Wednesday, March 31, 2010

நித்திக்கு பத்து நெத்தியடி யோசனைகள்

ஏகத்திற்கு ஏடாகூடமாக மாட்டிக்கொண்டு தத்து பித்து என்று வாய்க்கு வந்தபடி உளரும் நித்திக்கு பத்து புத்திசாலி யோசனைகளை அள்ளி வீசலாம் என்று "உள் ஆர்.வி.எஸ்" நேற்று இரவிலிருந்தே ஓயாமல் தந்தி அடித்துக்கொண்டிருக்கிறான். வீட்டில் உட்கார்ந்து நெட்டை தட்டலாம் என்றால் நான் பெற்ற செல்வம், முதல் பெண் " சும்மா... ப்ளாக் ப்ளாக்ன்னு.... எதையாவது கிறுக்க வேண்டியது... பேசாம வந்து படு..." என்று விரட்டியடிக்க அந்த மரியாதையோடு நித்திரைக்கு போகாமல், "என்னத்த எழுதி கிழிக்கிறீங்க... நீங்க பேசினாலே யாராலையும் பொறுத்துக்க முடியாது... இப்ப எழுத வேற ஆரம்பிச்சாச்சு... நீங்க எழுதறதை நீங்களே படிச்சானும் பார்க்கிறீங்களா?... அப்படி பண்ணா எழுதமாட்டீங்க... சகிக்கலை..." என்று என் அன்புள்ள மனைவி கிழி கிழி என்று கிழித்தபின் நிலைமையின் தீவிரம் அறிந்து உள்ளே சென்று பொட்டி பாம்பாக படுத்துக்கொண்டேன். இருந்தாலும் நாம் ஒரு "சிந்தானா சிற்பி"யாக இருப்பதால், சிறு மூளை தூக்கத்திலும் வேலை செய்ததாலும் இந்த கீழ் கண்ட யோசனைப் பட்டியலை என் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த மிருகம் சொல்லச் சொல்ல முழித்து/விழித்துக்கொண்டு இருக்கும் நான் எழுதுகிறேன்.


அஜால் ஐடியா ஒன்று.
நிறைய நேற்றைய, இன்றைய நடிகைகளுடன் ஒவ்வொரு வீடியோவாக ஏதோ சத்யம் தியேட்டரில் தீபாவளி ரிலீஸ் படம் போல வெளிவருவதால், ஜெயதேவன், சசி போன்ற புகழ்பெற்ற மலையாள பட டைரக்டர்களை அணுகி ஒரு முழு 'நீல' படத்தில்(என்ட சிநேக சாமியார், படத் தலைப்பு காப்புரிமை ஆர்.வி.எஸ்.எம்) நடித்து தன் 'முளு திறமையை' வெளிப்படுத்தி நம்பர் ஒன் 'A' கிளாஸ் நடிகராகி தனக்கென்று ஒரு இடத்தை கலையுலகத்தில் பிடிக்கலாம். ஆஸ்ரமம் நிறைய டப்பு கொட்டிக் கிடப்பதால் அவரே தயாரிப்பாளரும் ஆகிவிடலாம். பக்தகோடிகள் ரசிகர் மன்றங்கள் திறந்து காலுக்கு பாலாபிஷேகம் செய்தது போல கட்அவுட்டுக்கும் செய்யலாம்.

குஜால் ஐடியா இரண்டு.
எம்.ஜி.ஆரின் மாட்டுக்காரவேலன் ஒரு படு பயங்கர ஹிட் படம். நேற்று, இன்று, நாளை என எக்காலத்திலும் எந்த ஊர் திரையரங்கில் திரையிட்டாலும் வெள்ளி விழா காணும் படம். அதுபோல வரலாற்று சரித்திரம் படைத்த படங்களில் வரும் இரட்டையர்களை பார்த்து பழகிய நம் ஜனங்களுக்கு, நாங்கள் இரட்டை பிறவி, நீங்கள் பார்த்த வீடியோவில் என்னைபோலவே இருப்பது என்னுடைய இளைய சகோதரன். ஒரு திருக்கார்த்திகை தீபத்தின் போது தொலைந்துபோனவன் இப்போது என் ஆசிரமத்திற்கு வந்து என் மானத்தை கெடுத்து தொலைத்துவிட்டான் என்று உள்ளம் உருகி எல்லா ஊடகங்களிலும் பேட்டி கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடிக்க முயற்சிக்கலாம்.

அஜால் ஐடியா மூன்று.
எல்லோரும் கூடி இருக்கும் ஒரு சத்சங்கத்தில் திடீரென்று கை கால்களை உதறி, பல வினோத சப்தங்களை எழுப்பி அருள் வந்தது போல "நான் பிரம்மச்சாரியா இந்த உலகுக்கு செய்த பொது சேவையை இத்தோட நிறுத்திட்டு, கிரகஸ்தானாகி மனையாளுடன் உபாசிக்க சொல்லுது சாமி இப்ப..." என்று எலெக்ட்ரிக் ஷாக் கண்டது போல ஒரு குதியாட்டம் போட்டு, பக்கத்தில் நிற்கும் அந்த வீடியோவில் ஒத்துழைத்த பாவையை காட்டி "இவங்களையே கட்டிக்க(மனைவியா) உத்தரவு ஆயிருக்கு.." என்று சொல்லி தாலி கட்டிவிட்டால் இந்த பிரச்சினைகளை சுலபமாக சமாளித்துவிடலாம். எங்கள் அந்தரங்க காட்சிகளை காண்பித்த இந்த தொலைக்காட்சி மேல் நான் 'மான' நஷ்ட வழக்கு போடுவேன் என்றும் கூறலாம். இந்த உயர்ந்தரக யோசனையை அளித்தவர் என் அலுவலகத்தில் பணிபுரியும் துணை 'ஜனாதிபதி' அந்தஸ்து உள்ள ஒரு உயரதிகாரி.

குஜால் ஐடியா நான்கு.
ஏற்கனவே வெளிநாடு எங்கும் ஓட்டல் சரவணபவன் போல ஆஸ்ரமக் கிளைகள் திறந்து அமோகமாக வளர்த்து வைத்திருப்பதால், இந்த நாஸ்டி இந்தியாவிலிருந்து வெளியேறி அமேரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் சென்று அந்நாட்டு மக்களுக்கு யோகா, தியானம் போன்ற வாழ்வியல் நுட்பங்களை/சூட்சுமங்களை சொல்லித்தரலாம். இவருக்கு யோகம் இருந்தால் பமீலா ஆண்டர்சன், மடோனா, ஜெனிபர் லோபஸ், அன்ஜெலினா ஜோலி, பாரிஸ் ஹில்டன் போன்றோர் பாத பூஜையும் இன்னபிற குரு சேவைகள் புரிய இவரை சுற்றி வலம் வரலாம். ஆனால் இங்குபோல் அங்கு பக்தைகளுடன் ஒட்டி உறவாடும் நிவாரண (நிர்வாண?) சிகிச்சைகள் வெளியே தெரிந்தால் நிச்சயம் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை விளம்பரம் போட்டு டி.வியில் ப்ளாஷ் காண்பிக்கமாட்டார்கள். நம்மைப்போல அங்கு யாரும் அதிர்ச்சி அடையவும் மாட்டார்கள்.

அஜால் ஐடியா ஐந்து.
விபூதி வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, வாட்ச், செயின் போன்ற பொதுமக்கள் உபயோக பொருட்களை தருவித்தல் இந்தமாதிரியான சில வித்தைகளை கற்றுக்கொள்ள ஒன்றிரெண்டு வருடங்கள் ஆசிரமத்தை ஒரு பொறுப்பான 'ஆ'சாமியிடம் ஒப்படைத்து விடலாம். காலம் எதையும் மறக்கச்செய்யும் ஆகையால், வித்தை கற்று வந்தவுடன் ஒரு புத்தம் புது சந்நியாச வாழ்கையை ஆரம்பிக்கலாம். ருபாய் பத்தாயிரத்திலிருந்து இது போன்ற மாயாஜாலங்கள் கற்றுக்கொடுக்கபடுவதாக போலிச்சாமியார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குஜால் ஐடியா ஆறு.
கூகிள், யாஹூ போன்ற இணைய தேடும் இயந்திரங்களின் தேடுதல் வேட்டையில் கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து முன்னணியில் உள்ளதால், சாமியார் அவர் பெயரிலேயே ஒரு இணைய அங்காடி (Online Shopping Portal) திறந்து பல லௌகீக சமாச்சாரங்களை விற்க ஆரம்பித்தால் ஓகோவென்று போகும். அப்படியே அவர் அந்த வீடியோவில் விழுங்கும் அந்த மருந்துக்கும் விளம்பரம் கொடுத்தால், தமிழ்நாட்டில் பல லாட்ஜ் வைத்தியர்களின் பாடு திண்டாட்டம் ஆகிவிடும்.

அஜால் ஐடியா ஏழு.
சாமியார் பிரசங்கம் செய்வதில் நல்ல கைதேர்ந்த ஆசாமி என்பதால், ஏதாவது ஒரு 'கிளர்ச்சியூட்டும்' மருந்து கம்பெனியில் விற்பனை மேலாளராக பணியில் சேரலாம். ஆனால் அந்த கம்பெனியார் இவருக்கு பெண் காரியதரிசி அமர்த்துவதில் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.

குஜால் ஐடியா எட்டு.
ஏற்கனவே திருச்சி சாமியார் ஒருவர் கற்பழிப்பு வழக்கில் வருடக்கணக்கில் உள்ளே இருப்பதால், சாமியார்களுக்கு இந்த தேசத்தில் ஒரு பாதுகாப்பு இல்லை எனக் கருத்தில் கொண்டு, சாமியார் நல சம்மேளனம் ஒன்று அமைத்து அதற்க்கு தலைவர் ஆகிவிடலாம். எல்லா போலிச் சாமியார்களையும் அதில் உறுப்பினர்களாக்கி அவர்கள் உரிமைக்காக போராடலாம். ஓமந்தூரார் தோட்டத்தின் முன் உண்ணாவிரதம் இருந்து 'சாமியார்கள் நல வாரியம்' ஒன்று அமைக்க அரசாங்கத்திடம் மனு கொடுக்கலாம்.

அஜால் ஐடியா ஒன்பது.
காசு தான் பெரிய பிரச்சனை என்று இந்த விவகாரத்தின் அடிப்படை கூறுகள் தெரிவிக்கின்றன. வெளியே இருந்தால் போட்டு தள்ளி விடும் அபாயம் உள்ளதால் பேசாமல் மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டால் கொலை செய்யப்படும் ஆபத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளலாம். இரண்டு மூன்று முறை போஜனத்திற்கு வழி உண்டு. மாமியார் வீடு என்பது அந்த வீடியோ பாவையின் அம்மா வீடு அல்ல என்பதை இதை படிப்பவர்கள் நன்கு அறிவார்கள்.

குஜால் ஐடியா பத்து.
ஆஸ்ரமம் அமைத்து மிகக் குறைந்த காலத்தில் பணம் பண்ணுவதில் கில்லாடியாக சாமியார் இருப்பதால், 'கொரில்லா போர் முறை' கற்றுக் கொடுக்கும் போர்ப் பயிற்சியாளர் போல ஏதாவது ஒரு மறைவிடத்தில் ஒரு நவீன ஆஸ்ரம தொழிற்பயிற்சி நிலையம் அமைத்து தன் போன்ற சக சாமியார்களுக்கு அல்லது ஒரு சாமியாராக முனைபவர்களுக்கு ஒரு தொழில்நுட்ப வாத்தியார் ஆகிவிடலாம். அப்படி இருக்கும் கால கட்டத்திலேயே தன்னை அணுகும் உலக உத்தமர்களுக்கு ஒரு ப்ரீலேன்சர் ( Freelancer=சுதந்திரமாக 'தொழில்' செய்பவர் ) மாதிரி புது ஆஸ்ரமம் அமைக்கும் பணிகளில் வரவு செலவு திட்ட அறிக்கை தயார் செய்து கொடுக்கலாம்.அதற்கான கன்சல்டிங் பீஸ்சை கறாராக கறந்தும் விடலாம்.

மேலும் ரசனைக்கு...........


(மேற்கண்ட வீடியோ இந்த ப்ளாக் ரசிகர்களை குஷிப்படுத்தவே இணைக்கப்பட்டுள்ளது. இதற்கும்  இப்பதிவிற்கும் துளிக்கூட சம்பந்தம் இல்லை என்பதை அனைவரும் அறியவும்.)

இதைக் கண்ணுற்ற என் நண்பர் ஒருவர், எனக்கு சாமியார்கள் தரப்பிலிருந்து அடி நிச்சயம் என்று மகிழ்ச்சியாக கூறினார். அடி வாங்கும் அளவிற்கு நான் என்ன குற்றம் செய்தேன் என்றுதான் கடைசி வரை புரியவில்லை. பாவம் ஓரிடம் பழி ஓரிடம், இதுதான் உலகம்.

Monday, March 29, 2010

Fair & Lovely பூசிய ரயில்



"கயிலையே மயிலை மயிலையே கயிலை"க்கு  கபாலியை கண்டு கொள்ள பிரயாணம் மேற்கொள்ள சென்ற ஞாயிற்றுக்கிழமை எண்ணியபோது ஞாபகத்திற்கு வந்தது வேளச்சேரியில் இருந்து புறப்படும் மாடி ரயில். எப்போதும்  குடும்பத்தின் பார்த்தசாரதியாய் இருந்து  அலுத்ததால் ஒரு நாள் டிரைவர் வேலைக்கு விடுப்பு கொடுக்கலாம் என்ற என் முடிவு ஏக மனதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு மட்டும் அல்லாமல் நாட்டிற்கு எரிபொருள் சிக்கனம் செய்யலாம்  என்றும் ஒரு பொதுநல எண்ணம் எழுந்ததாலும்,   என்னுடைய வாகோன் ஆர் ( Wagon R, Wagon full of Romance) ரை நான்கு மணி நேரத்திற்கு பத்து ரூபாய் என்று நிறுத்தக்கட்டணம் கட்டி விசாலமான வேளச்சேரி கட்டண நிறுத்தத்தில் நிறுத்தி அடையாள சீட்டு பெற்று  குழந்தை குட்டிகளுடன் ஸ்டேஷன் படி ஏறினேன்.

அரை டிக்கெட்டுக்கு ஒரு ருபாய் சலுகை பெற்று போய் வர ஐந்து பேருக்கு ஐம்பத்தி எட்டு ரூபாய்க்கு பயணசீட்டு பெற்றுக் கொண்டு வெளியே  வருகையில் அடுத்து நின்ற ஜீன்ஸிடம், "எல்லாருமே நூறு ரூபா நோட்டு எடுத்துவந்தா எவ்வளவு பேருக்கு நான் மீதி கொடுக்கறது... இங்க என்ன மூட்டையிலா சில்லரை கட்டி வச்சிருக்கேன்..." என்று இந்தியாவின் தேசிய பிரச்சனையான சில்லரை பிரச்சனயை பயணச் சீட்டு வாங்குபவரிடம் விவரித்துக்கொண்டிருந்தார் பயணச் சீட்டு வழங்குபவர்.  நல்லவேளை அவர் வாயில் நான் அகப்படவில்லை.

உடம்பு முழுவதும் fair and lovely பூசி பிங்க் வண்ணத்தில் நின்றது ஒரு மின்சார ரயில்.  அந்த கால TNSC வங்கி விளம்பர மஞ்சள் பெட்டிகள் நினைவுக்கு வர  மகளிர் பெட்டியை விட்டு அடுத்த பெட்டியில் ஏறிக்கொண்டோம். கொஞ்சம் சின்ன பெட்டி. என்னுடைய கடைக்குட்டி பெட்டியின் வாயிலில் நின்று பயணம் செய்ய மிகவும் விருப்பப்பட்டது. நான் ஓரத்தில் நிற்க என் பக்கத்தில் கம்பியை பிடித்து நின்று பல்லை காண்பித்து சிரித்தபடியே வெளியே பார்த்துக் கொண்டு ஜாலியாக வந்தது. கொஞ்சம் நகர்ந்தவுடன் இரு வாலிபர்கள்  ஓடி வந்து ஒரு குதி குதித்து ஏறிக் கொண்டனர். நான் யாரும் வாலிபிகள் இருக்கிறார்களா  என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். எவரும் என் கண்களுக்கு சிக்கவில்லை.  Greenways Road என்ற நிறுத்தத்தை 'பசுமைவழி சாலை' என்று தமிழ்படுத்தி இருந்தது கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது. பெயர் சொல்லை இப்படி தமிழ் படுத்தலாமா என்று  தெரியவில்லை. ஒவ்வொரு நிறுத்ததிலும் சுமார் ஐந்து பத்து பேர் ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர்.  ஞாயிற்றுக்கிழமையினாலா அல்லது இந்த போக்குவரத்து இன்னும் சரியாக பயன்படுத்தபடவில்லையா என்று தெரியவில்லை. எல்லா நிறுத்தங்களிலும்  மேற்க்கூரையிலிருந்து  ஆறு அடிக்கு இரும்புக் குழாய் இறக்கி மின்விசிறி சுழல விட்டிருந்தார்கள். ஆனால் உட்காருவதர்க்குதான் யாரும் ஆள் இல்லை.

கபாலி கோயிலின் கோபுர தரிசனம் பெற்றுக்கொண்டே திருமயிலை நிறுத்தத்தை மிக மிக சௌகரியமாக வந்தடைந்தோம். நடந்தும் இறங்கலாம், மின்தூக்கி வழியாகவும் இறங்குவதற்கு வசதி இருந்தது. காலாற நடந்து கடை 'கன்னி'களை பார்த்துக் கொண்டே, தேரடி அருகில் இருந்த பஜ்ஜி கடையில் ஆளுக்கு ரெண்டு சாப்பிட்டு விட்டு ஐந்து ருபாய் மோதிரம் இரண்டு வாங்கி என் இரு பெண்களுக்கும் கொடுத்துவிட்டு சாமி பார்க்க உள்ளே சென்றோம். திருவிழா நடந்து கொண்டிருந்ததால் நல்ல கூட்டம் இருந்தது. பிள்ளையாரையும், முருகனையும் வழிபாட்டு, கற்பகம் கபாலி ஜோடியின் அருளையும் பெற்றுக் கொண்டு திரும்புகையில் பண்டு ஆபீஸ் மார்கெட்டில் வெள்ளீஸ்வரர் கோயில் அருகே, "வாங்கினா வாங்கு இல்லன்னா அப்பால போ.. சொம்மா படிய காமி மடிய காமின்னு கிட்டு" என்று விரட்டிய பெண்மணியிடம் வாய் பேசாமல் ஒரு படி மாவடு நாற்பது ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு நடையை கட்டினோம்.

மீண்டும் திருமயிலை ஸ்டேஷனில் வந்து வேளச்சேரி திரும்புகையில் ரயில் வருவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகியது. நடைமேடையை விளையாட்டு மேடையாக்கி கொண்டிருந்தாள் என் சின்னப்பெண். ஓடி விளையாடும் போது சுவர்களில் அவள் எங்காவது பட்டு விடப் போகிறாளே என்று என் மனம் பதைபதைத்தது. ஏனென்றால்  பச்சை கலர் பெயின்ட் அடித்த சுவர்களின் ஓரங்களில் எல்லாம் நன்றாக வெற்றிலைப் பாக்கு குட்கா போன்ற லாகிரி வஸ்துக்களை  நன்றாக குதைத்து துப்பி சிகப்பு வண்ணம் அடித்திருந்தார்கள் இந்நாட்டின் மன்னர்கள்.

அலுங்காமல் குலுங்காமல் வந்த ரயிலில் ஏறி மீண்டும் வேளச்சேரிக்கு பயணப்பட்டோம். தன்னுடைய கொண்டைஊசியை கீழே போட்டுவிட்ட என் பெரிய பெண் எடுக்க முனைகையில் அவள் உட்கார்ந்திருந்த சீட்டுக்கடியில் இருந்த குப்பையை பார்த்து " இந்த ரயிலுக்கெல்லாம் ஆயுத பூஜை கொண்டாட மாட்டாங்களா?" என்று என் அகமுடையாளை பார்த்து கேட்ட  என் கேள்வியை ஆரத்தழுவி உட்கார்ந்திருந்த ஒரு 24:22 ஜோடி ரசித்து சிரித்தது.

இந்த கோடை காலத்திற்கு எனக்கு இயற்கை தரும் பரிசாக முகத்தில் முட்டிற்று அந்த இளவேனில் காற்று. அக்காற்றை கிழித்து சொற்ப பயணிகளே இருந்த அந்த ரயில் "தடக் தடக்" என்று சென்றபோது மேலே வானிலிருந்து சிரித்த அந்த முழு வெள்ளை நிலவு மனதை கொள்ளை கொண்டு போயிற்று. ஆகா! ஏகாந்த நிலவும், முழு உடம்பையும் ஜில்லென குளிப்பாட்டி தலை கோதிய மென்மையான காற்றும், கூட்டமே இல்லாத ரயிலின் வாயிற்படியில் குழந்தைகள், பெண்டாட்டியுடன்  குதூகலமான பயணமும், அவ்வப்போது "கூ...கூ..." என்று ஆனந்த ராகம் பாடிய மின்சார குயிலாகிய ரயிலும் இரவு வெகு நேரம் வரை நினைவிலிருந்து நீங்க மறுத்தது.

"அப்பா... அடுத்த வாரமும் போலாமா?" என்று கேட்டார்கள் என் செல்ல சிங்கார சின்ன சீமாட்டிகள் இருவரும்.

Friday, March 26, 2010

வெள்ளை மாளிகை பேனாக்கள்

இணையத்தில் உலா வந்தபோது கீழே கண்ட வீடியோவை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அமெரிக்க ஜனாதிபதிகள் எந்த ஒரு முக்கியமான ஒப்பந்ததிலோ, திட்டத்திலோ, அறிக்கைகளிலோ கையெழுத்திட குறைந்தது சுமார் இருபது பேனாக்களை மேஜையில் அடுக்கி அதில் ஒவ்வொன்றாக எடுத்து ஒப்பம் இடுகிறார்கள். இதைப் பற்றி வெள்ளை மாளிகை காரியதரிசி லிஸா பிரௌன் நம்மிடம்(?) தெரிவிக்கையில்...



All the President's Pens from White House on Vimeo.

**
இதையொட்டியெழுந்த  சில பேனா சிந்தனைகள்.....

ஐந்தாம் வேதமாக போற்றப்படும் மஹாபாரதத்தை எழுதிக் கொடுக்க கஜமுகனை பணித்தார் வேத வியாஸர். தான் எழுதும் வேகத்திற்கு சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டு ஒரு பக்க தந்தத்தை உடைத்து எழுத்தாணி ஆக்கிக்கொண்டு ஒரு உன்னதமான இதிகாசத்தை உலகிற்கு அளித்தார்கள்.

**

நமது தமிழ்நாடு அரசாங்கத்தில் மேலதிகாரிகள் பச்சை வண்ண மசியில் கையெழுத்திட்டு தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்துவார்கள். கசட்டேட் ஆபீசர்கள் (Gazetted Officers) இந்த பச்சை வண்ண எழுதுகோலால் கையொப்பம் இடுவார்கள். ஐம்பது ரூபாய் முதல் ஐம்பது 'எவ்வளவோ' வரை அந்தப் பேனா தனது வேலையை கச்சிதமாக செய்து முடிக்கிறது.

**

ஐந்தாம் வகுப்பில்தான் பேனா உபயோகிக்க நான் அரிச்சுவடி முதல் படித்த பள்ளியில் அனுமதித்தார்கள். மசிப் பேனாவில் எழுதினால் தான் கையெழுத்து அழகாக வரும் என்று அவர்கள் கருதியதால் அனைவரையும் மசிப் பேனாவினால் எழுதச்சொன்னார்கள். தலையெழுத்து நன்றாக இருக்க எந்த பேனா என்று இப்போதும் எவருக்கும் தெரியவில்லை. வெள்ளை சட்டையில் பாக்கெட்டின் கீழிருந்து மேல் வரை நீலநிற மசிக்குட்டைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கும். மதியம் தயிர் சாதம் சாப்பிடும்போது விரலிடுக்குகளில் இருக்கும் நீலம் சாததிலும் கலந்து நீல தயிர் சாதம் சாப்பிட்டிருக்கிறோம். ஆங்கில பாடம் போதித்த ஆரோக்கியசாமி சாரின் இருதயத்திலிருந்து குருதி வழிந்தது போல அவருடைய சிகப்பு மசிப் பேனாவிலிருந்து ஒழுகிய திட்டுக்கள் சட்டை மேல் இருக்கும். என்னைப்போன்றவர்களுக்கு ஆங்கிலம் கற்ப்பித்த பலன் அவருக்கு நெஞ்சின் மேல் கிடைத்தது என்று எனக்கு இப்போது புரிகிறது. ஆண்டுப் பரீட்சை முடிந்தப்பின் பள்ளிக்கு வெளியே நின்று கொண்டு பேனாவில் மீதம் இருக்கும் மசி முழுவதையும் அடுத்தவரின் வெள்ளை சட்டையில் உதறி அடித்து இன்புறுவர். சிலர் பள்ளி முக்கில் இருக்கும் தாத்தா கடையில் காசு கொடுத்து புது பிரில் இங்க் பாட்டில் வாங்கி வந்து பேனாவில் ஊற்றி ஊற்றி அடிப்பார்கள். அன்று அவருக்கு இங்க் விற்பனையால் அவருடைய கடை அந்த வருடத்தின் அதிக பட்ச வருமானத்தை ஈட்டி  அந்த கணக்காண்டின் லாபத்தை  சம்பாதிக்கும். அந்த வருடம் பஞ்சு புத்தம் புதிய மசிப் புட்டியை வாங்கி வந்து அப்படியே சட்டென்று திறந்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வது போல எனக்கு செய்தான்.

**

ஷங்கர் தனது முதல்வனில் 'கொஞ்ச நேரம் ஒதுக்கி... கூந்தல் ஒதுக்கி குறிப்பு எழுதுங்கள் எந்தன் தோளில்...' என்று கெஞ்சி கொஞ்சிய மனிஷா கொய்ராலாவின் முதுகில் அர்ஜுனை எழுதவைத்து அரச காலத்து பேனாவைக் காட்டினார். இறகு கொண்டு எழுதும் பேனா அது.

**

வங்கிகளும் இன்னபிற பொது மக்கள் கூடும் , பேனா தேடும் இடங்களிலும் ஒரு ரூபாய் பந்து முனை ரீபில் பேனாவைக் கிரில் ஜன்னலில்  கயிறு கொண்டு அதைக் கட்டிப் போட்டு  பத்திரப்படுத்தும் இடங்களும் என் நினைவுகளில் வந்து கிறுக்கிச் சென்றது.

Tuesday, March 23, 2010

ஆஞ்ஜூ கோயில்

சென்ற சனிக்கிழமையன்று என் அம்மாவுடன் நங்கைநல்லூர்  ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றிருந்தேன். கோயிலை நெருங்குகையில் பள்ளி பயிலும் இரண்டு சிறார்கள்  ஹெர்குலஸ்  சைக்கிள்களை ஒன்றோடு ஒன்று  முட்டி முட்டி ஒட்டியவண்ணம் ரோடை அளந்து  கொண்டிருந்தனர். எட்டூருக்கு கேட்கும்படி ஒரே 'கல கல'வென சிரிப்பு. ஒன்பது அல்லது பத்தாம் வகுப்பு படிக்கலாம். சிகப்பு டி.ஷர்ட் போட்ட பையன்  வெள்ளை அணிந்திருந்தவனிடம்  "டேய். ஆஞ்ஜூ கோயிலுக்கு போலாண்டா...ஏழு  மணிக்கு சம்பா சாதம் கிடைக்கும்" என்று  பாய்ஸ் பட விஷயாதி செந்தில் போல  கோயிலுக்கு அழைத்தான். கொஞ்சம் யோசித்ததில், நடராஜன் நட்டு ஆன மாதிரி, நாராயணன் நாணி ஆன மாதிரி, பார்சாரதி பாச்சூ ஆன மாதிரி, கற்பகம் கப்பு ஆன மாதிரி, வெங்கடாஜலபதி வெங்கி ஆன மாதிரி ஆஞ்சநேயர் ஆஞ்ஜூ ஆகியிருந்தார் அவர்களிடம். யாருக்கும் முழு பெயர் சொல்லி கூப்பிடுவதற்க்கு முடியவில்லை. நல்ல பெயர் எது வைத்தாலும் ஜில்லு, சிண்டு, பிண்டு என்று செல்லப்பெயர் வைத்து கூப்பிடும்போது பக்கத்துக்கு வீட்டு நாய்க்குட்டியும் சேர்ந்து ஓடி வருகிறது. சோம்பலா அல்லது பெயர் சொல்லக் கூட நேரத்தை சிக்கனப்படுத்த அண்டம் அவ்வளவு வேகமாக இயங்குகிறதா தெரியவில்லை.

சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு   விசேஷமான நாள் ஆகையால் கொஞ்சம் கொஞ்சமாக மாலையில் பக்தர் கூட்டம் அதிகரித்துக்கொண்டு இருந்தது. நிறைய பேர் நடந்து வருவது தெரிந்தாலும் தன் பல்சரை பிள்ளையை கையில் தூக்கிக் கொண்டு அனுமார் தரிசனம் செய்ய வரும் ஒரு பக்தர் காலில் ஏற்றி இடுப்பில் இடித்து ஒரு டி.வி.எஸ். 50-க்கும் சைக்கிளுக்கும் இடையில் சொருகினார் ஒருவர்.  திரும்பி பார்த்தால் அடிபட்டவர் ஏதோவது சொல்லக்கூடும் என்பதற்காக கோயில் கோபுரத்தை அண்ணாந்து நோக்கி இரு கன்னத்திலும் போட்டுக்கொண்டு ஆட்காட்டி விரலை மடக்கி முத்தம் வைத்துக்கொண்டே சென்றார். அடிபட்டவரின் திருமதி அப்படியே எரித்து விடுவது போல ஒரு பார்வை செலுத்தினார்.

தன்னுடைய புதிய ரீபோக் காலணிகள் களவு போகமால் இருப்பதற்காக பல வண்ண   வகையறா மிதியடிகள் இருக்கும் கூட்டத்தில் கலந்து வைத்து அதற்க்கு மேல் தன் கூட வந்த சிநேகிதரின் ஹவாய் செருப்பை வைத்து மறைத்து அந்த சுவரோரம் இருக்கும்  அலமாரியில் குனிந்து கடைசி வரிசையில் வைத்துக்கொண்டிருந்தார் ஒரு கனவான். மேல் வரிசையில் இருந்து தனது பாதரட்சைகளை எடுக்கும் இளைஞர் ஒருவர் கீழே கர்மசிரத்தையாக செருப்பு மறைத்தலில் ஈடுபடும் கனவானின் தலையில் வைத்து அவரை பரதனாக்கினார். காலில் அணிவதற்கு இவ்வளவு காபந்து செய்துவிட்டு  மனதார அஞ்சநேயரை ரீபோக் செருப்பை காவல் காக்க வேண்டிக்கொண்டு வருவார்.

கோயிலுக்கு வந்தால்தான் நிறைய பேருக்கு அனைத்து லோகஷேமங்களையும் பிறரிடம் விசாரிக்க தோன்றும். "மாட்டுபொண் என்ன பண்றா..." என்று கேட்ட மாமியிடம்    "பாகர்க்காய் பிட்ளை செய்யச் சொன்னால், சாம்பார் வைக்கிறாள். காலங் கார்த்தால வாசல்ல கோலம் போடுடி என்றால் நாலு இழை இப்படி  அப்படி இழுத்துட்டு வந்துர்றாள். நாம்ப ஏதாவது  இவளை சொன்னால் அவனுக்கு இழுத்துக்கறது. நம்ப மேலே பாயறான்" என்று மாட்டுப்பொண்ணை  விமர்சித்துக்கொண்டே ராமரையும்  கன்னத்தில் போட்டுக்கொண்டாள்.  கலியுக மாமியார் புராணம் ராமர் கேட்பார் என்பதற்காக கூட மாமி இப்படி சன்னதி முன்னால் புலம்பி இருக்கலாம். மாமியாருடன் அயோத்தியில்  இருப்பதை விட காட்டில் இருப்பது மேல் என்று எண்ணித்தான் சீதை தன்னுடன் கானகம் வந்தாளோ என்று ராமரே சற்று யோசித்திருப்பார். 

"யாருப்பா அங்கே பின்னாலே இருக்கிரவங்கல்லாம் சாமி பார்க்க வேண்டாம்... நகருப்பா" என்று யாரும் யாரையும் அதட்டி உருட்டி மிரட்டாதபடி  32 அடி விஸ்வரூப மாருதியாக காட்சி அளித்தாலும் ஒருவர் முன் சென்று எட்டி முட்டி பார்த்தால் தான்   கும்பிட்ட பலன் போல தனது வியர்வையால்   நனைந்த முதுகை பின்னால் ஸ்வாமி பார்ப்பவர் முகத்தில் வைத்து உராய்ந்து அனுமன் தரிசனம் பெற்றார் ஒரு ஆறடி ஆஜானுபாகுவான ஒருத்தர். அடிப்ப்ரதக்ஷினம் செய்யும் பக்தைகள்/பக்தர்கள் நடு பிரகாரத்தில் சென்று, ஓடி ப்ரதக்ஷிணம் செய்யும் அன்பர்கள் வழியை மறைத்து 'ட்ராபிக் ஜாம்' செய்துகொண்டிருந்தார்கள்.  ஸ்வாமியின் கர்பக்கிரஹத்தின்   பின்புறம் சுவரில் தலையால் முட்டு குடுத்தாற்போல் ஒருவர் நின்று வாய்க்குள் மந்திரம் சொல்லிக் கொண்டு "இங்கே தொட்டு கும்பிட வேண்டாம்" மையும் மீறி ஜெபித்துக்கொண்டு இருந்தார்.  "வடக்கு நோக்கி நமஸ்கரிக்கவும்" என்று அம்புக்குறி போட்டு காண்பித்தும் அதற்க்கு நேர்மாறாய் திருமணம் ஆகாத இளைஞர் ஒருவர் தெற்கில் நிற்கும் ஒரு அழகான பெண்ணை பார்த்து நமஸ்கரித்தார். 

வேணுகோபாலன் சன்னதி அருகில் "தீர்த்தம்" வாங்கிகொண்டு "சடாரி" வைத்துக்கொண்டு வெளியே வருகையில் , ஒல்லியாக இருப்பவர்கள் ஒரு விரல் மட்டும் விட்டு ஒரு பொட்டு குங்குமம் மட்டும் எடுக்க பிரத்தியேகமாக அனுமார் கோயிலுக்கு என்று  தயாரிக்கப்பட்ட ஒரு எவர்சில்வர் கூடிலிருந்து ஒவ்வொரு விரலாக ஐந்து ஆறு விரல்கள் எடுத்துக் கொண்டு பக்கத்தில் வைத்திருந்த 2010 காலண்டர் பேப்பரில் வைத்து மடித்துக்கொண்டிருந்தார் ஒரு வயசாளி. ஒரு கையில் சம்பா சாதம் வாங்கிக்கொண்டு இன்னொரு கையிலும் குழந்தை போல கேட்ட ஒருவருக்கு "இது பிரசாதம், வீட்டுக்கெல்லாம் டிபன் மாதிரி வாங்கிட்டு போக முடியாது" என்று அன்பாக சிரித்துக்கொண்டே அனுப்பினார் மேல் சட்டை அணியாமல் கருப்பாக நெற்றி முழுக்க திருமண் தரித்தவர்.

வெளியே நின்றிருந்த  செக்யூரிட்டி "அந்தாண்ட போய் சாப்பிடுங்க... உள்ளே நிக்காதீங்க சார்... ஏம்மா காதில விழலை.. " என்று ஒவ்வொருவரையும் வெளியே வழியனுப்பி மிகவும் "அன்பான" குரலில் வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டிருந்தார். அப்படியும் சிலர் எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டே கருமமே கண்ணாக ஒரு அடி அசங்காமல் பிரசாதத்தை விழுங்கியபடி இருந்தனர். ஒரு ஐந்து வயது சிறுவன் வானத்தை காட்டி "நிலா  நிலா" என்று சொல்ல, அவனுடைய 'டி.வி அடிமை'  பாட்டி, "ஏய்.. டீலா நோ டீலா சொல்றான்" என்று தன் மகனிடம் பெருமையாக கூற, ஒரு முறை முறைத்தார் அந்த வெறுப்பான புத்திரன்.  

இத்தனை இடைஞ்சல்களிலும்  "புத்திர் பலம் யசோ தைரியம்....." சொல்லி அனுமாரும் நானும் ஒரு ஐந்து நிமிடங்கள் பார்த்துக்கொண்டோம்.  இவ்வளவும் காதில் விழாமல் கோயில் சென்றுவர இன்னும் கொஞ்சம் வருடங்கள்  ஆகலாம். இப்போதைக்கு முடியவில்லை. நான் காது செவிடாவதை சொல்லவில்லை. மனதை ஒருமுகப் படுத்துவதைதான் சொல்கிறேன். அது சரி அப்பவும்  இவ்வளவும் பேசாமல் யாராவது கோயிலுக்கு வருவார்களா?

Friday, March 19, 2010

உலகை புரட்டிபோடும் ஐடியாக்கள்- II

அறிவியல் தொடர் எழுதும் அபாயகரமான நோக்கம் எதுவும் இல்லை என்றாலும், தொட்டு விட்டதை தொடர்கிறேன்..... சென்ற பதிவில் சையின்டிபிக் அமெரிக்கன் சஞ்சிகை வெளியிட்டுள்ள உலகை புரட்டி போடும் ஐடியாக்களில் சிலவற்றை பார்த்தோம். மேலும் சில....

4. வெகு ஜன-வேக பஸ் போக்குவரத்து

உலக சரித்திரத்தில் முதன்முறையாக மனிதகுல நாகரீகத்தில் கிராமப்புறங்களில் வசிப்பதை வெறுத்து நகர்ப்புறங்களில் கூட்டம் அதிகரித்துவருகிறது. இத்தகைய மாற்றங்களினால் ஒரு ஐந்து கி.மீ தொலைவில் உள்ள அலுவலகத்துக்கு கூட காலையில் பல் தேய்த்து, குளித்து, டிபன் சாப்பிட்ட கையோடு கிளம்ப வேண்டியிருக்கிறது. என் நண்பரின் மனைவி காலை டிபன், தலை வாருதல், முகத்திற்கு குலாப் பன்னீர் தண்ணீர் தெளித்து துடைத்தல், கழுத்துக்கு காதுக்கு அணிகலன்களை பூட்டிக் கொள்ளுதல், உதட்டு சாயம் பூசுதல் என்று சகலவிதமான ஒப்பனைகளையும் காரிலேயே முடித்துக்கொண்டு அலுவலகத்திற்கு கீழிறங்குவார். இந்த வசதியில்லாதோர் பிரம்ம முஹூர்த்தத்திற்கு ஒரு மணி நேரம் முன்னர் எழுந்து வீட்டில் அனைத்தும் செய்து புறப்படவேண்டியிருக்கிறது. இவ்வளவும் செய்தாலும் ஏதாவது மாண்புமிகுக்கள் சாலையை பயன்படுத்த நேரிட்டால் நாம் நின்று வழிவிட்டு தாமதமாக சென்று 'சிடு சிடு' அதிகாரியிடம் 'வெடுக் வெடுக்' என்று வசவு வாங்க வேண்டியதாகிறது. இப்படி பல பிரச்சனைகளை சமாளிக்க 2001ம் வருடத்திலிருந்து கொலம்பியாவில் போகோட என்ற நகரத்தில் சில மாறுதல்களை செய்தார்கள். பஸ் பயணிகளுக்கு முன்னரே டிக்கெட் அளித்து ஒரு மூடிய அறை போல் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருக்க வைத்து, பஸ் வந்தவுடன் அதை திறந்து அதிலிருந்து நேராக பஸ்ஸில் ஏற்றிவிடப்பட்டார்கள். இதில் மற்றுமொரு சௌகரியம் என்னவென்றால் பேருந்தில் 'ஸ்லைடிங்' கதவுகள் வைத்து, ஒரே நேரத்தில் பலர் ஏறி இறங்கும் வண்ணம் செய்தார்கள். அத்தோடுகூட யானை ஏற்றம் குதிரை ஏற்றம் போல பேருந்தில் ஏறி இறங்குவதில் தாமதம் ஏற்படுவதால் பயணிகள் ஏறும் இடம் நேராக பஸ்ஸில் இருக்கைக்கு சமமான உயரத்தில் அமைத்தார்கள். சாலையில் தடையின்றி இந்த பேருந்துகள் செல்வதற்கு ஏதுவாக தனி வழி அமைத்து வேகமாக செல்ல வழிசெய்தார்கள். இதுவே இனி எந்த மெட்ரோபொலிட்டன் நகரத்திற்கும் ஏற்றது என்று பரிந்துரைசெய்யப்படுகிறது. கொலம்பியாவின் ட்ரான்ஸ்மிலினியோ பற்றிய ஒரு சுவாரசியமான காட்சி தொகுப்பு கீழே..



5. நெய்தல் நில பயிர்கள்

இந்த அண்டத்தில் நன்னீர் ஒரு புறம் குறைந்து வரும்போது அதிக ஜனப்பெருக்கத்தால் இன்னொரு புறம் உணவு உற்பத்தி அதிகமாக தேவைப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் அடிலைடு பல்கலைக்கழகத்தில் மரபணு பொறியியல் துறையில் பயிர்களின் இலைகள் உப்புத்தன்மையை சேகரிக்காமல் இருக்கச் செய்யவும், அந்த இலைகளை உதிர்க்காமல் இருக்கவும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஊரிலிருந்து வாங்கி வரும் முளைக்கீரை சென்னை கீரையை விட நன்றாக இருப்பதும் இதனால்தான். இந்த ஆராய்ச்சி வெற்றியடைந்தால் ஐந்திணைகளில் வயலும் வயல் சார்ந்த இடமாகிய மருதத்தில் மட்டும் பயிர் செய்த காலம் போய் நெய்தல் நிலத்திலும் நெற்சாகுபடி செய்யலாம்.

6. சட்டைப் பை துபாஷ்

சாக் சாப்ட்வேர்ஸ் என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு தானியங்கி மொழிபெயர்ப்பான் மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த மென்பொருளை அலைபேசியில் ஏற்றிக் கொள்ளலாம். தற்போது ஆங்கிலத்திலிருந்து அரபிக்கு மொழி பெயர்க்க இதை செயல்படுத்தியிருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரே சமயத்தில் இருவர் பேசிக்கொள்ளும் அளவிற்கு இந்த தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. இந்த புதிய வரவினால் சுற்றுலா துறை அதிக பயன்பெறும் என்று தெரிகிறது. தற்போது வரையறுக்கப்பட்ட சொற்களை மிகத்துல்லியமாக மொழிபெயர்க்கும் இந்த மேன்போருள் அடுத்த முறை நீங்கள் தென்னாப்பிரிக்கா சென்றால் ஸுலுவில் பேசும் ஆப்ரிக்க சுந்தரி என்ன பேசுகிறாள் என்று தெளிவாக உணரமுடியும்.

7. பெருநோயறிதல்


சொஸ்த்தபடுத்த முடியாத நோய்கள் உடம்பில் வளர்வதற்கு நெடுநாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பது உயிரியல் விதி. பல்வேறு விதமான கடினமான மூலக்கூறுகளின் தசாப்தங்கள் கடந்த இடைத்தாக்கத்தின் விளைவே இத்தகைய நோய்கள். ஒரு சாதாரண ஜுரத்திற்க்கே முதல் இரண்டு நாட்கள் கை கால் மட்டும் வலி கண்டு பிறகுதான் அந்த வைரஸ் தாக்குகிறது. சிக்கின்குனியா போன்ற நோய்களில் ஜுரம் விட்டும் பல மாதங்கள் மூட்டு வலி தொடர்கிறது. பயோமார்க்கர் என்பது வெகு காலமாக கடைபிடித்துவரும் ஒரு செயல்முறை. தேக ஆரோக்கியமுள்ள ஆயிரம்பேரின் ரத்த மாதிரிகளை அடித்தளமாக எடுத்து சேமித்து வைத்துக்கொண்டு, நீரழிவு, மார்பக புற்றுநோய் போன்று நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களின் மாதிரிகளையும் ஒன்று திரட்டி, இரண்டையும் ஒப்புநோக்குகையில் கிடைக்கும் முடிவுகளை கொண்டு ஒரு இறுதி முடிவிற்கு வருவதற்கு ஆராச்சியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இத்திசையில் ஆராய்ச்சிகள் பெருமளவில் நடைபெறுகிறது, "உயிரியலில் இயற்கையின் பாதையை ஒரு கூற்றாக கணிக்கமுடியாமல் போனாலும் சர்வ நிச்சயமாக ஒருநாள் நோயின் அறிகுறியை கண்டு பிடிப்போம்" என்று எக்ஸாக்ட் சயின்ஸ்ஸஸ்ன் மூத்த மருத்துவ அதிகாரி பாரி பெர்ஜெர் கூறுகிறார்.

இந்த பயோமார்க்கரை பயன்படுத்தி பெருநோய் முன்எச்சரிக்கையை மனித இனம் கண்டுபிடித்துவிட்டால், பூமாதேவி எவ்விதம் இப்புவி பாரம் பொறுப்பாள்?

8. உடனடி இரத்த கட்டு

விபத்துகளின் பொது நிறைய மரணங்கள் ரத்தம் அதிகம், உடனே வெளியேறுவதால் நடைபெறுகிறது. ட்ராமா சொலுயூஷன்ஸ் என்ற மேரிலேன்ட் பல்கலைக்கழக உதவி பெற்ற நிறுவனம் 'ஸின்தெடிக் ஹைட்ரோஜெல்' என்ற ஒன்றை தயாரித்திருக்கிறார்கள். இது உடம்பிற்கு 'பைபிரின்'( fibrin )னை உடனே தயாரிக்க கட்டளையிட்டு இரத்த போக்கை நிறுத்துகிறது. இதுவும் முக்கியமான ஒரு மாற்றத்தை கொண்டுவரும் ஐடியாவாக பட்டியலில் இடம்பெறுகிறது.

9. பாக்டீரியா டூத்பேஸ்ட்



Top: Rat teeth colonized with normal S. mutans. Bottom: Rat teeth colonized with modified non-acid-producing strain. (photo by Jeff Hillman)

வாயில் உள்ள ஸ்ட்ர்ப்டோகோக்கஸ் ம்யூடன்ஸ்( Streptococcus mutans ) என்ற பாக்டீரியா தான் உணவில் உள்ள சர்க்கரையை பற்களில் உள்ள எனாமல் அழிக்கும் லாக்டிக் ஆசிட்டாக மாற்றுகிறது. ப்ளோரிடாவை தலைமையிடமாக கொண்ட ஓராஜெனிக்ஸ் ( Oragenics ) என்ற நிறுவனம் ஒரு புதிய பாக்டீரியாவை மரபணு மாற்று என்ஜினீயரிங் மூலமாக தயாரித்திருக்கிறார்கள். இது சர்க்கரையை மிக குறைந்த அளவு ஆல்கஹாலாக மாற்றுகிறது. இந்த சிகிச்சை தற்போது மருத்துவ பரிசோதனைகளில் உள்ளது. இதனால் முற்றிலுமாக ஸ்.ம்யூடன்ஸ் அழிக்கப்படுகிறது.

என்பது வயது ஆன பின்னும் முறுக்கும் சீடையும் நொறுக்கும் தாத்தாக்களையும், அரைக்கட்டு கரும்பை பல்லால் கடித்து தின்னும் பாட்டியையும் எதிர்காலத்தில் இந்த சமூகம் காண நேர்ந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை.


மிச்சமிருப்பவை என் சிற்றறிவுக்கு எட்டினாலும் இதை ஒரு பெரிய அறிவியல் தொடராக தொடர்ந்தால் என் வாசகர் (இருக்கா என்ன?) வட்டம் அதை தாங்காது என்பதால் இத்தோடு இது முற்றும்.

Wednesday, March 17, 2010

உலகை புரட்டிபோடும் ஐடியாக்கள்- I

சமீபத்திய சையின்டிபிக் அமெரிக்கன் சஞ்சிகை இருபது உலகை புரட்டிபோடும், மாற்றி அமைக்கும் தன்மையுள்ள ஐடியாக்களை பட்டியலிட்டுள்ளது. அதில் சில....

1. சூரியசக்தித்    தகடு

சூரியசக்தித் தகடு மூலம் மின்சாரம் தயாரித்து பயன் படுத்துவது. இது முன்னரே சகலருக்கும் அறிமுகமான தொழில்நுட்பமானாலும் இதை பயன் படுத்துவதில் சில பொருளாதார சிக்கல்கள் இருக்கின்றன. இந்த தகடுகளை விலை கொடுத்து வாங்குவதற்கு சொத்தை எழுதிக் கேட்கும் அளவிற்கு இருப்பதால் இது தலை எடுப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறது. அதனால் யு.எஸ்ஸில் 4000 வாடிக்கையாளர்கள் கொண்ட சோலார் சிட்டி என்ற நிறுவனம் இந்த சூரிய தகடுகளை இலவசமாக கொடுத்து மின்சாரத்திற்கு பணம் வசூலிக்கிறது. இந்த முறை தகடு விற்பவர், பயன்பெறும் வாடிக்கையாளர் இருவருக்கும் மிகவும் லாபகரமாக இருப்பதாக சோலார் சிட்டி தெரிவிக்கிறது. சன் ரன் என்ற அமெரிக்க நிறுவனமும் இதே போன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. இது நன்றாக செல்லுபடியானால் இன்னும் கொஞ்ச காலத்தில் எல்லோர் வீட்டு மாடியிலும் செயற்கைக்கோள் தட்டு உள்ளது போன்று சூரியத் தகடுகளும் வரலாம். மின்சாரம் இல்லை என்று பாடாவதியான டி.என்.இ.பி அலுவலகத்திற்கு யாருமே எடுக்காத தொலைபேசியை அழைக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகாமல் இருக்கலாம். கரண்ட் ஆபிஸிலிருந்து வந்து போஸ்ட் ஏறி பியூஸ் போட்டு தலைசொரிபவருக்கு சில்லரை கொடுக்கும் நிலை இல்லாமல் போவதற்கு சூரிய பகவானை பொங்கலன்று மட்டும் அல்லாமல் என்றென்றும் வணங்கும் நிலை வரலாம்.

2. எனர்ஜி மீட்டர்ஸ்

மக்கள் தங்களுடைய சாதனங்களிளிருந்து எவ்வளவு சக்தியை உபயோகிக்கிறார்கள் என்று நிமிடத்திற்கு நிமிடம் அந்தந்த சாதனங்களிலேயே மீட்டர்(நம் உள்ளூர் ஆட்டோ மீட்டர் மாதிரி இல்லாமல்) போட்டு காண்பித்துக் கொண்டே இருந்தால் ஐந்து முதல் பதினைந்து சதவிகிதம் வரை சக்தி வீணாவது குறைகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் உள்ளூர்  தொழில்நுட்ப ஆசாமிகளுடன் சேர்ந்து இந்த சக்தி உபயோக கணக்குகளை இணையத்தில் ஏற்றி மக்கள் ஒரு விழிப்புணர்வோடு இருக்க உதவி புரிய வருகின்றன.

3.மின்சார காற்று

நாம் வாழும் இப்புவியிலிருந்து பத்து கி.,மீக்கு மேல் ஐம்பது கி.மீக்குள் இருப்பது ஸ்ட்ரடோஸ்பியர். இந்த இடத்தில் ஓயாமல் நல்ல வேகத்தில் காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. இந்த வெயிலுக்கு அங்கே போய் உட்கார்ந்தால் நன்றாக இருக்கும் என்று நாம் சிந்திக்கும் இவ்வேளையில் லோகஷேமதிற்காக சிந்தித்த சில புண்ணியவான்கள் அங்கு அடிக்கும் காற்றிலிருந்து மின்சாரம் தயாரிப்பது பற்றி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள். இப்படி தயாரிக்கப்படும் மின்சாரமானது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் தேவையைவிட நூறு மடங்கு அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கலிபோர்னியாவின் ஸ்கை வின்ட்பவர் என்ற நிறுவனம் ராட்சத கோபுரங்களை நிறுவப்போகும் வேளையில், இத்தாலியின் கைட்ஜென் என்ற நிறுவனம் மிக உயரப் பறக்கும் பட்டம் (மேலே படத்தில் இருப்பது அதுவே) மூலமாக ஸ்ட்ரடோஸ்பியர் காற்றிலிருந்து கரண்ட் உருவ முயற்சி செய்கிறார்கள்.
(ஐடியாக்கள் தொடரும்)

கரன்ஸி ( மாயா Vs மாலை )


மேலேயிருக்கும் பெண் அணிந்த மாலை (மாலை மட்டும், தயவு செய்து மற்றவைகளை உற்று நோக்காதீர்கள். மாயாவதி படத்தை இங்கே பிரசுரிக்க விருப்பம் இல்லாததால் இந்த இளமையான படம். பெண் ரசிகைகள்/வாசகிகள்  அனுசரித்துக்கொள்ளவும்)  போல் இருந்தால் ஒன்றும்  பிரச்சினையில்லை.

கன்ஷிராமின் பிறந்த நாளைக்கு உத்திரபிரதேச முதல்வர் மாயாவதிக்கு அவரது அபிமானிகளால் மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது மக்களவையில் கடும் அமளிக்குள்ளாகியது. பொதுச்சேவையில்(?) இருப்பவர்களுக்கு மாலை அணிவிப்பது ஒன்றும் நம் நாட்டில் புதிதல்ல. ஆனால் இந்த மாலை பூவினாலோ, புஷ்பத்தினாலோ அல்ல. இரண்டும் ஒன்றுதான் என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்கிறது. ஒரு ரைமிங்காக இருக்கட்டுமே. புத்தம் புது ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை சரமாகத் தொடுத்து ஐந்து ஆட்கள் சர்வ ஜாக்கிரதையாக மேலே தூக்கி பிடித்து அந்தம்மாவை உள்ளே நுழைந்து வெளியே நோக்கி கையை ஆட்ட சொல்கிறார்கள். இந்த டிரென்ட் தொடர்ந்தால் "பூ கட்டுவது" போன்று பணம் கட்ட கூட கட்சிகளுக்கு ஆள் தேவைப்படலாம். இதன் மூலம் நாட்டில் ஒரு புது வேலை வாய்ப்பு உருவாக்கபடுவதை நினைத்தால் இவர்களைக் கண்டு நம் கண்கள் பனித்து நெஞ்சு நனையும் நிலை உருவாகிறது. தோள் மேல் போட்டால் தான் மாலை என்ற நிலை மாறி தோளுக்கு மேலே தூக்கி பிடிக்கும்படி ஆனது தான் இந்த மாதிரி செயல்களின் பெரிய நகைச்சுவை. இவ்வளோ பெரிய மாலையை தோளில் ஒரே போடாக போட்டால் அவர்களுக்கு ஏதேனும் அங்கஹீனம் ஏற்பட்டு அசம்பாவிதம் நடந்து விட்டால் அப்புறம் அந்த மாண்புமிகுக்களை கீழே கிடத்தி மாலை போடும்படி சந்தர்ப்பம் அமைந்துவிடும் என்றஞ்சி இவ்வாறு ஏற்பாடு செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆட்டை அய்யனாரிடம் அழைத்துச் செல்லும்போது கூட மாலையிட்டு மஞ்சளிட்டுதான் கொண்டு செல்கிறார்கள். அங்கே ஆடு காவு வாங்கப்படுகிறது இங்கே நம்மை தலைவர்கள் ஆடாக பலியிட்டு விடக்கூடாது என்பதற்காக அடிப்பொடிகள்/அல்லக்கைகள் இதுபோன்ற அசிங்கங்களை அரங்கேற்றுகிறார்கள். இவ்வளவுதான் வித்தியாசம். இந்தியாவின் எந்த மாநிலம் ஆனாலும் இந்த பிறந்தநாள் கொண்டாடுவது ஒரு பண்ட் ரைஸிங் (Fund Raising) உற்சவமாகிவிட்டது. ஆடு, கோழி போன்றவைகளை கொடுப்பது, வீர வேல், வாள் போன்ற ஆயுதங்களை பரிசளிப்பது,அலகு குத்தி காவடி எடுப்பது (தலைவர் பகுத்தறிவுவாதியாக இருந்தால் கூட) என்று ஆரம்பித்த இந்த பிறந்தநாள் திருவிழாக்கள் இன்று ஒரு மொய் விருந்து கணக்காக மாறியது தான் இந்த நாட்டின் அவலம். பச்சை,சிவப்பு, கருப்பு என்று பணத்தை பல நிறங்களில் வைத்திருப்பவர்கள் அதை வெள்ளை ஆக்குகிறார்கள். இந்த பணநாயக நாட்டில் இது ஒன்றும் செய்யக்கூடாத செயல் அல்ல என்று அரசியல் 'அறிஞர்கள்' சமாதானம் பேசுவார்கள்.

ஆனால் நம்மாட்களுக்கும்  மாலை போடுவது என்பது ஒரு ஜாலியான பொழுதுபோக்கு விளையாட்டு. பயந்து பயபக்தியோடு தரையோடு தரையாக தவழ்ந்து சென்று மரியாதையுடன் இச்செயலில் ஈடுபடுவோரே நாளை அதே தலைவனுக்கு பிஞ்ச செருப்பு மாலை போட்டு தனது எதிர்ப்பை தெரிவிப்பார்கள். கவுண்டமணியின் "அரசியல்ல இதல்லாம் சகஜமப்பா..." என்ற சூரியன் பட வசனம்தான் நமக்கு காதில் கேட்கிறது. மதுகோடா போன்ற ஆட்களுக்கு மாயாவதி போன்றோரின் தனக்கு மட்டும் அல்லாமல் தன் தலைவரின் பிறந்தநாள் கொண்டாடி சம்பாதிக்கும் சாமர்த்தியம் இல்லாததால் மாட்டிக்கொள்கிறார்கள்.

முற்காலத்தில் வாரிசு இல்லாத தேசத்தில் யானையிடம் மாலை கொடுத்து யார் கழுத்தில் விழுகிறதோ அவர்களை  அரசாள சொல்வார்கள். இப்போது அந்த கவலை இல்லை, ஏனென்றால் எல்லோருக்கும் (அரசியல்) வாரிசு இருக்கிறார்கள்.  ஆனால் கழுத்தில்  மாலை விழுவது மட்டும் இன்னும் நிற்கவில்லை. யானைடமிருந்து அல்ல. உலக சரித்திரத்தில் இந்த அரசியல்வியாதிகள் செய்வது போல யாரேனும் செய்தார்களா என்று தெரியவில்லை. என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் "எனக்கு யாராவது இந்த மாதிரி மாலை போட்டார்கள் என்றால் உங்க எல்லோருக்கும் பெரிய கும்பிடு போட்டுவிட்டு எங்காவது கண் காணாத இடத்துக்கு போய் நிம்மதியா இருப்பேன்" என்று அங்கலாய்த்தார்.

என்னுடைய பிறந்தநாள் ஆகஸ்ட் பதினாறாம் தேதி வருகிறது. நமது இந்தியாவின் சுதந்திரதினத்திற்கு அடுத்த நாள். மிகவும் சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ள கூடிய தினம் அது.அல்லது உங்கள் பி.டி.ஏ, அலைபேசி, ஷேட்டுயுலர், கணினி போன்றவற்றில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அன்று யாராவது எனக்கு 'ஸ்வர்ண மாலை' போடுவார்களா என்று வழிமேல் விழிவைத்து காத்திருப்பேன். அட்வான்ஸ் நன்றிகள்.

Sunday, March 14, 2010

வீட்டைத் தாண்டி வருவாயா










நேற்று இரண்டாம் ஆட்டம் சத்யத்தில் வி.தா.வருவாயவுக்கு நான் குடும்பசகிதம் சென்றிருந்தபோது குஷ்பூவும் தன் நண்பிகளுடன் வந்திருந்தார். "ஏ குஷ்பூ...", "குஷ்பூ பாருங்க அங்க ...", "ஐ குஸ்பூ..." என்ற பலவித ஆச்சரிய  வாசகங்கள் தன்னை சூழ வலம்  வந்த குஷ்பூ, வேலைப்பாடுகள் நிறைந்த ஜாக்கெட்டில் ஜெயா டி.வி யின் ஜாக்பாட்டில்  வருவதுபோலின்றி வெள்ளை சுடிதாரில் வந்திருந்தார். அவருடைய ரோ 'C' என்னுடையது 'I', ஏணி வைத்தாலும் எட்டாது. ரோ மாறியதில் எனக்கு சற்று வருத்தம்தான். நாம் குஷ்பூ பார்க்க வரவில்லையென்றும் படம் பார்க்கத் தான் வந்தோம் என்றும்  எனதருமை தர்மபத்தினி  செல்லமாக(?) பின் தலையில் தட்டி உணர்த்தினார்.

வீட்டைத் தாண்டி வருவாயா என்பதின் கவித்துவமான தலைப்பு தான்  விண்ணைத்  தாண்டி வருவாயா. பொறியியல் முடித்து Film Maker ஆகத்துடிக்கும் கார்த்திக். எம். சி. ஏ படித்து போலாரிஸ் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஜெஸ்ஸி. கார்த்திக் வீர வேளாளர், ஜெஸ்ஸி கேரள கிறிஸ்டியன். ஜெஸ்ஸியின் வீட்டில் குடியிருக்கும் கார்த்திக்கும், மாடி போர்ஷனில் வசிக்கும் ஜெஸ்ஸிக்கும் மலர்ந்த காதல், ஜெஸ்ஸியின் ஆறடி மூன்றங்குல அப்பாவின் சம்மதத்தோடு கல்யாணம் நடக்குமா அல்லது காதல் படுக்குமா என்பதுதான் கதை. கார்த்திக்காக அடக்கமான சிம்பு, ஜெஸ்ஸியாக அமைதியான த்ரிஷா. ஏனோ த்ரிஷா முகத்தில் அத்தனை மலர்ச்சி இல்லை.

படத்திலும் நிஜத்திலும் த்ரிஷா சிம்புவைவிட வயதில் பெரியவர் போலத்தான் இருக்கிறார். தன் தங்கை "அவ மூணு வருஷம் பி.எஸ்.ஸி மேத்ஸ் படிச்சிட்டு எம்.சி.ஏ, அதனால உன்னைவிட  ஒரு வயசு கூட.... உனக்கு 22  அவளுக்கு 23 " என்று சொல்லும் போதும், "உங்கப்பா உனக்கு 50 வயசு ஆகும்போது சம்மதிப்பாரா.. அப்ப எனக்கு 49 ஆகும்" என்று த்ரிஷாவிடம் சீரும் போதும், ரயிலில் தன்னை கிஸ் செய்த சிம்புவை கோபிக்கும் த்ரிஷாவிடம் "எனக்கு 80 வயசானாலும் இப்படி தான், அப்ப உனக்கு 81 இருக்கும்" என்று சொல்லும் போதும் சிம்புவிடம் ஓரளவாவது கௌதம் வாசுதேவ் மேனன் வேலை வாங்கியிருப்பது தெரிகிறது. 

"கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன் " என்று கை வித்தை செய்து வந்த சிம்புவை மிகவும் அடக்கமாக,ஆரவாரம் இல்லாத கல்லூரி முடித்த இளைஞனாக காட்ட கௌ.வா.மேனன் எடுத்திருக்கும் முயற்சிகள் அபாரமானது. இருந்தாலும் சிம்பு கொஞ்சம் கடித்து கடித்து பேசுவதை குறைத்தால் நன்றாக இருக்கும். படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே சேலை கட்டி சோலையாக வரும் த்ரிஷா மாடி ஏறும் போது சிம்பு தன்னை பறிகொடுத்து பாடும் "ஹோசோனா..." பாட்டில் ரஹ்மானின் இளமை கொடிகட்டி பறக்கிறது. கலக்கல். சிம்பு தலையில் இருக்கும் தொப்பியை மேல் நோக்கி வீச அது மேலேயிருந்த லாங் ஷாட் காமராவை  மூட அமர்க்களமான சினிமேடோகிராபியின் நாயகன் மனோஜ் பரமஹம்சா.கேரள நீர் நிலைகளிலும், அயல் நாட்டு பாடல் காட்சிகளிலும் காமராவில் அனாயாசமாக படம் பிடித்து புகுந்து விளையாடியிருக்கிறார். கௌ.வா.மேனனின் ரிச்னெஸ் காட்சிக்கு காட்சி 'பளிச்' என்று தெரிகிறது.  

மாடியில் இருக்கும் த்ரிஷாவின் கவனத்தை ஈர்க்க வாசல் கிரில் கேட்டின் தாழ்ப்பாளை  'டிங் டிங்' என்று தட்டி லேசாக தலை தூக்கி பார்க்கும் போதும், வீட்டு வாசலில் கூடைப் பந்து ஆடும் போது தன்னை நெருங்கி மாடி ஏறும் த்ரிஷாவை ஏக்க லுக் விடும் போதும், மாடியில் துணி காய போட போகும் தானும்  எதேச்சையாக மாடி செல்வது போல் சென்று த்ரிஷாவை பார்க்கும் போதும், சிம்பு விடும் 'ஜொள்' தியேட்டரை நனைக்கிறது. சிம்புவுடன் 'காக்க காக்க" காமராமென் கணேஷ் என்று வரும் கணேஷ் ஜனார்தனதின் குரலிலேயே நகைச்சுவை ததும்புகிறது. த்ரிஷாவின் கல்யாணத்திற்கு ஆலப்புழா சர்ச்க்கு செல்லும் இருவரும் யாரும் பார்த்துவிடாமல் இருக்க வேண்டும் என்று தவிக்கும் போது, "தம்பி ... வேணாண்டா... போயிறலாம்...போட்டு பின்னிருவானுங்க..." என்று கரகர குரலில் கலக்குகிறார். 

"ஊர்ல இவ்ளோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய பார்க்கணும்" என்று சிம்புவும், கேரளாவில் த்ரிஷாவின் உறவினர்களிடம் சண்டையிட்டு  மாட்டிக் கொண்டு  போலீஸ் ஸ்டேஷன் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் போது கணேஷும் "இவ்ளோ பொண்ணுங்க இருக்கும் போது நீ ஏன் கார்த்தி ஜெஸ்ஸிய லவ் பண்ணனும்" , "ஊர்ல இவ்ளோ பொண்ணுங்க இருக்கும் போது நீ ஏன் என்னை லவ் பண்ணனும்" என்று த்ரிஷா கேட்கும் இடங்களும் அருமை அருமை. ஒவ்வொரு முறையும்  த்ரிஷா தன்னை திரும்பி பார்ப்பார் என்பதை சிம்பு சொல்லும் காட்சிகளும், அதிலும் ஆலப்புழா சர்ச்சில் "இன்னும் பத்து எண்ணி முடிப்பதற்க்குள் ஜெஸ்ஸி என்னை திரும்பி பார்ப்பா.." என்று சிம்பு சொல்ல நான்கு எண்ணி முடிப்பதற்குள் த்ரிஷா பார்பதை மிகவும் ஆர்வத்துடன் நம்மையும் பார்க்க வைக்கிறார் கௌ.வா.மேனன்.

அனைத்து பாடல்களிலும் ரஹ்மானின் இளமை முத்திரை  தெரிகிறது. ஆரோமலே பாடலில் சிம்பு பிலிம் மேக்கர் ஆகி விடுகிறார். மன்னிப்பாயா பாடலில் த்ரிஷா வீட்டு பின்புற கால்வாயில் அந்த இருட்டில், பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில், "தொலைதூரத்தில் வெளிச்சம் நீ...உனை நோக்கியே எனை ஈர்க்கிறாய்...." பாடும் சிம்பு ரஹ்மானுடன் சேர்ந்து ரசிக்க வைக்கிறார். முன் பட டைட்டில்களை கேரள நீர் நிலைகளை கிழித்து போகும் போட்டின் பின்புறத்தில் காண்பிக்கும் போதே இந்த படத்தின் காதல் நீர்த்துப் போய்விடும் என்று டைரக்டர் சொல்லாமல் சொல்வது பின்பு புரிகிறது. காதல் தோல்வியில் தன் கதையை வெற்றி படமாக எடுத்து ஜெஸ்ஸியிடம் போட்டு காண்பிக்கும் கார்த்தியின் பெயரை  பின்பட டைட்டில்லில் தன் பெயராக மாற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய கதையை தான் எடுத்தாரோ என்று சற்று சந்தேகமாக உள்ளது. இடைவேளைக்கு பிறகு படம் கொஞ்சம் இழுவைதான் என்று சக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தவன்னம் வெளியேறினார்கள்.
என்னை பொறுத்தவரையில் ஒரு நல்ல காதல் கதையை மிகவும் டீசெண்டாக தமிழ் மக்களுக்கு கொடுத்திருக்கும்  கௌ.வா.மேனனுக்கு பாராட்டுக்கள். 

Friday, March 12, 2010

ஆதிவாசி பேஷன் வீக்

மேலாடை அணியாத மங்கையரின் 'கிளு கிளு' காட்சிகள் காண்பித்ததர்க்காக எப் டிவிக்கு ஒன்பது நாட்கள் தடை விதிக்கப்பட்டிருகிறது. ஒரு சின்ன சந்தேகம். அதென்ன ஒன்பது நாட்கள்? காண்பித்த மங்கையருக்கும் இந்த தடை நாட்களுக்கும் ஏதேனும் லிங்க் உள்ளதா? ஒன்பது பெண்களா அல்லது 'ஒன்பது' பெண்களா? மேலே ஒன்றும் அணியாத பெண்ணை காண்பிப்பது நல்ல ரசனைக்கும், நற்பண்பிர்க்கும் எதிராக உள்ளதால் தடை செய்யப்பட்டதாக மத்திய அரசின் செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. ரசனை என்பது ஒருவருக்கொருவர் வேறுபடும் என்று நான் விகல்பமின்றி சொன்னதற்கு "அது எல்லோருக்கும் தெரியும்" என்று ஒரு வயோதிக அலுவலக நண்பர் ஆணித்தரமாக அடித்துச்சொன்னார். என்னையில்லை.

எப் டிவி அன்பர்களின் இந்த கலாச்சார கொலை செயலைக் கண்டித்தது போலவே சாமியாரின் 'சாமி' படம் காண்பித்த சன் நியூஸ் சேனலுக்கும் பிற்காலத்தில் தடை வருமா என்று தற்கால அரசியல் தெரியாத அபிஷ்டு என்னிடம் எகத்தாளமாக கேட்டபோது, அது 'சூரியனுக்கே' வெளிச்சம் என்று மட்டும் தான் என்னால் கூற முடிந்தது. இப்படி சன் நியூசுக்கு தடை சொன்னால் வாராவாரம் ஆரவாரமாக ஆறடி ஆஜானுபாகுவான தேகத்திற்கு ஒரு அடி வஸ்திரத்தை சுற்றிக்கொண்டு வந்து 'நாட்டிய' தீர்ப்பு வழங்கும் நமீதா பங்குபெறும் மானாட மயிலாடவுக்கும் தடை வருமா என்று இன்றைய டிரெண்ட் தெரியாமல் பேசிய என் நண்பரை நான் மிகவும் கோபித்துக்கொண்டேன்.


இந்த மேலாடை விவகாரத்தில் ஒரு ஜோக் நியாபகம் வருகிறது, ஒரு ஆதிவாசிப் பெண் மேலாடை இல்லாமல் இடையில் இலையாடை உடுத்திக்கொண்டு உலா வந்து கொண்டிருந்தாள். அதைப் பார்த்த ஆடை நாகரீகம் அடைந்த ஒருவர் "ஏம்மா. இப்படி மேலாடை இல்லாமல் வருவது தவறு. உனக்கு வெட்கமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு பார்க்க கூச்சமாக இருக்கிறது" என்று பெருமூச்சுடன் கேட்டார். இதைக்கேட்டு உடனே என்ன செய்வது என்று அறியாது திகைத்த அந்த ஆதிவாசிப்பெண் இடையை விட்டு இலையாடையை இழுத்து மேலாடையாக போட்டுக்கொண்டாளாம். இந்த ஜோக்கை எப்.டிவிகாரர்கள் சீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டு 'ஆதிவாசி பேஷன் வீக்' என்று கொண்டாடாமல் இருந்தால் மிக்க சந்தோஷம்.

இந்த டாப் ஓபன் காட்சியை மகளிர் சங்கங்கள் கண்டித்து தான் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா என்று தெரியவில்லை ஆனால் 33% மகளிர் மசோதா சட்டமாக்கப்படலாம் என்ற இவ்வேளையில் அந்த சதவிகிதம் அளவிற்காவது இவர்கள் உடை அணிவது சாலச்சிறந்தது என்று நினைக்கிறேன். இது போன்ற தடையுத்தரவுகளினால் இளைஞர் சமுதாயம் திருந்தும் என்று நினைக்கிற இந்த அரசையும், அரசியல்வாதிகளையும், மக்களையும் நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. ஏனென்றால் இதற்க்கு முன்னும் இருதடவைகள் இந்த சேனல் தடை வாங்கி இப்போது மூன்றாம் முறையாக இந்த கலைச்சேவையை மக்களுக்கு வழங்குகிறது.

காலையில் கல்லூரி செல்லும் பஸ் ஸ்டாப்பில் "இதுக்குதான்டா பெருசெல்லாம் பிரதமராக ஆகக் கூடாதுன்னு சொல்றது" என்று இரு சிறுசுகள் அவர்கள் உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்துக்கொண்டிருந்தார்கள்.

Thursday, March 11, 2010

இதிகாச காதலர்கள் - II

2.புருரவஸ் - ஊர்வசி

இந்திரலோகத்தின் ஆக மொத்த யவ்வன சுந்தரிகளும் ஒரு நட்சத்திர கூட்டம் போல வானில் உலா வந்துகொண்டிருந்தனர். ரம்பை, மேனகை, திலோத்தமா, சித்ரலேகா மற்றும் பலர். ஆனாலும் நிலவை இழந்த வானம் போல் இருந்தது அவர்கள் குழு. வாடிய மலர் போல் இருந்த அவர்களது வதனங்கள் அவர்களுடைய சோகத்தை சொல்லிற்று.
சூரியனை துதித்துவிட்டு தேரில் அவ்வழியாக சென்றுகொண்டிருந்த அந்த வாலிபனைப் பார்த்து அந்த அப்சரஸ்கள்
"வாயு வேகத்தில் செல்லும் உங்களை பார்த்தால் கடவுளின் மித்ரனாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். எங்களை காப்பாற்றுங்கள்."அதற்க்கு அந்த அழகிகளிடம்
"எதற்காக மிகவும் சோகத்துடன் இருக்கிறீர்கள். நான் சந்திர வம்சத்து மன்னன் புருரவஸ், உங்கள் துன்பத்தை நான் போக்குவேன்" என்றான்.
"என்னவென்று சொல்வது எங்கள் துக்கத்தை. இரவு நேரங்களில் பூலோகத்தில் சென்று கால் பதித்து திரும்புவது எங்கள் ஊர்வசியின் வழக்கம். இன்றும் அதுபோல் நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது, எங்கள் ஊர்வசியை கேசி என்ற அரக்கன் கவர்ந்து சென்று விட்டான்" என்றாள் ரம்பை
"கவலைப்படாதீர்கள். நான் சென்று உங்கள் தோழியை மீட்டு வருகிறேன். எந்த பக்கமாக சென்றான் அப்பாதகன்."
"வடகிழக்காக" என்று கை காண்பித்தாள் ஊர்வசியின் உயிர்த்தோழி சித்ரலேகா.
"நீங்கள் இங்கேயே காத்திருங்கள்.. சில கணத்தில் வருகிறேன். சாரதி... அத்திசையில் தேரை செலுத்து" என்று விரைந்தான் புருரவஸ்.

சோமனுடைய மகன் புதனுக்கும் - வைவஸ்வத மனுவின் மகள் இலாவிற்கும் பிறந்தவன் புருரவஸ். தன்னுடைய பாட்டனாரின் பெயரை தன் வம்சத்திற்கு சேர்த்து சந்திரவம்சம் என்று சூடிக்கொண்டு ப்ரயாகையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். நல்ல புஜபல பராக்கிரமம் மிக்கவன். அவன் சென்ற திசையை கவலையுடன் பார்த்தவாரே அந்த கயல்விழிகள் இமயமலைச் சாரலில் உள்ள ஹேமகூட மலைநோக்கி சென்றனர்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மனோ வேகம் வாயு வேகத்தில் திரும்பினான் புருரவஸ். தங்களுயிர் தோழி பத்திரமாக திரும்பிவிட்டாள் என்ற மகிழ்ச்சியில் துள்ளி வந்தார்கள் அப்சரஸ்கள். வாடிய மலர் போன்று இருந்த ஊர்வசியை கண்டு "ஏ பெண்ணே, ஏன் இன்னும் பயத்துடன் காணப்படுகிறாய். கவலையை விடு உன் கண்ணீரை துடை" என்றாள் சித்ரலேகா.
"இவ்வளவு பயந்தாங்கொள்ளியை நான் இதுவரை கண்டதில்லை" என்று புன்முறுவல் புரிந்தான் புரு.

அவன் புன்னகையில் அந்த இடமே அவளுக்கு சொர்க்கலோகம் போல் காட்சியளித்தது. அந்த இதமான மாலைத்தென்றல் அவன் பரந்த மேனியில் பட்டு திரும்பி இவளை உரசியபோது வந்த ஆண்வாசனையில் தன்னை மறந்து கண்கள் சொருகினாள் ஊர்வசி. அவனது கூர்மையான பார்வையும், பரந்த தோளிலும் மாரிலும் துவண்டு ஆடும் பட்டாடைகளும், புஜங்களில்  ஜொலிக்கும் கங்கனங்களும் அவளை ஒரு வித காந்தசக்தியோடு இழுத்தது. இருவரும் ஒருவரையொருவர் கண்களால் பருகி நெஞ்சத்தை நிரப்பிக்கொண்டிருந்தனர். சித்ரலேகாவின் "ஹக்...கும்..." அவர்களை கனவுலகிலிருந்து நினைவுக்கு இழுத்து வந்தது.
"என்னம்மா ஊர்வசி, தேரிலேயே இருப்பதாக உத்தேசமா" என்றாள் சித்ரலேகா. சித்தம் களைந்து  "தேரோட்டி ... தேரை தரையிறக்கு..." என்று கட்டளையிட்டான் கட்டிளம் புருரவஸ்.

தேர்பாகன் மிகவும் லாவகமாக தேரை தரையிறக்கியும் சமன் இல்லாத தரையில் இறங்கியதால் ஒரு சிறிய அதிர்வுடன் இருபக்கமும் ஆடியபடி நின்றது. அதில் குலுங்கிய ஊர்வசி இறங்கும் போது புருரவஸ் மீது உரசியதில் இருவரும் ஒரு  மின்னல் வெட்டியதை உணர்ந்தார்கள். பிடித்து இறக்கும் கையின் ஸ்பரிசத்தால் கட்டுண்டு  விடமுடியாமல் தவித்தான். கையோடு கை ஒட்டி பிறந்தாற்போல் பிரிக்க முடியாமல் தவித்தது கண்டு அங்கே வந்த அப்சரஸ்கள் கேலி பேசி சிரித்தார்கள்.
"உம்... உம்..... நடக்கட்டும்..நடக்கட்டும்.. ஹா ஹா ஹா ....."

இந்திரலோகத்தில் அனைவராலும் சதஸ் நிரம்பியிருந்தது. பரத முனிவரின் பிரதான சிஷ்யை ஊர்வசி. அன்றையதினம் "லக்ஷ்மியின் விருப்பம்" நாட்டிய நாடகம் நடந்து கொண்டிருந்தது. லக்ஷ்மியாக ஊர்வசி ஆடிக்கொண்டிருந்தாள். ஒரு முல்லைக்கொடி வசந்த கால காற்றில் வளைந்து ஆடுவது போல் இருந்தது ஊர்வசியின் ஆட்டம். சகலரும் மெய்மறந்து நாட்டிய நாடகத்தை ரசித்தவண்ணம் இருந்தனர். ஒரு கட்டத்தில் லக்ஷ்மியின் தோழி அவளிடம் "மூவுலகிலிருந்து அனைவரும் வந்தாயிற்று. இன்னும் யாரை எதிர்பார்க்கிறாய்?" என்று கேள்வி எழுப்பும் காட்சி  வந்தது. அப்போது "புருஷோத்தம்" என்று சொல்வதற்கு பதிலாக "புருரவஸ்" என்று பதிலலித்துவிட்டாள் லக்ஷ்மியாக வேடமிட்டிருந்த ஊர்வசி. அவள் மனதில் எந்நேரமும் ஓடி விளையாண்டுகொண்டிருந்தவன் வாய் வழியே வெளியே வந்துவிட்டான்.

இதைக்கண்ட பரத முனிவர் கடுங்கோபம் அடைந்தார். "நான் கற்றுக்கொடுத்ததை மறந்து வேறு நினைவோடு இருந்ததால் இக்கணம் முதல் நீ இந்த இந்திரலோகத்தில் இருக்கும் தகுதியை இழக்கிறாய்." என்று சாபமிட்டார். இதைக் கண்ட தேவேந்திரன், கேசியுடனான  யுத்தத்தில் தனக்கு உதவி புரிந்தமைக்காக  புருரவசுக்கு நன்றிக் கடன்பட்டிருந்தான்.  ஆகையால் அவளை புருரவசுக்கு மணமுடித்து அவனுடன் அனுப்பிவைத்தான்.

சில பின் குறிப்புகள்:
இப்படி காதலித்து மனம் புரிந்த புருரவஸ் ஒரு வித்யாதர பெண் உதயவதி என்பவளின் மேல் காதல் வயப்பட்ட போது ஊர்வசி தன் காலை நிலத்தில் ஊன்றி கொடியாக மாறியது தனிக்கதை. மன்னன் அயு, புருரவஸ் -ஊர்வசி தம்பதியரின் மகன். அயு-பிரபா ஜோடியின் புதல்வன் யுவராஜ் நகுஷன். நகுஷன்-வ்ரஜாவின் குலக்கொழுந்து யயாதி. நியாயமாக பார்த்தால் இந்த இதிகாச காதலர்கள் வரிசையில் முதலில் இடம் பெற்றிருக்கவேண்டிய ஜோடி இதுதான். ஆனாலும் கதையின் போக்கினால் முதலிடம் பெற்றான் யயாதி. இது எழுதுவதற்கு உபயோகமாக இருந்தது காளிதாசரின் விக்ரமோர்வசியம் எனும் நூல். 
--இதிகாச  காதலர்கள் இன்னும் வருவார்கள்

Wednesday, March 10, 2010

பார்வை ஒன்றே போதுமே - 2. சில்க் ஸ்மிதா

இவர் கடித்து துப்பிய ஆப்பிள் ஒரு லகரத்திற்கு ஏலம் போனது.


எண்பதுகளின் கவர்ச்சி  கன்னி  'கண்ணி'. 

நிஜ வாழ்க்கையிலும் தாராள குணம் கொண்டவராக திகழ்ந்தவர்.

Monday, March 8, 2010

கவிதை ஜாக்கிரதை!


ஓவியம்: ராஜா ரவிவர்மாவின் கைவண்ணம்



சேலையில் தொட்டில்  கட்டி  
சாலை வேலை பார்க்கும் அம்மாவுக்கும்

கலர் புடவை கட்டி
காக்கி சட்டை போட்டு
ஆட்டோ ஓட்டும் அம்மணிக்கும்

பத்து செங்கல்லை தூக்கும் சித்தாளாய்
வேலை பார்க்கும் பெரியாளுக்கும்

நாலு வீடு பத்து பாத்திரம் தேய்த்து
நாலு எழுத்து படிக்க அனுப்பும் தாயம்மாவுக்கும்


கல் கணவனிடமும்  புல் புருஷனிடமும்  
குப்பை கொட்டும் குணவதிகளுக்கும்

அந்நியனாய் அயல் தேசம் சென்ற புதல்வனிடம்  
கண்ணியமான பாசத்திற்காக ஏங்குபவளுக்கும் 

உயிரை ஒருவனுக்கு கொடுத்து உடம்பை 
மற்றவனுக்கு கொடுத்தவளுக்கும்

வறுமையில் தன்னை தொலைத்து கரு அறையில்
சிவப்பில் வாழும் 'அவளு'க்கும்

குடும்பத்தை பேண பஸ் பயண
கூட்டத்தில் இடிபடுபவளுக்கும்

காதலிப்பவளுக்கும்
காதலித்து கைவிடப்பட்டவளுக்கும்

நேரிலும்  நிழலிலும்,
விண்ணிலும் மண்ணிலும்
இக பர சுகமளிப்பவளுக்கும்

என் சிரம் தாழ்ந்த
மனம் கனிந்த
மகளிர் தின வாழ்த்துக்கள்.
இது கவிதை அல்ல கவிதை மாதிரி

பின் குறிப்பு: ப்ளாக் எழுத ஆரம்பிச்சதிலேர்ந்து இந்த 'கவிதை' மட்டும் விட்டு வைத்திருந்தேன். இன்றைக்கு அந்த குறையும் நிவர்த்தி செய்தாயிற்று. இனிமேல் பல பேர் என்னை "எப்போ கவிதை?" என்று தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.  இப்பதிவின் தலைப்பே இது எப்படி என்று கூறுமே....

Saturday, March 6, 2010

அட..அப்படியா?....

முதலில் இந்த கீழ்கண்ட பத்திரிக்கை செய்தி தெரிந்தபின் இந்த தலைப்புதான் என் உடனடி வெளிப்பாடு.
இந்த செய்தியை படித்தபின் தயவுசெய்து யாரும் ஜெகாவை போனிலோ, மொபைல் போனிலோ, ஆபிஸ் எக்ஸ்டென்ஷனிலோ, ஈமெயில்கள் வாயிலாகவோ, நேரிலோ பாராட்டுவதற்காக தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மாறாக உங்களுடைய பலதரப்பட்ட கேள்விகளை அவரை நேரில் சந்தித்து கேட்டால் அதற்க்கு தக்க பதிலளித்து உங்களை மகிழ்விப்பார். இவரின் அளப்பரிய இந்த சாதனையை கண்டு கூகிள் வட்டாரத்தில் பெரும் பீதியும் அச்சமும் கொண்டுள்ளதாக செய்தியறிந்த அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'மொபைல் விக்கி' ஜெகா வாழ்க. வாழ்க அவரது சேவை மற்றும் அறிவுத் தொண்டு.

Friday, March 5, 2010

உத்யோகம் புருஷ லட்சணம்

 எனக்கு அவ்வளவாக வேலை தேடி பழக்கம் இல்லாவிட்டாலும், இப்போதெல்லாம் யார் ஒன்றை பின்பற்றவில்லையோ அதை ஊருக்கு போதிப்பது  தற்போதைய இயல்பாகிவிட்டபடியால் இந்த பட்டியல்
  1. நேர்முகத்தேர்வு பத்து மணிக்கென்றால், ஒன்பது நாற்பதுக்கு வீட்டிலிருந்து கிளம்பாதீர்கள். ஒரு அரை மணி முன்னால் சென்றால் யாரும் உங்கள் காலை ஒடித்துவிடமாட்டார்கள்.
  2. பஸ்சில் ஏறுவோர்: ஒரு பஸ்சில் இரண்டு லோடு கூட்டத்தோடு வரும் பஸ்சில் ஏறாமல் கொஞ்சம் கூட்டம் குறைச்சலாக உள்ளதில் செல்லவும்.
  3. ஆட்டோ சவாரி: ரேஸ் ஆட்டோவை தவிர்க்கவும். கூலி பேசி ஏறிச் செல்லவும். மீட்டருக்கு மேல் கீழ் எல்லாம் போட்டு தரவேண்டுமா என்று கறாராக கேட்டு ஏறவும்.
  4. டூ வீலர்: ரொம்ப புழுதி, மழைக் காலமாக இருந்தால் சாலையில் உள்ள சிறு சிறு குட்டைகள், பேருந்து ஜன்னல்கள்  ('புளிச் புளிச்' என்று 'பராக்' அல்லது 'வெற்றிலைச் சாறு' அபிஷேகம் கிடைக்க பெறுவீர்கள்) போன்றவற்றைப் ஜாக்கிரதையாக பார்த்தும் அந்த பக்கம் இந்த பக்கம் செல்லும் கன்னிகளை(அனைத்து பெண்டிரும் அடக்கம்) பார்க்காமலும் செல்லவும்.
  5. போர் வீலர்: நிறுத்துமிடம் உள்ளேயா வெளியேயா என்று கவனித்து கம்பெனி உள்ளே செல்லவும். அங்கே உள்ளே இடம் இல்லையெனில் வெளியே மெதுவாக இடது பக்கம் இடம் தென்படுகிறதா என்று எல்லோரிடமும் திட்டு வாங்கிக் கொண்டு கொஞ்சம் தூரம்  சென்றேனும்  நிறுத்துங்கள்.
  6. இரண்டு மற்றும் நான்கு சக்கர ஓட்டிகள் நன்றாக பூட்டியுள்ளதா என்று கவனமாக பார்த்தபின் நேர்முகத்துக்கு செல்லுங்கள். அங்கே கேள்வி கேட்கும்போது வண்டி சரியா பூட்டினேனான்னு தெரியலயே என்று நினைத்துக் கொண்டு மலங்க மலங்க முழித்தால் அந்த இண்டர்வியூ பூட்டகேசு என்று அர்த்தம். இழவு வீட்டிற்க்கு சென்றது போல் சொல்லிக்காமல் கொல்லிக்காமல் ஓடி வந்து விடவும்.
  7. சுயபுராண விளக்கங்கள் (Resume) இரண்டு மூன்று பக்கங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவும். கருமித்தனம் பார்க்காமல் அங்கே 'வரவேற்'பில் கொடுக்கவும்.
  8. "கந்தலானாலும் கசக்கிக் கட்"டை கட்டாயம் கடைபிடிக்கவும். அவசியம் ஷு அணியவும். கிராமராஜன் சட்டை பேண்டை தவிர்க்கவும்.
  9. கழுத்துக்கு டை, மேலுக்கு கோட் போன்றவற்றை நிறுவன தேவையின்றி அணியவேண்டாம். நேர்முகம் செய்பவர் மேற்கண்டவற்றை அணியவில்லை என்றால் "ஆடையில்லா ஊரில் கோவணாண்டி லூசு" கேசாகிவிடும்.
  10. எழுத்துத் தேர்வு முடிந்து நேர்முகத்திற்கு காத்திருக்க நேரிட்டால் எதிரே உட்கார்ந்திருக்கும் அந்தரங்க காரியதரிசியை உற்று பார்ப்பதை அறவே தவிர்க்கவும். அவர் மேல் கரிசனம் உள்ள மேலதிகாரி இதனாலேயே  உங்களை நிராகரிக்கலாம்.
  11. ஒருவருக்கு மேல் நேர்முகம் செய்வதற்கு உள்ளே இருந்தால் அனைவருக்கும் வணக்கம் சொல்லுங்கள். மூன்று பேருக்கு மேல் இருந்தால் மைய்யமாக ஒரே ஒரு "குட் மார்னிங்' அல்லது 'குட் ஆப்டர்நூன்' சொல்லுங்கள்.
  12. நேர்முகத்தில் தெரியாது தெரியும் என்று தைரியமாக சொல்லுங்கள். வழ வழ கொழ கொழ என்று இழுத்து சொல்லி அந்த இடத்தை நாற அடிக்காதீர்கள். உங்களுக்கு தெரியவில்லை என்றால் "என்ன விடை?" என்று நேர்முகத் தேர்வாளரை தயவு செய்து கேட்காதீர்கள். அவர்கள் 'திருவிளையாடல்' நாகேஷ் போன்றவர்கள். விடை கேட்டதற்க்காவே உங்களை பொசுக்கி விடுவார்கள்.
  13. "பூதவேலைகள்.காம் (monsterjobs.com)" மற்றும் "வேலையாள்.காம் (naukri.com)" போன்ற வலை வேலைவாய்ப்பு தளங்களில் பதிவு செய்திருப்போர் தங்கள் கம்பெனிக்கு கண்ணில் கருப்பு துணி கட்டுங்கள். உங்கள் மேலாளர் தேடும் போது மீண்டும் நீங்களே அவரிடம் சிக்கி விடாமல் உங்கள் கம்பெனிக்கு "பில்டர்" போட்டுவிடுங்கள்.
இவ்வளவும் செய்தால் வேலை நிச்சயமா என்றால்  அதற்க்கு நான் கியாரண்டி கிடையாது. சிபாரிசு எதுவும் இல்லாமல் இடுகாட்டிலேயே இடம் கிடைக்குமா என்ற இந்த காலத்தில் வேலை கிடைக்குமா என்று காழியூர் நாராயணனை கேட்டுத்தான் சொல்ல வேண்டும்.

Thursday, March 4, 2010

இவுரு பெரிய ஹீரோ......

சினிமாவில் எண்ணற்ற, வாழ்வில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு ஹீரோக்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால்.....

ஒரு தேசமே திரும்பிப் பார்க்கும் நிஜ நாயகனை நீங்கள் பார்க்க ஆசையா?
அந்த பிளேட் கழுவும் பெண்மணி ஆச்சரித்துடன் பார்க்கும் நாயகனை நீங்கள் பார்க்க ஆசையா?
பேரன் பேத்தி புள்ள குட்டியோட ஒரு குடும்பமே நடுக்கூடத்தில் அமைதியாக உட்கார்ந்து
ஆர்வமாக பார்க்கும் அந்த ஹீரோவைப் பார்க்கனுமா?
பல்பொருள் அங்காடியில் வைத்தகண் வாங்காமல் அந்த இளைஞன் பார்க்கும் அவரை நோக்கனுமா?
அந்த கால்பந்து அணி ஒன்றாக வாழ்த்து கோஷமிடும் அவரை கண்ணார காண வேண்டுமா?
அந்த வயதான செனட் பெண்மணி அந்த நாயகனை ஊருக்கு அறிமுகப்படுத்தும் அந்த அற்புதக் காட்சியை காண ஆவலா?
 
மேலே குறிப்பிட்ட அனைத்தும் வீடியோ காட்சிகளாக உங்கள் தரிசனத்திர்க்காக கீழே...

Wednesday, March 3, 2010

ஹேப்பி ஹவர்ஸ் வித் பரமசுகர்

 
 ==========1===========
அடர்த்தியான மரங்களையுடைய அந்த கல்லூரி மைதானம் நிரம்பியிருந்தது. வழிநெடுக துணியில் ஆரஞ்சு மற்றும் வெள்ளை வண்ண பதாகைகளும், ப்ளெக்ஸ் பேனர்களும் 'வருக' மற்றும் 'வணக்கம்' சொல்லிற்று. வெள்ளை சுடிதார், வாயில் புடவை, பட்டு புடவை, குழந்தையை இடுப்பில் தூக்கியபடி, தள்ளாத வயதாதலால் மரத்தின் அடியில்  உள்ள  பெஞ்சியில் உட்கார்ந்து கண் மூடி என இள, மத்திம, வயதான பெண் பக்தைகளும், நைக்கி ஷூ ரேபான் கூல்ஸ், பெரிய கருப்பு எழுத்தில் சமஸ்கிருத ஓம் போட்ட மஞ்சள் டிஷர்ட் நீல ஜீன்ஸ், வெள்ளை வேட்டி மற்றும் சர்ட் என நிறைய ஆண் பக்த கோடிகளும் சாமியை தரிசிக்கும் பரவசத்துடன் மதியம் இரண்டு மணி முதல் குழுமியிருந்தார்கள். சரியாக மாலை ஆறு மணிக்கு 'ஹேப்பி ஹவர்ஸ் வித் பரமசுகர்' ஏற்பாடாகியிருந்தது.
 
"காவி கட்டின ஆசாமியெல்லாம் சா....மி...கன்றாவிடா .." எள்ளலாக குரல் வந்த திக்கில் அங்கே காவலுக்கு இருந்த இரண்டு தொப்பைகள் திருப்பி பார்த்தது. கன்னங்கள் ஒட்டி, கண் உள்ளே சென்று, பரட்டையுடன், சவரமே காணாத முகமுமாக ஒரு அழுக்கு சட்டையும், இடுப்பில் துண்டா வேட்டியா என்று புரியாத ஒன்றை சொருகிக்கொண்டு அது நின்றிருந்தது.
"சாமி சாமின்னு இவனே மாலையை மாட்டிகிறான்... இவன் ஏன் சாமியை கும்புடறான்.."
"ஏய்... போ அன்னாண்ட...." என்றது ஒரு காக்கி.
"பரம சுகம்னா .. எல்லா சுகமும் இவனுக்கா இல்லை மத்தவங்களுக்கு பல சுகங்கள் தருவானா..."
"யோவ்.... இங்கேருந்து போமாட்ட..." என்று லத்தியை சுழற்றியது இன்னொரு காக்கி.

"குருவே சரணம்! பரமசுகரே சரணம்!!" "ஜெய் குருநாதா! உயிரே...திருவே..பரமே சரணம்!!" என்ற சரணகோஷங்களுக்கிடையே யானை நிற ஹோண்டா சிவிக்லிருந்து சாமியார் காவியுமாய் சிஷ்யைகள் வெள்ளையுமாய் இறங்கினார்கள். அவரின் வருகையால் அந்த இடமே ஒளி நிறைந்து காணப்பட்டது. காமிராக்களின் உபயம். எட்டுத்திக்கிலும் பார்த்து சிரித்துக் கொண்டே சிகப்பு கலர் ராஜா ஆசனம் போடப்பட்ட மேடை நோக்கி அந்த சந்நியாசி நடந்தார். அவரது திருவடிகள் மலர்ப்பாதையின் மேல் நடந்தன. காலில் அவருக்கென்று  பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மரக்கட்டை போல் இருக்கும் ஹவாய் பாதரட்சைகள். ஆசிரம பாத்ரூமிலிருந்து வந்திறங்கிய  கார் வரை குளிரூட்டப்பட்டிருந்ததால் ஒரு பிரிட்ஜில் இருக்கும் ஆப்பிள் போல் பிரகாசமாக புத்தம்புதுசாக இருந்தார். அவருடைய கண்களில் ஒரு மகா ஒளி தெரிவதாக ஒரு அறுபது வயது ஆந்திரா பக்தர் பக்கத்தில் இருப்பவரிடம் பரவசத்துடன் பகிர்ந்து கொண்டார்.

"ஒரு பத்து நாள் வெளியில இருக்கிற தூசி துரும்பு படாம வெய்யில படாம வீட்டுக்குள்ள ஏசி போட்டுகிட்டு  இருந்து பாரு... ஒன் கண்லயும் ஒளி தெரியும்......" இப்படி ஒரு அறிவு பிட்டை கேட்ட அந்த ஆந்திரா அன்பர் "அபசாரம் அபசாரம்" என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார். இதை கேட்டபடியே முன்னேறிய அது அவர் உபன்யாசம் செய்யும் மேடை அருகே அவருடைய கருணைப் பார்வை படும்படி மைக்செட் கட்டியவர் பக்கத்தில் போய் அமர்ந்தது.

சொற்பொழிவு ஆரம்பித்த பரமசுகரும் அவருடைய பரம 'பக்தையும்' பரம துக்கத்தில் ஆழ்ந்தார்கள்.

===========2===========
பஸ் ஸ்டாண்ட் அருகில் இருட்டு சந்தில் கஞ்சா விற்பான். ஒரு தெரு தள்ளி இருக்கும் லாட்ஜுக்கு ஐட்டம் அழைத்து வருவான். பைக் ரிப்பேர் செய்யும் பாண்டி அண்ணன் இரவில் சரக்கு போடும் போது சைடு டிஷ் வாங்கி வருவான். பகலில் அக்கம் பக்கம் இருக்கும் எல்லா கடைகளுக்கும் டீ வாங்கி கொடுப்பான். பசங்களோடு மட்டும் விளையாடுவது எப்படி என்று அவனுக்கு தெரியாது. பாலகனாக இருக்கும் போதே பைசா எண்ணி சம்பாதிக்க கற்றுக்கொண்டான். 
"டேய்.. அதைக் குடுடா..."
"மாட்டேன்...."
"பரமேசு... வேணாம் எங்கப்பா கிட்ட சொல்லுவேன்..."
"சொல்லு... அவன் என்ன பெரிய பருப்பா..."
"வேணாம்..குடுத்துரு... "
"போடா....ங்...க.... உங்கப்பன்ட்ட வேணா சொல்லு இல்ல உங்காத்தாட்ட வேணுன்னாலும் சொல்லு...எனக்கென்ன... ஏதாவது எவனாவது கேட்டான் சொருவிடுவேன்...."
"எங்கப்பனையேவா...."
"ஆமா.... டெய்லி பாருல சரக்கு நான் தான் வாங்கியாறேன்....முட்ட முட்ட குடிச்சிட்டு வெளியே வந்தப்புறம் அப்படியே ஒரே சொருவு... அவ்வளோதான்.. கதை முடிஞ்சிரும்..  "

அப்படி பால்ய பருவத்திலேயே சொருவிட்டு ஓடிய பரமேசு பதினெட்டு வயதுக்கப்புறம் ரிலீஸ் ஆனான். வெட்டியாக சில பல நாட்கள் திரிந்தான். வயிற்று பிழைப்புக்கு வழி தெரியாமல் திண்டாடிய ஒரு மாலை நேரத்தில் ஒருவனை கத்தியால் கடைத்தெருவில் குத்தி மற்றவனிடம் ஆயிரம் ருபாய் பணம் பெற்றான். அந்தப்பணம் ஒரே நாளில் செலவானதால் நிறைய சம்பாதிக்க ஒரு உபாயம் தேடினான்.  நல்ல 'குரு'  ஒருவரின்  ஆசியால் விபூதி வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, ஓடிப்போன புருஷன் திரும்ப எப்போ வருவான் என்று குறி சொல்வது, பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை கரைத்து குடித்து எப்படி பணம் சம்பாதிப்பது என்று கற்றுக்கொண்டான்.  அமாவாசை அன்று லிங்கம் எடுக்கும் போது ரத்தம் கக்கி அந்த குரு சாவதற்கு அவர் முழுங்கிய லிங்கத்தில் விஷம் வைத்தான். பரமேசு பரமசுகர் ஆனான். 
===========3===========
மூன்று அடுக்கு மாடி, பத்து கார் நிறுத்துவதற்கு இடம், ஸ்விம்மிங் பூல் என்று சகல வசதிகளும் கொண்ட வீடு அது. முதலாளியம்மா வீட்டில் இல்லாத நேரம் அந்த வீட்டின் எஜமானனுக்கு ஒரு அரவணைப்பு தேவைப்பட்டது. அரவணைக்க சென்றவளுக்கு எஜமானி ஆகவேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஒரு ஆனந்த விகடன் முடிந்து மறு ஆ.வி் வீட்டு வாசலில் விழும் போது இவள் புதிய எஜமானி ஆனாள். பழையதை எஜமானன் செக்யூரிட்டிகளிடம் சொல்லி வாசற்படி மிதிக்க விடாமல் விரட்டினான். முப்பது நாளைக்குள்  முன்னூறு கோடி சொத்தையும் அபகரித்துக் கொண்டு எஜமானனை வீட்டை   விட்டு  துரத்தினாள். அப்படி ஒரு பதிபக்தி. மிக சௌகரியமாக வாழ்ந்தாலும் இன்னும் தேவை என்று நினைத்தாள். புகழ், பொருள் ஈட்ட ஆகச்சிறந்த மிக சுலபமான வழியை எதிர்பாத்து காத்திருந்தாள். தனிமையும் இளமையும் தன்னை வாட்ட, வெளி வட்டாரங்களில் வளைய வந்தாள். ஒரு ஹாப்பி ஹவரில் பரமசுகரை சந்தித்தாள். அந்தரங்க சிஷ்யை ஆனாள். அவருக்கு ஆதியும் அந்தமும் ஆனாள்.
=========4===========
நிஜமான  சாமிக்கு கூட பயப்படாத அந்த சாமியார் அதுக்கு பயப்பட்டார். ஆறு மாதம் முன்பே அந்தரங்க சிஷ்யையின் ஆசைக்கு இணங்க அவளின் மாஜி எஜமானனை ஆள் வைத்து தூக்கியிருந்தார். எல்லோருக்கும் உபன்யாசம் மூலம் காண்பிக்கும் சொர்கத்திற்கு அவனை நேரேயே அனுப்பியிருந்தார். ஆனால் அது வந்து இப்போது இவர்கள் முன் அமர்ந்திருக்கிறது. எப்படி என்று புரியாமல் பயந்துகொண்டே உபன்யாசத்தை ஆரம்பித்த வேகத்தில் முடித்து மக்களின் வாழ்வியல் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய தொடங்கினார்.  முடிக்கும் அவசரம் பதிலில் தெரிந்தது. மேடையை விட்டு இறங்கும் போது பொதுச்சேவையில் இருக்கும் தன் அடியார் கூட்டத்திடம் அவரை தன்னிடம் அழைத்து வருமாறு கட்டளை இட்டது. சிவிக்கில்  நடைபெற்ற சம்பாஷனை
"என்ன வேணும் உனக்கு..."
"நீ என்னை மேலே அனுப்பலாம்ன்னு பார்த்தே... நா உன்னை உள்ளே தள்ளலாம்ன்னு...."
"என்ன பண்ணுவே?" 
"......."
"என்ன பண்ணுவே?" 
"............"
"வாய திறக்க மாட்டியா.. "
"நான் திறக்க வேண்டாம்... ஊரே இன்னும் கொஞ்ச நேரத்தில...."
"என்ன மிரட்டிரியா... வெளியிலதான் நான் பரமசுகர் ஆனா நான் என்ன பண்ணுவேன்னு உனக்கே தெரியும்... விளையாடாத... சொல்லு"
"நான் ஏன் விளையாடனும்... நீனும் என் ரெண்டாவதும் விளையாடினதை.... "
"விளையாடினதை?"
"ஹி....ஹி"
"படம் பிடிசிருக்கையா... யாரும் நம்ப மாட்டங்க... எந்த T.V. காரனும் போடா மாட்டன், ஒவ்வொருத்தனுக்கும் 'கவர்' போவுது."
"நான் எதுக்கு இன்னொருத்தனை எதிர்பார்க்கனும்... "
"ஏன் நீயே சொந்தமா பிச்சை T.V ன்னு ஏதாவது வச்சிருக்கியா...திருவோடு லோகோவோட ஹா... ஹா... ஹா.... ஹா  ....."  
இந்த வெடிச்சிரிப்பில் பரம பக்தையும்  கலந்து கொண்டாள்.
1.............2....................3....................4.......................5................ நிமிட மௌனத்திற்கு பிறகு அது பேசியது 
"உன்னோட www.paramasugar.com வெப்சைட்ட  கொஞ்சம் உன்னோட லேப்டாப்ல திறந்து பாரு. புரியும்"
பரமுவும் பக்தையும் பதபதைத்து பார்த்தால்...... அருகருகே இப்போது காரில் உட்கார்ந்திருந்த இருவரும் ஒருவராய்  ஆசிரம படுக்கையில் இருந்தார்கள். ஒருவர் மீது ஒருவர் ஏறி காதல் சண்டையில் ஈடுபட்டார்கள். விளக்கை அணைத்து போட்டு , போட்டு அணைத்து டே அண்ட் நைட் கேம் ஆக நடந்ததை உலகமே பார்த்து  ரசித்தும் அதிர்ச்சியும் கொண்டு இருந்தது. அன்றைக்கு மட்டும் www.paramasugar.com பில்லியன் ஹிட்ஸ் கண்டது என்று கூகிள் அனலிடிக்ஸ்ம் அலேக்சாவும் சான்றிதழ் வழங்கியது. கார் ஆசிரமத்தை நெருங்கும் போது ஒரு கும்பல் தீ வைத்துக்கொண்டிருந்தது. அதில் ஆக்ரோஷமாக ஒரு இளைஞன் "....த்தா. இவன்லாம் ஒரு சாமியாரு.. போலிச் சாமியாரு... செக்ஸ் சாமியாரு... மூஞ்சிய பாரு... முகரையை பாரு... கையில மட்டும் கிடைச்சான்னா... " என்று சொல்லி கீழே கிடந்த போஸ்டர் பரமசுகரின் முகத்தில் ஏறி மிதித்து கிழித்துக் கொண்டிருந்தான். காருக் குள்ளிரிந்து இதை பார்த்துக்கொண்டிருந்த பரமசுகரும் பரம பக்தையும் முகம் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

பின் குறிப்பு: இது நான் எழுதியிருக்கும் முதல் சிறுகதை. இலக்கிய தரத்தில் இல்லாவிட்டாலும் ரசிக்கும்படியாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. இதை சமீபத்திய சம்பவங்களுடன் தொடர்புபடுத்தி பார்த்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

Tuesday, March 2, 2010

முக்தி பெற்ற காற்று

 மூங்கிலுக்குள் நுழைந்த காற்று முக்தி பெற்று திரும்புகிறது........

குழலூதும் கண்ணனாக ஷஷாங்க், சிதாரில் புர்பயன் சாட்டர்ஜி.....

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

Monday, March 1, 2010

எங்கெங்கு காணினும் தகவலடா!

அவன் யார்ரா பெரிய கை. த.ஒ.சீ.க. கட்சியில வட்டமா இருக்கான். மாசம் லட்ச ரூபாய்க்கு கல்லா கட்ராண்டா.....
(த.ஒ.சீ.க = தமிழ்நாடு ஒழுக்க சீலர்கள் கட்சி)

பி.டபிள்யூ.டில இன்ஜீனியரா இருக்கிற பெருமாள் இருபத்தி மூவாயிரம் சம்பளமும் நாப்பத்தி ரெண்டாயிரம் கிம்பளமும் சேர்த்து அருவத்தி அஞ்சாயிரம் மாசம் சம்பாதிக்கிறான். ஹும் எல்லோருக்கும் இந்த தெறமை வருமா....

ஒரு நாளைக்கு லட்சம் பேருக்கு மேலே தி. நகர் ரெங்கநாதன்  தெருவுலேர்ந்து சாமான்லாம் வாங்கிண்டு  வராளாம்...

ரேஷன் கடையில ஒரு கிலோ ஜீனிக்கு தொள்ளாயிரம் தான் நிக்கிது...

நித்தியமும் முடிச்சூர் வர்ற பத்து பஸ்ல அஞ்சு பஸ் ஓடாம முடமாயி நின்னுடுது...

நம்ம ஊர்ல ரெண்டும் பக்கத்து ஊர்ல ஒன்னும் வச்சிருக்கான்டா இவன்....

பரிட்சை எளுதின எம்பத்தி நாலு பேருல இருவது பேருதான் பாஸு. பாக்கி எல்லாமே பூட்ட கேஸு....

உன் வண்டியாவது பத்து குடுக்குது. என்னோடது எட்டு மட்டுமே  குடுத்து என் உசுரை எடுக்குது. 

எதிர்த்த வீட்டு கல்யாணி அந்த குப்பு கூட ஓடி போய்ட்டாளாம். 

இது என்ன ஒரே அக்கபோரா இருக்கு. எப்ப பார்த்தாலும் வம்பு தான் என்று யாராவது சொன்னால் அது தவறு.  மேலே கண்ட வாசகங்கள் எல்லாவற்றிலும் இருப்பது தகவல்கள் தான்.முன்பு இதுபோல் முகத்திற்கு முகம் பார்த்து வம்பு தும்பு பேசியவர்கள் இப்போது கூடும் இடம் இணையம். பேசியதோடு  மட்டும் இல்லாமல் தான் நேற்று சென்ற பார்ட்டியில்  நடந்த கூத்துக்களை படம் பிடித்து நெட்டில் 'பிகாசோ' படத் தொகுப்பில் ஏற்றி விடுகிறார்கள். இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை "இங்க ஒரே ஹாட்டா  இருக்கு.. அங்க எப்டி?" என்று  ஏ.சி ரூமிற்குள்ளிருந்து டுவீட்டுகிறார்கள். ஓர்குட் 'துணுக்கு சேகரப் புத்தகத்தில்' (மன்னிக்கவும் Scrap புக் இன் தமிழாக்கம் ) கிறுக்குகிறார்கள். யூ ட்டுயுபில் கண்டதையும் நல்லதையும் காண்கிறார்கள். யாஹூ, எம்.எஸ்.என்., ஜீடாக், ஸ்கைப் போன்று பல வழிகளில் பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள், அழுகிறார்கள், பார்க்கிறார்கள், காதலிக்கிறார்கள்.....

இப்படி இவர்கள் செய்யும் எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்து ஒரு கணக்கு எடுத்திருக்கிறார்கள். 2009 ஆரம்பத்தில் மொத்த இணைய போக்குவரத்து 5 எக்ஸா பைட்டுகள் (exa bytes).  இது போல் உற்பத்தியாகும் விவரங்களை சேமித்து வைப்பதற்கு இன்னமும் போதுமான அளவு தேக்கங்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. 

எம். பி, ஜீ.பி தெரியும், இது என்ன எக்ஸா என்போருக்கு ஒரு மேலதிக தகவல், ஜீ.பியிலிருந்து இரண்டு படி தாண்டி மூன்றாவது படியில் உள்ளது   எக்ஸா.  டெரா (Tera) , பெடா (Peta) அதற்க்கப்புறம்  எக்ஸா.  இதற்க்கப்புறம் ஜெட்டாவும் (Zetta) யோட்டாவும்(Yotta) உண்டு .  கீழே ஒரு சிறிய வாய்ப்பாடு 
  1. b =  bit  (1 or 0 )
  2. B = byte ( 8 bit)
  3. KB =  Kilo Byte (1024B)
  4. MB = Mega Byte (1024KB)
  5. GB = Giga Byte (1024MB)
  6. TB = Tera Byte (1024GB)
  7. PB = Peta Byte (1024TB)
  8. EB = Exa Byte (1024PB)
  9. ZB = Zetta Byte (1024EB)
  10. YB = Yotta Byte (1024ZB)
இதில் மூன்றவதிலிருந்து ஒவ்வொன்றின் 1000 மடங்கு அதன் கீழ் வருவது.  அதன் படி ஒரு எக்ஸாவானது  1 EB = 1,000,000,000,000,000,000 B.

டெரா வரைக்கும் பார்த்த நாம் பெடா எங்கு உபயோகப்படும் என்றால் நம்ம கூகிள் அண்ணாச்சி ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெடா பைட்டு தகவல்களை அலசி ஆராய்ந்து நமக்கு தேடி தருகிறது.  சென்ற வருடம் முழுவதும் பரிமாற்றம் செய்யப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, பராமரிக்கப்பட்ட விவரங்கள் 1.2 ZB. அப்படியென்றால் YB பற்றி நினைப்பதற்குள்  "ஏம்பா யாரது? கொஞ்சம் லெமன் போட்டு தண்ணி கொண்டு வா..." என்று கேட்பது புரிகிறது.



இப்போது நாம் மேலே பார்த்த அனைத்தையும் ஒரு நல்ல 'தகவல்' உள்ளம் படைத்தவர் ஒரு 'விவர வரைபட'  (Info graphic video) வீடியோவாக தொகுத்ததை மேலே கண்டீர்கள். "இரண்டாயிரத்தி பதிமூணுல நாம பரிமாற்றம் செய்யப்போற தகவல்கள் ......."  என்று நான் ஆரம்பிக்கும் போது
 "ஏம்பா இதை கேட்க நாதி இல்லையா? ஒரே நம்பர் ஒன் கொடுமையா போச்சே! ......"
"என்ன கொடுமை சரவணன் இது..."  என்று சந்திரமுகி பிரபு போலவும்  வசனங்கள்  என் காதில் விழுகிறது.

2013-ல 667 Exa Bytes அளவிற்கு இணைய போக்குவரத்து இருக்கும் என ஊகிக்க முடிவதாக சிஸ்கோ (Cisco) விலிருந்து   வரும் அதிகார பூர்வ செய்திகள் தெரிவிக்கிறது. 

"இவ்வளோ சொல்லியும் விஜயகாந்த் படத்துக்கு லியாகத் அலிகான் வசனம் மாதிரி, ஒரு ஊராட்சி ஒன்றியத்துல நாப்பத்தி ரெண்டு சத்துணவுக் கூடம் இருக்கு, ஒன்னுக்கு இருபத்தி ரெண்டு பசங்கன்னா மொத்தமா தொள்ளாயிரத்து இருவத்து நாலு பசங்க சாப்பிடுது......ன்னு சொல்லிகிட்டே போறான்டா. துரத்தி வெட்டுங்கடா ........."

டிஷ்யூம்....  டிஷ்யூம்.... சதக்...  சதக்.....
(துரத்தி வெட்டுவது காதில் கேட்கிறது )

Photo Courtesy: http://www.economist.com/

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails