Monday, December 30, 2019

பாட்டிகளின் காதலன்


"அச்சச்சோ... கடந்துவிட வேண்டுமே" என்று பதட்டப்பட்டேன். இங்கே நான் எழுதியதை நீங்கள் படிக்க எடுத்துக்கொள்ளும் அவகாசத்தை விட அவசரமாக மனது அடித்துக்கொண்டது. வாகனங்கள் விரையும் மெயின் ரோடு. இரண்டு பக்கமும் சோழாவரம் பந்தயத்தில் முதலிடம் பெற போட்டியிடுவது போல வேகமாகச் சென்றுகொண்டிருந்தார்கள்.
இடுப்பில் தண்ணீர் தளும்பத் தளும்ப பெரிய பித்தளைக் குடம். நல்ல வெயிட். கச்சலான தேகம். தலை முழுக்க வெண்பஞ்சு கேசம். எண்பது வயதுக்கு மேல் இருக்கலாம். வைரம் பாய்ந்த கட்டையாய் ஒரு பாட்டி. விருட் விருட்டென்று தண்ணீர் குடத்தோடு ரோடைக் கிராஸ் செய்தார். தனக்குத் தானே ஏதோ பேசிக்கொண்டே வீறுநடை போட்டார்.
சிறுசுகள் இல்லாத வீடா? அல்லது இப்பாட்டி யார் வீட்டிலாவது வேலை பார்க்கிறார்களா? எதாகிலும் சதாபிஷேகப் பாட்டி தண்ணீர்க்குடம் தூக்குவது பிசகு என்றெண்ணும் அதே வேளையில் இக்காலத்து பெண்கள் யாரேணும் அந்த பித்தளைக் குடத்தை வெற்றுக்குடமாகவாவது தூக்கி இடுப்பில் வைத்துக்கொள்வார்களா என்பது சந்தேகம். பெற்ற குழந்தையையே தள்ளுவண்டியில் படுக்கப் போட்டு மொபைலை நிரடிக்கொண்டு செல்லும் சோஷியல் நெட்வொர்க்கிங் சமூகமாக மாறிவிட்ட பிறகு அவர்கள் குடம் தூக்க வேண்டும் என்று எண்ணுவது கொடூரமான ஆணாதிக்க சிந்தனையல்லவோ?
எப்பவோ 90களில் பார்த்த "வைகாசி பொறந்தாச்சு"வில் தோளில் தோல்பையுடன் மார்டன் ட்ரெஸ்ஸில் குதிரை போல நடந்து வரும் ஹீரோயினையைப் பார்த்து பிரசாந்த் "தண்ணிக் கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தா தவிக்குது... மனசு தவிக்குது..." என்று கிண்டலடித்துப் பாடும் காட்சி நினைவுக்கு வந்தது. ஆனால், ரியல் ஹீரோயினி இந்த பாட்டிதானே!
பாட்டியிடம் வளர்ந்ததால் எப்போதும் பாட்டிகளின் மேல் ஒரு காதல் பிறந்துவிடுகிறது! 

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails