Wednesday, March 8, 2017

பை பை 2016! வெல்கம் 2017!!

அன்னம் தண்ணியில்லாமல் அப்பா ஒரு வாரமாக வாட்டமாகயிருக்கிறார். "என்னாச்சுப்பா?" என்று பாசத்துடன் நெருங்கும் மகனிடம் "ஒன்றுமில்லை..." என்று சொல்லி சோகமுகம் திரும்பிக்கொள்கிறார். கால் பிடித்துவிட்டு வற்புறுத்திக் கேட்டதும் "உன்ன நினைச்சா கவலையா இருக்கு" என்றதும்... "ஏன்? என்னாச்சு? என்னப் பத்தி என்ன கவலை?" என்று மகன் விசாரிக்க... "இல்லப்பா.. இப்படி சண்டைக்கெல்லாம் போய்ட்டு வர்றியே... எதாவது ஆச்சுன்னா.. அதான் கவலையா இருக்கு..." என்று வருத்தம் தோய்ந்த குரலில் அப்பா சொன்னதும் மகன் "நம்ம குலவழக்கப்படி இதெல்லாம் சகஜம்தானே..." என்று முறுவலித்து இது காரணம் இல்லை என்று புரிந்து கொண்டு வெளியே வருகிறான்.
வெளியே அப்பாவின் வாகன ஓட்டியிடம் "டேய்.. அப்பா எங்கயாவது சமீபத்துல போனாரா? எதாவது விவகாரமா?" என்று சில நிமிடங்கள் துருவியதும்... "ஆமா .. அப்பா ஒருத்தங்களை சந்திச்சாரு.. புடிச்சுப்போச்சு.. கல்யாணம் பண்ணிக்கணும்னு கேட்டாரு.. அவங்க ஏதோ சொல்லிட்டாங்க.. மௌனமா திரும்பி வந்துட்டாரு... "
(அடடே... இது மகாபாரதமாச்சேன்னு புரிஞ்சவங்களுக்கும்...பரதகுல ராஜாவிடம் பொண்ணு கேட்டு ஏமாந்து திரும்பினவன் சந்தனு மஹாராஜான்னு மூளைக்குள்ளே பல்ப் எரிஞ்சவங்களுக்கும்... இந்தப் பதிவின் கடைசியில் பரிசு காத்திருக்கிறது..)
அந்த பரதவகுலராஜனைச் சந்தித்து.... தன்னுடைய சின்னமாவாக சத்தியவதியைத் தானே தேர்ந்தெடுத்து.. தனக்கும் ராஜ்ஜியம் வேண்டாம் தன் மூலமாக சந்ததி உண்டானால் பின்னால் யாரும் ஆட்சிக்கட்டில் அமரத் துடிப்பார்கள் என்பதற்காக ஊர்த்துவரேதஸ் என்னும் அதிபயங்கரமான சபதம் செய்து... இனி சாகும் வரை.. (அதுகூட இச்சா ம்ருத்யூ... அதாவது சுயவிருப்பத்தின் படி மரணம்...) நைஷ்டிக பிரம்மச்சாரியாக காலம் தள்ளுவேன்... என்ற தேவவிரதனுக்கு விண்ணிலிருந்து பூமாரிப் பொழிய "பீஷ்ம..பீஷ்ம..பீஷ்ம.." பட்டம் கட்டினார்கள்.
புத்தாண்டு நெருங்குகிறது. இனி சிகரெட்டே பிடிக்கமாட்டேன். புட்டியைக் கையால் தொடமாட்டேன். அரிச்சந்திரனுக்கு அண்ணனாக இருக்கப்போகிறேன்... நேரந்தவற மாட்டேன்.. போன்ற சபதங்கள் சரளமாக செய்யும் நேரம் வந்துவிட்டது. இப்படி நீங்கள் செய்யப்போகும் சபதம் எதுவுமே பீஷ்மரின் பிரதிக்ஞை போல கடினமானது இல்லை என்றும்.. அதைக் கடைசிவரை பின்பற்றவும் என்றும் வேண்டிக்கொண்டு... சரி.. சரி... அட்வைஸ் இல்லை.. நானும் அதுபோல இருக்க முயற்சி செய்கிறேன்...
ஹாப்பி ந்யூ இயர்.. (செங்கல் எறியாதீர்கள். இதுதான் பரிசு)

வெட்கமா மானமா ரோசமா

தன்னைப் பார்க்கிறார்கள்... என்று உணரும் போதுதான் வெட்கம் பிடிங்கித் திங்கறது... உதாரணம்: அதிகாலை வேளையில் ஜன்னலோர சீட்டில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு ஊருக்குள் நுழையும் போது தண்டவாளத்தருகே பிருஷ்டத்தை நமக்குக் காண்பித்து வழித்துக்கொண்டு.... மூஞ்சியை அந்தப் பக்கம் திருப்பி உட்கார்ந்திருக்கும் காலைக்கடனாளிகள்.
So, நம்ம வெட்கம் அடுத்தவர்களின் கண்களில் தேங்கி நிற்கிறது. (இதற்கு சுகப்பிரம்மத்தின் கதை ஒன்று உண்டு. தனி போஸ்ட்டாக எழுதுவோம்...) ”உனக்கென்ன வெட்கமா? மானமா? ரோசமா?” என்பதை ”கல்வியா? செல்வமா? வீரமா?” ரேஞ்சுக்கு உசுப்பிக் கேட்பதற்கு முன்னால்... அவனுடைய வெட்கத்துக்குக் காரணம் நீங்கள் என்பதை உணருங்கள். வெட்கப்படுங்கள்.
”நாலு பேருக்கு முன்னாடி என் மானத்தை வாங்கிறியே” என்று அல்லல்படும் மக்களும் நாலு பேரினால்தான் அவருக்கு மானம் போகிறது என்பதை அனுபவிப்பதால் அடுத்தவரின் மானம் போவதற்கும் நாம்தான் என்று ஒத்துக்கொள்ளவேண்டும். மானத்தைக் காப்பாறிக்கொள்ளுங்கள்.
ரோசம், வெட்கத்தினாலும் அடுத்தவரினால் மானபங்கப்படுத்தப்பட்டதினாலும் எழுவது. ”ரோசக்காரண்டா... யாராவது மானத்தை வாங்கிட்டா அவங்களை வெட்டிப்புடுவான்...” போன்ற வீர வசனங்கினால் அடுத்தவனின் ரோசத்துக்கும் நீங்கள்தான் பொறுப்பு என்றாகிறது. ரோசமாயிருங்கள்.
யாரையும் வெட்கங்கெட்டவன், மானங்கெட்டவன் ரோசங்கெட்டவன் என்று சகட்டுமேனிக்கு திட்டுவதற்கு முன் யோசியுங்கள்!
End Card டைட்டில்:
வெட்கப்பட்டவர்கள் வாழ்வு வெளிச்சமடைய.... ரோசங்கெட்டவர்கள் ஆசுவாசமாகயிருக்க ... மானபங்கப்படுத்தப்பட்டவர்கள் மாண்பு பெருக... அவர்களின் நலன் கருதி வெளியீடு


தேசபக்தர் பன்னாராம்

பஸ்ஸும் லாரியும் போகும் பிஸியானக் கடைத்தெரு. உருளையில் சிகப்பும் மஞ்சளுமாக தொங்கும் வயர் ரோல்களும் கட்டுக்கட்டாக பிவிஸி பைப்புகளும் அலங்கரிக்கும் தோரணவாயிலோடு வரவேற்கும் விஸ்தாரமான எலக்ட்ரிகல்ஸ் ஷாப். சின்னவளும் நானும் உள்ளே நுழைந்தபோது கஸ்டமர் யாருமில்லை. கல்லாவில் ஓனர் பன்னாராம்ஜீயும் கடையிருட்டுக்குள்ளே பணியாள் ஒருவரும் மட்டும் பிஸினஸுக்காக வாசல் பார்த்து காத்திருந்தார்கள்.
“சௌக்கியமா? எப்படியிருக்கீங்க?” படியேறிக்கொண்டே கேட்டேன்.
“நல்லாயிருக்கேன் ஜீ.. என்ன வேணும்?”
”ஒரு tube light .. அப்புறம் ஃபாரின் பின் டு இண்டியன் கன்வர்ட்டர் பவர் சாக்கட் ரெண்டு வேணும்...”
அவர் சாமான் எடுக்க கடையுள்ளே இருளில் மறைந்தார்.
“அப்பா... “ என்று சுரண்டினாள். புரிந்துகொண்டேன்.
"ஜி.. ஐநூறு ஆயிரம் இல்லாம எப்படி காலந்தள்றீங்க?"
"போயிட்டிருக்கு ஜி..." கை பணம் எண்ண வாய் பதில் சொன்னது.
"பிஸினஸ் டல்லாயிடிச்சுல்ல..."
"ஆமா ஜி.. கொஞ்சம் டல்லுதான்... வெயிட் பண்ணுவோம் ஜி.." நிமிர்ந்து சிரித்தார்.
"ஹா.ஹா... மோடி ஜி.. உங்க ஆளு.. சப்போர்ட்டுக்காக எவ்ளோ நாள் வேணுமின்னாலும் வெயிட் பண்ணுவீங்கல்ல?" கொஞ்சம் தெனாவட்டாகத்தான் கேட்டேன்.
"அதெல்லாமில்ல ஜி... நோ பாலிடிக்ஸ்... ஆப்ரேஸன் பண்ணும்போது டாக்டர்ட்டே கட் பண்ணக்கூடாது.... வலிக்கக்கூடாதுன்னு சொல்லுவோமா? நம்ம நல்லத்துக்காகதானே ஆப்ரேஸன்... அதுமாதிரிதான இதுவும்... வெயிட் பண்ணுவோம் ஜி..."
"இதுனால எல்லா ப்ளாக் மணியும் ஒழிச்சிட்டோமா?”
“இல்லீங்க... ஆனா... காலேலேர்ந்து ராத்திரி வரைக்கும் உங்களமாதிரியும் என்னை மாதிரியும்... உளைக்கிறவங்க கிட்டே இல்லாத பைசா.....பதுக்கி வச்சவங்ககிட்டே இருந்திச்சில்ல.....அதெல்லாம் வெளிய வருதில்ல ஜி...”
“சர்தான்... கைல ரெண்டாயிரமா இருக்கு.. மீதி சில்ற தருவீங்களா?”
“நிறையா இருக்கு ஜீ... குடுங்க....”
பர்ஸ் கொள்ளா சில்றையோடுயும் வாய்கொள்ளா புன்னகையுடனும் வழியனுப்பி வைத்த பன்னாராமின் நம்பிக்கைதான் நம்முடையதும். மண் பயனுற காத்திருப்போம்.

குமாரின் தேசபக்தி

குமார். வயது 45 இருக்கலாம். தள்ளுவண்டி பழக்கடைக்காரர். காரில் வந்து இறங்கி கார்டு தேய்க்கும் பெரிய பழமுதிர்ச்சோலையிலிருந்து ஒதுங்கி நடைபாதை ஓரக் கடைக்காரர். உட்காராமல் வியாபாரம் செய்யும் கடின உழைப்பாளி.
“ஆயிரம் ரூபா ஐநூறு ரூபா வித்ட்ரா பண்ணினதால உங்களுக்கு ப்ராப்ளம் இருக்கா?”
“ஐநூறு ஆயிரம் செல்லாதுன்னு சொன்னதப் பத்தி பாப்பா கேட்கறாங்க” என்று சிரித்தார் குமார்.
கேள்வி சின்னவளோடது.
.
“அப்பா.. ஒரு ப்ராஜெக்ட். Demonitisation பத்தி.... Different Vendors க்கிட்டேயிருந்து feedback கேட்டு எழுதணுமாம். ஸ்கூல்ல சொல்லியிருக்கா” என்றவளை கற்பூரவள்ளி வாங்குவதற்கு அழைத்துவந்தபோது கேட்டாள்.

“முன்னூறு ரூவாய்க்கி பளம் வாங்குறவங்க.. சில்ற தட்டுப்பாடுங்கிறதுனால... இருநூறு ரூவாய்க்கு வாங்கிட்டு.. மிச்சம் நூறு ரூவாயை பர்ஸுல சொருகிக்கிட்டுப் போயிடறாங்க... கொஞ்சம் இளப்புதான்..”
“வீட்டுல செலவுக்கெல்லாம் Problem இல்லாம இருக்கா?”
“அதெல்லாமில்லை.. சொல்லப்போனா... வீண் செலவு கொறஞ்சிருச்சி...”
“ஐநூறு ஆயிரம் rupees நோட்டுல்லாம் திரும்பவும் வேணூமா? வேணாமா?”
“ஐம்பது நாள் பொறுத்துக்கோங்கன்னிருக்காரு... ,மோடி... ஐம்பது நாளென்னா அஞ்சு மாசம் கூட காத்துக்கிடக்கலாம்.. இந்தியா வல்லரசாயிடும்ங்கிறாங்களே! பொறுத்துக்குக்க வேண்டியதுதானே சார்! அப்படியே எழுதிக்கோம்மா...”

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails