Showing posts with label Folktales from India. Show all posts
Showing posts with label Folktales from India. Show all posts

Saturday, May 9, 2015

ஃபன்னி வாழ்வு

செத்துப்போகப்போறோம்னு ஒரு குருவுக்கு ஞானதிருஷ்டியில தெரிஞ்சுது. தன்னோட அத்யந்த சிஷ்யனைக் கூப்பிட்டு,

“நான் கூடிய சீக்கிரம் செத்துப்போகப்போறேன்.. நீ எனக்கு ஒரு உபகாரம் செய்யணும்.. செய்வியா?”ன்னார்.

“என்ன வேணும் குருவே”ன்னு கும்பிட்டு நின்னாரு அந்த சிஷ்யர்.

“அதோ.. அங்க சாக்கடைக்கிட்டே மேஞ்சிகிட்டிருக்கிற பன்றிக்கு நாலாவது குட்டியா பொறக்கப்போறேன்..புருவத்துக்கிட்டே ஒரு தழும்போட திரிவேன்... பார்த்தவுடனே அருவாளை எடுத்து ஒரே போடா போட்டு என்னைக் கொன்னுடு.. அந்த பன்னி ஜென்மாவிலேர்ந்து எனக்கு விடுதலை கிடைச்சுடும்...”ன்னார்.

“ஆகட்டும் குருவே!”

*

அதே பன்னியைக் கண்டுபிடிச்சுட்டார் சிஷ்யர். அதோட நாலாவது குட்டியையும் கண்டு பிடிச்சாச்சு. கத்தியை எடுத்து ஓங்கி கழுத்துல போடப் போனாரு.. அந்த சிஷ்யரு...

“நிப்பாட்டு... தயவு செய்து நிப்பாட்டு...” ன்னு அந்தப் பன்னிக் குட்டி வாய்விட்டு அலறிச்சு. 

சிஷ்யன் அதிர்ந்து போயி... என்னடா பன்னிக்குட்டி பேசுதேன்னு வாயைப் பொளந்துகிட்டு நிக்கும்போது..... அந்த பன்னிக்குட்டி இன்னும் பேசிச்சு....

“போன ஜென்மால உனக்கு குருவா இருந்தப்ப.. பன்னிக்குட்டியா பொறந்ததும் என்னைக் கொன்னுடுன்னு சொன்னேன். ஆனா இப்போதான் தெரியறது.. பன்னியா இருக்கிறது எவ்ளோ சுகம்னு....ஆஹா சாக்கடை எப்படி மணமா இருக்குது தெரியுமா? ப்ளீஸ் என்னை வுட்டுடு.. இப்படியே பன்னியாவே அலையறேன்...”

கதை ஃபன்னியா இருக்குல்ல... எந்த உசிருக்கும் அந்த உசிரு முக்கியம். ஏகே ராமானுஜனின் Folktales from Indiaவில் படிச்சு கீழே வைப்பதற்கு முன்னர் அந்தந்தப் பிறவிகளில் செய்யும் நல்வினை தீவினைகளுக்கேற்ப பிறவிச் சுழலில் சிக்கித் தவிப்பதை மணிவாசகப்பெருமான் சிவபுராணத்தில் பாடும் ”புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்.....” என்ற பட்டியலில் பன்னியையும் இணைத்துப் பார்த்து சிரித்துக்கொண்டேன்.

Thursday, November 27, 2014

நரியப்பன் - காகாஸ்வரன்

”நாம் இனிமே இந்த மரத்துக் கிளையில் இருக்கக்கூடாது... வேற அட்ரெஸுக்கு போயிடணும்..” சிணுங்கியது பெண் காகம். ஆண் காகம் வருத்தம் தோய்ந்த முகத்துடன் “கா....” என்று ஈனஸ்வரத்தில் கரைந்தது.
”என்னுடைய முட்டைகளையெல்லாம் அந்த கரும் பாம்பு தின்றுவிடுகிறது. நமக்கு சந்ததியே இல்லாமல் செய்துவிடும் போலிருக்கிறதே...” என்று அழுதது. 

“இதே மரக்கிளையில்தான் நான் பிறந்தேன். வளர்ந்தேன். உன்னைக் கல்யாணம் செய்து கொண்டேன். இதோ குடும்பம் நடத்துகிறேன். இங்கிருந்து என்னைக் கிளம்பச்சொல்லாதே.. ப்ளீஸ்...” என்றது.

“எனக்கென்ன பதில்?” முறைத்தது பெண் காகம்.

“இதை புத்திசாலித்தனமாக அணுக வேண்டும். என்னுடைய நண்பன் குள்ள நரியப்பனிடம் ஆலோசனை கேட்கிறேன். அவன் புத்திசாலி...” என்று கூறி சிறகடித்துப் பறந்து சென்று நரியை அழைத்து வந்தது.

சினிமாக்களில் எல்லோரும் திரை பார்க்க பின்னணி இசை ஒலிக்க காதுகளில் ரகசியம் பேசி தலையை மட்டும் ஆட்டிக்கொள்வார்களே.. அது போல நரி பேச காகம் தலையசைத்து விட்டு சிரித்தபடி பறந்தது. மரத்தின் மேல் அமர்ந்திருந்த காகாயினிக்கு எதுவும் புரியவில்லை.

சிறிது நேரத்தில் ஆண் காகம் எதையோ தூக்கிக் கொண்டு வந்து மரத்தினருகில் இருந்த பாம்புப் புற்றுக்குள் பொத்தென்று போட்டது.

“என்னது அது?” என்று விசாரித்தது மனைவி காகம் காகாயினி.

“பொறுத்திருந்து வேடிக்கையைப் பார்...” என்று ஒரு இறக்கையால் காகாயினியை அணைத்து புற்றின் மீதிருந்து கண்ணெடுக்காமல் அமர்ந்திருந்தது புருஷன் காகாஸ்வரன்.

சிறிதுநேரத்தில் ஐந்தாறு ஆட்கள் அந்தப் புற்றருகில் அவசர அவசரமாக சூழ்ந்துகொண்டார்கள். கையிலிருந்த கோடாலியாலும் ஈட்டியாலும் அந்தப் புற்றை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். பாம்பை அடித்துக் கொன்று விட்டு அங்கே பளபளவென்று ஜொலித்த வைர அட்டிகையை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். பொண்டாட்டி காக்காவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.

இறக்கையால் கட்டிப் பிடித்து அலகோடு அலகாக முத்தமிட்டு “எப்படி இது
நடந்தது?” என்று வெற்றிக் கதை கேட்டது.

“ராணி பக்கத்துக் குளத்திற்கு தினமும் குளிக்க வருவார்கள். அவரது நகையை கொத்திக் கொண்டுவந்து பாம்புப் புற்றில் போட்டுவிடு. வீரர்கள் ஓடி வந்து புற்றை அழித்து பாம்பையும் கொன்று போடுவார்கள். நீ இந்த மரத்தை விட்டு நகராமல் மகிழ்ச்சியாக காலம் தள்ளலாம்... என்று நண்பர் நரியப்பன் ஐடியா கொடுத்தார். பாம்பு பக்கிரி தீர்ந்தான்” என்று சொல்லி இறக்கைகளைச் சடசடத்தது.

“கா..கா...கா..கா..” என்று இருவரும் டூயட் பாடினார்கள்.

சுபம்.

*
பாட்டி வடை சுட்டக் கதையில் காகத்தை பாடச் சொல்லி ஏமாற்றிய நரி இந்தக் கதையில் அதற்கு உபகாரம் செய்து பாவத்தைக் கழுவிக்கொண்டது.

பின் குறிப்பு: இக்கதையின் மூலம் கன்னடம். ஏகே ராமானுஜன் தொகுத்து ஆங்கிலத்தில் எழுதிய இந்திய நாட்டுப்புறக் கதைகள் புஸ்தகத்திலிருந்து உருவினேன். கதைக் கருவைச் சிதைக்காமல் என் போக்குக்கு கேரெக்டர் பெயர் கொடுத்து எழுதி இறுதியில் க்ளைமாக்ஸ் இணைத்து சுபம் போட்டது அடியேனின் துடுக்குத்தனம்.

Wednesday, September 17, 2014

மல்லிகை இளவரசன்

ஒரு ஊர்ல ஒரு இளவரசன் இருந்தானாம். அவன் சிரிச்சா எட்டூருக்கு மல்லியப்பூ வாசனை வீசுமாம். ஆனா வலிய சிரிக்க வைச்சா அந்த மாதிரி மணம் வராது. அவனா மெய்மறந்து ரசிச்சு சிரிச்சாக்க வாசனை மூக்கைத் துளைக்குமாம். அப்படியிருக்கும் போது அவன் கப்பம் கட்டிக்கிட்டிருக்கிற ராஜாவுக்கு இந்த விஷயம் காதுக்கு எட்டிச்சாம். “யாரங்கே! போய் அவனை இங்கே அழைத்து வாருங்கள்...” என்று மீசை முறுக்கிக்கொண்டே வீரர்களைப் பார்த்துக் கட்டளையிட்டானாம்.

ரெண்டு பேர் வேலேந்திய கையோட அந்த ம.இ கிட்டே போய் “ராஜா கூட்டியாறச் சொன்னாங்க... வாங்க...”ன்னு அழைச்சிக்கிட்டுப் போய் தர்பார்ல நிறுத்தினாங்களாம். சக்கரவர்த்தி “ஏம்ப்பா... நீ சிரிச்சா மல்லியப்பூ வாசனை வீசுமாமே.. ஜனங்க பேசிக்கிறாங்க.. இப்ப சிரி...”ன்னு கேட்டானாம். ”பஹ்பஹ்..” சிரிக்கிறான் ம.இ வாசனை வரலை. கிச்சுக்கிச்சு மூட்டிப் பார்த்தாங்க. சிரிக்கிறான். கொஞ்சகூட மணம் வீசலை. ராஜாவுக்குப் பயங்கர கோவம் வந்திருச்சு. “டேய்.. இவன் என்னை அவமானப் படுத்தறான். நா சிரிக்கச் சொன்னா வாசனை வரலை..இவனைத் தூக்கி ஜெயில்ல போடுங்கடா..”ன்னு ஆர்டர் பண்ணினான். தரதரன்னு இழுத்துக்கிட்டுப் போய் ஜெயில்ல போட்டாங்க.

இந்த ம.இ இருந்த ஜெயில் அறையோட ஜன்னல் வழியா பார்த்தா ஒரு முடவனோட குடிசை இருந்ததாம். ஜன்னல் வழியா தெனமும் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தப்போ ஒரு விஷயம் கவனிச்சானாம். ராத்திரியானாக்க அந்த தேசத்து ராணி முடவனோட குடிசைக்கு வந்து அவனோட குஜால இருக்கிறத பார்த்தானாம். அப்படி வர்ற போது ராஜ போஜனம் எடுத்துக்கிட்டு வந்து அவ கையாலயே அவனுக்குப் பரிமாறுவாளாம். அவனுக்கு அப்படி ஒரு கொடுப்பினை.

ஒரு நாளு ராணி வந்து அவனுக்கு சோறு போட ரொம்ப லேட்டாயிடிச்சாம். அவனுக்கு பிபி ஏறிப்போயி கண்டமேனிக்கு அடிச்சு வெளுத்து வாங்கிட்டானாம். எல்லாத்தையும் சகிச்சுக்கிட்ட ராணி வாயைத் தொறக்காம அவனுக்கு சோறு போட்டா. அவன் சாப்பிட்டு முடிச்சவுடனே “ராணி.. எம்மேல கோவமா.. ஸாரி”ன்னு கையக் காலப் பிடிச்சிக்கிட்டுக் கெஞ்சினானாம். அதுக்கு அந்த ராணி சொன்னாளாம் “ச்சே.,.ச்சே., உங்க மேலே கோவமெல்லாமில்லை. நீங்க அடிச்சபோதெல்லாம் நான் ஈரேழு பதினாலு லோகத்துக்கும் போய்ட்டு வந்தேன்”ன்னு ஒண்ணுமே நடக்காத மாதிரி சகஜமாச் சொன்னாளாம்.

அப்போ அந்தக் குடிசைக்குப் பக்கத்துல மழைக்கு ஒதுங்கி ஒரு சலவைத் தொழிலாளி உட்கார்ந்திருந்தானாம். வெடவெடன்னு நடுங்கிக்கிட்டு சோகத்துல இருந்தான். குடிசை உள்ளாற ராணி இருக்கான்னு அவனுக்குத் தெரியாது. ”ஈரேழு பதினாலு லோகமும் போய்ட்டு வந்தேன்னு” அந்த லேடி சொன்னது இவனுக்கு காதுல விழுந்தது. உடனே பாய்ஞ்சு உள்ள நுழைஞ்சு “ஏம்மா.. ஈரேழு பதினாலு லோகமும் போனேன்னு சொன்னியே... எங்கயாவது தொலைஞ்சு போன என்னோட கழுதையைப் பார்த்தியா”ன்னு கேட்டானாம்.

இதைக் கேட்டுக்கிட்டு இருந்த ம.இக்கு சிரிப்புப் பொத்துக்கிட்டு வந்திச்சாம். ஜெயிலே அதிரும்படி சிரிச்சானாம். அப்ப கிளம்பிச்சாம் மயக்கும் மல்லிகை வாசனை. இது கற்கல்ல நடந்துச்சு.. ஜெயிலரெல்லாம் ஓடிப்போய் ராஜாவை எழுப்பி “ராஜாதி ராஜனே... இப்ப அவன் சிரிக்கிறான். வாசனை வருது பாருங்க.. ஆளை மயக்குது...”ன்னு அழைச்சுக்கிட்டு ஜெயிலுக்கு ஓடி வந்தானுங்க. அந்த ராஜாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியலை..

ஓடி வந்தான். “ஏம்ப்பா.. நான் கேட்டப்ப நீ சிரிச்ச.. அப்பெல்லாம் வாசனை வரலை. இப்ப எப்படி?”ன்னு கேட்டான். ம.இ காரணத்தைச் சொன்னான்.

இவனை ரிலீஸ் பண்ணிட்டு அந்த ராணியைத் தூக்கிச் சுண்ணாம்புக் காளவாய்ல போட்டானாம் அந்த சக்கரவர்த்தி.

***
A.K. Ramanujan தொகுத்த Folktales from India (பெங்குயின்) படித்துக்கொண்டிருக்கிறேன். இருபத்தியிரண்டு இந்திய மொழிகளில், வட்டார வழக்கில், கர்ணபரம்பரையாகச் சொல்லப்படும் நாட்டுப்புறக் கதைகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். மூலம் கெடாமல் என்னளவில் ஒரு கதையைத் தமிழ்ப்படுத்தினேன். ஏகேயாரையெல்லாம் என்னைப் போன்ற சிறியோனுக்கு அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீரெங்கம் எஸ்ஸார்! வாழ்க நீ எம்மான்!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails