Sunday, January 30, 2011

மீனவன்ஜி

ஒவ்வொரு பதிவிலும் சமூகத்தில் நிகழும் அவலத்தை கோபக்கனல் தெறிக்க எழுதும் பொன்மாலைப் பொழுது கக்கு-மாணிக்கம் தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தும் சிங்கள வெறியர்கள் பற்றி எழுத உரிமையோடு கேட்டிருந்தார். அரசியல் மற்றும் நிகழ்காலத்தில் நடைபெறும் எந்த ஒன்றையும் பற்றியும் இதுவரை எழுதாமல் இருந்தேன். இருந்தாலும் அநியாயமாக அக்கிரமமாக தாக்குதல் நடத்தும் ஸ்ரீலங்கா அரக்க சேனையை கண்டிக்கும் விதமாக இந்தப் பதிவு.



படகோட்டியில் எம்.ஜி.யாரின் மிகப் பிரபலமான பாடல்

"தரைமேல் பிறக்கவைத்தான்.. 
எங்களை தண்ணீரில் பிழைக்கவைத்தான் 
கரைமேல் இருக்கவைத்தான் 
பெண்களை கண்ணீரில் குளிக்கவைத்தான்"   என்பது.

தப்படித்து அழுது பாடும் அந்தப் பாடல் நம் மீனவ நண்பர்களின் எக்கால சோகத்திற்கும் பறை சாற்றும் பாடல்.  தமிழனுக்கு தண்ணீரில் கண்டம் என்று நினைக்கிறேன். நெய்தல் நிலம் சிங்கள வெறியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மீனவர்கள் தங்கள் ஜீவாதாரமான தொழிலை தொடர முடியாமல் முடங்கிப் போயிருக்கிறார்கள். நிச்சயம் இலவச டி.வி சோறு போடாது. மும்பை கடலில் மீன் பிடிக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி ஹிந்தி பேசும் மீனவன்ஜி ஒருவன் மேற்கு கடற்கரை ஓரம் குண்டடி பட்டிருந்தால் டெல்லிக்கு அடுத்த கணம் கேட்டிருக்கும் என்று நினைக்கிறேன். நாம் குடும்பங்களை இழந்து கதறி அழுதால் கூட "முஜே தமிள் நஹி மாலும் ஹை.." என்ற தோரணையில் செவிமடுக்காமல் நமது நாட்டில் காட்டாட்சி நடத்துகிறார்கள். 

எதற்கெடுத்தாலும் பேச்சு வார்த்தை, சுமூகத் தீர்வு என்று நயாபைசாவிர்க்கு பிரயோஜனம் இல்லாத நடவடிக்கைகள் எடுத்து நாட்கள் கடத்தி விவகாரத்தை நீர்த்து போகச் செய்துவிடும் தந்திரம் நிறைந்த குள்ளநரிகள் நிறைந்தது இந்த அரசியல் கூட்டம். பரப்பளவிலும் எண்ணத்திலும் குறைவாக உள்ள ஸ்ரீலங்காவிடம் இந்திய அரசாங்கம் ஏன் இப்படி பயந்து சாகிறது என்பது யாருக்குமே விளங்காத புரியாத புதிர். குடும்ப நலனும், கட்சி நலனும் பிரதானமாக கொண்ட இந்திய அரசியல் கட்சிகள் நாட்டு நலன் என்று ஒன்று உள்ளதையே ஒட்டுமொத்தமாக மறந்துவிட்டார்கள்.

தமிழர் நலன் ஒன்றே எங்கள் மூச்சு என்று சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் "தமிழுணர்வு" மேலோங்கும் கட்சிகள் கூட இது போன்ற சம்பவங்களுக்கு ஒரு ஸ்திரமான போராட்டமோ அல்லது நாடு தழுவிய கண்டனத்தையோ மேற்கொள்ளாதது இன்னும் ஆச்சர்யமான ஒன்று. கொள்ளையடிக்கும் கூட்டணிகள் அமைந்த பிறகு வாய்க்கு வந்தபடி மேடை போட்டு பேசுவார்கள். இப்போது ஒருவருக்கு ஒருவர் கையை காண்பித்து உன் குத்தமா என் குத்தமா என்று குற்றத்தை இன்னொருவர் மேல் ஏவி விட்டுக் கொண்டிருக்கின்றனர். இன்னும் எவ்வளவு நாள் இந்த அவலம் தொடரும்?

இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. எந்தக் கட்சி இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்கிறதோ அவர்களுக்கு எங்கள் ஓட்டு என்று உறுதியான ஒரு முடிவை அறிவித்தோம் என்றால் ஏதோ எறும்பு கடித்தது போல உணர்ந்து ஏதாவது உருப்படியான முயற்சிகள் மேற்கொள்ளலாம். அப்படியும் அடித்த காசில் தேர்தல் தினத்தன்று மக்கள் கையில் கொஞ்சம் பேப்பரில் சிரிக்கும் காந்தியை அழுத்தி கவனித்து முன்னேறிவிடுவார்கள்.

எல்லை தாண்டினார்களா இல்லையா என்பது முக்கிய விவாதம் அல்ல. கடல் அன்னை இயற்கையின் வரம். சுட்டு வீழ்த்த மீனவர்கள் தீவிரவாதிகளோ கடத்தல்காரர்களோ இல்லை. தங்கள் பிள்ளை குட்டிகளின் பசிப்பிணி போக்க கடலிறங்குகிரார்கள். இதில் எங்கே வந்தது வேட்டையாடும் படலம். "சோனியாஜி.... மன்மோகன்ஜி..... ராகுல்ஜி... இது தமிழன்ஜி... மீனவன்ஜி... பச்சாவ்..." (நம் ஆட்சியாளர்களிடம் கேட்டாலும் அவர்களும் அங்கே சென்று இப்படித்தான் கெஞ்சுவார்கள்) என்று அவர்கள் பாஷையில் புரியும்படி சொன்னாலாவது செவி சாய்ப்பார்களா என்று பார்ப்போம்.

-
 

Saturday, January 29, 2011

சிஷ்யேன்டா.....

ஒரு குருவிற்கு நித்யமும் திவ்யமாக சேவகம் செய்துகொண்டிருந்தான் சிஷ்யகேடி ஒருவன். எவ்வளவு செய்தும் அவன் பணிவிடைகளில் திருப்தியுறாத குரு அவனை டிஸ்மிஸ் செய்துவிட்டு ஒரு கரடியை சேவகத்திற்கு வைத்துக்கொண்டார். முதல் வேலையாக அவர் நிம்மதியாக தூங்குவதற்காக கரடிக்கு கொசு விரட்ட சொல்லிக்கொடுத்தார். இந்த வேலையை பார்த்து விட்டு அதற்குப் பிறகு ஆயில் மசாஜ் செய்து கைகால் பிடித்து விட கற்றுக்கொடுக்கலாம் என்று எண்ணியிருந்தார். அது நன்றாக ஈ கொசுக்களை விரட்டியது. இவரால் ஆசிரமத்தை விட்டு விரட்டப்பட்ட சிஷ்யகேடியின் நண்பன் அது கொசுவிரட்டும் போது கையில் ஒரு தடிக்கம்பை கொடுத்து விரட்டுவதற்கு மற்றும் அடிப்பதற்கு கள்ளத்தனமாக அசுர கோச்சிங் கொடுத்தான். கரடி மிக சுலபத்தில் கற்றுக்கொண்டு கர்லா கட்டை சுழற்றுவது போல சுற்றி நன்றாக விரட்டியது. ஆசிரமத்தில் பணியாளாக சேர்ந்தது அடியாளாக மாறிவிட்டது. குரு அகமகிழ்ந்து கரடிக்கு கம்பு சுழற்ற கற்றுக்கொடுத்தவனை கண்டுபிடித்து முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டினார்.

குரு ஒரு நாள் நன்றாக குறட்டை விட்டு தூங்கி சிரமபரிகாரம் எடுத்துக்கொண்டிருந்தார். வழக்கம்போல் கரடி கட்டையோடு காவல் காத்தது. ஒரு கொசு கரடிக்கு மிகவும் ஆட்டம் காட்டியது. விரட்ட விரட்ட தொலையாமல் சுற்றி சுற்றி வந்து வெறுப்பேற்றியது. டென்ஷன் ஆன கரடி கட்டையை தூக்கிக் கொண்டு துரத்தியது. கடைசியில் பறந்து களைத்துப் போன அந்தக் கொசு தூங்கிக் கொண்டிருக்கும் குரு முகத்தில் போய் ரெஸ்ட் எடுக்க அமர்ந்தது. கட்டையால் கொசுவைப் பார்த்து ஓங்கி ஒரே போடுப்  போட்டது கரடி. கொசு, குரு இருவரும் ஒரே நேரத்தில் பரலோகம் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்.

சிஷ்யகேடி ரெண்டுபேரும் சந்தோஷமாக பர்ணசாலைக்கு வெளியே ஸ்வீட் ஊட்டிவிட்டுக் கொண்டு கொண்டாடி கை குலுக்கிக் கொண்டார்கள்.

இதனால் விளங்கும் நீதி? ஆசிரமக் கதை சொல்லிவிட்டு நீதி சொல்வது முரண்நகையாக இருந்தாலும்....
  1. ஆசிரமத்தில் யார் யார் எவர் கூட கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்பது குருவிற்கு அவசியம் தெரிய வேண்டும்.
  2. தூங்கும் போது பணிவிடைக்கு மிருகத்தை வேலைக்கு வைக்கக் கூடாது. எதுக்கும் பிரயஜோனம் இல்லை!!
  3. பிடிக்க கமெராதான் வைப்பார்கள் என்று இல்லை கதை முடிக்க கரடியையும் வைக்கலாம்.
பின் குறிப்பு: துக்கடா என்று சில பெரிய விஷயங்களை ராஜி தனது கற்றலும் கேட்டலும் வலைப்பூவில் எழுதியிருந்தார். உடனே நினைவுக்கு வந்ததை உங்களுடன் பகிர்ந்தேன். நீதியின் புல்லட் பாயின்ட்கள் நாட்டை நாறடித்த சமீப கால எந்த சம்பவத்துடன் துளிக்கூட தொடர்பில்லை என்பதை மீண்டும் ஒரு முறை வலியிறுத்தி சொல்லிக்கொள்கிறேன். நன்றி.

பட உதவி: http://www.outlookindia.com/

-

Thursday, January 27, 2011

சம்போ கந்தா!!

பத்துக்கு பதினொன்னு சைசில் ரெண்டு பேபி ஃபேன் க்ரீச்சிட்டு சுழலும் அறை அது. ஃபேனின் அடிபாகம் தெரியாமல் மேலே வெள்ளை வெளேர் என்று பொய்க்கூரை வேயப்பட்டிருக்கும். சுவற்றில் நாலைந்து கவர்ச்சி பேபிகள் பேபி ட்ரஸில் பலவிதமான காம யோகா போஸில் சிரித்தபடி தொங்குவார்கள். தேங்காய் சீனிவாசன் உட்கார்ந்து சுத்திவிடச் சொல்லும் சேர் போல சிகப்பு கலரில் இரண்டு ஆஜானுபாகுவாய் அந்த இரண்டு பேபிக்களுக்கு (இம்முறை ஃபேன்) நேரே தரையில் ஆணியடித்து பொருத்தப்பட்டிருக்கும். சொகுசாய் சாயவும், காலை நீட்டி உட்காரவும் தோதாக இருக்கும். அந்தக் கண்ணாடி அறையில் ஒரு ஐந்தடி நீள மர பெஞ்சில் பேப்பரோடு பேப்பராக உட்கார்ந்து சிகையழகுக் கலை நிபுணரை வேலை செய்ய விடாமால் வெட்ட விடாமல் வாயோயாமல் பேசி மக்கள் படுத்தும் பாடு இருக்கிறதே... கூட்டு அரட்டையில் மக்களுக்கு எவ்வளவு ஈர்ப்பு, ஈடுபாடு இருக்கிறது என்று ஞாயிறு காலை ஏழுமணிக்கு பார்பர் ஷாப் சென்றால் தெரிந்துகொள்ளலாம். திண்ணைக் கச்சேரியின் இந்த அத்தியாயத்திற்காகத்தான் மேலே எழுதிய ஒரு பாரா பில்ட்-அப்! கண்டுக்காம கீழே படிங்க.

********** ஜெகன்மோகினி***********
இது ஒரு அபூர்வமான படம். என்னவென்று தெரிகிறதா. விடை கடைசியில்..

jegan mohini

***********எடக்கு மடக்கு அணி*************
எதிர்வரும் தேர்தல்ல இந்த உப தலைப்பு போலத்தான் அரசியல் கூட்டணிகள் அமையும் போலிருக்கிறது. ஆனா நான் எழுத வந்தது வேற. என்னோட கண்ணாலம் கட்டிக்கிட்ட நாள் பதிவுல கன்னாபின்னா என்று கிறுக்கிவிட்டு மடக்கு அணி என்று ஒரு சரடு விட்டிருந்தேன். 'ரசிகமணி' பத்துஜியும் பெரியமனசு பண்ணி தமிழ்த் தாயும் உங்களை வாழ்த்துவார் என்று கமெண்டியிருந்தார்.  தீவிர இலக்கியம் மற்றும் இலக்கணம் பயிலும் முயற்சியில் இறங்கியிருப்பதால் தண்டி என்பவர் அணிகள் பற்றி எழுதிய இலக்கண புஸ்தகமான தண்டியலங்காரத்தை தேடுகையில் கிடைத்த மடக்குகள் சில...
  1. சம்போகந்தா... இதை சம்போ+கந்தா என்றும் சம்போகம்+ தா என்று விஷமமாகவும் படிக்கலாம் - இது நம்ம வாத்தியார் சுஜாதா.
  2. படித்தேன் தமிழ் படித்தேன்... இதை படித்தேன் தமிழ் படி+தேன் (ஒரு படியளவு தேன்) என்றும் படிக்கலாம்  - இது பாவேந்தர் பாரதிதாசன்.
  3. அம்பிகா காபி ஹோட்டல்.. இதை அம்பி+காகாபி ஹோட்டல் என்றும் படித்து இன்புறலாம் - இது மண்ணாங்கட்டி மன்னை ஆர்.வி.எஸ்.
இன்னும் நிறைய எடுத்துக்காட்டுகள் என் தளத்திர்க்கு வருகைதரும் சிவகுமாரன், அப்பாஜி போன்ற தமிழ் வல்லுனர்கள் பின்னூட்டத்தில் என் போன்ற ஆர்வலர்களுக்காக தெரிவிக்கலாம். என் கண்ணுக்குத் தெரியாமல் வந்து படிக்கும் தமிழறிஞர்கள் கூட சொல்லல்லாம். தப்பில்லை.

மடக்கு படிக்கும் போதே அணிகள் எல்லாவற்றையும் பற்றி புரட்டலாம் என்று பார்த்தபோது உயர்வு நவிற்சி அணி பற்றியும் சிறிது படிக்கலாம் என்று தமிழ் விக்கிபீடியா பக்கம் சென்றால் அங்கே ஒரு அற்புதமான பாடல். அந்த எடுத்துக்காட்டப்பட்ட பாடலை இங்கே நிச்சயம் தரவேண்டும். பாப் கலாச்சாரத்தில் வாழும் நமக்கு இது உயர்வு நவிற்சி டு தெ பவர் ஆப் இன்ஃபினிடி அணி.

தூசியின்றித் தெளிந்தோடும்
துறையினிலே நான்
மூழ்கித் தொட்டதேதோ
பாசி என்றெண்ணிக்
கையாலே பறித்தெறியப்
பற்றினேனா?
கூசி எதிர்த் துறையில்
குளித்த இளங்குமரி
எந்தன் கூந்தலென்றாள்
(கவிஞர் நீலாவணன்)
தூசியே இல்லாத தெளிந்த நீர்துறை. அக்கரையில் அவள் குளிக்கிறாள். இக்கரையில் நான். ஏதோ கைப்பட பாசி என்று பற்றினேன். எதிர்துறையிலிருந்து அவள் என் கூந்தல் என்று கத்துகிறாள். அவ்வளவு நீளமான கூந்தல்
நீலாவணன் - பேர் ரொம்ப வித்தியாசமா இருக்குல்ல.... ;-)

 ***********பார்க்காமலே************

கண்ணைக் கட்டி காட்டில் விட்டா மாதிரி இருக்கு அப்படின்னு அடிக்கடி சலிச்சுப்போம். நிஜமாகவே நம்மளோட கண்ணைக் கட்டி நடக்கவோ, நீச்சல் அடிக்கவோ, கார் ஓட்டவோ சொன்னால் எப்படி செய்வோம் தெரியுமோ? ஓரம் பார்க்காமல் ஒரே நேர்க்கோட்டில் நம்மால் போகமுடியாதாம். நம்முடை கால் செல்லும் பாதை, உணர்வு செலுத்தும் பாதை முழுக்க வளையங்கள் தானாம். ஏன் இப்படி என்று இன்னும் ஆராய்ச்சி தொடர்கிறது. கீழ் காணும் வீடியோவில் அதை படம் பிடித்து காண்பிக்கிறார்கள். Worth Watching!



A Mystery: Why  Can't We Walk Straight? from NPR on Vimeo.

***********ராஜ பார்வை************
கண்ணைக் கட்டினால் மனிதன் எப்படி தாறுமாறாய் போகிறான் என்பதற்கு மேற்கண்ட வீடியோ எடுத்துக்காட்டு. ஆனால் அந்தக் கண்ணே தெரியாமல் குருடாய்ப் போனால்.. கண்ணே மணியே என்று கையைப் பிடித்து ரோட்டோரமாய் அழைத்துப் போவார்கள், சைக்கிளில் பாரில் உட்கார்த்தி வைத்து ரவுண்டு அடிப்பார்கள், பார்க்கில் மடிமேல் கிடத்தி தாவாங்கட்டையை பிடித்து கொஞ்சுவார்கள், ஸ்விம் சூட் அணிந்து நீச்சல் பயிற்சி தருவார்கள்.. இப்படி பலப் பல உபயோகமான விஷயங்கள் வாழ்க்கையில் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். உங்களுக்கு வசதி எப்படி?



*********** கௌரவ பிச்சை***********
"நா பிச்சை எடுக்கல.." என்று பாண்ட் ஷர்ட் அயர்ன் பண்ணி டக் இன் செய்து கைநீட்டியவனை பார்க்க எனக்கு என்னமோ போல் பாவமாக இருந்தது. காதில் அலைபேசியில் காதலி அழைக்க அந்த ஜனசந்தடியுள்ள மார்க்கெட்டில் ஒரு வாழை மண்டியருகில் நின்றிருந்தேன். ரெண்டாம் முறை குரலை உயர்த்தி "நா பிச்சை எடுக்கலை.." என்று முகத்துக்கு நேரே கோபமாக சொன்னார் அந்த உயர்ரக பிச்சைக்காரர். காதிலிருந்து ஃபோனை எடுக்காமல் "என்ன வேணும்?" என்றேன். "ஐயா. எனக்கு உணவு வேண்டும்" என்று இம்முறை செந்தமிழுக்கு பேச்சை மாற்றினார். நான் கையை ஆட்டி "வேற இடம் பாருங்க.." என்றதும் உஷ்ணப்பட்டு "நா பிச்சை எடுக்கலைன்னு சொன்னேன்ல.." என்று விரலை கொன்னுடுவேன் காண்பித்து ஆட்டினார். முறைத்தேன். இப்போது காதில் ஒலிக்கும் காதலியின் குரலைக் காட்டிலும் செல்லமாக "ப்ளீஸ். ஐ வான் ஃபுட்" என்று ஆங்கிலத்தில் குழைந்தார். அமெரிக்கன் அக்சென்ட். ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்தபோது "நா பிச்சை எடுக்க வரலை.." என்று என்னை அடிக்க ஆக்ரோஷமானார். வண்டியை எடுத்துக்கொண்டு நான் ஒரு மூலைக்கு தள்ளி வந்துவிட்டேன். ஒரு முக்கால்மணி நேர கடலைப் பேச்சுக்கு பிறகு திரும்பிப் பார்த்தேன். யாரோ முன்பாரம் பின்பாரம் நிறைந்த இருசக்கர வாகன குடும்பஸ்தனிடம் கையை நீட்டி "நா பிச்சை எடுக்கல..." என்று சாந்தமாக ஆரம்பித்திருந்தார். ராத்திரி பத்து மணி ஆகியிருந்தது.

மேலே எழுதியது ஒரு பாராக் கதை. பாராமல் படிக்காமல் போய்டாதீங்க!


பதிவின் முதலில் போட்ட படத்திற்கு கேட்ட கேள்விக்கான விடை. இப்படி உடம்பின் ஒரு எம்.எம். கூட காட்டாமல் முழுவதும் இழுத்துப் போர்த்திக்கொண்டு போஸ் கொடுக்கும் நமீதா படத்தை இப்பூவுலகில் எவரும் பார்த்திருக்கவே முடியாது. ஆகையால் இப்படம் அபூர்வ அந்தஸ்தை பெறுகிறது.  

பட உதவி: orutamilwebsite.blogspot.com

-

Tuesday, January 25, 2011

கண்ணலி... மூக்கலி... காதலி...

villege street

ரெண்டு நாளா தெருவில் பசங்களிடம் தொண்ணூறு சதம் அடிபட்ட வார்த்தை சுஜாதான். முந்தாநாளிலிருந்து பேண்ட்டும் வேஷ்டியுமாய் நாலு விடலைகள் கூடி நின்று அரட்டை அடிக்கும் வேளைகளில் சரியாக இரண்டு நிமிட கேப்பில் அகஸ்மாத்தாகவாவது சுவன்னாவும் ஜாவன்னாவும் தவறாமல் வந்து விழுந்துவிடும். இப்படி பளபளாவென்று பட்டை தீட்டிய கோதுமை நிறத்தில் ஒரு தேஜஸ்வினியான பாவாடை சட்டையை அந்த நகரம் இதற்கு முன்பு வாழ்நாளில் பார்த்தது கிடையாது. அவள் முக்குக்கடைக்கு மீரா சீயக்காய் வாங்க சென்றுவருகையில் தெருவில் மொய்த்த ஈக்கள் எல்லாம் இவர்கள் வாயில் சென்று ரெஸ்ட் எடுக்கும். இசட் பிரிவு பாதுகாப்பு அளித்தது போல இருபத்து நான்கு மணிநேரமும் ஏதாவது இரண்டு கண்கள் அவர்கள் வீட்டை கண்கொத்திப் பாம்பாக எல்லை வீரனார் போல காவல் காத்தது. எத்தனை மணிக்கு எழுந்திருந்து வாசல் தெளித்து கோலம் போடுகிறார்கள், யார் பால் வாங்க வாசலுக்கு வருகிறார்கள், படிக்கும் நியூஸ் பேப்பர் ஹிந்துவா எக்ஸ்ப்ரஸ்ஸா, காலையில் டிகாக்ஷன் போட்டு முதல்தரம் காபி தனக்கும் மாமிக்கும் சேர்த்து கலப்பது வாசு மாமாதான் என்பது வரை சகலத்தையும் அலசி ஆராய்ந்து துப்பறியும் சாம்புவாக ஃபிங்கர் டிப்பில் தகவல்களை சேகரித்து டேடாபேஸ் தயாரித்து வைத்திருந்தார்கள். அரைமணிக்கொருதரம் ஏதாவது ஒரு சாக்கு வைத்துக்கொண்டு டீக்காக டிரஸ் பண்ணிய ஒவ்வொருத்தனாய் அந்தப் புது டிக்கெட்டின் தரிசனம் பெற நடை போட்டு நடை போட்டு ஏழாம் நம்பர் வீட்டு வாசலே ஓரடி தேய்ந்து மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் அளவிற்கு அமுங்கி பள்ளம் விழுந்துவிட்டது.

ஹிந்தியில் "சல்தா ஹை.. நஹி ஹை.." என்று பேசும் ஏதோ ஒரு வடக்கத்தி மாநிலத்தில் ஏதோ ஒரு மத்திய சர்க்கார் பணியிலிருந்து ஏதோ விருப்ப ஓய்வு வாங்கிக்கொண்டு தன் பூர்வீகத்திற்கு வந்த வாசுதேவனின் சீமந்தபுத்ரி தான் சுஜா. குண்டுன்னும் சொல்லமுடியாத அளவான தொப்பை, எலும்பு தெரியும் ஒல்லியின்னும் இல்லாத சரீரம் வாசுதேவனுக்கு. குண்டுன்னும் சொல்லலாம்ங்கற மாதிரி அவரோட ரெண்டாம் பூணூலுக்கு காரணகர்த்தாவாகிய பரிமளம் மாமி. சரியாக அவருடைய இருபத்தைந்தாவது வயதில் பிரம்மச்சாரியிலிருந்து கிருஹஸ்தர் ப்ரமோஷன் கொடுத்தவள். இருவத்தாறாவது வயதில் மூன்றாம் பூணூல் படும் யோக்யிதையை வழங்கியவள். தேங்காய் நார் வைத்து அரைமணி சுரண்டினாலும் அழியாத மாதிரி சிகப்பு கலரில் நெற்றியில் ஸ்ரீசூர்ணம் இட்டிருப்பார். அது முன்னந்தலையின் காலி பிளாட் வரைக்கும் ஏறி ஓடியிருக்கும். அதிகாலை ஐந்து மணிக்கு குளித்தவுடன் மடியாக அதே குச்சியில் அதே கலரில் அதே மாதிரி ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டு அதன் கீழ் வெள்ளையாய் ஒரு 'V' போட்டுக்கொள்வாள் பரிமளம் மாமி.

இந்த ஊருக்கு வந்திறங்கியவுடன் மாமியை ரொம்ப பிடித்துப்போன பக்கத்தாத்து ராஜி மாமி அந்த 'வி'யின் அழகில் சொக்கி விஜாரித்த போது "அதுவா..அதுல அவா பேரும் வருதோன்னோ..அதனாலதான் அதுக்கு அத்தனை ஷ்ரேயஸ்.." என்று சொல்லி இந்த வயதிலும் தலை குனிந்து வெட்கச் சிரிப்போடு பட்டுக் கன்னம் சிவந்தாளாம். வாசு மாமாவிற்கு அரைக்கை சட்டை மறைக்காத பாகங்களிலும் காதோரங்களிலும் காடாய் வளர்ந்த புசுபுசு ரோமங்கள். வெள்ளை சட்டை போட்ட நாட்களில் தூரத்தில் நடந்து வரும் போது கருப்பு-வெள்ளையாக தெரிவார். தாவாங்கட்டையில் நம் முகம்பார்க்கும் அளவிற்கு வழவழவென்று கண்ணாடி போல் மழிக்கப்பட்ட முகம். சிகப்பு பச்சையில் ஒரு ஜான் அளவிற்கு மயில்கண் பார்டர் போட்ட எட்டுமுழம் வேஷ்டி. ஆறடி நிலைப்படியில் அரையடி தலையை குனிந்து உள்ளே செல்லும் உயரம் இருந்ததால் கனுக்காலுக்கு மேலேயே வேஷ்டி நின்றுவிடும். "சுஜா...ஆ...ஆ." என்று காதைக் கிழிக்கும் டெசிபலில் வாசலில் இருந்து ரேழியை பார்த்து கூப்பிடும் போது குரலில் அஞ்சு நயா பைசா விலை குறைக்காத கறிகாய்காரனின் கறார்த்தனம் இருந்ததாக நேற்று வாய் பிளந்து வேடிக்கை பார்த்த ஸ்ரீதர் சொன்னான்.

"யா......ர்ர்ர்ர்ர்டா அது?" என்று கண்களில் பல்பு எரிய திறந்த வாய் மூடாமல் ஜொள்ளாறு வழிய கேட்டான் சுதர்சன். அப்படி ஒரு சுண்டி இழுக்கும் அழகை அவன் வயதுக்கு வந்தவுடன் இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் சை அடிக்கிறான். அவனுள் அனைத்து ஹார்மோன்களும் காலை சுழற்றி பாலே நடனம் ஆடின. தமிழ் மலையாள சினிமாக்களில் அவன் பார்த்த அத்தனை சொப்பன சுந்தரிகளும் வரிசையாய் வந்து குத்து டான்ஸ் ஆடிவிட்டு போனார்கள். அவன் சிந்தையை ஸ்வீகரித்த அவளை பார்த்து சித்தம் இழந்தான். இந்தப் பாராவின் முதல் கேள்வியை ரிப்பீட்டினான்.

கார்த்தால அஞ்சரை மணி ஸ்ரீனிவாசா ரோடுவேஸில் தான் ஸ்ரீரங்கத்தில் இருந்து அத்தை பெண்ணுக்கு விவாஹம் முடிந்ததும் கட்டிசாக் கூடை கட்டி சென்னை அனுப்பிவிட்ட கையோடு வந்திறங்கினான். வீட்டு வாசலில் ஐந்து நிமிடம் நிறுத்தி அத்தனை மூட்டை முடிச்சுகளுடன் மொத்த குடும்பமும் இறங்கினார்கள். அவன் கேட்ட ஒன்ஸ் மோர் கேள்விக்கு "ஸு...ஸு...ஸு.... சுஜாடா..." என்று அவனைப் போலவே ஒரு பரவச நிலையில் திறந்த வாய் முடாமல் வெயிட் லூஸான குக்கர் போல "ஸு..ஸு.." ஊதி கூடவே எக்ஸ்ட்ரா ரெண்டு எம்.எம். புன்னகையோடு சொன்னவன் நானா என்கிற நாராயணன். முந்தாநாள் வாசற்படியில் உட்கார்ந்து தெருவில் வருவோர் போவோரை பிலாக்கு பார்த்துக்கொண்டு வெட்டியாக உட்கார்ந்தபோது "தம்பி.. கொஞ்சம் இங்க வாங்களேன்.. ப்ளீஸ்..." என்று அழைத்த வாசுதேவனின் குரலுக்கு வேட்டி அவிழ ஓடோடி சென்று வேனில் இருந்து காத்ரெஜ் பீரோ இறக்குவதற்கு ஒரு கை கொடுத்து சுமந்து களப்பணியாற்றியவன்.

முந்தாநாள் வரை நாற வாய் நாராயணனாக இருந்தவன் "சுஜா" சொன்னவுடன் நல்ல வாய் நானா ஆனான். "சுஜா அன்னநடை பயின்றாள்", "திருவாரூர் தேர் போல நடக்கிறாள்" போன்ற கிளிஷேக்களை உபயோகிக்காமல் "அடாடா..டா... தரையில கால் பாவாம மோகினியாட்டம் நடந்து போறாளே.. தரைக்கு வலிக்குமோ காலுக்கு வலிக்குமொன்னு வெண்ணை மாதிரி வழுக்கிண்டு போறாளே.. " என்று "உச்"சை மூன்று தடவை ஒட்டு மாங்காய் சப்பிய வாயாக கொட்டினான். தலைக்கு ஸ்நானம் பண்ணி ஈரம் காய்வதற்காக பின்னாமல் சேர நன்னாட்டிளம் பெண் போல கேசம் விசிறியாட விரித்து விட்டுக் கொண்டு பின்சட்டையின் அடிபாக ஈரத்தோடு சென்றாள். நூறு வாட்ஸ் கண்களுக்கு ஓரங்களில் மையெழுதி அதன் பிரகாசத்தை இன்னும் ரெண்டு வாட் கூட்டினாள். நடு வகிடு எடுத்த பின்பு வலது இடது புறங்களில் அடங்காமல் காற்றில் ஆடித் திரிந்த ஒன்றிரண்டு ரோமங்கள் அந்தப் பிரதேசத்தை ரொமான்டிக்காக காண்பித்தது. வகிடிர்க்கும் அதன் கீழ் இருக்கும் சிங்காரி அணிந்த சிங்கார் பொட்டிற்கும் சரியாக தொண்ணூறு பாகையில் இருந்தது அவளது முகத்தின் வடிவத்தில் ஒரு எம்.எம். கூட தப்பு செய்யாத பிரம்மனின் தொழில் சுத்தத்தை காண்பித்தது. ஜிமிக்கி தன்னை மாட்டிய இடம் உயர்ந்த இடம் என்பதால் அவள் நடக்க நடக்க ஆனந்த நடனமாடியது. ஒன்றிரண்டு பருப் பவிழங்கள் கன்னத்தில் எட்டிப்பார்த்தது செக்ஸியாக இருந்தது. மற்ற இடங்கள் அவளின் அந்த வயசை எடுத்துக் காட்டின. பாவாடைக்கு கீழே நாலுவிரக்கடை அளவு தெரிந்த செங் காலில் தெருப்புழுதி ஏற கூச்சப்பட்டிருந்தது. செருப்பு கர்வமுடன் அந்தக் காலோடு ஒட்டி உறவாடிக்கொண்டது. "எந்த வீடுடா.." என்று கண்ணின் மையப் பார்வையை விளக்காமல் கேட்ட கேள்விக்கும் நானா "ஏ..ஏ..ஏ..ழு..." என்று ஆச்சர்யமூட்டும் திடீர் திக்குவாயால் அவதிப்பட்டு பதில் சொல்ல சிரமப்பட்டான். இந்த ஆச்சர்ய பார்வைகளும், திடீர் திக்குவாய்களும், சலவை செய்யப் பட்ட சட்டைகளும், பாடிய வாரிய முடிகளும், அம்மா சொல் கேட்கும் பிள்ளைகளாகவும் அந்த தெரு பசங்கள் ஒரு மகோன்னத நிலையை அடைந்தார்கள். ஓர் ஆண்டு சுஜா காலடியிலும் கண்னடியிலும் உருண்டு ஓடியது.

சைக்கிளை பூப்போல எடுத்து நோகாமல் அந்தப் பெண் ஓட்டும்போது மனசை ஹாண்டில் பண்ண முடியாமல் பாரில் போய் விழுந்துவிடுவார்கள். போன வாரம் சனிக்கிழமை வேதியல் சிறப்பு வகுப்பிற்கு போனவளை நூல்விடுவதர்க்காக "எடுடா சைக்கிளை" என்று பாபுவை கிளப்பி, பின்னால் காரியரில் ரெண்டு காலையும் பரப்பி போட்டுக்கொண்டு கை காலை ஆட்டி ஹீரோ வேலை செய்த சுதர்சனின் கோணங்கித் தனம் ஜம்போ சர்க்கஸ் கோமாளி கூட தான் வாழ்நாளில் செய்திருக்கமாட்டான். அவனது ஜாதகப் பயனால் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் ஒரு நாள் எதேச்சையாக அவளது சைக்கிள் செயின் கழல எந்நேரமும் குட்டிப் போட்ட பூனை போல ஆறடியில் அவளை சுற்றிவந்தவன் பாய்ந்து உதவிக்கரம் நீட்டினான். மாட்டி விட்டதற்கு "தேங்க்ஸ்" என்று அவள் சொன்ன போது கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகி சட்டென்று "கிர்ர்..கிர்ர்."ரென்று தலையை சுற்றிக் கொண்டு வந்தது அவனுக்கு. கிரீஸ் அப்பிய கையை வியப்பில் நெற்றியில் வைத்து ஒரு கருப்புப் பட்டை போட்டுக்கொண்டான். உலகத்தின் அதிசிறந்த அசட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்து "நோ மென்ஷன்" சொன்னான்.

அன்று இரவு யார் பேசினாலும் அது அவள் குரலில் தேங்க்ஸாக அவனுக்குள் இறங்கியது. அவள் பார்த்த கூர்ப் பார்வையில் மூளை மழுங்கியது. ஒன்றிரண்டு தடவை அவனின் கிராமத்து தமிழ்ப் பாட்டிக்கு கூட சாதம் பரிமாறும் போது இங்கிலீஷில் "நோ மென்ஷன்" னென்று பிதற்றினான். பாட்டி பொக்கை காட்டி கன்னத்தில் யானைப் பள்ளம் விழ சிரித்தது. சாப்பிடும் போது தட்டை வழித்துச் சாப்பிட்டது போக கடைசியாக தயிர் ஈரம் தோய்ந்த இடத்தில் ஆட்காட்டி விரலால் "சுஜா சுதர்சன்" என்று கிறுக்கி பார்த்தான். ஊர் உறங்கிய பிறகு நடுஜாமத்தில் கூட வாசல் படிக்கட்டில் வந்து உட்கார்ந்துகொண்டு சாலை விளக்கில் அவள் வீட்டையே ஒரு புண்ணிய க்ஷேத்ரமாக எண்ணிக்கொண்டு பக்தியாக பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளாத குறையாக பரவசமடைந்தான். எப்போதும் புன்னகையில் மின்சாரத்தை பாய்ச்சி அந்த சுற்றுவட்டாரத்தையே பிரகாசமா வைத்திருக்கும் அவளை மனதால் வரித்துவிட்டான் சுதர்சன். வீட்டிற்கு விளக்கேற்ற அவளை விட சிறந்த மேட்ச் கிடையாது என்பதை திண்ணமாக முடிவெடுத்தான். காற்றில் காதல் அலைகளில் அவளோடு பறந்தான். அவளுக்கு தன் பிரியத்தை, நேசத்தை, காதலை, அன்பை, லவ்வை, பிரேமையை இப்படி பல வார்த்தைகளில் எப்படி சொல்வது என்று சொல்லகராதி தேடி பிடிபடாத குணா கமலஹாசனாக அவன் தவித்த நேரத்தில் தான் அந்த சம்பவம் நடந்தது.

ராமநவமி திருவிழா கோதண்டராமர் திருக்கோயிலில் தக்கார், தர்மகர்த்தா ஆகியோரின் தாராள தயாள குணத்தால் விமரிசையாக இன மத வேறுபாடின்றி ஆணினமும் பெண்ணினமும் சேர்ந்து கலகலப்பாக கைகோர்த்து கொண்டாடிக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நான் என்றான் என்று ஹீரோ ஹோண்டாவில் உள்ளே புகுந்தான் சுரேஷ். மைனர்வாளின் மேஜர் வால். வேதியல் வகுப்பிற்கு பக்கத்துவீட்டு பங்களா நாயகன். ஷோக்குப் பேர்வழி. ராமநவமி சிறப்பு உபன்யாசமாக இராம காவியத்தை சொல்லும் ராமபத்ர தீட்சிதர் "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.." என்று காதல் சீன் பாடிச் சொல்லும் போது இருவரும் தங்கள் பார்வையை பரிமாறிக்கொண்டனர். க்ஷண நேரத்தில் திக்குமுக்காடிப் போனான் சுதர்சன். காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போனது போல ஆச்சே என்று நிதானத்தை இழந்தான். பாதிக் கதையில் விறுவிறுவென்று எழுந்து வேஷ்டியை உதறி வேகமாகப் போனான். ஹீரோ ஹோண்டாவை உதைத்து துவம்சம் செய்து கட்டிப் பிரண்டு உருண்டு வேஷ்டி உருவப்பட்டு உள்ளே வி.ஐ.பி தெரிய எல்லோர் கண் முன்னும் வில்லன் ஆனான்.

இரண்டு நாட்கள் வெட்கத்தில் வெளியே தலை காட்டாமல் வீட்டினுள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவிட்டு ஒரு மரணயோகத்தில் வாசலுக்கு வந்து சுஜா வீட்டின் ஓரமாக போய்க்கொண்டிருந்தவனை வாசல் தாழ்வாரத்தில் பக்கத்தில் இருந்த ஒரு ஐம்பது வயது வெள்ளை வேஷ்டி சட்டையிடம் "Indecent Guy" என்று கௌரவ பட்டம் வழங்கிக் கொண்டிருந்தார் வாசு மாமா.

அர்த்தமே புரியாமல் எல்லாவற்றிக்கும் "எலி" சேர்க்க சொன்ன ராஜி மாமி வீட்டு விஷம ஜில்லுவிர்க்கு வாண்டு சிண்ட்டூ... கண்ணில் கைவைத்தவுடன் "கண்ணலி..." மூக்கில் கைவைத்தவுடன் "மூக்கலி..." காதில் கைவைத்தவுடன் "காதலி" என்று சொன்னவுடன் "அச்சச்சோ.... காதலியா..." என்று கையை உதறி சிரித்துக்கொண்டிருந்தது. தெரு முனையில் ஹீரோ ஹோண்டா சைக்கிளுக்கு டாட்டா காட்டிக் கொண்டிருந்தது.

பட உதவி: http://naranammalpuramwelfare.blogspot.com/

-

Sunday, January 23, 2011

எந்தரோ மஹானுபாவுலு

சென்னையின் அதிசயமாக கண் அசராத இந்த வார ஞாயிற்றுக்கிழமை மத்தியானத்தில் கிரஹத்தில் படுத்துருண்ட வயசாளிகளுடன் கொஞ்ச நாழி இசை பற்றி அளவளாவியதில் நாளை நடைபெறும் தியாகராஜா ஆராதனை பற்றியும் பேச்சு வந்தது. நான் பிறந்து வளர்ந்து வம்புபண்ணிய ஊரில் எங்கள் தெருவில் எந்த எந்த ஒரு வார்த்தைக்கும் 'லு' சேர்த்து மட்டும் தெலுங்கு பேசத்தெரிந்த பட்டு&சொர்ணம் என்ற ஐம்பது வயது நிரம்பிய முதிர்கன்னிகளான கொல்டி சிஸ்டேர்ஸ் ரெண்டு பேர் வருஷாவருஷம் ரெண்டு பஸ் மாறி ஆராதனைக்கு திருவையாறு சென்று வருவார்கள். "அவாளுக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் தெரியுமா"ன்னு இந்தப் புண்ணியவானை ஈன்ற புண்ணியவதியிடம் கேட்ட போது "ஆராதனையில நேரா போய் சமாதியில் உட்கார்ந்துண்டு எல்லோரும் பாடறதை கேக்கறதுக்கே நாம புண்ணியம் பண்ணியிருக்கணும். கீர்த்தனை தெரிஞ்சா என்ன தெரியலைன்னா என்ன. நீ இங்க உட்கார்ந்து வெட்டிப் பொழுது போக்கிண்டு வாயரட்டை அடிச்சுண்டு இருக்கரதுக்கு அது எவ்வளவோ தேவலாம்." என்று ஒரே போடாய் போட்டாள். சில மாதங்களுக்கு முன்னால் முன்னட்டையில் இருந்து பின்னட்டை வரை பொழுது போகாத போது நினைத்த பக்கத்தை புக் கிரிக்கெட் விளையாடுவது போல புரட்டிப் பிரித்து படித்த The Devadasi and the Saint  என்ற வி.ஸ்ரீராம் புத்தகத்தில் இருந்த சில விஷயங்கள் ஞாபகம் வந்தது. அவற்றிலிருந்து சில துளிகள்...
thyagarajar

ஜனவரி ஆறாம் தேதி 1847- ம் வருடம் தியாகராஜர் சமாதியடைந்தார். அப்போதைய காலகட்டத்தில் அவரின் சிஷ்யர்களால் தோற்றுவிக்கப்பட்ட இசைப் பள்ளிகள் மூன்று. வாலாஜாபேட், தில்லைஸ்தானம் மற்றும் உமையாள்புரம். தியாகராஜர் சமாதியடைந்ததை நேரில் பார்த்த வாலாஜாபேட் கிருஷ்ணஸ்வாமி பாகவதர் "தை மாசம், அமாவாசைக்கு அஞ்சு நாள் முன்னாடி அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. பிரபவ வருஷம். கார்த்தால காவேரி போய் குளிச்சுட்டு பூஜை புனஸ்காரங்களை செஞ்சார். ஏழைகளுக்கும் ப்ராம்மனர்களுக்கும் தன்னால ஆனதை கொடுத்துட்டு, எல்லோரும் பஜனை பாட அப்படியே அந்த நாத கோஷத்துக்கு இடையே அப்படியே பிரம்மத்தோடு கலந்துட்டார்" என்று அதிசயத்திருக்கிறார்.

தியாகப்ரம்மம் சமாதியான தினத்தில் ஸ்ரார்த்தம் செய்து அவரின் சில கீர்த்தனைகள் பாடி ஆராதனையாக கொண்டாடிவந்தனர் அவரின் பேரன்கள். ஆனால் இந்த ஆராதனை திருமஞ்சன வீதியில் இருந்த அவருடைய மூதாதையர்களின் இல்லத்தில் நடைபெற்றது. தியாகராஜரின் நேரடி சிஷ்யர்களான உமையாள்புரம் சகோதரர்கள் 1903 -ம் வருஷம் சமாதிக்கு வந்தபோது செடி கொடிகளாலும் முட்புதர்களாய் மூடி இருந்த இடத்தை பார்த்து மிகவும் வருத்தமடைந்தனர். தில்லைஸ்தானம் பள்ளியின் ராமா அய்யங்கார் மற்றும் சில இசைக்கலைஞர்களின் துணை கொண்டு கடப்பா கற்களை கொண்டு சமாதியை புனருத்தாரணம் செய்தனர்.

அந்தக் காலத்தில் பெண்கள் தியாகராஜர் சமாதியில் பாடி அஞ்சலி செலுத்த அனுமதி இல்லாமல் இருந்தது. இந்த கால இ.காங்கிரஸ் போல ஆராதனை கொண்டாடுவதிலும் அந்த காலத்தில் உட்கட்சி பூசல் இருந்தது. பெரிய கட்சி(நரசிம்ம பாகவதர்) மற்றும் சின்ன கட்சி(பஞ்சு பாகவதர்) என்று இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து கீர்த்தனாஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். இக்கால மார்கழி சங்கீத சீசன் போல பாட்டோடு சேர்த்து போஜனமும் பிரியமாக எல்லோருக்கும் திருவையாற்றில் பரிமாறப்பட்டது. 

இதுபோன்ற இன்னும் நிறைய நுணுக்கமான செய்திகள் இருந்தன. 

தியாகராஜர் ஸ்பெஷல் ஆக பாடல் போடலாம் என்று தோன்றியபோது, ஒரு பெரிய கீற்றுக் கொட்டகையின் கீழ் ஆண் பால் பெண் பாலாய் டீம் பிரித்து எதிர் எதிரே அமர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனை பாடும் வீடியோ காட்சிகள் நிறைய கிடைத்தன. எல்லாவற்றிலும் சுதா ரகுனாதன் நடு நாயகம். மேக்கப் போட்ட இசை அரசிகள் எதிரே கொஞ்சூண்டு கூச்சத்தோடு மேலுக்கு பட்டு அங்கவஸ்திரம் போர்த்தி சங்கீத விற்பன்னர்கள் தாளம் தட்டி பாடுவதை சாதா டி.வியில் (தூர்தர்ஷன்) லைவாக நாளை பார்க்கலாம் என்பதற்காக எனது வலைப்பூவிற்கு பிரத்யேகமாக நான் அழைத்து வந்த சில கீர்த்தனைகள் கீழே...

காதாநாயகியின் அன்புக்குகந்த அப்பாவாக எல்லாப் படத்திலும் அமைதியாக நடித்த நாகையா இந்தத் தெலுங்கு படத்தில் தியாகப் பிரம்மமாக நடித்துப் பாடிய "எந்தரோ மஹானுபாவுலு". இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1946. படத்தின் பெயர் தியாகய்யா. பழயமுது விரும்பும் நம் இணைய கூட்டாளிகளுக்காக அவர்களே பார்த்திராத பாடல்.  "என்னம்மா.." என்று பெண்ணிடம் ஆதரவாக பேசி மட்டும் கேட்ட நாகையா நன்றாக பாடுவார் என்பது  இன்று தெரிந்து கொண்ட ஒரு பொதுஅறிவு. நாகையாவிர்க்கு அருமையான குரல்வளம். செவிக்கின்பம்.




இதே படத்தில் புரந்தரதாசர் கிருதியான ராம மந்த்ரவ ஜபிசோ பாடிக்கொண்டு உஞ்சவ்ருத்திக்கு வரும் தியாகராஜர். சிறுவயதில் பர்வதம்மாவை பால்ய விவாஹம் புரிந்த தியாகராஜர் இளம் வயதிலேயே அவரை இழந்தார். முதல் மனைவி இறந்ததும் இரண்டாம் தாரமாக கமலாம்பாவை மணம் புரிந்தார். இந்தக் காட்சியில் அவரது துணைவியார்தான்!



ஜெய ஜானகி ப்ராண நாயக... ஜெகதானந்தாகாரகா. M(asters in).S(inging) அம்மாவின் தெய்வீக இசை வெள்ளத்தில்.



ராமன் கேட்ட காதுகள் கொஞ்சம் கிருஷ்ணன் கேட்கட்டும். ராமரை புகழ்ந்த வாயால் தியாகப்ரம்மம் பாடிய கிருஷ்ணன் பாடல். பஞ்ச ரத்னங்களில் ஒன்றாக.. பால முரளி கிருஷ்ணா பாடிய சாதிஞ்சனே.. வீடியோ முழுக்க வரும் மனமயக்கும் கண்ணன் படங்களை காணத் தவறாதீர்கள். 



இந்த வரிசையின் கடைசியில்... சகலலோக நாயகி... ஸ்ரீ வித்யா ரூபினி.. வருங்கால நித்யஷ்ரி.. இந்த ப்ளாக் எழுதும் ஆர்.வி.எஸ்ஸின் குலக்கொழுந்து ஆர்.வி.வினயா. (ஒரு வருடத்திற்கு முன் இளம் பாடகர்களை ஊக்குவிக்கும் ஒரு மேடையில் பாடியது....)



பின் குறிப்பு: இத்தோடு இந்த சங்கீத சீசனுக்கும் எண்டு கார்டு போட்டாச்சு. இதுபோன்ற தொடர் தொந்தரவை ரசித்த எல்லோருக்கும் இருகரம் தூக்கி ஒரு பெரிய அரசியல்வாதி கும்பிடு. அடுத்ததா ஒரு காதல் கதை எழுதுவோம். காமன் கையை பிடிச்சி கம்பெல் பண்றார்!!

பட உதவி: ஸ்ரீராமசந்திர மூர்த்தியின் படத்தை கொடுத்தருளிய கல்லிடை கிருஷ்ணர்... தக்குடு.. தக்குடு....தக்குடு... அவர்கள்.

-

Friday, January 21, 2011

கையெழுத்து தலையெழுத்து

நாலு வரி நோட்டு ரெட்டை வரி நோட்டு என்று ரகம் வாரியாக வரி வரியா நோட்டு வாங்கி பக்கம் பக்கமா எழுதியும் கோட்டுக்குள்ளேயும் வெளியேயும் வரவேண்டிய எழுத்தின் தலை மற்றும் கால் பாகங்கள் நீட்டிக்கொண்டும் விரைத்துக்கொண்டும் நெளிந்தும் கோனிக்கொண்டும் சரியாக வராமல் துருத்திக்கொண்டு என்னை ஏமாற்றி எகத்தாளமாக நொண்டியடித்த பாடசாலையில் படிக்கும் பருவம் அது. மேல்கோடு பார்த்தா கீழ்கோடு பாலன்ஸ் போய்டும். கீழயும் மேலையும் பார்த்தா நடுவுல சரிஞ்சுடும். "நீட்டுடா கையை.." என்று நாக்கை மடக்கி கண்ணிரண்டையும் மோத்தா கோலி மாதிரி முழிச்சு கைகளில் மாஸ்டரிடம் இருந்து வரி விழும்படி பிரம்படி வாங்கினாலும் வலிக்கு உதறின கை ஒழுங்காக எழுத வளையவில்லை. எவ்ளோ தடவை சொல்லிக்கொடுத்தாலும் எங்க நீட்டனும் எங்க வளைக்கனும்ன்னு தெரியாம "கோழி கிறுக்கின மாதிரி எழுதறான்டா" என்று வாத்தியாரிடம் பாராட்டு பத்திரம் வாங்கியது தான் மிச்சம். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல அன்ரூலியாக ஒரு அன்ரூல்ட் பேப்பர் கொடுத்து ஒரு நாள் வாழை மரம் கட்டுரை எழுத சொன்ன போது மன்னார்குடியில் கிளம்பி கும்பகோணம், வடலூர், சேத்தியாதோப்பு, பண்ருட்டி, திண்டிவனம் என்று சாலை மார்க்கமாக சென்னை வந்து சேர்ந்தன என் எழுத்துக்கள்.

நீல அரை டிராயர் முதல் பட்டன் போன வெள்ளை சட்டை போட்ட ஏழாவதில் குமரேசு ரெண்டு முட்டையை ஒன்னு மேல ஒன்னு அடுக்கி எட்டுப் போட்டதைப் பார்த்துட்டு வெறுத்து போய் கணக்கு வாத்தியார் கிளாஸுக்கு வராம ரெண்டு நாள் கண் காணாமப் போய்ட்டார். அவனோட சேர்த்து "எவன்டா உனக்கு முட்டை போட்டு எட்டு எழுத சொல்லிக்கொடுத்தான்" என்று அவனுக்கு அரிச்சுவடி சொல்லிக் கொடுத்த வாத்தியாருக்கும் அனாவசியமாய் ஒரு பாட்டு விழுந்தது. வந்த வெறியில குமரேசு அந்த வருஷம் முழுவதும் எட்டு மட்டும் போட்டு பழகினான். ராப்பூரா தோம்ததீம்தா என்று புன்னகை மன்னன் ரேவதி ஆடினா மாதிரி அந்த வருஷம் முழுக்க எட்டெட்டா போட்டு தீர்த்தான். ஃபைனல் பரீட்சையில் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நெட்டை கொக்கு மெக்ராத் பந்து போட்டா பத்து தாண்டாத நம்ம குள்ள வாத்து பேட்ஸ்மேன்கள் மாதிரி ஒற்றை இலக்கத்தில் அதே எட்டு வாங்கி அவுட் ஆனான். நல்லவேளை டக் அவுட் ஆகவில்லை. ஆனால் வாழ்க்கையில் நன்றாக எட்டு போடத் தெரிந்து கொண்டு ஃபாமிலி லைஃப் லைசென்ஸ் வாங்கி எங்கும் குட்டுப் படாமல் இப்போது குடும்பம் குட்டியாய் வசதி வாய்ப்போடு இருப்பதாக தகவல்.

தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம், அன்றிலிருந்து இன்றுவரை கையை விறகு அடுப்பில் காட்டி பழுக்க காய்ச்சினால் கூட (சுட்டுப் போட்டா கூட என்று சொல்வது போல..) அட்சரங்கள் அவலட்சணமாக வந்துத் தொலைக்கிறது. அழகாக எழுதவேண்டும் என்று ஒருநாள் ஆத்ம சங்கல்பம் பண்ணிக்கொண்டு பேனாபிடித்து மெதுவாக எழுத இல்லை.. இல்லை... வரைய ஆரம்பித்தால் குடிகாரன் கைபோல "டிங்கு...டிங்கு..டிங்கு.." என்று ஆடியது. நெர்வஸ் வீக்னஸ் கூட எதுவும் இல்லை. ஆடிய கையில் ஒரு மணியை மாட்டினால் கோயிலில் ஐந்து சந்நிதிக்கு நெய்வேத்தியம் செய்து திரையை திறந்து விடலாம். எங்கேயோ போகிற போக்கில் இதை பார்த்த பெரியவள் "அம்மா.. அப்பா எழுதவே ரொம்ப பயப்படராம்மா.." என்று கூவி வீட்டில் எல்லோருக்கும் தம்பட்டம் அடித்தாள். "என்னன்னா ஏதாவது திகில் கதையா? குலை நடுங்க எழுதறேள்.." என்று வாய்க்கு கிடைத்த அவலாக அவள் மென்றாள். நாம நல்ல நாள்லயே தில்லைநாயகம். இப்போ நாள்பூரா தக்கட தக்கடன்னு (தக்குடு தக்குடுன்னும் தட்டுவோம்) கீபோர்ட் தட்டறோம். இதற்கப்புறம் கேட்கவா வேண்டும். பெரியவளோ சின்னவளோ நாலு வரி நோட்டு எழுதினால் அந்த திக்குக்கே ஒரு கும்பிடு போட்டுவிட்டு கண்டும் காணாதது போல ஆகாத மாமியாரை கண்டு ஷார்ப்பாக மின்னல் வேகத்தில் முகத்தை வெட்டும் நாட்டுப் பெண்ணாய் அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடிக்கிறேன்.

பள்ளி நாளிலிருந்து பெண்களை ஏறெடுத்தும் பார்க்காமல் நான் படித்த ஆண்கள் மட்டும் படித்த துர்பாக்கிய கல்லூரி நாட்கள்  வரை பரீட்சை எழுதும் போது நான் வணங்கும் தெய்வங்களின் புண்ணியத்தால் கோழி கிறுக்கலிலும் கூடை கூடையாய் நிறைய மார்க் வாங்கி தெய்வாதீனமாக பாஸ் பண்ணியிருக்கிறேன் என்று ரெண்டு நாளைக்கு முன்னர் தான் எனக்கு ஸ்திரமாக பட்டது. எம்.சி.ஏவில் SAD (System Analysis and Design) என்ற பேப்பரில் வகுப்பில் முதல் மாணவனாக வந்த போது இப்படி எழுதுவதில் கூட ஒரு சௌகரியம் இருப்பதை தெரிந்துகொண்டேன். "மாப்ள.. எப்படிடா... யாருக்கும் புரியாமலேயே எழுதி ஃபர்ஸ்ட் மார்க் வாங்குற.." என்று என் பிச்சுப் போட்ட ஜாங்கிரி எழுத்துக்களை பார்த்து ஸ்டமக் பர்ன் ஆகி கேட்டதில் அவர்கள் கண் திருஷ்டியில் எனக்கு ரெண்டு நாள் ஜுரம் கண்டுவிட்டது. கண்ணடி தாங்க அந்த நேரத்தில் ஒரு வைராக்கியத்தில் டைப் ரைடிங் கற்றுக்கொண்டு அந்த பேப்பரி கொண்டு போய் வாய்க்கு வந்தது பேசிய மக்களிடம் காண்பித்து இதுவும் என் கையால் எழுதியதுதான். என்ன கையால் எழுதுவதற்கு பதில் தட்டி அடித்து கொண்டுவதிருக்கிறேன் என்று சொல்லிய என்னை ஆகாங்கே தட்டி எடுத்து நிமிர்த்து விட்டார்கள். டிங்கரிங் பார்த்த கார் போல.

இப்படி பலகாலமாக கிறுக்கி எழுதிவந்த நான் முதன் முதலாக மன ஆறுதல் அடைந்தது தஞ்சாவூர் பெரிய கோவிலில்தான். அந்த பளபளா கருங்கற்களில் சோழநாட்டு எழுதப் படிக்க தெரிந்தவர்கள் எழுதியிருந்த கிரந்த எழுத்துக்களை பார்த்து நம்மை விடவும் கேவலமா ஒருத்தன் கிறுக்கியிருக்காண்டா என்று என் தோளை நானே தட்டிக்கொண்டேன். கன்னியாக்குமரியில் விஸ்வரூப தரிசனமாக நிற்கும் நம்ம வள்ளுவர் அண்ணாச்சி எப்படி ஒரு ஆணியை வச்சு பனை ஒலையில  எழுதியிருப்பாரு அப்படின்னு ஐன்ஸ்டைன் மாதிரி யோசித்து பார்த்ததில் மதுரை நாயக்கர் மஹால் அரண்மனையில் பெரிய தூண்களுக்கு ஓரத்தில் ரகசியமாக ஒளிந்து இருந்த தொல்லியல் துறை லைப்ரரியில் ஆதி காலத்தில் இருந்து தமிழ் எழுத்துக்கள் எப்படி உருமாறி இருக்கிறது என்பதற்கான நான் பார்த்த ஐந்தாறு கருங்கற்கள் சான்றுகள் கண்முன்னே தோன்றின. அங்கே 'க'வே பல டிசையன்களில் பார்க்க முடிந்தது. இப்போது நாம் எழுதறது தான் ரொம்ப கஷ்டமான கயொடிக்கும் எழுத்துருக்கள் போலிருக்கிறது. அவர் காலத்தில் ஈசியா எழுதக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். பால் பாய்ன்ட் பேனா கண்டுபிடித்தால் அதற்கு ஜோடியாக கை விரலுக்கு சுளுக்கு ஏற்படும் வகையில் ஜிலேபி எழுத்துக்களாக உருவாக்குகிறார்கள்.

"நீ எழுதறியா இல்லை கிறுக்கலா கையெழுத்து(signature) போடறியா" என்று புருவம் தூக்கி கேட்டவர்களிடம் நான் புன்னகைத்து சர்வ மரியாதையாக சொல்லும் பதில் "கையெழுத்து சரியில்லைனா தலையெழுத்து சரியா இருக்கும்ப்பா.. அப்டீன்னு எங்க பாட்டி சொல்லியிருக்கா..". என்னதான் நான் சால்ஜாப்பு சொன்னாலும் நீங்க நம்பப்போறதில்லை. அப்பன்னா அழகா எழுதுற எல்லாரும் நாட்டுக்கு ஜனாதிபதியா ஆயிட்டாங்களா அப்படின்னு பிரதீபா பாட்டிலை பார்த்ததுக்கு அப்புறம் கூட நீங்க கேட்டீங்கன்னா அதற்க்கு நான் பொறுப்பேற்க முடியாது. ஆனா கீழே நான் இங்க கொடுத்திருக்கற கையெழுத்தை பாருங்க. யாரோடதுன்னு பின்னூட்டத்துல சொல்லுங்க. என்னது "ஆண்டவனாலும் கண்டுபிடிக்க முடியாது ஒரு க்ளூ குடுங்களா..". ஒன்னு இருக்கு சொன்னா எல்லோரும் கரெக்ட்டா சொல்லி அடிச்சு தூள் கிளப்பிடுவீங்க. Magnet... ஏதோ வாய் தவறி உளறிட்டேன்..


Photobucket













-

Wednesday, January 19, 2011

கண்ணாலம் கட்டிக்கிட்ட நாள்


வாரத்தில்
மாதத்தில்
வருடத்தில்
நாட்கள் பல தினுசில் -
உன்னைக் கரம் பற்றிய நாள்
என்றென்றும் என்வாழ்வில்
திருநாளே!!

(இப்படி வரிகளை மடக்கி எழுதியதால்... இக்கவிதை மடக்கு அணி எனும் சிறப்பு அந்தஸ்தை பெறுவதாக வைரமுத்து சிலாகித்து கூறினாராம். மேலும் ஒரு காதல் கவிதையாகவும் மலர்கிறது. )

இன்றைக்கு என்னோட கல்யாண நாள்.  எவ்ளோ நாள் இருந்தாலும் கல்யாண நாள் ஒரு விசேஷ நாள் அப்படின்னு பந்தாவா ஒரு கவுஜை எழுத வரமாட்டேங்குது. கல்யாணமான அடுத்த வருஷம் ஒரு நாள் காலையில தலை ஈரம் காய துண்டு சுத்தி கொண்டை போட்டு, சாம்ப்ராணி மனம் கமழும் வாசனையுடனும் அந்தப் புகையுடனும் மங்களகரமா இந்த மட சாம்பிராணியை எழுப்பி "இன்னிக்கி என்ன நாள்?" என்று ஆர்வமுடன் கேட்ட என் இதய ராணிக்கு "வெள்ளிக்கிழமை" அப்படின்னு பதில் சொல்லிட்டு அனல் பறக்கும் அவள் விழிகளில் இருந்து நக்கீரனாக ஆகாமல் தப்பித்தேன். என்னதான் இருந்தாலும் மூனு முடிச்சு போட்டவன் என்று மன்னித்து "பாவம்.. போனால் போகட்டும்" என்று கண்ணால் தகனம் செய்யாமல் தலையில் அடித்துக்கொண்டு "நீங்க என்னைக் கட்டிக்கிட்ட நாள்" என்றாள். இப்பதானே படுக்கையை விட்டு எழுந்திருக்கிறோம் என்னென்னமோ சொல்றாளே என்று நினைத்து மீண்டும் ஒரு அசட்டுக் கேள்வி கேட்கும்முன் சுதாரித்துக் கொண்டு "ஓ.. இன்னிக்கி நம்மளோட கல்யாண நாள்... கரெக்டா" என்று அசடு வழிய கேட்டு "அதான் நான் முன்னாடியே சொன்னேனே..." என்று சொல்லி வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டாள். 

தீடிரென்று கட்டியிருக்கும் சாரியின் முந்தானையை ஆட்டிக் காட்டி "இந்தப் புடவை எப்ப வாங்கினது தெரியுமா?" இல்லையென்றால் காலை (லேசாக) தூக்கி காண்பித்து "இந்த செருப்பு என்னிக்கி வாங்கினோம் தெரியுமா" போன்ற பொது அறிவுக் கேள்விக் கணைகள் தொடுப்பார்கள். கல்யாணம் பண்ணிய நிறைய 'பேச்சிலர்'களுக்கு இந்த அனுபவம் நிச்சயம் இருக்கும். உலகத்தோடு ஒட்ட ஒழுகி எல்லோரைப் போல பேய் முழி முழித்தபடி 'ஞே' என்று நிற்கும் போது கோபாவேசத்தில் "இது..நம்ம நிச்சயதார்த்த புடவை.." என்று திட்டிவிட்டு எஸ்.எஸ்.எல்.ஸியில் கோட் அடித்த உதவாக்கரை பையன் போல அவர்கள் விடும் அலட்சிய லுக் எழுத்தில் வடிக்க முடியாத ஷேம் ஷேம் பப்பி ஷேம்.

இந்த மரமண்டை மறந்த அந்த சம்பவம் நடந்த வருஷத்தில் இருந்து நிகழும் இந்த அலைக்கற்றை ஆண்டு வரை மறக்காத வகையில் மூளையில் உள்ள முடிச்சுகளில் ஒரு ஸ்பெஷல் 'கல்யாண' ந்யூரான் ஒன்றை கண்டுபிடித்து ஆணி அடித்தாற்போல் இந்த சுப தேதி நினைவடுக்கில் பச்சென்று ஒட்டிக்கொண்டது. இந்த வருஷம் "கலியுகத்தின் கல்யாண ராமனே!!" அப்படின்னு வீட்டு வாசலில் ரெண்டு பேர் முதல் மாடி வரை எட்டும் மெகா சைஸ் விண்ணளவு ஃப்ளெக்ஸ் பானேர் வைப்பது போன்ற கனவு வேற முதல் நாள் தூக்கத்தில் எக்ஸ்ட்ரா பிட்டிங்காக வந்தது.  இந்த அரசியல்வாதிகள் ரொம்பவே நம்மள கெடுத்துட்டாங்கப்பா! சென்னையின் எந்த குறுக்கு சந்து முட்டு சந்தில் கூட ஏதாவது வார்டு கவுன்சிலர் படம் போட்டாவது பத்துக்கு பத்து சைசில் வாழ்த்து பேனர் ஒன்று இல்லையென்றால் அது சென்னை இல்லை. மகாத்மா காந்தி சிலையை மறைத்து "வாழும் மகாத்மாவே" என்று ஏதோ ஒரு பாப ஆத்மாவிற்கு பதாகை வைக்கிறார்கள்.

இன்றைக்கு எனக்கு உதித்த ஒரு அபூர்வ சிந்தனை என்னவென்றால் தசரதருக்கு பதினாறாயிரம் பொண்டாட்டிகளாம். அப்படியிருந்தால் அவர் அனுதினமும் மேரேஜ் டே கொண்டாடினாரா? அப்படி கொண்டாடி இருந்தால் எந்த நாள் எந்த ராணியுடன் விவாஹம் செய்துகொண்டோம் என்று சொல்வதற்கு காலேண்டர் மற்றும் ஷெட்யூலர் இருந்ததா? யார் ப்ரோக்ராம் மேனேஜர்? சராசரியாக ஒரு நாளைக்கு 43.83 ராணிகளுடன் கல்யாண நாள் கொண்டாடினால் தான் ஒருவருடத்தில் தசரதர் அந்தப்புரத்தில் இருந்த அத்துணை பேருடனும் மேரேஜ் டே கொண்டாடியிருக்க முடியும். தசரதருக்கு அப்புறம் உடனே நினைவுக்கு வந்த அடுத்தவர் பெருமாள். திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள். காலவ மகரிஷியின் வருட நாட்கள் கணக்கில் பெற்ற அணைத்து பெண் செல்வங்களையும் தினத்துக்கு ஒவ்வொருவராக டைம் டேபிள் போட்டு திருமணம் செய்துகொண்ட சர்வ கல்யாண குணங்கள் நிரம்பிய நித்யவரதர். திருமணத்தின் போது மாப்பிள்ளைகளுக்கு வைக்கும் திருஷ்டி பொட்டு இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவ மூர்த்திக்கும் கன்னத்தில் வைக்கப்படுவது இத்தலத்தின் தனிச் சிறப்பு.

மத்தபடி...
பசங்க கர்க்கள்லையே ஸ்கூலுக்கு போயாச்சு....
ஆளுக்கு ரெண்டு இட்டிலியை உள்ளே தள்ளி ஆபிசுக்கு வந்தாச்சு..
சாயந்திரம் வரை கழுதை பொதி சுமப்பது மாதிரி வேலை செய்யணும்...
ஆட்டோகாரரிடம்  இடிபடாமலும் பஸ்காரரிடம் சொட்டை வாங்காமலும் வண்டி ஓட்டனும்..
ராத்திரிக்கா வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு படுத்துறங்கனும்...

ஜி.நாகராஜன் நாவல் தலைப்பை கொஞ்சம் உல்டா பண்ணினால்...
இன்று மற்றுமொரு நாளே...


nama shivaya


பட குறிப்பு: மேற்கண்ட சிவபெருமான் படம் இன்றைக்கு வாழ்த்தாக என் நண்பர் அனுப்பியது என் பாக்கியமே.

உங்கள் வாழ்த்துகளுக்கு அட்வான்ஸ் நன்றிகள்!

-

Monday, January 17, 2011

ரிஷப்ஷன்

ஊரெங்கும் ஆண்பிள்ளைகளுக்கு கால் கட்டு இறுக்கிப் போடும் விழாவிற்கோ அல்லது ஸ்திரீகளுக்கு மூக்கணாங் கயிறு கட்டும் முஹூர்த்ததிர்க்கு முதல் நாள் சாயந்திரமோ அல்லது அடுத்த நாள் அந்தி வேளையிலோ க்யூ கட்டி நின்று கிஃப்ட் கொடுத்து கூட்டம் கூட்டமாக சிரித்துக்கொண்டு, ஒரு காயில் ஒயர் கழுத்தை சுற்றி மாலையாக போட்டுக்கொண்டு பாலான்ஸ் தவறாமல் சேர் மேல் ஒரு கழைக் கூத்தாடியின் லாவகத்துடன் ஏறி வீடியோ மற்றும் புகைப்படம் பிடிப்பவருக்கு அனைவரும் போஸ் கொடுக்கும் ஒரு நன்நாள் ரிசெப்ஷன். கல்யாணப் பையன் கோட் ஷூட் (அன்றைக்கு மட்டும்) அணிந்து, வுட்லாண்ட்ஸ் ஷு மாட்டி, நவநாகரீக யுவனாய் கல்யாண பரபரப்பில் இளமை குறுகுறுப்பில் மணமகள் அருகில் நெஞ்சம் தடதடக்க நிற்பான்.

ஆறு மணி ரிஷப்ஷனுக்கு நான்கு மணிக்கே மகளிர் ஒரு கூட்டமாக சென்று லாக்மே மற்றும் கிரீன் ட்ரெண்ட்ஸ் போன்ற அழகு நிலையங்களை முற்றுகையிட்டு முழு (நிலவான) முகத்தை பலவிதமான கிரீம்கள் மற்றும் பசைகள் பூசி அழகுக்கு மெழுகு சேர்த்துக் கொண்டு, முழங்கை வரை இருகைகளிலும் கம்ப்யூட்டர் டிசையனில் மெஹந்தி வரைந்து, தலைக்கு விதவிதமான கொண்டையிட்டு வெண்மணிகள் குத்தி, ரத்தம் குடித்த வாயாக உதட்டை மாற்றி, சிருங்கார சிங்காரிகளாய் ஃபான்ஸி ஸாரி உடுத்தி பரவசமாய் பம்பரமாய் சுற்றுவார்கள். புது மாப்பிள்ளைக்கு "இவளைப் பார்த்த அன்றைக்கு இது போல் கோலாகலமாக இருந்திருந்தால் சுயம்வரம் போல செலெக்ட் பண்ணுவதற்கு நமக்கு நிறைய ஆப்ஷன் கிடைத்திருக்குமே" என்று பக்கத்தில் நிற்பவளை பார்த்து ஏக்க ஆதங்கம் மனதில் பொங்கும். மணப்பெண் யார் மணமான பெண்கள் யார் என்று  வித்தியாசம் பாராட்ட முடியாத வகையில் போட்டி போட்டுக்கொண்டு முகத்தில் க்ரீம் வழிய அழகுப் பெண்டிராக அணிவகுப்பர். எல்லோரும் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை போன்ற தேவலோக அப்சரஸ்களின் பூலோக அவதாரங்களாக இல்லை.. இல்லை... பிரதிகளாக அவதானித்துக் கொள்வார்கள். இந்த மேக்கப்பில் தொட்டு தாலி கட்டி புருஷன் கூட சில சமயம் "நம்ம ஆளா அது" என்று அடையாளம் கண்டுபிடிக்க சிரமப்படுவார்கள். பிள்ளைகளை ஓடியாடி மேய்த்துக்கொண்டு அவர்களுக்கு ஜூஸ் சிப்ஸ் போன்ற பதார்த்தம் வாங்கிகொடுத்து அழுதால் சமாதானம் பண்ணி ஒரு கம்ப்ளீட் பேபி சிட்டிங் ப்ரோஃபைல் மெயின்டன் செய்வார்கள்.
rajini wedding reception
ரிஷப்ஷனில் ரஜினிக்கும் அதே நிலைதான்!!!


எல்லோருக்கும் தோள் வலிக்க கைகொடுத்து, வாய் அசர வணக்கம் சொல்லி, நட்புகளின் தோளோடு தோள் கோர்த்து, தூரத்து சொந்தங்களின் ஒன்று விட்டு ரெண்டு விட்டு மூனு விட்ட பாட்டியை முதற்கொண்டு குசலம் விசாரித்து புன்னகை மாறாமல் பற்பசை விளம்பரம் போல வீடியோவிற்கு போஸ் கொடுத்து ரிஷப்ஷன் கடமையில் சம்சாரி ஆகப்போகிற மாப்பிள்ளைப் பையன் கஷ்டப்படும் அதே வேளையில் கையில் பிடிலோ, நாதஸ்வரமோ வைத்துக்கொண்டு ரிஷப்ஷன் கச்சேரி வாசிக்கும் கலைஞர்கள் படும் பாடு படு திண்டாட்டமானது. நாதஸ்வரம் வாசிக்கும் வேளையில் அந்த குட்டி மேடைக்கு முன்னே சில விஷம வாண்டுகள் நின்று வாசிக்கும்போது அவர் விடும் ஜொள் ஆறாக வழியும் நாதஸ்வரத்தை எந்த வேளையிலும் வெடுக்கென்று பிடித்து இழுக்கும் அபாயம் உண்டு. கண்ரெண்டும் அந்த விஷமர்களையே நிலைகொண்டு பார்க்க வாத்தியத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு எச்சரிக்கையாக வாசிப்பார். இந்த மாதிரி ஒரு அமர்க்களமான ரிஷப்ஷன் நடந்து கொண்டிருக்கும் போது பழுத்த அனுபவசாலி நாதஸ்வரகார் அண்ணமாச்சாரியாவின் "நானாடி பதுகு நாடகமு..." என்று வாசித்து "தினசரி வாழ்வு ஒரு நாடகம்டா.... நாடகம்டா....." என்ற அர்த்தத்தை கல்யாண மதிமயக்கத்தில் இருக்கும் மாப்பிளைக்கு புரியவைக்க பிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தார். (இங்கு மாப்பிள்ளைக்கு என்று எழுதியிருப்பதால் பெண் சிங்கங்கள் கிளர்ந்து எழுந்து பின்னூட்டத்தில் பதிலடி கும்மி அடிக்கவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்)

சிகப்பு கலரில் பெரிய ராஜா,ராணி சேர் போட்டு மணமக்கள் மேடையில் அமர்ந்து வீடியோ விளக்கின் ஃபிளாஷ் பார்த்தவுடன் அடுத்த கணம் முண்டியடித்துக்கொண்டு முதல் ஆளாய் வாழ்த்துக் கவர் கொடுத்து வீடியோவிற்கு முப்பத்திரெண்டையும் காட்டிவிட்டு குடும்ப ஸகிதம் பந்திக்கு பறந்து கொண்டு சாப்பாட்டு பக்கம் தாவினால் அவருக்கு மூன்று அதிமுக்கிய காரணங்கள் இருக்கும்.
ஒன்று: அவர் மறுநாள் காலை ஒன்பது மணி ஒரு நிமிஷத்திற்குள் டாண்ணு அலுவலகத்தில் ஆஜாராக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்.
இரண்டு: அவர் வீட்டிலிருந்து இந்தக் கல்யாணமண்டபம் முப்பத்தி ஏழு சிக்னல்கள் கடந்து, நார்ப்பத்தைந்து டாஸ்மாக் கடைகள் தாண்டி, ஓராயிரம் பேருந்துகளில் ஓரிரு பேருந்துகள் மட்டும் தடம் பதிக்கும் ஒரு அத்துவான காட்டில் குடித்தனம் நடத்துகிறார் என்று அர்த்தம்.
மூன்று: "அங்கெல்லாம் ஆட்டோ வராது..." என்று வெடுக்கென்று முகத்தை வெட்டி இழுத்துக்கொண்டு சர்ரென்று எதிர்திசையில் பறக்கும் ஆட்டோகாரர்கள் வர மறுக்கும் ரிடர்ன் சவாரி இல்லா வெறி நாய்கள் உலவும் விளக்கில்லா அமாவாசை தெருவில் அவர் குடியிருக்கிறார்.

மேற்கண்ட காரணங்களுக்காக சாப்பாட்டுக்கு பறந்து வந்தால் நமக்கு முன் நாலு பேர் கர்சீப் போட்டு இடம் பிடித்து காத்திருக்கிறார்கள். நாலு இலை தாண்டி தயிர் சாதம் பிசையக் கூப்பிட்ட தன் குழந்தையிடம் போன ஒருவரின் சீட்டில் இன்னொருவர் உட்கார்ந்து விட்டார். திரும்ப வந்து தயிர் சொட்டும் தனது எச்சக் கையை காண்பித்து அவரை எழுப்பி விட்டு விட்டு தான் விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடர்ந்து வெற்றிகரமாக சாப்பிட்டு எழுந்திருந்தார். இம்முறையும் நான்கு நாட்கள் சாப்பிடாத பறக்காவெட்டி போல பாய்ந்து அந்த இடத்தை பிடித்து தனக்கு தக்கவைத்துக் கொண்டார். கொலைவெறியுடன் இந்த சீட்டுக்கு ஆளாய்ப் பறக்கும் அடிதடியை பார்த்த இரண்டு வெளிநாட்டு கனவான்கள் "வோ நோ.... நோ.. வே.. " என்று மோர்க்குழம்பு வாயோடு போஜன அறைக்குள் நுழையவே பயந்தார்கள்.

ஒருவழியாக இறங்கினவரை உள்ளே தள்ளிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டால் வாசலில் தாம்பூலப் பை கொடுப்பவர் முகத்தில் ரசம் வழிய வேறெங்கோ பராக்கு பார்த்துக் கொண்டு நிற்பார். ரெண்டு மூன்று தடவை முன் பக்கம் பின் பக்கம் போய் அவரோடு கபடி விளையாடி ஒரு தேங்காய், முற்றிலும் காய்ந்த சாறில்லா வெற்றிலை ரெண்டு, அதிர்ஷ்டம் இருந்தால் பிய்யாமல் இருக்கும் பாக்கு பொட்டலம் ஒன்று என்று குக்கிங் காண்ட்ராக்டர் ஒரு வாரம் முன்பு போட்டு கொடுத்த பையை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடையை கட்டலாம்.

பின் குறிப்பு: தை பிறந்து பல பேருக்கு கல்யாண யோகம் கைகூடி வந்திருக்கும். நாமும் பத்திரிக்கை கொடுத்த மரியாதைக்கு காசு பணம் போட்டுவிட்டு கை நனைத்து விட்டு வருவோம். நேற்று அட்டென்ட் செய்த ரிஷப்ஷனில் தோன்றிய பதிவு இது. பாதி நேற்று நடந்தது மீதி முன்னேப்பவோ நடந்தது.

பட உதவி: andhrulamusic.com
-



Friday, January 14, 2011

மன்னார்குடி டேஸ் - பொங்கலோ பொங்கல்

sugarcane vendorசந்தைப்பேட்டையிலும், மனிதர்கள் மண்ணை ஈரம் பண்ணாத பேருந்து நிலைய சுற்றுப்புறங்களிலும், தேரடி பெரியகோயில் துவஜஸ்தம்பம் அருகிலும், கீழப்பாலம் மணி டீக்கடை ஓரத்திலும், பெரிய ஆஸ்பத்திரி அருகில் பாலக்காட்டு ஐயர் கிளப் கடை ஜன்னலோரத்திலும், பச்சைப் பசேல் தோகை விரித்து எட்டு அடி உயரத்திற்கு ஆஜானுபாகுவாய் கட்டு கட்டாய் கருப்பிளம் பெண்ணாய் கூட்டமாக வளைந்து நிற்கும் கரும்புகள் விற்பனைக்கு காத்திருந்தால் அதுதான் அந்த வருடத்திய பொங்கலின் முதல் அறிகுறி. உழவர்களும் மண்ணின் மைந்தர்களும் நிரம்பி இருக்கும் மன்னையில் பொங்கல் நாட்கள் ஒரு உற்சாக திருவிழா. பயிர்கள் நாலு போகம் விளைந்த காலங்களும் உண்டு. நல்ல வளமான பூமிதான். சென்னை போல நூறுகளின் மடங்கில் போர் தோண்டி பூமாதேவியை ரொம்ப சிரமப் படுத்தவேண்டாம். அவளை லேசாக வருடி விடுவது போல முப்பது அடிகளில் நல்ல தண்ணீர் கிடைத்த காலம் அது. பக்கத்தில் மாயவரம் பகுதி இதை விட வளமானது, பதினைந்து அடிக்கு ஒரு பைப் இறக்கினால் கூட இளநீர் போன்ற சுவைநீர் முகத்தில் பீச்சியடிக்கும். 

ஊரில் தமிழர்களின் தலைப்பண்டிகையான பொங்கல் மூன்று நாட்கள் குதூகல கொண்டாட்டம். "அப்படிச் சொல்லுய்யா....நாங்களும் யூத்துதானே..." என்று பரதம் ஆடி அபிநயித்து பளீரென்று வெண் பற்கள் தெரிய சிரிக்கும் கார்மேக சாலமன் பாப்பையாவோ "ஆமாண்டி நேத்திக்கு வரும் போது முழுச்சு முழுச்சு கண்ணா முழி பிதுங்கி வெளிய விழற மாதிரி வச்ச கண் வாங்காம பார்த்தானே அவனேதான்" என்று வீட்டில் யாரையும் நோக்காமல் காதுக்கு நோக்கியா கொடுத்து இளசுகள் ரகஸிய அரட்டை அடிக்க உதவும் விஞ்ஞானமோ தொழில்நுட்பமோ ஆக்கிரமிக்காத பொங்கல் நினைவுகள் என்றுமே கரும்பு தான். இப்பெருநாளில் ஊரில் காவி சட்டையோ கருப்பு சட்டையோ பாகுபாடு இல்லாமல் சூரியனுக்கு நன்றி சொல்லும் Thanks Giving பெருவிழா. இந்த பண்டிகையை கருப்பு சட்டை இயற்கைக்கு வந்தனம் என்று சொல்லும். காவி சட்டை சாமி கும்புடுறோம் என்று சொல்லும். விழா நோக்கம் வேறாக இருந்தாலும் மொத்தத்தில் இது ஒரு பண்டிகை நாள் என்ற சந்தோஷ ஜுரம் எல்லோருக்கும் பற்றிக்கொள்ளும்.

மார்கழி மாசத்தின் மிச்ச சொச்ச குளிர் இன்னும் இருக்கையில் வரும் போகி தினம் பழசை எரிக்கவும் குளிர் காயவும் தோதாக இருக்கும் நாள். எல்லோர் வீட்டிலும் நிச்சயம் கிழிந்த பழைய கோரைப் பாய் எப்படி ஒவ்வொரு போகிக்கும் எரிக்கப்படுகிறது என்பது விடை காண முடியாத கேள்வி. ஒற்றை ஹவாய் செருப்பு, காது போன நைலான் மற்றும் நாலு மாசம் தவணை முறையில் பின்னிய ஒயர்க் கூடை, பஞ்சு போன தலைகாணி, உடைந்து போன முக்காலி என்று சகலமும் எறியும் நெருப்பிற்கு ஆஹுதியாக இடப்படும். இப்படி தீ நன்றாக பற்றிக்கொண்டு திகுதிகு என்று எரியும் போது கோபி தீபாவளி முடிந்து ரொம்ப நாள் கழித்து ரகசியமாக பாதுகாத்து வைத்த பச்சை நூல் இறுக்கி சுற்றிய ஆட்டம் பாம் ஒன்றை எரிகிற கொள்ளியில் அசால்ட்டாக தூக்கிப் போட்டான். அது வெடித்து சிதறி அந்தப் பழம் பாயின் தீப்பிடித்த கோரை ஒன்று அப்போது அன்னநடை பயின்ற எங்கள் தெரு அப்சரஸ் ஒருத்தியின் புதுப் பட்டுப் பாவாடையில் விழுந்து பட்ட இடம் பொசுங்க... அவள் குய்யோ முறையோ என்று அலற... பாம் போட்டவன் தப்பிக்க... ஒரு பாவமும் அறியாத இந்த பச்ச 'மண்ணு' மாட்ட... ஏற்பட்ட ரகளையில் ஒரே அமளி துமளி ஆகிப்போனது ஒரு பழைய போகி நாளின் கதை. போகியில் கண்டது கடயதை எரித்தாலும் பொறாமை, பொச்சரிப்பு போன்றவைகளை எரிப்பதற்கு யாரும் முயலவில்லை முன்வருவதும் இல்லை. அதெல்லாம் பத்திக்காது போலருக்கு.
pongal paanai

பொங்கலன்று வேங்குழல் ஊதும் கிருஷ்ண பரமாத்மா போல் எல்லோர் கையிலும் கரும்பென்ற கருப்பு ஃபுளூட் இருக்கும். தோகையையும் அடிவேர்ப் பகுதியில் கொஞ்சமும் விட்டு வெட்டிவிட்டு நம்மை விடப் பெரிதாக இருக்கும் கரும்புடன் மதில் கட்டையில் கூடுவோம். இடுப்பில் மடித்துக் கட்டிய வேஷ்டியும் நெற்றியில் விபூதிப் பட்டையும் ஒரு கையில் மடாதிபதி போல கரும்பும் வைத்திருக்கும் என்னைப் பார்த்து நவயுக பட்டினத்தார் என்று ஒன்றிரண்டு மாமிகள் சிலாகித்தார்கள் என்று ஸ்ரீராம் சொன்னான். ஒரு வார்த்தை பேசிவிட்டு முன்பற்களால் தோலை இழுத்து இழுத்து துப்பிவிட்டு ஐந்துமுறை கடித்து கரும்புச்சாறு உள்ளே போன பின்னர் மறுபடியும் அடுத்த வார்த்தை வாயிலிருந்து வெளிவரும். உட்காரும் மதில் அளவிற்கு துப்பிய கரும்பு சக்கை சேர்ந்து விடும். ஒரு தெருவே கூடி நின்று கரும்பு சாப்பிட்டது அங்கேதான். பொங்கலன்று ஆரம்பிக்கும் கரும்புத் தீனி நிச்சயம் ஒரு வாரம் வரை இருக்கும். சூடு தாங்காமல் வாயின் இரு ஓரத்திலும் புண்ணாகி வாய்வெந்து நொந்து போனவர்களும் எங்கள் திருக்கூட்டத்தில் உண்டு. கொஞ்சம் குண்டாக உருண்டு வரும் அப்புவை பார்த்து கையை துதிக்கை போல ஆட்டி பிளிறி ரெண்டு கரும்பு துண்டங்கள் வெட்டிக் கொடுத்து அதே தும்பிக்கையால் அடி ஆசீர்வாதம் பெற்றான் ஸ்ரீராம். 

அது பாவாடை தாவணிகளின் பொற்காலம். பொங்கலுக்கு பல வர்ண ஹாஃப் சாரிகளில் பதினெட்டுகள் வலம் வரும். Ethnic dressing. மாந்தளிர் மேனிக்கு அவர்கள் அணியும் அரக்கு கலர் ஹாஃப் ஸாரி பல விடலைகளின் ராத்தூக்கத்தை கெடுக்கும். பி.எஸ்.ஏ கம்பெனியினர் பெண்களுக்கு பார் இல்லா சைக்கிள் விட்டிருந்த காலம். சுரேஷ் நதியா ஜோடி திரைப்படங்களில் தனித்தனி சைக்கிள்களில் ஜோடியாய் சுற்றிய காலம். பாவாடை தாவணிகள் சைக்கிள் ஓட்டும்போது சக்கரத்தில் சிக்காதா அதை எடுத்துவிட மாட்டோமா என்று சைக்கிள் சீட்டுக்கு மேலே பார்க்காமல் கீழேயே பார்த்துக் கொண்டு 'பொண்'னான வாய்ப்பை தவறவிட்ட ப்ரஹஸ்பதிகளும் உண்டு. அக்கா தங்கைகளுக்கு பொங்க காசு கொடுக்க அக்கம்பக்கம் அயலூர்காரர்கள் கூடவே தன் எட்டுக்கல் பேசரி போட்ட ஆத்துக்காரி மற்றும் பொண் கொழந்தைகளுடன் வரும்போது தெருவே அந்த ஃபாரின் ஃபிகரை கண்கொட்டாமல் பார்த்து வெட்டிக் கொண்டிருக்கும். அவர்களுக்கு என்றைக்கும் இல்லாத திருநாளா "என்ன மாமா சௌக்கியமா? இப்பெல்லாம் நம்மூறு பக்கம் வரதே இல்ல.. அடிக்கடி வாங்கோ.." என்று வருங்கால மாப்பிள்ளைகளின் ராஜ உபசாரம் தெருவெங்கும் கிடைக்கும். ஒரு பாவமும் அறியாத நான் அவர்களுடன் உட்கார்ந்து தேமேன்னு இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பேன். ஓ. இப்போ நான் பொங்கல் பற்றி எழுதணும் இல்ல.... ஓ.கே அடுத்த பாராவுக்கு வாங்க...

maattu pongal

மாட்டுப் பொங்கல் தான் எங்களுக்கு உற்சாகம் அளிக்கும் நாள். மாடல்ல மற்றவை எவை என்று அன்று ஊரே அல்லோகலப்படும். உடனே வழக்கமா எல்லோரும் அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு "ஹாப்பி பொங்கல்" என்று மாட்டுப் பொங்கல் அன்று சொல்வார்களே அதனால் தானே என்று கேட்கக் கூடாது. மாடு இருக்கும் வீடுகளில் ஆயர் குலம் உதித்த தங்கராசுக் கோனார் தான் பால் கறக்கும் தலைமை காண்ட்ராக்ட். தலையில் சிகப்பு வண்ண காசித்துண்டின் முண்டாசோடு சைக்கிளில் வந்திறங்கும்போது பானுப்ப்ரியா தங்கை யாரும் சிக்க மாட்டாளா பாடி கறக்கமாட்டோமா என்ற ஏக்கம் அவர் கண்களில் வழிவது தெரியும். மாட்டுப் பொங்கல் அன்றைக்கு அதிகாலையில் ஒவ்வொரு வீடாக வந்து மாட்டை பத்திக் கொண்டு போய்விடுவார். எல்லா மாடுகளையும் குளம் குட்டை ஓரத்திலோ அல்லது ஆத்தோரத்திலோ விரட்டிச் சென்று வைக்கோல் மற்றும் தேங்காய் நார் போட்டு அழுக்கு நீங்க குளிப்பாட்டி, நெற்றிக்கு சந்தனத் திலகம் குங்குமம் இட்டு, கழுத்துக்கு வெண்கல மணி கட்டி, கலர் கலர் நெட்டி மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்வர். டிரஸ் மாட்டிவிடாதது ஒன்றுதான் குறை. கழக கட்சியினர் கருப்பு சேப்போ அல்லது கருப்பு வெள்ளை சேப்போ மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி தங்கள் அபிமானத்தை வெளிப்படுத்துவர். ஒரு வருஷம் கருப்பு சேப்பாய் இருந்த கொம்புகள் மறுவருஷம் நடுவில் வெள்ளை அடித்துக் கொண்டதும் உண்டு.

kurathiஎல்லாம் முடிந்து சாயந்திரம் தூரத்தில் "டன்.டன்.டன்..டண்டணக்கா... டன்.டன்.டன்..டண்டணக்கா.." என்று தம்பட்ட சத்தம் கேட்டால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி பொங்க மாடு வரவேற்புக்கு தயாராகி விடுவோம். ஏனென்றால் பத்திக் கொண்டு போன மாடுகளை அவரவர் வீடுகளுக்கு கொண்டு வந்து சேர்ப்பிக்கும் வைபவம் நடைபெறும். அப்போது குறவன்-குறத்தி டான்ஸ் போட்டு தப்புத் தாளங்களுக்கு தப்பில்லாமல் ஆடிக்கொண்டே வருவார்கள். மாடுகளுக்கு முன் புது வேஷ்டி சட்டை கட்டிக்கொண்டு தலைக்கு தலைப்பா போல முண்டாசு கட்டி நன்றாக "ஃபுல்"லா தள்ளாடாத தங்கராசு தனது அணிக்கு தலைமை வகித்து கம்பீரமாக நடந்து வருவார். நாங்கள் கூட்டமாக ரோடோரத்தில் குறவன்-குறத்தியோடு ஆடாமல் ரசித்துக்கொண்டு வருவோம். கருப்பாக இருந்தாலும் கன்னத்துக்கு அரை இன்ச் பவுடர் போட்டு, ரோஸ் கலர் ரூஜ் தடவி, தலைக்கு கொண்டையிட்டு, அந்தக் கொண்டையை சுற்றி உதய சூரியன் போல கலர் கலராக கோழி இறகு சொருகி அலங்காரம் செய்து கொண்டு, டைட்டாக பளபளக்கும் ஜிமிக்கிகள் வைத்து தைத்த ஒரு ஜாக்கெட் மற்றும் ஒரு ரோஸ் கலர் குட்டை பாவாடை போட்டு தப்புக்கு தகுந்தவாறு ஆடுவதை பார்த்துக்கொண்டே மாடுகளின் ஊர்வலத்தில் தடிமாடுகளாக நாங்களும் பங்கேற்போம். ஒரு முறை கடைசி மாடு விடும் வரை அந்த ஆட்டம் பார்த்துக் கொண்டு போன ஸ்ரீராம், குறவன் குறத்தி வேஷம் கலைக்கும் இடம் வரை சென்று விட்டு அலறியடித்துக்கொண்டு சீட்டின் மேலே உட்காரமால் சைக்கிளில் பறந்து வந்து "டேய்.. அந்தக் குறத்தி... குறத்தி.. குறத்தி....ஆம்பளைடா..." என்று மூச்சிரைக்க கூவிக்கொண்டு வந்தது பல வருடங்கள் கடந்து இன்னமும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

காணும் பொங்கல் (அ) கணு பற்றி இப்போது எழுதினால் எதிர் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதால் எழுதவில்லை என்று தெரிவித்து வருத்த கார்டு போட்டுவிடுகிறேன்.

எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். (மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூட... :-) :-)  )

பட உதவி: trsiyengar.com , http://www.4to40.com http://shanthisthaligai.blogspot.com
குறத்தி படம்: http://picasaweb.google.com/lh/sredir?uname=krishnandhanapal&target=ALBUM&id=5094836275045528065

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். நன்றி.

-

மகாநதி

இது பொங்கல் ஸ்பெஷல் பாட்டு எபிசோட். சிறப்பு பதிவு வலை அடுப்புல ரெடி ஆகிகிட்டு இருக்கு. பொங்கினதும் உலக ப்ளாக் வரலாற்றுக்கு இன்னிக்கே வெளிவரும். அதுவரை எல்லோரும் இந்தப் பாடல்களை கேட்டுகிட்டு இருங்க..

இதெல்லாம் என்னோட ஆல்(ள்) டைம் ஃபேவரிட். ஒரு கிராமத்து டச்சுக்காக... சில டச்சிங் சாங்க்ஸ்... என்ஜாய்.

குடும்பத்தோடு குதூகலமாக பொங்கல் கொண்டாடும் கமல்...



கிராமத்தில் கெளதமியோடு வா. பாடம் படிக்கும் கமல்.. (கிராமிய சூழலுக்காக இந்தப் பாடல் இங்கு இணைக்கப்பட்டது என்று சொல்லவும் வேண்டுமோ? )



கரகம் இல்லாமலே நம்ம தலையெல்லாம் ஆடுவதற்காக இந்தப் பாடல்..



என்னைத் தொட்டி அள்ளிக்கொண்ட... கிராமத்துக் காதல் அதுக்காகத்தான்.. முதல் சரணத்துக்கப்புறம் எஸ்.பி.பி களத்தில் இறங்குவார். அமர்க்களம்..




இதெல்லாம் பாத்து முடிக்கறதுக்குள்ள வலை ஏத்திடறேன்..

-

Wednesday, January 12, 2011

புத்தகத் திருவிழாவும் முத்த அறிவியலும்

டாஸ்மாக் சரக்கும் ஒரு பொட்டலம் பிரியாணியும் வாங்கிக்கொடுத்து மஹிந்திரா வேனில் ஒருவர் தொடைமேல் இருவர் உட்கார "ஹேய்..." என்று கூவி "வால்க..." கோஷம் போட்டு மாநாட்டுக்கு கூட்டம் கூட்டி பேசக் கேட்கும் கூட்டம் இல்லை இது. இது பாசத்தினால் கூட்டிய கூட்டம். அன்புமிக்கவர்களின் ஆதரவான கூட்டம். என்னடா இதுன்னு பார்க்கிறீர்களா.. ஒன்னும் இல்லை... எலக்ஷன் வருது.. திண்ணைக்கச்சேரிக்கு ஒரு ஸ்டார்டிங் வேணும். அதான். கச்சேரிக்கு போவோம்.

************ புத்தகத் திருவிழா **********
முப்பத்து நான்காவது புத்தகக் காட்சி சென்னையில் விமரிசையாக நடைபெறுகிறது. ஒரு கூரையின் கீழ் அனைத்துப் பதிப்பக புத்தகங்களையும் புது வாசனையோடு பார்க்கும் போது உள்ளம் உவகை கொள்கிறது.  இதுவரையில் இரண்டு தடவை விஸிட் செய்தாகிவிட்டது. "இந்த வருஷம் எவ்ளோ ரூபா பட்ஜெட்" என்று கேட்ட தங்க்ஸிடம் எப்போது கஷ்டமான அவுட் ஆஃப் சிலபஸ் கேள்வி கேட்டாலும் மத்திமமாக அசடு வழிய சிரிப்பது போல இதற்கும் சிரித்து வைத்தேன். அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவருடன் முதல் விசிட்டில் உயிர்மையில் வாங்கிய நிறைய வாத்தியார் புத்தகங்களோடு திருமகளில் கம்ப ராமாயணம் - பள்ளத்தூர் பழ.பழனியப்பன் உரை எழுதிய கடின அட்டை பைண்டு செய்த புத்தகங்கள் வாங்கினேன். ரசீது புக்கில் பில் போட்டு கம்பரை ஒரு மூட்டையில் கட்டிக் கொடுத்தார்கள். நல்ல கனம். தோளில் போட்டுக்கொண்டேன். வாங்கியவுடன் பயம்  தொற்றிக்கொண்டது. இவ்ளோ புக்ஸ் கொண்டு போனால் காரை வாசலில் நிறுத்தும் முன் இடுப்பில் பாண்டுரங்கர் மாதிரி இரண்டு கையையும் வைத்துக்கொண்டு "எவ்ளோ ரூபாய்க்கு வாங்கினீங்க.." என்று தர்மபத்தினி முறைத்து கேட்டு சண்டை பிடித்தால் என்ன பதில் சொல்வது என்று நினைவுகளில் அல்லாடினேன். வாயுள்ள பிள்ளை பிழைக்கும். பிழைத்தேன்.

இரண்டாவது முறை புள்ளைகுட்டிக்காரனாக குடும்ப சகிதம் போனேன். ஞாயிறு மாலை. தையா தக்கா என்று ஒரு குழுவினர் நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். பத்திரிகை உலகில் ஜொலிக்கும் ஆசிரிய நண்பர் மை.பாரதிராஜா வி.ஐ.பி பாஸ் வாங்கிக் கொடுத்திருந்தார். ஆகையால் நுழைவாயில் அருகில் இருந்த மூடிய கவுண்டர்களில் ஒருவர் நின்று கொண்டு கக்கூஸ் பக்கத்தில் இருக்கும் கடேசி கவுண்டரை காட்டி "அங்கே போங்க.." என்று டிக்கெட் வாங்க சொல்லிக் கொண்டிருந்ததிலிருந்து தப்பித்தேன். நுழைந்தவுடன் "எவ்ளோ புக்ஸ் பா.." என்ற பெரியவளின் ஆச்சர்ய விழிகளில் மனம் நிறைந்தேன். நாலு கடை பார்க்கும் முன்னரே "அப்பா..பசிக்குது" என்று காலை இழுத்தாள் இரட்டை ஜடை போட்ட சின்னவள். என்னவள் "போதும்ப்பா.. போலாம்பா..." என்றாள். இம்முறை இன்னும் ரெண்டு புத்தகங்களோடு "கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதியின் படைப்புகள் - சீனி.விசுவநாதன்" பனிரெண்டு தொகுதிகளில் ஆறு தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. நல்லி செட்டியார் ஸ்டாலில் வாங்கினேன். காத்திருந்த மூவரின் முறைப்போடு அத்தோடு புத்தகக் காட்சியிலிருந்து ஆள் எஸ்கேப். மூடுவிழாவிர்க்கு முன் இன்னொரு முறை நிச்சயம் போகணும். இம்முறை நண்பர் எல்.கே பாச அழைப்பு விடுத்தும் போக முடியலை. லிஸ்ட்ல ரெண்டு மூனு புஸ்தகம் விட்டுப் போச்சு.

இந்த வருடம் நான் வாங்கிய சில வாத்தியார் புத்தகங்கள் கீழே..
  1. சிலப்பதிகாரம் ஒரு எளிய அறிமுகம் - சுஜாதா (சீவக சிந்தாமணி பற்றி அப்பாஜி எழுதியதன் பக்க விளைவு.)
  2. 401 காதல் கவிதைகள் - சுஜாதா
  3. கணையாழியின் கடைசி பக்கங்கள் - சுஜாதா
  4. சுஜாதாவின் குறுநாவல்கள்- இரண்டாம் தொகுதி  - சுஜாதா 
  5. ஜே.கே - சுஜாதா 

*********** மூனு நிமிஷம் ************
இது ஒரு குறும்படம். உங்க பிஸி ஷேட்யூல்ல மூனு நிமிஷம் ஒதுக்க முடியும்ன்னா கொஞ்சம் ஒதுங்கி பாருங்களேன். தேவலாம்.


3 Minutes from Ross Ching on Vimeo.

கொலையை எப்படியெல்லாம் எடுக்கறாங்க. ஆனா இந்தப் குறும்படத்தில ஒரு லாஜிக் இடிக்குது.. என்னென்ன பின்னூட்டத்துல சொல்லுங்க பார்ப்போம். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!!!...

************** ஆராய்ச்சி முடிவுகள் ************
பஸ் மற்றும் ஏரோப்லேன்களில் டிக்கெட் ரெண்டு வாங்கச் சொல்லும் அளவிற்கு தொப்பை போட்டு கணுக்கால் பார்க்க முடியாமல் பெருத்து விட்டால் மூளை சுருங்கி சிறுத்து விடுகிறதாம். அப்படி சுருங்கிய மூளையினால் ஒன்றும் பிரமாதமான விஷயங்கள் எதுவும் செய்யமுடியாதாம். குண்டா இருக்கிற அதிபுத்திசாலி யாரையாவது பின்னூட்டத்துல சொல்லுங்கப்பா. குண்டா இருக்குறவங்க கூட சொல்லிக்கலாம்.

http://www.newscientist.com/article/mg20927943.000-a-fat-tummy-shrivels-your-brain.html?DCMP=OTC-rss&nsref=online-news

************* முத்த அறிவியல் ************

முத்தங்கள் நாகரீகம் அடைந்த மனிதர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லையாம். போனபோ வகைக் குரங்குகள் வாய் எடுக்காமல் முகம் நகர்த்தாமல் பன்னிரண்டு நிமிடங்கள் "பச்" செய்கிறதாம். இந்த லிஸ்டில் மூக்கு துருத்தும் முள்ளம் பன்றியும், நாக்கு பழுத்த வவ்வாலும், கழுத்து நீண்டு வளையும் ஒட்டகச்சிவிங்களும் கூட அடங்கும். முத்தத்தின் அறிவியல் (The Science Of Kissing) என்ற புத்தகத்தில் மேற்கண்டவாறு எழுதியவர் Sheril Kirshenbaum. இந்த புத்தகத்தில் முத்தத்தை வரலாறு, கலாச்சாரம், உயிரியல், மனோவியல் என்று பல கோணத்தில் அலசி ஆராய்ந்திருக்கிறாராம். ஆயிரம் பக்ககளுக்கு மேல் நம்ம ஜெயமோகன் போல எழுதிய இந்த அம்மணிக்கு முத்தம்மா என்று பட்டம் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க.

கிஸ் என்றால் உதடுகள் பிரியும்.....
தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்....
தகராறு ஏது தமிழ் முத்தம் போடு.. என்று சரணத்தில் வரும் "பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு.."ன்னு கமல் கறுப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு சினேகாவுடன் பாடிய பாடல் நினைவுக்கு வருகிறது...ஸ்ரேயா கோஷல் மற்றும் கே.கே பாடிய அந்தப் பாட்டையும் போட்ருவோம்...



**************தனியாவர்த்தனம்*************

vayalin
கோயில் மதில் போல இருக்கும் இடத்தில் கால் கடுக்க நின்று கொண்டு பிடில் வாசிக்கும் இந்த இளைய கிழவருக்கு யாராவது ஏதாவது ஒரு நல்ல சாப்பாடு போடும் கேண்டீன் இருக்கும் சபாவில் ஒரு சான்ஸ் வாங்கித் தரக்கூடாதா? யாருமே இல்லாத தெருவில யாருக்குப்பா பிடில் வாசிக்கற...

பின் குறிப்பு: ஆணியின் அடக்குமுறைகளையும் மீறி இந்த எடிஷன் திண்ணைக்கச்சேரி சுமாரா வந்திருக்குன்னு நினைக்கிறேன். இதைப் பற்றிய உங்கள் ஆலோசனைகள் மற்றும் ஆர்வத்தை தூண்டும் கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

பட உதவி: http://sowaskan.livejournal.com/

-

Tuesday, January 11, 2011

மிருதங்கிஸ்ட்

sivaji miruthangamநடிகர் திலகம் சிவாஜியின் அவ்வளவு அஷ்டகோணல் முகக் கொனஷ்டைகளிலும் மிருதங்கச் சக்கரவர்த்தி திரைப்படம் என் அப்பாவை அந்த வாத்தியத்தின் பக்கம் சுண்டி இழுத்திருக்குமா என்று நினைத்து ஆச்சர்யப்படுகிறேன். எந்தவிதமான கவலையுமின்றி ஒரு மைனராக மன்னார்குடியை சுற்றி வந்த என்னை... நிற்க.. மைனராக என்றால் வயதில் என்பதை இங்கே தெள்ளத் தெளிவாக தெளிவுபடுத்திக் கொள்கிறேன்... மேடையில் மிருதங்க வித்வானாக மினுக்க பெருமைப் பட வேண்டும் என்று என் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்து ஒரு சுபயோக சுபதினத்தில் மிருதங்க க்ளாஸ் சேர்த்துவிட்டார். காதில் கடுக்கன் போட்டுக்கொண்டு காலுக்கிடையில் வாத்தியத்தை வைத்துக்கொண்டு வாயை மூடி உயிரெழுத்து "ஊ" அழுத்திச் சொல்லும் போஸில் உதடுகளை ஒருசேரக் குவித்து சுளுக்கு விழும் வரை தலையை ஆட்டி மி.ச. சிவாஜி போல பையன் தனியாவர்த்தனம் செய்வான் என்ற நம்பிக்கையில் தாளம் தட்டுவதற்கு கிளாஸுக்கு அனுப்பினார். நந்தியெம்பெருமான், புள்ளையார் உம்மாச்சிகளிடம் சுவற்றில் ஆடும் காலண்டரில் மட்டும் ஆடிப் பார்த்த அந்த தேவ வாத்தியத்தை அப்போதுதான் முதன் முறையாக நேரில் பார்த்தேன்.


அப்பா "டேய்.. நாளைக்கு சேர்த்துவிடறேன்.. ஒரு நாள் விடாமல் போய் ஸ்ரத்தையா வாசிக்கணும்..." என்று நான் வருங்கால மிருதங்க சக்கரவர்த்தி ஆகப்போகும் ஆசையில் வார்த்தைகளில் உற்சாகம் கொப்பளிக்க மிரு தங்கமாய் பேசினார். வடக்கு தெருவில் விஸ்தாரமான கூடம் இருக்கும் வரது மாமாவின் பங்களா வீட்டில் இருக்கும் இரு அண்ணாக்களும் வாத்தியக் கலைஞர்கள். பெரியவர் கோபால் அண்ணா தாள வாத்தியக் கலைஞர் என்றால் சிறியவர் உப்பிலி தந்தி வாத்தியக் கலைஞர். கலைஞர் என்றால் கற்றுக்கொள்ளும் வளரும் கலைஞர். ஆனால் மாமா தலை தூக்கி பார்க்கும் அளவுக்கு தோளுக்கு மேல் வளர்ந்த அண்ணாக்கள். சிறுவயதில் நியாயப்படி பார்த்தால் புஜபலம் இல்லாத என்னுடைய பூஞ்சையான சரீரத்திற்கு தூக்குவதற்கு சுலபமாக உள்ள தந்திக் கருவி ஏதாவது ஒன்றைத்தான் இசை மீட்ட சேர்ந்திருக்கவேண்டும். ஆனால் கைபழுக்க அடிக்கும் ஒரு தாளக் கருவி வாசிக்க சேர்த்துவிட்டது என் துர்பாக்கியமே. பழைய கருப்பு வெள்ளை சம்பூர்ண ராமாயணம் படத்தில் சிவனுக்கு பிடித்த காம்போதி ராகத்தில் வீணையை தொப்பை மேல் வைத்து மீட்டும் கொடுவா மீசை ராவணன் கனவுகளில் வந்து என்னை பார்த்து எகத்தாளமாக சிரித்து விட்டு போனார். அப்பாவின் ஆசையான அந்த பாலக்காடு மணி போல இந்த மன்னார்குடி மணி தாள வாத்திய சிரோன்மணி என்று பெத்த பெயர் எடுக்கவேண்டும் என்ற நப்பாசையால் தட்டுவதற்கு ஒரு விஜயதசமியில் தட்டு நிறைய பூ பழத்துடன் மிருதங்க வித்வான் காலில் நெடுஞ்சாண்கிடையான விழுந்த ஒரு நமஸ்காரத்தோடு அட்மிட் செய்யப்பட்டேன்.

மிருதங் டியூஷனுக்கு வடக்குத் தெரு மூலையில் தஞ்சாவூரிலிருந்து குன்னக்குடி போல புடவை கன்வர்டட் கலர் கலர் ஜிப்பா மற்றும் பளீரென்ற வெள்ளை வேஷ்டியுடன் வாத்தியார் ஜவ்வாது வாசனை தெருவையே தூக்க பொன் மாலைப் பொழுதுகளில் வந்திறங்குவார். சிக்னல் இல்லாத காலத்திலேயே நெற்றியில் ராணி குங்குமமாக அதைத் தாங்கிய பெருமை அவருக்கே உண்டு. தூரத்தில் அந்த சில்க் ஜிப்பாவை பட்டுப் புடவை என்று நினைத்துக் கொண்டு "யாரோ தீர்க்க சுமங்கலி எதிரே வரா போலிருக்கு" என்று நல்ல சுபசகுனமாக பல பாட்டிகள் நினைத்து ஏமாந்ததுண்டு. வரது மாமா வீட்டில் வேங்கை வேட்டைக்கு களத்தில் இறங்கும்போது தவறாமல் நானும் அங்கு ஆஜராகி இருப்பேன். முதலில் ஒரு அரை லிட்டர் பிடிக்கும் லோட்டாவில் ஸ்ட்ராங் ஃபில்டர் காபி. அப்புறம் அக்குளில் வேர்வை-ஜவ்வாது இரண்டின் கலப்பட வயிற்றைப் பிரட்டும் வாசனையோடு இடுக்கியிருந்த எவர்சில்வர் செல்லப் பெட்டியில் இருந்து கொழுந்து வெற்றிலைகளாக நாலைந்து எடுத்து காம்பு கிள்ளி ஹால் மூலையில் விட்டெறிந்து அப்புறம் பதவிசாக இடது கையில் தாங்கி அதற்கு வலிக்காமல் வாசனை சுண்ணாம்பு தடவி வெகு ரசனையாக போட்டு வாயில் அதக்கிக் கொள்வார். செம்பவள வாயோடுதான் பாடம் ஆரம்பம்.

miruthangamவாத்தியார் வெற்றிலை போடும் வரையில் ஆர்கெஸ்ட்ராவில் "செக்..செக்..மைக் டெஸ்டிங்... ஒன் டூ த்ரீ..." செய்யும் செட்டுக்காரர் போல மிருதங்கத்தை தயார் செய்வது கோபால் அண்ணாவின் வாடிக்கை. கைக்கு அடக்கமான மழுமழுவென்ற ஒரு கருங்கல். ஒரு சின்ன கையகல கிண்ணத்தில் உப்புமா மற்றும் கிச்சடி கிண்டும் ஏ கிளாஸ் ரவை. ஒரு டம்ப்ளரில் தண்ணீர். முதலில் ரவையை கையில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். அப்புறம் அதை உருண்டையாக உருட்டி மிருதங்கத்தின் தோல் மட்டும் உள்ள பெரிய தலைப் பக்கம் நடு சென்டராக வட்டமாக ஒட்ட வேண்டும். பின்பு கையில் அந்தக் கல்லை எடுத்து சிறிய தலை பக்கம் மிருதங்கத்தை லாவகமாக உருட்டி நாலு தட்டு தட்ட வேண்டும். இப்படி தட்டினால் அடிக்கு பயந்து அழகாக அலறும் மிருதங்கம் தயார். என்று படித்தாலே வாயூறும் ரெசிபி மாதிரி இந்த தயாரிப்பு செஷனை சொல்லலாம்.

எல்லாம் ஆயத்த நிலைக்கு வந்தவுடன் "உம்" என்று தலையசைத்து சைகை சொன்னவுடன், கோபால் அண்ணா தான் எடுத்தவுடன் வாசிப்பார். தக்குடு தக்குடு தக்குடு என்று அடித்து நிமிர்த்துவிடுவார். அடிக்க ஆரம்பித்த பத்து நிமிடங்களுக்கு பிறகு டாப் கியரில் சென்று பேயோட்டும் பூசாரி போல தலை கலைய, வியர்த்து விறுவிறுத்து மூச்சு வாங்க ஒரு அரைமணி நேரம் வாத்தியத்தை ஆக மட்டும் நைய புடைத்த பிறகு, அவர்கள் ரெஸ்ட் எடுப்பதற்கு போனால் போகட்டும் என்று என்னை உட்காரச் சொல்லி கொஞ்ச நேரம் தட்டச் சொல்வார்கள். "ஸ்லிப்ல நில்லு.. நா கீப்பர்.. நாந்தான் பர்ஸ்ட் பேட்டிங்.." என்று வாசலில் ஸ்ரீராம், ஸ்ரீதர் போன்றோரின் விளையாட்டு பேரங்கள் கேட்ட பின்னர் எதை தட்டுவது தடவுவது என்று தெரியாமல் ரோட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தால் மெல்ல கணைத்து "உம்.. ஆரம்பி..." என்பார் குரு.

"த..தி..தொம்..நம்.. " என்று ரெண்டு பக்கமும் மாறி மாறி தட்ட வேண்டும். பெரிய தலை உள்ள பக்கம் தவும் தொம்மும், சிறிய தலை உள்ள பக்கத்தில் தியும் நம்மும். ஒரு தடவை ரெண்டு தடவை இல்லை குரு வாசலில் சென்று வெற்றிலையை துப்பி விட்டு கொல்லைப் புறம் போய் அற்ப சங்கைக்கு ஒதுங்கிவிட்டு மாமாவிடம் அவர் மேல் வெற்றிலை எச்சில் படாதவாறு பேசிவிட்டு வரும்வரையிலோ இல்லையென்றால் அண்ணா உள்ளே போய் சமையற்கட்டில் எலி மாதிரி குடைந்து ஏதாவது கொறித்துவிட்டு வரும் வரையிலோ விடாமல் கை அசராமல் வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். "த.தி.தொம்.நம்.. த.தி.தொம்.நம்.. " என்று இப்படி அனாதரவாக கழைக்கூத்தாடி டோலக்கு வாசிப்பது போல தட்டிக் கொண்டிருக்கும் வேளையில் தெருவின் அழகான யுவதிகள் மற்றும் சொப்பன சுந்தரிகள் யாராவது மாமா வீட்டிற்கு வந்தால் வெட்கம் பிடுங்கித் திங்க தலையை சட்டைக்குள் தொங்கப் போட்டுக்கொண்டு வாத்தியம் வாசித்த காலங்களும் உண்டு.

முதல் பாடமான த.தி.தொம்.நம் வெற்றிகரமாக இரண்டு மாதங்கள் போயிற்று. வீட்டில் தொம் என்று ஏதாவது விழுந்தால் கூட காதில் மிருதங்க சப்தமாக கேட்டது. சரி நமக்கு இப்போதுதான் வாத்தியம் வசப்பட ஆரம்பித்திருக்கிறது என்று சந்தோஷப் பட்டுக்கொண்டு "நாளைக்கு புதுப் பாடம்" என்று சொல்லிவிட்டு போனதால் அரை மணி முன்னதாகவே போய் வரது மாமா வீட்டு வாசல் காம்பவுண்ட் சுவற்றுக்கு முட்டுக் கொடுத்து நின்றுகொண்டேன். கண்ணுக்கெட்டிய தூரத்தில் வாத்தியார் வருகை தெரிந்ததும் இதயம் "இன்னிக்கி புதுப் பாடம்.. புதுப் பாடம்" என்று மிருதங்கம் வாசித்தது. வழக்கம் போல் ஆரம்ப சம்ப்ரதாயங்கள் முடிந்தவுடன் மிருதங்கம் என் கைக்கு வந்தது. "இன்னிக்கி என்ன பாடம்ன்னா...." என்று ஆரம்பித்து அவர் வாசித்துக் காட்டிய வுடன் "பகவானேன்னு அந்த பெரிய ஹரித்ராநதி குளத்தில் போய் இறங்கிவிடலாமா" என்ற தாட் வர மிகப் பொறுமையாக அதை வாங்கி மனதில் அவரை நினைத்து மிருதங்கத்தை இடிக்கலானேன். என்ன பாடம் அது என்று கேட்கிறீர்களா...

"தாத்தா... திதி.. தொம்தொம்.. நம்நம் .." என்று முன்னால் ஒரு தடவை வாசித்ததின் இரண்டுமுறை ரிபீட் தான் அது. ஹும்.. விடாமல் இன்னொரு மூன்று மாசத்திற்கு திரும்பவும் இது முடித்தவுடன் அப்புறம் "தாத்தாதா.. திதிதி.. தொம்தொம்தோம்.. நம்நம்நம்..." என்று மூன்று முறை வாசித்தேன். வாழ்நாள் பூராகவும் நாம் தாதா தொம்தொம் மட்டும்தான் வாசிக்க போகிறோம் என்று நினைத்து விரக்தியின் உச்சத்தில் இருந்தபோது அந்த விடுதலை அறிவுப்பு வந்தது. ஆமாம். அண்ணா கிளாஸ் முடித்து விட்டார்.. "உன் ஒருத்தனுக்காக நான் தஞ்ஜாவூர்லேர்ந்து வரணுமா" என்று கேட்டு பூர்த்தி செய்வதாக சொல்லிவிட்டார். மெயில்ல வந்த வைரசை ஹார்ட் டிஸ்க்ல டவுன்லோட் பண்ணிக்கிட்ட மாதிரி "எங்க வீட்ல வந்து சொல்லிக்கொடுங்க"ன்னு என் அப்பா ஒரு பிட்டை போட உடனே ஒத்துக்கிட்டார்.

அப்படியே மூன்று முறை நான்கு முறையாக ஆகி அப்புறம் அவரே ஒரு நாள் அலுத்துப் போய் இன்னிக்கி ஆதி தாளம் ஆரம்பிப்போம் என்று உட்கார்ந்தார். அன்றைக்கு தான் அவர் எங்கள் வீட்டில் குடித்த கடைசி காபி. கடைசி க்ளாஸ். அப்புறம் எப்போது தஞ்சாவூர் பஸ் வந்தாலும் அவர் மட்டும் வந்து இறங்கவே இல்லை. இன்னமும் விஜயதசமி நன்னாளில் அந்த மிருதங்கத்திர்க்கு சந்தனம் குங்குமம் இட்டு பூஜை போட்டுக் கொண்டு இருக்கிறேன். குங்குமம் வைக்கையில் குரு ஞாபகம் தவறாமல் வந்து போகிறது.

பட உதவி: wlts.org.uk
-

Saturday, January 8, 2011

ரெண்டாயிரத்து பத்து

lastyear


சென்ற வருஷத்திய உங்களுடைய முக்கிய நிகழ்வுகளை நீங்கள்  உங்கள்  திருக்கரங்களால் எழுதி இந்த மண் பயனுறச் செய்க என்று ஒரு தொடர் பதிவு எழுத அன்புத் தம்பி பாலாஜி சரவணா மிகவும் வற்புறுத்தி கேட்டுக்கொண்டார். இருக்கும் மூளையை கசக்கி பிழிஞ்சு ரொம்பவும் யோசிச்சு பார்த்தா ஒன்னும் தோணலை. எங்கப்பா எப்ப அர்ச்சனையை ஆரம்பித்தாலும் அரைத்துணி மறந்த பய என்று தான் தொடங்குவார். நமக்கு இது ஒன்றே ஞான பீட விருதுக்கு சமானம். வாழ்க்கையில் மறப்பதும் மன்னிப்பதும் தேவ காரியங்கள் என்று சொல்வார்கள் என்று அடாவடியாக பேசி என் கட்சியை பலப்படுத்துவேன். அதனால இன்னின்னிது இன்னின்னிக்கி இன்னார் இன்னாரால் இப்பிடிப்பிடி நடந்தது என்று கால அகர வரிசைக்கிரமமாக எழுதுவது மிகச் சிரமம். தம்பி அழைத்து எந்தத் தொடர் பதிவும் எழுதாததால் அவர் அன்பால் சிக்குண்டு முடிந்தவரை ந்யூரான்களை பிச்சு பிராண்டி எதெது நினைவுகளின் மேல் அடுக்குகளில் இருக்கிறதோ அதை இங்கே தருகிறேன்.

பழங்கதைகள் பேசி திரிந்ததை கொஞ்சமும் நிறுத்தாமல் நான் எழுதியும் துன்புறத்த ஆரம்பித்தது இரண்டாயிரத்து பத்தில் தான். இப்படி எழுதிய சொத்தாக பத்து போல நூறு நூறு நண்பர்களை பெற்றதும் இந்த இரண்டாயிரத்து பத்தில்தான். இலக்கின்றி போக்கேற்று எது தோணுகிறதோ அதை எழுதுகிறேன். ரசித்து கருத்துரைத்தால் மிகவும் நிறைவாக உணர்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லாம் போக அப்பாஜி சொன்னது போல இது ஒரு வடிகால். டென்ஷன் நிறைந்த சமயங்களில் நண்பர்களின் வலை வீட்டிற்கு சென்று மேய்ந்து விட்டு வந்தால் கொஞ்சம் மனசு ஆறுகிறது. அயர்ச்சி நீங்குகிறது. பின்னூட்டத்தில் கும்மி வலுக்கிறது.

ஆபிஸில் நிறைய புது ப்ராஜெக்ட்கள். தொடர்ந்து டைரியை கையில் தூக்கிக்கொண்டு ரூம் ரூமாக விரைந்த/விரையும் கூட்டங்கள் நிறைந்ததாக அமைகிறது ஆபிஸ் வாழ்க்கை. புது திட்டங்களுக்கான அலவலாவல்கள், திட்ட மாதிரிகள் என்று இந்த பத்து ஜிக்சா புதிர் போல என்னை பிய்த்து எறிந்துவிட்டது. ஜனவரி, பிப்ரவரியில் லேசான தூறல் போல போட ஆரம்பித்த வேலைகள் முழு வேகம் பிடித்து இப்போது சூறாவளியாய் வீசுகிறது. அதிகாலையில் எழுந்து பல் தேய்ப்பது தெரிகிறது அப்புறம் நாள் எப்படி நகர்கிறது என்று தெரியாமல் படுக்கையில் தொப்பென்று விழும் வேளை வந்து விடுகிறது. இதற்க்கு நடுநடுவே புது கமிட்மென்ட்டான பிளாக் வேறு. வலையுலக சொந்த பந்தங்களும் நம்மளை நன்றாக உசுப்பி விட்டதால் முடிந்தவரை இரவு பொழுதுகள் ப்லோகும் கையுமாக நகர்ந்தன. நல்ல பல நண்பர்கள், எழுத்தாளர்கள், ரசிக அன்பர்கள், பெரியோர்கள், தாய்மார்கள் என்று பல நல்ல சேர்க்கை ஏற்ப்பட்டது எனக்கு வாய்த்த புண்ணியமே.

போன வருடம் முழுக்க சென்னைக்குள் எழுச்சி மாநாடு எதுவும் எவரும் நடத்தவில்லை. அதனால் ரோடிலேயே குடியிருக்கும் வாய்ப்பும் அவ்வளவாக அமையவில்லை. மாநாட்டிற்கு பதிலாக பெருமழை பெய்து கொஞ்சம் விளையாட்டு காட்டியது. எதிர் நீச்சலடித்து தப்பித்தோம்.

மற்றபடி, சென்றவருடம் முழுக்க
  1. ஆட்டோக்காரர்கள் அதேபோல் கட் அடித்து தங்கள் 'முளு தெறமையை' காட்டி மற்றவர்களை அந்தர்பல்டி அடிக்க வைத்தார்கள்.
  2. சிகப்பு சிக்னலுக்கு நிற்காமல் மாநகர ஏ.ஸி பஸ்கள் பிரவாகமாக ஓடின.
  3. நடைபாதை வரிக்குதிரை கிராஸிங்கில் பாதசாரிகளை கடக்க விடாமல் எல்லா வாகன ஓட்டுனர்களும் தெனாவெட்டாக திரும்பினார்கள்.
  4. ஹெல்மெட் அணிந்து சாலைத் தீவிரவாதிகள் போல் வண்டிகளுக்கு இடையே புகுந்து பைக்கோடு ஸ்ட்ரீட் டான்ஸ் ஆடினார்கள். ஒழுங்காக ஒட்டியவர்களை சற்றே ஆட்டினார்கள்.
  5. பஸ்களில் ஐம்பது பைசா சில்லரை பாக்கி தராமலும், "முன்னாடி டிக்கெட் வாங்கு..மேல ஏறு... சீக்கிரம் இறங்கு.. பின்னால வா..." என்று ஒருமையில் பேசி வயதுக்கு மரியாதை தரமாலும் தங்கள் அதிகாரத்தை கண்டக்டர்கள் காண்பித்தார்கள்.
  6. ரேஷனில் வழக்கம் போல ஒரு கிலோ கல் தராசில் போட்டு துல்லியமாக முக்கால் கிலோ ஜீனி அளந்தார்கள்.
  7. மக்கள் துன்பம் போக்க எல்லோருக்கும் இன்புற்றிருக்க வீடு வீடாக கலர் டீ.வி கொடுத்தார்கள், வாங்கிய டீ.வியில் மனதைப் பிழியும் சீரியல் பார்த்து எல்லோரும் கோரஸாக அழுதார்கள்.
  8. காந்தி ஜெயந்தி அன்று கள்ளத்தனமாக சாராயம் விற்றார்கள்.
  9. ஆட்சிக்கு வரும் முன் ஒன்றாக சேர்ந்து ஓட்டு கேட்டவர்கள் அதிகாரப் பங்கில் குழப்பம் வந்து ஒருவரை ஒருவர் புழுதிவாரி தூற்றிக் கொண்டார்கள்.
  10. விற்பனை பிரதிநிதிகள் பஞ்சபூதங்களையும் சாட்சியாக வைத்து சத்தியம் செய்து தங்கள் பொருட்களை தரமானது என்று விற்றார்கள்.
  11. ராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் என்ற இந்திய விஞ்ஞானிக்கு நோபல் பரிசு கிடைத்து தமிழனின் பெருமை உலகறிந்தது.
  12. லட்ச ரூபாய் கார் ஒன்றை அறிமுகப்படுத்தி பம்பாய் பிச்சைக்காரர்கள் கூட கார் வைத்துக்கொள்ள ஏற்பாடு செய்தார் ரத்தன் டாடா. சில கார்களில் பின் சீட் பற்றிக்கொள்கிறதாம். அதனடியில் தான் எஞ்சின் வைத்திருக்கிறார்கள். சூடு தாங்கவில்லை. நானோ நோ நோ என்கிறார்கள்.
  13. அரசியல்வாதிகள் குடும்ப சகிதமாக வாழ்க்கையில் பொருளாதார பொலிவு பெற்று மேன்மேலும் உயர்ந்தார்கள். பணப் பட்டுவாடா சண்டையில் வீதியில் அடித்துக் கொண்டார்கள்.
  14. காயமே இது பொய்யாடா என்று சொன்னாலும் வெங்காயம் விறுவிறு என்று விலையேறி இது மெய்யடா என்று எல்லோர் பி.பியையும் ஏற்றியது.
  15. கூகிளில் சென்ற வருடம் முழுவதும் இந்தியாவிலிருந்து கீழ் கண்டவற்றை பிரதானமாக தேடினார்கள்...
Most popular search term of the year
“Songs”
Most frequently searched brand name
“Nokia”
Fastest-rising search term
“IRCTC login”
Top “how to” search
“Get pregnant”
Most popular movie
“Kites”
Fastest-rising person
“Aruna Shields”
இனி வரும் வருடங்களும் இப்படியே தான் போகும் என்பதில் உங்களுக்கு துளிக்கூட சந்தேகம் வேண்டாம். மீண்டும் 2012 ஜனவரியில் இதே போன்ற ஒரு பதிவுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் வணக்கம் கூறி இந்தப் பதிவில் இருந்து விடை பெறுவது உங்கள் ஆர்.வி.எஸ். நன்றி.
(தம்பி திருப்தியா?)

கடேசியா பார்த்தா கிச்சன் குயீன் புவனேஸ்வரி ராமநாதனும் இந்தப் பதிவு எழுத அழைத்திருக்கிறார்கள். எழுதியாச்சு. ஓ.கே.
-

Thursday, January 6, 2011

ஹாப்பி பர்த்டே ரஹ்மான்!

இசைப் புயலுக்கு இன்று பிறந்த நாள். அலுவலக ஆணிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக விஸ்தாரமாக எழுத முடியவில்லை.. ஆகையால் வழக்கம் போல நம்மால் முடிந்த இசைக் கைங்கர்யம். எனக்கு பிடித்த காதை அறுக்காத, கிழிக்காத அம்சமான, சட்டென்று நினைவுக்கு வந்த பாடல்கள் சில.. ஆஸ்கார் தமிழன் ரஹ்மான் பாடல்கள் ஐம்பது பதிவுகள் தாங்கும்.. இப்போதைக்கு வாழ்த்துக்காக கொஞ்சம் இங்கே..

உலகத் திரைப்பட வரலாற்றிலேயே முதன்முறையாக.. கிழவிகள் கும்மி அடித்து பாட மணி எடுத்த ரோஜாவில் இருந்து.. ருக்குமணி..ருக்குமணி... அந்த லைட்டிங்கும், அருவியும் அடாடா.. எஸ்.பி.பியின் அசத்தல் அழைப்பு குரலில்....



இந்திரா.. தொட தொட மலர்ந்ததென்ன.. பூவே தொட்டவனை மறந்ததென்ன...



கிழக்கு சீமையிலே... ஆத்தங்கர மரமே..,


புதிய முகம்..... பக்தி பாடல் பாடட்டுமா.. நித்தி இங்கே ஆடட்டுமா..போடலாம் என்று இருந்தேன்... பரவாயில்லை.. ஜூலை மாதம் வந்தால் கேளுங்கள்...



ஜென்டில்மன்... உசிலம்பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி... குழல் ஊதி சுளுக்கு எடுக்கும் பாட்டு...


திருடா..திருடா.. சாகுல் ஹமீது குரலை முதலாகக் கொண்டு போட்ட பாடல். இசைக்கருவிகளின் ஆதிக்கமே இல்லாத பாடல்.. வைரமுத்து... ராசாத்தி என் உசுரு என்னுதில்லை..


உழவன்.. பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ... பாடலும்.. அனுபவித்து பாடிய எஸ்.பி.பியும் என்றென்றும் வாழ்க.. 


வண்டிச்சோலை சின்னராசு... இது சுகம் சுகம் இது.. மீண்டும் மீண்டும்.. சின்ன குஷ்பூ என்று பேசப்பட்ட சிவரஞ்சனி.. நடித்த.. பாடல்.. நல்ல மெலடி..



பாம்பே.. பூவுக்கேன்னா பூட்டு கற்றேக்ன்ன ரூட்டு.. ஹல்லா குல்லா.. மனிசா.. அரவிந்த்... மணி.. வேறன்ன..



டூயட்.... அஞ்சலி..அஞ்சலி.. புஷ்பாஞ்சலி... சாக்ஸ்.... அற்புதம்..



பின் குறிப்பு: இன்னும் கொஞ்ச நாட்களுக்கு ப்ளாக் பக்கம் தலை வைத்து படுக்க முடியாது போலிருக்கிறது. இது பதினைந்து நிமிடத்தில் பதியப்பட்டது. பத்துஜி என் கடமையுணர்ச்சியை பாராட்டலாம். இரவு நேரங்களில் புதியதாக பதியலாம் என்றால் லேட்டாக செல்வதால் அதற்க்கும் அங்கே தடா. கஞ்சா அபின் அடித்தவன் போல திரும்ப திரும்ப எண்ணம் எல்லாம் வர்ணமயமாக வலைப்பூக்கள் இருந்தாலும்..... நாம் சம்சாரி.. உழைக்கணும்.. நாலு காசு சம்பாதிக்கணும்.. வேறுதுவும் சொல்வதற்கில்லை. இன்னும் புக் ஃபேர் வேற போகணும்.. ஹும்.. ஹும்.. பார்க்கலாம்... பை.

Tuesday, January 4, 2011

சங்கீத சிரிப்பு

இசை மூவர்!
sangeetha sirippu
சுதா ரகுநாதன், அருணா சாய்ராம், அனுராதா ஸ்ரீராம்
  1. மேலே காணப்படுபவர்கள் விளம்பர மாடல்கள் அல்லர்.
  2. மேற்கண்ட படம் ஜாக்கெட், புடவை, சுடிதார் போன்றவைகளின் விளம்பரம் அல்ல.
  3. மேலும் அவர்களின் கை, காது, கழுத்து மூக்கு போன்ற அவயங்களில் இருக்கும் அணிகலன்களின் விளம்பரமும் அல்ல.
  4. நாலே வாரத்தில் சிகப்பழகு க்ரீம்களின் விளம்பரமும் அல்ல.
  5. க்ளோஸ்-அப், கோல்கேட் போன்ற சுகந்த ஸ்வாச பற்பசை விளம்பரமும் அல்ல.
  6. மேற்கண்ட குறிப்புகள் கிண்டலோ கேலியோ அல்ல.
  7. நிச்சயமாக இது சங்கீத சிரிப்பு தான்.

பின் குறிப்பு: அக்கா நித்யஷ்ரீ மஹாதேவன் ஃபோட்டோ இதுபோல் கிடைக்கவில்லை. :-(

பட உதவி: தினமணி- இசைவிழா மலர்

-

Sunday, January 2, 2011

இன்விடேஷன் முத்து

"முத்து இன்னிக்கி மூணாம் தெரு, ரெண்டாம் தெரு, காந்தி ரோடு இது எல்லாம் முடிச்சுடு. சரியா.. தை ஒன்னு கல்யாணம். அப்புறம் அவாளை விட்டுட்டேன்.. இவாளை விட்டுட்டேன்னு தலையை சொரிஞ்சிண்டு வந்து நிக்காத.." என்று வக்கீல் வைத்தியநாதன் வாசல் திண்ணையில் ஈசி சேரில் சாய்ந்து படுத்துக்கொண்டு அவனை ஏவிக் கொண்டிருந்தார். "சரின்னா.. முடிச்சுடறேன்..இது அரசகட்டளையல்லவோ..." என்று கையில் பத்திரிகை கட்டோடு தயங்கி தயங்கி நின்னவனுக்கு முகத்தைக் காட்டாமல் குனிந்து தரையை பார்த்து டப்பியில் இருந்து கையில் ஒரு சிட்டிகை பொடி அள்ளி எடுத்து சுத்து வட்டாரத்தில் இருக்கும் தூசி தும்பட்டைகள் உள்ளே போகும் அளவிற்கு "சர்ர்.." என்று மூக்கில் வைத்து ஒரு இழு இழுத்தார். "வாக்குவம் கிளீனர் தோத்துது போங்கோ.." என்ற நிலைவாசல் படியில் முட்டுக்கொடுத்து நின்ற மாமியின் எகத்தாளமான கமெண்ட்டுக்கு செவிமடுக்காமல் "க.. ஹ.." என்று மண்டைக்குள் சுர்ரென்று ஏறிய பொடியால் தலையை ஆட்டி கணைத்து மீண்டும் ஒரு முறை மூக்கை உறிஞ்சினார். "பொடிக்கு பதிலா ரெண்டு பீரங்கி குண்டை மூக்கில் போட்டு அவாள ஒரு தடவை தும்மச் சொன்னா கோர்ட்ல எதிரிகள் எல்லாம் பயந்து ஓடிடுவான்னேன்.." என்று வக்கீலாத்து மாமி மகளிர் சங்கத்தில் தனது தோழிகளிடம் ஜோக் அடிப்பது வழக்கம். "அண்ணா... ஒரு சிட்டிகை கொடுத்தேள்ன்னா கல்யாணப் பரிசு மாதிரி வாங்கிண்டு ஓடிடுவேன்" என்று டர்க்கி டவலால் மூக்கை துடைத்துக் கொண்டிருந்தவரிடம் மஞ்சள் பல் தெரிய இளித்தான் முத்து.

வெள்ளைக் கலர் சட்டை வேஷ்டி. கந்தையானாலும் கசக்கி கட்டு என்பதை வீராப்பாக மீறியவன் போல தினசரி அழுக்கு வேஷ்டி சட்டை. சட்டை பழுப்பு கலரில் இருந்தாலும் பின்னக் கழுத்துக்கு கலர் கர்ச்சீப் மடித்துக் கொடுத்திருப்பான். "முத்து.. ரௌடி மாதிரி எதக்கு  காலர் பின்னாடி கர்ச்சீப்பு சுத்திருக்கே" என்று யாராவது கேட்டால் "காலர் அழுக்காச்சுன்னா யார் தோப்பா.. மக்களை பெற்ற மகராசிக்கு வயசாய்டுத்து.. மணாளனே மங்கையின் பாக்யம்ன்னு எனக்கு இன்னும் ஒருத்தி வாய்க்கலை..." என்று பெரிய வியாக்யானம் கொடுப்பான். யார் வீட்டு கல்யாணம் என்றாலும் முத்து தான் பத்திரிகை டிஸ்ட்ரிபியூஷன். கல்யாணத்துக்கு பத்து நாள் முன்பிருந்தே மணமக்கள் வீட்டிற்கு காலையிலே வந்துவிடுவான். பேர் வீட்டு அட்ரெஸ் ரெண்டும் எழுதி அவன் கையில் கொடுத்துவிட்டால் தெரு வாரியாக பிரித்துக் கொண்டு சேர்பித்து விடுவான். முத்துவுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. "முத்து சைக்கிள் ஓட்டக் கத்துண்டா இன்னும் நிறைய வேலை செய்யலாமே" என்று கேட்ட பட்ணம் பவானி மாமியிடம் "அப்புறம் நான் ரிகாஷாக்காரன் ஆயிடுவேன் மாமி.." என்று சிறந்த பதில் கூறி அந்த அழுக்கு காலரை பெருமையாக அவனே தூக்கி விட்டுக்கொண்டான்.

"காலணா காசு கொடுக்காத கஞ்சர் கோபாலன் மாமா வீட்டிற்கு பத்திரிகை கொடுக்க மாட்டேன்" என்று கட் அண்ட் ரைட்டா சொல்லிவிட்டான். "ஏண்டா முத்து மட்டேன்ற.." என்று வக்கீல் கேட்டதற்கு "அந்த மாடி வீட்டி ஏழை அவாத்து பொண்ணுக்கு பணக்கார குடும்பம் ஒன்னு பார்த்தது. பையன் நித்யபடி பீடி சிகரெட் லாஹிரி வஸ்த்துகள் இல்லாம கண்ணே தொறக்க மாட்டான். பெட் காபி மாதிரி பெட் சிகரெட் பெட் ரம்மு... என்ன ஓய்.. மாப்பள திரிகாலமும் நீரும் நெருப்புமா இருப்பாராமேன்னு அவர் அம்மாவுக்கு நேரா கேட்டுட்டேன். தீர்த்தவாரி செட் பூரா நம்ம வசந்த மாளிகை ஜஸ்டீஸ் கோபிநாத் வீட்ல உக்காந்து தாகசாந்தி பண்ணிக்கும் போது இந்தப் பையனை உத்தமபுத்திரன்னு நினைச்சு இவர் பொண்ணுக்கு பார்த்துட்டார். இதை அவர் அம்மாவை வச்சுண்டு சொன்னதில கோச்சுண்டுட்டார். இதனால அவாத்ல அவர் அம்மாவுக்கும் ஆத்துக்காரிக்கும் பழி சண்டை. தாய்க்கு பின் தானே தாரம். ஒரு நல்ல குடும்பத் தலைவனா இல்லாம தாயை காத்த தனையனாவும் இல்லாமா எம்மேல ஹிட்லர் உமாநாத்தா பாயறார்" என்று மூச்சு விடாமல் அரைமணி கதை சொல்லிவிட்டு அந்தப் பத்திரிக்கையை மட்டும் எடுத்து வக்கீல் கையில் கொடுத்துவிட்டு செருப்பில்லாமல் வெற்றுக் காலோடு நடையைக் கட்டினான் முத்து.

பஸ் ஓனர் சுந்தரம் மாமாவை எப்போதும் மோட்டார் சுந்தரம் பிள்ளை என்றுதான் மற்றவர்களிடம் சொல்லுவான். அவர் வீட்டிற்கு பத்திரிகை கொடுக்க போன இடத்தில் கையில் பத்திரிகை வாங்காமல் "அங்கேயே வச்சுட்டு போ" என்று ஒருக்களித்த கதவு வழியாக திண்ணையை காண்பித்த மாமி வீட்டிற்கு விலக்காக இருந்தாள் என்பதை புரிந்து கொண்டு "என்ன மாமி நேற்று.. இன்று.. நாளையா... " என்று கேட்டு வாயார வாங்கிக் கட்டிக்கொண்டான். அடுத்த ஒரு மாதத்திற்கு சுந்தரம் மாமாவை "பட்டாக்கத்தி பைரவன் மாதிரின்னா என்னைக் கண்டா துரத்தறார்.. அப்படி என்ன ஊர்ல இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிட்டேன்.." என்று ஊர் பூரா சொல்லி அங்கலாய்த்தான்.

"என்னடா முத்து எப்போ கல்யாணம் பண்ணிக்கபோரே.."  என்று கேட்ட பனாரஸ் பரிமளம் மாமியிடம் "சிரித்து வாழ வேண்டும்ன்னு நான் இப்போ இருக்கேன். பிறர் சிரிக்க வாழ வேண்டும்ன்னு கேட்கறேளா..." என்று கேட்டான். எப்போதும் ஒன்பது கஜம் பனாரஸ் பட்டில் ஜொலித்த அந்த மாமி "ஏண்டா வெறும் முத்துன்னு பார்த்தா முரடன் முத்தான்னா இருக்கே....உனக்குன்னு ஒரு நல்ல வேலையா பார்த்ததுண்டா பொண்ணு கிடைக்கும்டா" என்று ஆசிர்வாதம் கொடுத்தாள். "இது உழைக்கும் கரங்கள்.. வக்கீலாத்து பத்திரிகை தான் நான் கடைசியா கொடுக்கறது.. அப்புறம் ஏழைப் பங்காளன் சமையல் சாம்ராட் கிச்சா பரிஜாரகனா அவர் ட்ரூப்ல சேர்ந்துக்க சொல்லி என்னை கூப்ட்ருக்கார்... அவர் செட்ல சேர்ந்து நானும் நளமகாராஜா மாதிரி ஆயிட்டேன்னா எனக்கு ஒரு தமயந்தி கிடைக்க மாட்டாளா என்ன.." என்று பத்திரிகை கொடுத்துவிட்டு போனான்.

pandhi


ஓரிரு மாதங்கள் பல திருமண மண்டப சமையற்கட்டுகளில் வெந்தான் முத்து. ஒரு நல்ல யோகமான காலத்தில் முத்துவுக்கும் புதையலாக ஒரு ரத்தினம் கிடைத்தது. சமையல் கிச்சாவின் ஒன்று விட்ட அத்தையின் உறவில் சிறுவயதில் அப்பா அம்மாவை பறிகொடுத்த ஒரு பெண்ணிற்கு வாழ்வளித்தான் முத்து. "என்ன முத்து.. கல்யாணம் ஆச்சா.." என்ற கேள்விக்கு "ஓ..பெரிய இடத்து பெண்.. என்னதான் நாம பரிஜாரகனா வேலை பார்த்தாலும் அன்னமிட்ட கைக்கு ஒரு அன்னக்கிளி மாட்டிடுடுத்து.." என்று பெருமையாக ஊர் நெடுக கேட்டவரிடம் சொல்லிக் கொண்டான். "கல்யாணத்துக்கு அப்புறம் எங்கயும் போகலையா.." என்ற கேள்விக்கு "தேன் நிலவுக்கு தானே கேக்கறேள்.. ஊட்டி வரை உறவு மாமி..." என்று சொல்லி சந்தோஷமாக சிரித்துக் கொண்டே சட்டைக் காலர் கர்ச்சீப்பை சரி செய்துகொண்டான்.

மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்ததில் வெள்ளை சட்டை வேஷ்டி இரண்டும் தும்பைப்பூ நிறத்தில் இருந்தது. ராஜா வேஷம் போடாத மன்னாதி மன்னனாக மாறியிருந்தான் முத்து. பெண்ணே நீ வாழ்க.

பின் குறிப்பு: எப்போதும் சினிமா தலைப்பு சொல்லும் ஓர் ஆசாமியைப் பற்றிய கதை இது. இதில் நிறைய கருப்பு வெள்ளை திரைப்படங்கள் பெயர்களை உபயோகித்து இருக்கிறேன். எவ்ளோ என்று கண்டுபிடிப்பவர்கள் வைரமுத்து வாலி போன்றார் தங்களின் ஆயிரம் பாடல்கள் புத்தகம் போட்டது போல ஆயிரம் படங்கள் என்று டேடாபேஸ் கணக்காக புத்தகம் போட்டு வரும் ராயல்டி பணத்தில் எனக்கு ஐம்பது சதம் தரும்படி கோரப்படுகிறார்கள். நன்றி.

பட உதவி: couplets.in

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails