Showing posts with label சாப்பாடு. Show all posts
Showing posts with label சாப்பாடு. Show all posts

Tuesday, July 29, 2014

வயிறாயணம்

டின்னருக்கு தோசைதான் டிஃபன். மிருதுவான தோசையை மூன்று விரலால் வலிக்காமல் விண்டு விண்டு இலையோரத்தில் சிற்றாராய் ஓடிக்கொண்டிருந்த மணத்தக்காளி வெத்தக் குழம்பில் தோய்த்து தோய்த்து வக்கணையாக இறக்கினேன். தோசையின் வெதுவெதுப்பான சூடும் வெத்தக்குழம்பின் புளிப்பு+உறைப்பு+மணத்தக்காளியின் துளி கசப்பு+அரை அச்சு வெல்லத்தின் அசட்டுத் தித்திப்பு சேர்த்து.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ருஜியை வர்ணிக்க வார்த்தையில்லைப்பா...

எவ்ளோ விள்ளல் எவ்ளோ குழிக்கரண்டி வெத்தக்கொழம்புன்னு கணக்குவழக்கில்லை. பாட்டியாயிருந்தா தோசை வார்த்து வார்த்து கை அசந்து போய் “டேய் தம்பி! வயிறா வண்ணாஞ்சாலயாடா”ன்னு தோசைக் கரண்டியை சூலமாக்கி மிரட்டியிருப்பாள். நாக்கும் வாயும் வாகனத்தின் முன் சக்கரம் பின் சக்கரம் மாதிரி அப்படியொரு ஒத்துழைப்பு. துளிக்கூட அசரவேயில்லை. கடைசியில் குழம்பாறு வத்திப்போச்சு. வட்ட வட்ட தோசையால் வயிறு முட்ட முட்ட நிறைஞ்சுபோச்சு. தரையில் கையை ஊன்றாமல் ஸ்டடியாக எழுந்தாச்சு.

லைஃப்ல போதும்னு சொல்ற ஒரே விஷயம் சாப்பாடுதான். திரும்ப திரும்ப நேரம் தவறாமல் மொசுக்குற விஷயமும் சாப்பாடுதான். கழைக்கூத்தாடியின் குட்டிப் பொண்ணு கம்பி மேலே நடக்கும் போது “பாவம்! எல்லாம் வயித்துப் பொழைப்புக்கு”ன்னு பரிதாபப்படுவார்கள். காஃபி, டீ, சமோசா, பஃப், தமிழ்நாடு தாலி, பட்டர் நாண், ஜூஸ், பர்கர், பிட்ஸா என்று நாள் பூராவும் வெகுவாக கவனிக்கப்படுவது வயிறுதான். சென்ஸிடிவ் வயிறு வாய்த்தவர்கள் “இடும்பை கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது” என்று ஔவைப் பாடலை ஒவ்வொரு விருந்துக்கு பின்னரும் ஜெலுசில்/ஈனோவோடு நினைவுகூர்வார்கள்.

ஆண்களின் சாமுத்ரிகா லட்சணப்படி உருண்டை வயிறர்கள் குபேரனைப் போல செல்வந்தர்களாகவும், அதே பேய் உருண்டை காலை நோக்கி இறங்கி பிரசவ நேரம் நெருங்கிய கர்ப்பஸ்திரீகள் போலிருந்தால் ஓட்டாண்டியாகி விடுவார்களாம். வயிறில்லாமல் அந்த இடம் நேராக துடைத்து விட்டாற்போல இருந்தால் அவர்களுக்குப் பிக்கல் பிடுங்கலற்ற வாழ்வாம். எங்கேயோ படித்தது.

புஸ்தக அலமாரியில் கையைவிட்டு குன்ஸாகக் கிடைத்தது வாத்தியாரின் “ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்”. புக் கிரிக்கெட் மாதிரி பொசுக்கென்று பக்கத்தைத் திருப்பினேன். வலது பக்கத்தில் போல்ட் பண்ணி போட்டிருந்த பேயாழ்வாரின் நா.தி.பி பாடல்.

மண்ணுண்டும்-பேய்ச்சி-முலையுண்டும் ஆற்றாதாய்
வெண்ணெய் விழுந்த வெகுண்டு ஆய்ச்சி - கண்ணிக்
கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்
வயிற்றினொடு ஆற்றா மகன்

எத்தனை சாப்பிட்டாலும் மறுபடி இன்னமும் ஏதாவது சாப்பிடக் கொடேன் என்று ஏங்குவது வயிறு. வயிற்றுக்காக பல வேஷங்கள் போடுவதை பஜ கோவிந்தத்தில் சங்கரர் “உதர நிமித்தம் பகுக்ருத வேஷம்” என்கிறாராம். உலகங்களையெல்லாம் எடுத்து உண்டு, பேய்ச்சியின் பாலையும் உண்டான். அவள் உயிரையும் உண்டான். அதிலும் திருப்திப்படாமல் ஆய்ச்சியின் வெண்ணெயையும் உண்டு அவளால் கயிற்றில் கட்டப்படுகிறான்.

என் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பார்கள். அந்த சிரசு டொட்டொய்ங்னு கீழே தொங்காமல் நிமிர்த்திக் காப்பது ஒரு சாண் வயிறு.

சுண்டைக்காய் வெத்தக் குழம்பு

மன்னையில் காற்றடி காலங்களில் வாசலிலிருந்து கொல்லை வரை கதவுகள் படார்படாரென்று அடித்துக்கொள்ளும். அதற்கு முட்டுக் கொடுத்துக்கொண்டு ரக்பி பால் சைஸில் பாதிக்கு ஒரு கருங்கல் மொழுக்கென்று இடுக்கியிருக்கும். பெரும்பாலும் மாசாந்திர துவாதசியன்று அந்தக் கல்லுக்கு வேலை. பச்சை சுண்டைக்காயை அந்தக் கல்லால் மொச்மொச்சென்று நசுக்கிப் போட்ட வெத்தக்குழம்புக்கு ஒரு அலாதி ருஜி. லேசான கசப்பு நாக்கில் புரளும். ஆறு முட்டை நல்லண்ணெய் போட்டுப் பிசைந்துச் சாப்பிட கவளம் கவளமாக வேகமாக உள்ளுக்குப் போகும். தொட்டுக்க (முளைக்)கீரைத் தண்டு (மெல்லீஸானது) மோர்க்கூட்டு அட்டகாசமான கோம்போ. தமிழும் சுவையும் போல.

ஒரு தடவை மோர்க்கூட்டு+குழம்புஞ்சாம் சாப்பிட்டுவிட்டு “பாட்டீ! இன்னும் கொஞ்சம் சாதம்.. வெத்தக் கொழம்பு”ன்னு கூச்சல் போட வைக்கும். ரெண்டாம் தடவை ஒரு சிப்பல் சாதத்துக்குத் தொட்டுக்க நறுக்மொறுக்குன்னு நாலஞ்சு ஜவ்வரி வடாம். “இதாண்டா சாஸ்வதமான சொர்க்கம்”ன்னு ப்ரூவ் ஆகி மூன்றாம் தடவையாக் குழம்புஞ்சாம் ரிப்பீட் கேட்க வாயெழும் சமயத்தில் “போரும்.. மோருஞ்சாம் சாப்பிடலைன்னா நெஞ்சு எரிச்சல் வரும்டா..” என்பாள் பாட்டி. கையில் கரண்டியை கண்டிப்புப் பொங்க ஆட்டிக்கொண்டே.

கல்லோரலில் தண்ணீர் ஊற்றி தெப்பமாக மிதக்க விட்ட சில்வர் சொம்பு மோரில்..... கால் லிட்டர் தட்டில் ஊற்றிக் குழைவாப் பிசைஞ்சு... “தொட்டுக்க கொழம்பு ஊத்து...”ன்னு கேட்டு வாங்கி.... சோத்துக்கரையெழுப்பிக் கட்டிய குளத்துக்குள் குழம்பை விட்டு நிரப்பி... வாய்க்கு வாய்... ஒரு பச்சை சுண்டைக்காய் கச்ச்க்..கச்சக்னு கடிபட்டால் பரம ஆனந்தம். அமிர்தம். நாக்குக்கு மோட்சம்.

மூக்கில் ஒரு பருக்கை வரும் வரை கட்டு கட்டிவிட்டு... கையலம்பி.. வேஷ்டியில் துடைத்துக்கொண்டு..... வாசனை சுண்ணாம்பு தடவிய ரெண்டு வெத்திலை...ரெண்டு சிட்டிகை கைசீவல்... துளி ரஷிக்லால் பாக்கு... ஜீரணத்துக்கு கொதப்பிவிட்டு... வாய் கொப்பளித்து... டம்பளர் தூத்தம் குடித்துவிட்டு.... வாசல் திண்ணையில் ”அக்கடா”ன்னு காசித் துண்டை கீழே விரித்து பத்து நிமிஷம் கண் அசந்தால் கூட ஸ்தூல சரீரத்தோடு ஸ்வர்க்கத்தின் வாசற்படியை மிதித்து தேவாதிதேவர்களுக்கு “ஹலோ எவரிபடி” என்று கையசைத்துப் பூலோகம் திரும்பலாம்.

இன்னிக்கு வீட்டில் பச்சை சுண்டைக்காய் வெத்தக்குழம்பு டே! ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்தால் புலனடக்கம் வேண்டும்.. குறிப்பாக நாவடக்கம் முக்கியம் என்றாலும்..... ச்சே.... இந்த
நாக்கை அறுக்க!!

ஊசித் தொண்டை.. பானை வயிறு...

முஹூர்த்தம் முடிந்த கையோடு சிக்கனமாக ரெண்டு வரி “ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தேமே...”யென்று ஃப்ளைட் பிடிக்கப் போகும் அவசரகதியில் வாசித்தார். பின்பு “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா...”வை நிறுத்தி நிதானித்து அலங்காரமாக நாகஸ்வரத்தில் வாசித்தார். ”செல்வக்களஞ்சியமே...” வரும்போது மேடையில் மணமக்களின் கல்யாணக் கோலத்தோடு காதுக்கு அப்படியொரு இனிமையாக இருந்தது. அனுபவஸ்தர். தூக்கிய நாகஸ்வரத்திலிருந்து ஸ்வரங்கள் குப்பென்று பிரவாகமாகக் கிளம்பி மண்டபத்தை நிறைத்தது. ஒத்து ஆங்காங்கே விழுந்து புரண்டாலும் பின்னாலையே வழி பிசகாமல் ஓடிவந்தது. தவில்காரர் தொப்பியில் விரல்களால் கபடி ஆடினார். வாத்தியம் வார்பிடிக்கப்பட்டு அவர் சொன்னதையெல்லாம் தப்பாமல் கேட்டது. நாதலயம். என்னுடன் சேர்த்து குறைந்தது ஐந்தாறு தலைகள் ரசிகரஞ்சிதமாக கோர்வையாக ஆடியது. காவிரியாற்றங்கரை ஆட்களாக இருக்கக்கூடும்.

”சார்! ஜூஸு”ன்னு திராட்சை ரஸத்தை வலியக் கையில் திணித்தார்கள். பட்டென்று கண் முன்னே வெள்ளைக் குர்த்தாவில் வைரமுத்து நெடுநெடுவென்று தோன்றி “திராட்சை தின்பவன் புத்திசாலியா? பழரசம் குடிப்பவன் குற்றவாளியா?” என்று தோம் கருவிலிருந்தோமிலிருந்து ரெண்டு வரி படித்துக் காண்பித்தார். யாரும் அறியாமல் ஒரு மிமி உதட்டை விரித்து புன்னகைத்துக் கொண்டேன். அருகம்புல் ஜூஸ் குடிக்கும் அருகதையுள்ள அடியேன் இந்த ஜூஸ் குடிக்கவில்லை என்பது இச்சபையோர்க்கு ஒரு உபரி தகவல்.

திருமண அரங்கு நிறைந்திருந்தது. விடுமுறை நாளானதால் அனைவரின் முகத்திலும் அவசரமில்லாமல் சாந்தி நிலவியது. சில சாந்திக்கள் ஸ்தூலமாகவும் அங்கே உலவக்கூடும். தொன்னூறு சதவிகிதம் குடும்பமாக அவுட்டிங் வந்திருந்தார்கள். WWF அதிகம் பார்க்கும் பொடியன் ஒருத்தன் இன்னொருத்தனை ஃபுட்பாலாக உருட்டி ரகளை செய்துகொண்டிருந்தான். பாட்டி பிடித்து இழுத்துக்கொண்டிருந்தாள். சரேலென்று உள்ளே வந்த அம்மணி முதுகில் ஒன்று வைத்து தரதரவென்று இழுத்துச்சென்றாள். அப்பொடியனின் அம்மா என்பது முகஜாடையில் தெரிந்தது. தாத்தா சக தாத்தாக்களோடு “அப்பெல்லாம்...” பேசிக்கொண்டிருந்தார். க்ளைமாக்ஸாக அவரது மடியில் தஞ்சமானா அப்பையன் முழு சீனும் பார்த்த என்னை ஓரக்கண்ணால் பார்த்தான்.

தரைதளத்தில் முஹூர்த்தம். இரண்டாவது மாடியில் சாப்பாடு. ஞாயிற்றுக்கிழமை பதினொன்றிலிருந்து பனிரெண்டு முஹூர்த்தம் சா.ராமர்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று. எண் சான் உடம்பிற்குப் பிரதானமான வயிற்றுக்கு டிஃபனைக் காட்டி சாப்பாட்டையும் காட்டலாம். லிஃப்ட்டில்லாமல் நடந்து ஏறுபவர்களுக்கு நல்ல அப்பிடைஸர். ஐந்தாள் அகல லிஃப்ட்டுக்கு ஐம்பது ஆட்கள் தேவுடு காத்தார்கள். அதிலும் முட்டி தேய்ந்த வயசானவர்களுக்கு வழி விடாமல் முதல் ரோவில் சாம்சங் டேபும் கையுமாக மேஜர் ஆன மைனர் பசங்கள். கெக்கேபிக்கேன்னு சிரித்துக்கொண்டு.

செவன் கேக் மாதிரி இனிப்பு ஒன்று பரிமாறினார்கள். ரவையோண்டுக் கிள்ளிச் சுவைத்துப்பார்த்தேன். என் வாழ்நாள் பூராவும் நான் சாப்பிட்ட சர்க்கரையெல்லாம் உருக்கிச் செய்த பட்சணம் அது. சுதாரித்துத் தெளிவதற்குள் இலை நிரப்பி “ம்... ஆரம்பி... அடுந்த பந்தி வைட்டிங்..” என்று சாதத்தை சிப்பல் சிப்பலாக இறக்கினார்கள். வாழக்கா கறமது. பீன்ஸ் பருப்புசிலி. பொடிப்பொடியா பீன்ஸை நறுக்கி, ஒவ்வொன்றாய் பொறுக்கி அதற்குள் பருப்பை ஸ்டஃப் செய்தா மாதிரி உசிலி. சமையற்காரர் கைக்குத் தங்கக் காப்பு போடணும். கேரட்டும் கொத்துமல்லியையும் பூத்தூவலாய்த் தூவி இலைக்கு ஒரு தயிர்வடை. கதம்ப சாம்பார் சாதத்துக்கு தயிர்வடை தேவப்பிரசாதமாக இருந்தது.

பூசணிக்காய் மோர்க்குழம்பு. வெண்டி ஃப்ரை ஸ்னோ பௌலிங் பால் போல உருண்டன. ஃப்ரிஸ்பீ சைஸ் அப்பளம் சுயேட்சை வேட்பாளர்கள் போல சம்பிரதாயமாக இலைத் தேர்தலில் சுலபமாகச் சீட் பிடித்தன. பின்னாலையே கமகம தக்காளி ரசமது வந்தது. வண்டலுக்கே வண்டி சாதம் உள்ளே இறங்கும் சுவை. கடைசி நேரத்தில் பிசைந்த சாதத்திற்கு வெண்டி ஃப்ரை துணைக்கு வந்து பதவியேற்பை இன்னும் பிரமாதப்படுத்தியது. திருக்கண்ணமுது ஒரு கரண்டி சாதித்தார்கள். கொஞ்சூண்டு எடுத்து நுனி நாக்கில் இருக்கும் இனிப்புச் சுவை மொட்டுகளை நனைத்துக்கொண்டேன். அவைகளுக்குத் திருப்தி.

இந்தத் தயிர் சாதம் சாப்பிடாதவர்களுக்குச் சொர்க்கக் கதவு திறக்காது என்பது திண்ணம். வாயில் இஞ்சி நிரடும் போது நாக்கால் சாதத்தை இழுத்து ஒருதரம் மென்று தின்ன வேண்டும். காரத்தில் சதும்ப ஊறிய பொடி மாங்காயை வாய்க்கு வாய் வைத்து உள்ளே தள்ளிக்கொண்டிருக்கும் போதே அடுத்த பந்தி ஆட்கள் பசித்த புலி போல எதிரில் நின்றிருந்தார்கள்.

வெற்றிலை பாக்கில்லாமல் ட்யூட்டி ஃப்ரூட்டியில் மடித்த பீடா தயாராய் இருந்தது. எனக்கு உசிதமில்லை. மண்டபத்துக்கு கீழே வந்து தாம்பூலப் பையை வாங்கிக்கொண்டு வெளியே நடக்கும் போது “இது யாரு தெரியுதா?” என்று அப்பா ஒரு வாமனரை அறிமுகப்படுத்தினார். ஹெஹ்ஹே என்று சிரித்துக்கொண்டே ”சௌக்கியமா..” கேட்டுக் கை கொடுத்தேன். “தம்பி சரியா சாப்பிடறதில்லையோ... இளைப்பா இருக்கே..” என்று குசலம் விசாரித்தார்.

சேப்பாயியைக் கிளப்பும் போது என் பாட்டி அடிக்கடி சொல்வதை என் பெண்ணிடம் ரகசியமாகக் காதில் சொன்னேன். என்னவா? இப்படி காதைக் கொடுங்கள். உங்களுக்கும் சொல்கிறேன்.

“சிலபேருக்கு பானைத் தொண்டை. ஊசி வயிறு. தம்பி மாதிரி ஆட்களுக்கு ஊசித் தொண்டை. பானை வயிறு”

Friday, April 4, 2014

போஜனப்ரியா

யாராவது டைனிங் ஹாலை அகஸ்மாத்தா எட்டிப் பார்த்தால் கூட அவ்ளோதான். போச்சு. கையைப் பிடித்து தரதரவென்று இழுத்து உள்ளே பந்தியில் விட்டார்கள்.

சாயங்கால நேரத்தில் டிஃபன் போய்க்கொண்டிருந்தது. ஹோட்டல் வாசலில் மெனு போர்டு வைப்பது போல சமையல் காண்ட்டிராக்டர் டைனிங் ஹால் ஜன்னலில் பிரதானமாகப் பதாகை கட்டியிருந்தார். இன்ன தேதி இன்ன வேளைக்கு இன்னன்ன ஐட்டங்கள் என்று காலக்கிரமமாக இருந்த சாப்பாட்டுப் பட்டியலை ஒரு மாமா வரிவரியாக நெட்ரு பண்ணிக்கொண்டிருந்தார். இவர் வாயைக் கட்டமுடியுமா என்று பார்த்த நெடுநெடு மாமியின் வாயை எந்தக் கொம்பனாலும் கட்டமுடியாது என்பது அவரது பேச்சில் தெரிந்தது.

நான் நுழைந்த நேரத்திற்கு அசோகா ஹல்வா, பாதாம் ஹல்வா என்று ரெண்டு ஸ்வீட். சுவற்றோர பந்தியில் இருபத்திச் சொச்ச பேர் மலபார் அடை வித் அவியல், மைசூர் போண்டா, சட்னி என்று வயிற்றை வஞ்சனையில்லாமல் கவனித்துக்கொண்டிருந்தார்கள். கைக்கும் வாய்க்கும் உக்கிரமான போர் நடந்துகொண்டிருந்தது. கடைக்கோடியில் தண்ணீர் தெளித்த ஏடுகளில் உட்காரவைத்து “சார்! ஹல்வாஆஆஆ...” என்று குழிக்கரண்டி முழுக்க வழித்து வலது கைக்கு எட்டுமிடத்தில் பரிமாறினார்கள். ஆட்காட்டி விரலால் ஹல்வாக்களைத் தடவி வாயில் வைத்துக்கொண்டேன். திடீரென்று இருதயத்தில் பக்கென்று இருந்தது. இடது பக்கத்தில் அமர்ந்திருந்த வாமபாகத்தின் விழியீர்ப்பில் உண்டான மின்சாரம் என்று தெளிந்து அவாசராவசரமாக அவர் இலைக்குப் பார்சல் பண்ணிவிட்டேன். பதிலுக்கு ஒரு “கட்டிச் சமத்து”ப் பார்வை பார்த்தாள். அல்வாவாய் நெஞ்சினித்தது.

எச்ச பத்து ஆன கைக்குக் காஃபி கிடையாது என்று ஹாலோரத்துக் கவுண்ட்டரில் வாங்கிக் குடிக்கச் சொன்னார்கள். பூந்தி தேய்க்கும் பெரிய ஜாரணி கரண்டியின் ஒன்றரை மடங்கு உசரத்தில் இருந்தார் அவர். இடுப்பில் மடித்துக் கட்டிய காவி வேஷ்டி. கையில் காஃபி நிறைந்த வால் பாத்திரம். தோளில் ஒரு சிகப்புக் கலர் காசித்துண்டு. அரை மொட்டைத் தலையில் ஆயிரமாயிரம் வெள்ளி முடி. கல்யாணத்தில் கால் வைக்கும்
அனைவருக்கும் அவர் போட்ட காஃபிதான்.

“ஷுகர் இல்லாமே வேணுமே”. ஏறிட்டுப் பார்த்தார். பக்கத்தில் பெல்லாரி உறித்துக்கொண்டிருந்த பவளவாயர் ”இவ்ளோ சின்ன வயசிலேயேவா?” என்று ஐயோபாவப்பட்டு என்னை பாதாதிகேசம் ஸ்கேன் செய்தார்.

“கேன்ல இருக்கிறதே அரை ஷுகர்தான் இருக்கும்.” என்று பல் தெரிய சிரித்துவிட்டு ஆகாசத்துக்கும் பூமிக்கும் காஃபியை ஆற்ற ஆரம்பித்தார். வானத்திலிருந்து வலதுகை பாத்திரத்திலிருந்து வால்பாத்திரத்தில் விழுந்த காஃபி ஸ்கூட்டர் நம்மிடத்தில் கிளம்பி தெருமுனைக்கு செல்வது வரை காதில் விழும் “டர்ர்ர்ர்ர்ர்ர்”ரொலியாக கேட்டது.

“ஒரு சித்தெறும்பு தூக்கிண்டு போற ஷுகர் கூட இருக்கக்கூடாது மாமா” என்றேன். என்னுடைய கடுமையான விரதத்தைப் பாராட்டும் விதமாக என்னை ஊடுருவிப் பார்த்த சங்கீதாவின் கண்களை என்னால் ஜென்மஜென்மாந்திரத்துக்கும் மறக்கவே முடியாது. இப்புண்ணிய பாரதத்தில் சமத்துகளுக்காக கொடுக்கப்படும் பத்ம விருதுகள் எதாவது இருந்தால் மேடம் என்னை உறுதியாக சிபாரிசு செய்திருப்பார்கள்.

ஸ்ட்ராங்க் காஃபி. நாக்கில் லேசான கசப்பு. காஃபி குடித்த கையோடு அவரிடம் “ஸ்வீட் மாஸ்டர் யாரு?”ன்னு கேட்டேன். ”உக்கிராணத்துல இருக்கார்” என்றவரை “நான் பார்க்கணுமே....” என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாகக் கேட்டேன். சமையற்கட்டினுள் நுழைவதற்கு முன்னரே சூரியனை எட்டித் தொடும் தூரத்திலிருப்பது போல தகித்தது. பெரிய இலுப்பச்சட்டியில் தேங்கியிருந்த எண்ணெய்க் கடலில் பூந்தி போட்டுக்கொண்டிருந்தார். எங்கிருந்தோ மூக்கினுள் சர்க்கரைப் பாகு வாசனை வெள்ளமெனப் புகுந்தது. ராண்டம் ஷுகர் ஐநூறைத் தொட்டதைப் போல தலையை கிர்ரென்று சுற்றிக்கொண்டு வந்தது. “உங்களைப்
பார்க்கணுமாம்” என்று காண்பித்துவிட்டு காஃபி கவுண்ட்டருக்கு விரைந்தார் ஜாரணி கரண்டி.

ஸ்வீட் மாஸ்டருக்கு கை குலுக்கினேன். என் கையிலும் எண்ணெய் பிசுக்கு ஏறியது. இரத்தக்காட்டேரி மனுஷ்ய ரூபத்தில் வந்தது போல வாயெல்லாம் வெற்றிலைக் காவி. உதட்டோரத்தில் ஒரு சொட்டு வழிந்திருந்தது. சுகந்த சுண்ணாம்பைக் கிரிக்கெட் பந்து அளவுக்கு உருட்டி உள்ளே தள்ளியிருக்கிறார். வாய்க்கு டியோடரண்ட். “ஸ்வீட் சூப்பரா இருக்கு! பஜார்ல கடை வச்சீங்கன்னா பிச்சுக்கிட்டுப் போகும்” என்று மனதார வாழ்த்தினேன். “நன்றி” சொல்லக் கூட நாணப்பட்டு வேஷ்டி நுணியைத் தூக்கி முகத்தைத் துடைத்துக்கொண்டார். அறுபது வயதிருக்கலாம். இதுவரை லட்சோபலட்சம் ஸ்வீட் செய்திருப்பது அவரது கேஷுவல் அப்ரோச்சில் தெரிந்தது.

திருவிடைமருதூர் மகாலிங்கத்தைப் பார்த்துவிட்டு மண்டபத்திற்குள் நுழைந்தோம். இரவு சாப்பாட்டிற்கு சொற்ப கூட்டமே இருந்தது. பேரன் பேத்தி கண்ட இள தாத்தா பாட்டிகள் அங்கே ஒரு குட்டி ராஜ்ஜியம் அமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகாமையில் கிடைத்த இரண்டு இளம் இலைகளில் நானும் அவளும் பதவிசாய் அமர்ந்தோம். இரண்டு வாய் அமைதியாகச் சாப்பிட்டப் பக்கத்து மாமா சன்னதம் வந்தது போல நிமிர்ந்து “யாருய்யா அது...” என்று ஹாலதிரக் குரல் விட்டார்.

பரிமாறும் கூட்டம் பதைத்தது. “என்ன மாமா? என்ன வேணும்?” என்று இருவர் வாளிகளில் சாம்பாரோடும் ரசத்தோடும் வந்துவிட்டார்கள். அவர் கண்கள் ஊறுகாயாய் சிவந்திருந்தது. வந்த வேகத்தில் தலையில் கொட்டி அபிஷேகம் பண்ணிவிடுவார்களோ என்று பயந்தேன். “பந்தியை கவனிக்காமே கூடி நின்னு அரட்டையடிச்சுக்கிட்டிருக்கீங்க... உம்.. நா யாருன்னு தெரியுமா? இல்ல.. யாருன்னு தெரியுமான்னு கேக்கறேன்..” என்று எகிற ஆரம்பித்துவிட்டார். எச்சிலைக்கு முன்னால் ருத்ரதாண்டவம். பிபி பேஷண்ட் போலிருக்கிறது. கை கால் கரண்ட் கம்பியைப் பிடித்தது மாதிரி உதறியது. அவருக்கும் சாம்பார் கரண்டி பிடித்தவருக்கும். காண்ட்ராக்டர் சஃபாரி சூட்டில் ஓடி வந்தார். வாழை இலைகளுக்கு ஓரம் நறுக்கி செம்மைப் படுத்திக்கொண்டிருந்தவர் கத்தியாதிபாணியாக அங்கே வந்தார். கூட்டம் களை கட்டியது.

“நான் பேசிப்பார்க்கட்டுமா?” என்று மேடத்திடம் அடிக்குரலில் ரகஸ்யமாக உத்தரவு கேட்டேன். “வேண்டாம்” என்று கட் அண்ட் ரைட்டாக அதே டெஸிபலில் கட்டளையிட்டார்கள். பக்கத்தில் லௌட் ஸ்பீக்கராய் சத்தம். பொறுக்கமுடியாமல் ”நான் பேசறேனே” என்று பார்வையால் மீண்டும் கெஞ்சினேன். “ஐயோ.. மிஞ்சாதே..” என்று பதிலுக்கு அவளும் பார்வையில் கண்டித்தாள். ”உருளை...” என்று வந்தவரை ”மாமாக்கு போடுங்கோ...” என்று அவர் பக்கம் திருப்பினேன். இதே உத்தியை அடுத்தடுத்த வாளி, பேசின், கூடை என்று விதவித பாத்திரங்களில் வந்தவைகளை திருப்பிவிட்டேன். கையில் பதார்த்தத்தோடு தாண்டுபவனெல்லாம் ஒரு கரண்டி அந்த இலைக்கு சாய்த்துவிட்டுச் சென்றான்.

கோஸு அடுக்கிக்கொண்டிருந்தவர், முருங்கைக்காய் நறுக்கிக்கொண்டிருந்தவர், ஆயில் டின்னை உடைத்து சட்டியில் ஊற்றிக்கொண்டிருந்தவர் என்று பல அணியில் இருந்தவர்களும் ஒரு சேனையாய்த் திரண்டு போர்புரிய வியூகம் அமைத்து நின்றார்கள்.

ஒரு பத்து நிமிட சத்தத்துக்குப் பிறகு “சார்! நீங்களே சொல்லுங்க...” என்று என்னை நாட்டாண்மையாக்கித் திரும்பினார். ”இவ்ளோ நாழி வாயை அடைத்து உட்கார்த்தி வைத்திருந்தவன் வாயை அனாவசியமாய் குச்சி எடுத்து நோண்டுகிறாரே” என்று அவள் விசனப்பட்டது என் மூளைக்கு ப்ளூ டூத்தில் ட்ரான்ஸ்ஃபர் ஆயிற்று.

வேட்டை கிடைத்ததே என்று முதலில் அவர் பேசப் பேசச் சிரித்தேன். இரண்டு நிமிடங்களுக்கு ஆச்சா போச்சோவென்று அவர்களைத் திட்டினார். “நாடு எப்படிங்க உருப்படும்?” என்கிற தேசியநலக் கேள்விகளும் இதில் அடக்கம். கடைசியில் நான் ரெண்டு வாசகம் அவரிடம் பேசினேன். வாயே திறக்காமல் சாப்பிட்டுவிட்டு கை கழுவ எழுந்துவிட்டார். நான் என்ன கேட்டேன் என்று கேட்கிறீர்களா?

“உங்க இலையில எல்லாமே இருக்கே! இன்னும் உங்களை எப்படி கவனிக்கணும் மாமா?”

அடைக்கும் உண்டோ தாழ்!

சாஸ்திரத்துக்கு ஒரு வெல்ல அடை சாப்பிட்டேன். ஊத்துக்குளி வெண்ணை தடவி. ஏழெட்டு உப்பு அடை மளமளவென்று உள்ளே இறங்கியது. பட்டர்ஸ்காட்ச் ஐஸ்க்ரீமில் நட்ஸ் போட்டா மாதிரி கடிக்குக் கடி காராமணி வாயில் நிரடியது. பல்லு பல்லாய்ப் பதித்த தேங்காயோடு காராமணியும் அரைபட்டு உப்படையின் சுவையை அமிர்தத்துக்கு ஒரு படி மேலே தூக்கியது. தொட்டுக்க முருங்கைக்காய் சாம்பார். வாய்க்கு அதிர்ஷ்டம். சிம்பிள் டிஃபன் ஆனால் பவர்ஃபுல்.

வருஷம் முழுக்க நாம தாஸனதாஸனாய்க் கொடுத்த மரியாதைக்கு இன்னிக்கு ஒரு நாள் மட்டும் பதில் மரியாதை கிடைக்கும். ஒரு நெருங்கிய உறவுக்காரரிடம் ”என்ன.... மரியாதை கிடைச்சுதா?”ன்னு ஃபோனில் ராகமாக விஜாரிக்கும் போது சொன்னார் “அப்படியெல்லாமில்லைடா.. இப்பவெல்லாம் அகஸ்மாத்தா கல்லிலியோ கட்டையிலியோ தடுக்கிண்டாக் கூட என் கால்ல மட்டும் விழுந்துடக்கூடாதுன்னு உஷாரா இருக்காடா. பக்கத்துல சுவத்தையோ மரத்தையோ கெட்டியாப் பிடிச்சுக்கிறா...” என்றார். “கால்ல விழுந்தா நீங்க காலாண்டு பெட் ரெஸ்ட்தான் ஓய்..” என்று முணகிவிட்டு “பாவம்... ஒரு அடிப்படை மரியாதை கூட கிடைக்கிலியே” என்று அங்கலாய்த்தேன். உம். கண்டிப்பா கடைசில் “த்சொ..த்சொ..” உண்டு.

”சண்டை போட ஆளில்லைன்னா வாழ்க்கை சுரத்தா இருக்காதுன்னு சத்தியவானைப் போய் எமன்ட்டேயிருந்து மீட்டுண்டு வந்தாடா சாவித்திரி...” என்றெல்லாம் ஊரில் ஒய்ஃபிடம் உதை வாங்கும் அண்ணாக்கள் சிலர் அபவாதம் பேசிக் கிண்டலடிப்பார்கள். ஆத்தில் எவ்வளவு மொத்து விழுந்தாலும் காலரைத் தூக்கிவிடும் கேஸ்கள். நான் அந்த ஜாதி இல்லை. இன்று வெல்லடை உப்படை எப்படியிருந்தாலும் நொட்டை சொல்லாமல் சாப்பிடவும். “நாக்கை இழுத்து வச்சு அறுக்க...” என்று திட்டு கிடைக்கும். ஜாக்கிரதை. பகவத் பிரசாதம் உடம்புக்கு நல்லது.

“தீர்க்க சுமங்கலி பவ:” என்ற ஆண்களுக்கான ஆசீர்வாதங்கள் நிரம்பும் ”ஹாப்பி காரடையான் நோன்பு!”

சேவை செய்!

”சேவை நாழி துருப்பிடிக்காத வீட்டில் ஒரு நாழியும் வயிற்றிக்கில்லை தீது”ன்னு ஒரு மூதுரை ஊர் வழக்கில் உண்டு. ”என்னடா கதையிது” என்று நெற்றி சுருக்குபவர்கள் இதையே மூதுரையாகக் கொள்க. மூஞ்சி கை கால் அலம்பி இடுப்பில் வேஷ்டியைச் சுற்றிக் கொண்டு “என்னம்மா டிஃபன்?” என்று சாப்பிட உட்கார்ந்தால் சுடச்சுட சுருள் சுருளாய் மெத்மெத்தென்று சேவை. என்னையறியாமல் குஷியில் “மானிட சேவை துரோகமா?” என்று சற்று உரக்கவே பாடிவிட்டேன்.

சர்க்கரைக் கொட்டிக் கலந்து செய்யும் வெல்ல சேவை இலை சம்பிரதாயமான முதல் ஐட்டம். சேவையின் சூட்டுக்கு சர்க்கரை கொஞ்சம் ஜலம் விட்டுண்டு சேவையின் ஒவ்வொரு இழையையும் தித்திப்பில் குளிப்பாட்டியிருந்தது. பார்க்கும்போதே இனிப்பாக இருந்தது. நாக்கு ஊறிச் சப்புக்கொட்டினாலும் நேக்கு கிடையாது.

அடுத்த ஏனத்தில் மஞ்ச மசேர்னு இருந்த எம்பிளச்சம்பழ சேவையில் வயிற்றுக்குச் சேவையை ஆரம்பித்தேன். “புழுங்கரிசியில பண்ணினேன்டா” என்ற அம்மாவின் இதழோரத்தில் சிறு புன்னகை. ”காலுக்கு நடுப்பற வச்சுக்கோடா” என்று அடுப்பிலிருந்து சுடச்சுட உருண்டை பாலை கரண்டை பேட்டில் கொண்டு வந்து நாழியின் வாயில் தள்ளுவாள் பாட்டி. ”உங்க கொள்ளுப் பாட்டி வாலாம்பாளுக்கு அவாத்திலேர்ந்து சீரா வந்ததாம்....” என்று பாட்டி சொல்லும் போது நாழியின் மேலே மரியாதை ஏற்பட்டு பக்தியாக பிழியத் தோன்றும்.

புஜபல பராக்கிரமனாக நாக்கைத் துருத்திக்கொண்டு நிமிஷமாய்ப் பிழிவேன். ஆரம்பத்தில் “ப்ர்ர்ர்..ர்ர்..” என்றெல்லாம் வரும் அபான வாயு சப்தத்தில் “பாட்டி.. நீ சொல்லுவியே... செல்லக்கு_வே பல்லிடுக்கில பூந்தாயே.. அதுதான் இது...” என்ற போது ”படவாப் பயலே”ன்னு சிரித்த பாட்டியின் முகம் தட்டில் தோன்றியது. ”மோர்க்கொழம்பு உட்டுக்கோடா....” என்று தட்டிலிருந்து பாட்டியின் குரலுக்குப் பதிலாக “கொழம்புதான் இருக்கு.. மோர்க்கொழம்பு பண்ணலை...” என்று அம்மாக் குரல் பக்கத்தில் கேட்டது.

வறுத்த கடலைப் பருப்பு ஒன்றிரண்டு கடைவாய்ப்பல்லில் அரைபட்டு எ.சேவையின் ருசியை இன்னும் இரண்டு மடங்கு ஏற்றிற்று. இக்கணம் என் இஷ்ட தெய்வம் நேரில் தோன்றி “என்ன வரம் வேண்டும் கேள்” என்று கேட்டால் “வறுத்த கடலைப் பருப்புப் போட்ட சேவையும் தொட்டுக்க மோர்க்குழம்பும் தரும் அட்சயப்பாத்திரம் தா” என்று தெண்டனிடுவேன். ஊரில் ஒரு முறை சேவை தேவப்பிரசாதமாக இருந்த போது “இன்னும் கொஞ்சம்....இன்னும் கொஞ்சம்”என்று பறக்காவெட்டியாகத் திண்டினேன். பதிலுக்குப் பாட்டி கேட்டாள் “நா வீட்டுக்குதான் சேவை பண்ணினேன். இந்த வயசுல என்னால நாட்டுக்கா பண்ண முடியும்?” டைமிங்கில் அசத்துவாள் அப்படி!!

மிளகு சேவை வாய்க்கு ஆரோக்கியமாக இருந்தது. வாய்க்குள்ளே இண்டு இடுக்கெல்லாம் ஆசிட் ஊத்தி சுத்தம் பண்ணினா மாதிரி ஒரு ஜிவுஜிவு சுகம். ”ஸ்..ஸ்ஸ்ஸ்”ஸென்று ஜில்லுக்கு காற்றை இழுத்து ”ஃபூ” என்று ஊதும் போது வாயிலிருந்து ட்ராகன் போல தீப்பொறி பறந்தது. மிளகு காரம் புரைக்கு ஏறாமல் இருக்க தேங்காய் சேவைக்குத் தாவினேன். பொன்நிறமாக வறுபட்ட முந்திரி வாய்க்கு அகப்பட்டது. இந்திரன் தோட்டத்து முந்திரியோ என்றெண்ணும் படியாக அம்முழு முந்திரி அமைந்தது. “ராவேளையில ரொம்ப தேங்கா வாண்டாம்டா....” என்பாள் பாட்டி. “சாதா சேவை கொஞ்சம் இருக்கு.. போட்டுண்டு கொழம்பு இல்லைன்னா மோர் ஊத்திக்கோ....” என்று அம்மா சொன்னாள்.

இப்படியாகப்பட்ட சேவாலோகத்திலிருந்து மனசேயில்லாமல் எழுந்திருக்கும்போதுதான் அதைப் பார்த்தேன்.

பாத்திரத்தில் சேவைகள் தீர்ந்துகொண்டிருக்கும் போது மூலையோர டிவியில் சீரியல் சேவைகளாகக் கதாபாத்திரங்கள் வழியாகப் பிரஜைகளைப் போட்டுப் பிழிந்துகொண்டிருந்தார்கள்.

#வயிற்றுக்கும்_சேவை_செய்!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails