Showing posts with label ஒலிப் புத்தகம். Show all posts
Showing posts with label ஒலிப் புத்தகம். Show all posts

Wednesday, September 17, 2014

பார்த்திபன் கனவு - ஒலிப் புத்தகம்

நேற்று மாலை மயிலை சிவகாமி பெத்தாச்சி ஆடிட்டோரியம் ரொம்பி வழிந்தது. ட்ராஃபிக் வெள்ளத்தில் எதிர்நீச்சல் போட்டதில் நான் முக்கால் மணி லேட். டான்னு ஏழுக்கு ஆரம்பித்திருக்கிறார்கள். ஆஃபீஸ் ஜிகிரி தோஸ்த் சத்யாவோடு நுழைந்தேன். பேரன்பு காசி பெத்தாச்சிக் கதவோரம் காத்திருந்தார். “கீள இடமில்ல.. பால்கனிக்கு போங்க...” என்று மூவரையும் கண்டித்து வழி திருப்பிவிட்டார் ஒரு மகானுபாவர். ரிட்டயர்ட் மேத்ஸ் வாத்தியாராக இருந்திருப்பார். கையில் பிரம்பில்லாதது பகவத் சங்கல்பம். நட்பின் இலக்கணம் வீகேயெஸ்ஸும் வல்லபாவும் தம்பதிசமேதராய் இரசித்துக்கொண்டிருந்த வேளையில் நட்புக் கரடியாய் நுழைந்து பக்கத்தில் அமர்ந்துகொண்டேன்.

ஸ்வர்ண சம்க்கிகள் வைத்து கண்ணைப் பறித்த ராஜாங்க ஆடை ஆபரணங்களில் கவனமாக தமிழ் பேசி நடித்துக் கொண்டிருந்தார்கள். ஆடைத் தேர்வும் மேக்கப்பும் கனக் கச்சிதம். குந்தவி மேடை நிறைத்தார். பின்னால் நீலத்திரை. வசனமே பிரதானம். இரண்டொரு காட்சிகள் பார்க்க முடிந்தது. மன்னை கீழப்பாலம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஒரு பொட்டி ஒரு தபேலாவோடு ஒருவர் கூத்து பாட ”மகனே லோகிதாசா....” என்று சந்திரமதி ஸ்பீக்கர்களில் கதற அரிச்சந்திரா நாடகம் பார்த்தது நியாபகம் வந்தது. நடிகர்கள் இங்குமங்கும் நடக்க மேடைப் பலகை எழுப்பும் ”டக்..டக்” கூடுதல் பெர்கஷன். கடைசியில் வரிசையாய் நிற்க வைத்து அறிமுகப்படுத்தினார் பாம்பே கண்ணன்.

மேடையில் சேர் போட திரை போட்ட இடைவெளியில் ஜேயார் சாரும், ஸ்ரீதர் ஸ்வாமிநாத்ஜியும், பல்லவ ராஜகுமாரி குந்தவியாக இந்த பா.கனவின் குரல் ஹீரோயின் அநன்யாவும் அவரது மதர் தெரஸாவும் பலகனிக்கு வந்து ஜோதியில் ஐக்கியமானார்கள். ஸ்ரீதர் ஸ்வாமிநாத்தை போன ஜென்மத்தில் சக ஸ்நேகிதங்களுடன் பார்த்தது. நேற்று மீண்டும் பார்த்தேன்.

அமரர் கல்கியின் அமர காவியம் பார்த்திபன் கனவை ஆடியோ புத்தகமாக்கி வெளியிட்டார்கள். கல்கியின் கலாபூர்வமானப் படைப்பை பிட்பைட்டாக்கி வட்டுக்குள் இட்டுவிட்டார்கள். பட்டு நூல், மெட்டு நூல் என்று நிகழ்ச்சித்தொகுப்பாளரால் புகழப்பட்ட நல்லி செட்டியார் தலைமையும் முதல் பிரதியை வெளியிட்டும் பேசினார். சிகே. வெங்கட்ராமன் பளபள தலையுடன் பக்காவாகப் பேசினார். பாம்பே கண்ணனுடன் பொன்னியின் செல்வனில் கைகோர்த்த அனுபவத்தைப் பகிர்ந்தார். அவ்வப்போது ஜேயார் சார் காதைக் கடித்து தோளைச் சுரண்டிய எனக்கு மேடை நுட்பங்களைப் புரிய வைத்தார்.

”கல்கி மாமா” என்று உரிமையோடு பேசிய சிவசங்கரி தொழில்நுட்ப வசதிகளற்ற காலத்திலேயே அமரர் கல்கியின் அதீத உழைப்பைப் பற்றி பேசினார். முடிவு தெரியாமல் போய்ச் சேர்ந்துவிடுவோமோ என்கிற ஆதங்கத்தில் “நான் சாகறத்துக்குள்ள பொன்னியின் செல்வன் முடிஞ்சுடுமோன்னோ...” என்று அவரின் பாட்டி அடிக்கடி கேட்பார்களாம். ஊருக்கெல்லாம் உதவும் ஒரு தனவந்தரும் அவர் வீட்டருகே ப்ளாட்ஃபார பிச்சைக்காரருக்கும் மோட்சம் கிடைத்த கதை ஒன்றைச் சொன்னார். தனவந்தர் வள்ளலாக இருந்ததால் மோட்சம், இந்த பிச்சைக்காரருக்கு ஏன் மோட்சம் என்று கேட்டால், கஷ்டப்படுபவர்களுக்கு “அவர் வீட்டுக்குப் போ.. தானம் தருவார்... அவர் வீட்டிற்கு போ உதவி செய்வார்.. ” என்று எல்லோருக்கும் கைகாட்டியதால் அவருக்கு கைகாட்டி மோட்சம் என்று சுவையாகக் கதை சொன்னார்.

இந்திரா சௌந்திரராஜன் தமிழ் தாத்தாவை தமிழ் தாதாவாக்கிப் பேசினார். இக்கால இளைஞர்களுக்கு ஏற்ற தொழில் நுட்பத்தில் கொடுக்க இதுபோன்ற ஒலிப்புத்தகங்கள் அவசியம் என்றார். பால்கனியில் இருந்து கீழே பார்த்ததற்கு ஒரே நரைத் தலையர்களாகக் காட்சியளித்தனர். பாற்கடல். பயணங்களில் பாட்டு கேட்டுச் செல்வதற்கு பதிலாக இதுபோன்ற காவியங்களையும் கேட்டுச் செல்லலாம் என்றார்.

கறுப்பு-வெள்ளை பார்த்திபன் கனவில் நடித்த வைஜயந்திமாலா பாலி மிட்டாய் கலரில் டாலாக அமர்ந்திருந்தார். ஏஆரெஸ் வொயிட்&வொயிட்டில் அடுத்து பேச தயாராய் இருந்தார். வரலக்ஷ்மி விரத முஸ்தீபுகளில் ஈடுபட்டிருந்த மனைவியின் ஒற்றைச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு (பொட்டிப்பாம்பாக என்று வம்பர்கள் சொல்வார்கள்) வீட்டிற்கு பாதியிலே கிளம்பினேன். வீகேயெஸ் கையாலேயே ”ஏன்” கேட்டார். ஃபோனை காண்பித்தது நான் பின்னங்கால் பிடறியில் அடிக்க கிளம்பியதில் அர்த்தம் புரிந்து சிரித்தார். வெளியே அட்டை பாக்ஸில் சிடி விற்றுக்கொண்டிருந்தார்கள். சலுகை விலையில் ரூ.200க்கு வாங்கிக் கொண்டேன்.

பார்த்திபன் கனவு சீலைப் பிரிக்காமல் சேப்பாயிக்குள் பத்திரமாக இருக்கிறது. கனவைக் கேட்கவேண்டும். கேட்டதில் பிடித்தது என்று பகிரவேண்டும்.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails