த ரசிகமணியிடம் காந்தி ஆர்வத்துடன் “எங்கே ஆரம்பிக்கலாம்? எப்போது ஆரம்பிக்கலாம்?” என்று துடித்தாராம். அதற்கு ரசிகமணி மிகப்பொறுமையாக “அடுத்த ஜென்மத்தில் பார்க்கலாம்” என்றாராம். காந்தி “ஏன்?” என்று கேட்டதற்கு “இந்த மகா காவியத்தை எழுத்துக்களாகப் படித்துப் புரிந்துகொள்வதைவிட தமிழனாய் பிறந்தால்தான் உணர்வுப்பூர்வமாக அனுபவிக்க முடியும். அதனால் அடுத்த ஜென்மத்தில் நீங்களும் தமிழனாய்ப் பிறந்து நானும் தமிழனாய் பிறந்து சந்தர்ப்பம் வாய்த்தால் சொல்லித்தருகிறேன்” என்றாராம்.

தேசப்பிதா காந்தியிடம் இல்லாத தகுதி எனக்கிருக்கிறது என்கிற கர்வத்துடன் கம்பராமாயணம் படிக்கிறேன்.

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே

இவ்வுலகத்திலிருக்கும் அனைத்து ஜீவராசிகளையும் தன் விருப்பத்திற்கேற்ப ஆக்கலும் அவைகளை காப்பதும் அல்லவைகளை அழிப்பதுவும் முடிவுறாத அளவில்லாத விளையாட்டாக உடையவர் அவரே தலைவர் அவர் சரண் நாங்கள்.

நான் படித்த உரைகள், சொற்பொழிவுகள், புலவர்கள் நயம் பாராட்டிய கம்பனின் கவி ஆழங்கள் இவைகளைக் கொண்டு எனக்குத் தெரிந்த வகையில் இதை எழுதலாம் என்று விருப்பம். என்னைப் போலவே இதில் கிண்டர் கார்டன் அளவில் மட்டும் வளர்ந்திருப்பவர்கள் இதை ஆசையுடனும் ஆர்வத்துடனும் படிக்கலாம். இதைக் கண்ணுரும் அறிஞர் பெருமக்கள் சான்றோர்கள் குறைகள் இருப்பின் தோழமையுடன் சுட்டிக் காட்டித் திருத்தலாம். 
இக்காவியத்தை எழுத ஆரம்பித்த கம்பன் ஒரு பெரிய பாற்கடலை சிறு பூனை நக்கிக் குடித்துவிட ஆசைப்பட்டதைப் போல இந்த இராமன் கதையை எழுதுகிறேன் என்று முன்னுரைப் பாவோடு ஆரம்பிக்கிறான்.
ஓசை பெற்று உயர் பால் கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கு என
ஆசை பற்றி அறையல் உற்றேன்; மற்று இக்
காசு இல் கொற்றத்து அத்து இராமன் கதை அரோ


இதில் பூசை என்ற சொல்லுக்குப் பொருள் பூனை. ஓசையுடன் அலை உயர அடிக்கும் பாற் கடல் முழுவதையும் ஒரு பூனை நக்கிக் குடித்துவிட ஆசைப்பட்டதைப் போல என்ற அர்த்தத்தில் வருகிறது... காசு இல் கொற்றத்து என்பது... குற்றமில்லாத வெற்றியை உடைய என்கிற பொருளில் வருகிறது...
 
நான் பூனை கூட இல்லை.

#அவ்வப்போது இனி கம்பராமாயண அப்டேட்ஸுடன்...

Monday, October 15, 2012

வீட்டிற்கு வந்த கயிலை


”கைலாசம் எவ்வளவுங்க?”

“ரெண்டாயிரம் சார்”

“ஐநூறு ரூபாய்க்கு வருமா?”

"அபாண்டமா கேக்காதீங்க சார்”

“அபாண்டமா சொன்னா அபாண்டமாதானே கேட்பாங்க”

“ஐநூறு ரூபாய்க்கெல்லாம் கைலாசம் வராதுங்க”

“எவ்ளோ ரூபாய்க்கும் கைலாசம் நிச்சயமா வராதுப்பா”

“அப்டின்னா?”

“இல்ல. எப்படியும் நாமதான் கைலாசத்துக்குப் போக முடியும். யார் நெனச்சாலும் கைலாசம் கீழ வராதுன்னேன்”

”ஓ! நீ அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?” என்று கண்களால் என்னை அளந்தார் அந்த பொம்மைக் கடைக்காரர். மயிலை மாடவீதியில் ஜன வெள்ளத்துக்கு நடுவே கடவுளர்களின் கூட்டம். நவராத்திரியின் இறுதி நாளில் இஷ்ட தெய்வங்கள் சல்லிசாகக் கிடைத்தாலும் பூர்வாங்கமாக முதல் போணி செய்யவேண்டும் என்பது என் மனைவியின் பூஜாக்கால விருப்பங்களில் ஒன்று.

ஒவ்வொரு நவராத்திரிக்கும் ஒரு பொம்மையாவது நவமாக ஒரு படியில் வீற்றிருக்கவேண்டும் என்பது மேடத்தோட இலட்சியம். இம்முறை எல்லாத் தெய்வமும் போன வருடத்தை விட பன்மடங்கு காஸ்ட்லியாக இருந்தன. பெட்ரோலும் டீசலும் அந்தப் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டன போலும்.

உள்ளங்கையகல சைஸ் கஜலக்ஷ்மி எண்ணூறு ரூபாய் என்று பொம்மையாகக் கூட லக்ஷ்மி நம் இல்லத்தில் தங்கக்கூடாது என்று குறியாக இருக்கிறார்கள். விலை சொல்லிவிட்டு ”நீங்க எவ்வளவு குடுப்பீங்கன்னு சொல்லுங்க சார்” என்று பர்மா பஜார் பேரத்தை ஆரம்பிக்கிறார்கள். “நா விலை கேட்டா நீங்க அசிங்க அசிங்கமாத் திட்டுவீங்க” என்று என்னை அந்த இடத்திலிருந்து அச்சத்துடன் உருவிக்கொள்ளும் வேளையில் “கட்டுபடி ஆச்சுன்னா குடுக்கறோம். இல்லைனா சந்தோஷமா வராதுன்னு சொல்லப்போறோம்” என்று சொன்ன வாலிபனுக்கு 20 வயதிருக்கும். பாண்ட்ஸ் பவுடரை விபூதியாக இட்டிருந்தான். உற்றுப்பார்த்தால் நெற்றியிலிருக்கும் குங்குமம் தெரியுமளவிற்கு கொண்டல் வண்ணன். ”உனக்கு எந்தூருப்பா?” என்று கேட்டேன். “வேலூரு” என்று அசிரத்தையாகச் சொல்லிவிட்டு “அந்த லக்ஷ்மி நரசிம்மர் எவ்ளோப்பா?” என்று கை நீட்டித் தெய்வத்தை விலை கேட்ட மாமியை கவனிக்க போய்விட்டார்.

ஜூவல்லரி வாசல்களிலும் சரவணபவனின் இரு மருங்கும் ஸ்ரீவித்யா குங்குமக் கடை வாசலிலும் இருக்கும் ப்ளாட்ஃபாரங்களில் ஸ்ரீரங்கநாதர் ஹாயாகப் படுத்துறங்கிறார். “நாகத்தை தனியே எடுக்கலாம் சார்” என்று ஆதிசேஷனை உருவிக் காண்பிக்கிறான் ட்ராயர் போட்ட ஒரு பொடியன். ”உட்றா.. உட்றா.” என்று அவனை விரட்டியது அவன் அம்மா.

ராதா கிருஷ்ணர் பளபளவென்று ராதையோடு கடைக்குக் கடை கண்களில் காதல் வழிய புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருக்கிறார். கல்யாண செட், கிரிக்கெட் செட், பொங்கல் செட், தசாவதாரம் செட், அறுபடை வீடு செட் என்ற புராதன செட்டுகளுக்கிடைய இந்த வருடம் கண்ணில் பட்டது ஆண்டாள் செட். பெரியாழ்வார் குடத்தில் தண்ணீர் ஊற்றுவது போன்று ஒரு பொம்மை, துளசி மாடம் ஒன்று, கண்ணாடியோடு நடுவிரல் அளவிற்கு ட்ரெஸ்ஸிங் டேபிள் ஒன்று அப்புறம் ஆண்டாள் முழு அலங்காரத்துடன்.

பார்க் நிரப்புவதற்கென்று பிரத்யேகமான கடை ஒன்று போட்டிருந்தார்கள். ப்ளாஸ்டிக்கில் புல், மிருகாதிஜனனங்கள், ஈச்சை மரம், டேபிள் சேர், பென்ச், செடி கொடிகள் இத்தியாதிகள் இரைந்து கிடந்தன. ரொம்பவும் கறாராக விலை பேசியவர் சந்தனக் கடத்தல் வீரப்பன் மீசை வைத்திருந்தார். கண்ணத்திற்கும் வலது கண்ணிற்கும் இடைப்பட்ட இடத்தில் இருந்த பெரிய மரு இயற்கையா செயற்கையா என்று சோதித்துப் பார்க்க கை விருவிருவென்றது. அவரது மீசை என்னைத் துரத்தியது. சாப்பிடாத குழந்தைகளுக்கு அவரைக் காட்டினால் கிண்ணம் அரை நிமிடத்தில் காலியாகிவிடும். கேட்ட காசை கொடுத்துவிட்டு மிரட்சியுடன் அடுத்தக் கடைக்குத் தாவினோம்.

நவராத்திரிக்கு வீட்டிற்கு வருபவர்களுக்கு வச்சுக் கொடுப்பதற்கு நெய் தீப விளக்கும் பித்தளை தட்டும் வாங்கிக்கொண்டு திரும்பவும் கைலாசப் பார்ட்டிக்கு வந்தோம். ”மொத்தம் பத்து பொம்மை இருக்கு சார்” என்று மீண்டும் ஆரம்பித்தார். என்னுடைய நெகோஷியேஷன் ஸ்கில்ஸ் அனைத்தையும் பயன் படுத்தினேன். இருவர் கைக்கும் துண்டு போட்டுக்கொள்ளாமல் ஆயிரம் ரூபாய்க்கு கைலாசம் எங்கள் கைவசமானது.

சிவன், பார்வதி உட்கார்ந்திருப்பதற்கு பின்னால் வெள்ளியங்கிரி மலை, முருகன், நின்ற திருக்கோலத்தில் கஜமுகன், விஷ்ணு, பிரம்மா, நாரதர், நந்தியெம்பெருமான் மற்றும் சிவ கணங்களோடு பெட்டியில் எழுந்தருளினார்கள். கார் டிக்கிக்கு செல்லவிருந்தவர்களைக் காப்பாற்றி பின் சீட்டிற்கு கொண்டு வந்து பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளேன். கயிலையே மயிலை மயிலையே கயிலையிருந்து இந்த மன்னை மன்னாரின் வீட்டிற்கு விஜயம் செய்துள்ளார்கள். சேவிக்க அனைவரும் வருக! அருள் பெருக!!



விடிய விடிய கொலு வைத்தாயிற்று. மன்னையைப் போல சென்னையில் சுற்றத்தார்கள் மற்றும் உறவினர்கள் தினமும் நவராத்திரி விஜயம் செய்வதில்லை. சுண்டல் வீணாகிறது. வீட்டிலுல்லோர்க்கு அதான் தலையாயக் கவலை.

பயில்வான் கணவர்கள் இதுபோன்ற கொலு விசிட்டிற்கு காரைக் கிளப்ப மறுக்கும் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கில் நாலைந்து பெண்மணிகளாகச் சேர்ந்து வாடகைக்கு ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு காலையிலிருந்து மாலை வரை ஒரு ரவுண்ட் அடித்து நண்பர்கள் வீடுகளை கவர் செய்து குங்குமச் சிமிழ் கிஃப்ட்டும் 2x2 ரவிக்கைத் துண்டும் காய்ந்த வெற்றிலைப் பாக்குமாக வீடு திரும்புகிறார்கள்.

நின்னையே ரதியென்று சரணமெய்திய என்னைப் போன்ற அப்பாவிகள் எப்போதும் அவர்கள் இழுத்த இழுப்புக்கு வருவார்கள்.

ஹாப்பி நவராத்திரி!
 

Tuesday, October 9, 2012

தூதஞ்சல்


இன்று உலக அஞ்சல் தினமாம். கணநேரத்தில் பட்டுவாடா ஆகும் மின் அஞ்சலின் பிரவேசத்திற்குப் பிறகு ஸ்நைல் மெயில் என்று பழித்து தொழித்து அஞ்சலுக்கு எப்போதோ அஞ்சலி செலுத்திவிட்டார்கள். வாலெட் நிரம்ப கிரெடிட் கார்டுகள் அடைத்து வைத்திருந்தால் அதற்கான ஸ்டேட்மெண்ட்டுகளும் ஈ ட்ரேடிங் அக்கௌண்ட்டில் கரடியா எருதா என்று தினமும் லாகின் செய்து நொடிக்கொருதரம் ப்ரௌஸரை ரிஃப்ரெஷ் செய்யும் பழக்கமிருக்குமளவிற்கு பங்குகள் வைத்திருந்தால் அது சம்பந்தமான தஸ்தாவேஜுகளும் கூரியரில் வீடு வந்து சேர்கின்றன. சேர்ப்பித்துவிட்டு மறக்காமல் கையெழுத்து வாங்காமல் செல்கிறார்கள். 

சிப்பங்கள் என்றால் பார்ஸல்கள் போலிருக்கிறது. கூரியருக்கு தூதஞ்சல் என்ற பதத்தைப் பயன்படுத்துவதைப் பார்த்தேன். கருத்தொருமித்த காதலர்கள் தூதஞ்சல் என்பதற்கு புறாவிடு தூது போன்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. துரித அஞ்சல் என்றால் எக்ஸ்பிரஸ் டெலிவரி. “வேணும். அநேக நமஸ்காரம். ஆசீர்வாதம். சென்ற முறை வந்த போது புவனா போட்ட காப்பி சூடாகயில்லை” என்றெல்லாம் தபால் கார்டில் ஊரே தெரிந்துகொள்ள நடந்த விஷயப் பரிவர்த்தனைகள் நின்றுவிட்டது.

1.55 லட்சம் அஞ்சலகங்கள் மூலம் உங்களை உலகுடன் இணைக்கிறது என்கிறது இந்திய அஞ்சல் துறையின் விளம்பரம். அவ்வளவு அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கும் நிரந்தர பணி செய்வதற்காகவும் அவர்களுடைய குடும்ப ஜீவிதத்திற்கும் ஆதரவாக இப்பொழுதும் கடிதப் போக்குவரத்து வைத்திருப்பவர்கள் யாரேனுமிருந்தால் அவர்களை மனதாரப் பாராட்டி கை குலுக்கலாம். இலவசமாகக் கிடைத்த ஒரு மெயில் ஐடியில் அண்டசராசரத்துடன் அனானியாகக்கூட அப்பொழுதே பேசுகிறார்கள். விண்ணப்பிக்கிறார்கள். ச்சேட்டுகிறார்கள். சீண்டுகிறார்கள். திட்டிக்கொள்கிறார்கள். களவுமணம் புரிகிறார்கள். 

கால் கடிதாசு எழுதும் வழக்கம் என்றோ வழக்கொழிந்துவிட்டது. லவ் ப்ரபபோஸ் பண்ணுவது கூட ஒரு வரி SMS அல்லது நாலு வரி ஈமெயிலில் முடிந்துவிடுகிறது. ”காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு வந்ததா....” என்று ஆனந்தபாபு சேரன் பாண்டியனில் பாடி நடித்ததை இப்போது பார்க்கும் போது நகைப்புக்குரியதாக இருக்கிறது. கடித இலக்கியங்கள் இப்போது ஈமெயிலிலக்கியங்களாகப் பாராட்டப்படுகின்றன. ஈமக்கிரியைக்கு நாற்பது பேருக்கு தனித்தனியாக கருப்பு மசியில் கையொடிய லெட்டர் எழுதியது இப்போது மெயில் மெர்ஜ்ஜில் சாதரணமான காரியமாக பேனாவுக்கு இங்க் நிரப்பும் சிரமமில்லாமல் முடிந்துவிடுகிறது. இந்த எஸ்ஸெம்மெஸ் யுகத்தில் தந்திக்கென்ன அவசியம்? உங்கள் ஏரியா போஸ்ட்மேனைப் எப்போது கடைசியாகப் பார்த்தீர்கள்? உங்கள் பேட்டையிலுள்ள போஸ்ட்டாபீஸ் முகவரி தெரியுமா?

மணியார்டரை எதிர்பார்த்து போஸ்ட்மேனுக்காக அமர்ந்திருக்கும் வயதானவர்களை வைத்து எவ்வளவு சினிமா சீன்கள் வைத்தாயிற்று. கை நடுங்கி கோணலாகக் கையெழுத்துப்போட்டு காசு வாங்கி தபால்காரருக்கு டிப்ஸ் கொடுக்கும் முதியவர்களைப் பார்க்க முடியவில்லை. இப்போது வயர் ட்ரான்ஸ்ஃபரா? மணியார்டர் என்ற ஒன்று இருக்கிறதா? அரசாங்கமே பென்ஷனை பேங்கில் போட்டுவிட்டு கையில் கார்டை சொருகிவிட்டு போய்விடுகிறார்கள். ப்ளாஸ்டிக் மணி.

கீழத் திருப்பாலக்குடி என்றொரு குக்கிராமம். எனது சிறிய பாட்டனாரது முள்வேலி போட்ட ஓட்டு வீடுதான் அக்கிராமத்திற்கு அஞ்சலகம். அவருக்கு வெளியே டவுனில் வேலையிருந்தால் குடும்பத்து நபர்கள்தான் யூனிஃபார்ம் போடாத அஞ்சலக சிப்பந்திகள். ஜன்னல் கதவைத் திறந்துவைத்துக்கொண்டு கல்லாவில் காசை வாங்கிப் போட்டுக்கொண்டு காந்தி படம் போட்ட ஸ்டாம்ப் விற்றிருக்கிறேன். அஞ்சலகம் இல்லா குக்கிராமங்களில் இது போல சிலரைத் தேர்ந்தெடுத்து இந்திய அஞ்சல் துறையே அதிகாரப்பூர்வமாக ஸ்டாம்ப், போஸ்ட் கார்டு, கவர் விற்பதற்கு அங்கீகரித்திருந்தார்கள். ஜன்னலை எட்டிப் பார்த்து ”மிட்டாயெல்லாம் விக்கறதில்லையா?”ன்னு அழுக்கு ஸ்கர்ட் போட்ட ஒரு சிறுமி கேட்டதாக மங்கலாக ஞாபகம் இருக்கிறது.

இவ்வளவு தொழில்நுட்ப மாற்றங்களுக்கிடையே நிகழும் அதிசயம் என்னவென்றால் இன்னமும் கருவாழக்கரை காமாக்ஷியம்மன் கோயில் முருகன் பூசாரியிடமிருந்து தனுர் மாதக் கட்டளை அர்ச்சனை மற்றும் அபிஷேகத்திற்கு
இப்பவும் இங்கு தனுர் மாத பூசை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தாங்கள் இந்த முறையும் ரூ 250 அனுப்பி காமாட்சி அம்மனின் பரிபூரண கடாட்சத்திற்குப் பாத்திரர்களாகும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
முருகன் பூசாரி

என்று கைப்பட எழுதிய போஸ்ட் கார்ட்தான் எங்கள் கிரஹத்திற்கு வருகிறது. அடுத்த வருடம் பூசாரி செல்ஃபோனில் தட்சிணைக் கேட்கலாம். ஆனால் “சார் போஸ்ட்!” என்ற குரல் கேட்டு வருஷாந்திரம் ஆகிறது.

#அஞ்சலி..அஞ்சலி.. அஞ்சலுக்கு புஷ்பாஞ்சலி...

பட உதவி: stampboards.com

Monday, October 8, 2012

போட்டியில் வென்ற ஞொய்யாஞ்சி


கல்யாணமான அபாக்கியசாலிகளுக்கு சர்வதேச அளவில் ஒரு கட்டுரைப் போட்டி நடந்தது. தலைப்பு “மனைவி”. பல்லாயிரக்கணக்கானோர் முண்டியடித்துக்கொண்டு கலந்துகொண்டனர். தங்களது உள்ளக்குமுறல்களைக் கொட்டிப் பக்கம்பக்கமாக எழுதித்தீர்த்தனர். சாயந்திரம் இறுதித் தீர்ப்பு என்று அறிவித்தார்கள். உணர்வுப்பூர்வமாக எழுதியவர்கள் தனக்குத்தான் முதல் பரிசு என்று பார்ப்போரிடமெல்லாம் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தார்கள்.

ஆறு மணியானது. முடிவை அறிவிக்க மைக் பிடித்தார் ஒருவர். ”இந்த மகத்தான போட்டியில் வெற்றி பெற்றவர் திருவாளர்.ஞொய்யாஞ்சிசீசீஈஈஈ” என்று ஓலமிட்டார். திருவாளர் ஞொய்யாஞ்சியைச் சுற்றி ஈக்களாக செய்தியாளர்கள் மொய்த்தார்கள்.

”உங்களுக்கு கல்யாணமாகி எவ்ளோ வருசமாச்சு?”

“இந்தப் போட்டிக்கு உங்க அனுபவம் எப்படி கைகொடுத்தது?”

“மனைவியைப் புரிஞ்சு வச்சுக்கிற அளவிற்கு நீங்க அவ்ளோ ஸ்மார்ட்டா?”

“நீங்க அடிபட்டதெல்லாம் எழுதி இந்தப் பரிசு வாங்கினீங்களா?”

என்றெல்லாம் பலவாறு கேள்வி எழுப்பினர். எல்லாவற்றிற்கும் அமைதியாக புன்முறுவல் பூத்துக்கொண்டிருந்தார் மிஸ்டர் ஞொய்.

“நீங்க எவ்வளவு பக்கம் எழுதினீங்க?”

என்கிற கேள்வி எங்கிருந்தோ அவர் காதுகளில் வந்து விழுந்த மறுகணம் அவர் எழுதிய கட்டுரையை எல்லோருக்கும் உரக்கப் படித்துக் காண்பித்தார்.

“She has a problem for every solution".
 
#ஞொய்யாஞ்சி என்று நாமகரணம் சூட்டி இவ்வுலகிற்கு இவரை தாரை வார்த்த வானவில் மனிதன் மோகன் அண்ணாவுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.

Saturday, October 6, 2012

செயக்கெடும்... செய்யாமையானும் கெடும்..

"செய்யவேண்டிய வேலையைச் செய். செய்யக்கூடாத வேலையைச் செய்யாதே. எதைச் செய்யணுமோ அதை செய்யலைன்னா கெட்டுப்போயிடுவே. எதை செய்யக்கூடாதோ அதை செஞ்சென்னா கெட்டுப்போயிடுவே."


மருத ஸ்டேஷன். ஒரே கூட்டங்க. ”டீஈஈ.. காப்ப்ப்பி.. வடே..வடே..” சத்தத்தோட சேர்ந்து ”மாப்ள... மெட்ராசு... சாக்கிரத..”. ”பத்திரமா போய்ட்டுவாம்மா”, “போய் மறக்காம ஃபோன் பண்ணுங்க”, “சேகரு அவ நிச்சியம் வருவாடா”, “புள்ளைங்கள உள்ள போவச்சொல்லு” என்று பொட்டி பொட்டியாக ஜனங்களின் வாய் ஓயாத விசாரிப்புகள். பாண்டியன் இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பப்போறான். பிஸ்லெரி பாட்டில் வாங்கிட்டு ஒருத்தர் ஓடறாரு. இதோ கார்டு பச்சை காமிச்சுட்டாரு. கொஞ்சகொஞ்சமா வண்டி நகர ஆரம்பிச்சுடுச்சு.

கடைசியா கோர்த்துவிட்டது அன்ரிஸர்வ்ட் கம்பார்ட்மெண்ட். ரொம்பி வழியுது. ஆம்பளை பொம்பளை வித்தியாசமில்லாம நெருக்கியடிச்சுக்கிட்டு சமதளமா தெரியற எல்லா இடத்திலையும் தன்னோட ’பேக்’கை நகர்த்தி உட்கார்ந்திருக்காங்க. பக்கத்துல யாராவது வஞ்சனையில்லாம வளர்ந்திருந்தா அவங்க தொடையைக் கூட சீட்டா நினைச்சுக்கிட்டு உட்கார்ந்த ஆளுங்களும் உண்டு. இவ்வளவு அமளிதுமளியிலையும் ரெண்டு பேர் திருப்தியா இருந்தாங்க. ஏன்னா அவங்க ரெண்டு பேருக்கும் ஜன்னலோரச் சீட்டுக் கிடைச்சிருந்தது. பொட்டிக்குள்ள பார்த்தா யாராவது வயசானவங்க முடியாதவங்க நின்னுக்கிட்டிருந்தாங்கன்னா அவங்களுக்கு உட்கார சீட் கொடுக்கும்படியாயிடும்னு கழுத்தை உள்பக்கமா திருப்பாம வெளியில பார்த்துகிட்டே வந்தாங்க.

ஒரு பக்கமா பார்த்து கழுத்து வலி கண்டு போய் ரெண்டு பேரும் நேருக்கு நேர் பார்த்துக்கிட்டாங்க. முதல்ல பல்லு தெரியாம சிரிச்சுக்கிட்டாங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஊரு பேருன்னு விசாரிச்சுக்கிட்டாங்க. ”அப்படியா! நம்ம பய ஒருத்தன் அங்கத்தேன் இருக்கான்”ன்னு ஒருத்தரும் “அட! இது தெரியாம போயிட்டுதுங்களே. முந்தாநேத்தி நா அங்கிட்டுதான் வந்துருந்தேன். நம்மூர்ல ஒரு பயலுக்கு அங்கதான் பொண்ணு எடுத்தோம்..”ன்னு எதிர்ல இருந்த ஆளும் ரொம்ப அன்னியோன்னியமாயிட்டாங்க. கொஞ்ச நேரத்திலயே ரயில் சிநேகிதம் பூத்துக் காயாகி பழமாகிட்டுது.

“இப்ப எங்க போறீங்க?”

“விளுப்புரம்”

“ம்.. நா மெட்ராஸ் போறேன்...”

“ஓ அப்டியா.. சந்தோசம்.... எனக்கு ரயில்ல வர்றதாயிருந்தா ஒரு சின்ன சிக்கல்”

“என்ன?’

“இல்ல.. ரயில் ஸ்டேசன விட்டு நவுந்த கொஞ்ச நேரத்தில எனக்குத் தூக்கம் வந்துடும்.”

“எனக்கு வேற விதமான சிக்கல்”

“என்ன?”

“கொஞ்சம் கூட தூக்கமே வராது. கொட்டக் கொட்ட முழிச்சுக்கிட்டிருப்பேன்”

“ஓ. எனக்குதான் பயமாயிருக்கு. இறங்காம தூங்கிடுவேனோன்னு..”

“நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க.. நா எளுப்பி விடறேன்.. நல்லா தூங்குங்க..”

“இல்ல.. போற வேலை ரொம்ப முக்கியம். நிச்சயம் விளுப்புரத்தில இறங்கிரணும்”

“அட.. நான் சொல்றேன்ல.. நிம்மதியா தூங்குங்க.. நா எளுப்பி விடறேன்..”

“நிச்சியம் எளுப்பி விடுவீங்கல்ல. ரொம்ப முக்கியமான வேலை... அதான்...”

“என்னங்க நீங்க. நம்ப மாட்டேன்றீங்க.. நிச்சயம் எளுப்பி விடறேன்.. நீங்க எளும்பலைன்னு வச்சுக்குங்க.. அப்படியே உங்களை தரதரன்னு புடிச்சு இளுத்து ப்ளாட்பாரத்தில இறக்கிட்டுப் போயிடறேன். போதுமா?”

“ரொம்ப நல்லதுங்க..நன்றிங்க.. மறக்காம விளுப்புரத்தில இறக்கிவிட்ருங்க.. தயவுசெஞ்சு... சரிங்களா”

“கவலைப்படாம நல்லாத் தூங்குங்க.. நிச்சியமா இறக்கிவிடறேன்..”

****************

எக்மோர் ஸ்டேஷன். மருத மல்லி வாசனை மாறி கூவம் வாசனை. அலுங்கி குலுங்கி அன்ரிஸர்வர்ட்ல வந்த எல்லாரும் அலுப்போட இறங்கறாங்க. விழுப்புரத்தில இறங்கவேண்டியவனும் இறங்கறான் மெட்ராஸ்ல இறங்கவேண்டியவனும் இறங்கினான். பழி சண்டை. விழுப்புரத்தில இறங்கவேண்டியவன் இறக்கிவிடறேன்னு சொன்னவனைப் புடிபுடின்னு புடிச்சான்.

“நா உங்கிட்ட கேட்டேனா? விளுப்புரத்தில இறக்கிவுடுன்னு. கேட்டேனாய்யா? நீயாத்தானே சொன்னே.. ஏன்யா.. நீயாத்தானே சொன்னே.. ஏன்யா இப்படி பண்ணின.. நானா இறங்கிறதா இருந்தா விளுப்புரத்தில இறங்கலைன்னாகூட முன்னாடியே விருத்தாசலத்துல இறங்கி விளுப்புரம் போயிருப்பேன்..இல்லைனா அட்லீஸ்ட் செங்கல்பட்டுல வந்து இறங்கியிப்பேன்.. இந்நேரம் விளுப்புரத்தில இருப்பேன்.. இப்படிக் கெடுத்துப்புட்டியேயா...நீ நல்லாயிருப்பியா..” ரயில் சிநேகம் நாறிப்போயிருச்சு.

விழுப்புரத்தில இறக்கிவிடறேன்னு சொன்னாம் பாருங்க ஒரு பய அவன் வாயே தொறக்கலை. கம்முன்னு இருந்தான்.

அந்த விழுப்புரம் பார்ட்டி கன்னாபின்னான்னு திட்டிட்டு போயிட்டான். அப்புறமும் இறக்கிவிடறேன்னு சொன்னவன் ஆழ்ந்த சோகத்தில இருந்தான். அவன் பக்கத்தில இருந்தவன் கேட்டான் “ஏன்யா இன்னும் சோகமா இருக்கே. அவந்தான் திட்டிட்டு போயிட்டானே. போய் ஆக வேண்டிய வேலை எதாவது இருந்தா பாருயா”ன்னான். அதுக்கு அவன் சொன்னான். “இல்ல.. இவன்னு நினைச்சு விளுப்புரத்தில ஒருத்தனை தரதரன்னு இளுத்து ப்ளாட்பாரத்தில போட்ருக்கேன். அவன் என்னவெல்லாம் திட்டுவான்னு நினைச்சு வருத்தப்படறேன்”னானாம்.

இப்ப திரும்ப ஒருதடவ மொத பாராவைப் படிச்சுப் பாருங்க.. விளங்கும்...

#இந்தக் கதையை இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் ”செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்” என்கிற குறளுக்கு எடுத்துக்காட்டாக சொன்னார். இப்படி விஸ்தாரமாக ”இளுத்து”ச் சொன்னது என் கை வண்ணம்.

பட உதவி: chanderifilm.com

Thursday, October 4, 2012

இரு நூல்கள்


ஸ்பெக்ட்ரம் என்பது அக்கடையின் பெயர். அப்பழுக்கில்லாமல் துடைத்து வைத்திருந்தார்கள். எனது நண்பருக்காக உள்ளே காலை வைத்தேன். திறக்கும் பளீர்க் கண்ணாடிக் கதவுக்கு நேர் பின்னால் “வா..வா” என்று அழைத்தது அந்த புத்தக அலமாரி. சொற்ப புத்தகங்களே கண்ணுக்கு தென்பட்டது. அவருக்காக வந்த வேலையை விட்டுவிட்டு கை பரபரவென்று அந்த புத்தக அலமாரியை நோண்ட ஆரம்பித்தது.

அந்த நான்கடி அலமாரியை நான் தாரளமாக அலசுவதற்கு இடைஞ்சலாக இரண்டு மாதுக்கள் என் பின்புறம் நின்றுகொண்டு பீங்கான் கோப்பைகளை அலசி ஆராய்ந்துகொண்டிருந்தார்கள். போட்டியாய் இருவரும் பாய்ந்து பாய்ந்து தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்ததில் எந்நேரமும் நங்கென்று கீழே விழுந்து உடையும் அபாயத்திலிருந்தன அந்தக் கோப்பைகள். ”ச்சீச்சீ. இது வேண்டாம்டி.. அவனுக்கு இந்தக் கலர் பிடிக்காது.” என்று அவர்கள் கிசுகிசுத்தது என் பாம்புச் செவியில் விழுந்தது. யாரோ ஒரு துரதிர்ஷ்டசாலிக்குக் கிஃப்ட் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்தது.

புத்தகத் தேடலுக்கு தடையாக நின்றுகொண்டிருந்ததால் அடிக்கடி அவர்கள் முதுகுக்கு ”எக்ஸ்க்யூஸ் மீ”யினேன். அரையடி கை கோர்த்துக்கொண்டே பாலே நடனம் போல ஒதுங்குவார்கள். மீண்டும் நம் மேலே விழுவது போல இந்தப் பக்கம் சாய்வார்கள். அந்தத் திசைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு இரண்டடி தள்ளி நின்று எக்கி எக்கி சில புத்தகங்களை புரட்டிப் பார்த்தேன். இருந்த ஐம்பது அறுபது புத்தகங்களும் பொக்கிஷம். ஆங்கில இலக்கியகர்த்தாக்களின் அற்புத படைப்புகள். ஷேக்ஸ்பியர், ட்வைன், சார்லஸ் டிக்கன்ஸ் என்று வரிசை நீண்டது. மேப்பிள் பிரஸ் என்கிற கம்பெனியார் அச்சடித்திருந்தனர். மிகவும் நேர்த்தியாக இருந்தது.

முதலில் எடுத்த தலையணை புஸ்தகத்தை அதன் தலைப்பிற்காக எடுத்துப் புரட்டியதில் சிட்டி ரோபோ போல வாசித்தவை.

"Human labor is becoming the cheapest of commodities"

"The rest of the mankind is the carving knife... while we are the fish and the meat"

"I have nothing to offer but blood, toil, tears and sweat"

"For the light that shone in this country was no ordinary light."

அந்தப் புத்தகத்தின் தலைப்பு: World's Greatest Speeches. ஒவ்வொரு வரியும் உலகில் ஏதோ ஒரு நாட்டில் ஏதோ ஒரு துறையில் கோலோச்சிய ஒரு பிரபலம் பேசியது. அந்தக் கடைசி வாசகத்தை பேசியவர் ஜவஹர்லால் நேரு. பேசியது காந்திஜியை சுட்டுக்கொன்ற சில மணி நேரத்தில்.

இரண்டாவதாக கையில் சிக்கியது ஒரு மாமனிதரின் தேர்ந்தெடுத்த புனைவுகளின் தொகுப்பு. அறிவியல் புனைக் கதைகளின் பிதாமகராகிய ஹெச்.ஜி.வெல்ஸின் the time machine, the invisible man, the war of the worlds and the first man in the moon ஆகிய புனைவுகள் அடங்கிய புத்தகம்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இரண்டுமே சல்லிசாக கிடைத்தன. முதல் புத்தகம் 800 பக்கங்கள் இரண்டாவது 600 பக்கங்கள். ஒவ்வொன்றும் 195 ரூபாய் மட்டுமே.

புத்தகங்களை வாங்கிக்கொண்டு நண்பருக்கு தேவையானவைகளையும் அள்ளிக்கொண்டு பில் போடும் போது கவுண்ட்டர் மேஜையில் முன்னாலிருந்தது பீங்கான் கோப்பையும் இரண்டு ஃபைவ் ஸ்டாரும். அந்த இரு பெண்டிரும் குசுகுசுவென்று சிரித்துப் பேசிக்கொண்டே பக்கத்தில் நின்றிருந்தார்கள். World's Greatest Speeches பில்லிங் கவுண்ட்டரிலிருந்து சிரித்தது.

பட உதவி: http://www.eatock.com/

Wednesday, October 3, 2012

நாயார் பெருமை


ஷங்கர் என்ற அல்சேஷன் நாயொன்று என்னுடைய அரைடிராயர் வயதில் என்னை விடக் கொழுகொழுவென்று எனக்கு மேல் வளர்ந்து எங்களது வீட்டில் ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருந்தது. வாசலில் கட்டிப்போட்டிருப்பது தெரியாமல் பதவிசாகப் படுத்திருக்கும். “ஐயா” என்று யாராவது கதவில் கைவைத்தால் விரலை ஃபிங்கர் சிப்ஸாக சாப்பிடும் ஆர்வத்தில் முன்னங்கால்களைத் தூக்கிக்கொண்டு எகிறும். வாசலில் நிற்பது பிச்சைக்காரரா அல்லது காய்கறிக்காரரா என்பது அதன் விதவிதமானக் மாடுலேட்டட் குரலில் கொல்லையில் நமக்குப் புரியும்.

கூர்மையான கொத்தும் பார்வை. பொசு பொசுவென்று வால். கருப்பும் செம்பைட்டையுமான நிறம். பூச்சி போல தேசலாக யாரவது மானிடர்கள் அகப்பட்டால் அப்படியே அபேஸ் பண்ணிவிடும் பசிப் பாய்ச்சல். தகப்பனார் காலையில் வாக்கிங் அழைத்துப்போகும் போது கொலைக் குற்றவாளிகளைக் தேடிக்கண்டு பிடிக்கும் தொனியில் அவரை இழுத்துக்கொண்டு வேலி காம்பௌண்ட் சுவரோரம் மோப்பம் பிடித்துக்கொண்டே அவரை இழுத்துக்கொண்டு ஒதுங்கும். வருவதைப் பார்த்தாலே பத்தடி தூரத்திற்கு அதன் வழியில் எதிரில் எவரும் நிற்க அஞ்சுவர்.

நாய் நன்றியுள்ள விலங்கு என்பதைத் தவிர அதனிடம் சில நப்பித்தனங்கள் அதிகம்.

1. சொந்தக்காரக் கூட்டமாக இருந்தாலும் ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிளாக இருந்தாலும் ஒரு நாய் மற்ற நாய்களை விரட்டிவிட்டுதான் எச்சிலையிலோ ரோட்டோர பழையதிலோ வாயை வைக்குமாம். எல்லைத்தகராறு மட்டுமல்ல சொந்தத்தகராறும் உண்டு.

2. தெருவோர சாக்கடைக்கு அருகில் நின்று தான் தின்றதை வாயிலிருந்து உமிழ்ந்து மறுபடியும் தின்னும் எச்சி புத்தி நிறைய உண்டு.

3. சுத்தமாக காய்ந்து போன எலும்புத்துண்டாக இருந்தாலும் வாயில் கவ்வி கடிக்குமாம். அப்போது தனது பற்களிலிருந்து வழியும் ரத்தத்தை அந்த எலும்புத்துண்டிலிருந்து வழியும் ரத்தமாக எண்ணி ருசித்துச் சாப்பிடுமாம்.

இந்நாயின் செய்கைகளை நமது வாழ்க்கைக்கு உதாரணம் காட்டி இராமலிங்க அடிகளார் தனது திருவருட்பாவில்...

 அழிந்த வாழ்க்கையின் அவலமிங் கனைத்தும்
          ஐயம் இன்றிநீ அறிந்தனை நெஞ்சே
     கழிந்த எச்சிலை விழைந்திடு வார்போல்
          கலந்து மீட்டுநீ கலங்குகின் றனையே
     மொழிந்த முன்னையோர் பெறும்சிவ கதிக்கே
          முன்னு றாவகை என்னுறும் உன்னால்
     இழிந்த நாயினும் கடையனாய் நின்றேன்
          என்செய் வேன்உனை ஏன்அடுத் தேனே.

அறநெறி தவறி அழிந்தவர்கள் வாழ்வில் கண்ட துன்பங்களைச் சந்தேகமின்றி அறிந்த நெஞ்சே; உமிழ்ந்த எச்சிலை மறுபடியும் உண்ண விழைபவர்கள் போலே அவலங்கள் நிறைந்த இந்த வாழ்வில் நிதம்நிதம் போராடுகிறாய் கலங்குகிறாய்; முன்னோர்கள் சிவகதியடைந்த வாழ்வைப் பின்பற்றாமல் நெஞ்சே, என்னை உன் இஷ்டத்திற்கு இழுத்து இழிந்த நாயை விடக் கேவலமாக இருக்க வைத்த உன்னை நான் அடைந்து என்ன பயன்? என்று கேட்கிறார்.

இதையே பட்டினத்தார் ”நெஞ்சோடு புலம்ப’லில்

மண்காட்டிப் பொன்காட்டி மாய் இருள் காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்
கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கிமிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.

என்று கடைத்தெருவில் கடை கடையாக ஏறியிறங்கும் அங்காடி நாய்க்குச் சமமாக நெஞ்சை குற்றம் சாட்டுகிறார்.

#நாயைக் குளிப்பாட்டி நடுவீட்ல வச்சாலும் வாலைக் குழைத்துக்கொண்டு............. திங்கத்தானே போகும் என்பது என் பாட்டி திட்டும்போது (என்னை மட்டுமல்ல) சரளமாக உபயோகிக்கும் சொலவடை.

##செல்ல நாய் வைத்திருப்போர் திட்டாதிருக்க அருள்புரிவாய் கச்சி ஏகம்பனே!

*வலை மேய்தலில் கிடைத்த அரும்படம்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails