Showing posts with label கணபதி முனி. Show all posts
Showing posts with label கணபதி முனி. Show all posts

Saturday, December 17, 2016

கணபதி முனி - பாகம் 48 : சக்தி மந்திரங்களும் ரிக் வேத ஆராய்ச்சியும்

...குடிசை பற்றிக்கொண்டு எரிய.... நாற்புறமும் தீ சூழ்ந்திருக்க.. கணபதி முனியின் உபன்யாசம் கேட்க வந்தவர்கள் பீதியோடு புகை நடுவில்..கலவரமாக இருந்தார்கள். ஆனால் மத்தியில் ரவையளவும் சலனமின்றி அமர்ந்திருந்தார் கணபதி முனி. “வனேம பூர்விரர்யோ மனீஷ அக்னி: சுஸோகோ விஸ்வானிஸ்யா” என்கிற ரிக் வேத அக்னி மந்திரத்தை ராகமாக சில முறைகள் பாடினார். 

அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் அப்போது திடீரென்று ஒரு சுழற் காற்று அடித்தது. கூரைமேல் பற்றிக்கொண்டு எரிந்த அந்த வைக்கோல் பிரிகளை அலேக்காகத் தூக்கி வெகுதூரத்திற்கு விசிறி எறிந்தது. ஒரு பெரும் விபத்து அங்கே தவிர்க்கப்பட்டது. கணபதி முனியின் மந்திர சக்தியைக் கண்டு அனைவருக்கும் வியப்பாக இருந்தது. இதுபோன்ற அற்புத பலனளிக்கும் சக்திமிகு மந்திரங்களை அவரிடம் கற்றுக்கொள்ள பலர் ப்ரியப்பட்டார்கள்.

வருஷம் 1930. நாயனாவின் தம்பி சிவராம சாஸ்திரி பிப்ரவரி ஆறாம் தேதி குலுவிக்கு வந்தார். நாயனா கடுகடுவென்று "யாத்திரையை முடித்துக் கொள்ள இங்கே வந்தாயா?" என்று கேட்டார். வீடு வாசல் துறந்து தன்னைப் போல தன் தம்பியும் இப்படி க்ஷேத்திராடனம் வந்தது பற்றி அவருக்கு கோபம் ஏற்பட்டிருக்கலாம். மறுநாள் நெஞ்சு வலி என்று மாரைப் பிடித்துக்கொண்டு சாய்ந்தவர் மேலோகம் சென்று விட்டார். தபஸ்வியான கணபதி முனி கேட்ட கேள்வியின் உள்ளர்த்தம் சுற்றி நின்றவர்களுக்கு அப்போது புரிந்தது. 

நாயனாவும் அவரது மகன் மஹாதேவனும் இன்னும் சிலரோடு காரில் சென்றுகொண்டிருந்தார்கள். ஒரு திடீர்த் திருப்பத்தில் கார் கட்டுப்பாடிழந்து பல்டி அடித்தது. மஹாதேவனைத் தவிர்த்து யாருக்கும் ஒன்றுமில்லை. மஹாதேவனுக்கு கை முறிந்தது. மருத்துவமனையில் சேர்க்கும்படி டாக்டர்கள் பரிந்துரைத்தார்கள். ஆனால் நாயனா ”அஸ்தி சந்தான மந்த்ரா”வை உச்சாடனம் செய்தார். அதன் பலன் உடனே தெரிந்தது. மருத்துவர்கள் அதிசயிக்கும்விதமாக குணமடைவதில் முன்னேற்றம் தெரிந்தது.

மஹாதேவனுக்கு இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தனியே வீடு திரும்புவதற்கு மனமில்லை. நாயனாவும் கலுவராயிக்குப் புறப்பட்டுச் சென்றார். இம்முறை நாயனா திருவண்ணாமலை சென்று தனது குரு ரமணரைச் சந்தித்தார். கணபதி முனியின் இடையறாத தபங்களைக் கேள்விப்பட்டு ஸ்ரீரமணர் அவரை ஆசீர்வதித்துப் பாராட்டினார்.

குலுவி திரும்பிய கணபதி முனி இடைவெளியில்லாமல் தவமியற்றினார். பக்தி சிரத்தையாக சீதாராமன் அவருக்குப் பணிவிடைகள் செய்தார்.  நாயனா கணபதியின் அவதாரம் என்றே வணங்கினார்.

**

1931 ஃபிப்ரவரி. தேவேந்திர சுப்ரமண்ய விஸ்வாமித்ரா என்பவர் நாயனாவையும் அவரது நண்பர்களில் கற்றுக் கரைகண்டோரையும் சிரிஸிக்கு அழைத்தார். அனைவருடனும் உரையாடி மகிழ வேண்டும் என்பது அவரது விருப்பம். ஸ்நேகிதர்களுள் வக்கீல் புண்டரீகராயரும் உண்டு. அவர் உலகம் சுற்றியவர். ரோமன் கத்தோலிக்கர்களின் குருமாரான போப்பைச் சந்தித்து உரையாடியவர். அவரது மகன் சுந்தர பண்டிட். அவரும் வக்கீல். அவரும் விஸ்வாமித்ராவும் பள்ளித் தோழர்கள். நாயனாவைப் பற்றி பல வருடங்களுக்கு முன்னரே அறிந்துகொண்டவர். நற்ண்புகளை உடையவர். அவரது தம்பி மாதவா பண்டிட்டும் இந்த கூட்டத்தில் உடனிருந்தார்.

புண்டரீகராயர் சிரிஸியின் புறநகர்ப் பகுதியில் ஒரு கட்டிடம் அமைத்திருந்தார். (ஆனந்த ஆஷ்ரமம்). தனது வயோதிகக் காலத்தில் அமைதியாகவும் பூஜை புனஸ்காரம் என்று அங்கு கழிக்க எண்ணினார். ஆனாலும் உடம்பு ஒத்துழைக்காத காரணத்தால் வீட்டிலேயே இருந்தார்.

"நீங்கள் ஆனந்த ஆஷ்ரமத்தில் தங்குவதாக இருந்தால் அதுதான் உண்மையான பேரனாந்தமாக இருக்கும்.." என்று நாயனாவிடம் வேண்டினார் ராயர். 

" நீங்கள் அங்கு தங்கினால் அது எங்கள் பாக்யம்" என்று விஸ்வாமித்ராவும் ராயரின் வேண்டுதலுக்கு வழிமொழிந்தார். 

சீதாராமா பட்தி கேட்டுக்கொள்ள அனைவரும் முயற்சியினாலும் நாயனா ஆனந்த ஆஷ்ரமத்தில் தங்கினார். பலருக்கு மந்திர உபதேசம் செய்தார். ஆஷ்ரமத்திற்கு விஜயம் செய்வோருக்கு ரமணரின் உபதேசங்களையும் நற்செய்திகளையும் எளிய முறையில் விளக்கினார். கணபதி முனியின் முன்னால் உட்கார்ந்து ஜபதபங்கள் செய்வதையும் தியானமியற்றுவதையும் பெரும்பேறாகக் கருதினர்.  ஆனந்த ஆஷ்ரம் கடவுள் வாழும் ஆஷ்ரமாக பொலிந்தது.

கண்பதிமுனியின் பெரும்பாலன நேரங்கள் தவத்தில் கழிந்தது. ஆனந்த ஆஷ்ரமவாசிகளுக்கு இது அதிசய பல அனுபங்களைத் தந்தது. "கபால பேதனா சித்தி" என்னும் சித்து வேலையால் தியானமியற்றும் போது உடம்பு மட்டும் தன்னிச்சையாக மிதப்பதைக் கண்டு வாய் பிளந்தனர். 

ராமச்சந்திர பட் ஆனந்த ஆஷ்ரமத்திற்கு அடிக்கடி வரும் பக்தர். சம்ஸ்க்ருதம் தெரியாது. இருந்தாலும் நாயனாவின் குரலை மட்டும் கேட்பதற்காக அனுதினமும் ஆஷ்ரமம் வந்தார். யாவரும் அதிசயத்தக்க வகையில் சில நாட்களில் அவர் சம்ஸ்க்ருதம் பேசி எழுத ஆரம்பித்துவிட்டார். 

இன்னும் சிறிது நாட்கள் கழித்து திருவண்ணாமலையிலிருந்து விஸ்வனாதன் வந்து கணபதிமுனியின் காலடியில் வந்து சேர்ந்தார். பகவான் ரமணரின் "உள்ளது நாற்பது" வின் சம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பை நாயனா திருத்துவதற்காகக் கொண்டு வந்தார். புதிதாக மொழிபெயர்க்க வேண்டும் நினைத்துக்கொண்டிருந்த போது புதுச்சேரியிலிருந்து கபாலியும் அவரது மனைவியும் ஆனந்த ஆஷ்ரமத்திற்கு வந்தனர். அடுத்தது மஹாதேவர். பின்னர் சீதாராம பட்தியின் பெண் நாகவேனியும் கணபதி முனிக்கு சேவை செய்வதில் சேர்ந்துகொண்டார். குலுவியிலிருந்து சீதாராமனும் அவரது மனைவியும் அடிக்கடி ஆஷ்ரமத்திற்கு வந்து சென்றனர். இந்த கோஷ்டி கணபதி முனிக்கு மிகவும் சந்தோஷம் அளித்தது.

பகவான் ஸ்ரீ ரமணரின் "உள்ளது நாற்பது" (இருத்தலின் நாற்பது) படைப்பை சம்ஸ்க்ருத ஸ்லோகங்களாக்கும் பணியில் இறங்கினார். அதன் சாராம்ஸத்தை விஸ்வனாதனுக்கும் கபாலிக்கும் அருளிச்செய்தார். மார்ச் பதினான்காம் தேதி மொழிபெயர்ப்பு பூர்த்தியாகி அதற்கு "சத் தர்ஸனம்" என்று பெயரிட்டார். மஹாதேவா அதன் தெலுங்கு மொழிபெயர்ப்போடு திருவண்ணாமலைக்கு திரும்பினார். 

மொழிபெயர்ப்புக்குப் பின்னர் நாயனா பல விஷயங்களில் தெளிவடைந்தார். உலகத்தில் உலவும் பல வேற்றுமைகளில் இருக்கும் ஒரே உண்மையை உணர்ந்தார். இத்தருணத்தில் பகவான் ஸ்ரீ ரமணரின் அருள் வேண்டி வாரம் ஒரு லிகிதம் அவருக்கு எழுதத் தலைப்பட்டார்.

ஜூன் மாதத்தில் கபாலி சத் தரிசனத்தின் சம்ஸ்க்ருத பொழிப்புரையை பூர்த்தி செய்தார். இதற்கிடையில் நாயனா "ப்ரசண்ட சண்டி திரிசதி" என்னும் முன்னூறு சம்ஸ்க்ருத ஸ்லோகங்களை ப்ரசன்ட சண்டியைப் போற்றி எழுதி முடித்திருந்தார்.

தேவவிரதனின் மகன் ஸோமாவின் உபனயனம் கோகர்ணத்தில் நடைபெறுவதாக அழைப்பு வந்து அங்கு சென்று ஆசீர்வாதம் செய்து விட்டு வந்தார். ஜூலை ஒன்றாம் தேதி சத் தர்ஸனத்தில் சம்ஸ்க்ருத பொழிப்புரையை விஸ்வனாதன் மற்றும் ரெங்கா ராவ் மூலமாக பகவான் ஸ்ரீ ரமணருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் கபாலி ஸ்ரீ அரவிந்த ஆஷ்ரமத்திற்கு சென்றார். சீதாராம பட்தி சகர்சாரிபா என்ற அருவிக்கு நாயனாவை அழைத்துச்சென்றார். கணபதி முனி எப்போதும் தனது சிஷ்யர்கள் ஸ்வயமாக சிந்திக்க அனுமதித்தார். தன்னுடைய அன்பினாலும் அரவணைப்பினாலும் அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படாமல் குருபீடத்தில் இருந்தார். இதனால் தவறு செய்யும் சிஷ்யர்கள் கூட தாமாகவே தங்களைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பை அளித்தார்.


**

பகவான் ரமணருக்கு நாயனா எழுதிய கடிதங்களில் அவரது ஆன்மிக புரிதல்களின் பல நிலைகளை எடுத்துக்காட்டியது. ரமணர் அதை மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து பொக்கிஷமென மதித்தார். அனைத்துக் கடிதங்களும் சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்டவை.

1931ம் வருடம் சீதாராம பட்தியின் வேண்டுகோளுக்கு இணங்க குலுவிக்கு திரும்ப சம்மதித்தார். ரிக் வேதத்தை திரும்பவும் படித்து அதில் மஹாபாரதம் வரும் இடங்களை குறித்துக்கொள்ள விரும்பினார். 1933ல் மஹாபாரதத்தில் இடம்பெற்ற நாயகர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை தொகுத்திருந்தார். அதற்கு "பாரத சரித்ர பரீக்ஷா" என்று பெயரிட்டார். அவரது சிஷ்யர்கள் அதை மஹாபாரத சங்ரஹா (அ) விமர்ஸா (அ) மீமாம்ஸா என்றழைத்தார்கள்.

இதில் மஹாபாரதத்தின் நாயகர்களை, கிருஷ்ணன் உட்பட, மந்திர உபாசகர்களாக, மந்திரங்களின் முனிவர்களாக ( மந்த்ர த்ருஷ்டா) உருவாக்கி, தவங்களின் மூலம் பலமடைந்து, நாட்டின் நலனுக்காக கௌரவர்களை எதிர்த்து போரிட்டதாக காட்சிப்படுத்தியிருந்தார். 

தொடரும்..

#கணபதி_முனி
#காவ்ய_கண்ட_கணபதி_முனி_48

Thursday, December 15, 2016

கணபதி முனி - பாகம் 47 : குலுவி அற்புதங்கள்

அட்வகேட் பி.வி. நரசிம்ம ஸ்வாமி பகவான் ஸ்ரீரமண சரிதம் எழுதுவதற்கு விரும்பினார். பிரதான சிஷ்யரான நாயனாவிடம் விபரங்கள் சேகரிக்க அமர்ந்தார். நாயனா ரமணரின் வாழ்க்கைச் சரித்திரத்தைச் சொல்லச் சொல்ல குறிப்பெடுத்துக்கொண்டார் நரசிம்ம ஸ்வாமி. பின்னர் பி.வி ஸ்வாமி அவரது வாழ்க்கைப் பற்றியும் அனுபவங்களையும் பற்றிக் கேட்ட போது மகரிஷியும் பதிலுரைத்தார்.

இந்தத் தகவல்களைக் கொண்டு பி.வி நரசிம்மஸ்வாமி ஆங்கிலத்தில் எழுதினார். இதை மூலமாகக் கொண்டு ஸ்ரீகபாலி சாஸ்திரி “வசிஷ்ட வைபவம்” என்று சம்ஸ்க்ருதத்தில் எழுதினார். இந்த மூலத்தைக் கட்டிக் காத்தவர் விஸ்வநாதர். ரமணரின் வாழ்க்கைச் சரிதத்தை “Self Realisation" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நரசிம்மஸ்வாமி எழுதியதை ஆஸ்ரம நிர்வாகம் அச்சிட்டது.
ரமணர் தனது வழிகாட்டுதல்களை அவ்வப்போது வெண்பாவாக எழுதினார். அதை முருகனாரிடம் கொடுத்திருந்தார். அது மொத்தம் நாற்பது சேர்ந்த போது “உள்ளது நாற்பது” என்ற தலைப்பில் தமிழில் வெளியிட்டார்கள். கணபதி முனி அந்த நாற்பதையும் சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்து “சத்தர்ஸனம்” என்ற தலைப்பில் புத்தகமாக்கினார்.
**
அக்னி மலையான திருவண்ணாமலையின் கொளுத்தும் வெய்யில் நாயனாவை மிகவும் படுத்தியது. குகையில் தங்கியிருந்தாலும் அவருக்கு குளிர்ந்த காற்று தேவைப்பட்டது. எதிர்வந்த மார்ச் மாதம் கோகர்னத்திலிருந்து இரு சிஷ்யர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருந்தார்கள். நாயனா படும் கஷ்டத்தைப் பார்த்து
“ஸ்வாமி தாங்கள் எங்களுடன் கோகர்ணத்தில் வந்து தங்கலாமே! அங்கும் வெப்ப சீதோஷ்ணமிருந்தால் நீங்கள் சிரிசியில் ஓய்வெடுக்கலாம்.” என்று பணித்தார்கள்.
நாயனாவுக்கு தேவவிரதனைப் பார்க்கும் ஆவல் வந்தது. கோகர்ணத்தில் நிச்சயம் பார்க்கலாம் என்று எதிர்பார்த்து வந்த கணபதி முனிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தேவவிரதன் தபஸுக்காக வெளியூர் சென்றிருந்தார். தேவவிரதனின் மனைவி ஷ்ரத்தாதேவி நாயனாவிற்கு பணிவிடைகள் செய்து பார்த்துக்கொண்டார். தபஸில் இருக்கும் தேவவிரதனைப் பாதியில் கூப்பிடவும் முனிக்கு மனசு இல்லை. வழக்கத்தில்லாமல் கோகர்ணமும் கொதித்தது.
தேவவிரதனின் தம்பி சீதாராம பாரதி சிரிசிக்கு அருகேயிருக்கும் குலுவியில் இருந்தார். அவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர். நாயனாவின் கண்களும் ரத்தமும் உஷ்ணத்தில் உறைந்திருந்தது. தனது மருத்துவத்தினால் அதை சொஸ்தப்படுத்தினார். தோப்பும் நிலமுமாக ஜமீந்தார் போல குலுவேயில் வாழ்ந்தார் சீதாராம பாரதி. தேவவிரதனின் வழிகாட்டுதலின்படி நாயனாவைக் குளுகுளு குலுவியிற்கு அழைத்துச்சென்றார் சீதாராம பாரதி.
குலுவே செல்லும் வழியில் ஷாமலி நதி தீரத்தின் கரையிலிருக்கும் சங்கரமடத்தில் ஓய்வெடுத்தார். இந்தப் புராதன பீடத்தின் பெயர் “லக்ஷ்மி நரசிம்ம சந்தரமௌளீஸ்வர பாதபீடம்”. இது விஸ்வானந்தா சரஸ்வதி ஸ்வாமி என்கிற மகாத்மாவினால் ஸ்தாபிக்கப்பட்டது. சொண்டஸ்வரனவல்லி என்ற இடத்தின் ஜமீந்தார் இந்தப் பீடத்தின் போஷகராக இருந்தார். இந்தப் பீடத்தின் தற்போதைய மடாதிபதி சர்வயஞ்யேந்திர சரஸ்வதி கணபதிமுனியை பூர்ண கும்ப மரியாதையோடு வரவேற்றார். இருவரும் நிறைய சத்விஷயங்களைப் பேசினார்கள். பேச்சோடு பேச்சாக சர்வயஞ்யேந்திர சரஸ்வதி பீடம் மிகவும் மோசமான நிதி நெருக்கடியைச் சந்திக்கிறது என்று கூறினார்.
“சரஸ்வதிகள் குடியிருக்கும் இடத்தில் தரித்ரமா? ஏன்?” என்று வினவினார் கணபதி முனி.
“இந்த மடத்தைப் போற்றிப் பாதுகாத்துப் பொருளுதவிகள் அளித்து ரக்ஷித்து வந்த ஜமீந்தார் குடும்பத்தில் சொத்துத் தகராறு. ஒருவரும் தர்மம் செய்ய முன் வரவில்லை.” என்று வருத்தமுற்றார் மடாதிபதி.
அந்தப் பீடத்தின் பிரதானக் கடவுளை மையமாக வைத்து ஒரு ஸ்லோகம் எழுதி அவர்கள் கையில் கொடுத்துப் பாராயணம் செய்யச் சொன்னார். ஸ்வாமி ஸ்ரீ சர்வயஞ்யேந்திர சரஸ்வதிக்கு கொஞ்ச நாட்களிலேயே ஆச்சரியம் காத்திருந்தது. நான்கு திசைகளிலிருந்தும் சடசடவென்று உதவிகள் குவிய ஆரம்பித்து குறுகிய நாட்களில் மடம் நிமிர்ந்தது.
அங்கிருந்து கிளம்பி குலுவேவை அடைந்தார்கள். ஊர் எல்லையில் ஐம்பது பண்டிதர்கள் பூரணகும்பத்தோடு சாமகானம் ஓதி வரவேற்றார்கள். ஊர்வலமாக அவரைப் பின் தொடர்ந்து சீதாராமன் வீடு வரை வந்தார்கள். அனைவருக்கும் கணபதி முனியின் ஆன்மிக தேர்ச்சியும் அறிவின் முதிர்ச்சியும் தெரியும். அவரை எதிர்கொண்டு அழைக்க வந்தவர்களில் ஒருவர் சிரிசி தேவேந்திர சுப்ரமண்ய விஸ்வாமித்திரர்.
கும்தா பாடசாலையில் பயின்ற போது கணபதி முனி ஆற்றிய உரையில் ஈர்க்கப்பட்டவர் விஸ்வாமித்திரர். அவர் சீதாராமனுடன் கோகர்ணத்தில் கணபதி முனிக்கு அறிமுகமானவர்.
குலுவியின் தட்பவெட்பம் தியானத்திற்கு ஏற்றது. அமைதியும் குளுமையும் அம்மண்ணுக்கு இதம் சேர்த்தது. எப்பவாவது சிலர் ஆசிவாங்கவும் தீக்ஷைக்காகவும் வந்தார்கள். மற்றபடி துளிக்கூட இம்சையில்லாத சூழ்நிலை.
ஒருநாள் கணேச பட் என்பவர் நாயனாவின் அருள் வேண்டி ஒரு விசித்திரமான வழக்கோடு வந்தார். பட்டின் மனைவி பெயர் அகல்யா. மிகவும் நல்ல பெண். அடக்கமானவர். பெரியவர்களிடம் அன்பும் மரியாதையும் நிரம்பியவர். திருமணமாகி ஆறுமாதங்களுக்கு பிரச்சனை எதுவுமில்லை. வாழ்க்கை சிறப்பாக ஓடியது.
”ஸ்வாமி... மந்திரங்களிலும் மருந்துகளிலும் குணப்படுத்த முடியாத ஒரு விசித்திரமான நோயில் இப்போது அகல்யா கஷ்டப்படுகிறாள். பேசிக்கொண்டிருக்கும் போதே அடிக்கடி ஆழ் மௌனத்தில் மூழ்கி விடுவாள். அப்புறம் எதையோ பறிகொடுத்தார்ப்போல மோட்டுவளையை வெறித்துப்பார்ப்பாள். இதையெல்லாம் விட கொடுமையான விஷயம் என்னவென்றால் தனது ஆடைகளைக் களைந்து எறிந்துவிட்டு ஒளிந்து கொள்ள இடம் தேடுகிறாள்....” அவரது குரல் கம்ம கணபதி முனியிடம் தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.
வீட்டுக்கு வெளியே இருக்கும் புல் தரையில் அமர்ந்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது பட்டின் மனைவி இல்லத்தின் முன் அறையில் இருந்தார். நாயனா எழுந்து விடுவிடுவென்று சென்று அந்த அறைவாசலில் நின்று கொண்டார். கதவைத் தட்டி....
“அகல்யா... ஆடையுடன் வெளியில் வாம்மா...” என்று அழைத்தார். அந்த நேரத்திலிருந்து அகல்யாவுக்கு நல்ல நேரம். அவரைப் பிடித்திருந்த மாய வியாதி நீங்கி நலமுடன் நடமாட ஆரம்பித்தார். பின்னர் அவரது கணவர் பட்டிற்கு டைஃபாய்ட் ஜுரம் வந்தது. அகல்யா முனியிடம் உதவிக்கு ஓடினார்.
“இந்தாம்மா.. இது இந்திராணி சப்தசதி... இதை மனப்பூர்வமான நம்பிக்கையோடு ஜெபியுங்கள்... எல்லாம் குணமாகிவிடும்..” என்று நம்பிக்கையூட்டி அனுப்பிவைத்தார்.
கணவர் முன் அமர்ந்து அகல்யா இதைப் பாடினார். கணேச பட்டின் ஜுரம் உடனே வந்த சுவடு தெரியாமல் விலகியது. நாயனாவின் வாக்பலிதம். அவரின் அருகாமை தந்த சிகிச்சை.
மற்றொரு நாள் ஒரு வைக்கோல் வேய்ந்த குடிசை வீட்டில் சிலர் கணபதி முனியின் உபன்யாசம் கேட்க குழுமினார்கள். உள்ளே நடந்துகொண்டிருக்கும் போது ஒரு வைக்கோல் பிரி தீப்பிடித்துக்கொண்டது. பின்னர் வீசி அடித்தக் காற்றில் எல்லாம் பற்றிக்கொண்டு எரிந்தது. அனைவரும் திகுதிகுவென்று பற்றிக்கொண்ட தீயின் பிடியில் இருந்தனர். என்ன செய்வதென்று தெரியாமல் பீதியில் அனைவரும் உறைந்திருக்க... கணபதி முனி.....

Monday, September 19, 2016

கணபதி முனி - பாகம் 46 : ஸ்ரீஅன்னையுடன் தியானம்

மாநாடு பண்டிதர்களால் நிரம்பியிருந்தது. வசிஷ்ட கணபதி முனியையும் மாளவியாவையும் பார்த்த பண்டிதர்களுக்கு ஆச்சரியம். இக்கொள்கைக்கு எதிரான இருவரும் இந்த மா நாட்டுப் பந்தலில் அமர்ந்திருப்பது குழப்பமாக இருந்தது. ஆனால் இருவரையும் வெளியேறச் சொல்லவும் எவர்க்கும் தைரியம் இல்லை. இவர்களை எப்படி சுமூகமாக அனுப்பவது என்று ஏற்பாட்டாளர்கள் தலையைப் பிய்த்துக்கொள்ளும் வேளையில் இருவரும் நெடு நாட்களுக்குப் பிறகு சந்தித்ததால் சந்தோஷமாக அளவளாவிக்கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவர்களின் தவிப்பைப் புரிந்துகொண்ட இருவரும் மாநாட்டிலிருந்து அமைதியாக வெளியே வந்தார்கள்.
பின்னர் மாளவியா ஹிந்து ஹை ஸ்கூலில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தார். முக்கியஸ்தர்கள் சிலரையும் அந்த வர்ணாஷ்ரம பண்டிதர்களையும் மேற்படி கூட்டத்திற்கு அழைத்தார். மாளவியாதான் தலைமை தாங்கினார். கணபதி முனி தீண்டாமை விரும்பத்தாக ஒன்று என்பதைப் பற்றி விஸ்தாரமாக பேசினார். நன்றாக நடந்தது.
ஆனால் கணபதி முனி வர்ணாஸ்ரம பண்டிதர்கள் திருந்த மாட்டார்கள் என்றும் இது கால விரயமே என்றும் நொந்துகொண்டார். இவர்களை சீர்திருத்த நினைப்பது வெட்டிச் செயல். காலமே இவர்களது காரணமற்ற போக்கை மாற்ற வேண்டும் என்று முடித்துக்கொண்டார்.
இந்திராணி சப்தஸதி என்று தானெழுதிய நூலை திருத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். பகவான் ஸ்ரீரமணர் உபதேச சாரம் என்ற தனது நூலை சம்ஸ்க்ருதத்தில் மொழிமாற்றம் செய்த பிரதியொன்றை கணபதி முனிக்கு அனுப்பி வைத்தார். சுருக்நறுக்கென்று கச்சிதமாகவும், எளிமையாகவும், எளிதில் புரியும்படியாவும் கவித்துவமான அந்த ஆக்கத்தைப் பார்த்து ஸ்ரீரமணரின் ஸ்லோகங்களில் பூரித்துப்போனார்.
நாயனா அன்று மாலையே உபதேச சாரத்திற்கு உரையெழுதி ஸ்ரீரமணரின் காலடியில் சமர்ப்பித்தார்.
சுதான்வா தனது வக்கீல் தொழிலை விட்டு பாண்டிச்சேரியில் குடியேறியிருந்தார். ஸ்ரீ அரவிந்தர் நாயனாவைப் பார்க்க விரும்புவதாக செய்தி அனுப்பினார். 1928ம் வருடம் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் புதுச்சேரிக்கு விஜயம் செய்வதாக கணபதி பதில் எழுதினார்.
**
புதுச்சேரியில் சுதான்வா இல்லத்தில் நாயனா தங்கியிருந்தார். ஆகஸ்ட்டு பதினைந்து ஸ்ரீ அரவிந்த ஜெயந்தி. பல்வேறு இடங்களிலிருந்து அதில் பங்குகொள்வதற்காக அவரது சீடர்களும் பக்தர்களும் புதுச்சேரியில் குவிந்த வண்ணம் இருந்தனர். சில வருடங்களுக்கு முன்னர் நாயனாவுக்கு ஸ்ரீ அரவிந்தர் நடத்தி வந்த ”ஆர்யா” என்கிற சஞ்சிகையைப் படிக்கும்படி நேர்ந்தது. அதைப் படித்ததிலிருந்து அவர்மீது ஒரு தோழமை உணர்வு மேலோங்கியது. அவரைப் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது.
எதிரெதிரே இருவரும் வெறுமனே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். பேச்சுவார்த்தை எதுவுமில்லை. மௌனம். அமைதி ததும்பும் இருவருடைய முகத்திலும் ஞானதீபம் சுடர்விட்டது. எதுவும் பேசாமலேயே எழுந்த நாயனா ஸ்ரீஅன்னையையும் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பிற்கு மூலகாரணம் ஒன்று இருந்தது. சில காலங்களுக்கு முன்னர் ஸ்ரீஅரவிந்தரைத் தரிசித்து ஆசி பெற்ற சுதான்வா நாயனாவின் உமா சகஸ்ரத்தின் கையெழுத்துப் பிரதியை பரிசளித்திருந்தார். அதைப் படித்துப் பார்த்த ஸ்ரீஅரவிந்தர் “சுதான்வா! இதை எழுதியவரை நான் பார்க்கவேண்டுமே!!” என்று தனது ஆவலைத் தெரிவித்திருந்தார். இதுவே இந்த சந்திப்பின் அடிநாதம்.
கணபதி முனி ஸ்ரீ அரவிந்தரையும் ஸ்ரீஅன்னையையும் சந்தித்து மரியாதை செலுத்தினார். சுதான்வாவும் கணபதிமுனியும் ஸ்ரீஅன்னை எதிரில் அமர்ந்திருந்தனர்.
ஸ்ரீஅன்னை புன்னகையுடன் சுதான்வாவை நோக்கினார்.
“சுதான்வா... கணபதியின் வருகையினால் அனைத்து தீய சக்திகளும் ஓடிவிட்டது” இந்த வார்த்தைகளைக் கேட்ட சுதான்வாவுக்கு பேராச்சரியம். ஸ்ரீஅரவிந்தரைச் சுற்றியிருக்கும் ஞானஒளி பற்றி கணபதி முனி கூறியதையைப் போலவே ஸ்ரீஅன்னையும் நாயனாவைச் சுற்றியிருக்கும் ஞானச்சுடர் பற்றிக் குறிப்பிட்டார்.
அடுத்த நாள் ஸ்ரீஅன்னை கணபதி முனியைக் கூட்டு தியானத்திற்கு அழைத்தார். ஸ்ரீஅரவிந்தரை தரிசிக்கும் போது ஸ்ரீஅன்னையிடம் நேரம் செலவிடமுடியாததால் உடனே ஒத்துக்கொண்டார். ஸ்ரீஅன்னையின் பக்தர் ஒருவர் கணபதி முனியை அவரது அறைக்கு அழைத்துச் சென்றார். இரண்டு இருக்கைகள் எதிரெதிராக இருந்தன. ஒன்று ஸ்ரீஅன்னைக்கு எதிரில் இன்னொன்று நாயனாவுக்கு. இருவரும் நாற்பத்தைந்து நிமிடங்கள் தியானத்திலிருந்தனர்.
ஸ்ரீஅன்னை கண்களை மூடி கையிரண்டையும் அகல விரித்து தியானித்தார். ஆனால் கணபதி முனி கண்களைத் திறந்து கொண்டே அசையாது அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். ஸ்ரீஅன்னைக்கு அளவில்லாத ஆச்சரியம்.
“இவரே சத்தியமான யோகி. தியானிக்க ஆரம்பித்த சில கணங்களிலேயே விழி திறந்து அகத்தில் நுழைந்துவிட்டார். இதுவரையில் இதுபோன்ற ஆன்மிக வித்தையில் ஈடுபடும் ஒருவரை நான் பார்த்ததில்லை. நாற்பத்தைந்து நிமிடங்களை இலகுவாக தியானத்தில் மூழ்கிக் கடந்தார்.”
என்ற ஸ்ரீஅன்னையின் பாராட்டுதல்களோடு ஒரு மாதம் புதுச்சேரியில் தங்கியிருந்தார். அவருடன் சுதான்வா, அதாம், கபாலி மற்றும் கோதண்டராமன் ஆகியோரும் அவருடன் இருந்தார்கள். கோதண்டராமனின் வேண்டுதலுக்கு இணங்க ஸ்ரீஅரவிந்தரைப் போற்றி நூற்றியெட்டு சூத்திரங்கள் அடங்கிய “தத்வனுசாஸனம்” எழுதினார்.
திருவண்ணாமலைக்கு நாயனா கிளம்பிய தினத்தன்று ஸ்ரீஅன்னை “ஸ்ரீஅரவிந்தரைச் சந்திப்பதற்கு தங்களுக்கு எதுவும் அனுமதி தேவையில்லை. தங்கள் விருப்பப்படி இங்கே வரலாம்” என்று அன்புக் கட்டளையிட்டார்.
**
சிஷ்யர்களுக்கு சிரமமாக இருந்ததினால் மாமரக் குகையிலிருப்பதை தவிர்த்தார் கணபதி முனி. ரிக் வேதத்திலிருந்து இந்திரனின் சகஸ்ரநாமாக்களைத் தேர்ந்தெடுத்து நூற்றியெட்டு ஸ்லோகங்களில் பொதிந்து தந்தருளினார். அடைமொழிகளில்லாமல் எழுதப்பட்ட இந்த ஸ்லோகங்களில் கணபதி முனியின் சம்ஸ்க்ருத இலக்கண அறிவும் இலக்கிய செழிப்பும் காணப்பட்டது. இது “இந்திர” எறு ஆரம்பித்து “ஸ்வாராட்” என்று பூர்த்தியாயிற்று.
பகவான் ஸ்ரீரமணர் இதை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டார். “அசக்ரய ஸ்வதயா வர்த்தமானா, ஆநீலா ஸுபர்னா, கிஜாஹ்...” போன்ற நாமங்களுக்க்கு அவருடைய சிஷ்யர்கள் அளித்த விளக்கங்களில் மகிழ்ந்தார்.
இவ்வேளையில் அதாமிற்கு ஸ்ரீஅரவிந்த ஆஸ்ரமத்தில் சேர்ந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவல் பிறந்தது. நாயனாவிடம் பரிந்துரைச் சீட்டு கேட்டார். ஸ்ரீஅரவிந்த ஆஸ்ரமத்தில் நிரந்தரமாகச் சேர்வது எளிதல்ல. ஆனால் கணபதியின் பரிந்துரைச் சீட்டிற்கு மதிப்பு அதிகம் இருந்தது. அதாம் ஆஸ்ரமத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
சேலத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர் பி.வி நரசிம்ம சாஸ்திரி திருவண்ணாமலைக்கு ஸ்ரீரமணரின் வாழ்க்கைச் சரித்திரம் எழுதும் நோக்கத்தோடு வந்திறங்கினார். ஸ்ரீரமணரின் வாழ்க்கைச் சம்பவங்களை யாரிடம் கேட்பது? பிரதான சீடர்களில் ஒருவர் கணபதி முனி. அவரிடம்.....
தொடரும்....

கணபதி முனி - பாகம் 45 : மாயமான சன்னியாசி

விசாலாக்ஷி அனுஷ்டிக்கும் "ஸ்ரீ வித்யா"வின் எட்டாம் நாள். நாயனாவும் ஏனைய குழுமியிருந்த பக்தர்களும் கலங்கினார்கள். விசாலாக்ஷி இந்த முறை தனது உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு இத்தோடு நிறுத்துவார் என்று எதிர்பார்த்தார்கள். நாயனா நெருங்கிய போது...
"நான் விரும்பியதை அடைந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். நீங்கள் பரம சந்தோஷமடைவீர்கள்" என்று சிரித்துக்கொண்டே நாயனாவை நமஸ்கரித்தார். அவருடைய உடல் நிலைமையை உத்தேசித்து அவரது பக்தர்கள் வரிசை வரிசையாக வந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றார்கள். அவர் குரு பத்னி. அவருடன் சேர்ந்து தவமியற்றிய தபசகி. இருவருடைய ஆன்மிக எண்ணமும் உருவேறிய ஒன்றே. பக்தர்களிடம் அவர் காட்டும் அன்னையின் பரிவும் வாத்சல்யமும் அலாதி.
அவரது அமைதி ததும்பும் முக தரிசனமே அவரது பக்தர்கள் ஆன்மிக நிலையில் உச்சம் தொட வைத்தது. அவர்கள் விசாலாக்ஷியை அன்னபூரணி அம்மனான வழிபட்டார்கள். அவர் தனது வாழ்வின் மூலம் குடும்ப வாழ்க்கையில் உழன்றாலும் கணவனுக்கும் கடவுளுக்கும் சேர்த்து வழிபாடு செய்ய இயலும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்.
கணபதி முனியும் விசாலாக்ஷியும் புராதன காலத்து ரிஷிகளின் வாழ்வியல் முறையை வாழ்ந்து காட்டினார்கள். குடும்ப பந்தத்திலிருந்து விடுபடாமல், சமூகத்திலிருந்து விலகாமல் கடவுளை அடையும் வழியைக் காட்டினார்கள்.
விசாலாக்ஷிக்கு அப்போது வயது 45. 1926. ஜூலை மாதம் 26ம் தேதி. (ஆஷாட கிருஷ்ண த்வீதிய, தனிஷ்ட நக்ஷத்திரம்). பூதவுடலை விட்டு உயிர் பிரிந்தது. அவரது உயிர் பிரியும் போது ரமணாஸ்ரமத்தில் தீபாராதனை நடந்து கொண்டிருந்தது. ஸ்ரீரமணர் அதை ஒற்றிக்கொள்ள உள்ளங்கை நீட்டியபோது ஆரத்தி அனைந்தது. விளக்கு மறைந்தது.
**
விசாலாக்ஷியின் மறைவுக்குப் பிறகு நாயனா சன்னியாசியாகிவிடுவார் என்று பலர் எதிர்பார்த்தனர். ஸ்ரீ ரமணர் கடைசி வரையில் நைஷ்டிக பிரம்மச்சாரியாக அரையில் வெறும் கௌபீணத்தோடு கடைசி வரையில் இருந்தார். நாயனாவும் பூணூலோடும் காதி ஆடைகளுடனும் அப்படியே வாழ்ந்தார். தெரிந்தவர்களுக்கு அவர் ஞானி. தெரியாதவர்களைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை.
விசாலாக்ஷி மேலுலகம் சென்ற பிறகு கணபதி முனிக்கும் உடம்பு படுத்தியது. மனைவியின் சமையலை மட்டுமே சாப்பிட்டு ஜீவனம் செய்தவர்க்கு அதனால் படுத்துகிறதோ என்று அவரது மகள் வஜ்ரேஸ்வரியும் மருமகள் ராஜேஸ்வரியும் பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டார்கள். ஊஹும். பிரயோஜனமில்லாமல் அவரது உடல் நலம் குன்றத்தொடங்கியது.
ஒரு நாள் நாயனாவின் மருமகன் சோமயாஜுலு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அப்போது வேஷ்டியும் சட்டையுமாக ஒருவர் படியேறி...
" நாயனா இருக்கிறாரா?"
சோமயாஜுலு இவர் யார்? என்று யோசிக்க ஆரம்பித்த போது அவர் மீண்டும் தொடர்ந்தார்.
"இருந்தாரென்றால் கன்னியாக்குமரியிலிருந்து ஒரு சன்னியாசி வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்". முகத்தில் புன்னகை அரும்பியது. சோமயாஜுலுவுக்கும் சிரிப்பு வந்தது. கஷாயமில்லை, கையில் கமண்டலமில்லை சன்னியாசி என்று சொல்கிறாரே என்று சிரித்துக்கொண்டே உள்ளே சென்றார்.
திரும்பி வந்தால் அங்கே அந்த சன்னியாசியைக் காணவில்லை. ஆச்சரியமாக இருந்தது. நீண்ட தெருவின் இருமருங்கும் பார்த்தார். சன்னியாசி கண்ணில் தென்படவில்லை. கணபதி முனியிடம் அதைச் சொல்லலாம் என்று உள்ளே வந்தால் அடுத்த ஆச்சரியம் காத்திருந்தது.
உடல் முடியாமல் படுத்திருந்த கணபதி முனி எழுந்து உட்கார்ந்திருந்தார். சட்டென்று அவரது நோய் பறந்துபோயிருந்தது. நாயனா மீண்டும் சுறுசுறுப்படைந்தார்.
செகந்திராபாத் சென்றார். முழுமூச்சாக தனது எண்ணற்ற சிஷ்யர்களைச் சந்தித்தார். முன்னைவிட மும்முரமாக இயங்கினார். பல்வேறு கூட்டங்களில் பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசினார். வகைவகையான மனிதர்கள் கலந்துகொண்டார்கள். இலக்கியம், சமூக சீர்திருத்தம் ஆன்மிகம் என்று தங்கள் விருப்பத்திற்கேற்ப நடக்கும் சொற்பொழிவுகளில் மூழ்கினார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணதேவராயா ஆந்திர பாஷா நிலையம். ஹைதிராபாத்தின் பிரசித்திபெற்ற நூலகத்தின் வெள்ளி விழா விமரிசையாக நடைபெற்றது. அங்கே காவ்ய கண்ட கணபதி முனி ஸ்ரீரமணரின் அருளுரைகள் என்ற தலைப்பில் ஆற்றிய உரை வெகுசிறப்பாக அமைந்தது. வாழ்வின் பல அடுக்குகளில் உள்ளவர்களும் வெவ்வேறு மொழி பேசுபவர்களும் பகவான் ஸ்ரீ ரமணரைப் பற்றி அறிந்துகொள்ள இக்கூட்டம் உதவியது. இந்தப் பிரபல உரையானது ராஜிதோத்ஸவ சஞ்சிகா என்று 1926ம் வருடம் வெளியிடப்பட்ட இன்னூலக புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
பாக்யா ரெட்டொ என்பவர் முன்னணி ஹரிஜனத் தலைவர். அவரும் பால்கிஷன் ராவ் என்ற சமூக சீர்திருத்த இயக்க தலைவரும் பேராசிரியர் வீரபத்ருடுவுடன் சேர்ந்து பெரிய மாநாடு ஒன்றை நடத்தினார்கள். அதில் கணபதி முனி சிறப்புப் பேச்சாளர். குழுமிய தோழர்களுக்கு இன்ப அதிர்ச்சி. வேதிய முறை வாழ்வையும் சமூக விடுதலையையும் இணைத்துப் பேசி வெளுத்து வாங்கினார் கணபதி முனி. மாநாட்டில் சில பண்டிதர்கள் சில மூடப் பழக்கங்களை பொட்டில் அறைந்தது போல கணபதி முனி சாடியதை விரும்பவில்லை. ஆனால் அறிவுசார் பெரியவர்களும் சமூக சேவகர்களுக்கும் கணபதி முனியின் பேச்சு அமிர்தமாகவும் தெம்பூட்டும் விதமாகவும் அமைந்தது. அவர்களது ப்ரியத்தையும் நன்றியையும் காட்டும் விதமாக "முனி" என்ற பட்டத்தை வழங்கி மகிழந்தார்கள்.
சாதிகளைக் கடந்து எவ்வித பேதமுமில்லாமல் எவர் வேண்டுமானாலும் ஆன்மிக சாதனை செய்யலாம் என்ற அவரது பேச்சில் கவரப்பட்டு பலர் அவருக்கு சிஷ்யர்களாக சேர்ந்தார்கள். ஏழை, தனவந்தர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், அரசாங்க அலுவலர்கள் என்று வசிஷ்ட கணபதி முனியின் வீட்டில் தேனியாய் மொய்த்தார்கள். ஆசி வாங்கவும் தீட்சை பெறவும் முண்டியடித்தார்கள்.
ஓய்வொழிச்சலில்லாமல் ஹைதராபாத்திலும் செகந்திராபாத்திலும் சேவையில் ஈடுபட்டு திருவண்ணாமலை திரும்பினார். நேரே மாமரக் குகையில் சென்று அமர்ந்தார். ஆறு மாதங்கள் தடங்கலின்றி தவமியற்றினார். அப்போது சென்னையிலிருந்து ஒரு அழைப்பு வந்தது.
சென்னையின் வர்ணாஸ்ரம சங்கம் நாடெங்கிலும் வசிக்கும் பண்டிதர்களை அவர்களது மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தது. தேசிய காங்கிரஸின் "தீண்டாமை ஒழிப்பு"க்கு எதிராக தீர்மாணம் எழுப்ப முடிவு செய்தார்கள். அச்சங்கத்தின் செயலாளருக்கு பண்டிட் மதன் மோகன் மாளவியா அந்த சந்தர்ப்பத்தில் சென்னையில் இருப்பதாக செய்தி கிடைத்தது. மாளவியாவிற்கு அழைப்பு விடுத்தார்கள். மாளவியாவும் கணபதி முனியும் அணுக்கமான ஸ்நேகிதர்கள். அவரைக் கூப்பிட்டு இவரைக் கூப்பிடாவிட்டால் பிசகு என்று கணபதி முனிக்கும் அழைப்பு அனுப்பினார்.
அவருக்கு கணபதி முனியின் முன்னேற்றக் கருத்துகளும் அதற்கான அவரது மேடை முழக்கங்களும் நன்கு தெரியும். இருந்தாலும் என்ன ஆகிறது பார்ப்போம் என்று கூப்பிட்டார்... அப்போது...
தொடரும்..

Friday, September 16, 2016

கணபதி முனி - பாகம் 44 : பேயன் பழம்

நாயனாவின் மருமகள் வஜ்ரேஸ்வரி கலுவராயிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்துசேர்ந்த போது கருவுற்றிருந்தாள். மகப்பேறு அண்ணாமலையில்தான் என்று திட்டம். அந்தக் காலக்கட்டத்தில் கணபதி முனி வழக்கம் போல் தவத்தில் ஆழ்ந்திருந்தார். தவயோகத்திலிருந்து விழிக்கும் சில சமயங்களில் எழுதுவதில் முனைப்பாக இருந்தார். சிஷ்யர் குழு ஒன்று எப்போதும் அவரைச் சுற்றியே வந்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கதை சொல்லிவந்தார். கதை சொல்லும் போது அப்படியே தங்குதடையில்லாமல் புத்தகத்தைப் படிப்பது போன்றோ அல்லது காட்சியை நேரே பார்ப்பது போலவோ ரசனையுடன் வர்ணிப்பார்.
"பூர்ணா" என் கிற அவரது ஒரு நாவலைத் தவிர மற்றவையெல்லாம் ஆவணப்படுத்த தவறிவிட்டார்கள். சாயங்கால வேளைகளில் தன்னைச் சந்திக்க வந்த பக்தர்களிடம் பகிர்ந்து கொண்ட கதை "பூர்ணா". வீரதீரத்துடன் அர்ப்பணிப்புணர்வுடன் பொதுஜனத்துக்காகப் போராடுவதே இக்கதையின் அடிநாதம். இக்கதையின் மூலமாக சமூக-அரசியல் அமைப்பை அலசிப் புதினம் படைத்திருந்தார் கணபதி முனி.
ஒரு நாள் இக்கதையை தனது மகன் மஹாதேவனிடமும் மற்றும் சில பக்தர்களிடமும் அருணாசலேஸ்வரர் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அமர்ந்து விவரித்துக்கொண்டிருந்தார். காற்று தலைகோதிக்கொண்டிருந்தது. கேட்டுக்கொண்டிருந்தவர்கள் கணபதி முனியின் கதைசொல்லலில் லயித்திருந்தார்கள். அப்போது பெயர்தெரியாத யாரோ ஒருவர் அங்கே வந்தார். அவர் கையிலிருந்த தாம்பாளத்தில்வாழைப்பழங்கள் சீப்பு சீப்பாக இருந்தது.
இருகைகளால் அந்தப் பழங்களை கணபதி முனியின் காலடியில் வைத்தார். அது "பேயன்" பழம். அவரின் நடவடிக்கைகள் வித்யாசமாக இருந்தது. விழி உருட்டிப் பார்த்தார். சிரித்தார். பின்னர் விடுவிடுவென்று கிழக்கு கோபுர வாசல் நோக்கிச் சென்றார்.
"மஹாதேவா.. நீ சென்று அவர் எங்கே செல்கிறார் என்று பார்த்து வா..." என்று தனது மகனின் தோளைத் தட்டினார். ஓட்டமும் நடையுமாக மஹாதேவன் அந்த பக்தரைப் பின் தொடர்ந்து ஓடினார். சற்று நேரம் கழித்து மஹாதேவன் திரும்பினார்.
"கண்டுபிடித்தாயா? யாரென்று கேட்டாயா?" என்று கணபதி முனி வினவினார். உதடு சுழித்து "ஊஹும். அவரைப் பிடிக்க முடியவில்லை. நான் நெருங்கிவிட்டேன் என்று நினைக்கும் போது பேய்க் கோபுரம் வழியாக வெளியே சென்று மறைந்துவிட்டார்" என்று ஆச்சரியம் பொங்கும் விழிகளோடு சொன்னார்.
"இந்தப் பழத்திற்கான மகத்துவம் தெரியுமா?" என்று அங்கு கதை கேட்க அமர்ந்திருந்தவர்களிடம் கேட்டார். ஒருவருக்கும் புரியவில்லை. கணபதி முனி என்ன சொல்லப்போகிறார் என்று ஆர்வத்துடன் பார்த்தார்கள்.
"இந்த பேயன் வகை வாழைப்பழங்கள் டயேரியா என்னும் வயிற்றுப் போக்குக்கு நல்லது. திருவண்ணாமலைச் சுற்றுவட்டாரத்தில் கொஞ்ச நாட்களாக இது கிடைக்கவில்லை."
மஹாதேவனுக்கு இப்போது புரிந்தது. அவரது மனைவி வஜ்ரேஸ்வரி டயேரியாவினால் அவதிப்பட்டு வந்தார். பின்னர் கதை முடிந்து கலையும் போது மஹாதேவன் அதைச் சொல்ல அனைவரும் அசந்துபோனார்கள்.
**
மார்ச் 1926லிருந்து கணபதி முனியின் மனைவி விசாலாக்ஷிக்கு தேக அசௌகரியம் ஏற்பட்டது. என்னவென்று பார்த்ததில் ஜபதபங்கள் செய்யும் போது நெற்றிக்கு இட்டுக்கொள்ளும் விபூதியைக் கொஞ்சம் கொஞ்சம் வாயில் போட்டுக்கொண்டதால் வந்திருக்கலாம் என்று நினைத்தார்கள். நலம் குன்றிய போதும் அவரது ஸ்ரீவித்யா உபாசனை ஜபத்திற்கு குறைவேதுமில்லாமல் பார்த்துக்கொண்டதோடு குண்டலினி பாய்வதையும் அனுபவிக்கமுடிந்தது.
கோகரணத்தில் தீக்ஷித தத்தாத்ரேயா என்பவர் யாகம் ஒன்று நடத்துகிறார் என்று செய்தியனுப்பி கணபதி முனியை வரச்சொன்னார். விசாலாக்ஷியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அந்த அழைப்பை மறுத்தார். தேவவிரதன் கோகர்ணத்தில் ஒரு ஆஸ்ரமம் அமைத்திருந்தார். கோரக்ஷணத்திற்காகவும் பிரம்மச்சாரிகளுக்கு வேதம் கற்றுக்கொடுப்பதிலும் தீவிரம் காட்ட உத்தேசித்தார்..
1925லேயே நாயனா இதற்கு ஒப்புதல் அளித்திருந்தார். இந்த ஆஸ்ரமத்தை கல்பகால ரிஷிகளின் ஆஸ்ரமங்களைப் போன்று அமைக்க எண்ணினார். கணபதி முனியை இந்த ஆஸ்ரமத்திற்கு அழைத்தார். அவரது வழிகாட்டுதலும் அறிவுரைகளும் இதை இன்னும் மேம்படுத்தும் என்று நம்பினார்.
”இந்த ஒரு ஆஸ்ரமம் மட்டும் போதாது. இது போல இன்னும் நிறைய ஆஸ்ரமங்கள் இதைப் பின்பற்றித் தொடங்கப்பட வேண்டும்” என்று தன்னுடைய ஆவலைத் தெரிவித்தார் கணபதி முனி. ஆகையால் தேவவிரதனையே அந்த ஆஸ்ரமத்திற்கு தலைமையேற்று நடத்தச் சொன்னார். "இது ஒரு முன்மாதிரியாக விளங்கி நாட்டில் பலர் இதுபோன்ற புண்ணியக் காரியத்தில் ஈடுபடவேண்டும்" என்று ஆசிகூறினார்.
பரதாழ்வார் ஸ்ரீராமனின் பாதுகைகளை வைத்து ஆட்சி புரிந்தது போல தேவவிரதன் கணபதி முனியின் பாதுகைகளைக் கேட்டு வாங்கி வந்து அவைகளை ஆஸ்ரமத்தலைமையாக ஏற்று நடத்தினார். மேலும் நந்தினி முத்ரனாலயா என்ற அச்சகத்தை வாங்கி அதில் தனது குருவின் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டார். தேவவிரதனின் சகோதரர் சீதாராம் பண்டாரி அந்த அச்சகத்தின் மேற்பார்வை பொறுப்பு ஏற்றார்.
விசாலாக்ஷியின் உடல் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைந்துகொண்டிருந்தது. இருந்தாலும் ரமணாஷ்ரமம் சென்று வரும் வைராக்கியம் குறையவில்லை. ஸ்ரீவித்யாவைத் தோற்றுவித்தவரான தெக்ஷிணாமூர்த்தியே மனித உருக்கொண்டு பகவான் ரமணராக அவதரித்திருக்கிறார் என்று பரவசமாகக் கூறுவார். தக்ஷிணாமூர்த்தி என்பது "தக்ஷிண அம்ருதி" என்று விளக்கமெடுத்துக்கொண்டார்.
1926ம் வருடம் ஏப்ரல் மாதம் வஜ்ரேஸ்வரிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அப்பு அந்தக் குழந்தையின் பெயர்சூட்டு விழாவிற்கு வராதது வினோதமாக இருந்தது. நாயனாவும் விசாலாக்ஷியும் சம்சார பந்தத்திலிருந்து வெளியேறி தபஸ் செய்துகொண்டிருந்த வேளையில் அப்புதான் வஜ்ரேஸ்வரியை எடுத்து வளர்த்தார். அவரது மனைவி காமாக்ஷியும் தம்பி கல்யாணராமனும் ரமணரையும் நாயனாவையும் தெய்வமாக மதித்தார்கள். வணங்கினார்கள். அப்பு வராது பெருங்குறையாக இருந்தது. தனக்கு இன்னவென்று தெரியாத வலி ஏற்படுவதாகவும் அதனால் ஏற்படும் உபாதைகளால் கலந்துகொள்ள முடியவில்லை என்று நாயனாவுக்குச் செய்தி அனுப்பினார்.
விசாலாக்ஷிக்கு இது ஆன்மிக யோக சாதகத்தினால் வரும் வலி என்று புரிந்தது. நாயனா உடனே செகந்திராபாத் கிளம்பிச் சென்று வலிக்கான தீர்வைப் பரிந்துரைத்தார். உடனே அம்பாளை அழைத்து அப்புவின் இந்தச் சங்கடத்தைப் போக்க வேண்டிக்கொண்டார்.
அஞான த்வான்தான்தான் அஸஹ்ய ரோகாக்னி
கீல ஸந்தப்தான்
பாஸுரா ஸீதலத்ருஷ்டிப்ரபயா
பரதேவதா வாதாதஸ்மான்
பொருள்: கேள்வியுறாத நோயினால் துன்பத்தில் தவித்து அறியாமை இருளில் குருடாகி அலையும் எங்களை அம்பாள் அவளது கருணை பொழியும் குளிர்க் கண்களால் பார்த்துக் காக்கட்டும்.
அடுத்த நாளே அப்புவிற்குப் பூரணமாகக் குணமானது. நாயனா திருவண்ணாமலைத் திரும்பினார்.
ஜுன் மாதத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மாணவர் சங்கத்துக்காகப் பேச அழைத்தது. முதலில் அவர் தயங்கினாலும் பின்னர் விசாலாக்ஷி சிதம்பரம் போகவேண்டும் என்று வற்புறுத்தியதால் ஒத்துக்கொண்டார். இருபது வருடங்கள் தென்னகத்தில் வசித்தாலும் சிதம்பரம் போன்ற புனிதத் தலத்துக்கு விஜயம் செய்யாதது விசாலாக்ஷிக்கு குறையாக இருந்தது.
விசாலாக்ஷியின் தேக அசௌகரியங்களுக்ககு மத்தியிலும் சிதம்பரம் சென்று ஜூலை பதினெட்டு 1926ல் திரும்பினார்கள். திரும்பியவுடனேயே விசாலாக்ஷி மீண்டும் "ஸ்ரீ வித்யா"வை வெறும் நீராகாரமாகக் குடித்துவிட்டு ஒன்பது நாட்கள் சாதகம் செய்தார்.
உடல் நலம் குன்றியும் ஆகாரமில்லாமல் விசாலாக்ஷி செய்யும் தவத்தால் நாயனா வருத்தமுற்றார். விசாலாக்ஷி தெரிந்து குண்டத்தில் இறங்குவது அவருக்கும் புரிந்தது...
தொடரும்..

Saturday, August 20, 2016

கணபதி முனி - பாகம் 43: அக்னியில் தோன்றிய முனி

பெல்காமில் நடைபெற்ற காங்கிரஸ் அமர்வு முடிந்தவுடன் தேவவிரதனைச் சந்திக்க நாயனா நேரே கோகர்ணம் சென்றார். மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் தேவவிரதனுக்கு திருமணம் நடைபெற்றது. அவரது மனைவி ஷ்ரத்தா தேவி கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு மூத்தோர்களின் உதவி தேவைப்பட்டது.
“விசாலாக்ஷி உங்களுக்கு உதவியாக இருப்பாள். நீங்கள் திருவண்ணாமலைக்குப் புறப்படுங்கள்” என்று நாயனா அவர்களை கிளப்பினார். அப்போது தேவவிரதனின் சிஷ்யரான பெரும் செல்வந்தர் மகன்லால் பம்பாய்க்கு அழைப்புவிடுத்தார். வசிஷ்ட கணபதி முனியின் கோகர்ண விஜயம் தெரிந்து ஓடோடி வந்திருந்து பம்பாய்க்கு பிடிவாதமாக அழைத்தார்.
கணபதி முனி, தேவவிரதன் மற்றும் அவரது மனைவி ஷ்ரத்தா தேவி மூவரும் மகன்லாலின் விருந்தினர்களாக ஒரு மாதம் பம்பாயில் தங்கியிருந்தனர். ஒரு நாள் மகன்லாலில் மனைவி ”ஷ்ரத்தா பிள்ளை பெற்றபின் நீங்கள் அனைவரும் கிளம்பலாம்.. அதுவரையில் இங்கே தங்கியிருக்கலாமே” என்று கெஞ்சினார்.
“அம்மா.. தங்கள் வாத்சல்யமான பாசத்திற்கு தலை வணங்குகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இருந்தாலும் இந்தப் பேறு காலத்தில் எனக்கு திருவண்ணாமலை சென்று பகவானையும் விசாலாக்ஷி அம்மையாரையும் பார்க்க வேண்டும் என்ற பேராவல் எழுந்துள்ளது. மன்னிக்கவும்.. எங்களுக்கு சந்தோஷமாக விடையளியுங்கள்...” என்று கைக் கூப்பினார்.
ஷ்ரத்தாதேவி இன்றோ நாளையோ பிரசவம் என்றிருந்த நிலையிலும் நிறைமாத கர்ப்பஸ்த்ரீயாக திருவண்ணாமலைக்கு மூவரும் பயணப்பட்டார்கள். ஷ்ரத்தாதேவியின் பகவான் ரமணர் தரிசன வைரக்கியமே இதற்கு காரணம்.
திருவண்ணாமலை வந்தடைந்தார்கள். விசாலாக்ஷியைக் கண்ட மறுகணம் ஷ்ரத்தாதேவிக்கு தனது தாயைக் கண்ட மகிழ்ச்சியும் துள்ளலும் ஏற்பட்டது. ஆசிரமத்திற்குச் சென்று ஸ்ரீரமண தரிசனம் செய்தார்கள். ரமணரின் தெய்வீகத் தோற்றம் ஆண்டவனே மனித உருக்கொண்டு இப்பூவுலகில் நின்றது போன்று பரவசப்பட்டு ஷ்ரத்தாதேவியின் கண்களிலிலிருந்து நீர் தாரைதாரையாய்க் கொட்டியது.
நெடுந்தூரப்பயணத்தால் ஒரு ஆண் குழந்தை இறந்து பிறந்தது. அனைவரும் சொல்லொணாத்துயரம் அடைந்தார்கள். தேவவிரதனும் ஷ்ரத்தா தேவியும் திருவண்ணாமலையில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து பின்னர் கோகரணம் திரும்பினார்கள்.
கணபதி முனி மாமரக் குகையை விட்ட நகரவேயில்லை. முப்போதும் தவத்தில் இருந்தார். தவம் கலைந்த சில நேரங்களில் சூத்ர க்ரந்தங்கள் எழுதினார். வேத உபநிடத இரகஸியங்களை “விஸ்வ மீமாம்ஸா” என்ற பெயரில் அனைவரும் இரசிக்கும்படி எழுதினார்.
1925ம் வருடம் கொஞ்ச காலம் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டார். இருந்தலும் விடாமல் தவமியற்றினார். விசாலாக்ஷியும் குடும்ப பாரத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஸ்ரீவித்யா உபாசகியாக சாதகம் செய்துகொண்டிருந்தார்.
இச்சமயத்தில் ஒரு அசம்பாவிதம் நடந்தது. போலியாக சீர்த்திருத்த கொள்கைகளை ஆரவாரமாய்க் கூக்குரலிடும் உண்மையற்றவர்களின் முகமூடியைக் கிழித்தெரியும் நிகழ்ச்சி.
தென் தமிழகத்தில் சேரன்மாதேவி என்கிற கிராமம். இங்கு வி.வி.எஸ் ஐயர் என்பவர் ஒரு கலாசாலை தொடங்கினார். அதன் பெயர் பாரத்வாஜ குருகுலம். விசேஷம் என்னவென்றால் உறைவிடமும் குருகுலத்தில் இணைந்திருந்தது. தேசப்பற்றோடு சகோதரத்துவத்தையும் அவர்களிடத்தில் விதைப்பதே இதன் பிரதான குறிக்கோள். ஒரு பிராமண சமையல்காரரை குருகுல சாப்பாட்டுக்காக வேலைக்கு அமர்த்தியிருந்தார். அப்பிராமண காங்கிரஸ்காரர்கள் சிலர், ஆஸ்ரமத்திற்கு கொடையளிப்பவர்கள், அப்பிராமண சமையல்காரரை பணிக்கமர்த்தும்படி வி.வி.எஸ் ஐயருக்கு நெருக்கடி தந்தார்கள். ஐயர் கணபதி முனியிடம் ஆலோசனைக் கேட்டு அதன்படி நடக்கலாம் என்றார். அவர்களும் அதற்கு சம்மதித்தார்கள்.
சாதாரணமாக இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது என்று கணபதி முனிக்குப் புலப்பட்டது.
“சமையற்காரர் பணிக்கு நான் ஒரு ஹரிஜனைப் பரிந்துரைக்கிறேன்” என்று கணபதி முனி தீர்மானமாக சொன்னார். ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக அனைவரும் செய்வதறியாது திகைத்தார்கள். இச்சூழ்நிலையில் ஐயர் திடீரென்று உயிர்துறந்தார். இந்தச் சண்டையும் ஆஸ்ரமும் ஒன்றாக முடிவுக்கு வந்தது. கணபதி முனிக்கு வருத்தமாக இருந்தது. அப்போது கீழ்கண்ட ஸ்லோகம் வடித்தார்.
ராத்ரிர்கமிஷ்யதி பவிஷ்யதி சுப்ரபாதம்
பாஸ்வான் உதேஷ்யதி ஹஷிஷ்யதி பங்கஜாதம்
இத்தம் விசிந்தயதி கொசகதே த்விறேபே
ஹா ஹந்த ஹந்த நளிநீம் கஜ உஜ்ஜஹார

பொருள்: இரவு கவிந்த போது தாமரை மலரானது ஒரு வண்டினை அதன் இதழ்களுக்குள்ளேயே வைத்து மூடியது. உள்ளுக்குள் அகப்பட்ட வண்டானது “இரவு கடந்து பகலில் சூரியன் உதிக்கும்போது இத்தாமரையானது மலரும். அப்போது நான் தப்பித்து பறந்துவிடுவேன்” என்று நினைத்துக்கொண்டது. அந்த சமயத்தில் ஒரு யானை அந்த மலரைப் பறித்து தனது காலடியில் போட்டு நசுக்கும் போது உள்ளிருந்த வண்டையும் கொன்றுவிட்டது.
1925 நவம்பரில் கணபதி முனி மச்சிலிப்பட்டின சனாதன தர்ம சபா அழைப்பின் பேரில் சென்றார். அவரது சிஷ்யரான செருவு ராமகிருஷ்ணய்யாவின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
செவுரு கிருஷ்ணய்யாவின் தந்தை சைனுலு. பெரிய பண்டிதராக இருந்தாலும் அவர் ஒரு பழமைவாதி. அப்போதைய மத சடங்குகளைச் சாடி சமூக விடுதலை பற்றிய கணபதி முனியின் கொள்கைகளை அவர் வெறுத்தார். அப்படிப்பட்டவரை தனது வீட்டில் தங்கவைப்பது பெரும்பாவம் என்று கருதினார்.
”அப்பா... கணபதி முனி அவர்களை நம் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். தாங்கள் தயை கூர்ந்து அனுமதி தர வேண்டும்.”
”ஊஹும். புரட்சி என்ற பெயரில் பல புதிய மாற்றங்களை புகுத்த எண்ணும் அவன் எனது கிரஹத்தில் தங்குவது கூடாது. இதை நான் ஒருக்காலும் அனுமதிக்கமாட்டேன்” என்று ஒற்றைக்காலில் நின்றார் சைனுலு.
கிருஷ்ணைய்யா கெஞ்சிக் கூத்தாடி மன்றாடிப் பார்த்தார். எதற்கும் பயனில்லை. கடைசியாக
”இன்றொருநாள் அவரது சிஷ்யர்களுக்கு மதிய உணவளிக்கலாம் என்று நினைக்கிறேன். தாங்கள் இதற்காவது ஒத்துக்கொள்ள வேண்டும்” என்று கைகூப்பினார்.
”ம்.. சரி..” என்று அரைமனதாக ஒத்துக்கொண்டு கணபதி முனி வருவதற்குள் வீட்டை விட்டு வெளியேறினார். 
கணபதி முனியும் அவரது சிஷ்யர்களும் உணவருந்திவிட்டு சென்றார்கள். அவர்கள் சென்று வெகுநேரம் ஆன பின்பு வீடு திரும்பினார் சைனுலு. வீட்டைப் புனிதப்படுத்துவதற்காக தீ மூட்டி ஹோமம் தொடங்கினார். அப்போது எழுந்த ஹோமத்தீயில் கணபதிமுனியின் உருவம் தெரிந்தது. அவருக்கு கைகால் நடுங்கியது. தான் காண்பது மெய்யா? அல்லது மாயத்தோற்றமா? என்று புரியாமல் தவித்தார். இல்லை. அங்கு தெரிவது கணபதி முனிதான் என்று தெளிந்தார்.

“ஆஹாஹா.... ஒரு தெய்வப் பிறவியை. மஹானை தவறாக எண்ணிவிட்டோமே” என்றெண்ணி அவரைப் பார்க்க ஓடினார்.
”ஸ்வாமி என்னை மன்னித்தருள்வீர். தங்களைத் தவறாக நினைத்த பாவி நான்” என்று அரற்றி நெடுஞ்சான்கிடையாக அவரது பாதங்களில் நமஸ்கரித்து சிஷ்யராகவும் பெரும் பக்தராகவும் மாறினார்.
**
மச்சிலிப்பட்டிணத்திலிருந்து நாயனா விஜயவாடா சென்றார். கோவிந்தராஜுலு வெங்கட சுப்பா ராவ் என்ற வழக்கறிஞர் அவரது சிஷ்யர். அவரது வீட்டில் தங்கினார். இருவரும் மங்கலகிரி என்ற க்ஷேத்திரத்திற்குச் என்றார்கள். அந்த இடம் சான்னித்தியம் மிக்கதாக கணபதிமுனி உணர்ந்தார்கள். வேதக்கடவுளான இந்திரனின் புனித இடம் அது.

அங்கிருந்த நாட்களில் அவரது பேச்சைக் கேட்ட சில பண்டிதர்கள் எகத்தாளமாகப் பேசினார்கள். அக்குழுவின் தலைவராக இருந்த பகாயஜி கணபதி முனியை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினார். அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் கட்டுரையை கணபதி முனி எழுத எண்ணிக்கொண்டிருக்கும் போதே தனது தவறை உணர்ந்த பகாயஜி அவரிடம் மன்னிப்புக் கோரினார்.
1925ம் வருடக் கடைசியில் நாயனா திருவண்ணாமலை வந்தடைந்தார். ஸ்ரீ ரமணாஸ்ரமத்தின் அமைதிப்பூங்காவான நிலையை சில சம்பவங்கள் மாசுப்படுத்துவதை அறிந்தார். பக்தர்கள் கொடுக்கும் தட்சிணைகளை பையில் போட்டுக்கொள்ள, பக்த கேடி ஒருவர் மேனேஜராக அமர எத்தனித்தார். அந்த சந்தர்ப்பத்தில் ஸ்வாமி நிரஞ்சானந்தாவை ஆஸ்ரமத்தின் நிரந்தர மேனேஜராக அமர்த்தி இந்த சிறு குட்டையைக் குழப்பும் நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தொடரும்...

கணபதி முனி - பாகம் 42: காங்கிரஸ் அமர்வுகள்

1923-ம் வருஷம் கடைசி முறையாக உமா சகஸ்ரத்தை திருத்தும் பணியில் ஈடுபட்டார்.
தனது சொந்த மண்ணான கலுவராயியில் அவரது மகன் மஹாதேவா ஜாகையிருப்பார் என்று கணபதி முனி எண்ணினார். ஆனால் விசாலாக்ஷிக்கு தேக அசௌகரியம் இருந்ததால் அவருக்குத் துணையாக மகனும் மருகளும் அருகிலிருக்க அவசியமானது. திருவண்ணாமலையில் வீடு பிடித்தார்கள். சிஷ்யர்களின் அடிக்கடி வந்து போனார்கள். வரும்போதெல்லாம் விசாலாக்ஷிக்கும் உதவி செய்தார்கள். ஆனால் கணபதி முனி திருவண்ணாமலை மாமரக் குகையிலேயே வசித்து வந்தார்.
1923ம் வருஷம் டிசம்பர் திங்கள் காகினாடா பிராந்திய இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்திற்கு அதன் வரவேற்புக் கமிட்டி செயலாளர் சாம்பமூர்த்தி கணபதி முனிக்கு பேச அழைப்பு விடுத்தார். 1916ம் வருஷம் ஒருதரம் இதுபோன்ற காங்கிரஸ் மாநாட்டில் கணபதி முனி பேசினார். அப்போது சில முக்கிய பிரச்சனைகளுக்கு அவரது ஆலோசனையைக் கேட்டார்கள். இம்முறை பெண்களின் சுதந்திரமும் அவர்களது உரிமைகளைப் பற்றியும் பேச அழைத்திருந்தார்கள்.
மாநாட்டில் பேசிய ஏராளமானோர் பெண்களுக்கு சம உரிமை என்பது பற்றிப் பேசினர். ஆனால் கணபதி வேதங்களில் குறிப்பிட்டபடி ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் ஹோமம், யக்ஞம் மற்றும் சிரார்த்தம் போன்ற மதச் சடங்குகளில் சம உரிமை வேண்டும் என்று கோரினார். மேலும் வேத வேதாந்தங்களை அவர்களும் பாடம் செய்ய அனுமதி அளிக்கவேண்டும். நம்முடைய தேசத்தின் கருப்பு நாட்களில் பெண்களை இதுபோன்ற சடங்குகளிலிருந்து ஒதுக்கிவைத்தது வருந்தவேண்டிய விஷயமாகும்.
ஆன்மிக விஷயங்களில் அனைத்து உரிமைகளும் மறுக்கப்படாமல் பெண்களுக்கு வழங்கினால் எஞ்சியிருக்கும் அனைத்தும் அவர்களுக்கு சித்திக்கும். வேதவழியல்லாது பின்பற்றப்படும் அனைத்து மூடத்தனங்களும் உடனடியாக நிறுத்தப்பட்டு, அறிவொளிச்சுடர் வீசும் ஆனந்தமயமான வாழ்க்கைக்கு ரிஷிகள் வகுத்த பாதையில் நாம் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கணபதி முனியின் இந்தப் பேச்சு எதிர்மறையாக எண்ணம் கொண்ட பலரை இத்திசைக்கு திருப்பியது. இதில் ஈர்க்கப்பட்ட ஆந்திரா காங்கிரஸ் பிரமுகர்கள் கணபதி முனியை பிரதான பேச்சாளாரக, ஹரிஜனங்களின் பிரச்சனையைப் பற்றி அலமுருவில் பேசுவார் என்று அறிவித்தது. ஆந்திராவின் பெருவாரியான பண்டிட்டுகள் இதில் கலந்துகொன்டார்கள். இவர்களில் பலர் இதற்கு முன்னர் கணபதி முனியைப் பார்த்தது கூட கிடையாது.
அவரது பெருமையை அறியாது அவரது பொருள் நிரம்பிய பல அறிவுரைகளை ஏற்க மறுத்தனர். ஆனால். முதன் முறையாக ஒரு மகாமுனியையும் அவரது முதன் பார்வையில் தெறித்த இறைமையும் அவர்களை இழுத்தது. அவரது தோற்றம் கடவுள் மனிதனாக அவதாரமெடுத்து வந்தது போலிருந்தது. சமூகத்தில் நிலவிவரும் சம்பிரதாயங்களையும் அவதானிக்கும் அன்றாட சடங்குகளையும் தர்மத்துடன் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
காலத்துடன் இசைந்து செல்ல வேண்டிய அவசியத்தை உணரச்சொன்னார். தீண்டாமை தர்மமேயில்லை என்று முழங்கினார். மேலும், குடும்பமோ அல்லது தனியொருவரின் விருப்பு வெறுப்புகளை சமூக நீதியாக கொண்டு வரக்கூடாது என்று கண்டித்தார். முஸ்லீம்கள் மற்றும் கிருஸ்துவர்களிடம் புழ்ங்கும் போது இல்லாத தீண்டாமை இந்துக்களாகிய ஹரிஜனங்களிடம் பழகும் போது மட்டும் ஏன் அனாவசியமாகத் தலைதூக்குகிறது? என்று கேள்வி எழுப்பினார். உடனே இவ்வழக்கத்தையெல்லாம் விட்டொழிக்காவிடிலும் கொஞ்சம் கொஞ்சமாக தவிர்ப்பது சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்று அறிவுறுத்தினார்.
பண்டிட்டுகளில் சில விடாக்கொண்டர்கள் இருந்தார்கள். அவர்களைத் தவிர்த்து எஞ்சியவர்கள் சாஸ்வதமான தர்மத்தை கடைபிடிக்க கணபதிமுனியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டனர். காங்கிரஸ்காரர்கள் கணபதிமுனி அரசியல் தலைமையேற்று வழிநடத்தவேண்டும் என்று விரும்பினார்கள்.
திருவண்ணாமலை திரும்பும் வழி நெடுக இதுபோன்று கூட்டங்களில் பேசினார். தேசிய காங்கிரஸ் இயக்கத்திற்கு இந்த உத்வேகப் பேச்சும் அதன் மொழியும் மிகவும் அவசியமாக இருந்தது. இதில் கலக்கமுற்ற அதிருப்தி பண்டிட்டுகள் சிலர் ராமக்ருஷ்ண சைனலு என்பார் தலைமையில் கணபதி முனியை வசைமாரிப் பொழிய அணி திரண்டனர்.
சைனலு கணபதிமுனியைக் கண்டனம் செய்து நிறைய கட்டுரைகள் எழுதினார். ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக கணபதி முனி தகுந்த பதிலெழுதியவுடன் அவர் அமைதியானார். கணபதிமுனியின் விவாதங்களும் அரிய தகவல்களும் காங்கிரஸ்காரர்களின் பேருதவியாக இருந்தது. அவரை ஆந்திரா காங்கிரஸில் உள்ளே இழுக்க எவ்வளவோ போராடியும் காங்கிரஸ்காரர்களால் முடியவில்லை. இவ்வகைப் பேச்சுக்களின் பயனற்றதன்மை அவருக்குத் தெரிந்திருந்தது. மேலும் தனது தவத்திற்கு இடையூறாக வரும் எதையும் அவர் விரும்பவில்லை.
ஆந்திரா காங்கிரஸ்காரர்களால் சாதிக்க முடியாமல் போனது தமிழக காங்கிரஸ்காரர்களால் முடிந்தது. ”வெறும் பெயரை மட்டும் போட்டுக்கொள்கிறோம் மற்றபடி காங்கிரஸின் இதர செயல்பாடுகளில் நீங்கள் முழுவீச்சுடன் செயல்படவேண்டாம்” என்று அவரை சேர்த்துக்கொண்டார்கள். 1924ம் வருடம் காங்கிரஸின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டு; அதே வருடம் திருவண்ணாமலையில் நடைபெறும் தமிழக மண்டல காங்கிரஸ் மாநாட்டின் வரவேற்புக் குழு சேர்மேனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரது வெளிப்படையான தைரியமான பேச்சு உலகமக்களைக் கவர்ந்தது. காந்திஜி தலைமையில் பெல்காமில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டார். இங்கே எழுதமுடியாத தீண்டாமை பற்றிய அவரது விளக்கத்தை காந்திஜி, டாக்டர் அன்னி பெஸண்ட் அம்மையார் மற்றும் மதன் மோகன் மாளவியா போன்றோரால் மனமாரப் பாராட்டுப்பெற்றது. சமஸ்கிருதத்தில் அவரது எளிமையான பேச்சும் தேவையான கருத்துகளைத் தக்க சமயத்தில் வெளியிடும் பாங்கையும் அனைவரும் சிலாகித்தார்கள்.
அடுத்த நாள் காந்திஜி ஹிந்தியை தேசிய மொழியாக்க வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்ற முடிவுசெய்தார். கணபதிமுனி சம்ஸ்க்ருதத்தை தேசிய மொழியாக்கவேண்டும் என்று இடைமறித்தார். இது ஒரு அரசியல் நகர்வு என்று காந்திஜி அதை மறுத்துவிட்டார். அரசியல் என்று நினைவுபடுத்தியத்திற்கு நன்றி தெரிவித்து தனது உறுப்பினர் பதவியை மீண்டும் புதுப்பிக்க மறுத்துவிட்டார். இருந்தாலும் 1929ம் ஆண்டு வரை சமூக சீர்திருத்தமான ஹரிஜன மேம்பாட்டிற்காகப் பாடுபட்டார். “ராஷ்ட்ர நிபந்தனம்” என்கிற அரசியல்வாதிகளுக்கான அறிவுரைக் கையேடு ஒன்றையும் எழுதினார்.
தொடரும்....

Friday, August 19, 2016

கணபதி முனி - பாகம் 41: ரமணாஸ்ரம ஸ்தாபிதம்

அழகம்மாள். கணவர் சுந்தரம் ஐயரை இளமையிலே பறிகொடுத்தார். கடும் துயரங்களுக்கு ஆட்படுத்தி கடவுள் அந்தத் தங்கத்தைப் புடம் போட்டுக்கொண்டிருந்தான். அவரது இரண்டாவது மகன் வெங்கட்ராமன் திடீரென்று ஒரு நாள் சீட்டு எழுதிவைத்துவிட்டு காணாமல் போனார். பல வருடங்கள் ஊர் ஊராகத் தேடிய பின்னர் திருவண்ணாமலையில் ஒரு குகை வாயிலில் வெங்கட்ராமனைக் கண்டுபிடித்தார்கள். எப்படிதெரியுமா? திரும்பவும் வீட்டு வாசற்படி மிதிக்கமுடியாத, சன்னியாசியாக ஒதுங்கிப்போன ஒரு சாமியார்க் கோலத்தில் பார்த்தார்கள்.
1900ல் அழகம்மாளின் மூத்த மகன் நாகசாமி குடும்பத்தை அனாதரவாகத் தவிக்கவிட்டு காலமானர். சுந்தரம் ஐயருக்குப் பிறகு அவர்தான் ஆணி வேராக இருந்து சம்பாதித்து குடும்ப பரிபாலனம் செய்துவந்தார். நாகசாமி மேலுலகம் சென்ற போது அவரது மூன்றாவது மகன் நாகசுந்தரமும் மகள் அலமேலுவும் ஏதுமறியாத பால்ய வயதினர். இரு குழந்தைகளையும் தன்னையும் காப்பாற்றிக்கொள்ளுமளவிற்கு அழகம்மாளிடம் பொருள் சக்தி இல்லை. போதாதகுறைக்கு கடன் சுமை வேறு அவரது தோளில் பாரம் ஏற்றியிருந்தது. சுந்தரம் ஐயரின் தம்பி நெல்லையப்ப ஐயர். அழகம்மாளுடன் அனைவரும் அவரிடம் புகலிடம் தேடிப்போனார்கள். ஊரில் வள்ளலாக வாழ்ந்த சுந்தரம் ஐயர் குடும்பம் அடுத்தவர் ஆதரவுக்காக தஞ்சமடைந்தது.
நெல்லையப்ப ஐயர் தாராள குணம் மிக்கவர். பரோபகாரி. இருந்தும் அழகம்மாளைத் துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தியது. நாகசுந்தரம் பொருளீட்ட ஆரம்பித்ததும் அலமேலுவுக்கும் மணம் முடித்து அவருக்கும் கல்யாணம் நடந்தேறியது. குடும்பம் காலூன்றி இன்பமயமான நாட்களுக்கு நகர்கிறோம் என்று அழகம்மாளுக்கு கொஞ்சமாகத் தெம்பு வந்தது. ஆனால் இறைவனின் திருவுளம் வேறு விதமாக அமைந்தது.
1916ம் வருடம் நாகசுந்தரத்தின் மனைவி ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்து உயிர் துறந்தார். தாயில்லாதக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு அழகம்மாளிடம் வந்தது. தொடர் துக்கங்களினால் அல்லலுற்றதினால் தனது இரண்டாவது மகனின் அருட்பார்வையால் நற்கதி கிட்டுமா என்று பார்ப்பதற்கு திருவண்ணாமலை செல்லத் தீர்மானித்தார். இருந்தாலும் மனைவியை இழந்து கைக்குழந்தையுடன் கஷ்டப்படும் இரண்டாவது மகனை விட்டுப் பிரியமுடியாமலும் தவித்தார். தனது மகனை சிற்றப்பா நெல்லையப்ப ஐயரின் மனைவி அதாவது தனது சித்தியிடம் ஒப்படைத்துவிட்டு அவரும் திருவண்ணாமலை வந்தடைந்தார். 1918ல் நாகசுந்தரமும் சன்னியாசம் அடைந்தார்.
விரூபாக்ஷி குகைக்கு வரும் பக்தர்களுக்கும் சிஷ்யர்களுக்கும் சமைத்துப் போட்டு பரிமாறும் பொறுப்பை அழகம்மாள் ஏற்றுக்கொண்டார். அவர் கடவுளிடம் சரணடைந்தவர். தேவைகள் அதிகமில்லாத எளிமையானவர். ஆஷ்ரமத்தை நிறுவனமாக்கும் எந்த எண்ணமும் அவருக்கில்லை. துயரக்கடலில் நீச்சலடித்து குடும்பத்தைக் கரையேற்றியவர் எஞ்சிய சொற்ப நாட்களை தனது மகன் ரமணரின் அருட்பார்வையின் கீழே கழித்துவிட பிரியப்பட்டார். அவரது மிதமிஞ்சிய ஆசாரங்கள் ஆன்மிக சாதகத்திற்கு முட்டுக்கட்டைப் போட்டது. ரமணரின் அருள்மொழிகளைப் புரிந்துகொண்டு அதைப் பின்பற்ற ஆரம்பித்ததும் அமைதியும் இன்பமும் பொங்கக்கண்டார்.
ஆனால் 1920ம் வருடம் அவருடைய தேகாரோக்யத்தில் பின்னடைவு ஏற்பட்டது. மருந்து மாத்திரைகளுக்கு கட்டுப்படவில்லை. 1922ம் வருடம் வியாதிகளின் கை மேலோங்கி அவரை படுத்தபடுக்கையாக்கியது. அந்த வருடம் மே 19ம் தேதி அழகம்மாளுக்கு காலன் நெருங்குவது தெரிந்தது. நினைவு தடுமாறியது.
ரமணர் தாய்க்கு ஆதவரவாக வந்து தலைமாட்டில் உட்கார்ந்தார். ஒரு கையை நெற்றியிலும் மறு கையை மார்பிலும் வைத்து இதமாகத் தடவிக்கொடுத்தார். உள்ளே ஓடும் நூறாயிரம் எண்ணங்களை அந்தத் தடவலால் நீவி விட்டு அமைதியாக அடங்கச் செய்தார். பகவான் ரமணரின் ஆத்மசக்தி அழகம்மாளை மரணபயம் நீங்கச் செய்து முகத்தில் களையும் பிரகாசத்தையும் கூட்டியது. பழனிஸ்வாமியையும் இதேபோல கரையேற்ற முற்பட்டபோது அவரால் இதற்கு ஒத்துழைக்க முடியவில்லை.
அடுத்த நாள் பலிதீர்த்தமருகே அழகம்மாளின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டது. ரமணர் அங்கே ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தார். நாயனா அவ்விறைவனை மாத்ருபூதேஸ்வரர் என்று வழிபட்டார். நிரஞ்சனானந்தா நித்யபடி பூஜையும் அபிஷேகமும் செய்துவந்தார். ஒரு நாள் அங்கே வந்த ரமணர், சமாதியின் வடதிசையைப் பார்த்தவாறு நின்றார். சில அடிகள் அந்தப் பக்கம் நடந்திருப்பார். ஓரிடத்தில் அசையாது நின்றார். அவர் பின்னால் வந்த அனைவரும் ரமணர் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்தார்கள்.
"இதோ.. இங்கே தோண்டுங்கள்.. சுனை இருக்கிறது..." என்றார். உடனே ஆட்களை வரச்சொல்லி தோண்ட ஆரம்பித்தார்கள். சில மணித் துளிகளில், சொற்ப அடிகளில், அற்புதமான நீரோட்டம் வாய்ந்த ஒரு சுனையிலிருந்து தண்ணீர் குபுகுபுவென்று பொங்கியது. பக்தர்கள் மகிழ்ந்தார்கள். அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த நாயனா அதற்கு "அகஷமன தீர்த்தம்" (பாவங்களைக் களையும் தீர்த்தம்) என்று பெயரிட்டார்.
நாயனாவிற்கு பகவான் ரமணரின் அருட்கடாட்சத்தின் விஸ்தீரணம் தெரியும். கூடிய விரைவில் மாத்ருபூதேஸ்வரர் சன்னிதி இருக்கும் இவ்விடத்தில் ஒரு ஆசிரமம் உருவாகப்போவதை தன் ஞானக்கண்ணால் அறிந்தார். மாத்ருபூதேஸ்வரர் கோயிலின் மஹா பூஜை (28-05-1922) தினத்தன்று ஆறே ஸ்லோகங்களில் ஸ்ரீரமணரையும் அவரது தாயார் அழகம்மாளையும் போற்றிப் பாடினார். சுற்றிலும் நின்றுக் கேட்டவர்கள் கண்மூடி பரவசமடைந்தார்கள்.
அடுத்த நான்கு மாதங்கள் கணபதி முனி மாமரக்குகையில் தவ வாசமிருந்தார். ஸ்வாமி நிரஞ்சனானந்தா மாத்ரூபூதேஸ்வரர் சன்னிதி மேலே தென்னை ஓலையில் கூரை வேய்ந்தார். புதர்கள் அடர்ந்த அந்த பிரதேசத்தில் ஒரு தெய்வீக அமைதி குடிகொண்டிருந்தது. அவரது உதவியாளர் தண்டபாணி ஸ்வாமி. ஸ்ரீரமணர் மேல் அதீத பக்தி கொண்டவர். பக்தர்களிடமிருந்து நன்கொடைகள் பெற்று கற்களையும் புதர்களையும் அகற்றி வேலி போட்டார். ரமணர் தினந்தோறும் அங்கு வந்து மாத்ருபூதேஸ்வரரை வணங்குவதை வழக்கமாகக் கொண்டார்.
தண்டபாணிக்கும் ஸ்வாமி நிரஞ்சனானந்தாவிற்கும் ரமணரின் இடைவிடாத வருகை ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது. ரமணரின் அடுத்த ஜெயந்தி உற்சவத்தை இங்கே கொண்டாடுவது என்று முடிவு செய்து அவரிடம் அதற்கான சம்மதமும் பெற்றுவிட்டார்கள். இதற்கு முன்னர் இதுபோன்ற ஜெயந்திகளுக்கெல்லாம் ஸ்ரீரமணர் சரி.. இல்லை என்றெல்லாம் பதில் எதுவும் சொல்லமாட்டார். வாய்மூடி மௌனமாய் இருப்பார். மிகவும் வற்புறுத்தினால் மெலிதாய்ப் புன்னகைப்பார்.
ஜெயந்திக்கு ஒரு வாரம் முன்பு மாத்ருபூதேஸ்வரர் சன்னிதிக்கு வந்தவர் அதன் பின்னர் கூட ஸ்கந்தாஸ்ரமத்திற்கு திரும்பவே இல்லை. அங்கேயே அமர்ந்துவிட்டார். பக்தர்களில் பலர் மாத்ருபூதேஸ்வரர் கோயிலை விட ஸ்கந்தாஸ்ரமமே அவருக்குத் தோதான இடம் என்று எண்ணினார்கள். மேலும், திருவண்ணாமலையில் வசிக்கும் பக்தர்கள் அவர்கள் இல்லங்களிலிருந்தே ஸ்கந்தாஸ்ரமத்தைக் காண முடியும். இப்போது பகவான் புற நகர் பகுதிக்குச் சென்றுவிட்டார். மனதைரியத்தை வரவழைத்துககொண்டு சில பக்தர்கள் ரமணரிடம் ஏன் ஸ்கந்தாஸ்ரமத்தை விட்டு இவ்விடம் பெயர்ந்தார் என்று கேட்டார்கள். ஏதோ அமானுஷ்ய சக்தி என்னை இவ்விடம் இழுத்து வந்தது என்று பதில் கூறினார்.
1923ம் வருடம் ஜனவரி மூன்றாம் தேதி ரமண ஜெயந்தி மாத்ருபூதேஸ்வரர் கோயிலில் நடந்தேறியது. இதுவே ரமணாஷ்ரமத்தின் ஸ்தாபித தினமாகவும் ஆயிற்று.
பகவானின் முன் அமர்ந்து நாயனா மனமுருகப் பாடினார். சூழ்ந்திருந்த பக்தர் குழாமும் சேர்ந்து உருகியது. .
தேவி ஷக்திரியம் த்ரிஷோ: ஸ்ரிதஜன த்வந்த க்ஷயதாயினி
தேவி ஸ்ரியம் அம்புஜாக்ஷமஹிஷ் வக்த்ரே ஸஹஸ்ரச்சதே
தேவி ப்ரஹ்மவதுர் இயம் விஜயதே வ்யஹர கூடா பரே
விஸ்வாசார்ய மஹானுபாவ ரமண த்வம் ஸ்தோது க: ப்ரக்ரித:
பக்தர்களின் அறியாமையைக் களையும் தேவி சக்தி (உமா) உனதுருவில் தெரிகிறாள். தாமரைக்கண்ணனான விஷ்ணுவின் பத்னி லக்ஷ்மி உனது பத்ம முகத்தில் வாசமிருக்கிறாள். உனது வாக்கில் பிரம்மனின் தேவி சரஸ்வதி குடியிருக்கிறாள். மானுடகுலத்திற்கு கற்பிக்கும் குருவே, (என்னைப் போல) சாதரண மனுஷ்யன் உன் புகழ் பாடுவது எளிதா?

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails